Dec 16, 2009

சாலைத் தெரு-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் –கதாவிலாசம்
ஆ.மாதவன்


பகல் கனவுகள் பலிப்பதில்லை என்பார்கள். அது நிஜமா எனத் தெரியாது. ஆனால், பள்ளிக் கனவுகள் எதுவும் பலிப்பதேயில்லை என்பதை நானே கண்டிருக்கிறேன்.
பள்ளியில் பேசிய ரகசியப் பேச்சுகள் யாவும் கண்  விழித்தபடி கண்ட கனவுகள்தானே! வகுப்பறையில் உடைந்த சாக்பீஸ் துண்டுகளைவிடவும் அதிகமாகக் கனவுகள் சிந்திக்கிடந்திருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் திரைப்பட விழாவுக்குத் திருவனந்தபுரம் madhavan செல்லும்போதும், சாலைத் தெருவுக்குச் செல்ல மறப்பதேயில்லை. பத்மநாபசுவாமி கோயில் எதிரில் உள்ள பரபரப்பான வணிக வீதி அது. இந்த விருப்பத்துக்குக் காரணம், அந்தத் தெருவில்தான் ஆ.மாதவனின் கடை இருக்கிறது.

ஆ.மாதவன், தமிழின் தனித்துவமான எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் வாழ்பவர். சாலைத் தெருவில் ஒரு கடையை நடத்தி வருகிறார்.

அந்தத் தெருவில் நடக்கும் வெவ்வேறு நிகழ்வுகளை, அங்கு வாழும் மனிதர்களை, அவர்களின் விசித்திர நடவடிக்கைகளை விவரிக்கின்றன அவரது சிறுகதைகள்.
அவரது 'வேஷம்' என்ற கதையைப் படித்தவுடனே, அவரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதற்காகவே ஒருநாள் இரவு ரயிலில் புறப்பட்டு, திருவனந்தபுரம் சென்றேன்.
ஆ.மாதவன் என்ன வணிகம் செய்கிறார், கடை எண் என்ன... எதுவும் தெரியாது. அவரது வீட்டு முகவரியும் என்னிடமில்லை!

சாலைத் தெருவுக்குச் சென்று விசாரித்தபோது, அப்படி ஒரு தமிழ் எழுத்தாளர் இருப்பதே எவருக்கும் தெரியவில்லை! 'பாண்டியா?' என்று மட்டும் ஒரு கடைக்காரர் கேட்டார்.'திருவனந்த புரத்திலே பிறந்த தமிழர்' என்று சொன்னேன். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை! சாலைத் தெருவுக்குள்ளாகவே மாலைவரை அங்குமிங்கு மாகச் சுற்றியலைந்துவிட்டு, இரவே ஊர் திரும்பிவிட்டேன்.
ஆனால், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஆ.மாதவனை தமிழ்ச் சங்கக் கூட்டமொன்றில் சந்திக்க நேர்ந்தது. எளிமையான தோற்றம். முகத்தில் சாந்தம்.
வெளிப்படுத்த முடியாத அன்புடன் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். 'உங்களைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசைப்பட்டிருக்கிறேன்' என்று முகத்துக்கு நேராகச் சொல்லக் கூச்சமாக இருந்தது.
சாலைத் தெருவாசிகளை ஆ.மாதவன் தன் எழுத்தின் மூலம் அழியாத ஓவியங்களைப் போல சாஸ்வதமாக்கிவிட்டார். தமிழ் இலக்கியத்தில் ஒரேயரு தெருவைச் சுற்றியே தன் படைப்புலகை உருவாக்கிய தனியரு எழுத்தாளர் மாதவன்!
சொல்லித் தீராத கதைகள், அந்தத் தெருவில் ஊறிக்கொண்டிருக்கின்றனபோலும்! எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நிகழ்வுகள், மனிதர்களின் சுபாவம் தெருவில் படிகிறதா... அல்லது, தெருவின் சுபாவம் மனிதர்களைப் பற்றிக்கொள்கிறதா எனத் தெரியாதபடி, சாலைத் தெருவும் அதன் மனிதர்களும் விசித்திரமாக இருந்தார்கள்!

மரத்தில் ஆணி அறையப்பட்ட இடத்திலிருந்து பிசின் வழிந்து கொண்டிருப்பதைப்போல, ‘வேஷம்' கதையைப் படித்த நாளிலிருந்து மனதில் அறியாத வலியன்று கசிந்துகொண்டிருந்தது.

சிவதாஸ் என்ற இளைஞனின் கதையே ‘வேஷம்'. அவன் பிழைப்புக்காக தாலூகா அலுவலகத்தில் மனுக்கள் எழுதித்தருவது, வெளிநாட்டுப் பயணிகளுக்கு பட்லர் ஆங்கிலத்தில் பேசி, கோயிலைச் சுற்றிக்காட்டுவது எனச் சின்னஞ்சிறு வேலைகளைச் செய்து பிழைத்துக்கொண்டு இருக்கிறான். நிரந்தர வருமானம் இல்லை, இருப்பிடமும் இல்லை!

