Jul 16, 2009

சம்பத்தும் தஸ்தாவெஸ்கியும்-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்
(சென்னையில் சென்றவாரம் 11ஆம் தேதி நடைபெற்ற சம்பத் நினைவுகள் குறித்த கூட்டத்தில் பேசியது -- தொகுப்பு : தளவாய் சுந்தரம்)
சம்பத்தினுடைய `இடைவெளி’ நாவலை, நான் என்னுடைய கல்லூரி நாட்களில் படித்தேன். அப்போது எனக்கு அது, ஒரு பெரிய எழுச்சித் தரக்கூடிய நாவலாக இல்லை. ஒருவேளை கல்லூரிப் பருவ வயது அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். அப்புறம் ஒரு நாள், நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியை பார்த்தபோது அவர் கேட்டார் : ``நீங்கள் சம்பத்தை முக்கியமான எழுத்தாளராக நினைக்கிறீங்களா’’. நான் ``எனக்கு அவர் முக்கியமான எழுத்தாளர்னுதான் படுகிறது ஸார்’’ என்று சொன்னேன். ``சுஜாதாவைவிட முக்கியமான எழுத்தாளரா’’ என்றார் அவர். ``எப்படி கேட்கிறீங்கன்னு தெரியலையே’’ என்றேன். ``கல்லூரி மாணவர்களிடையே சுஜாதா மிகவும் பிரபலமாக இருக்கிறார். அப்படி இருக்கும் போது கல்லூரியில் படிக்கிற நீங்க மட்டும் ஏன் சம்பத்தை முக்கியமானவர்னு நினைக்கிறீங்க. அப்படியானால் சுஜாதாவைவிட சம்பத் பெரிய எழுத்தாளரா’’ என்றார். ``எனக்கு தெரியவில்லை ஸார். இரண்டு பேருடைய உலகங்களும் வேறுவேறு. இரண்டு பேரையும் ஒப்பிட முடியுமா?’’, என்றேன். அப்பொழுது அவர், ``நான் சம்பத்தை படித்தேன். அவர் முக்கியமான எழுத்தாளர் என்று நினைக்கிறேன், ஆல்பர்காம்யூ அளவுக்கு முக்கியமான எழுத்தாளர்’’ என்று சொன்னார். ஆல்பர்காம்யூ அளவுக்கு முக்கியமான எழுத்தாளராக தமிழில் ஒருவர் குறிப்பிடப்படுவது எனக்கு சந்தோஷத்தை தந்தது. என்னுடைய வாசிப்பில்தான் எதாவது சிக்கல் இருந்திருக்க வேண்டும். எனவே இடைவெளியை திரும்ப மீண்டும் வாசிக்க வேண்டும் என்று எண்ணினேன்.

நான் இரண்டாவது, மூன்றாவது, முறைகளில் மீண்டும் `இடைவெளி’யை வாசித்தபோது, எனக்கு தோன்றியது, `இந்த நாவல் சாவை மையமாகக் கொண்டிருந்தாலும்கூட, வாழ்வை முதன்மைப்படுத்தின, வாழ்வின் மீது தீவிரமான ஒரு திகைப்பும் பயமும் உள்ளவரோட தேடுதலாகத்தான் `இடைவெளி’ இருக்கிறது. தஸ்தாவெஸ்கியைப் பற்றி, அவருடைய படைப்புகளைப் பற்றி, சம்பத் தொடர்ந்து சொல்கிறார். தஸ்தாவெஸ்கி ஆகனும் என்று விரும்பினேன் என்கிறார். தஸ்தாவெஸ்கி, மரணத்தண்டனை விதிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு முந்தின வரிசையிலுள்ளவர்கள் சுடப்பட்டு விழுந்துகொண்டிருக்கிறார்கள். தஸ்தாவெஸ்கி நிற்பது நான்காவது வரிசை மரணத்தை தொடக்கூடிய ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். நான்காவது வரிசை வரும்போது தஸ்தாவெஸ்கியின் மரணத் தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. ``தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் சைபீரிய சிறைக்கு அனுப்பப்பட இருக்கிறீர்கள்’’ என்று சொல்லப்பட்டவுடன் காலம் நீண்டு கொண்டே சென்றது. நான் நிறைய காலங்கள் அப்போது வாழ்ந்துவிட்டது போல் உணர்ந்தேன்’, என்று தஸ்தாவெஸ்கி எழுதுகிறார். காலத்தை நீட்டிக்கவைக்கக் கூடிய இந்தத் தன்மை வாழ்வுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு. பரிசை கொண்டாடவேண்டும் என்று கத்தி கூப்பாடு போட்டு அவர்கள் எல்லோரும் ஆடுகிறார்கள். தஸ்தாவெஸ்கி சொல்கிறார்: ``மீண்டும் ஒருமுறை எனக்கு வாழ்வு பரிசளிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதை நான் எப்போதும் கொண்டாடிக் கொண்டே இருப்பேன்.’’

