Aug 18, 2012

கானல் - திலீப்குமார்

மெல்ல மெல்ல, அந்த அறையின் புழுக்கத்தையும் அங்கு திடீரென்று படிந்து விட்ட நிசப்தத்தையும் அவர்கள் உணரத் துவங்கினார்கள். அறையின் மூலையில் எரிந்து கொண்டிருந்த நீல நிற சிறிய விளக்கின் மங்கிய ஒளியில் அவர்கள் கரிய நிழல்கள் போல் உறைந்து கிடந்தார்கள். அவர்களது நிர்வாணமான சிவந்த உடல்கள் ஒரு வகையில் பிணங்கள் போன்றும் தெரிகின்றன. அதிருப்தியால் வதங்கிய மலர்களுடன் அவர்கள் கிடந்தார்கள். உடல்களிலிருந்து வீசிய வியர்வையின் நெடியும், படுக்கையில் படிந்த லேசான ஈரமும் பொறுக்க முடியாததாக இருந்தது. என்றாலும், அங்கு நிலவிய மௌனம் கலைக்கப்படாமல் இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். ஏமாற்றத்தின் கொந்தளிdileepe ப்பு மிகுந்த வெறுமையை அந்த அறையின் இருளிலும், நிசப்தத்திலும் கரைத்துவிட முயன்றார்கள் போலும். அவள், கால்கள் ஒன்றின் மேல் மற்றது கிடக்க உத்திரத்தை வெறித்தபடி நேராகக் கிடந்தாள். மூச்சு விட அவளது ஸ்தனங்கள் சீராய் மெல்ல அசைந்ததைத் தவிர சலனமற்றுக் கிடந்தாள். இவன் பக்கவாட்டில் சாய்ந்து முகத்தை அவளது தோள்களில் புதைந்தபடி இருந்தான். அந்நிலையிலிருந்தே இவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் படுத்திருந்த விதமும், அவளது அதிருப்தியுற்ற நிர்வாணமும் இவன் மனதைத் தொட்டது. அவள் கண்கள் பனித்திருந்தன என்றும் இவனுக்குப்பட்டது.

இந்த இடத்தின் தனிமை அவர்களுக்கு அன்று மதியம் தான் ஊர்ஜிதமாயிற்று. இவன் அவளிடம் அதை தெரிவித்த போது எவ்வித தயக்கமுமின்றி ஒப்புக் கொண்டாள். இருவருக்குமிடைய ஆழ்ந்த கவர்ச்சி என்றும் இருந்ததில்லை. என்றாலும், கிடைத்தால் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்கிற அளவு சஞ்சலம் இருந்தது இருவருக்கும். எப்படியோ ஒருவர் மனதை மற்றவர் அறிந்து வைத்திருந்தார்கள். சற்றுக் கழித்து, அவள் எதையோ லேசாக தீர்மனித்துக் கொண்டவள் போல் சிறிது நகர்ந்து கொண்டாள். இவனும் மௌனமாக விலகி படுத்தான். இவனுக்கு ஏதாவது பேசலாம் என்று தோன்றியது. ஆனால் பேசவில்லை. பேசுவதா அல்லது பேசாமலிருப்பதா அச்சந்தர்ப்பத்தில் எது உசிதம் என்று இவனால் நிச்சயிக்க முடியவில்லை. அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்று இவன் நினைத்துப் பார்த்தான். குழப்பமாக இருந்தது. இவனுக்கு முன்பாகவே, அவள் இந்த இடத்தை வந்து அடைந்திருந்தாள். இவன் கதவை தட்டியபோது தளர்த்திக்கட்டிய கேசத்துடன், வெளிர் நீல புடவையில் பவுடர் மணக்க இவன் முன் தோன்றினாள். இவன் உள்ளே வந்ததும், கதவை தாழிட்டு விட்டு இவனை பார்த்துக் கண்களில் அர்த்தம் தொனிக்க முகம் மலர சிரித்தாள்.

