Sep 2, 2010

சித்தி - புதுமைப்பித்தன்


செண்பகராமன் பிள்ளைக்கு வைராக்கியம் திடீரென்று ஏற்பட்டது. உலக வியவகாரங்களில் நொடித்துப் போய், மனசு கைத்து அவர் காஷாயத்தை மேற்கொள்ளவில்லை. pudu5தொட்டதெல்லாம் பொன்னான கைதான் அது. ஊரிலே செல்வாக்கு, உள்ளத்திலே நிறைவு ஏற்பட வேண்டியதற்குப்  போதுமான சௌகரியம் எல்லாம் இருக்கத்தான் செய்தது. அவர் சிரித்துக்கொண்டேதான் காவி அணிந்து, கால் விட்ட திசையில் நடந்தார். துணை காரணமாகத் துன்பமோ, தீட்சையோ அவரை உந்தித் தள்ளவில்லை. பிள்ளையவர்கள் புறப்பட்ட தினம் வெள்ளிக்கிழமை. மூன்று நாட்கள் வீட்டில் யாரும் அவர் வரவில்லையே என்று கவலைப்படவில்லை. காரணம் அடிக்கடி அவர் அவ்வாறு 'சோலியாக' அசலூருக்குப் புறப்பட்டுவிடுவது வீடறிந்த பழக்கம். மூன்றாம் நாள் வந்த கார்டுதான் 'அவர் இப்பொழுது செண்பகராமன் பிள்ளை அல்ல; முப்பது கோட்டை விதைப்பாடும், மூன்று லக்ஷம் பாங்கி டிபாசிட்டும் உள்ள பண்ணையார் அல்ல; மண்டபத்துக்கு மண்டபம் கொடுங்கை வைத்துப் படுத்துத் தூங்கிக் கால்கொண்ட திசையில் செல்லும் ஆண்டி' என்பதை அறிவித்தது.
     பிள்ளையவர்கள் செயல்கேட்டு ஊரே கலகலத்து விட்டது. திடீரென்று வைராக்கியம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பது தெரியாத பலருக்கு, மனங்கண்டது எல்லாம் காரணமாகத் தெரிந்தது. யார் யாரெல்லாமோ என்ன என்ன எல்லாமோ சொன்னார்கள். அவ்வளவு காரணமும் தப்பு என்பது தெரிந்த ஒருவர் உண்டு. அவரே மீனாட்சியம்மாள் என்ற ஸ்ரீமதி செண்பகராமன் பிள்ளை. சம்சார பந்தத்தில் மனிதன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பூர்ணமாகத் தெரிந்துகொள்வதற்கு ஒருவருக்குத்தான் முடியும். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஊரறிய ஒரே தலையணையில் தலை சாய்க்கச் சம்மதித்துக் கொண்ட ஜீவனுக்குத் தான், அன்று தொடங்கிய ஒழுங்கு எந்தக் கதியில், எந்த நியதியில் செல்லுகிறது என்பதைப் பூரணமாகத் தெரிந்துகொள்ளச் சௌகரியம் உண்டு. விவேகிகள் தெரிந்து கொள்ளுவார்கள்; அந்த வசதி பெறாதவர்கள் தலையைத் தாங்கிய தலையணையைப் போல பாரத்தைத் தாங்கியதால் விழுந்த குழியைத்தான் மன உலகில் பெற்றிருக்க முடியும். மீனாட்சியம்மைக்கு, தன் கணவர், தன்னுடன் அந்த இளமையிலே, நிதானம் இழந்த தெப்பம் போல உணர்ச்சிச் சுழிப்பில் மிதந்த காலத்திலும், பிறகு குடும்பம், குடித்தனம் என்ற வேட்கையில் வேரூன்ற நினைத்து ஆவேசத்துடன் சம்பாத்தியத்தில் தம்மை மறந்து இறங்கிய காலத்திலும், ஊரின் நன்மை தின்மைகளிலும் வல்லடி வழக்குகளிலும் தர்மாவேசம் உந்தத் தம்மை மறந்து வேலைசெய்த காலத்திலும், தாமரையிலையில் உருண்டு உருண்டு விளையாடும் தண்ணீர் போல இருந்து வருகிறார் என்பதைப் பூரணமாக அறிந்திருந்தாள். அவரது செயல் அவளுக்கு அதிசயமாகத் தெரியவில்லை.
     செண்பகராமன் பிள்ளையின் தங்கை சித்திரை அம்மாள் அண்ணனுக்கு யாரோ 'செய்வினை' செய்துவிட்டார்கள் என்று தான் எண்ணினாள். கண் கண்ட ராசாவாக ஊரை ஆண்ட அண்ணன், ஒரே நாளில் ஆண்டியாகி ஓடுவதற்கு வேறு காரணம் இருக்க முடியாதென்று தீர்மானமாக நம்பினாள்; அவளுடைய புருஷரோ சற்றுச் சந்தேகச் சுபாவி. "அத்தானுக்குப் பித்தந்தான்" என்று தீர்மானித்து விட்டார். தலைக்குனிவாக இருந்தது. பிள்ளையவர்களை மீண்டும் கைப்பிடியாகப் பிடித்துவந்து வைத்தியம் செய்து குணப்படுத்திக் குடும்பத்தில் மறுபடியும் கட்டிப்போட வேண்டும் என்று ஆசைப்பட்டார். சேதி கேட்டு வந்த இவ்விருவருக்கும், "அவுக திரும்ப மாட்டாக; நீங்க போனா அலச்சல்தான் மிச்சம்; நல்ல வளியிலே நாம போய் நல்ல பாம்பெ போடலாமா?" என்று நிதானம் குறையாமல் பேசிய மீனாட்சியம்மையின் வார்த்தைகள் தாம் புரியவில்லை. ஒருவேளை... ஒருவேளை, அவரை விரட்டிவிட்டுச் சொத்தையும் பொருளையும் தாய் வீட்டுக்குச் சுருட்டிக்கொண்டு போக மீனாட்சியம்மை வெட்டிய குழியோ என்று சந்தேகித்தார்கள்.