இதிலிருந்து திரும்பிய பின்னாடி தஸ்தாவெஸ்கி முழுக்க அவருடைய வாழ்க்கையில் சாவைப் பற்றிய தேடலை முன் வைக்கிறார். வாழ்வை எவ்வளவு தூரம் முதன்மைப்படுத்த வேண்டியிருக்கிறது; நாம் நினைப்பது போல் வாழ்வு அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. வாழ்தல் என்பதற்கு மிகப்பெரிய அர்த்தம் இருக்கிறது என்கிறார் அவர். பிறகுவந்த தஸ்தாவெஸ்கியுடைய நாவல்கள் அனைத்துமே, எதாவது ஒரு வகையில் சாவை முதன்மைப்படுத்துகின்றன. சாவு என்கிற ஒரு விஷயத்திற்கு முன்னாடி வாழ்வின் மகத்துவம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது. மகத்துவத்துக்கு காரணமாக என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்பது சுட்டப்படுகிறது.

சாவினுடைய திகைப்பு அதிகமாகும் போதெல்லாம், அதனுடைய விரல்கள் தாளம் போடும் போதெல்லாம் நமக்கு நினைவுக்கு வருவது என்னவென்றால் வாழ்விலிருந்து நாம் துண்டிக்கப்பட்டுவிட்டோம் என்பதுதான். வாழ்வு என்பது குறித்து இருக்கும் எண்ணங்கள்தான் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. வாழ்வுக்கு உடல் ஒரு கேந்திரமாக இருக்கிறது. ஆனால், உடலால்தான் வாழ முடியும். உடலுக்கு காலவெளி என்கிற தடை இருக்கிறது. உடலால் ஒரு காலத்தில் அல்லது ஒரு வெளியில்தான் வாழமுடியும். வேறு காலத்திலோ, வேறு வெளியிலேயோ வாழ முடியாத அளவுக்கு நம்முடைய வாழ்வு உடலின் இருப்பு சார்ந்ததாக இருக்கிறது. எனவே உடலின் இருப்பு வழியாகத்தான் நாம் வாழ்வை முன்னெடுத்து போக முடியும். நம்முடைய புலன்கள் வழியாக மட்டும்தான் நாம் இந்த உலகை ருசிக்க முடியும். புலன்களுக்கு அப்பால் நீங்கள் உங்கள் வாழ்வை எப்படி உள்வாங்குவீங்க, வெளிப்படுத்துவீங்க என்பது குறித்த தேடுதல் இந்தியா போன்ற கீழை நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. ஆனால், இந்த முயற்சிகள் ஒரு மெய்யியல் என்கிற ஒரு பாதையை நோக்கி போய்க் கொண்டேயிருக்கிறது. அப்போது சாதல், சாவாமை பற்றின நம்முடைய எண்ணங்கள் உருமாறிவிடுகிறது. ஆனால், தஸ்தாவெஸ்கியினுடைய படைப்புகள் வழியாக, அவர் சாவை முதன்மைப்படுத்தி, சாவைப் பற்றிய பயத்தையோ, திகைப்பையோ உருவாக்குவதற்கு பதிலாக சாவுக்கு முன்பான மனிதனுடைய பகடை விளையாட்டை முதன்மைப்படுத்துகிறார். அப்போது வாழ்வினுடைய ருசி முழுக்க மாறிவிடுகிறது.

