Dec 7, 2010

கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்-இந்திரா பார்த்தசாரதி

சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படியான சோதனை எனக்கு ஒரு தடவை ஏற்பட்டது. அவர் எழுதியிருந்தார்: 'கண்ணகி பழங்குடிமகளிர் வழி வந்த பச்சைத் தமிழ்ப்பெண். மழலைப் பருவத்திலேயே தமிழிப் பண்பாம் கற்பு நெறி உணர்ந்த பொற்பின் செல்வி. எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஆரணங்கு..... '

'மழலைப் பருவத்திலேயே தமிழ்ப் பண்பாம் கற்புநெறி உணர்ந்த பொற்பின்IndiraParthasarathi செல்வி ' என்ற வரிதான் எனக்கு மிகவும் தொந்தரவு கொடுத்தது. பச்சைத் தமிழ்ப் பெண் குழ்ந்தைக்கு மழலைப்பருவத்திலேயே கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால்,  ஃப்ராய்ட் இதைப்பற்றி என்ன சொல்லுவார் என்று சிந்தித்துப் பார்த்தேன்.... மேலும் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அக்குழந்தை என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியும் ? இருபத்திநாலு மணி நேரமும் ஜட்டியைக் கழற்றாமலிருக்கலாம். கண்ணகி காலத்தில் ஜட்டி இல்லை என்றால், அரசயிலை தவறிப்போய்க்கூட ஒதுங்கக் கூடாது என்று கவனமாக இருக்கலாம்.... நான் என் சிந்தனையை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, அவர்கள் சிரித்ததுதான். பழைய இலக்கியங்களைப் பற்றித் தமிழ்ப் 'பைத்தியக்காரத்தனம் ' ஏதுமில்லாமல், நல்ல இலக்கியக் கட்டுரைகள் எழுதினால், இதற்கு வரவேற்பு இருக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படக் காரணமாயிற்று.

சிலப்பதிகார ஆசிரியராக இளங்கோவடிகள் (டாக்டர் கலைஞரோ அல்லது ம.பொ.சி.யோ அல்ல.... சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழ்நாடு ஆளுநர் திரு. கே.கே. ஷா ஒருவரைக் கேட்டாராம், 'நீங்கள் கலைஞர் எழுதியுள்ள சிலப்பதிகாரம் என்ற காவியத்தைப் படித்திருக்கிறீர்களா ? ' என்று .... அதனால்தான் 'இளங்கோவடிகள் ' என்று வற்புறுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது) இந்நூலை எழுதியதன் மூலம் பல புரட்சிகளைச் செய்திருக்கிறார். தன்னேரில்லாத் தலைவன்தான் காவியத் தலைவனாக இருக்க வேண்டுமென்ற கொள்கையை மீறியிருக்கிறார்; கோவலன் பலஹீனங்கள் நிறைந்த சாதாரண மனிதன். காவியத் தலைவியை ஒரு வண்ண மற்ற இயந்திர மங்கையாகக் காட்டிவிட்டு, இன்னொரு பெண்ணுக்கு (மாதவிக்கு) ஏற்றம் அளித்திருக்கிறார். இந்த இரண்டாவது கருத்தை வற்புறுத்துவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

இளங்கோவடிகள் மூன்று உண்மைகளை நிலைநாட்டத்தான் சிலப்பதிகாரம் எழுதினார் என்று பதிகத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்லப்படும் தவறான கருத்தை நாம் முதலில் மறந்தால்தான். இந்நூலை நாம் இலக்கிய ரீதியாக அணுக முடியும். பதிகம் எழுதியவர் இளங்கோவடிகள் அல்லர் என்பது பதிகத்தையும் நூலையும் தெளிவாகப் படித்தால் விளங்கும். 1971. சிலர் சிலப்பதிகாரத்தை எழுதியவர் கலைஞரா அல்லது ம.பொ.சியா என்று ஐயுறும் போது, நிதி அரிப்பு உடைய ஒருவன் இந்தப் பதிகத்தை எழுதி சிலப்பதிகாரத்தில் ஏதோ ஒரு காலத்தில் ஏன் சேர்த்திருக்கக்கூடாது ?-- நடை வித்தியாசங்களுக்கு இக்கருத்தைத்தான் வலியுறுத்துகிறது.