     பிள்ளைகளுக்குத் தாமே மைனர் கார்டியன் என்றும், செண்பகராமன் பிள்ளையவர்களின் குடும்ப நிர்வாகம் முழுவதும் தம் அதிகாரத்தின் கீழ் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் முதல் காரியமாகக் கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தார். மீனாட்சியம்மையின் பந்துக்கள் இதைப் பார்த்துக்கொண்டிருப்பார்களா? அவளுக்கு ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் உண்டு. அவர்தாம் கிராமத்தில் இருந்துகொண்டு செண்பகராமன் பிள்ளையின் நிலபுலன் வரவுசெலவுக் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். நிர்வாகம் தம்வசமேதான் கொடுக்கப்படுவது நியாயம் என்பதற்கு அனுசரணையாக, செண்பகராமன் பிள்ளையின் ஒரு மகன் சார்பாக ஸிவில் வழக்குப் புலியான ஒரு வக்கீலுடன் சேர்ந்து எதிர் வழக்குத் தாக்கல் செய்தார். மஞ்சட் கயிறு அகலாது போனாலும் மீனாட்சியம்மையின் கதி வெள்ளைப் புடைவை வியவகாரமாயிற்று.
தங்கையம்மாள், ஊர் ஊராக ஆள்விட்டுத் தேட ஏற்பாடு செய்தாள். ஸிவில் வழக்கு ஆவேசத்திலிருந்த அவளுடைய கணவருக்கு அது பிடிக்கவில்லை. வீணாகக் காலத்தைப் போக்கி, சொத்துச் சீரழிந்த பிறகு அத்தான் வந்தென்ன, அப்படியே ஆண்டியாகப் போயென்ன என்று நினைத்தார். ஆள்விட்டுத் தேடுவதை அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்பது அவரது கட்சி. ஊரிலே அவருக்குச் செல்வாக்கு உண்டு; செயலுண்டு. செண்பகராமன் பிள்ளையுடைய வாண்டுப் பயலுக்கு முறைப்பெண் என்ற பாத்தியதைக்கு வாண்டுப் பெண் ஒருத்தி அவருக்கு உண்டு. அவ்விருவருக்கும் செல்லக் கல்யாணம் செய்துவைத்துச் செண்பகராமன் பிள்ளை விளையாடியதனால் பிடி பலமாகத்தான் இருந்தது. அது இன்னும் கொஞ்சம் பலமாகுமென்ற நைப்பாசையும் உண்டு. அவருக்குப் பிடி மட்டும் பலம். உரிமையோ பாத்தியதையோ இல்லை. எதிர்பாத்தியதைக்காரனுக்கு ஒரு வகையில் உரிமை இருந்தாலும் ஊர் தன் பக்கந்தான் சேரும் என்ற பலத்த நம்பிக்கை அவருக்கு உண்டு.
2
     செண்பகராமன் பிள்ளை காவிபோட்டுக்கொண்டு பக்கத்துச் சத்திரம் வரையில் நடந்தார். அங்கே சாப்பிடவில்லை. உடம்பிலே ஒரு தெம்பு, மனசிலே ஒரு கலகலப்பு. காரணம் அற்ற சந்தோஷம் என்று தான் சொல்ல வேண்டும்; சிட்டுக்குருவி மாதிரி, அவருக்கு இந்தத் தீர்க்கமான காரியம் இவ்வளவு சுளுவில் கைகூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதே இல்லை. கண்ணீரும் அழுகையும் வழிமறிக்கக் கூடும். ஊரார் வந்து நின்று எழுப்பும் கௌரவம் என்ற மதில்களைத் தாண்ட முடியாது போய்விடக் கூடும் என்ற அச்சம் அவருக்கு இருந்து வந்ததுண்டு. ஆனால் ஒன்று: யாரோ ஒருவர் கணீர் என்ற குரலில் "அப்பா, செண்பகராமா!" என்று கூப்பிடுவது போன்ற தோற்றம் அவரைப் பலமுறை ஏமாற்றியதுண்டு. சில சமயம் காலமாகிவிட்ட அவருடைய தகப்பனாரின் குரல் போலக் கேட்கும்.
     முன்பு எப்பொழுதோ ஒரு முறை, நடுநிசிப் போது, வாலிபம் குன்றாத காலம், மனைவியுடன் சல்லாபமாகப் பேசிக் கட்டித் தழுவும் சமயத்தில், யாரோ ஜன்னலுக்கு வெளியே வந்து நின்று, "அப்பா, செண்பகராமா!" என்று கூப்பிட்டது போலக் கேட்டது. "அப்பாவா? இதோ வருகிறேன்" என்று தழுவிய கையை வழுவவிட்டு, எழுந்து வெளியே கதவைத் திறந்து கொண்டு வந்தார். வந்து, வெளியே வெறிச்சோடிக் கிடந்த பட்டகசாலையில் நின்றபொழுதுதான் 'இதென்ன முட்டாள்தனம்!' என்ற பிரக்ஞை எழுந்தது. குரலும் தகப்பனாருடையது போல இருந்தது என்ற புத்தித் தெளிவு போன்ற ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. இவர் குரல் கொடுத்துக் கொண்டு எழுந்து சென்ற நிலையில் உடலும் மனமும் கூம்பிப் போன மீனாட்சியம்மாள், "அப்பா செத்து அஞ்சு வருஷமாச்சே. இதென்ன தெய்வக் குத்தமோ, சோதனையோ" என்று நடுங்கிக் கொண்டு கேட்டாள். அவளைத் தேற்ற, வேறு எங்கோ கேட்ட சத்தம் என்று சொல்லி சமாளித்துக் கொள்வதற்குள் அவர் பாடு பெரும்பாடாகிவிட்டது.
     இதே மாதிரிதான் நடுப்பகல்: கடையில் உட்கார்ந்து பெரிய கணக்கப்பிள்ளை எடுத்துக்கொடுத்த பேரேடுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இதே மாதிரி யாரோ கூப்பிட்டார்கள்; பதில் குரல் கொடுக்க வாயெடுத்தவர் மின்னலதிர்ச்சியுடன் எதிர்மோதி வந்த சூழ்நிலை உணர்ச்சி வேதனை கொடுத்தபடி வாயடைத்தது. கடையிலே உட்கார்ந்திருந்தபடி சமாளிப்பதற்கு மிகவும் சங்கடப்பட்டார்.