சாவு என்பது மனிதனுக்கு மட்டும் நடக்கக்கூடிய ஒரு தனி நிகழ்வு அல்ல. போர்ஹேவுடைய ஒரு கவிதையில், அவர் சொல்கிறார் : ``உலகத்தில் இதுவரைக்கும் ஒரே ஒரு மனிதன்தான் இறந்திருக்கிறான். ஆனால், அந்த மனிதனுடைய பெயரை நெப்போலியன் என்று சொல்கிறாங்க, ஒரு மருத்துவர், ஒரு காயம்பட்ட வீரன் என்று சொல்கிறாங்க’’ என்று ஒரு பெரிய பட்டியல் போடுகிறார். வெவ்வேறு ஆட்களாக, வெவ்வேறு கதாபாத்திரங்களாக மரணம் நிகழ்ந்திருந்தாலும் இந்த உலகத்தில் மரணம் ஒரே ஒருமுறைதான் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அந்த ஒரு நிகழ்ச்சியினுடைய பல்வேறு விதமான வடிவங்கள், ரூபங்கள் நமக்கு தெரிந்து கொண்டே இருக்கிறது.

தஸ்தாவெஸ்கி படைப்புகள் வழியாக உருவாகி வரக்கூடிய மனநிலை, நான் வாசித்த வரைக்கும், வாழ்வைப் பற்றிய ஒரு தேடுதலை முன்வைப்பதுதான். சம்பத்தின் இடைவெளியையும் அந்த வகையான ஒரு நாவலாகத்தான் பார்க்கிறேன். சம்பத், வாழ்வை வெவ்வேறு முனைகளில் மிகத் தீவிரமாக ஈடுபடவேண்டுமென்று நினைக்கிறார். காரியங்கள் அவ்வப்போது நடக்கும், அப்படி நடக்கும்போது அவற்றில் நாம் பங்கேற்போம் என்பதைவிட, தன்னுடைய தீவிரத்திற்கு எவைஎவையெல்லாம் தடையாக இருக்கிறதோ அந்த தடைகளோடு நாம் அதில் ஈடுபட வேண்டும்; இந்தத் தடைகள் நம்முடைய தீவிரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்பது சம்பத்தின் மனதில் கனிந்து கொண்டேயிருக்கிறது.

`சாமியார் ஜுவுக்குப் போகிறார்,’ கதைதான் தமிழில் முதன்முதலாக ஒரு பெண் தன்னுடைய தாபம் தொடர்பாக, நேரடியாக எந்த மனநிலையுடன் இருந்தாள் என்பதைப் பற்றி எழுதப்பட்ட நல்ல ஒரு கதை. பெண்ணுக்கும் காமத்துக்கும் இருக்கும் தொடர்பில், பெண் தன் காமத்தை வெளிப்படுத்தக் கூடிய தன்னுடைய உடல்சார்ந்த எந்த ஒரு உணர்ச்சிகளையும் இச்சைகளையும் வெளிப்படுத்தக்கூடிய வரிகள் இந்த கதையில் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு தன் கணவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற ஆசை இருந்தாலும்கூட எவ்வளவு தடைகள் எவ்வளவு மனக் கட்டுப்பாடுகள் இருக்கிறது. இப்படியெல்லாம் நாம் நாகரிகமாகிவிட்டோமா என்று இக்கதையில் தினகரன் யோசிக்கிறான். தாபத்திலிருந்து வரும் காமத்திற்கும் மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஜப்பானில் இரண்டுபேர் கடலின் அடி ஆழத்திற்குப் போய் ஆழ்கடல் நீச்சல் பண்ணுகிறார்கள். மைக்கல் கிறிஸ்டன், ஸுராஸிக் பார்க் எழுதினவர். அவரும் அவருடைய நண்பரும்தான் இந்த இரண்டு பேர்கள். மிக ஆழத்துக்கு போய்விட்ட நிலையில் அவர்களுடைய காற்றுக் குழாய் துண்டிக்கப்பட்டு விட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடலின் ஆழத்தில் அடையாளம் தெரியாமல் நாம் சாகப்போகிறோம் என்கிற எண்ணத்துடனேயே அவர்கள் மேலே வர்றாங்க. அதிர்ஷ்டவசமாக தப்பித்த அவர்கள், அறைக்கு வந்து நார்மலாகிவிடுகிறார்கள். மைக்கல் கிறிஸ்டன்ன் எழுதுகிறார்: `அறைக்கு வந்ததும் எனக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி யாருடனாவது உடனே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். கடுமையான தாபம் எனக்கு ஒருமணி நேரம் நீடித்தது.’ அவருடைய நண்பரும் இதேபோன்று அவருக்கும் இருந்ததாக சொல்கிறார்.

