Jun 28, 2010

நிழல் குதிரை-எஸ்.ராமகிருஷ்ணன்

சா.கந்தசாமி

நமண சமுத்திரம். புதுக்கோட்டை அருகில் உள்ள சிற்றூர்.இங்கே நடைபெறும் குதிரை எடுப்புத் திருவிழாவைக் காண்பதற்காகச் சென்றிருந் தேன். அய்யனார் கோயிலுக்கு நேர்சை செய்து, காணிக்கையாக மண் குதிரைகள் செய்து வந்து செலுத்துவது பிரார்த்தனை!

saa.ka மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவில் நூற்றுக்கணக்கில் மண் குதிரைகள் நிற்பதைக் காணும்போது, போர்க்களக் காட்சி போலத் தோணும். குதிரைகளின் கம்பீரமும், அவை கால் தூக்கி நிற்கும் அழகும் வியப்பளிக்கும். குறிப்பாக, குதிரையின் மிரட்டும் கண்கள், அதன் வேகம் சொல்லும். மண் குதிரைகள் என்று நம்புவதற்கு இயலாதபடி அதன் வார்ப்பு, காலம் கடந்தும் அங்கே புத்துரு கலையாமல் இருக்கின்றன.

அந்தக் கூட்டத்தில் ஒரு பெரியவரைக் கண்டேன். அறுபதைக் கடந்திருக்கும். செம்புழுதியேறிய வேஷ்டி. தலை, எண்ணெய் காணாமல் சிக்குப்படிந்திருந்தது. பீடிக் கம்பெனியின் விளம்பர பனியனை அணிந்திருந்தார். கோயிலின் இருபுறமும் அடுக்கிவைக்கப்பட்டு, மழையாலும் காற்றாலும், தலையும் கால்களும் வீசி எறியப்பட்ட குதிரைகளின் முன் நின்றபடி, தானாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.

சாமிக்குச் செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டு வெளிர் மஞ்சளும் நீலமும் பூசப்பட்ட புதுக் குதிரைகள் ஓரிடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. வயசாளி மெதுவாக நடந்து, அந்தக் குதிரைகளை தன் விரலால் சுண்டிப் பார்த்தார். முகத்துக்கு நேராகத் தன் கைகளை நீட்டிப் பார்த்தார். பிறகு எரிச்சல் அடைந்தவரைப் போல, ‘‘குதிரையா இது..? கோவேறுக் கழுதை மாதிரியில்ல இருக்கு’’ என்று திட்டினார். அவரை யாரும் சட்டைசெய்யவேயில்லை.

பகல் முழுவதும் அவரைக் கவனித்தபடியே இருந்தேன். அவருக்கு அந்தத் திருவிழாவோ, அதன் மேளதாளங்களோ, சந்தோஷமோ, எதுவுமே பிடிக்கவில்லை. மேளம் அடிப்பவர் முன் போய் நின்றபடி, ‘‘என்னய்யா சாணி மிதிக்கிற மாதிரி அடிக்கிறீங்க..?’’ என்று சத்தம் போட்டார். சாமி கும்பிட வந்த பெண்களைப் பார்த்து, ‘‘சாமி கும்புட வந்தவுளுக மாதிரி தெரியலை… சர்க்கஸ்காரிக மாதிரி மினுக்குறாளுக…’’ என்று ஏசினார்.

திருவிழாவின் சந்தோஷம் அவரைத் தீண்டவே இல்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு, அவராக நடந்து போய், வெளிறியிருந்த ஒரு மண் குதிரையின் முன் உட்கார்ந்து, அதை ஆசையாகத் தடவி விட்டபடி இருந்தார். அவர் அருகில் போய் அமர்ந்தேன். என் காதுபடச் சொன்னார்… ‘‘மண் குதிரைதானேன்னு நினைச்சுக்கிட்டாங்க. இதுக்கும் உசிரு இருக்குய்யா! கையை நீட்டிப் பாரு… அது மூச்சு விடுறது உன் புறங்கையில தெரியும். இங்கே நிக்கிற குதிரைங்க எல்லாம் ராத்திரி எல்லோரும் போன பிறகு ஒண்ணுக் கொண்ணு பேசிக்கிட்டு இருக்கும் தெரியுமா… இப்போ செலுத்துற குதிரைங்க எல்லாமே ஊமைக் குதிரைங்க!’’.

