Apr 3, 2010

நாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன்

நாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி..

கோவிலில் நின்றுகொண்டிருந்தான் அவன். அவன் பார்த்துக் கொண்டிருந்த சிலையின் முகத்தில் அம்மாவின் களை தட்டிற்று. முகம் அவனைப் பார்த்து ஒரு விதமாகச் சிரித்தது; கண்களில் துளிர்த்த நீரைப் பார்த்தால் அழுவது போலவும் இருந்தது. சிலையின் மார்பிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வழிந்து தரையில் பொத்தென்று விழுந்தது. ஆனால் மறுகணம் அதே ஒலி ஒரு ‘கேப்’ துப்பாக்கிபோல் அவன் காதுகளில் வெடித்தது. மூடிய கண்களுக்குள் ஒரு பிரகாசம். கந்தன் புரண்டு படுத்தான். மீனாவைgnagarajan அணைக்க வலது கையை இடதுபுறம் திருப்பினான். மீனா இல்லை. நினைவு வந்துவிட்டது. இலேசாகக் கண்களைத் திறந்து படுத்தபடியே நகர்ந்து திறந்திருந்த கதவைக் காலால் உதைத்தான். குடிசையினுள் இருந்த வெளிச்சம் குறைந்தது. பேச்சி வீட்டுக்குத்தான் மீனா போயிருக்கும். இந்தப் பேச்சி என்ன பொம்பளே ? மாரிப்பய போயி மூணு வருஷத்துக்கும் மேலே ஆவுது. இட்டிலி சுட்டு வித்திட்டிருக்கு. அதிலே என்ன கெடைக்கும் ? ஆமாம், பேச்சி இட்டிலி சுட்டு விற்றாள்; மீனா அவனோடு இருந்தாள்.

மீண்டும் தூக்கம் வருவதாக இல்லை. படுத்தபடியே பிரயாசைப் பட்டு அரையளவுக்கு மூடி இருந்த கதவைக் காலாலே திறந்தான் கந்தன். குடிசையை ஒட்டி ஓடிய சாக்கடை ஓரம் முனிசிபல் தோட்டி தெருவைக் கூட்டிக்கொண்டிருந்தான். மணி ஏளுதான் இருக்கும். இன்னும் ரெண்டு மணி போகணும். ஒரு கையைத் தரையில் ஊன்றிக் கால்களை நீட்டியவாறே எழுந்து உட்கார முயன்றான் கந்தன். முதுகை வளைக்க முடியவில்லை; அப்படி வலி. “அம்மா” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே, முதுகை ஒரு மாதிரி நெளித்து எழுந்து உட்கார்ந்தான். கால்கள் நீட்டிக் கிடந்தன; இரண்டு கைகளும் பின்புறமாகத் தரையில் ஊன்றியிருந் தன. நேத்து அந்த வெறும் பயலுக்கு ஊத்தின முன்னூறு மில்லியை யாவது வச்சிட்டிருந்திருக்கலாம்; முளிச்ச நேரத்துலே போட்டா கொஞ்சம் தெம்பா இருக்கும். ஆமா, இது குடிக்கிறதுனாலே வர்ற வியாதியில்லே; குடியாததனாலே வர்ற வியாதி. வெறகுக் கடைக்குப் போகலாம்; ஜிஞ்சராவது கெடைக்கும். கஷ்டப்பட்டு ஒரு கையால் தலையணையைத் தூக்கிப் பார்த்தான். கை சொன்னபடி கேட்க வில்லை; தலையணையை இலேசாகத் தள்ளிவிட்டுத் தந்தி அடிக்க ஆரம்பித்தது. மீண்டும் கையைத் தரையில் ஊன்றிக்கொண்டான். தேவைப்படாத ஒரு ஏப்பம். அதைத் தொடர்ந்து குமட்டல். குமட்ட லோடு இருமல். விலா எலும்புகள் முறிவதுபோல் இருந்தது. வாயி லிருந்து ஐம்பது மில்லி கோழை வழிந்து பனியனை நனைத்த பிறகு சிறிது நிம்மதி. சிறிது தெம்புங்கூட. வீராப்போடு ஒரு கையால் தலையணையைப் புரட்டினான். அதன் கீழ் ஒரு அழுக்கு இரண்டு ரூபாய்த்தாள் கிடந்தது. இன்னும் கா ரூபா வேணுமே! எங்காச்சும் வச்சிருக்கும். மீண்டும் அதே வீராப்போடு எழுந்து நின்றான். வேட்டி நழுவவும், அதைச் சரிப்படுத்த முயலுகையில் தடுமாறி, இடது கைக்குப் பட்ட சுவரின் மீது தாங்கிக்கொள்ள முயன்றான். பிடி நிலைக்காது கீழே சரிந்தான். “அடத். . .” என்று வைதுகொண்டே, மீண்டும் சக்தி வரும் என்ற நம்பிக்கையோடு கண்களை மூடினான்.