     சாலையிலே, சுருக்கிருட்டிலே முன் என்ன இருக்கிறது என்ற கவலை சற்றும் இல்லாமல், முதுகில் போட்ட சரடு புரண்டு விழாமல், 'கினிங் கினிங்' என்ற மணிச் சத்தத்துடன் நடந்துபோகும் காளைகளைப் போல மனசை அசை போடவிட்டு நடந்தார். சமயா சமயங்களில் ஊரில் எப்படி இந்தக் காரியம் கழித்துக் கொண்டு எதிர் ஒலிக்கும் என்பதை அவர் மனசு கற்பனை செய்ய முயலும். அவ்வளவையும் தப்பித்து வந்துவிட்டதில் ஓர் எக்களிப்பு; அதாவது, தாய் கிணற்றடியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மெதுவாக அடுக்குச் சட்டியைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி நின்று, உறியில் உள்ள நெய்விளங்காயைத் திருடித் தின்றுவிட்டு, உதட்டோ ரத்தில் ஒரு பொடி இல்லாமல் துடைத்துக் கொண்டதாக மனப்பால் குடித்துக்கொண்டு, "ஏளா, எனக்குப் பண்டமில்லையா?" என்று பாசாங்கு செய்யும் தன்னுடைய சுப்பையாவின் காரியம் போல, பிறர் கண்களில் படாதபடி வியவகாரத்தை நடத்திக் கொண்டதில் ஓர் எக்களிப்பு.
     "என்னலே திருட்டு மூதி! உன் ஒதட்டிலேதான், உறிப்பானேலெ இருந்த நெய்விளங்காய் உக்காந்திருக்கே" என்று அவனுடைய தாய் அவன் குண்டுணித்தனத்தைச் செல்லமாக வெளிப்படுத்துவது போல், காலம் என்ற அன்னையும் தம்முடைய திருட்டுத்தனத்தை வெளிப்படுத்திவிடும் என்பதை அவர் புரிந்து கொள்ளாமலில்லை. அப்போது நாம் இங்கு இருக்கமாட்டோ ம் என்பதில்தான் அவருக்கு ஏகமேனியாக எக்களிப்புத் தலைசுற்றி ஆடியது.
     ஆனால் ஒரு காரியம். "நாம் ஏன் இந்தக் காவியைப் போட்டுக் கொள்ள வேண்டும்?" என்ற கேள்வி மட்டும், செய்கிற காரியத்தை எதிர்த்துக் கேள்வி போட்டு மடக்கிக் கொண்டே இருந்தது.
     மாடு இழுக்க வண்டி உருண்டது. மனசு இழுக்க அவரும் நடந்தார், நடந்தார், நடந்தார்... நடந்துகொண்டே இருந்தார். கறுப்பாகச் செறிந்து கிடந்த மரங்கள், கரும்பச்சை கண்டு, கடும்பச்சையாகிப் பளபளவென்று மின்னின. நக்ஷத்திரங்கள் எப்பொழுது மறைந்தன என்ற விவரம் அவருக்குத் தெரியாது. ஊருக்கு வெகு தொலைவில், இரட்டை மாட்டு வண்டிக்குப் பின்னால் எங்கோ நடந்து கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது.
     தூங்கிக்கொண்டிருந்த வண்டிக்காரன் எழுந்து, அவிழ்ந்து கிடந்த முண்டாசை எடுத்துக் கட்டிக்கொண்டு, "தை, தை" என்று காளைகளை நிமிண்டினான். சக்கரங்கள் சடபடவென்று உருண்டன.
     வண்டியும் தூசிப்படலத்தை எழுப்பிக்கொண்டு அந்தத் திரை மறைவில் ஓடி மறைந்தது.
     எதிரியை மடக்குவதற்குத்தான் சரக்கூடம் போடுவார்கள்; பிரம்மா ஸ்திரத்தைப் பிரயோகித்தால் தான் புகைப்படலத்தின் மறைவில் வருகை தெரியாமல் வந்து எதிரியின் வல்லுயிரை வாங்கும். ஓடுகிற மாட்டுவண்டிக்கு இந்த ராசாங்கமெல்லாம் என்னத்திற்கு? இப்படியாக நினைத்துக்கொண்டு சிரித்தார் பிள்ளை. படித்த படிப்பு எல்லாம் மனசில் திசைமாறித் தாவி, தம்முடைய பயனற்ற தன்மையைக் காட்டிக் கொள்வதாக நினைத்தார். இனிமேல் படித்துப் பாழாய்ப் போன கதையை எல்லாம் தலையில் விஷம் ஏறுவதுபோல் ஏறித் தம்மைக் கிறங்க வைப்பதற்குச் சற்றும் இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தார். படித்த படிப்பென்ன! அறிந்த ஞானம் என்ன! எல்லாம் எதற்கு? யார் கூப்பிடுகிறார்கள் என்ற விடுகதையை விடுவிக்க வகையில்லாமல் திண்டாடுகிறதே!
     சாலை இருந்த இடத்தில் திடுதிப்பென்று வளைந்து திரும்புகிறது. பிள்ளையவர்களும் திரும்பினார். திருப்பத்துக்கு அப்பால் ஆலமரமும் ஒரு சின்ன மண்டபமும் கிணறும் இருந்தன. வண்டிக்காரன் காளைகளை நுகத்தடியில் கட்டிவிட்டு, அடுப்பு மூட்டி, ஆலம் விழுது கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்தான். மண்டபத்து முகப்புத் தூணில் முதுகைச் சாய்த்து, அருகே ஆண்டிப் பொட்டணம் துணை இருக்க, கிழட்டுச் சாமி ஒன்று மனசைச் சோம்பலிலே மிதக்கவிட்டு நிர்விசாரமாக உட்கார்ந்துகொண்டிருந்தது. வண்டிக்காரனிடம் பட்டையை வாங்கி, பல் துலக்கி, ஸ்நானம் செய்து இரண்டு மிடறு தண்ணீர் பருகிவிட்டு மண்டபத்தில் கால் உளைச்சலைப் போக்கிக் கொண்டு நிதானமாக நடந்தால் என்ன என்று செண்பகராமன் பிள்ளை கருதினார்.