இளங்கோவடிகள் விதியில் நம்பிக்கையுடையவர் என்பதை நான் மறுக்கவில்லை... இக்காவியத்தில் கிரேக்க நாடகங்களில் அழுத்தமாகச் சொல்லப்படும் 'விதியின் இன்றியமையாமை ' என்ற பண்பு மேலோங்கியிருக்கக் காண்கிறோம்... இதற்கு என்ன காரணம் ? ஒவ்வொருவருடைய குண அமைப்பே அவருக்கு விதியாக அமைந்துவிடுகிறது என்ற கொள்கையுடையவர் இளங்கோவடிகள்.

சிலப்பதிகாரத்தை ஆழமாகப் படிக்கும் போதுதான் இளங்கோவடிகளின் அனுதாபம் கண்ணகிக்கு இல்லை என்ற உண்மை தெரிய வரும். கண்ணகியின் குணச் சித்திரத்தை அவர் எப்படி அமைத்திருக்கிறார் ?

காதல் செய்து திருமணம் செய்துகொள்ளக்கூடிய தகுதி கண்ணகிக்குக் கிடையாது என்று காட்டுவதுபோல், பெற்றோர்களே தீர்மானம் செய்த கோவலனுக்கும் கண்ணகிக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக ஆரம்பத்திலேயே காட்டப்படுகிறது. வடநாட்டுக் கதையை எழுதிய கம்பன், இராமனுக்கும் சீதைக்கும் காதல் திருமணம் செய்து வைத்துத் தமிழ் மரபைக் காப்பாற்றும்போது, இளங்கோவடிகள் ஏன் இவ்வாறு செய்யவில்லை யென்பதற்கு இதுதான் காரணமாக இருக்க வேண்டும். கோவலன் திருமணத்துக்கு முன்பு கண்ணகியைப் பார்த்திருந்தானால், அவன் அவள்பால் நிச்சயமாகக் காதல் கொண்டிருக்க மாட்டான். அவன் அவள்பால் காதல் கொள்வதற்கான பண்பு ஒன்றும் அவளிடத்துக்கிடையாது.

இளங்கோவடிகள் கண்ணகியை எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார் என்று பாருங்கள்:

'போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்

தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்

மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலார் பெயர் மன்னும் கண்ணகி என்பாள். '

அவளுடைய வடிவத்தைப் பற்றி ஒரு வரியிலே சொல்லிவிட்டு, அவளுடைய குணத்தைப் பற்றித்தான் அதிகமாகச் சித்தரித்துக் காட்டுகிறார். அருந்ததிபோல் கற்புடையவளாக இருக்கவேண்டும் என்பதுதான் கண்ணகியின் 'அப்ஸெஷன் '. இப்படி அவள் இருப்பதற்கான வாய்ப்பைத் தந்த ஒரு சாதனமாகத்தான் அவள் திருமணத்தை நினைக்கிறாள்.

முதல் இரவிலேயே கோவலனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அவன் ஒரு கலாரஸிகன். கற்பனை மிகுந்தவன். அவன் ஓர் இலட்சியப் பெண்ணை மனத்தில் உருவகித்துக் கொண்டு, அவள்தான் கண்ணகி என்று பாவித்து அவளுடைய நலங்களையெல்லாம் பாராட்டுகிறார்.

மாசறு பொன்னே வலம்புரி முத்தே

காசறு விரையே கரும்பே தேனே

அரும்பொற் பாவாய் ஆருயிர் மருந்தே

பெருங்குடி வணிகன் பெருமட மகளே

மலையிடைப் பிறவா மணியே என்கோ

அலையிடைப் பிறவா அமுதே என்கோ

யாழிடைப் பிறவா இசையே என்கோ

கண்ணகி வடமீனின் திறத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த காரணத்தினாலோ என்னவோ அவள் வாய் திறந்து இதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், மெளனமாக இருக்கிறாள். ஒரு பொம்மையைத் திருமணம் செய்துகொண்டு விட்டோமோ என்ற சந்தேகம் கொண்ட கோவலன் மாதவியை நாடியதில் ஆச்சர்யமில்லை.

