Nov 24, 2010

இ.பா: நெடுவழிப் பயணம்-எஸ்.ரா

இந்திரா பார்த்தசாரதி
கதாவிலாசம்


ஊர் சுற்றிகளின் மீது எனக்கு எப்போதுமே தனி ப்ரியம் உண்டு. அதிலும், நெடுஞ்சாலை திறந்து கிடக்கிறது என்பதால், நோக்கமற்று எங்குவேண்டுமானாலும் சுற்றித் திரியும் மனிதர்கள் வரம் பெற்றவர்கள்!

ருஷ்யாவின் புகழ்பெற்ற தத்துவஞானியான குர்ஜீப், ஒரு ஊர்சுற்றி! அவரும் அவரது நண்பர்களும் i_paaமனம் போன போக்கில் சுற்றி அலைவார்கள். போகுமிடங்களில் என்ன கிடைக்கிறதோ, அவற்றை வாங்கி பிளாட்பாரத்தில் கடை போட்டு விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை ஈட்டிக்கொண்டு, அடுத்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.

ஒரு முறை பாலைவனத்தைக் கடந்து போகும் நிலை உருவாகிறது. அவர்கள் ஒரு கிராமத்தில் தங்கி, அடுத்து எப்படிப் பயணம் மேற்கொள்வது என்று யோசனை செய்கிறார்கள். ‘பாலைப் புயல்  வருவதற்குள் கடந்து போகாவிட்டால், புயல் உங்களை அடித்துக்கொண்டு போய்விடும்’ என்கிறார் அங்கே இருக்கிற கிராமவாசி. ‘பாலைப் புயலில் என்ன நடக்கும்?’ என்று ஆர்வமாகக் கேட்கிறார் குர்ஜீப். ‘பாலைவனத்தில் புயல் அடிக்கத் துவங்கினால், இருபது அடி உயரம் வரை மணல் மேலே சுற்றிக்கொண்டு வரும். அதனால், நடந்து செல்பவர் களை மணல் மூடிவிடும்’ என்கிறார் கிராமவாசி. குர்ஜீப் உற்சாகமாகி, ‘அப்படியானால் நாம் பாலைவனப் புயல் துவங்கியதும், நம் பயணத்தைத் துவக்கலாம்’ என்று சொல்லிவிட்டு, அங்கேயே தங்கி, இருபது அடி உயரத்துக்கு ஏணி போல ஒன்றைச் செய்து, அதன்மீது ஏறி நின்றபடி பாலைவனத்தில் நடப்பதற்குத் தினமும் பழகுகிறார்கள்.
முடிவில், பாலைப் புயல் உருவாகிறது. அவர்கள் தங்கள் கால்களில் மர ஏணிகளைக் கட்டிக்கொண்டு பாலைவனத்தில் நடந்து போகிறார்கள். தங்கள் காலடியில் புயல் கடந்து
போவதைக் கண்டதாகவும், புயல் நாம் நினைப்பது போல அச்சம் தரக்கூடியது அல்ல, அது ஒரு மூர்க்கமான அழகுடையது என்று குறிப்பிடும் குர்ஜீப், ‘சாகசம்தான் பயணத்தின் உண்மையான சுவை!’ என்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்குப் போவதற்காக, இது போன்றதொரு சாகசப் பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அதைச் சாகசம் என்று நானாகச் சொல்லிக்கொள்வதற்குக் காரணம், டவுன் பஸ் டவுன் பஸ்ஸாக மாறி சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்வது என நான் முடிவெடுத்ததுதான்.

பொதுவாக, டவுன் பஸ்ஸில் ஒரு மணி நேரம் செல்வதற்குள், அது இருபது இடங்களில் நிற்கும். மூச்சு திணறக் கூட்டம் தொற்றிக் கொண்டுவிடும். அப்படி யான பஸ்ஸில் மதுரை வரை போவதென்றால், அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அனுபவித்துப் பார்க்கத் தோன்றியது. மறுநாளே அதைச் செயல்படுத்த முடிவு செய்தேன்.