“சாருக்கு எங்கே தங்கல் ?”

“ஸ்ரீ வள்ளி லாட்ஜ்.”

“ரூம் நம்பர் ?”

“பனிரெண்டு.”

எங்கிட்டோ பறந்துட்டு, எங்கிட்டோ நின்ன மாதிரி இருக்கு. கேப் துப்பாக்கி கணக்கா காதுலே வெடிக்குது. கண் கூசுது. கந்தன் கண்களைத் திறந்து பார்த்தான். காற்றில் நெளி நெளியாக உருவங்கள் அசைகின்றன. அலையலையாகச் சுழிக்கின்றன. இப்போதெல்லாம் அவற்றைக் கண்டு அவன் பயப்பட்டுக் கண்களை மூடாமல் மட்டும் இருந்தால் அவை தாமாகக் கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடும்.

உதறிக்கொண்டு சுவரோரமாக எழுந்து உட்கார்ந்தான். மீண்டும் ஒரு கணத்துக்குக் கம்பி கம்பியாகச் சுழலும் அதே வடிவங்கள். எழுந்து நின்று, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுத் தன்னிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டான். இனி கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று அவனுக்குப் பட்டது. கால்கள்தான் கொஞ்சம் நடுங்கின, கடுத்தன. மெதுவாக நடந்து, மீனா சில்லரைக் காசுகள் வைக்கும் பிறையைத் துளாவினான். ஓரிரு எலிப் புழுக்கைகள் கைக்குப் பட்டன. எரிச்சலோடு கீழே உட்கார்ந்து, மீனாவின் துருப்பிடித்த துணி வைக்கும் பெட்டியைத் திறந்தான். அழுக்குத் துணிகளையும், தோய்த்து உலர்த்திய துணிகளையும் உதறி உதறி வெளியே எறிந்தான். அவ்வாறு எறியும்போது பெட்டியின் அடியிலிருந்து கரமுரவென்று ஒலி வெளிப்பட்டது. ஆவலோடு துணிகளைக் காலி செய்தான். பெட்டியின் அடியில் பெரிசும் சிறிசுமாக ஐந்தாறு காலிக் கண் ணாடிப் புட்டிகள் கிடந்தன. திடாரென்று அறை இருண்டது. பதறிப் போய் வாசற்பக்கம் திரும்பினான் கந்தன். பெட்டியின் மூடி ‘கிரீச்’சென்று கத்திக்கொண்டே அவன் கைகள் மீது விழுந்தது. “என்ன மச்சான், இப்படி பயந்துட்டாங்க ?” என்றாள் குடிசை வாயில் நிலையை இரண்டு கைகளாலும் பற்றி நின்றுகொண்டிருந்த மூக்கனின் மனைவி.

“இல்லே, மீனா பெட்டியே கள்ளத்தனமாத் துளாவிட்டிருக்கேன். அதுதான் வந்திரிச்சோன்னு பயம்.” கந்தன் சாவதானமாக உட்கார்ந்து கொண்டான். அவன் முகத்தில் இப்போது கொஞ்சம் மலர்ச்சி. “ஏன் அங்கேயே நிக்கறே ?” என்று மூக்கனின் மனைவியை உபசரித்தான்.

தலையில் பூவோடு, சற்றுப் புதிது என்று சொல்லக்கூடிய சேலை ரவிக்கையோடு, காலில் மெட்டி ஒலிக்க, மூக்கனின் மனைவி தனது முப்பத்தெட்டு ஆண்டுகளையும் பதினெட்டாக மாற்றிக்கொண்டு உள்ளே நடந்து வந்தாள். சட்டென்று குனிந்து, பாயிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக் கைக்குள் மறைத்து, இரண்டு கைகளையும் லாவண்யமாக இடுப்பில் அழுத்தி வலது காலை நொண்டுவதுபோல் வைத்து நின்றபடியே கொல்லென்று கந்தனைப் பார்த்துச் சிரித்தாள் அவள். கந்தன் அவளை ஆவலோடு பார்த்தபடியே “ரொம்ப அளகாச் சிரிக்கறயே ?” என்றான். “என் அளகுச் சிரிப்புக்குத்தானே இந்த அம்பளிப்பு இல்லையா ?” என்று கூறிக்கொண்டே, கையில் இருந்த ஒரு அழுக்கு இரண்டு ரூபாய்த் தாளை அவள் காட்டினாள்.