கண்ணகி கோவலனுடன் நெருங்கி அளவளாவியதாகக் 'கொலைக் களக்காதை ' வரை எங்குமே காட்டவில்லை ஆசிரியர். இன்னும் சொல்லப் போனால், தேவந்தி என்ற பார்ப்பனப் பெண்ணிடம் தன் கனவைக் கூறுமிடத்தைத் தவிர, கணவனைப் பிரிந்த துயரத்தைத் தனக்கு ஒரு பெருமையாகக் கொண்டு அவள் வாளாயிருப்பதைத்தான் இளங்கோவடிகள் சுட்டிக் காட்டுகிறார். சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற பெயருடைய துறைகளில் மூழ்கிக் காமவேள் கோட்டம் சென்று தொழுதால் பிரிந்த கணவனை மீண்டும் அடையலாம் என்று தேவந்தி அவளிடத்துக் கூறும்போது, அது 'பீடன்று ' என்று சொல்லிக் கண்ணகி மறுத்துவிடுகிறாள். கோவலன் திரும்பி வந்துவிட்டால் தன் கற்புநெறியை உலகுக்குக் காட்ட முடியாமல் போய்விடுமோ என்று அவள் அஞ்சியதாகத் தெரிகிறது.

ஆனால் கோவலன் அவள் தேவந்தியிடம் பேசிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் மாதவியை விட்டு நீங்கி அவளை அடைகிறான். கலைஞர்களுக்கே உள்ள ஒரு நிலை கொள்ளா மனமுடையவன் கோவலன். தான் அநுபவிக்கும் பொருள் தனக்கே மட்டும் உரியதாக இருக்க வேண்டும் என்று ஆக்ரமிப்பு மனப்பான்மை அவனுக்கிருந்தது. மாதவி கோயிலில் சென்று பலர் முன்னிலையில் நடனமாடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அத்தகைய சந்தர்ப்பமொன்றில்தான் அவன் கோபத்தைத் தணிக்க மாதவி அவனைக் கடலாட அழைத்துச் சென்றாள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் அங்கும் அவன் சினத்தின் செறிவை உணராமல், வழக்கம்போல் அவன் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு ஒன்று அவள் பாடப்போய், அவன் அவளைப் புறக்கணித்துக் கண்ணகியிடம் வந்துவிடுகிறான். கோவலன் எவ்வளவு எளிதாக உணர்ச்சி வயப்படுகிறான் என்பதை ஆசிரியர் இதன் மூலம் காட்டுகிறார்.

கோவலன் கண்ணகியிடம் வந்து மாதவியைத் தூற்றுகிறான். 'சலம் புணர் கொள்கைச் சலதி ' என்கிறான். பிறகு, பழைய நினைவுகளைத் தூண்டும் பூம்புகாரில் இருப்பதை விட மதுரைக்குச் சென்று புதிய வாழ்வு தொடங்குவோம் என்று மனதில் கருதி அவளை உடனே புறப்படும்படி பணிக்கிறான். கணவனை கணவனாகக் கண்டு அவன்பால் காதல் கொண்ட ஒரு பெண் எப்படி நடந்துகொண்டிருப்பாள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வளவு நாட்கள் தன்னைவிட்டுப் பிரிந்திருந்ததற்காக முதலில் சீறியிருப்பாள். இதைத்தான் கோவலன் அவளிடம் எதிர்பார்த்தான்.

