May 13, 2012

ராஜகுமாரி-லா.ச.ரா

நிழல்கள் நீளத் தொடங்கிவிட்டன. பொழுதின் உருவச் சோதனைகளாய் வானத்தில் வண்ணங்கள் குமைகின்றன. கோணக்கிழக்கில் அடிவானத் திருப்பத்தில் தோன்றியிருக்கும் நீலச் சிரிப்பின் குறுக்கே பக்ஷிகள் மூன்று கோலப் புள்ளிகள் போலும் ஒரே அச்சில் பறக்கின்றன. அந்தரத்தில் கூடு கட்ட இடந்தேடுகின்றனவா? தொடுவானிற்கும் பூமிக்கும் பாலம் விழுந்த ஒளி தூலத்தின் குழல்   வழி வர்ணங்கள் விதவிதமாய்ப் பெய்கின்றன. எதிரிலிருந்து எதில்? வானத்திலிருந்து பூமிக்கா? பூமியிலிருந்து வானிற்கா என்றுதான் புரியவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. சாயும் பொழுதில் தோயும் வண்ணக் குழைவில் முகில்களின் செழிப்புடன் புமியின் பசுமையும் சேர்ந்து தீட்டியதாய் பிரம்மாண்டமானதோர் ஓவியம் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஆனால்lasara33

தென்றலின் அசைவில் திரைச்சீலை இடந்தேடுகின்றனவா தீட்டிய வர்ணங்கள் காயுமுன்னரே

இயற்கையின் ஆக்கல் சீற்றத்தில் புதுப்புது நிறங்கள் கக்கிக் கொண்டிருக்கையிலேயே

இதோ.. அப்பவே – இல்லை – இப்பவே –

இல்லை – சமயத்திற்கு அதன் அமைதலின்றி நேரம் கணக்கேது?

அடுத்த மாத்திரையின் மந்திரக் கோல் வீச்சில்

ஓவியம் தேய்ந்துகொண்டே வருகிறது.

எந்தச் சூழ்ச்சியால் இந்த வீழ்ச்சி?

மாலைக்கும் இரவுக்கும் ஏன் இந்த வீண் வியாஜ்ஜியம்? எனும் திகைப்பில் நெஞ்சில் சோகம் நூல் சிக்குகிறது.

ஏதோ பீதி கூட.

பக்கத்தூரில் குதிரைவாகனம் பார்க்க

ஆசையா உடுத்திக்கொண்ட பட்டுப் புடவை

அத்தனை க்யாஸ் லைட் பட்பட்

படாபடா டப்பட் வாணவேடிக்கை

அடைவீதித் திருவிழாக் கூட்டம்

நடு அம்பலத்தில

நெகிழ்ந்து அடியோடு அவிழ்ந்துவிட்டமாதிரி

மானம் தோற்பதற்கென்றே அலங்காரமா?

ரூபமாய்க் கேள்வி வடியவில்லை

ஆனால் அதன் கொக்கி

நெஞ்சில் மாட்டியிழுக்கின்றது. சதையடியில் முதுகெலும்பின வெண்மையின் உள்மையத்தில் ஒரு சில் சிறீல். அடிவயிற்றில் ஏதோ உறுத்தல் தவிப்பு கிணற்றைச் சுற்றி சுற்றி வளைய வருகிறாள். குழந்தைகள் இன்னும் விளையாட்டிலிருந்து திரும்பவில்லை. கிழவர் உலாவப் போய்விட்டார். மத்தியானத்திலிருந்தே அவரைக் காணோம். வீட்டில் அவள் தனி.

கிணற்றுள் எட்டிப் பார்க்கிறாள்.

யார் இந்த இளவரசி? இவளுக்கு ஏன் இந்தப் பாதாளச் சிறை? ஊமைக் கிலேசம் பல்படாது மார்பைக் கவ்வுகிறது? இருகைகளாலும் மார்பை அழுத்திக் கொள்கிறாள்.

உள்ளே கிணற்றடியில் கண்ணாடி

எனக்கென்ன குறைச்சல்? வெட்கம் இன்பம் பரபரப்பு அங்கங்களைப் பறிக்கின்றன. கண்ணாடியின் வட்டவிளிம்பிலிருந்து ஜலதாரைகள் சுரந்தவண்ணமாயிருக்கின்றன.

ராஜகுமாரி ஏன் ஸதாஸ்னானம்?

வெட்கம் இன்பம் பரபரப்பு அங்கங்களைப் பறிக்கின்றன.

(தண்ணியா அது? அமிழ்தமல்ல! )

(காத்தான்)

இங்கிருந்து பார்க்கையில் ஜலத்தில் இளநீர்போல இளவெண்மை.

கத்தரி வெய்யிலில் கூட ஆழம் தென்னை மரத்துக்குக் குறைவில்லை. கவுறு விட்டுப் பார்த்துக்கண்கண்ட உண்மை)

(காத்தான்)

இதுக்கும் ஒரு கதை இருக்குதம்மா. என் வூட்டிலயே வழங்கற கதை. என் முப்பாட்டன் சொன்ன கதை. உனக்கு நான் சொல்லப்போற கதை.