நான் ஆமோதித்துத் தலையசைத் தேன். அவர் தொலைவில் உள்ள ஒரு குதிரையைக் காட்டி, ‘‘அது காது அழகைப் பாரேன், செஞ்சுவெச்சு அம்பது வருசமாச்சு… புதுப் பெண்டாட்டி மாதிரி எம்புட்டு அழகா இருக்குது!’’

அவர் காட்டிய திசையில் இருந்த குதிரையைத் திரும்பிப் பார்த்தபோது, அவர் சொன்னது உண்மையாகவே இருந்தது. ‘‘கண்ணுட்டுப் பார்த்தா போதாது… கையால தொட்டுப் பார்த்துட்டு வா!’’

எழுந்து அந்தக் குதிரையைத் தொட் டுப் பார்த்தேன். என்ன அருமையான வார்ப்பு! ‘‘எப்படி இருக்கு?’’ என்று கேட்டார் பெரியவர். நன்றாயிருப் பதாகச் சொன்னேன்.

‘‘மண் குதிரையைத் தொடுறப்போ அதைச் செஞ்சவன் கையைத் தொடுற மாதிரி உணர்ச்சி வரணும். அதெல்லாம் யாருக்கு இருக்கு? பானை, சட்டி, பொம்மைன்னு மண்ல எத்தனையோ செய்றாங்க. அதுல சோறாக்குறோம், கொழம்பு வெக்கிறோம், ஆனா, அதைச் செஞ்சவன் விரல் ரேகையும் அதில் படிஞ்சிருக்குன்னு நாம பாக்குறதே இல்லை!’’ | பெருமூச்சிட்டபடி அவரிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டதும், யாரோ என் முகத்தில் அறைந்தது போல இருந்தது.

நான் அவரின் கைகளை அப்போதுதான் பார்த்தேன். அகலமான கைகள். ‘‘நீங்கள் குயவரா?’’ என்று கேட்டேன். அவர் வேண்டாவெறுப்பாக, ‘‘இங்க இருக்க பாதிக் குதிரைக நான் செஞ்சதுதான்!’’ என்றார். கோபத்துக்கும் எரிச்சலுக்குமான காரணம் அப்போது தான் புரிந்தது.

இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந் தோம். அவர் கையைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஒரு சிறுவனைப் போல ஆசையை அடக்க முடியாமல் கேட்டேன்… ‘‘உங்க கையைத் தொட்டுப் பார்க்கலாமா..?’’

அவர் லேசாகச் சிரித்தபடி, ‘‘கையில் என்னய்யா இருக்கு? மனசுல இருக்கு… அதுதான் மண்ணை வனையுது. மண் லேசுப்பட்டது இல்ல. அதுக்கும் குணம் இருக்கு, வாசம் இருக்கு. கட்டுன பெண்டாட்டியாவது நம்ம சொல் பேச்சுக் கேட்பா… மண்ணு லேசில் படியாது!’’ என்றார்.

அன்று முழுவதும் அவரோடு இருந்தேன். சிதிலமடைந்துபோன குதிரைகளின் தலைகளை, கால்களை அவர் ஓரமாக அடுக்கிவைத்தபடி இருந்தார். திருவிழாவில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் குதிரைகளின் கண்கள் கூச்சம்கொண்டு அசைவது போலவே தெரிந்தன.