     வழக்கம் போல, "ஏலே, அந்தப் பட்டையை இப்படிப் போடு" என்று அதிகாரம் செய்யத்தான் அவருக்குத் தெரிந்திருந்தது.
     ஆண்டியாகிப் பன்னிரண்டு மணிநேரம் கடந்தும் அதிகார வாசனை போகவில்லை.
     "என்ன சாமி, ஏலே, ஓலே இங்கிய? ஓலே பட்டெல இருக்கும்" என்று எடுப்பாகப் பதில் சொன்னான் வண்டிக்காரன்.
     குத்துக்கல்லில் சாய்ந்திருந்த கிழட்டுச் சாமி சிரித்தது. முத்து முத்தான பல்லும், தாடியும் பார்ப்பதற்கு மோகனமாகத்தான் இருந்தன. பிள்ளையவர்களுக்கு வேட்டியின் காவிக்கு அடுத்த சொல் அதுவல்ல என மௌனத்தைக் கடைப்பிடித்து நிழலில் உட்கார்ந்தார்.
     குதிரைச் சதையை வருடிக்கொண்டார். தடவிக் கொடுத்துக் கொள்வது சுகமாக இருந்தது.
     அவருக்குச் சற்றுத் தூரத்தில் மாடுகள் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. கறுத்த காளை போன ஜன்மத்தில் வழிமறிச்சான் உத்தியோகம் போலும்! ரஸ்தாவில் பாதி தனக்கென்று படுத்துக் கொண்டிருந்தது.
     இவர்கள் நடந்துவந்த திசையிலே, திருப்பத்துக்கு அப்பால், பூம்பூம் என்ற ஹார்ன் சப்தத்துடன் ஒரு வாடகை மோட்டார், கொள்ளுமட்டும் ஜனங்களை ஏற்றிக்கொண்டு பேரிரைச்சலுடன் ஐக்கிய ஜனநாயக நாடுகளின் 'ஏகோபித்த' அணி வகுப்பினர்களைக் கூட்டிக்கொண்டு திரும்பியது. வழிமறிச்சான் காளை உதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தது. பஸ் டிரைவர் 'ஸ்டியரிங்' சக்கரத்தை ஒடித்துத் திருப்பினான். பஸ் எதிரிலிருந்த புளியமரத்தில் ஏற முயன்றது; கவிழ்ந்தது. உள்ளே குமைந்த ஜனக் குமைச்சல் பிரலாபிக்கும் ரத்தக் களரியாயிற்று. அதிலிருந்து ஜனங்களும் மூட்டை முடிச்சுகளும் வெளியே பிய்த்து எறியப்பட்டன. உள்ளே பலர் அகப்பட்டு நசுங்கினர். ஸ்டியரிங் சக்கரத்தின் மீது டிரைவரின் பிரேதம் கவிழ்ந்து படுத்திருந்தது. ஒடிந்த கண்ணாடித் துண்டு அவன் மூக்கைச் செதுக்கி எங்கோ எறிந்துவிட்டது.
     பதறி அடித்துக்கொண்டு எழுந்திருந்தார் பிள்ளை. மோட்டாரின் அடியில் சிக்கிக் கிடப்பவர்களை விடுவிப்பது எப்படி என்று தெரியாமல், அர்த்தமற்ற கூப்பாடு போட்டுக்கொண்டு வண்டியைச் சுற்றி சுற்றி ஓடிவந்தார். விபத்து பலமாகிவிட்டதனால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று உலைப் பானையைச் சற்றும் கவனிக்காமல், கட்டை வண்டிக்காரன் வண்டியைப் பூட்டிக்கொண்டு குறுக்குப் பாதையாக ஓடி ஆட்களை அழைத்துவருவதாகச் சொல்லிச் சிட்டாகப் பறந்துவிட்டான். விழுந்த காக்கையைச் சுற்றி ஓலமிடும் காக்கை மாதிரிதான் செண்பகராமன் பிள்ளை கத்தினார். அவருக்கு எப்படி உதவிசெய்வது என்று புரியவில்லை. இதற்குள் மோட்டார் வண்டியில் பின்னே இருந்தவர்கள் அதிர்ச்சியின் வேகம் அடங்கியதும் இறங்கினார்கள். செண்பகராமன் பிள்ளைக்கு மூட்டைகளை எடுத்து வரிசையாக அடுக்கத்தான் முடிந்தது. எதிரே கண்ட ஆபத்து அவரைக் கதிகலங்க வைத்துவிட்டது.
     எதிரே வந்து போக்கு வண்டிகள் இரண்டொன்று நின்றன. அடிபட்டவர்களை அடுத்த ஊர்வரையில் ஏற்றிச் செல்லச் சம்மதித்தனர்.
     கோடை இடி மாதிரி நிகழ்ந்த இந்த ரௌத்திர சம்பவத்தின் ஆரவாரம் ஒடுங்கி அந்த இடம் மறுபடியும் நிம்மதியாக இரண்டு மணி சாவகாசம் பிடித்தது.
     தம்மை அழைக்கும் குரலின் மாயக்கூத்துப் போலத் தென்பட்டது பிள்ளைக்கு. ஆனால் ஒடிந்து வளைந்த இரும்பாக நின்ற வாடகை மோட்டார்தான் அச்சம்பவத்தை நினைப்பூட்டும் தழும்பாக, கண்களை உறுத்தியது.
     செயல் ஒடுங்கி நின்ற பிள்ளை, நிதானம் பெற்றுக் கட்டை வண்டிக்காரன் போட்டுவிட்டு ஓடின பட்டையை எடுத்துக்கொண்டு கிணற்றருகில் சென்றார்; பல் துலக்கினார்; குளித்தார்; ஈரவேட்டியை ஆலம் விழுதுகளில் தொங்கவிட்டார்; மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார்.
     அடுப்பு, புகைந்து கொண்டிருந்தது. அதையே கவனித்துக் கொண்டிருந்தார்.
     "இன்னும் நெருப்பு அணையவில்லை" என்றது கிழட்டுச்சாமி.