“அய்யோ, எம்பணம். இன்னைக்கு காலைக்கு அதுதான்” என்று கதறிக்கொண்டு கந்தன் அவளிடமிருந்த பணத்தைப் பிடுங்க எழுந் தான். அவள் சிரித்துக்கொண்டே அவன் மீது பணத்தை வீசியெறிய வும், அது சரியாக அவன் கைகளில் விழுந்தது.

“சரி உக்காரு, பேசுவோம்” என்றான் கந்தன்.

“ஏம் மச்சான், இப்படிக் கால் நடுங்குது ?” என்று கேட்டுக் கொண்டே அவள் உட்கார்ந்தாள்.

“அது அப்படித்தான் செல சமயம். மூக்கன் என்ன சவாரிக்குப் போயிருக்கா ?”

“ஆமாம், பொழுது சாஞ்சுதான் வரும்.”

“இல்லே, ஒன்னு தோணிச்சு. நேத்து ஒரு கிராக்கி, கொஞ்சம் வயசு கூடவானாலும் பரவாயில்லே, உம்னு இல்லாம சிரிச்சுப் பிடிச்சி விளையாடற பிள்ளையா இருந்தா வேணூம்னான். எனக்கு ஒன் நெனைப்புத்தான் வந்திச்சு.”

“போங்க மச்சான், என்னமோ காரியமா பேசுறீங்க, எனக்குத் தெரியாதா ?” என்று கூறிவிட்டு, பிறகு ஏதோ நினைவுக்கு வந்துவிட் டது போல் சிரிக்கத் தொடங்கினாள். “மச்சானோடே எப்பவும் ஒரே கூத்துத்தான்” என்பதையும் சேர்த்துக்கொண்டு, சிரித்தவண் ணமே, ஒரு கையால் தலைப்பூவைச் சரி செய்துகொள்ளப் பார்த்தாள். அவள் சிரித்த சிரிப்பில் பூவும் கலைந்து அவளது காதின் பின்னே ஏதோ வால் மாதிரி தொங்கிக்கொண்டிருந்தது.

“நீயும் அளகாத்தான் இருக்கே. இல்லாட்டி மூக்கன் கட்டியிருப் பானா ?” என்றான் கந்தன்.

“அதான் அண்ணைக்கு, நீ கொரங்கு மாதிரி இருக்கே, ஒங்கிட்ட எவன் வருவான்னு சொன்னேயாக்கும் ?”

“வெறிச்சிலே சொல்லியிருப்பேன்.”

“இப்ப ?”

“குடிக்கலேயே.”

“குடிச்சா ஆம்புளேங்களுக்கு கெளவிகூடக் கொமரி மாதிரி தெரியூம்னு சொல்வாங்க.”

“ஆமா.”

“அப்ப என்னெ மட்டும் குடிலே நீ ஏன் கொரங்குமாதிரி இருக்கேன்னே ?”

“அதுவா ? உண்மை என்ன தெரியுமா ? மூக்கனுக்கும் எனக்கும் பத்து வருசப் பளக்கம். நான் அவனுக்குத் துரோகம் பண்ணலாமா ?”

“மீனா மட்டும் என்னவாம் ? அதுக்கும் கண்ணாலமாயித்தானே இருக்கு ?”

“ஆமாம். ஆனா நா சம்மதிக்கிறேன், அது போகுது. மூக்கன் சம்மதிப்பானா ?’

கந்தனை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே இலேசான புன்னகை யோடு, “தெரியாமத்தானே செய்யப்போறோம்” என்றாள் அவள். இதற்கும் உடனேயே கந்தன் ஏதாவது சமாளிப்புச் சொல்லி விடுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் கொஞ்சம் யோசனையில் இருந்துவிட்டு கந்தன், “உம், நீ சொல்றதும் சரிதான். ஒனக்கும் ஆசை இருக்காதா ?” என்றான்.

“ஏதோ சிரிச்சுப் பேசி விளையாடற பிள்ளையா வேணூம்னுட்டு ஒரு கிராக்கி சொல்லிச்சீன்னியே” என்று தனது வெற்றிக்கு முத் தாய்ப்புத் தேட முனைந்தாள் மூக்கனின் மனைவி.

“அந்தக் கிராக்கி எங்கேயும் ஓடிடாது. காலேலே எட்டு, ஒம்பது மணிக்கு அந்த அய்யர் சந்தக் கடைக்கிக் கறிகாய் வாங்க வருவாரு. அவரே நாளைக்கே பார்த்திடலாம். . . சரி மோகனா, நான் இப்ப வெளியே போகணும். ஒரு மூணு அவுன்ஸ் ஜிஞ்சர் அடிச்சாத்தான் எதுவும் செய்ய முடியும். கைலே ரெண்டு ரூபாதான் இருக்கு. ஒரு அரை ரூபா தா, பெறகு அட்ஜஸ்டு பண்ணிக்கலாம்.”