நீண்ட உரையாடலுக்குப் பின்பு அவரிடம், ‘‘எதற்காக உங்களுக்கு எதையுமே பிடிக்கவில்லை?’’ என்று கேட்டேன். அவர் ஆத்திரமடைந்தவர் போல, ‘‘நமக்கு என்ன மதிப்பிருக்கு சொல்லுங்க? எல்லாப் பயலுகளும் குடிக்கிறதுக்கும், ஆடுறதுக்கும்தான் வர்றாங்க. மூளி மூளியா மண்ல செஞ்சு கொண்டு வந்து வெச்சா, சாமி எப்படி தரிசனம் கொடுக்கும்? எல்லாம் ஏமாத்தாப் போச்சு! மண்ணோட உள்ள உறவு தாய்ப்பால் மாதிரி. நாம தான் சப்பிச் சப்பிக் குடிக்கத் தெரிஞ்சுக்கணும். அது வத்தாம பாலைக் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கும்ÕÕ என்றார்.

தனது கலை அழிந்து வருகிறது என்ற கோபத்தின் கீழே வேறு ஏதோ காரணம் இருப்பது போலத் தெரிந்தது. இருட்டில் இருந்து நடந்து சாலையின் விளிம்புக்கு வந்தபோது கேட்டேன், ‘‘உங்ககூட யாரு வந்திருக்கா..?’’

அவர் உடைந்து போன குரலில் சொன்னார், ‘‘இந்த மண் குதிரைகளைத் தவிர, எனக்கு வேற யாருமே இல்லைய்யா! பெத்த பிள்ளைக எல்லாம் பிழைப்பு தேடி மெட்ராசு, பாம்பேனு போயிட்டானுக. ஒருத் தனுக்கும் இந்தத் தொழில் பிடிக்கலை. எனக்கு இதைவிட்டா வேறு தொழில் தெரியாதுய்யா! பரம்பரையா குசவங்க நாங்க. இன்னிக்கு இருக்கனா, செத்தனான்னு பார்க்கக்கூட எனக்கு யாரும் இல்லை. பெரியவங்களை விடுங்க… ஆறு பேரப் பிள்ளைக இருக்குதுங்க. ஒருத்தருக்கும் என்னை வந்து பார்க்கத் தோணலை. என்கிட்ட என்ன இருக்கு? என்னால முடிஞ்சது மண்ணுல ரெண்டு பொம்மை செஞ்சு தருவேன். பேரன், பேத்தி எல்லாம் டவுன்ல இங்கிலீஷ் படிக்கிறவங்க. இதெல்லாம் பிடிக்குமா? ஏழையாப் போயிட்டா, சொந்தத் தாத்தானுகூட பார்க்காம உறவு அத்துப்போயிரும்னு ஆகிப் போச்சுய்யா. நானும் குதிரை செய்றதையெல்லாம் விட்டுட்டேன். மிச்சமிருக்கிறது தலை போன இந்தக் குதிரைகதான். அதுககூட பேசிக்கிட்டுக் கெடக்கிறேன்!’’

என்ன பேசுவது என்று தெரியாத அமைதி என்னைக் கவ்விக்கொண்டது. அங்கிருந்த மண் குதிரைகளைத் திரும்பிப் பார்க்க குற்ற உணர்வு ஏற்பட்டது. அவர் ஆத்திரம் அடங்கா தவர் போலச் சொன்னார்… ‘‘பத்து வருசத்துக்கும் மேலாச்சு… திருவிழாவுக்குக்கூட ஊருக்கு வர மாட்டாங்க. நானும் எந்தப் பிள்ளை வீட்டுக்கும் போறது இல்லை. எவன் கிட்டயும் கையேந்த மாட்டேன். இந்த மண்ணு இருக்கிற வரைக்கும் பொழச்சுக் கிடப்பேன். இல்லேன்னா மண்ணுக்குள்ளேயே அடங்கிருவேன். நானெல்லாம் மண்புழு மாதிரிதேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மண் ருசி மட்டும்தான்! என்ன… வயசு ஆக ஆக மனசு கேட்க மாட்டேங்குது. பேரன் பேத்திகளைத் தேடுது. வீட்ல நிறைய விளையாட்டுச் சாமான் செஞ்சு போட்டிருக்கேன். என்னிக்காவது என்னைத் தேடி வந்தா விளையாடட்டும். இல்லேன்னா நான் செத்ததும் குழியில அந்தப் பொம்மைகளையும் சேத்துப் பொதைச்சிர வேண்டியதுதான்!’’