ஏனென்றால் 'கொலைக்களக் காதையில் ' அவன் அவளைக் கேட்கிறான். 'இவ்வளவு துன்பம் நான் உனக்குச் செய்திருந்தும், அன்று பூம்புகாரில் நான் மதுரைக்குப் புறப்படு என்றதும், புறப்பட்டு விட்டாயே, என் செய்தனை ? ' கண்ணகி பூம்புகாரில் தன்னிடம் கோபங்கொள்ளவில்லை என்பது அவன்மனத்தை உறுத்திக் கொண்டே இருந்திருக்கவேண்டும். அவள் கோபங்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அவள் கோவலனின் மனநிலையைப் பற்றிக் கவலைப்படாமல், தன் சிலம்புகளை எடுத்துக்கொண்டு அவன் மறுபடியும் மாதவியிடம் போனால் தனக்கு எந்தவிதமான தடையுமில்லை என்பது போல் பேசுகிறாள். தன்னுடைய பழைய வாழ்க்கைக்காக வருந்தி அவன் மனம் விட்டு பேசும்போது, 'உங்களைவிட நான் எவ்வளவு உயர்ந்தவள் ' என்று காட்டுவது போல் அவள் பேசியதுதான் அவனுடைய எரிச்சலுக்குக் காரணமாக இருக்கவேண்டும். 'சரி உன் சிலம்புகளை எடுத்துக்கொண்டு வா, அவற்றை விற்று இழந்த பொருள்களை மீண்டும் பெறுவோம் ' என்று வியாபார மொழியில் அவன் பதில் கூறுகிறான்.

மதுரைக்கு இருவரும் புறப்பட்டுப் போகும்போது, நடு வழியிலேயே அவள்பால் சலிப்படைந்த அவன் அவளைப் பிரிந்துவிடக்கூடாதே என்ற ஒரு பாதுகாப்பு நிலையாகக் காவுந்தி அடிகள் வந்து சேர்கின்றார். கோவலனும் கண்ணகியும் தனித்து இருப்பதற்கான பல வாய்ப்புக்கள் ஏற்பட்டாலும், கோவலன் மனம் அவளுடன் ஒட்டவில்லை. அவன் கண்ணகியிடத்து பேசுவதைக் காட்டிலும், கவுந்தி அடிகளிடந்தான் அதிகம் பேசுகிறான். புறஞ்சேரி இறுத்த காதையில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. கோசிகாமணி கோவலனிடம் மாதவி தந்த ஓலையைக் கொடுக்கிறான்; அவள் அந்த ஓலையைத் தன் கூந்தலில் ஒற்றி அனுப்பியிருந்த காரணத்தால், அவ்வோலையின் நறுமணத்தை மோந்தளவில், மெய்மறந்து நிற்கிறான் கோவலன்.

பழைய நினைவுகள் எழுகின்றன. ஏட்டைப் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. 'சலம்புணர் கொள்ளச் சலதி ' என்று மாதவியை ஏசியவனுக்கு அவளோடு நடத்திய இன்ப வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கட்டிய மனைவி என்ற காரணத்தினால் கண்ணகியோடு இன்ப வாழ்க்கை நடத்த வேண்டுமென்று கடமையுணர்வின் பொருட்டு அவன் முயன்றாலும், கண்ணகி அதற்கு இடங்கொடுக்கவில்லை. கணவனை மனிதன் என்று மறந்து தெய்வமாக ஏற்று, தானும் கற்புத் தெய்வமாக வேண்டுமென்ற ஆவேசத்தில், ஒதுங்கியே வாழ்கிறாள். மாதவி அனுப்பிய கடிதம் அவனை மறுபடியும் பழைய கோவலனாக மாற்றிவிடுகிறது. மனத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. வழியில் கண்ட பாணர்களிடம் யாழை வாங்கி, யாவரும் வியக்கும்படியான அளவுக்கு இசையைக் கூட்டுகிறான். கோவலனுக்கும் கண்ணகிக்கும் எந்த அளவிலும் மனப்பொருத்தமில்லை என்று மிக நுண்மையான முறையில் காட்டுகிறார் இளங்கோவடிகள்.

கண்ணகி 'கொலைக்களக் காதையில் ' கோவலனிடம் கூறுகிறாள்: ' நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்ததைப் பற்றிக்கூட நான் அதிகமாக வருந்தவில்லை... ஆனால் நீங்கள் என்னை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள் என்பதற்காக நான் வருத்தத்துடன் தோன்றினால் உங்கள் பெற்றோர் வருந்துவார்களே என்று நான் புன்னகையுடன் இருக்கத் தொடங்கினேன்.