இந்த ஊருக்கும் அந்த நாள் ஒரு பஞ்சம். வாய்க்கால் குளம் கிணறு நாக்கிலே எச்சில் கூட வறண்டுபோய் அப்படி ஒரு காய்ச்சல். பயிரும் ஊரும் மானம் பார்த்துப் பார்த்து கொடும்பாவி கட்டியிழுத்தும் நட்சத்திரம் உதிருது. மானம இறஙகி ஒரு கண்ணீர் கூட சொட்டல்லே. ஊரைவிட்டு ஓடலாமா. ஒருத்தரை யொருத்தர் அடிச்சுத் தின்னலாமான்னு மக்களுக்கு ஆத்திரம். யார்மேலே ஆத்திக்கலாம்னு வவுறு வெந்துகிட்டிருந்த சமயம் ஒரு நாள் போது சாஞ்சு போச்சு. இந்த வூட்டு யசமானி வாசல்லே வந்து நிக்கறாங்க. யாரோ ஒரு பொம்புளையெ பத்து ஆம்பளேங்க துரத்தி வராங்க. அவிழ்ந்துபோன சேலையைக் கையாலே வவுத்துலே அள்ளிப் புடிச்சுட்டு அலங்கோலமா ஓடிவரா. பின்னாலே சின்னதும் பெரிசுமா கல்மாரி வீசி வருது. “ஐயோ இடம் கொடுங்கோ! என்னைக் காப்பாத்துக்கோளேன்!” அந்தப் பொம்மனாட்டி அலறிட்டேவரா. அந்தந்த வீட்டுத் தாய்மார் தங்கைமார் மாமியாரா மருமவளா எல்லோரும் பெண் பிள்ளைங்கே வேடிக்கை பாக்கறாங்க. பெண் பாவம் பாக்கறவங்க யாருமில்லே.

இந்தப் பக்கமா அவள் வந்ததும் இந்த வீட்டு எசமானி இந்த வீட்டுக்கே ஒரு அம்சம் எசமானி. எப்பவும் அமைப்பு விளக்கேத்தறவங்க வகையா வாய்ச்சுட்டா வூட்டுக்கு இருளே இல்லை. வழி வழியா முரவன் அருள அப்படியே இருக்கணும் – ஓடி வந்தவளை ரெண்டு கையாலும வாரியணைச்சு உள்ளே வலிச்சுகிட்டு கதவையடைச்சு ரெண்டு தாளையும் இழுத்துப் போட்டுட்டாங்க. தடதடன்னு வெளியே தட்டறாங்க. ஆனால் அதன் கிட்ட யாரும ஒண்ணும் ஆட்டிக்க முடியாது. கதவான தகவு அந்த நாள் கதவு. கோட்டைக் கதவு கோவில் கதவு. தேக்கு மரத்திலும் அடிமரம் தாள் போட்டால் சீல் போட்டதுதான்.

அப்புறம் நடந்த பேச்சை என் பாட்டன் அவர் பாட்டன் சொன்ன கதையை அப்பட்டமா சொல்லுவாரு. அதிவேதாண்டா கதைப் பேச்சுக்குள்ளே புகுந்து பார்க்கணும். பார்த்தா புல்லரிச்சுப் போவுதே. அதிலேதான் கதை என்பாரு.

“யாருடி அம்மா நீ? என்னடிம்மா பண்ணினே?”

“நான் அசலூர். ராத்தங்க இடந்தேடி இந்த ஊர் நாலு கால் மண்டபத்தில் தங்கினேன்”

”புடவையைச் சரி பண்ணிக்கோ. இங்கே உனக்கு ஒண்ணும் நேர்ந்துடாது”

ஆனால் அந்தப் பெண் லேசா சிரிச்சிட்டு நிக்கிது. அம்மா சொன்னபடி மானத்தை மூட முயற்சி செய்யல்லே. மூக்கும் முழியுமா இருக்கு. ஆனால் புத்தி சத்தே பேதலிச்சிருக்கும் போலிருக்கே. பயமா பாவமா தெரியல்லியேன்னு அம்மாவுக்கு எண்ணம். ஏன்னா அந்தப் பொண்ணுக்கு முழி சரியாயில்லே. இங்குமங்கும் என்னத்தையோ கண் தேடி அலையுது.

“புதுசா வந்த இடத்திலே ஊர்க்கோவத்தை சம்பாதிக்க என்ன பண்ணினே?”

வந்தவளுக்குக்கண் அலைச்சல் நிக்கல்லே. அம்மா சொன்தைக் காதில வாங்கிட்டு ஆனால் ஏதோ நினைப்பா.

”எல்லோரும் செய்யறதைச் செஞ்சுண்டே இருக்கிறதைவிட புதுசாவோ ஈனமாவோ ஒண்ணும் நான் பண்ணிடல்லே” அம்மாவுக்குப் புரிஞ்சுபோச்சு. கண்ணுலே தண்ணி தளும்பிட்டுது.

”அடப்பாவமே! ஏண்டி குழந்தை வயத்துக்கில்லாத கொடுமையா?”

”ஏன பாட்டி. நானே வழங்கறவளாயுமிருக்க கூடாதா?”

”நீ செல்றது புரியல்லியே! காரியம் ஒண்ணொண்ணுக்கும் வேளைப் பொழுதுன்னு ஒண்ணு இருக்கே?”

நீங்கள் சொல்றது என்னிடம வருவோருக்குத்தான்தான் இருக்கணும். எனக்குக் கிடையாது. ஓடற தண்ணீர் ஓடிண்டே இருக்கு. என்னிடம் இருப்பது என் ஆழம ஒண்ணுதான். அதுவும் எவ்வளவுன்னு எனக்கே தெரியாது. அதுவும் எனக்கு ஒளிவு மறைவில்லை”

”என்னடிம்மா சொல்றா. புரியல்லியே!”