சிவதாஸின் ஓர் அதிகாலைப்பொழுதில் கதை துவங்குகிறது. ஒரு கல்யாணத்துக்குச் செல்வதற் காக பத்மநாப சுவாமி கோயில் குளத்தில் விடிகாலையில் குளித்துவிட்டு, துவைத்துத் தயாராக வைத்திருந்த பாலிஸ்டர் வேட்டி, சட்டை அணிந்து முக்கில் இருந்த பண்டாரத்தின் வெற்றிலைப் பாக்குக் கடையில் வந்து உட்கார்ந்து கொள்கிறான்.

அவன் கல்யாணத்துக்குச் செல்வதற்கு ஒரேயரு காரணம் மட்டுமே இருக்கிறது. அது, அங்கே கிடைக்கும் ஓசிச்சாப்பாடு!

வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக, அருகில் உள்ள கல்யாண மண்டபங்களில் எந்தத் திருமணம் நடந்தாலும் பெரிய மனிதனைப் போல நுழைந்து, பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான். அது, அவனது வாடிக்கை.
அன்றும், இதற்காகத்தான் அதிகாலையிலே தயாராக இருந்தான். திருமண வீட்டுக்கு ஆட்கள் வரத் துவங்கினார்கள். திருமண மண்டபத்தை நிர்வகிக்கும் நாயருக்குத் தெரியாமல் உள்ளே போகவேண்டும்!
அவர் கண்டுபிடித்தால் துரத்திவிடுவார் என்பதால், பெரிய மனிதரைப்போல உள்ளே நுழைந்து, வசதியான ஒரு நபரின் அருகில் உட்கார்ந்துகொண்டான். அது, ஒரு மலையாளி வீட்டுத் திருமணம். உள்ளே உணவு தயாரிக்கும் வாசம் கமகமக்கிறது.

'மண்டப நிர்வாகி வருகிறாரா?' என்று கள்ளப் பார்வை பார்த்தபடியே, கல்யாணச் சடங்குகளைக் கவனிக்கிறான். மணப்பெண்ணுக்குப் புதுப்புடவை தருகிறார்கள். அதை வாங்கிக் கொள்ளும்போதுதான் தெரிகிறது, அந்த மணப்பெண் அவனோடு பள்ளியில் படித்த சுபாஷினி. உடனே, 'அவள் தன்னைப் பார்த்து விடக்கூடாதே' என்று கலக்கம் உருவாகிறது.

பால்ய வயதில் சுபாஷினியும் அவனும் ஒரே பள்ளியில் படித்தார்கள். ஒரு நாள் சுபாஷினிமீது காகித அம்பு விடுகிறான் சிவதாஸ். அவளும் பதிலுக்குச் சிவப்பு மையை அவன்மீது ஊற்று கிறாள். இதனால் சண்டை உருவாகி, நாளடைவில் அது சமாதானமடைந்து நேசமா கிறது. ஆனால், பள்ளிப் படிப்பை முடிக்காமலே சிவதாஸ் பாதியில் நின்று விடுகிறான்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனது பள்ளித் தோழியைப் பார்த்தவுடன், கல்யாண மண்டபத்தைவிட்டு வெளியே போய்விடலாமா என்று தோன்றுகிறது. ஆனால்,3770584447_d1e7bcd268_m தன்மானத்தைவிடவும் பசி வலுவடையவே, சாப்பிடு வதற்குச் செல்கிறான். விதவிதமான உணவு வகைகள், பாயசம் என விருந்து மணக்கிறது. அவனது இலையில் பொரியலும் அவியலும் பருப்பும் நெய்யும் சுடுசாதமும் போடுகிறார்கள்.
சாப்பிடக் கை வைக்கும்போது, மண்டப நிர்வாகி நாயர் அவனைப் பார்த்துவிடுகிறார். சட்டையைப் பிடித்து இழுத்து, 'ஓசிச் சாப்பாட்டுக்கு வந்தவனுக்கு முதல் பந்தியா?' என மிகக் கேவலமாகத் திட்டுகிறார்.