ஆனால் தாங்கள் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக இந்தப் பெண் பொய்ப் புன்னகையுடன் இருக்கிறாளே என்று அவர்கள் மனம் இன்னும் அதிகமாக வருந்தும்படியான அளவுக்கு நீங்கள் தவறான ஒழுக்கத்தில் ஈடுபட்டார்கள்... நான் ஒரு கற்புடைய பெண். என்னைப் பொறுத்தவரையில் நான் நடந்துகொண்டதுதான் எனக்கு நியாயமாகப் படுகிறது.. ' தான் ஒரு கற்புடைய பெண் என்பதை வலியுறுத்தி, கோவலன் பிரிந்தது தன் கற்பைக் காட்ட ஒரு வாய்ப்பாக இருந்தது போல் அவள் பேசுகிறாள். கோவலன் தவறாகக் குற்றஞ் சாட்டப்பட்டுக் கொலையுண்டு இறந்தான் என்று கேள்வியுற்ற அவள், மதுரை வீதிகளில் அரற்றிக்கொண்டு வரும்போது கூறுகிறாள்:

 

பெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டு கொல்

கொண்ட கொழுநர் உறுகுறை குறை தாங்குறூஉம்

பெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டு கொல். '

'பொது மகளிரிடைப் பிரிதலும் அவரோடு கலந்த செல்வியும் புணர்ச்சிக் குறிகளும் கண்டுழியும் அவர் தெருட்டத் தெருண்டு குறையறப் பொறுத்தல் ' என்று உணர எழுதுகிறார் அடியார்க்கு நல்லார். ஆகவே கோவலன் மாதவியிடத்துச் சென்றதைத் தன் கற்பின் ஆற்றலினால் பொறுத்துக்கொண்ட செய்தியைத் தனக்கு ஒரு பெருமை தரும்விஷயமாக ஏற்றிப் பேசுகிறாள் கண்ணகி. கோவலன் மாதவியிடத்துப் போயிருக்காவிட்டால், இதுகண்ணகிக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பழைய தமிழிலக்கியங்களில், தலைவன் பரத்தையரிடம் சென்று திரும்பும்போது, தலைவி ஊடுவதாகப் பல செய்யுட்கள் காணப்படுகின்றன.

ஆனால் கண்ணகி இத்தகைய தமிழ் மரபிலும் வந்தவளாகத் தெரியவில்லை. கோவலன் மாதவியிடம் சென்றதற்காகக் கடிந்து ஒரு சொல்கூடப் பேசவில்லை. கற்பைப்பற்றிய அவளுடைய 'அப்செஷன் ' தான் காவியம் முழுவதும் பேசப்படுகிறது. மாதவி கோவலனைப் பிரிந்ததும் கோசிகாமாணி மூலம் கடிதம் அனுப்புகிறாள், இது இயற்கை. ஆனால் கண்ணகி, கோவலன் அவளை விட்டுப் பிரிந்திருந்தபோது, கடிதமோ, தூதோ அனுப்பியதாகச் சிலப்பதிகாரம் முழுவதும் செய்தியில்லை. இளங்கோவடிகள் கண்ணகியின் குணச்சித்திரத்தை எவ்வளவு நுணுக்கமாகப் படைத்திருக்கிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

