Nov 25, 2010

அரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்

அரைக் கணத்தின் புத்தகம்

ஏய், நில், நில்லு-
சொல்லி முடிப்பதற்குள்
மாடிப்படிகளில் என் குட்டி மகள் SAMAYAVEL
உருண்டுகொண்டிருக்கிறாள்
பார்த்துக்கொண்டு
அந்த அரைக் கணத்தின் துணுக்கில்
அவள் உருள்வதை நான் 
பார்த்துக்கொண்டு மட்டும்.
அவளது சொந்த கணம்
அவளை எறிந்துவிட
அவள் உருண்டுகொண்டிருக்கிறாள்.
என் சகலமும் உறிஞ்சப்பட்டு
ஒன்றுமற்ற உடலமாய் நான்
அந்த அரைக் கணத்தின் முன்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு வீறலுடன் அக்கணம் உடைய
நெற்றியில் அடியுடன்
அழும் மகளை அள்ளுகிறேன்
- கணங்களின் மீட்சி
என் பிரபஞ்சத்தை சேராத
அந்த அரைக் கணத்தை ஒரு
நோட்டுப் புத்தகத்தில் குறித்துவைத்தேன்.
ஒரு சொடுக்கில், இழுப்பில், புரட்டலில்
முழுச் சித்திரமே மாறிவிடும்
வினோதப் புத்தகம் அது.

எங்களூர்ப் பறவை

எங்களூரில் ஆகாய விமானம்
இப்படி இல்லை
மெல்லிய ரீங்காரம் காதுக்குள் ஊர்ந்தது
குதூகலத்துடன் வெளியே ஓடி வந்து
அண்ணாந்து ஆகாயம் துழாவி கண்டுபிடிப்போம்
மிதக்கும் மேகங்களுள் புகுந்து
வெளிவரும் பொழுது
களிப்பில் கூச்சலிட்டுக் கத்துவோம் நாங்கள்

ஆனால் இங்கே, அப்பா, காதைக் கிழித்து
பீதியூட்டிப் பறக்கும் திமிங்கலங்கள்
யுத்த விமானங்களின் அணிவகுப்பாம்
விதம் விதமாய்ப் பறந்தார்கள்
புகைக் காடாய் மாறி கலங்கியது வானம்
விமானியின்றி தானே பறந்து
அரை நொடியில் இலக்கு தொடும்
சோனிக் அட்டாக் ஏஏ01
கம்பீரமாய் எழும்புகிறது
புல் பூண்டற்று அழிந்து புகையும்
நகரின் கூவல் கேட்டு
சிதறுகின்றன என் உள்மன அறைகள்

எங்களூர் ஏரோப்ளேன் இப்படி இல்லை
அது ஒரு சிறு பறவை
வானில் மிதந்து நீலம் பருகும்
வெள்ளிமீன் பறவை.

விளிம்பின் பாடல்

மணல் குன்றுகளின் தீக் கானல்
நெடுஞ்சாலைகளில் மாய நடனம்
ஈரத் தீயில் எரிகின்றன எல்லாம்

சறுக்குப் பாறைகளின் பெரு மௌனங்களில்
உறைந்து மலைகளாகும் வெளியின் பாடல்
துருவ விளிம்புகளில் கீறி உடைகின்றன
பனிமலைக் கடல்கள்

நூற்றாண்டுகளின் நீண்ட கண்ணிகளில்
ஒரு தற்காலிக ஏற்பாடாய்
மின்னி மறையுதே உன் இப் பிறவி

நதிகள் தூங்கும் ஏரிகளில் படர்ந்த
ஓரிலைத் தாவரம் பெரும் விருட்சங்களாகி
காடாய் விரிய அடியில் நீந்திக் குளித்து
அலைந்து திரியுமே விநோத உயிர்கள்

பொங்கிய சமுத்திரத்தின் மரணத் தடங்கள்
அழித்து எழுதும் புதிய புவியியல்
கத்தும் குழந்தையின் அழுகையில்
உலர்ந்து உலருதே ஊடலும் கூடலும்

தெள்ளத் தெளிவாக முழு முற்றாக
எல்லாம் புரியும் நொடியில்
தலையை அடித்துப் பறக்கிறது கருங்காக்கை

கனிகள் குலுங்கும் பசுங்கொடிகள்
கால்களைப் பின்ன மீண்டும் துளிர்க்கும்
உயிரின் இலைகள்

ஆ, இருப்பதும் இறப்பதும் ஒன்றே அல்லவா?


