May 28, 2010

தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலிங்கம்

 

தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்

நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் niram azintha
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால்நீட்டி தலைசாய்க்க
தார்விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.

*

சரிசெய்

நீ கவனிக்கறதே இல்லை
உன்னுடைய சாட்டையில்
வார் இல்லை
முள் இல்லை
சரி செய் பிரயோகம் பண்ணு
அப்போது தான்
வசத்துக்கு வரும்
அதுகள்
உன் வசத்துக்கு வரும்.

சுய வேலைவாய்ப்பு

காலையில் எழும்ப வேண்டியது suyambu
ஒரு கோணியோடு
ஒரு தெருவு நடந்தால் போதும்
கோணி நிறைந்து விடும்
காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன
தலை நிமிர்ந்து வாழலாம்.

பஞ்சனை

எதுக்கு
நாக்கத் துருத்திக்கிட்டு வாரிய.......
அடிக்கிற சோலியெல்லாம
வச்சிக்கிடாதிங்க......... 
ஏங்கிட்ட
என்ன குத்தம் கண்டுட்டிய.......
ஒங்களுக்கு
நான் என்ன பணிவிட செய்யல
சொல்லுங்க.........
நீங்க தேடுன சம்பாத்யத்த
தின்னு அழிச்சிட்டனா..........
ஒங்களுக்கு தெரியாம்
எவனையும் கூட்டி வச்சிக்கிட்டு
வீட்டுக்குள்ள ஒறங்குதனா.........
ஒங்களுக்கு வாக்கப்பட்டு
ரொம்பத்தான்
நான் சொகத்த கண்டுட்டேன்...........
பஞ்சனைல
உக்கார வெச்சித்தான
எனக்கு நீங்க
சோறு போடுதிய.........
எஞ்சதுரத்த
சாறாப் பிழிஞ்சிதான
ஒரு வா தண்ணி குடிக்கறேன்...........
ஒங்க மருவாதிய
நீங்களாக் கெடுத்துக்கிடாதீக..........
எடுங்க கைய
மயித்த விடுதியளா என்ன......
அவள் வார்த்தைகளில்
ஆவேசம் பொங்கி
கரை புரண்டு வந்தது
அவள் வார்த்தைகளில்
நேர்மையும் சத்தியமும் இருந்தது
அவன் பிடி தளர்ந்தது
திருணைல கெடக்கான் அவன்
குடிச்சது
தின்னது
எல்லாத்தையும் கக்கிக்கிடடுக் கெடக்கான்
அவா
புருசனக் கழுவி
வீட்டக் கழுவி
எல்லாத்தையும்
சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்

முந்தித்தவம்

நீ ஒரு ஆம்பள
உனக்கு ஒரு பொண்டாட்டி......
புள்ளைகளுக்கு
கலைக்டர் வேல வேண்டாம்.......
ஒரு எடுபிடி வேல
வாங்கிக் கொடுக்க முடியாது
உன்னால.......
வீடு வித்து
வாயில போட்டாச்சி.......
தாலிநூல் வித்துத் தின்னாச்சி......
கம்மல் இருக்கா.....
மூக்குத்தி இருக்கா.....
வீட்டு வாடகைக்கு
பொம்பள ஜவாப் சொல்லணும்
விடிஞ்சாப் போற
அடஞ்சா வாற
மண்ணெண்ண அடுப்பில் சமச்சி
வீடு பூராவும் கரி
ஒரு பாவாடைக்கு
மாத்துப் பாவாட கெடையாது
முகத்துக்குப் பூச
செத்தியங்காணு
மஞ்சத்துண்டு இல்ல
நல்லாப் பொழைக்கறவா
சிரிக்கறா
ஒனக்கு
ஆக்கி அவிச்சி
ருசியா கொட்டணும்
கால் பெருவிரலை நீட்டி
ஒத்தச் செருப்பை
மெள்ள இழுத்தேன்
பாழாய்ப் போன ரப்பர்
வார் அறுந்திருக்கிறது
அவள் பின்கழுத்தில்
என் கண்கள்
செல்லமாய் விழுந்தன
அந்த மஞ்சக்கயிற்றில்
ஒரு ஊக்கு இருக்கு
கேக்கலாம்
கேளாமலேகூட
தென்னி எடுக்கலாம்
அவள் அழுவதைப் பார்க்க
இஷ்டம் இல்லை
செருப்பை விட்டுவிட்டு
நடக்கிறேன்.

தளபதி

என் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா
எங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி

மக்கள் கடல்

தூண்டில் போட்டும் கொல்கிறார்கள்
வலை போட்டும் பிடிக்கிறார்கள்


நன்றி : உயிர்மை (”நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்” தொகுப்பிலிருந்து}

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்