சிவதாஸ் எழுந்துகொள்ள முற்படும்போது, புதுமணப்பெண்ணாக எதிர்வரிசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுபாஷினி, அவனைத் திரும்பிப் பார்க்கிறாள்.
வெளியே துரத்தப்படும் அவனை, வாசலில் காத்துக்கிடக்கும் பிச்சைக்காரர்கள்கூடக் கேலி செய்து சிரிக்கிறார்கள்.
'கூடப்படித்த பெண்ணின் திருமணத்தில், இப்படி ஒருவேளை சோற்றுக்கு ஆசைப்பட்டுப்போய், கள்ளனைப்போலப் பிடிபட்டு அவமானப்பட்டு விட்டோமே? என்ன வாழ்க்கை இது! குளத்தில் விழுந்து செத்துவிடலாமா?' என்று தோன்றுகிறது.
ஆத்திரத்தில், தான் போட்டிருந்த பாலிஸ்டர் சட்டையைக் கழற்றிச் சுருட்டி, குளத்தில் வீசி எறிகிறான். சிவதாஸின் வேஷம் கலைந்து போயிற்று. ஆனால், நிர்வாணத்தை விடவும், தான் நேசித்த பெண்ணின் முன் அடைந்த அவமானமே, அவன் உடலைக் கூசி நடுங்கச் செய்வதாக இருந்தது.

தோல்வியைவிடவும் அதை ஒப்புக்கொள்ளும் தருணம்தான் அதிக வலியைத் தரக்கூடியது.

அவமானப்படுவது பெரிய விஷயமல்ல. நாம் நேசிக்கும் ஒருவரின் முன்பாக அவமானப்பட்டு நிற்பதுதான் தாங்கமுடியாத வலி, இல்லையா?
அதோடு, இந்தக் கதை பில்லியர்ட்ஸ் மேஜையில் ஒரு பந்து மோதி, மற்ற பந்துகளைத் திசைக் கொன்றாக உருளச்செய்வதுபோல, என்றோ என்னுள் புதையுண்டு போயிருந்த மெகருன்னிசா டீச்சரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
கிராமப் பள்ளியன்றில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, மெகருன்னிசா என்ற புதிய ஆசிரியை வேலைக்கு வந்துசேர்ந்தாள். மெகருன்னிசாவுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். காலில் வெள்ளிக் கொலுசு அணிந்திருந்தாள்.

மற்ற ஆசிரியைகளைப்போல் இல்லாமல், அவள் எப்போதும்சிரித்துக் கொண்டே இருந்தாள். அவள் வருவதற்கு முன்புவரை, பள்ளியில் இருந்த ஆசிரியை களுக்குத் தங்கள் வயது தெரியவே இல்லை!

ஆனால், அவள் வந்த மறுநாளில் அவர்களின் நரைத்த தலையும், பருத்த உருவமும் உரத்த குரலும் அவர்களின் வயதைக் காட்டிக்கொடுத்திருக்க வேண்டும். அவசரமாகத் தங்களை அழகு படுத்திக்கொள்ளத் துவங்கினார்கள். அது, அவர்களது வயதை மேலும் அதிகப்படுத்திக் காட்டியது.
ஆசிரியர்களும் மாணவர்களைப் போலவே, டக்இன் பண்ணிக்கொண்டு வகுப்புக்கு வந்தார்கள். அவர்கள் பாண்ட் பாக்கெட்டில் சீப்பு இருப்பதும் அடிக்கடி அவர்கள் தலைசீவிக்கொள்வதும் தெரிந்தது.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் யாவரும் ஒன்றுசேர்ந்து ஒருதீர்மானம் போட்டோம். எங்களைத் தவிரவேறு வகுப்பு ஆசிரியர்களோ மாணவர்களோ மெகருன்னிசா டீச்சரைக் காதலிக்கக் கூடாது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது எளிதாக இல்லை.

மெகருன்னிசா டீச்சர் எட்டாம் வகுப்புக்கு ஆங்கிலப் பாடம் எடுக்கச் சென்றபோது, ஒரு மனப்பாடப் பாடலைத் தப்பில்லாமல் சொன்னதற்காக, கோபாலைப் பாராட்டி ஒரு சாக்லெட்டைப் பரிசாகத் தந்த நிகழ்ச்சி, எங்களை ஒரு இரவு தூக்கமில்லாமல் செய்ததோடு, கோபாலைப் பள்ளியைவிட்டே விரட்டுவதற்கான சதி ஆலோசனைகளிலும் ஈடுபடச் செய்தது.

அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுப்பு வந்தது. அதன்பிறகு, பள்ளி திறந்த இரண்டு நாட்கள் மெகருன்னிசா டீச்சர் வரவில்லை. மூன்றாம் நாள் வந்தவள், வகுப்பு முழுவதற்கும் சாக்லெட் கொடுத்துவிட்டு, தனக்கு அடுத்த வாரம் திருமணம். எல்லோரும் அவசியம் வரவேண்டும் என்றாள். சாக்லெட்டை மெல்ல முடியவில்லை... கசப்பாக இருந்தது!
அன்று மாலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் திரும்பவும் ஒன்றுகூடி, மறு தீர்மானம் போட்டோம். எங்களை ஏமாற்றிவிட்டு டீச்சர் திருமணம் செய்துகொள்ளப் போகிறாள். ஆகவே, அவளது திருமணத்துக்கு யாரும் போகக்கூடாது! அதை மீறி, திருமலைமுருகன் மட்டும் டீச்சர் திருமணத்துக்குப் போயிருந் தான். அதற்காக அவனை நாங்கள் விளையாட் டில்கூடச் சேர்த்துக்கொள்ளவில்லை!
திருமணம் நடந்து முடிந்த இரண்டாம் நாளே, மெகருன்னிசா டீச்சர் பள்ளிக்கு வந்து சேர்ந்தாள். அவள் முகத்தில் களையே இல்லை. பாடம் நடத்தும்போது, ஏதோ யோசனையாகவே இருந்தாள்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு, ஒரு பகலில் புல்லட் ஓட்டிக்கொண்டு ஒரு ஆள், எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தான். தன்னை மெகருன்னிசாவின் கணவன் என்று சொல்லிக்கொண்டு, எங்கள் வகுப்பறைக்கு வந்தான்.
டீச்சர் அவனை வகுப்புக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய், ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள். அவன் திடீரெனக் கத்தத் துவங்கி, 'என்னடி... பேசிட்டே போறே? சம்பாதிக்கிற திமிரா... நீ வேலை பார்த்தது போதும். இப்பவே என்கூடக் கிளம்பு' எனக் கையைப் பிடித்து இழுத்தான்!

டீச்சர் வர மறுத்து, ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவன் ஆத்திரத்தோடு மெகருன்னிசா டீச்சரின் முகத்தில் ஓங்கியறைந்தான். வலி தாங்காமல் கத்தி அழுதுவிட்டாள் டீச்சர்.

மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்து, டீச்சரின் கணவனை விலக்கித் தனியே அழைத்துக்கொண்டு போனார்கள். சிறுகுழந்தையைப் போல மெகருன்னிசா டீச்சர் அழுதுகொண்டிருந்தாள்.
அடிபட்டதுகூடக் காரண மில்லை... இத்தனை மாணவர்கள் பார்க்க, அடி வாங்கிவிட்டது தான் அவளை வேதனைப்படுத்தியிருக்க வேண்டும். தலை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. தொலைவில் டீச்சரின் கணவன் உரத்த குரலில் கத்திக்கொண்டிருந்தான்.

வெளிநாட்டில் வேலை செய்வதாகச் சொல்லி அவன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவனுக்கு முன்பே ஒரு திருமணம் நடந்து மணவிலக்கு நடந்திருப்பதாகவும் மெகருன்னிசா டீச்சர், மற்ற ஆசிரியர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். டீச்சர், அதன்பிறகு வகுப்புக்கு வரவேயில்லை. பள்ளியிலிருந்தும் மாற்றல் வாங்கிக்கொண்டு போய் விட்டாள்.

பால்யத்தில் அவள் உருவாக்கிய ஆசைக் கனவுகள், நீர்க்குமிழ்கள் போலக் காற்றில் நிமிஷ நேரம் அழகு காட்டி விட்டுக் கரைந்து போய் விட்டன.

என்னவானது அவள் வாழ்க்கை? எங்கே இருக்கிறாள்? இன்றுவரை எதுவும் தெரியாது. கதையைவிடவும் வாழ்க்கை அதிகப் புதிரானதில்லையா?

'ஒரே படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வேறு வேறு கனவுகள் காண்கிறோம்' என்று ஆங்கிலத்தில் ஒரு வழக்குச் சொல் இருக்கிறது.

கனவுகள் நமக்குக் கிடைத்த வரமா, சாபமா என்றுதான் தெரியவில்லை!

ஆ.மாதவன் 1934-ம் வருடம் திருவனந்தபுரத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி இறுதியுடன் படிப்பை விட்டுவிட்டு கடை வியாபாரத்துக்குச் சென்றுவிட்டார். நாற்பத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் முக்கிய படைப்பாளி. இவரது சிறுகதைகள் ‘ஆ.மாதவன் கதைகள்' என்ற பெயரில் மொத்தத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ‘கிருஷ்ணப் பருந்து' இவரது புகழ்பெற்ற நாவலாகும்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

3 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் on September 29, 2011 at 8:22 PM said...

வெகு நாட்களுக்குப் பிறகு உயிருள்ள எழுத்தைப் படிக்க முடிந்தது. மிகவும் நன்றி.
ராமகிருஷ்ணன். திரு.மாதவனின் மற்ற படைப்புகளையும் படிக்க ஆவல்.

BLOK DR. K. ANANDAN on October 29, 2018 at 7:57 PM said...

அருமையான பதிவு. எஸ். ரா வின் பின்னால் நடக்கிறேன்.

BLOK DR. K. ANANDAN on October 29, 2018 at 7:58 PM said...

அருமையான பதிவு. எஸ். ரா வின் பின்னால் நடக்கிறேன்.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்