அவளது மழை

பயனற்ற அவனுடன்
துவண்ட இரவு
தராத தூக்கம்
தினமும் தொலைந்தது

மார்பில் ததும்பும் தீயில்
எந்தப் பண்பாட்டையும்
எரிக்க முடியும்

அழுது விம்மி
கலங்கும் இதயம்
கேட்டு அலைகிறான்
தோழன்

சாட்டை சுழற்றும்
அவர்களின்
கள்ளப் பார்வைகள்
அறிவேன் நான்

பள்ளத் தாக்கில்
புதர்கள் அடியில்
அறியாப் பூக்கள்
பூத்துக் கிடக்கும்
இரகசிய வழிகளில்
நடந்து திரிவேன்

எனது இரவை
நானே புனைந்து
தோழன் கனவில்
நுழைந்து தூங்குவேன்

எனது முற்றத்திலும்
பெய்கிறதே மழை

எப்பொழுதும்

தாம் தீம்
தக்கத் திமிதீம்
ஒருவன்

தூம் தூம்
தும்கிட தும்கிட
தூம் தூம்
மிரு
தங்கம்

தீம் தீம்
திக்கிட திக்கிட
ஒருவன்
மிருதங்கம்

தும் தும்
துமுக் துமுக்
வாசித்துக்

கும் கும்
குமுகுமு குமுகுமு
கொண்டே

இதும் இதும்
இம்தம் இம்தம்
இருக்கிறான்

ஆச்சரியம்

அடிவானத்தின் உயிர்ப்பு மரிப்பதில்லை ஒருபோதும் அங்கே
அந்தப் பொன்நிற வட்டவில் மாய முகம்
கௌவி இழுக்கிறது முழுவதுமாக என்னை
என் விருப்பப்படி எந்த ஆனந்தத்தையும்
அங்கிருந்து அள்ளி எடுக்க முடியும்
நான் பனங்காய் வண்டி உருட்டி விளையாடிய காலம்
அங்கே தான் புதைந்திருக்கிறது ஒரு
கரிபடர்ந்த இருட்டு சமையலறையில் நான்
தழுவி முத்தமிட்ட வேணியின் கன்னம்
அங்கே தான் ஒளிந்திருக்கிறது
என் களி நடனமிடும் அகத்தி மரங்களை
அங்கு தான் நட்டு வைத்திருக்கிறேன்
மஞ்சள் பூக்களோடு பெரிய பெரிய இலைகளோடு
என் பூசணிக்கொடி அங்கே தான் படர்ந்திருக்கிறது
ஆச்சரியம் அது நமது
எல்லோரது அடிவானமுமாக இருப்பதுதான்.

நன்றி: உயிர்மை, காலச்சுவடு

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

கார்த்திக் பாலசுப்ரமணியன் on November 25, 2010 at 8:05 PM said...

அருமையான கவிதைகள் !

cheena (சீனா) on November 26, 2010 at 7:37 AM said...

அருமை அருமை - கவிதை - ஆகாய விமானம் பற்றிய கவிதை மிக அருமை. வானில் மிதந்து நீலம் பருகும் வெள்ளிமீன் பறவையினை எதிர் பார்த்துச் சென்று யுத்த விமானங்களின் கொடுமையினைக் கண்டு பதறிச் சிதறும் உள்மன அறைகள். அடடா அடடா .....பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் ராம்பிரசாத்

KANA VARO on November 26, 2010 at 7:49 AM said...

கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி

Saravanan Murugan on July 15, 2020 at 10:44 AM said...

அருமை

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்