“அது யாரு மோகனா, மச்சான் ?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் மூக்கனின் மனைவி.

“நீதான் மோகனா. மூக்கனுக்கு மட்டுந்தான் நீ இனிமே ராக்காயி; மத்தவங்களுக்கெல்லாம் நீ மோகனாதான்” என்றான் கந்தன்.

“மோகனா” என்று இழுத்துக் கூறிவிட்டு, இரண்டு கைகளாலும் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, ஏதோ மறந்தது நினைவுக்கு வந்து விட்டதுபோல் சிரிக்க ஆரம்பித்தாள் மோகனா என்ற ராக்காயி.

“ஆமா, நான் கேட்டது என்ன ?” என்றான் கந்தன். சரியாக உட்கார்ந்து கொண்டு இடுப்பு முடிச்சை அவிழ்த்து, அதிலிருந்து எதையோ எடுத்து அதைக் கந்தன் கைக்குள் பெருமையோடு திணித்துவிட்டு, “என் கையிருப்பே இவ்வளவுதான்” என்றாள் ராக்காயி. கையில் திணிக்கப்பட்டது கேவலம் ஐந்து காசே என்றதைக் கண்டதும் கந்தனுக்கு அவளை அப்படியே கழுத்தை நெறித்துக் கொன்றுவிடலாமா என்றிருந்தது. அடுத்த நிமிடம் சட்டென்று திரும்பி மீனாவின் பெட்டியிலிருந்த காலிபாட்டில்களை எடுத்து மோகனா வின் முன் வைத்தான்.

“இந்தா மோகனா, இதெயெல்லாம் இந்த முக்கு ராவுத்தர் கடேலே போட்டுட்டு வா” என்றான்.

“நல்ல ஐடியாதான். மச்சானுக்கும் மூளே வேலை செய்யத்தான் செய்யுது” என்று சொல்லிக்கொண்டு, தனது கையால் கந்தனின் கன்னத்தில் செல்லமாகக் குத்திவிட்டு, சப்தம் செய்யாமல் சிரித்துக் கொண்டே, குனிந்து பாட்டில்களை முந்தானையில் சுற்றிக்கொண்டு, “இப்ப வந்திடறேன்” என்று சொல்லிக்கொண்டே நடந்தாள் ராக்காயி.

குடிசையையும் ரோட்டையும் பிரிக்கும் சாக்கடையைக் கடக்க வைக்கப்பட்டிருந்த பலகையின் மீது அவள் நடந்து செல்வதைப் பார்த்ததும் கந்தனது தொடைகள் பலமாக உதறத் தொடங்கின.

“ராக்காயி, ராக்காயி” என்று உரக்கக் கூவினான் கந்தன். அவளும் சட்டென்று ஓடிவந்து, அவனை அடிப்பவள் போலக் கையை ஓங்கி, “மோகனான்னு கூப்பிடு” என்றாள்.

“ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். அந்த சின்ன பாட்டிலே போட வேண்டாம். இந்த ரெண்டு ரூபாவை வச்சிக்க. மத்த பாட் டில்களே கடேலே போட்டிட்டு, அந்த பாட்டில்லே மூணு அவுன்சு ஜிஞ்சர் வாங்கிட்டு வந்திரு.”

“அடியாத்தா! ஜிஞ்சர் கடைக்கெல்லாம் நான் போவமாட்டேன்.”

“நீ ஜிஞ்சர் கடைக்கெல்லாம் ஒண்ணும் போவ வேண்டாம். இந்த மொகணேலே ஒரு வெறகுக் கடை இருக்கில்லே ? அங்கே போய்க் கேளு, தருவாங்க.”

“யாரெக் கேக்க ?”

“மணீன்னு ஒரு பொடியன் இருப்பான், அவனக் கேளு.”

“அவன் இல்லாட்டி ?”

“எல்லாம் இருப்பான். சீக்கிரம் போ” என்றான் கந்தன். ராக்காயி நகர்ந்தாள்.