     இத்தனை கோரத்தையும் கல்லுப் பிள்ளையார் மாதிரி இருந்த இடத்தைவிட்டு அசையாமல் கிழட்டுச்சாமி பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது என்ற உணர்ச்சி செண்பகராமன் பிள்ளையின் மனசில் ஈட்டி கொண்டு செருகியது. துறவித் தன்மையை வெறுத்தார். மறுகணம் 'அவ்வளவு கல்நெஞ்சோ!' என்று பதைத்தார். அதே மண்டபத்தில் உட்காரக் கூடப் பயந்தவர் மாதிரி சற்று நகர்ந்து தள்ளி உட்கார்ந்தார். பதில் சொல்லத் தெரியவில்லை.
     "மோட்டார் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்ததனால் யாருக்கு என்ன லாபம்?" என்று கேட்டது கிழட்டுச்சாமி.
     சும்மா இருந்தது போதாதென்று தம்மையும் வேறு கேலி செய்கிறான் இந்தக் கிழட்டு ஆண்டி என்று கோபப்பட்டார் செண்பகராமன் பிள்ளை. எழுந்தார். பதில் பேசவில்லை.
     "அடுப்பு இன்னும் புகைகிறது; அணையவில்லை" என்று சிரித்தது கிழட்டுச்சாமி.
     "அதை அணைத்துவிடட்டுமா?" என்றார் பிள்ளை. அவருக்குப் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருக்க விருப்பம் இல்லை. ஒரு பட்டை தண்ணீர் மொண்டு, அடுப்பில் ஊற்றி அணைத்துவிட்டு, வேட்டி உலர்ந்துவிட்டதா என்று வேட்டியைத் தொட்டுப் பார்த்தார்.
     "கிழட்டுப் பட்டையானாலும் ஒரு பட்டை தண்ணீருக்கு எவ்வளவு சக்தி இருக்கு பாத்தியா?" என்றது கிழட்டுச்சாமி.
     உலர்ந்த வேட்டியைக் கொசுவி, உதறிக் கட்டிக்கொண்டார் பிள்ளை.
     மறுபடியும் மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார்.
     "சாமி எங்கே போறதோ" என்று கேட்டார்.
     "எல்லாரும் போற எடத்துக்குத்தான்? வேற எங்கே போக்கடி; இந்தா இந்த அவலைத் தின்னுகிறாயா?" என்று மூட்டையை அவிழ்த்துக் கையில் ஒரு குத்து அவலைக் கொடுத்தது கிழட்டுச்சாமி.
     பிள்ளை இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக்கொண்டார். வாயில் கொஞ்சம் இட்டுக் குதப்பிக்கொண்டே, "அது என்ன புஸ்தகம்?" என்று புருவத்தை நிமிர்த்திச் சுட்டிக் காட்டினார். கிழட்டுச்சாமி அதை எடுத்துக் கையில் கொடுத்தது. பிழைகள் மலிந்த திருவாசகப் பதிப்பு அது அநாதியான சிவபிரான் மாதிரி முன்னும் பின்னும் அற்றிருந்தது.
     பிள்ளையவர்களுக்கு மனப்பாடமான கிரந்தம்; ருசியோடு படித்த புஸ்தகம்.
     "அதை வாசியும்" என்றது கிழட்டுச்சாமி.
     பிள்ளையவர்கள் அவலை மடியில் கட்டி வைத்துவிட்டு ராகத்துடன் வாசிக்க ஆரம்பித்தார். சாமி கேட்டுக்கொண்டே இருந்தது.
     "வெளியிலே குப்பையிலே கிடந்தது; ஆருக்காவது உதவுமே என்று எடுத்து வந்தேன்; எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது" என்றது கிழட்டுச்சாமி.
     படிக்காதவன் தூக்கின சுமையா என்று அதிசயப்பட்டார் பிள்ளை. எழுத்தறிவற்ற மூடமோ, வயிற்றுப் பிழைப்புக்குக் காவியோ என்று சந்தேகித்தார் பிள்ளை.
     கிழடு சிரித்துக்கொண்டிருந்தது.
     "நான் கைலாசத்துக்குப் போகிறேன்" என்றது கிழட்டுச்சாமி.
     'கிண்டல் ரொம்பப் பலமாக இருக்கிறதே' என்று நினைத்தார் பிள்ளை. உதறியடித்துக்கொண்டு சாடிப் பேச அவருக்குத் தைரியம் இல்லை.
     "கூண்டோட கைலாசம் இல்லை; கைலாச பர்வதத்துக்குத்தான் போகிறேன்; நீரும் வருகிறீரா?" என்று அவரைப் பார்த்துச் சிரித்தது அந்தக் கிழட்டுச்சாமி.
     "எங்கே போனால் என்ன? வருகிறேன்" என்று எழுந்தார் பிள்ளை.
     "சரி, இருக்கட்டும். உம்ம பேரு என்ன?" என்றது கிழட்டுச்சாமி.
     "சாந்தலிங்கம் என்று சொல்லணும்" என்றார் பிள்ளை.
     "இதுவரை சொல்லிக்கொண்டு வந்தது?" என்றது கிழட்டுச்சாமி.
     "செண்பகராமன் பிள்ளை என்று சொல்லுவார்கள்" என்றார்.
செண்பகராமன் பிள்ளையின் வாண்டுப்பயல் வடிவேலுவுக்கு மாமனாரான ஆனையப்ப பிள்ளைக்கு எதிராக வழக்குத் தொடுத்த மனைவிவழி மைத்துனர் நல்லசிவம் பிள்ளை, அவருடைய இரண்டாவது மகன் முத்துசாமியின் சார்பாகச் சொத்தைத் தம் நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்க வேண்டும் அல்லது கோர்ட்டார் மேற்பார்வையில் வைத்திருக்க வேண்டும் என்று கட்சி ஆடினார். அவருடைய வக்கீல் கெட்டிக்கார வக்கீல். ஆனையப்பப் பிள்ளைக்கு ஊரில் செல்வாக்கு உண்டு. நல்லசிவம் பிள்ளையின் வக்கீல், வருகிற அறுவடைவரை வழக்கை ஒத்திவைத்து, பூநெல்லை அகற்றிக் கிஸ்திப் பணத்தையும் மீனாட்சியம்மை சார்பாகத் தாமே கட்டிவிட்டால், குடுமி தம் கைக்குள் சிக்கிவிடும் என்று திட்டம் போட்டார்.