காமம் சாவுக்கு முன்னாடி பெருகுகிறது; சாவு ஏதோ ஒரு வகையில் நிச்சயமின்மையையும் பதட்டத்தையும் உண்டாக்கும்போது காமம் ஒரு நிதானத்தையும் உண்டாக்கும்போது காமம் ஒரு நிதானத்தையும் பாதுகாப்பையும் தருகிறது என்பதைத்தான் நான் இந்த வரிகள் வழியாக புரிந்துகொள்கிறேன். இதே நிலைதான் தஸ்தாவெஸ்கியிடமும் தொடர்ந்து இருக்கிறது. தஸ்தாவெஸ்கி பற்றி அவருடைய மனைவி அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளில் எழுதுகிறார் : `தஸ்தாவெஸ்கி இந்த உலகத்திலுள்ள எல்லோரையும், தன்னை உட்பட அவருடைய படைப்புகளில் கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டேயிருக்கிறார். அந்த கதாபாத்திரங்களில் எவராவது ஒருவருக்கு சிக்கல் வரும்போது, அதை அந்த கதாபாத்திரங்களுடைய சிக்கலாக அல்லாமல் தன்னுடைய சிக்கலாகத்தான் அவர் உணர்கிறார். ஒரு கட்டத்தில் கதாபாத்திரங்களின் எல்லா முடிவுகளும் திகைப்புகளும் இவரைச் சார்ந்த திகைப்புகளாகி இவருக்கு பதட்டத்தை கொடுக்கிறது’. மேலும் அவங்க சொல்கிறாங்க : `என் மீதான காதலை தெரிவிக்கும்போதுகூட ஒரு கதாபாத்திரம் வழியாகத்தான் இதை செய்தார். ஒரு புனைவை உருவாக்கி, ஒரு நாவல் எழுதுவதாக சொல்லி, நாவலில் தன்னை ஒரு கதாபாத்திரமாக்கி, என்னையும் ஒரு கதாபாத்திரமாக்கி, இந்த இரண்டு கதாபாத்திரங்கள் சந்திக்கிற ஒரு சூழலை உருவாக்கி, இப்படியே ஒரு புனைவின் வழியாகத்தான் நாங்கள் காதல் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.’ சம்பத்துடைய வாழ்வைப் பற்றி நினைக்கும்போதும் எனக்கு இவைகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. சம்பத் தன்னுடைய வாழ்வை ஒரு புனைவின் வாழ்வாக மாற்றி, தன்னுடைய பிரச்சினைகளை அந்த புனைவுக்குள் வைத்து, அதன் வழியாக என்ன என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ள விழைகிற, தஸ்தாவெஸ்கியிடம் செயல்பட்ட மனநிலையைத்தான், `சாமியார் ஜுவுக்குப் போகிறார் கதையில் நான் பார்க்கிறேன். கதையில் ஜுவை இவர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த புலியை ஒருவர் சுட்டுக்கொன்று விடுகிறார். அதற்கு முந்தின வரியில் சம்பத் எழுதுகிறார். `உலகத்தில் மிக முக்கியமானது பசி என்று நினைக்கிறேன்.’ இது அந்த பெண்ணுடைய வாக்கியம். நான் முன்பு பெண்களை விரும்பாதவனாக இருந்தேன். இப்போது இவருடைய மனைவி ஆன பின்னாடி இவர்தான் எனக்கு இந்த மாதிரியான இன்பம் எப்படியிருக்கும் என்று சொன்னார். அப்போதுதான் எனக்கு ரொம்ப பசிக்க ஆரம்பித்தது. நான் எல்லாவற்றையும் சாப்பிடத் தொடங்கினேன். அப்புறம் சாப்பாடு என்பது எனக்கு மிகவும் முக்கியமானதாகிவிட்டது. அப்புறம் இந்த புலியை சுடும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்புறம் தொடர்ந்து சம்பத் எழுதுகிறார். `நம்முடைய மிருகவுணர்ச்சி அடங்கவே மாட்டேன்கிறது. அடங்காத நம் மிருக உணர்ச்சியின் பலிதான் இந்த புலி.’ இது திடீரென்று அவரை சாவை நோக்கித் தள்ளுகிறது. பின்பு வாழ்வை புரிந்துகொள்வதற்கான ஒரு எத்தனிப்பு அவரிடம் தொடங்குகிறது.

