Jul 16, 2010

தொலைவு-பூமணி

பஸ் விரட்டலில் சிதறுண்ட புறாக்கூட்டம் பஸ்டாண்டைத் தாண்டி ஆற்றங்கரை மர வரிசைக்குள் மறைந்து போயிற்று.

'சேசுவே ஒம் கொழந்தைகளக் காப்பாத்தும். '

poomani2 ரோசம்மா நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டாள். அவள் காலடியில் மேரிக்குட்டி பஸ்டாண்டில் பார்வை விளையாட நின்றிருந்தாள்.

அந்தோணியும் வயலெட்டும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு குழந்தைகளும் இடையில் ஓடி தொந்தரவு செய்தன. ஆனாலும் சட்டை செய்யவில்லை. ஒரு தடவை அந்தோணி அரட்டினான்.

'ஏலே சும்மா இரியேம்லே கையக்கால வச்சிட்டு. '

ரோசம்மா முறுவலித்தாள்.

'என்னதான் பேசி முடிப்பாவளாம். '

கல்யாணம் முடிந்தது நேற்றுப் போலிருக்கிறது. அதற்குள் ரெண்டு பிள்ளைக்காரனாகி விட்டான். மூத்தவள் ஏழெட்டு வருசத்தில் உட்கார்ந்து விடுவாள். பெண்ணுஞ் சரி பீர்க்கங்கொடியுஞ்சரி. சின்னவனைப் பற்றிக் கவலையில்லை. என்றைக்கிருந்தாலும் சம்பாதிப்பவனாயிற்றே.

அந்தோணி திடப்பட்டு விட்டான். மீசை புருவமெல்லாம் அய்யாவைப் போல் திரட்சியாக. ஏன் கன்னங்கூட ஒட்டிப் போய் அதே அச்சுதான். இதெல்லாம் பார்க்க அவர் இருக்கணும் இன்னேரம். வயலெட் கெட்டிக்காரியாக்கும். புருசனை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். நல்ல சம்பந்தம். வசதிக்குக் குறைவில்லை. நிறைய நகை போட்டார்கள். ரொக்கம் வேறு கொடுத்தார்கள். இப்போதும் வருசத்துக்கு வேண்டிய எல்லாப் பண்டங்களையும் அவள் வீட்டிலிருந்து அனுப்பி விடுகிறார்கள். அவளது வீட்டிற்குப் போய் ரொம்ப நாளாயிற்று. கல்யாணத்திற்குப் பிந்தி ஒரு நாள் போனது. சம்பந்தகாரர்களும் வருவதில்லை. அந்தோணி வந்தால்கூட இவன்தான் அங்கு போகணும். அப்படியொரு வழக்கம் ஏற்பட்டுப் போனது.

என்னமோ பிள்ளை குட்டிகளுடன் அவன் நன்றாக இருந்தால் சரி. அவனைப் படிக்க வைக்க கொஞ்சச் செலவா ஆயிற்று. விவசாயத்தில் வந்த வரவையெல்லாம் அவனுக்குத்தான் போட்டது. அவன் அய்யாவுக்கென்றால் ஒரே கிறுக்கு. எப்படியும் படிக்கவைத்து விட வேண்டுமென்று. கடைசியில் அவன் வேலைக்குப் போவதைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. கமலைத் தனத்தில் மாட்டுக்குத் தும்பறுந்து நிறை கூனையுடன் மோக்கால் மோதியதென்று படுத்தார். மனுஷனை அப்படியே அமுக்கிவிட்டது.

கர்த்தருக்கு முன்னால் எல்லாரும் மண்டியிட்டு ஜபித்ததெல்லாம் பலனற்றுப் போனது.

அப்போது மேரிக்குட்டி கைக்குழந்தை. அய்யா முகம் அடையாளந்தெரியாது. ரெம்ப நாளாக அய்யா ஊருக்குப் போயிருப்பதாகச் சொல்லித் திரிந்தாள். இன்றைக்கு நாலாவது வாசிக்கிறாள். மரிய செல்வம் கெட்டிக்காரி. வீட்டு வேலைக்குக் கவலையில்லை. அது சமைந்து ரெண்டு வருசமாகிறது. ஒருத்தனுக்குக் கொடுக்கணும். அது வேறு செலவு.

மேரிக்குட்டியை மேற்கொண்டு படிக்க வைக்கணும். அதுக்கு வீட்டில் ஓட்டமில்லை. மாடு வண்டியெல்லாம் விற்று விவசாயம் கால் குறுக்கத்தில் வந்து நிற்கிறது. கீரையும் காய்கறியும் விற்று எந்த மூலைக்கு அடைபடும். என்னேரமும் கமலை இறவையாடிய கிணற்றில் இன்றைக்கு தெலா முனக்கம் கேட்கிறத். அதற்கும்கூட யாரையாவது பிடித்து வரவேண்டியிருக்கிறது.

