Nov 14, 2010

நகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல்-சாரு நிவேதிதா

நகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல்

(கோட்ட விளையில் நடந்த `வானவில் இலக்கிய வட்டம்' கருத்தரங்கில் மார்ச் 28 , 1999 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரை)

மேலோட்டமான பார்வையில் நகுலனின் கதைகள் மிகவும் எளிமையாகவும், சுய சரிதச் சம்பவங்களாகவும், சுலபத்தில் `இலீடேட்' செய்யக் கூடியனவாகவும் தோற்றம் தந்தாலும் அது ஒரு மாயத் தோற்றம் தான். இந்த எளிமைக்குப் பின்னால் மனித வாதை குறித்த பெரும் துக்கம் `ஹம்பி' இடிபாடுகளாய் விரிந்து கிடக்கிறது. மனிதத் தனிமை குறித்த அவல உணர்வு இருக்கிறது.nAGULANE மனித வாழ்வைக் குறித்த எக்ஸிஷ்டென்சியல் ஆங்கஸ்ட் இருக்கிறது.

இவனைத் தவிர வேறு ஒரு ஆத்மா யாருமில்லை, தெரு நாயைத் தவிர.

பொதுவாக மனிதர்களுடனே அதிகமாக ஒட்டிப் பழக வேண்டுமென்ற நிலையை அவன் உணரவில்லை.

ஆனால் நாய்கள் அவனைச் சூழ்ந்திருந்தன. லிஸ்ஸி, யும்மி, வால்டர், அச்சுதன் என்று நாய்களின் வரலாற்றை அவன் எழுதிக் கொண்டிருந்தான். அவன் அருகே அச்சுதன் படுத்துக் கொண்டிருக்கிறது. அது படுத்துக் கொண்டிருப்பதைப் போல அவன் எழுதிக் கொண்டிருக்கிறான்.

காலம் காலமாக வார்த்தைகள் அர்த்தத்தை வெளியிட முடியாத நிலையில் தத்தளிக்கின்றன.

தெருவில் ஒரு நாய் எலும்பும் தோலுமாக நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு ஓடிப்போய்க் கொண்டிருப்பதை அர்த்தமில்லாமல் பார்த்தான்.

எதையெதையோ தேடிச் சலித்து செத்து மடியும் மனிதக் கூட்டத்திலிருந்து விலகி விட முற்பட்டுத் தனித்து அலையும் நகுலன் பல்வேறு ரூபங்கள் கொள்கிறான்.

எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத வேதனைகளையெல்லாம் புன்முறுவலுடன் சகித்துக் கொள்ளும் பேரன்பின் வடிவமானதாய்.

அவள் கைகளைப் பற்றிய படி மனிதர்களை வேடிக்கை பார்க்கும் சிறுவன், நாய்கள், சிவன், ஹரிஹர சுப்ரமணிய ஐயர், பிராந்தி குடிப்பவன், சுசீலாவின் காதலன், எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பவன், சைக்கிளில் ஊர்சுற்றிக் கொண்டிருப்பவன், தன் அறையில் சுழல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்காகக் கண் எட்டியவரை கொல்லையைப் பார்த்துக் கொண்டிருந்தான். 6 மணி வரை பார்த்துக் கொண்டிருப்பான். பிறகு வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பான்.

மறுபடியும், என் அறைக்குள் நான் புகுந்து விட்டேன். குழந்தை இல்லை, கவிதை இல்லை, நான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.

அறை மாத்திரம் இருந்தது.

திராவிட எழுச்சியால் பிராமண எழுத்தாளர்களுக்குள் பீதி உணர்வை இலக்கியமாக்கியவர்களுள் நகுலனும் ஒருவர். ஆனால் மற்றவர்களுக்கு இந்த பரோநோயா விலிருந்து தப்பித்துக் கொள்ள ஓரளவேனும் ஆசுவாசம் பெற குடும்பம் இருந்தது. இலக்கியத்தில் ஓரளவு ஐரோப்பியப் பார்வை இருந்தது.

ஆனால் நகுலனுக்கு இத்தகைய பாதுகாப்புகள் இல்லை. பெருவெளியில் தனியாக விடப்பட்ட இவருக்குக் கிடைத்த பற்றுதல்களுள் ஒன்றான எழுத்தும் இவரை பரோநோயா விலிருந்து விடுவிக்கவில்லை.

லிஸ்ஸி தான் அவன் நினைவில் வரும் முதல் நாய், அது அவன் வாழ்க்கையில் புகுந்த சமயம் அவன் இல்லை. அவன் தாயார் மூலம் தான் அவனுக்கு லிஸ்ஸியின் விவரம் தெரியும். இந்தக் காலண்டரும் அவன் தாயார் சுட்டிக் காட்டியதன் மூலம் தான். இன்று அவனெதிரில் அச்சுதன் இருக்கிறது. லிஸ்ஸியும் இல்லை. அவன் தாயாரும் இல்லை.