”இதோ பாருங்க பாட்டி. நானா வலியப்போய் யாரையும் கையைப் பிடிச்சு இழுக்கல்லே. ஆனால் தேடிண்டு வந்தவாளை ”மாட்டேன்னு” மறுக்கல்லே. “ஆமா”ன்னு தலையையும் ஆட்டல்லே. நீங்கள் எனக்கு இப்போ அடைக்கலம் தந்து அணைச்சுக்கலியா. அது மாதிரி ஆதரவா அணைச்சுண்டேனோ என்னவோ! ஏன் பாட்டி. நெஞ்சடியில நாம் அத்தனை பேரும தாய்மார்தானே! நம் உடலமைப்பும் அப்படித்தானே! மேடும் பள்ளமுமா ஓடினாலும் மாரெல்லாம் பால்தானே!. பாட்டிக்குத் தலை ”கிர்ர்ர் – ”

அடிச்சுட்டு வர வெள்ளத்திலே வீட்டுக்கூரை குமுங்கினாப்போலே தூண்மேலே சாஞ்சு சரிஞ்சு அப்படியே குந்திட்டாங்க. தண்ணியிலே கரைஞ்சு போறாப் போல கூடம் தூண் சுவர் எதிரே அந்தப் பொம்புள்ளே தான் எல்லாமே வரப்புக் கலைஞ்சு மிதப்பலாடுது. எங்கிருந்தோ ஒரு குரல் காதண்டை ஒலிக்கிறது.

”எதையும் அக்கலக்கா பிரிச்சுக் கேட்டால் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை. இல்லை எனக்குச் சொல்லத்த தெரியல்லே. எதையுமே அக்கலக்கா பிரிச்சுப் பார்த்தால் செய்யாத பாபமில்லை. நேராத புண்ணியமில்லை. ஆழத்துக்கு ஆழம் பார்த்து ஆகற காரியமில்லை. இடுப்பளவு ஆழக்காரனை குளிபாட்டறேன். கழுத்தளவு வந்தவன் என்னில் முழுகி எழுந்திருக்கிறான். ஆழந்தெரிஞ்சோ தெரியாமலோ உள்ளேயே வந்துட்டவன் என் வயிற்றில் தூங்கறான். காலை நனைக்கவே பயப்படறவன் அழுக்கு அவனிடமே பத்ரமா இருக்கு. சமுத்திரத்தையே முழங்காலுக்குக் கண்டவன் பாதம் கழுவுவது தவிர நான் ஒண்ணும செய்ய முடியாது. துணிஞ்சவாள்தான் துறந்தவாள். துறந்தவாளுக்குத்தான் தரிசனம். கொஞ்சநேரம தப்பியோ வழி தடைபட்டோ வந்தாலோ குழந்தைகளுக்குத் தாங்கல்லே. நானும் ஓடோடித்தான் வரேன். ஆனால் என் குழந்தைகளே என்மேல் கல்லைவிட்டு எறியறதுகள். தாணை அடையாளம் தெரிஞ்சிக்கல்லே. இதைவிட துக்கம் எனக்கு வேணுமா? ஆனால் இதைவிட வேடிக்கை உலகத்தில் உண்டா? எதுவுமே என்னைப் புரிஞ்சிக்கல்லே. புரிஞ்சுக்கறதுன்னா என்ன? வந்த்தை வந்தபடி வாங்கிக்கறதுதான். எனக்குத தெரிஞ்சுணட்ட வரை புரிஞ்சுண்டதற்கு அர்த்தம். ஆனால் இதைப் புரிஞ்சுக்க அனுபவத்துக்கு ஒண்ணு உன்மாதிரி வயதாயிருக்கணும். இல்லை என்மாதிரி வயதை மீறியிருக்கணும். ஆனால் ஒண்ணு. உலகத்திலே (குழந்தைகளில்லாமல்) எல்லோருமே கிழமாயிருந்துட்டா எல்லாத்தையும் புரிஞ்சுண்டுதான் என்ன பண்றது? அனுபவிக்க முடியாத அறிவு அத்தனையும் வறட்சை. வறட்சைக்கா வந்திருக்கேன்? குடம் தளும்புற மாதிரி அதென்ன கிளுகிளுப்பு? சிரிப்பா? அழுகையா? சிரிப்பாயிருந்தாலும் அதைக் கேட்டதும் எனக்கேன் இப்படி தொண்டை அடைக்கிறது?

”என் குழந்தைகள் செழிக்கத்தானா வந்திருக்கேன்! இல்லை எனக்காகவா வந்திருக்கேன்? குழுந்தைகள் வயிறு குளுமை கண்டு என் ஈரம் நெஞ்சுவரை பாஞ்சு எங்கும் க்ஷேமம் தழைக்கணும்னு எப்படி ஓடோடி வர்ரேன். எங்கிருந்து நான் எப்படி வந்தாலும் அடங்கற இடம் ஒண்ணு எனக்கும் உண்டே. அது இங்கே எங்கே? இங்கே எங்கே?”

அந்தப் பொம்புள்ளை திடீர்னு புடவையைக் கழஞ்சு கீழே போட்டுட்டு முண்டக்கட்டியா ஓடிப்போய் கிணற்றிலே தொப்புன்னு குதிச்சிட்டா.