     வடிவேலுவின் நலத்தை முன்னிட்டு வழக்காடப் புகுந்த ஆனையப்ப பிள்ளையின் யோசனை வேறு. அறுவடையின் போது களத்து நெல்லை மடக்கிவிட வேண்டும், அப்பொழுது நல்லசிவம் பிள்ளையின் கொட்டம் அடங்கும் என்று மனப்பால் குடித்தார் ஆனையப்ப பிள்ளை. கோர்ட்டில் இன்ஜங்ஷன் வாங்கி அப்படியே நெல்லை மடக்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர் யோசனை பண்ணியிருப்பது வாண்டு வடிவேலு மூலம் மீனாட்சியம்மையின் காதுக்கு எட்ட, நல்லசிவம் பிள்ளை உஷாரானதில் அதிசயம் இல்லை. ஆனையப்ப பிள்ளை மருமகனைத் தன் வீட்டோ டு கூட்டிப் போய் வைத்துக் கொண்டு அவன் படிப்பை மேற்பார்வை செய்யாவிட்டால் அவன் கெட்டுக் குட்டிச்சுவராகப் போவான் என்பதைத் தன் மனைவி மூலம் மீனாட்சியம்மைக்குச் சொல்லிவிட்டார். பையன் மீது உள்ள பாசத்தினால் அது சரியெனவே அவளுக்குப் பட்டது. "ஒங்க வீட்டு மருமகன் தானே? அவனை ஒப்படியாகப் பண்ணுவது இனி உங்க பொறுப்புத்தானே?" என்று பதில் சொல்லித் திருப்தி அடைந்தாள்.
     கிராமத்திலிருந்து வந்த நல்லசிவம் பிள்ளை அக்கா என்று உறவு கொண்டாடிக்கொண்டு வந்து, "பிள்ளையை வேறு வீட்டில் விட்டு வைப்பது நமக்குக் குறைச்சல்; மேலும் ஆனையப்ப பிள்ளைக்கு இப்பொழுது கடன் தொல்லை அதிகம்; சிறுசை வைத்துக் கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறான்" என்று ஓதினார்.
     "செண்பகராமன் பிள்ளையின் சம்பாத்தியம் மண்ணாங்கட்டியாகப் போகும்; முதலில் வடிவேலை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா" என்று யோசனை சொன்னார்.
     மீனாட்சி அம்மாளுக்கு அவர் சொல்லுவதும் சரியாகத்தான் பட்டது. அவனுடைய நன்மையை எண்ணி முத்துசாமியை உருப்படாமல் ஓட்டாண்டி ஆக்கிவிடுவதா என்று மனசு பொங்கியது. பகல் மூன்று மணிக்குத் தன்னுடைய நாத்தனார் வீட்டுக்குப் போனாள். பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலே கொட்டமடித்துக்கொண்டிருந்த வடிவேலைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தாள். "நான் மாமா வீட்டில்தான் இருப்பேன்" என்று வடிவேலு கத்தினான். அவளுடைய கைகளைப் பிறாண்டினான். ஆனால் அவளுக்கு பின்னால், 'ஓ ராமா' என்று படைப்பயம் போட்டுக்கொண்டுதான் தெரு வழியாக இழுபடவேண்டி இருந்தது.
     நயினார்குளத்தங் கரையில் மாலை மயங்கும் சமயத்தில் ஆனையப்ப பிள்ளையும், நல்லசிவம் பிள்ளையும் சந்தித்துக் கொண்டார்கள். வார்த்தை தடித்தது; நல்ல காலம், உடல் தடிக்கவில்லை.
     "உன் கொட்டத்தை அடக்குகிறேன்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
     "செண்பகராமன் பிள்ளை ஊரிலே கண்ட மழுமாறிகளுக்குச் சொத்துச் சம்பாதித்து வைத்துவிட்டுப் போகவில்லை" என்று உறுமினார் நல்லசிவம் பிள்ளை.
     "யாரடா மழுமாறி? செண்பகராமன் பிள்ளை சொத்து என்ன கொள்ளியற்றுப் போச்சு என்று நினைத்துக்கொண்டாயா?" என்று பதிலுக்கு உறுமினார் ஆனையப்ப பிள்ளை.
     கிராமத்தில் பயிர் அரிவாளை எதிர்பார்த்துத் தலைசாய்த்து நின்றது.
   "அண்ணாச்சி, நாளைக்கு நாம் நினைக்கிற காரியம் கைகூடத் திருச்செந்தூருக்குப் போய் ஓர் அர்ச்சனை நடத்திவிட்டு வருவோம்" என்று சொல்லிக்கொண்டே ஆனையப்ப பிள்ளையின் வீட்டுக்குள் ஒரு புல்லுருவி நுழைந்தது. பரமசிவம் பிள்ளை நல்லசிவம் பிள்ளை சார்பில் கிருஷ்ண பரமாத்மாவாக எதிர்கோட்டைக்குள்ளே சென்று விளையாடினார். முருகனுக்கு வெள்ளியன்று அர்ச்சனை நடத்தி, பிறகு கோர்ட்டுக்கும் வக்கீலுக்கும் அர்ச்சனை நடத்தினால் காரியம் நிச்சயமாக ஜயம் என்று இரவோடு இரவாகத் திருச்செந்தூருக்குப் பிரயாணமானார்கள். ஆனையப்ப பிள்ளையும் புல்லுருவி பரமசிவமும், பணத்தைப் பணம் என்று பாராமல் நல்லசிவம் பிள்ளை அறுவடையை அசுர கதியில் நடத்த ஆரம்பித்தார்.
     வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில் நெல்லை எத்தனை கோட்டையானாலும் ஒதுக்க முடியாதவன் ஒரு வேளாளனா என்பது நல்லசிவம் பிள்ளையின் கட்சி.
