May 22, 2010

கூறாமல்-நீல. பத்மநாபன்

 

இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளில் உறைந்த சங்கதிதான். இருந்தும், தவிர்த்து தவிர்த்து, உள்ளத்தையும் ஐம்புலன்களையும் சிறுகச் சிறுக பக்குவப்படுத்திக் கொண்டிருந்ததெல்லாம் இனி முழு மூச்சாய் செயலுக்குக் கொண்டு வந்து விடவேண்டியதுதான்.

neela சோவென்று தகர்த்துப் பெய்யும் அடைமழை... இந்த மத்தியானப் பொழுதை மூவந்திக் கருக்கலாய்க் காட்டும் மழை மேகங்கள்.

மாடியில் இங்கே தன்னுடைய இந்த சின்னஞ்சிறிய தனி அறையில் உட்கார்ந்து கொண்டு பார்க்கையில், இக்கணமே இங்கே தன் வீட்டின் மீது வேரற்றுச் சாய்ந்து விடப்போவதாய் பயங்காட்டி பேயாட்டம் போடும் பக்கத்துத் தோப்பு வானளாவிய தென்னைகள்...

தென்னந்தோப்பை மீறிய பாதையில் செந்நீரின் சிற்றோடைகளாய்ப் பாயும் சேற்றில் நனையாதிருக்க சாரியை சற்று கையால் உயர்த்தியவாறு, குடையும் கையுமாய் காலூன்றி, சற்று முன் நடந்து சென்ற தன் இல்லாள்.

குத்துக்கல் போல் மேலே மாடியில் இப்படியொருவன் இருக்கிறானே என்ற உணர்வு பாவி மகளுக்கு இருக்கவேணுமே ?

உம் ஹ்உம்... பேசப்படாது.. பெண்விமோசனப் போராளிகள் யார் காதிலாவது விழுந்துவிடப் போகுது. அவர் சட்டென்று தன் அகக் குரலைக்கூட குரல்வளையைப் பிடித்து அமுக்கி அடக்கிக் கொண்டார்...

பிள்ளைகள்...

சின்னக் குழந்தைகளாய் இருந்தபொழுது அப்பா டாட்டா என்று சொல்லி விடைபெற்றதெல்லாம் இன்று பழங்கனவாகி விட்டன...

இப்போது சிறகுகள் முளைத்து விட்டன.

மேலும் அத்தகைய விடை வாங்கல்கள் எல்லாம் கூட இன்று பத்தாம்பசலித்தனமல்லவா ?

அப்படியென்றால் ?

என்ன, சாப்பிட நேரமாகலியா ?மணி ரெண்டாச்சு.

ஓ. வெளியில போனவள் அதுக்குள் வந்துட்டாளா ? தாறுமாறான நினைவுகளில் ஆட்பட்டிருந்தால்தானா, நடந்து சென்ற சேற்றுப்பாதை வழியாகவே திரும்பி நடந்து வந்திருக்கும் இவள், அந்த பாதையிலேயே கண் நட்டிருக்கும் தன் கண்ணில் விழவே இல்லையா ?

மழையில் நனைந்துபோன ஊதாநிறப் புடவைக்குப் பதில் வீட்டு வேலையில் ஈடுபட்டிருக்கையில் சாதாரணமாய் கட்டும் கசங்கிய நூல் புடவை.

இதென்ன சத்திரமா சாவடியா ? இங்கே ஒருத்தன் இருக்கான், சொல்லிட்டுப் போகணுமேண்ணு இல்லாமல் ஒன்பாட்டுக்கு இறங்கிப் போற, வாறே '

தன் உடம்பின் கிடுகிடுவென்ற இந்த நடுக்கமும், சொற்களின் தந்தியடிப்பும் மழையின் குளிரினாலா, இல்லை நரம்புகளில் கொதித்து சிரசுக்கு ஓடும் ரத்தத்தினாலா ?

இன்னிக்குக் காலம்பரேயே உங்ககிட்டெ சொன்னேனே டாக்டர்கிட்டே போகணுமுண்ணு ' உங்களுக்கு எப்பவும் ஏதாவது குத்தம் கண்டுபிடிச்சுகிட்டு இருக்கணும். சரி...சரி. சாப்பிடணுமுண்ணா இறங்கி வாங்க.

நீ இப்ப பரிமாறித்தான் நான் சாப்பிடணுமுண்ணு கட்டாயமா ? நா வந்து எடுத்துப் போட்டுக் கொட்டிக்கிறேன் என் வாய்க்கரிசியை '

இவர் கத்தலுக்குப் பதிலாய் சூடாய் என்னவோ கத்தியவாறு - காதில விழவில்லை - அவள் கீழிறங்கிச் சென்று, இப்போது ஒரு மணி நேரம் இருக்காதா ?

பசிக் கொடுமையா ? இல்லை, இந்த ஐம்பத்தைந்தான பிராயத்தில் எதிர்கொள்ளமுடியாத அவமதிப்பின் உபாதையா ?

மழை லேசாய்விட்டது போலிருக்கிறது.

எதற்கும் இன்று இந்த வீட்டுச் சோறு தொண்டையை விட்டு இறங்குமென்று தோன்றவில்லை. சட்டையை மாட்டிக்கொண்டு, குடைகூட எடுக்காது வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தெருவில் இறங்கி விடுவிடுவென்று நடந்தார்.

சூடாகியிருந்த தலையில் பன்னீராய் விழும் தூறல். வெறிச்சோடிப் போய்க்கிடந்த தெருவைத் தாண்டிச் சற்று நடந்திருக்க மாட்டார், மீண்டும் துளிக்கொரு குடமாய் வலுத்துவிட்ட பெருமழை.

ரோட்டோர சொளைமாடன் கோயில் நடையில் ஏறி நின்றார். மாடன் நனையாதிருக்க மேலே வேய்ந்திருந்த ஓலைக்கீற்றுக் கூரையைப் பங்கிட தன்னைத்தவிர இன்னொரு ஜீவன் '

கீழே குந்தி முடங்கியிருக்கும் கந்தலாகிப் போன காவியுடை கிழப்பண்டாரம்.

யாரும் யார்கிட்டையும் சொல்லிகிட்டு வரலை, சொல்லிகிட்டுப் போகமாட்டோம்.

இவர் திடுக்கிட்டார்...

பண்டாரம் தன்னைப் பார்த்துச் சொல்லவில்லை, தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் இந்த வார்த்தைகள்.

புதியவை அல்ல.

பழகித் தோய்ந்த சொற்கள்தான்.

இருந்தும் இப்பக் கேட்கையில்....

இந்தப் பண்டாரமும் கூறாமல் இக்கோலம் பூண்டவரோ..

மேலே அவர் ஒன்றும் யோசிக்கவில்லை, ரோட்டில் இறங்கி விறுவிறுவென்று நடந்தார்.

சோவென்று மேலே பெய்யும் அடைமழையும் முழங்கால்வரை கீழே புதையும் சேறும் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை அவருக்கு.

********

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்