”ஐயோ”ன்னு அலறிக்கிட்டே பாட்டியம்மா பின்னாலேயெ லொங்கு லொங்குன்னு ஓடிப்போய் கிணற்றிலே எட்டிப் பார்த்தா. உள்ளேயிருந்து தண்ணி மேலே பொங்கி வருது. நிமிசத்துல கிணறு வழியுது. பாட்டி தட்டித்தள்ளாடி வந்து கதைவைத திறந்து விட்டுட்டாங்க. உள்ளே பாங்ஞ்சோடி வந்தவங்க வந்தால் தோட்டம் கூடம் வீடு எல்லாம தண்ணி ஓடுது. பாட்டியும் கிணத்தைச் சுட்டிச் சுட்டிக் காட்றாங்க. ஆனால் அவங்களுக்கு வாயடைச்சுப் போச்சு. பாட்டியம்மாவுக்கு அப்புறமே பேச்சு ஒரு மாதிரி தட்டல்தான். அது பத்தி பேச்செடுத்தாலே அம்மாவுக்கு முருள் வந்த மாதிரி ஆயிடும். ஆப்புறமே அந்த அம்மா ரெம்ப நாள் இல்லே. வாய்க்காலிலே குளிக்கப் போனவங்க உச்சி வேளைக்கும் திரும்பல்லே. கரையோரமா தேடிக்கிட்டே பொனவங்க ஒரு கல்லுக்கப்பால் யாருமே நடமாடாத வளைவிலே கண்டெடுத்தாங்க. மாறாத தூக்கத்தில பாட்டியம்மா காணாததைக் கண்ட மாதிரி சிரிச்ச முவத்தோடு பாட்டியம்மா தண்ணியிலே கிடந்தாங்க. இத்தனைக்கும வாய்கால் வழிபூரா தண்ணி கணுக்காலுக்கு ஏறல்லே. அதுதான் ஆச்சர்யம். பாட்டியம்மா இடுப்பிலே வந்த பொம்புளே அவிழ்த்துப்போட்ட புடவையை உடுத்திட்டுருந்தாங்க. ரொம்ப நாளைக்கு அந்தப் புடவையைப் பூவாடையைக் கும்பிட்டிருந்தாங்களாம். அப்புறம் ஒரு நாள் நனைச்சுக் கோடிக்குக் கோடி தோட்டத்திலே கிளைக்குக் கிளை கட்டியிருந்த சேலை எப்படியோ அவிழந்து காற்றாடியாப் பறந்து போயிட்டுதாம். நீலப் பட்டுப் புடவை இறக்கையடிச்சு ஊர்மேலே பறந்து போறப்போ தெருவிலே ஓடிவந்து வேடிக்கை பார்த்தவர்கள் எத்தனை பேர். நடுவாசலில் குத்துவிளக்கை ஏற்றி வெச்சு கற்பூரம் கொளுத்தி விழுந்து கும்பிட்டவங்க எத்தனை பேர். ”காவேரியாத்தா எங்கள் பாவம் பாராமல் எங்களை கண்திறந்து பார்த்தவளே! நீ வந்த காரணம் முடிஞ்சு நீ திரும்பிப்போற விடமெல்லாம் உன் புண்ணியம் எங்களுக்கு இருக்கட்டும் !”

அதனாலே காவேரியம்மன் வலிய வந்து தன்னைக் காட்டிக் கொடுத்துக்கிட்ட வீடு அப்பா இது” ன்னு முடிச்சுட்டு என் முப்பாட்டன் கூடவே என் பாட்டனிடம் சொல்லுமாம். “இது என் பாட்டனிடம் நான் கேட்ட கதை. இதன் நிசமும் பொய்யும் நோண்ட இனக்கு நான் கதை சொல்லலே. நிசமும் பொய்யும் நமக்கேன்? நம்பினால் காவேரியாத்தா. நம்பாட்டி நல்ல கதை. இந்த வீட்டில் தண்ணி மொண்ட நம்வீடு நிறைஞ்ச வீடு. இது நிசம். இதுக்குப் பஞ்சாயத்து வேணாமில்லயா?

தலைமீது மிருதுவாய் ஏதோ உதிர்ந்த்தை கையிலெடுத்துப் பார்த்தால் பூ. அவளுக்கு மயிர்கூச்செறிகிறது. காற்று வாக்கில் இயங்கும் எந்த ஆத்மாவின் ஆசீர்வாதமோ? ஒரு வேளை காவேரியம்மனேதான் பூவை அட்சதையாப் போட்டாளோ?

“நிறையப் பெருகி நன்னாயிரு!”

இந்த அர்த்தம் தந்த இன்பம் நெஞ்சிலே தேன் விடுகையிலேயெ

”ஆ வி ர் ப் ப வி ”

முன்பின் சுவடுகூட அவள் கண்டிரா ஒரு நாமம். அதன் மோன ஓசையிலேயே புரியாத அர்த்த தாரைகளைப் பெருக்கிக்கொண்டு மனதில் தோன்றியதும் அமுதம் அவளை ஆட்கொண்டது.

”ஹ விஸ்”

ஹவிர்ப்பாகம்

ஹவிர்ப்பாஹி

”ஆவிர்ப்பவி”

ஒரு தினுசான மூர்ச்கையில் ஆழ்ந்தாள்.