அவள் உடல் முழுவதிலுமிருந்து ஒரு வினோத ஆவல் வெளிப்பட்டது போல் தோன்றியது. அவளது விழிகளின் கருமணிகளில் படர்ந்திருந்த பளபளப்பு நிலவின் விரக ஒளிபோல் தாக்கியது. அவர்கள் ஒன்றும் பேசாமல் இறுகத் தழுவிக் கொண்டார்கள். இவன் அவளது தலையை வருடியபடி அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவள் ஒரு அழகிய விலங்கைப் போல் இவனது கைகளில் தகித்து உருகினாள். சிறு குழந்தைகள் போல் அலங்கோலமாக உடைகளைக் களைந்து கொண்டே படுக்கையை அடைந்தார்கள்.

அவள் ஒரு உலர்ந்த மரத்துண்டைப்போல் கிடந்தாள். இவன் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளே முதலில் பேசினாள். “நாம் எழுந்து கொள்வோம். நேரமாகி விட்டது என்று நினைக்கிறேன்.” தொடர்ந்து “விளக்கைப் போடலாமா” என்று கேட்டாள். இவன் வேண்டாம் என்று பதில் சொன்னான். பின் மெல்ல இருவரும் எழுந்து கொண்டார்கள். இவன் அவளைப் பார்த்தான். அவளது அழகிய உடல் ஓர் அற்புத சிற்பம் போல் தோன்றியது. இவன், திடீரென்று அவளை அணைக்க விரும்பி தாபத்துடன் அவளது தோள்களைத் தொட்டான். சட்டென்று அவள் இவன் கைகளை விலக்கி விட்டுக் கொண்டே “போதும்” என்று நிராசை மிகுந்த குரலில் சொன்னாள். இவன் பின்வாங்கி, ஒன்றும் பேசாமல் அவளைக் கடந்து முன்னறைக்குச் சென்றான். இவன் உடைகள் அணிந்து, அவளுக்காகக் காத்திருந்தான். முன்னறையில் தனக்கு வீட்டை உபயோகிக்க கொடுத்த, நண்பனின் மனைவியுடன் கூடிய புகைப்படம் முன்னறையில் மாட்டப்பட்டிருந்தது. இருவரும் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். இவன் தன் நண்பனின் மனைவியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அந்த பெண்முகம் தன் எளிய புன்னகைக்குப் பின்னாலிருந்து இவனைப் பார்த்து ஏளனம் செய்வது போல் இருந்தது. இவன் குழப்பத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டான். மூடிய கண்களுக்குள் மீண்டும், சற்றுமுன் அவளது வாளிப்பான உடல் தன் மீது சரிந்திருந்த காட்சி தெரிந்தது. அன்றைய கூடலில் பிசகு ஏதும் ஏற்படாது என்றே இவன் நினைத்திருந்தான். அவளது அழகான சிறிய மார்பகங்களை முத்தமிட துவங்கிய போது அவள் இவனை இறுக அணைத்துக் கொண்டாள். மூச்சுக் காற்றின் மயக்கும் ஆவேசம் ஜ்வாலையாக எங்கும் படர அவர்கள் கரைந்து அழிந்து கொண்டிருந்தார்கள். மெல்ல, மெல்ல, நிறைவேற்றத்தை நோக்கிய மென்மையான பாய்ச்சல்கள் துவங்கியபோது உலகமே சுற்றியது. இதோ இதோ என்று உச்சத்தை நோக்கிய கடைசி துடிப்புகளின் போது தான் எல்லாமே திடீரென்று மாறியது. அலைகள் பின் வாங்க இவன் விழுந்து நொறுங்கினான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவள் அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாதவளாக முகமும் உடலும் பதற பயங்கரமாக அசைந்து புரண்டாள். இவன் குற்ற உணர்வுடனும், வாஞ்சையுடனும் அவளைத் தாங்கிக் கொண்டான். நீரிலிருந்து திடீரென்று வெளியே எடுக்கப்பட்ட மீன் போல சிறு துடிப்புகளுக்குப் பின் அடங்கிப் போனாள் அவள். இவன் அவளை விட்டு மெதுவாக விலகினான். எல்லாமே கணங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது. அவள் திடீரென்று விசும்பல்களுடன் அழத் துவங்கினாள். இவன் பேசாமல் கிடந்தான். அவள் முன்னறைக்கு வந்தவுடன், இவன் கிளம்ப ஆயத்த மானான். அவள் முகம் தெளிவாக இருந்தது. கண்களில் அதிருப்தியின் தீவிரம் குறைந்திருந்தது. அவள் இவனை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.