கோவலன் ஒரு சாதாரண மனிதனுக்குரிய விருப்பு, வெறுப்புக்களுடையவன். தெய்வமாக வேண்டுமென்ற ஆவேசத்துடன் இருந்த ஒரு பெண்ணை மணந்ததுதான் அவன் குற்றம். அவன் மதுரைக்குப் புறப்படும்படி கண்ணகியைக்கேட்டபோது, அவள் இதற்கு மறுத்து, அவன் மாதவியிடம் இதுவரை இருந்ததற்காக ஏசி அவனுடன் வழக்காடியிருந்திருந்தால், கோவலன் மதுரைக்குப் போகாமலே இருந்திருக்கலாம். சிலப்பதிகாரக் கதை நடந்திருக்காது.... அதாவது, சிலம்பை ஒட்டிய நிகழ்ச்சி ஏற்பட்டிருக்காது. சிலப்பதிகாரத்தில் சிலம்பு ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரம். காதலை நாடிவந்த கோவலனிடம் சிலம்பைக் குறிப்பிட்டு அவற்றை மாதவியிடம் எடுத்துச் செல்லும்படி கண்ணகி சொன்னபோதுதான், அவளிடம் சலிப்படைந்த கோவலனுக்குச் சிலம்பின் வணிக முக்கியத்துவத்தை உணர்வதற்கான ஒரு சூழ்நிலை உருவாகிறது. காதல் எண்ணம்போய் வியாபார நோக்கு தலைதூக்குகிறது.

மாதவி கோவலனுக்கு ஏற்ற மனைவியாக இருக்கிறாள். அவனுடைய மனநிலை அறிந்து அவனுக்கு இன்பம் ஊட்டுகிறாள். அவனுக்குக் 'கலவியும் புலவியும் மாறி மாறி ' அளிக்கிறாள். 'கலவியும் புலவியும் மாறி மாறி அளித்து ' என்று இளங்கோவடிகள் கூறுவது, அன்டனி அன்ட் கிளியோபாட்ராவில் ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகிறது. கிளியோபாட்ரா தன் தோழி சார்மியாளிடம் பேசிக் கொண்டிருப்பதாக ஒரு சித்திரம்.

CLEOPATRA

See where he is, who 's with him, what he does

I did not send you; if you find him sad

Say I am dancing; if in mirth, report

That I am sudden sick; quick and return.

CHARMIAN

` Madam, me thinks if you did love him dearly

You do not hold the method to enforce

The like from him.

CLEOPATRA

what should I do, I do not

CHARMIAN

In each thing give him way

Cross him in nothing

CLEOPATRA

Thou teachest like a fool

The way to lose him.

மாதவி கிளியோபாட்ராவைப்போல் காதல் கலையில் தேர்ந்தவள். கோவலன் அவள் இந்திர விழாவின்போது நடனமாடிவிட்டு (அனைவர் முன்பும்) வருவது அவனுக்கு வெறுப்பைத் தருகிறது. அவன் கோபத்துடன் இருக்கிறான். இதை உணர்ந்த அவள் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு அவன் முன் வருகிறாள். இந்த ஒப்பனை 32 வரிகளில் சித்தரிக்கப்படுகின்றது. ஆன்டனியைக் கிளியோபாட்ரா முதல் முதலில் சந்திக்கச் சென்றபோது வருகின்ற வருணனையைப் போல், சிலப்பதிகாரத்தில் இது ஓர் அருமையான பகுதி. கண்ணகிக்கும் மாதவிக்குமிடையே இக்குண வேறுபாட்டை மிக நுட்பமாகக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.

கண்ணகியின் கற்பைச் சிறப்பித்துக் கூறுவதற்காகத்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார் என்பது தவறான கருத்து. அப்படியிருந்திருந்தால், காவிய மரபின்படி இக்காவியத்துக்கு அவர் கண்ணகியின் பெயரையே இட்டிருக்க வேண்டும். மனப் பொருத்தமில்லாத ஒரு மண வாழ்க்கையின் பாலைவன நிலையைச் சுட்டிக் காட்ட எழுந்ததே இக்காவியம். வஞ்சிக் காண்டம் ஓர் இடைச் செருகல் என்றுங் கருத இடமிருக்கிறது...

நன்றி: திண்ணை

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

5 கருத்துகள்:

துளசி கோபால் on December 7, 2010 at 8:57 AM said...

கண்ணகியின் முட்டாள்தனத்தை பலமுறை நினைச்சுப் பார்த்த நொந்த என் மனசுக்கு ஆறுதலா இருக்கு இந்தக் கட்டுரை!