பயணம் கிளம்பும் முன் நானே சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன். டவுன் பஸ்ஸில் மட்டும்தான் போக வேண்டும். இரவில் டவுன் பஸ் ஓடவில்லை என்றால், எங்கே கடைசியாகச் செல் கிறோமோ, அந்த பஸ் ஸ்டாண்டில் இரவைக் கழிக்க வேண்டும். மறுநாள் காலை, முதல் டவுன் பஸ்ஸைப் பிடித்துப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.
பயணம் சைதாப்பேட்டையில் துவங்கியது. ஒரு டவுன் பஸ்ஸில் மாலை ஏழு மணிக்குப் புறப்பட்டேன். ஒரு மணி நேரத்தில் தாம்பரம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து வண்டலூர் வரை ஒரு பஸ், அங்கிருந்து செங்கல்பட்டு வரை ஒரு பஸ் என செங்கல்பட்டு போய்ச் சேர்வதற்குள் இரவாகி விட்டிருந்தது.

அங்கேயே பஸ் ஸ்டாண்டில் தங்கிவிடுவது என்று முடிவு செய்தேன். இரண்டாவது காட்சி சினிமாவுக்குப் போய்விட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் பாதி இருண்டுகிடந்த கொடிக்கம்பத்தின் முன் வந்து சாய்ந்து உட்கார்ந்தேன்.

வானில் அன்று எக்கச்சக்க நட்சத்திரங்கள். இரவுப் பேருந்து கள் கடந்து சென்றுகொண்டே இருந்தன. பக்கத்துக் கிராமங் களுக்குச் செல்லும் மனிதர்கள் ஒன்றிரண்டு பேர் துண்டை விரித்து ஓரமாக படுத்து உறங்கினார்கள். ஒரு பிச்சைக்காரன் எதிரேயிருந்த அடி பைப் ஒன்றில் தண்ணீர் அடித்து குளித்துக்கொண்டு இருந்தான். காற்று ஏகாந்தமாக இருந்தது. எப்போது உறங்கினேன் என்று தெரியாது.

விடிகாலையின் குளிர் உடலை நடுக்கிய போது, பொழுது விடிந்து, பேருந்து நிலையத் தில் முதல் பஸ்ஸின் வெளிச்சம் தெரிந்தது. பாதித் தூக்கத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூங்கிக்கொண்டே பஸ்ஸில் போய் இறங்கி, அங்கே அடுத்த பஸ்ஸைப் பிடித்து இன்னொரு ஊர் என கசகசப்பும் அசதியுமாக பயணம் நீண்டது. முதல் நாள் மாலை புறப்பட்ட ஏழு மணியையும் கடந்துவிட்டது. அப்போதும் நான் மதுரையை நெருங்கவில்லை. ஒன்பதரை மணிக்கு மேலூரைக் கடந்து, தொலைவில் மதுரையின் மெல்லிய வெளிச்சம் தெரியத் துவங்கியது.

மதுரைக்கு வந்து இறங்கியபோது மணி பத்தைக் கடந்துவிட்டிருந்தது. டவுன் பஸ் டிக்கெட்டுகள் யாவும் என் பையில் நிரம்பியிருந் தன. அப்படியே நண்பனின் அறைக்குச் சென்று கதவைத் தட்டியபோது, அவன் என்னை விநோதமாகப் பார்த்தபடி, ‘எங்கேயிருந்து வருகிறாய்?’ என்று கேட்டான். ‘சென்னையிலிருந்து’ என்று சொன்னதும் சிரிப்போடு, ‘எப்படி நடந்தே வந்தியா?’ என்று கேட்டான்.

இதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே என்று தோன்றியது. நான் சிரித்துக்கொண்டே பையில்  இருந்த டவுன் பஸ் டிக்கெட்டுகளை எடுத்துக் காட்டினேன். அவனால் நம்ப முடியவில்லை. எதற்காக இந்த முட்டாள்தனம் என்பதுபோல என்னைப் பார்த்துத் திகைத்துப் போயிருந்தான். குளித்துவிட்டு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டபடி ஏகாந்தமான காற்றை அனுபவித்தபோது, பயணத்தின் உண்மையான ருசி புலப்பட்டது.