வீட்டைப் பூட்டி விட்டு இருவரும் தெருவுக்கு வந்தார்கள். தெரு வெறிச்சோடியிருந்தது. வானத்தில் நிலவு மிதந்து கொண்டிருந்தது. இருவரும் பஸ் நிறுத்தத்தை நோக்கி மெல்ல நடந்தார்கள். சாலை மரங்களின் இலைகள் சலசலக்க காற்று வீசிய போது இவனுக்கு ஒரு அலாதியான விடுதலையுணர்வு ஏற்பட்டது. மனதின் இறுக்கம் குறைந்தது.

இவன் : என்னை மன்னித்து விடு.
அவள் : எதற்காக?
இவன் : ……இல்லை…. என்றுமே இப்படி நடந்ததில்லை. நீ எப்படி உணர்ந்து கொண்டிருப்பாய் என்று எனக்குத் தெரியும்.
அவள் : பரவாயில்லை. எனக்கு ஒன்றுமே வருத்தமில்லை.
இவன் :நான் எதையும் நிரூபிக்க விரும்பவில்லை என்றாலும் சொல்கிறேன் இப்படி நடப்பது இது தான் முதல் முறை
அவள் : பரவாயில்லை.
இவன் : ஒரு வேளை, இன்று நான் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேனா
அவள் : சரி பரவாயில்லை விடு.
இவன் : இல்லை. இந்த வாய்ப்பின் திடீர்தன்மைதான் என்னை தேவைக்கதிகமான பரவசத்திற்குள்ளாக்கி விட்டது.
அவள் : சரி விடு.
இவன் : உன் துணிகரத்திற்கு பயனில்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது.
அவள் : போதும், பேசாதே.
இவன் : உனக்கு என் மீது ஒரே வெறுப்பாக இருக்கிறது இல்லையா?
அவள் : இல்லை.
இவன் : என் உடலின் ஆற்றல் குறித்தும் உனக்கு சந்தேகம் வந்து விட்டிருக்கும்.
அவள் : இல்லை.
இவன் : நீ பொய் சொல்கிறாய்.
அவள் : போதும் நிறுத்து.
இவன் : தயவு செய்து, நீ என்னை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே- குறிப்பாக உன் கணவரோடு.
அவள் :………………
இவன் : அடுத்த முறை………….
அவள் : போதும் உன் உளறல்.

அவர்கள் ஒன்றும் பேசாமல் நடந்தார்கள். பஸ் நிறுத்தம் இருந்த பெரிய சாலையை அடைய இன்னும் சில நிமிடங்கள் நடக்க வேண்டியிருக்கும். இவன் வானத்தை பார்த்தபடி நடந்து வந்தான். அவள், தெருவில் விழுந்த தன் நீண்ட நிழலை கவனித்துக் கொண்டே வந்தாள். திடீரென்று இவன் மீண்டும் பேசினான்.

இவன் : நாம் இன்று சந்தித்திருக்கவே கூடாது.
அவள் : நாம் என்றுமே சந்தித்திருக்கவே கூடாது.

பஸ் நிறுத்தம் காலியாக இருந்தது. அவர்கள் மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள்.

***

நன்றி : திலீப்குமார் ‘ஆபிதீன் பக்கங்கள்’

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

NandhuSindhu on November 22, 2012 at 6:50 PM said...

மிக மிக ஆபாசமாக, உடலுறுப்புக்களின் பெயர்கூடச் சொல்லாமல், எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு.

radhakrishnan on June 20, 2013 at 12:26 PM said...

அருமையான கதை. நன்றி ராம்

Unknown on September 14, 2013 at 12:15 PM said...

MANITHANIN ADIPADI MATRUM MIRUGA ICHAIAI AZAGAGA SOLLI IRUKIRAR. NANDRI

Unknown on April 30, 2014 at 8:40 PM said...

மிகச் சரியான தலைப்பு.......

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்