May 15, 2010

கல் எறிதல்-தேவதச்சன்


வானவில்கள்

அது
நிறங்கள் அடர்த்தியாகிக்
கொண்டுவரும் வானவில். என்
வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத் devathachan
தொடங்கியது
“எவ்வளவு பெரிய வில். உள்ளே
வந்தால் வீடு 
உடந்துவிடும்தானே” என்கிறார்கள்
உறவினர்கள்
“வில்லும் உடைந்துதானே
போகும்” என்கிறார்கள்
நண்பர்கள்
கண்ணில் வழிந்தோடு
குமிழிகளில்
தானே வளர்கிறது
சப்தத்தைக் கடந்த அன்பில் வில்
தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக
வளைந்திருக்கும்
வானவில்லுக்குள்ளே
இருக்கிறது என் ஊர்.
ஊருக்குள்ளே இருக்கிறது
என் வீடு,
எப்போதும்
கதவுகள் மூடியிருக்கும்
என் சின்னஞ்சிறிய வீடு

கல் எறிதல்
ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்

உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்

உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது

வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.

காத்திருத்தல்

நிறையப் பேர் உறங்கியபடி காத்திருக்கிறார்கள்
உறவுப்பெண்கள் தேநீர் குடித்தபடி
சித்ரகுப்த நயினார் கதையைப் பாடியபடி
நடுவீட்டில், முதுமகள், இறந்தபடி காத்திருக்கிறாள்
நடுச்சாமம் நகர்வதற்கு
பொழுது புலர்வதற்கு
ரத்த உறவுகள் காலையில்
கதறியபடி வருவதற்கு
சாவின் கண்ணாடி காத்திருக்கிறது.
பக்கத்து வீட்டு ஜன்னலை மூடி
தன் பருத்த காம்புகளை
கணவனுக்கு ஈந்து
இறுகப் புணரும் இளமகளின் நாசியில்
வந்துவந்து போகிறது பத்திவாசனை.
தெருவில்
கலைந்து கிடக்கும்
இரும்புச் சேர்களில்
காத்திருக்கிறது
நிலவொளி.

*****

துணி துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

******

தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை

****

ஆற்றைக் கடந்து செல்லும் காகம்
களைத்திருப்பது போல் தெரிகிறது
ஞாபகத்தின் அமிர்தத்தை
தட்டிவிட்ட
சப்தத்தில்
உடல் முழுக்க வெளிறியிருக்கிறது

ஓவியத்துக்கும் தாளுக்கும்
நடுவே உள்ள
இடைவெளியில்
அசைந்தபடி செல்கின்றன
சோர்வுற்ற அதன் இறக்கைகள்

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

prof.donstony@blogspot.com on December 21, 2011 at 5:28 PM said...

அய்யா சிறப்பாக எழுதுகிறீர்கள்...சுஜாதா..எஸ்.ராமகிருஸ்ணன். . ச.தமிழ்ச்செல்வன் எல்லாம் எந்தக்கட்டுரையை எழுதினாலும் தேவதச்சன்“ என்பார்கள்.
நான் ஏதோ என்று பார்த்தால் ...மிகவும் அற்புதம். தொடரட்டும் உம் இலக்கியப்பணி. வாழ்த்துகள்.
அன்பன்.
பேரா.டான்ஸ்டோனி

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்