எத்தனை விதமான மனிதர்கள், எவ்வளவு பேருந்து நிறுத்தங்கள், எத்தனை கிராமங்களின் பெயர்கள்... உண்மையில் அதிவேகமாகக் கடந்துவிடும் பயணம் என்பது இத்தனையும் இழந்துவிடுவது என்பது அப்போதுதான் புரிந்தது. கூட இருந்த என் நண்பன் சொன்னான்... ‘இப்படித்தானே நமது முன்னோர்கள் ஒரு ஊரைவிட்டு மற்றொரு ஊர் போயிருப்பார்கள்! நீ இந்தக் காலத்து ஆள் இல்லைடா... பழைய ஆசாமி!’ இருவரும் சிரித்துக்கொண்டோம்.

காலம் எவ்வளவோ மாற்றங் களைக் கொண்டுவந்தபடி உள்ளது. அதில் மிக முக்கியமானது வாகனங்கள். சாலை வசதி! இந்தியா முழுவதும் சுற்றி அலைந்தபோதும் தமிழகத்தில் உள்ளது போல இத்தனை அழகான பஸ்களையோ, முறையான சாலைகளையோ வேறு எங்கும் கண்டதில்லை.

அதிலும் இங்குள்ள சொகுசுப் பேருந்துகளைக் காணும்போது அதன் மதிப்பு நமக்குத் தெரிவது இல்லை. மற்ற மாநிலங்களில் பயணம் செய்யும்போதுதான், நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது புரியும்.

வட மாநிலங்களில் உள்ள பேருந்துகளும், பேருந்து நிலையங் களும் நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதபடி இருக்கும். டெல்லியின் புகழ்பெற்ற பேருந்து நிலையம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தின் அளவில்தான் இருக்கிறது. அதுவும் அங்கிருந்து கிளம்பும் நூற்றுக்கணக்கான அதிவேகப் புற நகர்ப் பேருந்துகளும் நமது லோக்கல் டவுன் பஸ்ஸைப் போன்றவை. அதன் சிவப்பு நிறமும், ஒருபோதும் மூட முடியாத கண்ணாடி ஜன்னல்களும் என்றும் மாறவே மாறாதவை.
மாநகர வாழ்க்கையில் ஒவ்வொரு வரும் சராசரியாக தினம் இரண்டு மணி நேரமாவது பயணம் செய்கிறார்கள். அதிலும் ரயிலும், பேருந்தும், ஆட்டோக்களும், கார்களும் பகலிரவு பேதமில்லாமல் சாலையைக் கடந்துகொண்டேதான் இருக்கின்றன.

சென்னையில் எவ்வளவு ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன என்று கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. ஆனாலும், சென்னை ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேசி முடிப்பது பெரிய கலை. அதில் விற்பன்னர் ஆவது எவருக்கும் சாத்தியமானதும் இல்லை.

‘ஹெராக்களிட்ஸ்’ஸின் புகழ்பெற்ற வாசகமான ‘ஓடும் ஆற்றில் இரண்டு முறை ஒரே இடத்தில் இறங்க முடியாது!’ என்பது போல, சென்னையில் ஒரே இடத்துக்கு, ஒரே வாடகை s.ramakrishnanகொடுத்து இரண்டு முறை பயணம் செய்த சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கவே இல்லை.

மாநகர வாழ்வில் ஆட்டோக்களைப் பிடிக்கும் சாகசம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் மனதில் நினைவோடுவது இந்திரா பார்த்தசாரதியின் ‘தொலைவு’ என்ற கதை. இந்திரா பார்த்தசாரதி பல வருடங்கள் டெல்லியில் வாழ்ந்தவர். அவரது இக்கதை, டெல்லியில் ஒரு அப்பாவும் பெண்ணும், ஒரு ஆட்டோ பிடிப்பதற்காக எப்படி அலைகிறார்கள் என்பதைப் பற்றியதே!

ஜன்பத்  டெல்லியின் போக்குவரத்து மிகுந்த இடம். அங்கே வாசுவும் அவரது ஏழு வயது மகள் கமலியும் தங்கள் வீட்டுக் குச் செல்ல ஒரு ஆட்டோ பிடிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். டவுன் பஸ் ஏறிப் போக முடியாது. அவ்வளவு கூட்டம். காலியாக ஏதாவது ஒரு ஆட்டோ வந்தால் அதில் ஏறிக்கொண்டுவிடலாம் என்று காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நேரம் ஆட்டோ கிடைக்கவே இல்லை.