ராக்காயி திரும்பி வரப் பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று. இதற்கிடை யில் கந்தன் படுப்பதும் எழுந்து உட்காருவதுமாக இருந்தான். தாகமாக இருப்பதுபோல் இருந்தது. ஒரு குவளை தண்ணீர் எடுத்துக் குடிக்குமுன் தலையும் கைகளும் நடுங்கி அவனைப் படாதபாடு படுத்திவிட்டன. இடது கைப்புறத்தில் இருந்த குடிசையில் ஆளரவம் கேட்கத் தொடங்கியது. வலது கைப்புறத்தில் இருந்த குடிசையிலிருந்து இன்னும் சில நாட்களுக்கு ஆளரவமே வராது என்று கந்தனுக்குத் தெரியும். . . பத்து நாட்களுக்கு முன்பு அங்கு குடியிருந்தது நாவித இளைஞன் பரமேஸ்வரனும் அவனது விதவைத் தாயார் லட்சுமியும். பரமேஸ்வரன் அக்கிரகாரம் ஒன்றின் முனையில் இருந்த ஒரு சலூனில் வேலை பார்த்து வந்தான். அந்த அக்கிரகாரத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. நகரிலே இருந்த மிகப் பெரிய இறைச்சிக் கடை அக்கிரகாரத்தில்தான் இருந்தது. கடை முதலாளி பசுபதி சிறுவனாக இருந்தபோது - எல்லாம் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் -அக்கிரகாரத்தின் வழியே ஒரு கூடையில் மீனை வைத்துக் கொண்டு கூவிச் சென்றானாம். அதற்காக அக்கிரகார வாசிகள் அவனைக் கட்டிவைத்து உதைத்தார்கள். ‘இதே அக்கிரகாரத்தில் ஒரு இறைச்சிக் கடையே வைப்பேன்’ என்று பையன் சூளுரைத்து, தன் சூளுரையைப் பத்து வருடங்களுக்கு முன்பாக நிறைவேற்றியும் விட்டான். இப்போது அக்கிரகாரத்தில் உள்ள மிகப் பெரிய வீடு அவனுடையதுதான். பசுபதிக்கு இரண்டு தாரங்கள். முதல் தாரத்துக்கு குழந்தைகள் இல்லை; இரண்டாவது தாரத்துக்கு மூன்று குழந்தைகள். மூத்தது பெண். சற்று அழகானவள் என்று கேள்வி. அந்தப் பெண்ணுக்கு அக்கிரகாரத்தின் கோடியில் ராணி சலூனை நடத்தி வந்த முதலாளி தான் ரோம நாசினி வாங்கித் தருவானாம். அதன் மூலம் சலூனில் வேலை பார்த்த பரமேஸ்வரனுக்கும் அவளுக்கும் தொடர்பு ஏற்பட் டது. பரமேஸ்வரன் ஓரிரண்டு ஆண்டு காலம் விஷயத்தை ரகசியமாக வைத்திருந்தான். சில சமயம் கந்தனிடம் மட்டும் அதைப் பற்றிப் பேசுவான். ‘அம்பு மீக்க கதலா’ என்று தொடங்கும் அவள் எழுதிய காதல் கடிதங்களைக் கந்தனிடம் வாசித்துக் காட்டுவான். சினிமாக் கதைகளில் வருவது போலவே, பசுபதி, மகளின் காதல் விவகாரத்தை உணராது, அவளுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தார். அவளோ பரமேஸ்வரனோடு கள்ளத்தனமாக ஓடிவிடத் திட்டமிட் டாள். அவ்வளவு புத்திசாலிப் பெண் இல்லை. பிடிபட்டுக் கொண் டாள். பரமேஸ்வரனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று ஒருநாள் பூராவும் அடித்து நொறுக்கினார்கள். அந்த ‘அம்பட்டப் பயலை’க் கட்டிப்போடச் சொல்லிவிட்டு, கசாப்புக் கடைக்காரர் பசுபதி தம் கையாலேயே ஒரு சுத்தியலைக் கொண்டு பரமேஸ்வர னின் இரண்டு பற்களை முழுமையாகவும், மற்றுமொன்றைப் பாதி யளவுக்கும் உடைத்தார். இரவில் பரமேஸ்வரனை அவனது குடிசை யில் கொண்டுவந்து போட்டார்கள். அவன் அம்மா பயந்து எங் கேயோ ஓடிவிட்டாள். மறுநாள் காலையில் பரமேஸ்வரன் குடிசை யின் குறுக்கே ஓடிய வலுவான மூங்கில் உத்திரத்தில் பிணைக்கப் பட்டிருந்த கயிற்றில் தொங்கினான். அவன் ஒன்றும் எழுதி வைத்திருக் காததால், பிரேத விசாரணையின்போது ‘வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை’ என்ற முடிவுக்கு வர கந்தன்தான் சாட்சியம் தரவேண்டி இருந்தது.