அரசியலை = அரசயிலை

ராம்ஜி_யாஹூ on December 7, 2010 at 10:48 AM said...

i go with Thulasi mam's comments

எண்ணங்கள் 13189034291840215795 on December 7, 2010 at 1:24 PM said...

கண்ணகியின் கற்பின் மீது முட்டாள்தனத்தை

அக்காலத்தில் எப்படி பெண்கள் மீது திணிக்கப்பட்டார்கள் என புரிகிறது ..

பூங்குழலி on December 7, 2010 at 4:09 PM said...

"சிலம்பை கொடுக்காமல் மூட்டை தூக்கி சம்பாதித்து வா என்று அனுப்பியிருந்தால் கோவலன் உருப்பட்டிருப்பான்" இது ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது .

கண்ணகி ஒரு சராசரி பெண்ணாக இல்லாமல் இருந்திருக்கலாம் .அதை நேராக சொல்லாமல் அவள் கற்பை உயர்த்தி அதை சொல்லியிருக்கலாம் அல்லவா ....ஒரு அரசனை பார்த்து குற்றம் சாட்டி நீதி கேட்கும் அளவிற்கு அவளுக்கு தைரியம் இருந்திருக்கிறது .தீர்ப்பு நியாயமானது அல்ல என்பதை நிரூபிக்கும் அறிவும் இருந்திருக்கிறது .

இதில் இந்த கற்பு சார்ந்த விஷயம் பின்னர் அரசியல் காரணங்களுக்காக பெரிதாக்கப்பட்டிருக்கலாம் .கோவலனை சார்ந்த கண்ணகியின் நிலைப்பாடு பிற பெண்களுக்கு ஒரு சுமை தான் .
நல்ல கட்டுரை வித்தியாசமான பார்வையில் .

Pazhaselvaraaju on December 7, 2010 at 9:35 PM said...

ஆமாம் கண்ணகி பற்றி ஆராய்வோம் திரௌபதி பற்றி வாய்மூடி பக்தி மனம் கமல போற்றுவோம்.அறுபதினாயிரம் மனைவிகளை உடைய தசரதன் ஒரு மனைவிமீதும் சந்தேகப்படவில்லை ஆனால் ஏகபத்தினிவிரதன் ராமன் சீதை மீது சந்தேகப்பட்டானாம் ....கண்ணகிமீது என்ன குற்றம்.இதை எழுதிய பேராசிரியர் அவருக்கு என்ன தோன்றியதோ அதை எழுதியிருப்பார்.அதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும். மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் இதுபோல ஆராய்ச்சி செய்யுங்கள் இந்திர பார்த்தசாரதி அவர்களே. நான் கடவுளை நம்புகிறவன் தான் அதேநேரத்தில் தமிழ் மீதும் பற்று அதிகம் உள்ளது. பகுத்தறிவாளர்கள் என்று சிலர் செய்யும் அபத்தவாதங்களுக்கு தமிழ் இலக்கிய பாத்திரங்கள் மீது ஏன் ஆராய்ச்சி ? ஏன் விமர்சனம்?
நிதி அரிப்பு உடைய ஒருவன் இந்தப் பதிகத்தை எழுதி சிலப்பதிகாரத்தில் ஏதோ ஒரு காலத்தில் ஏன் சேர்த்திருக்கக்கூடாது ?-- நடை வித்தியாசங்களுக்கு இக்கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. இதேநிலை ஏன் இதிகாசங்களுக்கும் இருக்கக்கூடாது. தெய்வீக நூல்கள்பற்றி ஏன் எதற்கு என கேட்க கூடாது ஆனால் தமிழன் எழுதினால் அதன் தெய்வீகத்தன்மை அறிய ஆற்றில்விடு எதிர்நீச்சல் போட்டுவந்தால் ஏற்றுக்கொள்வோம் இல்லை ஆற்றோடு போனால் விட்டுவிடு ..போகியன்று நெருப்பிலிடு எரியவில்லை என்றால் தெய்வீகத்தன்மை உண்டு என சில சுயநல வாதிகள் தமிழை என்றோ அழித்துவிட்டார்கள், அது இன்னும் தொடர்கிறதோ?

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்