மெதுவாக சாலையில் நடந்தபடியே ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று பார்த்துக்கொண்டே போகிறார்கள். டாக்ஸியில் போகலாம். ஆனால், அதற்கு மாத வருமானம் இடம் தரவில்லை. தனது குடும்பச் சுமையை நினைத்தபடியே வாசு மெதுவாக நடக்கும்போது, அவன் நண்பன் மூர்த்தி காரில் வருகிறான். அவன், தான் லோதி காலனி வழியாகப் போவதாகச் சொல்லி ஏறிக்கொள்ளச் சொல்கிறான்.

வாசுவுக்கு அது பிடிக்கவில்லை. காரணம், பால்ய வயதில் உதவாக்கரையாக இருந்த அவன் டெல்லிக்கு வந்து பெரிய ஆளாக மாறியிருப்பது வாசுவுக் குச் சற்றே பொறாமையை உருவாக்குகிறது. அதோடு, முன்பு சில முறை அவன் தன் னைப் பயன்படுத்தி தன் காரியங்களைச் சாதித்துக்கொள்ள முயன்றது நினைவுக்கு வரவே, அவனோடு செல்ல மறுக்கிறான்.
கமலிக்கு இது ஆத்திரமாக இருக் கிறது. அவள் நடந்தே போய்விடலாம் என்று ஆவேசம் கொண்டவள்போல வீம்பாக நடக்கிறாள். முடிவாக, ஒரு ஆட்டோ நிற்பதைக் கண்டு அவர்கள் காத்திருக்கும்போது, வேறு ஒரு பெண் வந்து அதில் ஏறிக்கொண்டு போய் விடுகிறாள். ‘நம் ஊரில் இப்படி ஆட்டோவுக்குக் காத்துக் கிடக்கவா செய்தோம்! பேசாமல் நடந்தே போய்விடலாம்’ என்று முடிவு செய்தபடி, அவனும் கமலியைக் கூட்டிக்கொண்டு வீராப்பாக நடக்கத் துவங்குகிறான் என்பதோடு கதை முடிகிறது.

மாநகரின் என்றும் மாறாத காட்சிகளில் ஒன்று இக்கதையில் துல்லியமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

போதி மரத்தில் ஞானம் பெற்ற புத்தனேகூட எண்பது வயது வரை நடந்து சுற்றி இருக்கிறான். கிறிஸ்துவும்கூட தேசம் விட்டு தேசம் அலைந்து திரிந்திருக்கிறார். உலகுக்கு வழிகாட்ட வந்தவர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பதில்லை. அல்லது, பயணம்தான் அவர்களை உலகுக்கு வெளிப்படுத்துகிறது.

சாலை நம் வாசலில் துவங்கி, முடிவற்று உலகமெங்கும் விரிந்தோடிக் கொண்டு இருக்கிறது. நமக்குத் தேவையானது எல்லாம் பயணம் போவதற்கான விருப்பமும் மனதும் மட்டும்தான்! கும்பகோணத்தில் 1930-ல் பிறந்த இந்திரா பார்த்தசாரதி தமிழின் தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளர். இவர் வைஷ்ண சித்தாந்தம் குறித்து ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது குருதிப்புனல் நாவலுக் காக 1978-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சிறந்த நாடகாசிரியர். நாடக உலகுக்கு இவர் ஆற்றிய சேவைக்காக சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். இப்படி இரண்டு முக்கிய தேசிய விருதுகள் பெற்ற ஒரே எழுத்தாளர் இவர் மட்டுமே! மழை, போர்வை போர்த்திய உடல்கள், நந்தன் கதை போன்றவை இவரது முக்கிய நாடகங்கள். பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை இயக்குநராக சில காலம் பணியாற்றியுள்ள இந்திரா பார்த்தசாரதி, தற்போது அமெரிக்காவாசி.

நன்றி: கதாவிலாசம், விகடன் பிரசுரம்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

கார்த்திக் பாலசுப்ரமணியன் on November 24, 2010 at 7:55 PM said...

ஏற்கனவே படித்தது தான் என்ற போதும் எத்தனை முறை வாசித்தாலும் சுவை குன்றுவதில்லை எஸ்.ரா-வின் எழுத்துக்களில். ராம் உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள் !

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்