பாரதி மனதைக் கொல் என்றான். ஆனால் என் கண்முன் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பணக்காரன் ஏழை என்ற படி ஆயிரம் ஆயிரம் தம்பதிகள் தலைகளைத் தாழ்த்திக் கொண்டு பிரேத ஊர்வலம் போல் நகர்வதைப் பார்த்தேன். வாசகா, என்னை மன்னித்து விடு. நான் வெறும் ஒரு எழுத்தாளன். என்னால் எதையும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. நான் எழுதுவது உனக்குப் புரியவில்லை என்கிறாய். எனக்கு மாத்திரம் புரிகிறது என்று நினைக்கிறாயா? அல்லது புரிந்து விட்டால் தான் என்ன? எது ஒன்று நமக்குப் புரிகிறது என்று நினைக்கிறோமோ அதுவே அடுத்த கணம் புதிராக மாறும் அனுபவம் உனக்கு ஏற்பட்டதே இல்லையா? இல்லை என்றால் நீ பாக்கியசாலி.

அம்மா போன பின் எப்பொழுதுமே என்னுள் ஒரு வெறுமை உணர்ச்சி.

எழுத்து எங்கே எல்லாமோ என்னைக் கொண்டு செல்கிறது.

சாவதற்கு முன் சமாதி அடைய விரும்புகின்றேன்.

என்னவோ எழுதுகிறேன். எதையோ செய்கிறேன் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்.

இவன் நிறந்தது முதல் இறக்கும் வரை தனியாகவே இருந்தான். இருப்பான் என்பது இவனுக்குத் தெரியாததில்லை.

எங்கிருந்தோ வருகிறோம். எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம். நடுவில் பல தடுமாற்றங்கள்.. இவனுக்கு எல்லாமே ஒரே குழப்பமாக இருந்தது.

புறாக்கூடு போன்ற சிற்றறைகளில் லோகாயதம் என்ற பேரேட்டின் தஸ்தாவேஜூக்களைச் சிவப்பு நாடாவில் கட்டி வைத்து விசிறி சுழலும் ஒரு அறையில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கப் பிணம் போன்ற மனிதர்கள், வரிசை வரிசையாக நிற்கிறார்கள்.

இந்த பரோநோயா இவரை இவரது சமகாலத்தில் எழுத்தாளர்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் இட்டுச் சென்றிருக்கிறது. ஆதி மனிதனின் வியப்புடனும் அதே சமயம் ஒரு துயரம் தோய்ந்த எள்ளலுடனும் லௌகீகத்தை ஒதுக்கி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார் நகுலன். வேடிக்கை அலுக்கும் போது கசப்பு பிராந்தியை அருந்துகிறார்.

சொற்கூட்டங்களிடையே அலைந்து திரிகிறார் தன்னிலிருந்து தானே நிரிந்து நின்று தன்னையே மற்றவனாகப் பார்க்கிறார்.

எழுத்து நெடுகிலும் தன்னைப் பற்றியே சொல்வதான தோற்றம் தந்தாலும், இவர் சிருஷ்டி கர்த்தா என்ற பாத்திரத்திலிருந்தும் கழன்று கொண்டு விடுகிறார்.

காலாதீதமாகத் தொடர்ந்து பேருண்மைகளைத் தேடும் ஆதி மனம் எங்கெங்கோ தனது வேர்களை விட்டுச் சென்றிருக்கிறது. மகா பாரதம், கிரேக்கத் தொல்கதைகள் போல.

charuniveditaஇவற்றில் ஒன்று தான் வேதங்கள், தொல் சமூகங்களின் அறிவுச் சேகரம், அந்த வேத காலத்து ரிஷியைப் போல் போய்க் கொண்டிருக்கிறார் நகுலன்.

எனக்கு எப்பொழுதுமே ஒரு விசித்திர அனுபவம் உண்டு. அதாவது, கண்ணாடி முன் நான் என்னையே பார்த்துக் கொண்டு நின்றால், கண்ணாடியில் காணும், உருவமும் நானும் ஒரே ஆள் தானா என்று என்னையே நான் கேட்டுக் கொள்வதுண்டு.

நான் மீண்டும் ஒரு அத்தியாயத்தைப் புரட்டி விட்டு இன்னொரு அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றேன். அதனால் தான் என் நிழல் எங்கும் என்றும் விழுகின்றது. என் மூலம் வார்த்தைகள் வாக்கியங்கள் ஆகாவிட்டாலும், எழுத்தும் எண்ணமும் என்று முடிகின்றனவோ அன்று தான் என் கடைசி அத்தியாயம் முடியும். அது வரையில் வீட்டு வாசலில் நின்று கொண்டு வருபவரையும் செல்பவரையும் பின் தொடர்ந்து மடங்கி உட்சென்று உய்கின்றேன்.

நகுலன் எழுத்துக்களில் நகுலன் இல்லை,

சொல் இல்லை,

நான் இல்லை,

நீ இல்லை,

அது அவள் நாய் எதுவுமில்லை,

இருப்பது வேத மனத்தின்

சிருஷ்டி லயம்.....

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

சைக்கிள்காரன் on July 1, 2012 at 4:04 AM said...

நகுலனை முழுக்க படித்து உணர்ந்தவரால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும், சாரு ஒரு தேர்ந்த வாசகன் என்று நிருபித்துவிட்டார்.

சந்திரா மகன் on July 3, 2012 at 1:08 PM said...

நகுலன் நீஎன்றால் நீயும் இல்லை
நான் என்றால் நானும் இல்லை
அருமை...

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்