இருள் பந்துகள் செடிகளில் கிளைகளில் இலைக்கொத்துகளில் தொங்குகின்றன. எத்தனை நேரமாவோ அறியேன். இங்கேயே இருக்கேன். இருட்டு எப்போ எப்படி இறங்கித்து? இன்னும் சுருள் சுருளாய் கடைசல்க்கள் தந்து வந்து கிணற்றின் மேல. ராட்டினக்கட்டை மேல் பிடிச்சுவரில் கொல்லைக் காம்பவுண்டின் பொக்கை போறைகளில் கரை தோய்கின்றன. ஒளிப்பொறிகள் சுவரோரம் வாடாமல்லிப் புதரில் தோய்கிற கல்லின் பக்கமாய் சாய்ந்த வாழைக் குலையைச் சுற்றிச் சுடர் விடுகின்றன. தன் பக்கமாய் பறந்து வந்த மின்மினி ஒன்றைப் பிடித்தும் லேசாய் மூடிய கையுள் விரல் சந்துகளின் வழி உள்ளங்கைக் குழிவு தகதகக்கின்றது. கை விரித்ததும் சுழன்றது என் ஜீவனின் பொறியா? என்னைச் சுற்றிச் சுழிக்கும் இருளின் பொரியும் இத்தனை பொறிகளும் அத்தனை உயிர்களா? இதுகளுக்கு ஏன் இவ்வளவு பெரிய தவிப்பு? விடுபடுவானேன்? திரும்பவும் இருப்புத் தேடி திக்குத் தவிப்பானேன்? இது ஒரு வேடிக்கையா என்ன?

விவரம் தெரியா விசனம் அவள் மேல் படர்கிறது. அதன் பாகு விழியோரங்களில் உதட்டின் வளைவில் மோவாய்க்குழிவில் முதுகுத தண்டில் மார்பின் பூண்களில் தொப்புள் சுழியில் இடுப்பின் நெகிழ்வில் அடிவயிற்றின் மேடில் மேடின் இறக்கத்தில் சுற்றிக்கொள்கிறது. அதனால் உடலில் ஒரு மதப்பு. பூமியை தன் மதுவை ஏந்தும் ஒரு மலர்க்கிண்ணமாக இரவு மாற்றிக் கொண்டிருக்கிறது. விசன நரம்புகள் ஓடிய இதழ்கள் பகல் விரிந்து இரவு குவிந்த பூவுள் மாட்டிக்கொண்டு மதுவில் நிந்தித்தவிக்கும் உயிரெனும் பரம சோகத்தின் மின்மினிகள்.

இங்கிருந்து தெரியும் வீட்டின் உட்புறம் கூடத்தில் ஏற்றிவைத்த குத்துவிளக்கின் இளவெளிச்சத்தில் குளித்து மணவறையில் கன்னத்தில் படரும் நாணத்திட்டுபோல் தோன்றுகிறது. ஆயுசில் பாதியாச்சு. அடராமா. அசட்டு பிசட்டுன்னு என்னென்னவோ மனசில் தோணிண்டுருக்கே.

“இதென்ன வீடா இல்லை.. என் வாயில் வரக்கூடாத்தெல்லாம் வறது. அதுவா இது? ”

நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய கோணி ஊசியின் கூரில் குரல் இருளைத துருவி வந்து அவளை எட்டிச் சுடுகிறது. மனமிலாது நினைவைக் கலைத்து உள்ளே செல்கிறாள். அவளைக் கண்டதும் வெடித்த விதைபோல் கிழவர் குதிக்கிறார். அவர் கோபம் பார்க்க ஒருபக்கம் பயம். ஒருபக்கம் சிரிப்பு வந்த்து. இந்த வீட்டுப் பெண்களுக்கு ஆணவம் முத்திப் போறதுக்கும் ஒரு எல்லையில்லையா என்ன? நாள்தான் அஸ்தமனமாச்சு. வீட அஸ்தமனமாயிடுத்தா?

“என்ன தாத்தா அம்மாவைக் கோவிச்சுக்கறே?”

கிழவர் ”சரே”லென்று திரும்பி பேத்தியைக் கன்னத்தில் ஒன்று விட்டார். குழந்தை ஒருகணம் திக்குமுக்காடிப்போய் அழ மறந்து அப்படியே நின்றுவிட்டாள். தாத்தா அடிப்பார் என்று அவள் நினைக்கவில்லை. கிழவருக்கு என்னமோ மாதிரி ஆகிவிட்டது. இதுமாதிரி இதுவரை நேர்ந்த்தில்லை. அப்பவே அவள் பின்னால் அவரையே பார்த்துக்கொண்டு நின்ற பேரனையும் கண்டதும் அவர் மனநிலை ஏதோ கையும் பிடியுமாக அகப்பட்டுக்கொண்ட திருடன் மாதிரி உள்சுருங்கிற்று. அவன் கண்களில்தான் எத்தனை அலட்சியம் சிந்துகிறது? கோபாவேசத்தில் கிழவர் உடல் காற்றில் சருகுபோல் ஆடிற்று.

என்னடா முறைக்கறே எள்ளுக் கண்ணை வெச்சுண்டு? சுட்டு எரிச்சுடுவையோ?” பையன் பார்வை மாறவில்லை. அவர் போகும் வழியெல்லாம் அதுவும் தொடர்ந்த்து. கிழவர் பின்னடைந்து திண்ணையில் போய் உட்கார்ந்துவிட்டார். அங்கிருந்து பொரிகிறார்.