எல்லாம் அவரோடு சரி. அவர் கண்ணுக்குப் பின்னால் முற்றந்தெளிக்க சாணிக்குக்கூட அடுத்த வீடு போக வேண்டிய நிலைமை. என்னமோ ஒரு வருசமாக மரிய செல்வம் காளங்கண்ணு வளர்க்கிறாள். அதை விற்றால் அவளுக்கொரு தங்கச் சாமானுக்காயிற்று.

போன பண்டிகைக்கு எல்லாருக்கும் துணிமணியெடுக்க அந்தோணி பணம் அனுப்பினான். மூணு மாசத்திற்கு முந்தியே கடிதம் எழுதித் தூண்டியது. கர்த்தர் கிருபையில் பண்டிகைக்குக் குறையெதுவுமில்லை. இந்தப் பண்டிகைக்குக் அவனை குடும்பத்துடன் வரச் சொல்லணும். நிறையச் செலவாகும். அந்தச் செலவுக்கு இங்கே பண்டிகை கொண்டாடிவிடலாம். முதலில் மருமகள் என்ன சொல்கிறாளோ.

இப்போது வேறு வந்து போகிறான். கொழுந்தியாளுக்குக் கல்யாணமாம். வரவில்லையென்றால் மாமனார் கோவிப்பார். மருமகளுக்குச் சொல்லி முடியாது.

ரோசம்மாவுக்கு பஸ்டாண்டு இரைச்சல் உறுத்தியது. மேரிக்குட்டியின் தலையை வருடினாள். அதற்குப் பதிலாக குட்டி அண்ணாந்து பார்த்தாள்.

'ஏட்டி குட்டி அண்ணனோட பட்ணம் போறயா படிக்க. '

குட்டி தலையை வெட்டினாள்.

'ம்க்கும் அம்மாவும் வரணும். '

எதுக்கெடுத்தாலும் இப்படித்தான். கூடவே அம்மா இருக்கணும். கோயிலுக்குள் மண்டியிடும் போதுகூட முந்தியைப் பிடித்துக் கொண்டு வாயலுங்கப் பேசமாட்டாள். சோறு போட்டுவைத்தால் அம்மா பக்கத்திலிருந்து பிசைந்து கொடுக்கணும். மறுசோறு வேண்டுமா என்று கேட்டால் அமைதியாகச் சொல்வாள்.

'அம்மாவுக்குப் பிரியம் எப்படியோ அப்படி. '

'மகளே நீ பள்ளிக்கூடம் போயி எப்படி இருக்கயோ. '

ரோசம்மா குட்டியை அணைத்துக் கொண்டாள். சிகரெட்டை ஊதியவாறு பெட்டி படுக்கைகளைச் சரி பார்த்த அந்தோணி கேட்டான்.

'குட்டி என்னம்மா சொல்லுது. '

'அண்ணனோட போறயான்னு கேக்கென். அம்மாவும் வரணுமாம். '

அந்தோணி வயலெட்டைப் பார்த்தான். குழந்தைகளைப் பிடித்து வசக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

'குட்டிக்கு அம்மா கூடவே இருக்கணும். அம்மா வந்தா அக்கா என்னடா செய்வா. '

குட்டி அம்மா மடிக்குள் முகத்தை ஒளித்துக் கொண்டாள்.

'அக்காவ கலியாணம் முடிச்சுக் குடுக்கணும். '

எல்லோரும் சிரித்தார்கள். அந்தோணி பிறகு மெளனப்பட்டுப் போனான்.

ரோசம்மா பந்துத் தலையைச் சொறிந்து கொண்டாள்.

'ஏம்ப்பா கார் வர நேரமாவுமா. '

'இண்ணைக்கென்னமோ லேட்டு. '

'இப்படி சீரெட் ஊதுறயே அதென்ன வாயி நெறையுமா வயிறு நெறையுமா. வீண் செலவு தானப்பா. '

வயலெட் திரும்பிப் பார்த்தாள்.

'நானுந்தான் சொல்றத்தே. அவிய கேட்டாத்தான. ஒடம்பு எதுக்காவும். அவியளுக்கு யாரு சொல்லுவா. '

'ஒடம்பு மட்டுமா. மாசம் செலவென்ன ஆவும். அந்தக் காச எனக்கனுப்பினாக் கூட புள்ளைகளுக்குப் போடுவென். இல்ல ஒம்புள்ளைகளுக்குப் போடு. ஒம் புருசனக் கண்டிசன் பண்ணி வையி. துட்டு கரியாப் போவுதே. '

'அதோ பஸ் வந்தாச்சே. '

அந்தோணி சிகரெட்டை எறிந்து நசுக்கினான். வயலெட் எழுந்து சேலையைத் துடைத்தாள்.

'உள்ள எறிக்கடா. புள்ளைகளக் கூப்பிடு. '

'நீங்க பெட்டியத் தூக்குங்க. நான் சூட்கேஸ எடுத்துக்கிறென். '

'எனக்கிட்ட ஒண்ணு குடும்மா. '

'வேணாம். நானே தூக்கிப் போயி டிக்குல போட்டுட்டு வாறென். '

மேரிக்குட்டியும் ஏறிக்கொண்டாள். முன்சீட்டில் குழந்தைகளுடன் வயலெட் உட்கார்ந்தாள். பின்னால் அந்தோணியின் பக்கத்தில் ரோசம்மா உட்கார்ந்து மேரிக்குட்டியை மடியில் வைத்திருந்தாள்.