ராக்காயி வருவது கந்தனுக்குத் தெரிந்தது. சாக்கடையைக் கடக்க உதவிய ‘மரப்பாலத்’தின் மீது நடந்து வந்துகொண்டிருந்தாள். அடுத்த குடிசையிலிருந்து ஒரு குழந்தையின் முனகலும், வேலாயி வீட்டைத் துப்புரவாக்கும் ஒலியும் கேட்டது. ராக்காயி வந்துவிட்டாள். அவளைப் பார்த்ததும் கந்தனுக்கு ஒரு கணம் பகீரென்றது. அவள் கைகளில் ஒன்றுமில்லை - பாட்டில் ? அவள் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, அவன் முன்பு நின்று சிரிக்க முயன் றாள். ஆனால் அவனது முகம் அவளது சிரிப்பை அடக்கியது. “என்ன வெறுங்கையோடு வர்றே ?” என்று அவன் பதறினான். அவள் சிரித்துக் கொண்டே மடியில் மறைத்து வைத்திருந்த ஒரு காகித கார்க்குப் பூட்டிய பாட்டிலை எடுத்து அவன் முன்பு நீட்டினாள்.

“அதெக் கீழே வச்சிட்டு, அந்தக் கிளாசிலே கொஞ்சம் தண்ணி யெடு” என்றான் கந்தன்.

அவள் நகர்ந்து சுவரோரமாக இருந்த ஒரு கிளாசை எடுத்து, பானையைச் சுரண்டி, கொஞ்சம் தண்ணீர் எடுத்துவைத்தாள்.

“சரி போ.”

“மச்சான் குடிக்கறதே நா பாக்கணும்.”

அவள் உட்காரப் போனாள்.

“உம் உம், நீ இங்கே இருக்கக்கூடாது” என்று அவன் கத்தினான்.

“ஏனாம் ?”

“கூடாதுன்னா கூடாது” என்று கந்தன் பல்லை நெறித்தான். அவ னது உடல் படபடத்து நடுங்கிற்று.

ராக்காயி பயந்துவிட்டாள்.

“என்ன இப்படி வெறி ? நான் பெறவுக்கு வர்றேன்” என்று கூறிக் கொண்டே குடிசையை விட்டகன்றாள்.

நடுங்கிய கையோடு கந்தன் பாட்டிலை கிளாசில் காலி செய்தான். இலேசாக மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த திரவத்தைப் பார்க்கும் போது, அவனுக்கு ஒருபுறம் குமட்டல்; மறுபுறம் ஆசை, ஆவல். திரவத்தை எடுத்துக் குடிக்க கிளாசை வலது கையால் எடுக்க முயன் றான். கை உதறிற்று. இரண்டு கைகளாலும் எடுத்தான். கிளாசை உயர்த்தியபோது, இரண்டு கைகளும் உதற ஆரம்பித்தன. நடுங்கும் கிளாசிலிருந்து திரவம் தளும்பிக் கொட்டிவிடுமோ என்ற பயம் வேறு. அதை ஒரு நிலையில் நிறுத்தி, தன் தலையைக் குனிந்து, கிளா சின் விளிம்பை வாயின் இரு ஓரங்களிலும் வைத்தழுத்தி, ஒரு வெறியோடு ஒரே மடக்காகத் திரவத்தைக் காலி செய்தான். திரவத்தை விழுங்கியதும், அவன் வாயிலிருந்தும் வயிற்றிலிருந்தும் ஒரு ஏப்பம் வெடித்தது. வாயை இறுக மூடி, வாயிலிருந்த உமிழ்நீரைக் கூட்டி விழுங்கிக்கொண்டான்.

தொடர்ந்து இரண்டு சிகரெட்டுகள் புகைத்து முடித்தான் கந்தன். வேலாயி வீட்டுக் குழந்தை அழ ஆரம்பித்தது.

“அக்கா, குழந்தை என்ன அழுகுது, வயித்து வலியா என்ன ?” என்று உரக்கக் கூவினான்.

“வயித்து வலி ஒண்ணுமில்லே, எல்லாம் வாய் வலிதான்” என்றாள் அடுத்த குடிசை வேலாயி.

“மச்சான் வேலைக்குப் போயிரிச்சா ?”

“இல்லே, சங்கத்துக்குப் போயிருக்காரு.”

“ஆமா அக்கா, முன்னெல்லாம் ராமு மச்சான் சங்கத்துக்குப் போனா சண்டை போடுவீங்களே, இப்பல்லாம் சண்டை போடற தில்லையா ?”

அடுத்த குடிசையிலிருந்து பதில் இல்லை.

“என்ன அக்கா, பதில் பேச மாட்டேங்கறீங்க ? சங்கம் கிங்கம் இருந்தாத்தான் சரீனு படுது.”