என்ன அக்ரம். வரவர இந்த வீட்டில் ஒரு நல்லது பொல்லாத்துக்கு வாய்திறக்கு புத்தி சொல்ல வழியில்லாமல் போச்சு பார்த்தையா! நேற்றுப் பிறந்த்தெல்லாம் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கற காலம வந்துடுத்து! என் நாளில் நான் இப்படித்தான் இருந்தேனா? இருக்கத்தான் முடியுமா? முழிச்ச கண்ணை நோண்டிக் கையில் கொடுத்துடமாட்டாளா? அது என்னடான்னா வாண்டு வாரிசுக்கு வரது!

சிறுசுகளை சொல்லி என்ன பண்றது? மாவுலயே கிள்ளி எறிய வேண்டியதை மூக்காகவே செஞ்சாறது” வந்தவழி அப்படி! அப்போ குடிச்ச பால் இப்போத்தான் ரத்த்த்தில் ஊற ஆரம்மபிசிசுருக்கு. வாயில் ஊட்டற பாலை அப்பவே மூக்கில் பீச்சியிருக்கணும்.......................

இன்னும் என்னென்னவோ.

ஆனால் இத்தனை கேட்டுக்கொண்டும் இன்னிக்கென்னவோ அவளுக்குக் கோபம் வர மறுக்கிறது. அவளுக்கே வியப்பாயிருக்கிறது.

யார் அவர் காலைக் கட்டறது? கீழேநோக்குகிறாள்.

”தாத்தா அன்னை அடிச்சு- ட்டா- ம்மா!

”ஊ – ஊ – ஊ ”

நான் பெற்றதுதான் நீ. ஆனால் இன்னிக்கு எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. காரணம் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது. யார் என்னை என்ன திட்டினாலும் இன்னிக்கு எனக்கு ஒட்டிக்கல்லே. காரணம் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது.

இன்னிக்கு உனக்கு எதில்தான் அக்கரை? இன்னிக்கு எதுதான் உன்மேல் ஒட்டிக்கொள்ளும்?

அவளிடமிருந்தே எழுந்த கேள்விக்கு மோனப் பதிலில் கண்முன் செவேலென மார்பின் தோற்றம் எழுந்தது. மார்க்குலையில் ஸன்னமான பழக ஜபமணி மாலையின் இறக்கம்.

தன் கணவன் முகத்தை உடனே அந்த நிமிடமே பார்க்கவேணும் பார்த்தேயாகணும் எனும் அவா விலங்கு தன் இரையைக் கவ்வுவதுபோல் அவளைக் கவ்விற்று.

இதென்னடியம்மா திடீர்னு உலாவப் போயிருப்பவர் திரும்ப வருவதற்குள் வருடக்கணக்கில் பிரிந்தாற்போல் ஏக்கம்?

அவள் ராஜகுமாரி. அவளுள் அவளே தோழி. ராஜகுமாரியை பரிஹாசம் செய்கிறார்.ஆனால் கரை புரண்ட இந்தப் பிரிவாற்றாமைப் பெருக்கில் பரிஹாசம் ஏற்கவில்லை. இன்று மாலை மயக்கத்தில் நிமிடங்கள் வருடங்களாய் நீண்டுவிட்ட அற்புதம். இது என்ன?

அந்த அற்புதமும் ஏக்கமும் கலையாமலே லாந்தர்களை ஏற்ற ஆரம்பித்தாள். ஆயிரம் லாந்தர்கள் ஏற்றிவைத்தாலும் இன்றைய இருள் என்னிருள். தனி இருளில் இவரே செந்தழல்! கொஞ்ச காலமாகவே உடம்பு வாங்கல். ஆனால் தேகத்தில் ஜ்வாலை முறுக்கு. இன்னென்று புரியா ஸ்புடத்தில் மேனி மின்னிம் பொன்னுக்கு. இத்தனை நாள் என கண் எப்படி

அவிஞ்சுபோச்சு?

விளக்கை சுற்றி வட்டமாய் பந்தி நடக்கிறது பாரேன். சாதத்தை குருவி மாதிரி கொறிக்ரதை!

சுப்பு ஒருபிடி கூட இழுக்கிறாள்.

சுப்பு கிழவருக்கு இடதுபுறம் உட்கார்ந்திருக்கிறாள். பிடிக்குப் பிடி கிழவரின் முகக்கடுப்பு இளகுகிறது. பாவம்! பசி பொல்லாதது.கீரை மசியல் சட்டியை சுரண்டினால் அகப்பையில் வரவில்லை.அதிலிருந்தே தெரியறதே! அவருக்குப் படித்தமாய் அமைஞ்சு போச்சு போலிருக்கு! எனக்கு இல்லாட்டா என்ன? அதுவே என் சந்தோஷம்.

பச்சை வாழையிலையில் மோருஞ்சாத்தின் தூயவெண்மையின் நடுவே கீரையும் குழம்பும் கலந்து சுத்தமாய்க் குளம் கட்டி இருப்பது எடுப்பாயிருக்கு.

“எலே சுப்பு! உன் மூக்கில் ஒரு புறா உட்காந்திருக்கு”

சுப்பு பயந்து மூக்கை தடவி பார்த்துக்கொள்கிறாள். வாய் நிறைய கவளம். கண்கள் கரு வண்டாய் பளபளக்கின்றன.

“ஒண்ணுமில்லை. நீ என்னோடு பேசவேண்டாம போ! நீதான் என்னை அடிச்சயே!” உதட்டைப் பிதுக்குகிறாள்.