'சாமானெல்லாம் பத்தரமா இருக்குமாப்பா. '

அந்தோணி தலையாட்டினான். பிறகு எழுந்து முன்சீட்டைப் பார்த்துவிட்டு உட்கார்ந்தான்.

'போற வழியில ஒறங்கக் கூடாதுப்பா. புள்ளைகளக் கூட்டிப் போறவன் கவனமாப் போவணும். '

அவன் ஜன்னல் வழியே டாக்கடையில் தொங்கிய புஸ்தகங்களைக் கவனித்திருந்தான்.

'அடிக்கடி காயிதம் போடணும். வீட்ட மறந்துறக்கூடாது. ரெண்டு வச்சுகிட்டு நான் கெடக்கேன் இல்ல. குட்டியப் படிக்க வைக்கணும். அவளுக்குக் காலாகாலத்துல ஒரு எடம் பார்க்கணும். பொறுப்பிலாம இருந்துறக்கூடாது. நம்ம ஒண்ணும் வசதியாப் பெழைக்கல. '

முன்சீட்டில் வயலெட் குழந்தைகளின் சேட்டைக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தாள். யாரோ ரோசம்மாவின் இடத்திற்காகக் காத்து நின்றார்கள். அந்தோணி சொன்னான்.

'குட்டியும் நீங்களும் எறங்கிக்கங்க. பஸ் பொறப்புடப் போவுது. '

'ரோசம்மா எழுந்தாள். அவளுக்கு முந்தியே குட்டி முன்சீட்டிற்கு வந்திருந்தாள்.

'கொழந்தைகள நல்லாப் பாத்துக்கிறணும்மா. கழுத்துல சாமாங்களப் போட்டுட்டு அயத்து ஒறங்கீறாத. போனதும் காயிதம் போடணும். அவன் மறந்தாலும் நீ மறக்கக் கூடாது. போயிட்டு வரட்டுமாம்மா. '

ரோசம்மா மூணுபேர் நெற்றியிலும் சிலுவையிட்டு முத்தி விட்டு நிமிர்ந்தாள்.

பின்னாலிருந்து அந்தோணியின் குரல் கேட்டது.

'பர்ஸ்க் குடிடா. குட்டிக்குக் காசு குடுக்கணும். '

வயலெட் பர்ஸைக் கொடுக்கவில்லை. அவளே ஒரு ரூபாய் நோட்டை எடுத்து குட்டியிடம் நீட்டினாள். குட்டி அம்மாவைப் பார்த்துவிட்டு வாங்கிக் கொண்டாள்.

பின் சீட்டிற்கு நகர்ந்த ரோசம்மா அந்தோணியின் நெற்றியிலும் முத்தி விட்டு குனிந்தவாறே காதருகில் சொன்னாள்.

'மாசம் மாசம் பணம் அனுப்பச் சொணங்காதப்பா. நான் வரட்டுமா. '

அந்தோணி தலையசைத்தான். குட்டியின் கையைப் பிடித்து மெல்ல இறக்கி விட்டாள் ரோசம்மா.

புறப்பட்டுபோன பஸ் இரைச்சல் ரெம்ப தூரத்தில் கேட்டது.

'புள்ளைகள இழுத்துட்டு எப்படித்தான் போயிச் சேரப் போறானோ. '

ரவிக்கைக்குள் கிடந்த சிலுவையை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்ட ரோசம்மா ரூபாய் நோட்டை நீட்டி நின்ற குட்டியை இப்போது கவனித்தாள்.

'கர்த்தரே நான் பாவி. '

குட்டியை அழைத்துக் கொண்டு அவள் இன்னொரு பஸ்ஸைத் தேடியபோது புறாக்கூட்டம் மறுபடியும் இறங்கியிருந்தது.

***

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on July 16, 2010 at 12:03 PM said...

பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.

காலத்தால் அழிக்க முடியாத எழுத்து, படைப்பு இது.

இது போன்ற எம் மண் சார்ந்த எழுத்துக்கள் படைப்புக்கள் இருக்கும் பொழுது நான் ஏன் பிரெஞ்சு ராச்சிய இலக்கியங்களை தேடி போக வேண்டும்.

சுவை உள்ள நீரை கொண்டு இருக்கும் இந்த கிணற்றை விட்டு நான் ஏன் குப்பையும், உப்பும் கலந்த பெரிய குளத்தை நாடி செல்ல வேண்டும்.
.

Anonymous said...

u already have an archive by dates. create an another archive by categories...use the code in this site http://www.abu-farhan.com/2010/05/table-of-content-and-accordion-for-blogger/


(for demo see my blog's archive by categories http://thandapayal.blogspot.com/p/archive-to-show-all-post-titles-by.html)

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்