பேச்சு அடங்கி நாவு ஒடுங்கிவிட்டது. அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். அது நடுங்கிக்கொண்டே இருந்தது. மண் குதிரைகளில் இவரும் ஒருவர் போலாகிவிட்ட நிலை புரிந்தது.

ரத்த உறவுகள் துண்டிக்கப்பட்டு, பேரன், பேத்தியைப் பார்க்கக்கூட முடியாத நிலை என்பது எத்தனை துக்ககரமானது. அப்படி வாழ்வது மண் குதிரைக்குச் சமமானதுதானோ?

திருவிழா முடிந்து அந்த மைதானமே காலியாகி இருந்த போதும், அதை விட்டு வெளியேறிப் போக மனதற்றுப் போய்விட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத வலி காற்றில் சுற்றிக்கொண்டு இருந்தது. திரும்பி வரும் வழியில் எனக்கு சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதை நினைவுக்கு வந்தது.

ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவைப் பற்றிய கதை. இருவரும் மீன் பிடிக்கப் போகிறார்கள். ஒரு மீன் அவர்களது தூண்டிலில் சிக்காமல் அலைக்கழிக்கிறது. அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தாத்தா முயற்சிக்கிறார். அவரால் முடியவில்லை. பேரன் அதை தான் பிடித்துவிடுவதாக சவால்விட்டு, தூண்டிலோடு போய் மீனைப் பிடித்துவிடுகிறான். பேரனின் வெற்றி தாத்தாவின் சுயபெருமையின் மீது விழுந்த அடிபோல் ஆகிவிடுகிறது. தன்னால் பிடிக்க முடியாத மீனை, பேரன் பிடித்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேரனைத் திட்டுகிறார். ஆனால், அன்றிரவு அவர் மனது பேரனின் சாகசத்தை நினைத்துப் பெருமைப்படுகிறது.

வெளிப்படாத அன்பு என்பது கல்லுக்குள் தேரை இருப்பது போல, தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமலே வாழ்வது போன்றது. தாத்தாவின் அன்பு யாரும் திறக்காத சிப்பிக்குள் உள்ள முத்தைப் போன்றது. அதைத் தீண்டுவதும் கைவசமாக்குவதும் என்றோ அபூர்வமாகவே நடந்தேறுகிறது.

எல்லா வீடுகளிலும் வெளிப் படுத்த முடியாத அன்போடு யாராவது ஒருவர் இருக்கிறார் கள். நம் நிழல் கூடவே வந்தாலும், அது எதையும் பேசுவது இல்லை. அதுபோல இவர்களின் அன்பும்!

அருவியாகச் சப்தமிடும் போதுதான் தண்ணீரை வியந்து பார்க்கிறோம். குளத்தில் அடங்கியுள்ள நீரின் மௌனம் ஒருபோதும் புரிந்துகொள்ளப்படுவதே இல்லைதானோ?

 

சாகித்திய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி, தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர். இவரது ‘சாயாவனம்’ நாவல் தமிழில் குறிப்பிடத்தக்கது. ஓவியம், நுண்கலைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட சா.கந்தசாமி, குறும்படம் மற்றும் ஆவணப் படங்களைத் தயாரித்து வருகிறார். சா.கந்தசாமி தொகுத்த ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள்’ தொகுப்பு, மிகக் கவனமாகவும் நுட்பமாகவும் தொகுக்கப்பட்டது. இவருடைய கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘சா.கந்தசாமி கதைகள்’ என்ற பெயரில் இவரது சிறுகதைகள் மொத்தமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

நன்றி: கதாவிலாசம் , ஆனந்தவிகடன் பிரசுரம்.

*********

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்