”அதே மூக்கிலிருந்து உச்சி மண்டைக்கு வந்துடுது! அவளை அறியாமலே சுப்புவின் கை மண்டைக்கு தூக்குகிறன்றது.

“எனக்கென்ன அதோ தோள்மேல் நிக்கறது. அதோ ..எனக்கென்ன தோள்மேல் நிக்கறது” தோளைத தொட்டுப் பார்த்துக்கொள்கிறாள்.

“நான் எப்படிப் பொய் சொல்வேன். நானே விட்டவெள்ளைப் புறான்னா!” சுப்புவுக்கு சிரிப்பு பீரிடுகிறது

”நானே விட்ட வெள்ளைப் புறா!”

திரும்பத்திரும்ப கொக்கரிக்கிறாள். அவளுக்கு அது ஒரு பெரிய வேடிக்கையாயிருக்கிறது. அதோ பார் உன் முதுகில்!

“நானே விட்ட வெள்ளைப் புறா!”

“நானே விட்ட வெள்ளைப் புறா!”

தாத்தா இடது கையால் அவள் முதுகில் பளார் என்று அறைகிறார். சப்தம் பட்டாசு வெடிக்கிறது.

சுப்புவுக்கு சரிப்பு தாங்கவே முடியவில்லை. உடலே குமுங்கி மடிகிறது.

“ஏடி சுரணை கெட்ட வெள்ளாட்டி” இப்போ வலிக்கல்லியோ? அப்போ வாயை கப்பறையாப் பிளந்து ஊரைக் கூட்டினையே! ”

“போ தாத்தா! இதை ஆசையடி. வலிக்குமோ?”

கிழவர் இடதுகையால் பேத்தியை அணைத்துக்கொள்கிறார். “கள்ளி! கள்ளி! இப்பவே பேச்சிலே மயக்கபார்!” அவர் கண்கள் துளும்புகின்றன.

திடுக்கென விழிப்பு வந்தது. அவளை அப்படி எழுப்பியது எது? பொத்தென்று அவள்மேல் விழுந்தடித்து பல்லி ஓடித்தா? சமையலறையில் சாமான் உருண்டதா? ஊஞ்சல் சங்கிலியின் கிறீச்சா?

அத்தைக்குப் பின் ஊஞ்சலுக்கு அவள்தான் வாரிசு. நாளெல்லாம் பாடில் சலித்த உடம்புக்கு அதன் லேசான அசைவின் இதவு இருக்கட்டும் ஒரு பக்கம். அதிலும பெரிசு அத்தை படுத்த இடம் என்கிற மவுசு. அத்தை புரணட இடத்தில் தானும் புரண்டு அத்தையின் தைரியத்தை பலத்தை அத்தை புழங்கிய பொருளிலிருந்து அத்தையின் பிராசாதமாய்த் தானும் பெறுவதாய் ஒரு த்யானம். த்யானமேதான் தைரியம். த்யானமேதான் பலம்

ஆனால் அவளை எழுப்பியது அவள் நினைத்ததல்ல. எங்கிருந்தோ அதென்ன “சொட்டு” “சொட்டு”..?முக்காலி மேல் நிறுத்தி ஈருக்கும் தீர்த்த சால் ஒழுக்கா? அடியில் கவிழ்த்த பால் உருளிமேல ஜலம்“சொட்டு” “சொட்டு” “சொட்டு”

இல்லை ஜலத்தைவிட இந்த ஓசை கல்கண்டு மாடியிலிருந்து துளிக்கின்றது. துளிக்குத துளி தனித்தனி தெறித்து ஒன்றுடன் ஒன்று இழைந்த பாகு உள் ஊறி அவளையும் தன்னோடு கட்டியிழுக்கையில் அதுவே வேதனை விடு தூதாகி “சொட்டு” “சொட்டு” “சொட்டு”

திடீரெனப் புரியவில்லை. உடல் பூரா ஒரே தவிப்பு. விழியோரங்களில் உதட்டு வளைவில் போவய்க்குழிவில் முதுகுத்தண்டில் மார்பின் மார்பின் பூண்களில் தொப்புள் சுழியில் இடுப்பின் நெகிழ்வில் அடிவயிற்றின் மேடில் மேடின் இறக்கத்தில் அனல் சரடு சுற்றிக்கொள்கிறது.பிய்த்தெறிய முயன்றும் சரடு சிக்காகி அங்கங்கள் திகுதிகுவென பற்றிக்கொண்டன. மானம் போக காலை வாரிவிடும் மோசடி மூட்டம். ஈதென்ன?

ஊஞ்சலிலிருந்து எழுந்து புலி புறப்பட்டது. தன் ஓசையெ தனக்கு ஊமையாகி தன் பசிக்கு இரைதேடும சூதில் மெத்திட்டுவிட்ட பாதங்கள் அவளைக் கூடத்திலிருந்து அடியடியாய் ஏந்திச்சென்றன.

மாடியடியில் ஒரு கணம் தயங்கி நின்றாள். இரவின் அமைதியில் புவனம் ஒரு பிரம்மாண்டமான குமிழியாய் அந்தரத்தில் தொங்கிற்று.

எப்பவோ சுப்பு தாத்தாவோடு திண்ணைக்குப் போயாயிற்று. பையன் குஞ்சுத் திண்ணையில் தூங்குகிறான் இப்போதெல்லாம். அவனுக்கு தன்மேல் பிறர் உடம்போ கையோ தற்செயலாய் பட்டாலே பிடிக்கவில்லை. கொஞ்சநாளாகவே தனிக் கூடாகி விட்டான்.