     அர்ச்சனை பாலபிஷேகம் செய்துவிட்டு, நெஞ்சில் சந்தோஷத்தோடு கோவில் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து, மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய மறவன் ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து காரியம் மிஞ்சிப் போனதாகச் சொன்னான். பக்கத்தில் பரமசிவம் பிள்ளை இல்லை. அவர் கோவிலிலிருந்தே நழுவி விட்டார். "அண்ணாச்சி இங்கே ஒரு எடத்துக்குப் போயிட்டு வருகிறேன்" என்று அவர் சொல்லும்போது அவர் வார்த்தையைக் கபட நாடகம் என்று ஆனையப்ப பிள்ளை நினைக்கவில்லை. இன்ஜங்ஷன் யோசனையைக் கைவிடவேண்டியதாயிற்று.
     இப்படியாக, செண்பகராமன் பிள்ளையின் குடும்ப நிர்வாகத்தை யார் கவனிப்பது என்பதற்காக, இரண்டு நபர்கள் அவருடைய சொத்தை வாரி இறைத்துக் கொண்டு கோர்ட்டு வாசலில் காத்துக் கிடந்தார்கள்.
4
     சாந்தலிங்கச்சாமி மறுபடியும் தென் திசை நாடும்பொழுது வருஷம் பத்து ஓடிவிட்டன. எங்கெங்கோ கிழட்டுச்சாமியுடன் சுற்றினார். கைலாச பர்வதத்தில் கிழட்டுச்சாமி ஒடுக்கமானபோது அருகில் இருந்தவர் சாந்தலிங்கச்சாமிதான்.
     அவர் கொடுத்த திருவாசகப் புஸ்தகம், அவர் வைத்துவிட்டுப் போன மூட்டை இரண்டோ டும், நிம்மதி இன்மை என்ற நிஜச் சொத்துடன் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தார். கடைசியாக, திருச்செந்தூருக்கு வந்து உட்கார்ந்தார். மனசு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. யாரோ தம்மைத் தேடி அழைப்பது போன்ற ஒரு மனநிலை; வாசியை வசப்படுத்தும் பழக்கம் பெற்றும் அடங்கவில்லை. கூப்பிட்டவர் யார்? ஏன் கூப்பிட வேண்டும்? பத்து வருஷங்களாக வாட்டும் கேள்வி.
     கடைசியில் ஆனையப்ப பிள்ளையின் பாலபிஷேகத்துக்கு ஏமாறாத முருகன் காலடியில்தான் அவர் வந்து விழுந்தார். ஓயாத கடலும் ஓயாத மனசும் அவரை அலட்டின. காவித் துணியை அணிந்துகொண்டபோது இருந்த மன உல்லாசம் எங்கோ ஓடி மறைந்துவிட்டது. புறப்பட்ட இடத்தையே அலகை போல, தாம் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டார். தமக்குச் சாந்தலிங்கம் என்று பெயர் இட்டுக் கொண்டதைக் கண்டு கிழட்டுச் சாமி சிரித்ததில் அர்த்தபுஷ்டி இருந்ததாகவே இப்பொழுது அவருக்குப் பட்டது.
     நல்ல வெள்ளிக்கிழமையும் நாளுமாக வௌவால் மாதிரி இருட்டில் அல்லாடக் கூடாது என்று நினைத்துக் கோவிலுக்குச் சென்றார்.
     சந்நிதியில் தம்மை மறந்த நிஷ்டை சற்றுக் கைகூடியது. லயத்தில் இருப்பவரை "அத்தான்" என்று யாரோ ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்.
     ஆனையப்ப பிள்ளைதான். வழக்கம்போல வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்காகத் திருச்செந்தூருக்கு வந்திருந்தார்.
     மங்கிய விளக்கொளியும் பத்து வருஷங்களும் போட்ட திரை அவருடைய பார்வையை மழுங்க வைக்கவில்லை. முருகனிடம் மாறாத நம்பிக்கை வைத்ததன் பலன் என்று அவர் கருதினார்.
சாந்தலிங்கச்சாமி அதிர்ச்சியிலிருந்து தெளிந்து நிதானப்பட்ட பிறகு தம்முடைய சகோதரி புருஷன் என்பதை உணர்ந்தார். செண்பக ராமன் பிள்ளையாக நடந்துகொள்ள மனம் ஒப்பவில்லை.
     ஆனையப்ப பிள்ளைக்கு எப்படித் தம் காரியத்தைச் செண்பகராமன் பிள்ளையிடம் சாதித்துக்கொள்வது என்ற யோசனை. எதிர்க்கக் கூடாது; போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும்; அவ்வளவுதான்.
     இரவு இரண்டு மணிவரையில் இரண்டு பேரும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து பேசினார்கள்.
     "நீங்கள் நல்ல வழியில் இருப்பதை நான் கெடுக்க விரும்பவில்லை; சிறு பையன்கள் என்ன பாவம் பண்ணினார்கள்? சொத்தை ஊர்க்காரன் தின்னாமல் ஒரு ஒழுங்குபடுத்திவிட்டு மறுபடியும் காஷாயம் போட்டுக்கொள்ளுங்கள்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
     மறுபடியும் வெள்ளை உடுத்துக் கோர்ட்டு ஏறிக் குடும்பத்தைச் சீர்தூக்கி வைக்க வேண்டும். ஆமாம். வடிவேலுவும், முத்துசாமியும் என்ன பாவம் பண்ணினார்கள்? அவர்களுக்காக இந்தக் கட்டை உழைப்பதில் குற்றம் இல்லை என்றது சாந்தலிங்கச்சாமியின் மனசு. 'ஊர்ப் பயல்கள் கொட்டத்தை அடக்காமல் ஓடியா போவது?' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.
     "சரி, வருகிறேன். எழுந்திருங்கள். மீனாட்சி எப்படி இருக்கா?" என்றார் செண்பகராமன் பிள்ளை.