அடுத்த குடிசையிலிருந்து மீண்டும் பதில் இல்லை. வேலாயி வீட்டு வேலையில் மும்முரமாக இருந்ததாகப் பட்டது கந்தனுக்கு. எழுந்து நின்று, கைகளை முறித்துவிட்டு இன்னும் இரண்டு அவுன்சு வேண் டும் என்று நினைத்துக்கொண்டான்.

கொஞ்சம் தயக்கத்தோடே, “வேலாயி அக்கா” என்று கூவினான்.

“என்ன தம்பீ” என்று பதில் வந்தது.

“ஜீவாவை இங்கே கொஞ்சம் அனுப்பி வைங்க.”

“இந்தா சீவா, சீவா எழுந்திரு. அடுத்த வீட்டுக் கந்தன் கூப்பிடுது. என்னன்னு கேட்டுட்டு வா.”

சிறிது நேரத்தில் அரைகுறைத் தூக்கத்தோடு, பாவாடையும் சட்டையும் அணிந்த பத்து வயதுச் சிறுமி ஒருத்தி கந்தன் முன் வந்து நின்றாள்.

“இட்லிக்காரப் பேச்சி வீட்டு வாசல்லே மீனா அக்கா இருக்கும். நான் சொன்னேன்னுட்டுக் கூட்டியா” என்றான் கந்தன். ஜீவா இலேசாகச் சிரித்துக்கொண்டே, ராக்காயி தரையில் வைத்துவிட்டுச் சென்றிருந்த பதினைந்து காசுச் சில்லரையைப் பார்த்துக்கொண்டு நின்றது. கந்தன் ஒரு ஐந்து காசை எடுத்து அவள் கையில் திணித்தான். ஒன்றும் சொல்லாது காசை வாங்கிக்கொண்டு அசமந்தமாகக் குடிசையை விட்டகன்றது குழந்தை.

ஜீவாவுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்து ஏற்பட்டது. தெருவிலே விறகுக் கடை அருகே ஒரு லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்தாள். லாரி இலேசாகப் பின்னே நகர்ந்து அவளை இடித்துத் தள்ளியது. ஜீவாவுக்கு வெளியே ஒரு காயமும் ஏற்பட வில்லை. ஆனால் மயக்கமுற்றுக் கிடந்தாள். வீட்டுக்குத் தூக்கி வந்தார்கள். ஹோமியோபதி சர்ட்டிபிகேட்டோடு அலோபதி வைத்தி யம் செய்யும் டாக்டர் வந்து ஊசி போட்டார். அரைமணி நேரம் வாயை இலேசாகப் பிளந்து பெருமூச்சு விட்டவாறே அசைவற்றுக் கிடந்தாள். பிறகு அசைய ஆரம்பித்தாள். கண்களைத் திறப்பதற்கு முன்னால், உதடுகளை வேகமாகத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள். அவள் ஏதோ பேசுவது போல் சிறிது நேரத்தில் ஒலியும் கேட்டது. என்ன சொல்லுகிறாள் என்று எல்லோரும் உற்றுக் கேட்டனர். அவள் வாயிலிருந்து உருப்படியான வார்த்தைகள் எதுவும் வரவில்லை. மாறாக, ‘கபே, கபே’ என்ற ஒலிகள் மட்டும் மாறிமாறி வந்துகொண்டி ருந்தன. வேலாயியும் ராமுவும் அவளை உலுப்பினர். அவள் கண் களைத் திறந்தாள். ஆனாலும் தொடர்ந்து ‘கபே, கபே’ என்று உளறிக்கொண்டிருந்தாள். அவளை எழுப்பி உட்கார வைத்தனர். அவளைச் சுற்றியிருந்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘கபே, கபே’ என்று சொல்லிக்கொண்டே, கைகளை அசைத்து அவர்களிடம் பேசுவதாகப் பாவனை செய்தாள். ஒவ்வொருவரிடத்தும் இவ்வளவு நேரம்தான் பேசவேண்டும் என்ற நியதிக்குக் கட்டுப்பட்டவள்போல் சுற்றியிருந்த ஒவ்வொருவருக்கும் ‘கபே, கபே’யை அளந்து கொட்டி னாள். இடையிடையே சிரித்துக்கொண்டாள்.