தேனென ஒலித்துளிப்பு

பளிங்கெனத் துலங்கி

சிங்லிகிணிங்

பளிங் கிளிங்

தரங் கிணிங்

தரங்.....

கறவை ஏமாற்றிக் கன்றுக்கு மித்து மடியில் மறைத்த கள்ள மணி கன்றுக்கு காத்திருந்து கன்றைக் காணாது தன்னை மறந்த பரிவின் துரிய மணி மடிமீறி காம்பினின்று சொட்டுச் சொட்டுச் சொட்டென தேம்பும் பாலின் துயரமணி.

ஓசை மணிகள் கிண்கிணிக்கும வழியே சென்றாள்.

மொட்டை மாடிமீது வான் குடலை கவிழ்ந்து உருண்டது. ஆனால் அதனின்று கொட்டியவை நட்சத்திரங்கள். பூக்களல்ல. அனைத்தும் முள் கொண்டைகள் வானத்தில் – அல்ல புடவையில் – அல்ல – உடலில் தை தை தைத்து அடிவரை பாய்ந்து ஆங்காங்கே திருகிப் பதிந்து சுடர்விடும் குரூர எக்களிப்புக்கு அஞ்சி உடல் குலுங்கி ரோமம் சிலிர்த்தது.

ஆனால் அந்தவலி முழு உணர்வையடைந்து உள் அழுந்துமுன் மாடியறையின் ஒருக்களித்த கதவின் பின்னாலிருந்து திடீரென் நாத ஜாதிகள் புறப்பட்டு வந்து அவளை மொய்த்த்துக்கொண்டன.

மூக்குக் குத்தியில் நெற்றிக் குங்குமத்தில் காதுக்கம்மல் கற்களில நெற்றி நடு வகிடில் மேல உதட்டில் துளித்த வேர்வை முகத்தில் மோவாயடியில் அளிந்த பிறவி மறுவில் உள்ளங்கை ரேகைகளில் கணரப்பை மயிரில் பிடரி மணிரச்சுருளில் நகச்சதையிடுக்கில் புருவக வானில் கூட்டங்கூட்டமாய் குழுவான்கள் சிட்டஞ் சிறகுகளில் பறந்து வந்து தொத்திக்கொண்டன. அவைகளின் எள்ளளவுக்கெதிர்மாவின் அரும்பும் புளியத் தளிரும நக்ஷத்திரங்கள், நாத்தாதுக்கள், மினமினிகள்,அந்துகள், சிந்துகள், கோர்வைகள், கார்வைகள், பார்வைகள், பாதங்கள், பேதங்கள், தாபங்கள்,தவிப்புகள், தத்தளிப்புகள், தளிர்கள், மிளிர்கள், ஒளிர்கள், அங்கங்கள், அலரிகள், பங்கங்கள்,சின்னங்கள், ஸன்னங்கள், பின்ல்கள், இன்னல்கள், பின்னல்கள், சுளுக்குகள், கொடுக்குகள், தளுக்குகள்,வெடுக்குகள், மிலுக்குகள், துடுக்குகள், மிலுக்குகள், துடிப்புகள், தூவல்கள், நொடிப்புகள், தாவல்கள்,திகில்கள், படிப்புகள், ஆவல்கள், சரங்கள், அவசரங்கள், அவகாசங்கள, விள்ளல்களின் துள்ளல்கள்,பதைப்புகள், பதைபதைப்புகள், கட்டுகள், பெட்டிகள், சிட்டிகள், அணுக்கள், ரகஸ்யங்கள் சிசுசிசு தஸ தஸ. நிதபம மப கஸ கரி நித நிரி தித தரி நிதாரினி ரிநிதி நிநிநி – இங்கு – அங்குவரை கரைந்து எங்கும் நிறைந்து எதுவும் தமக்குச் சொந்தம் என்ற க்தியில் வந்த எதையும் அரித்து மென்று உமிழும். அவைகளில ஊறல் வதைப்புத தாங்க முடியலில்லை.

கதவை படீரெனத் திறந்துகொண்டு உள்ளே ஓடினாள். இருளன்றி வேறேதும் கண்ணுக்குப் புலனாகவில்லை. கருவின் இருளிலிருந்து ஒரு அள்ளு இங்கு வந்து இறங்கினாற் போன்ற கும்மினின்று ஒலிக் கதிர்கள் முளைத்தெழுந்து அவள் மேல கூடாய்க்க கவிழந்தன. அவைகளை விலக்க வீசிய கைக்குதம் தட்டைபோல் ஏதோ தட்டிற்று. அதையும் தள்ளி அதற்கு அப்பால் பிடிப்புக்குக் கிடைத்த மெத்தில அழுந்தி

ஆ!

*********

தட்டச்சு & புகைப்பட பிரதி உதவி: ரமேஷ் கல்யாண்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

கோமதி அரசு on September 25, 2012 at 11:06 AM said...

அப்புறம் நடந்த பேச்சை என் பாட்டன் அவர் பாட்டன் சொன்ன கதையை அப்பட்டமா சொல்லுவாரு. அதிவேதாண்டா கதைப் பேச்சுக்குள்ளே புகுந்து பார்க்கணும். பார்த்தா புல்லரிச்சுப் போவுதே. அதிலேதான் கதை என்பாரு.//

லா.ச.ராவின் கதைகள் எல்லாம் படிக்கும் போது புல்லரிச்சுப் போகும்.
பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்