Dec 1, 2010

அந்தர நதி ரமேஷ் - பிரேம்

அந்தர நதி

பேரழுகையின் உப்பு நதியில்
வழி தவறிச் சேர்ந்த
பாய்மரத்தில் நான்
இந்தப் பாய்மரம் பல நூற்றாண்டுகளாகக் ramesh-prem
கரை தொட்டதில்லை
என்னைக் கடந்து செல்லும் பறவையே
உனது கேவல் எதற்காக
தரைதொடாத உனது பயணமே
எனது பாய்மரத்திற்கு வழிகாட்டலாய் அமைய
என்னைக் கடந்து செல்லும் பறவையே
எனது கால்களுக்குக் கீழேயும்
தலைக்கு மேலேயும் 
விரிந்து நீளும் நீல நதிகள்
யாரின் பேரழுகையில் நாம்
மிதந்து செல்கிறோம்
நூற்றாண்டுகளாக.

ரயில் நிலையத்தில்

ரமேஷ் பிரேதன்

எனக்குத் தெரியாது
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே
அதீதன் செத்துவிட்டது
கடந்த ஆறு ஆண்டுகளாக
அவனுக்கு நான் தொடர்ந்து
கடிதம் எழுதி வருகிறேன்
நேற்று ரயில் நிலையத்தில்
அடையாளம் தெரியாத தோற்றத்துடன் இருந்த
ஆத்மார்த்தியை உற்றுணர்ந்து
பேசிய பொழுதுதான் செய்தி தெரிந்தது

அவன் செத்து ஆறு ஆண்டுகள் ஆனபோதும்
மீண்டும் பிறந்து
மூன்று ஆண்டுகளாவதாகச் சொன்னாள்
என்னை வேதனையோடு பார்த்து
நீ ஏன் இன்னும் சாகவில்லை என்று கேட்டாள்

இளம் புன்சிரிப்போடு கைகுலுக்கி
விடைபெற்றேன்
போன நூற்றாண்டில் என்னோடு செத்தவர்களை
ஏற்றிக்கொண்டு
எனக்கான ரயில் வந்த பிறகு.

 

புலி

ரமேஷ் பிரேதன்

அவன் என்னை விட்டுப் போய்விட்டான்
சிறுத்தையாக நான் இருந்தபோது
என்னுடன் பழகியவன்
எனது புள்ளிகள் கோடுகளாக வழிந்து
நான் புலியாக மாறியவுடன்
என்னை விட்டுப் போய்விட்டான்

புலி ஒரு அரசியல் விலங்கு
அதிலும் தமிழ் விலங்கு என்றவுடன்
என்னை விட்டுப் போய்விட்டான்

எனது கோடுகள் வளர்ந்து கம்பிகளாகிவிட
நான் கூண்டுக்குள் இருக்கிறேன்
கூண்டாகவும் இருக்கிறேன்

மூன்றுமுறை தப்பித்தேன்
நடுக்கடலில் சுடப்பட்டேன்
ஒவ்வொரு முறையும் செத்துப் பிழைத்தேன்
என் கனவில் விரியும் தென்புலக் கடலில்

அவனுக்கும் எனக்குமிடையே ஒரு கடல்
கொஞ்சம் சொற்கள்
நிறைய ஆயுதங்கள் மற்றும்
மக்கிப்போன பழைய முத்தங்கள்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

கார்த்திக் பாலசுப்ரமணியன் on December 1, 2010 at 7:09 PM said...

நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் ராம் !

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்