“அடி மாரியாத்தா” என்று கத்திவிட்டு, தலையில் அடித்துக் கொண்டு வேலாயி அழுதாள். ராமு மகளை மடியில் வைத்துக் கொண்டு வலது கையால் அவளது வாயை மூடப்பார்த்தான். ‘கபே, கபே’ தொடர்ந்தது. ராமு சற்று பலத்தோடு அவளது வாயை மூட முயலவும், மூச்சு முட்டித் திணறுவதுபோல், தன் கையால் அவன் கையை வெறியோடு பிடுங்கி எறிந்துவிட்டு, அவனைத் திட்டுவது போல் கோபத்தோடு அவனிடத்தும் ‘கபே, கபே’யை அவள் உமிழ்ந் தாள். வேலாயி, ராமு இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு எல்லாம் சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர். சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாதவர்கள், ‘முட்டிக் கொண்டு வரும்போது’ ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஓடுவதுபோல், பல்லைக் கடித்துக்கொண்டோ, கையால் வாயை மூடிக்கொண்டோ, குடிசையை விட்டுப் பாய்ந்து வெளியே ஓடினர்.

ஜீவாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இருக்கிறதா என்று பார்த்தார்கள். இருந்தது. எழுத்திருக்கச் சொன்னால் எழுந்திருந்தாள். ஒரு இடத் துக்குப் போகச் சொன்னால் போனாள். ஆனால் ‘கபே, கபே’ மட்டும் நிற்கவில்லை. எழுந்தாலும் நடந்தாலும் ஓடினாலும் குனிந்தா லும் நிமிர்ந்தாலும் ‘கபே, கபே’ தொடர்ந்தது. யாரைப் பார்த்தாலும் அவர் முன்பு நின்று ‘கபே, கபே’ கச்சேரியை நடத்தினாள். சமயத்தில் அவள் மிக வேகமாக ஏதோ பேசிக்கொண்டிருப்பது மாதிரிதான் தெரியும்; உற்றுக் கவனித்தால் தான் உளறுவது விளங்கும். குடிசையில் தனியாக அவளை அடைத்துப் போட்டுப் பார்த்தார்கள். சுவரின் முன்னால், ஜன்னலின் முன்னால், சட்டி பானைகள் முன்னால் எல்லாம் நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ ‘கபே, கபே’ என்ற அவளது மந்திரத்தை ஓதினாள். அவள் சாப்பிடுவதைப் பார்ப்பதே வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு பிடிச் சோற்றையும், ஒன்று அல்லது இரண்டு ‘கபே, கபே’ சொல்லாது வாய்க்குள் அனுப்பி விட மாட்டாள். சோறு தொண்டைக்குள் இறங்கும் ஒரு கணப் போதில் மட்டும்தான் ‘கபே, கபே’ கேட்காது. ஏதாவது குடிக்கும் போதும் அப்படித்தான். இரவில் படுக்கையில் படுத்தாலும் ‘கபே, கபே’ தொடர்ந்து ஒலித்தது. தூக்கம் வர வர, ஒலி குறைந்துகொண்டே சென்று, நன்றாகத் தூக்கம் வந்த பிறகு மட்டும் ஒலி நின்றுவிடும். ஆனால் உறக்கத்திலும் அவளது உதடுகள் அசைந்துகொண்டே இருந்தன. அவளைப் பார்த்தால், லட்சியவெறி பிடித்த ஒரு அரசியல் வாதி, வாழ்நாள் குறைவு என்பதை உணர்ந்து, விழித்திருக்கும் நேரமெல்லாம் மக்களிடத்துத் தனது லட்சியத்தைப் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும் என்று தூண்டப் பட்டு, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பது போல் இருந்தது.

கந்தன்தான் ஜீவாவைத் தனது வாடிக்கைக்காரர்களில் ஒருவரான ஒரு கிழட்டு டாக்டரிடம் கூட்டிச் சென்றான். டாக்டர் குழந்தையைப் பார்த்துவிட்டு, அவளது வியாதியை மூளை ஆபரேஷன் மூலம்தான் குணப்படுத்த முடியும் என்றார். சென்னையில் அவருக்குத் தெரிந்த ஒரு பெரிய டாக்டருக்கு அறிமுகக் கடிதமும் கொடுத்தார். கடிதத் தோடு ராமு, வேலாயி, ஜீவா மூவரும் சென்னைக்குச் சென்றனர். ஆபரேஷன் முடிந்து பனிரெண்டு நாட்களில் வீடு திரும்பினர். இப்போதெல்லாம் ஜீவா, ‘கபே, கபே’ என்று உளறுவதில்லை. அது மட்டுமல்ல, நம்மைப் போலவோ, நமது வானொலிப் பெட்டி களைப் போலவோ எதையுமே உளறுவதில்லை.

*****

நாளை மற்றுமொரு நாளே . . . ஆசிரியர் : ஜி. நாகராஜன்

வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்,669 கே.பி.சாலை,நாகர்கோவில் 629 001, மின்னஞ்சல் : kalachuvadu@vsnl.com

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்