`ஆல் தட் ஜாஸ்’ என்ற படத்தில் ஒரு நடன இயக்குநர் சாவை தொடர்ந்து கவனித்துக்கொண்டேயிருக்கிறார். சாவு தேவதைபோன்று மிக அழகாக மணப்பெண் உடை அணிந்து இருக்கிறது. நடன இயக்குநர் சாவின் அருகில் உட்கார்ந்து அதனுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த படம் சொல்கிறது : `சாவு என்பது ஒரு உரையாடல்.’ ஆனால், அந்த உரையாடல் மௌனத்தையும் கூடவே வைத்துக்கொண்டேயிருக்கிறது. சாவு நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் பயமுறுத்தக்கூடிய ஒன்று இல்லை. அது மிகவும் வசீகரமானது என்கிறது இந்த உரையாடல். நாம் அதனுடைய அருகாமையில் போய், அதன் வாசனையை நுகர்ந்து, மெல்ல மெல்ல அதை நமக்குள் அனுமதிப்பது. இது ஒருவகையில் பார்த்தால் சாவு என்பது ஒரு கலை என்றாகிறது. இந்த கலை வாழ்தலுடைய ஒரு பகுதிதான்.

பொதுவாக இந்திய மரபில் சாவு என்பது பயமுறுத்தக்கூடிய ஒரு விஷயமல்ல. சாவு என்பதன் வடிவம் இங்கு மாறிக்கொண்டேயிருக்கிறது. சாவை நாம் நம்மைச்சுற்றி தினமும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறோம், மழை பெய்கிறது மாதிரி, வெயில் அடிப்பது மாதிரி. நம்முடைய இருப்பு சார்ந்த நம்முடைய அவதானிப்புகள் திடீரென்று துண்டிக்கப்படும் போது என்னவாகிறது. புதுமைப்பித்தனுடைய மகாமசானம் கதையில் ஒரு கிழவர் சாவுக்காக காத்திருக்கிறான். அவர் எழுதுகிறார். அங்கு நல்ல நிழல் இருந்தது. சாவதற்கு நிழல் எவ்வளவு ஒரு மிக அழகான இடம் என்று. தஸ்தாவெஸ்கி கதையில் மழையில் நனைந்த ஒரு குழந்தை பனி நாளென்று இறந்துபோய்விடுகிறது. விடிகாலையில் குடும்பமே உட்கார்ந்து அழுதுகொண்டிருக்காங்க. இறந்த குழந்தையின் அக்காவுக்கு பக்கத்திலிருப்பவங்க ஒரு சாக்லெட்டைக் கொடுக்காங்க. இங்கே தஸ்தாவெஸ்கி எழுதுகிறார். `சாவு சுவையை மாற்றிவிடுகிறது’ என்று.

சம்பத்துடைய மிக முக்கியமான கண்டுபிடிப்பாக `சாவு என்பது ஒரு இடைவெளி’யாக இருக்கிறது. தஸ்தாவெஸ்கி கில்லெட்டின் தண்டனை பற்றி எழுதுகிறார். கில்லட்டினில் தலையை வைத்திருக்கிறான் ஒருவன். தலை துண்டிக்கப்பட இருக்கிறவனுடைய கழுத்தை நோக்கி கில்லட்டினுடைய கத்தி இறங்கி கொண்டேயிருக்கிறது. அந்த சப்தத்தை அவன் கேட்டுக் கொண்டேயிருக்கிறான். கில்லட்டினுடைய பிளேட் நுனி அவனுடைய கழுத்தை தொடுவது வரைக்கும் அந்த சப்தம் அவனுக்குக் கேட்கிறது. அப்புறம் தஸ்தாவெஸ்கி எழுதுகிறார். `அந்த சப்தம் துண்டிக்கப்பட்டது’. தஸ்தாவெஸ்கியினுடைய ஆழ்ந்த வாசகன் ஒருவனால் சப்தம் கேட்டதற்கும் துண்டிக்கப்பட்டதற்கும் இடைப்பட்ட இடைவெளியை புரிந்து கொள்ள முடியும். சம்பத்தும் இதுபோன்ற ஒரு இடைவெளியைத்தான் முன் வைக்கிறார்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்