     "அவளை உங்களுக்குத் தெரியாதா? கேப்பார் பேச்சைக் கேட்டுக் கேட்டுத்தான் குடும்பம் குட்டிச்சுவராய்ப் போச்சு. காலையில் நான் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். மாலையில் அவன் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். கடைசியில் வீண் சிரமமும் பணவிரயமுந்தான் மிச்சம்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
     இரண்டு பேரும் மூன்று மணி சுமாருக்குத் திருநெல்வேலிக்குப் போகும் பஸ்ஸில் ஏறினார்கள். சாந்தலிங்கசாமியின் மனசு என்னவோ செய்யத் தகாத காரியத்தில் ஈடுபடுவதாகவே அல்லாடியது.
     'நான் இந்த வேஷத்தில் வீட்டு நடைப்படியை மிதிக்கலாமா?' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.
     பலபலவென்று விடியும்போது பஸ் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு மணிநேரம் கழித்தால் சாந்தலிங்கச் சாமிக்கு ஒடுக்கம்; அதாவது அப்புறம் செண்பகராமன் பிள்ளைதான்.
     "ஆனையப்ப பிள்ளையவாள், நீங்க சொல்லுவது ரொம்பச் சரியாத்தான் படுகிறது; எனக்குக் குடும்பம் ஏது, குட்டி ஏது? நான் ஆண்டி" என்றார் சாந்தலிங்கச்சாமி.
     "அத்தான், வண்டியைவிட்டு இறங்குங்க, நாம் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசிக்கொள்வோம்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
     இருவரும் இறங்கி எதிரில் இருந்த ஹோட்டலுக்குள் போனார்கள். அங்கே இரைச்சல் காதை அடைத்தது. இருவரும் குழாயடியில் முகத்தைத் தேய்த்துக் கழுவிப் பல் துலக்கினார்கள்.
     குனிந்து வாயை உரசிக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் சாந்தலிங்கச்சாமிக்கு, "அப்பா செண்பகராமா!" என்று யாரோ உரத்த குரலில் கூப்பிட்டது கேட்டது.
     "அத்தான், அதாரது என்னை அடையாளம் கண்டு கூப்பிட்டார்கள்?" என்று தலையை நிமிர்ந்து கேட்டார் செண்பகராமன் பிள்ளை.
     பக்கத்தில் இருந்த சிறுவன், "சாமி, ஒங்களை யாரும் கூப்பிடலியே? நான் தானே பக்கத்தில் நிக்கேன்?" என்றான்.
     'இந்தச் சென்மத்திலே நான் சாந்தலிங்கமாக மாட்டேன் போலும்!' என்று தனக்குள்ளே சிரித்துக்கொண்டது ஜீவாத்மா.
     காவி தரித்த செண்பகராமன் பிள்ளைதான் அங்கு நின்றார். சாந்தலிங்கம் மனசுக்குள்ளாகவே ஆழ்ந்து முழுகிவிட்டது. மனசு ஆழம் காணாத கிணறு அல்லவா?
     "அத்தான், நேரத்தைக் களிக்காதிய" என்று ஆனையப்ப பிள்ளை குரல் கொடுத்தார்.
     செண்பகராமன் பிள்ளைக்குப் பத்து வருஷங்களுக்குப் பிறகு காப்பி உடலிலே வேறு ஒரு விதமாகப் புழுக்கத்தையும் புளகாங்கிதத்தையும் கிளப்பியது.
     இருவரும் மீண்டும் பஸ்ஸில் ஏறினார்கள். பஸ் புறப்பட்டது.
     எப்போதோ ஒரு காலத்தில் கிழட்டுச் சாமி, கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்ததும், இப்போது தம்முடைய சதை ஆடுவதும் பக்கத்தில் பக்கத்தில் நினைவுக்கு வந்தன. கைலயங்கிரியில் ஒடுக்கமான கிழட்டுச்சாமி எதிரே உட்கார்ந்துகொண்டு கேலி செய்வது மாதிரி இருந்தது.
     "சாமி, ஒங்களெ செலம்பரத்திலே பாத்த மாதிரி தோணுதே" என்றான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவன்.
     "நீ யாரைச் சொல்லுகிறாய்?" என்று கேட்டார் செண்பகராமன் பிள்ளை.
     "ஒங்களை எனக்குத் தெரியாதா? நீங்க சாந்தலிங்கச்சாமி இல்லே? பொத்தாமரை பக்கத்திலியே உக்காந்திருப்பியளே?" என்றான் அந்தக் கிழவன்.
     "சாந்தலிங்கச்சாமி ஒடுக்கமாயிட்டுது. எனக்கும் அவரைத் தெரியும்" என்றார் செண்பகராமன் பிள்ளை.
     "எப்பம்?" என்றான் கிழவன்.
     "அவங்க ஒடுக்கத்தில் ஆகி சுமார் நாலு மணி நேரமாச்சு" என்றார் செண்பகராமன் பிள்ளை, நிதானமாக.

கலைமகள், ஜனவரி 1944
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் on September 2, 2010 at 3:30 PM said...

ஒரு விண்ணப்பம். சிலருக்கு அலுவலகத்தில் வலைபப்திவுகள் தடை செய்யப்பட்டிருக்கும். அவர்களால் படிக்க முடியாமல் போகிறது.

ரீடரில் உங்கள் பதிவை முழுமையாகப் படிக்க முடிவதில்லை. நீங்கள் முழு ஃபீடையும் தந்தால் ரீடர், பஸ் போன்றவற்றிலும் மற்றவர்கள் படிக்க முடியும் (இன்றைக்கு இந்தக் கதையை பஸ்ஸில் ஷேர் செய்திருந்தேன் - அதில் ஒருவர் இந்தச் சிக்கலைச் சொல்லியிருந்தார்).

உண்மைத்தமிழன் on September 2, 2010 at 9:02 PM said...

முன்பே படித்ததுதான்.. ஆனால் புதுமைப்பித்தன் எழுதி எனக்குப் பிடித்தது செல்லம்மாள் கதைதான்..!

Jegadeesh Kumar on September 4, 2010 at 10:45 AM said...

அற்புதமான கதை. புதுமைப்பித்தனின் அங்கதம் தொனிக்கும் நடை மயக்குகிறது.

Jegadeesh Kumar on September 4, 2010 at 10:47 AM said...

சித்தி என்றால் சிற்றன்னை அல்ல. சாதனை மூலம் அடையும் சித்தி

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்