Feb 23, 2013

வந்தான்,வருவான்,வாராநின்றான் - நாஞ்சில்நாடன்

ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை வெயிலில் அலைவதென்பது அன்றாடம். தலையில் இருந்து மயிர்க்காடுகள் வழியாக நீரூற்றுக்கள் வழிந்தன. அன்று வெயில் மேலும் காட்டமாக இருந்தது. தூசுகள் மினுங்கிய சந்துகள் nanவழியாக நிறைய அலைய வேண்டியது இருந்தது.

மொரார்ஜி மில்லின் இரண்டாவது யூனிட் பக்கமுள்ள சந்து வழியாக பிரகாஷ் மில்லுக்கு நடந்து  போய்வருவது என்பது செளகரியமான காரியம் அல்ல.அந்த பாதையில் பஸ்கள் போவதில்லை.நகரின் அந்தப் பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.டாக்ஸியில் போனால் கட்டுப்படி ஆகாது.அந்த வெயிலிலும் இறுக்கமான சாட்டின் பாவடையும் ரவிக்கையும் போட்டுக்கொண்டு குடிசை வாசல்களில் புணர்ச்சிக்கூலிக்கு ஆள் தேடிக்கொண்டு நிற்கும் பருவம் தாண்டிய தெலுங்குக்காரிகள்.

நாக்கை வறட்டியது தாகம்.எலுமிச்சம் பழமும் இஞ்சியும் சேர்த்துச் சதைத்த கரும்புச்சாறு ஐஸ் போட்டு இரண்டு தம்ளர்கள் இறங்கியும் நாவறட்சி தணியவில்லை.

மாலையில் மூக்கு ‘ஙொணஙொண’ என்றது.தொண்டையில் இளஞ்செருமல்.அடுத்த நாள் காலையில் மூக்கு அவ்வளவாய் ஒழுக வில்லை என்றாலும் நாசித்திமிர்கள் ‘கணகண’வென்று தணிந்து எரியும் அடுப்பாய் காந்தின.அன்று மேலும் அலைச்சல்,வெயில்,தூசி,ஐஸ் போட்ட கரும்புச் சாறு.

மூன்றாம் நாள் எழுந்திருக்கும்போது மேல் எல்லாம் வலிப்பது போலிருந்தது.வறண்ட இருமல்.சுவாசிக்கச் சற்று சிரமமாக இருந்தது.ஒருநாள் ஓய்வெடுத்தால் சரியாகிப் போகும் என்று வேலைக்குப் போகவில்லை.இரவில் மூச்சுவிடும்போது விரல்களால் இருபக்க செவித்துவாரங்களை அடைத்துவிட்டுக் கேட்டால் விசில் அடிப்பது போல் சன்னமான ஒலி.மறுநாள் காலையில் பாத்ரூம் போய்விட்டு வந்தாலே மூச்சு வாங்கியது. தொடர்ந்து பேசினாலும் இருமல் வந்தது.நெற்றியில் வியர்வை துளிர்த்தது.விக்ஸ்,அமிர்தாஞ்சன்,கோல்ட்ரின் பிளஸ்,ஆக்‌ஷன் நானூற்றுத் தொண்ணூற்று எட்டு எதுவும் எடுபட வில்லை. சுக்கும் மிளகும் தட்டிப்போட்ட கருப்பட்டிக் காப்பி சற்று இதமாக இருந்ததே தவிர நிவாரணம் இல்லை.

சாயங்காலம் மெதுவாக நடந்து கடைத்தெருப்பக்கம் வந்தான்.வழக்கமாய் இது போன்ற சில்லறை உபாதைகளுக்காய் பார்க்கும் வாமன்ராவ் பாட்டீல் அன்று வார விடுமுறை.நல்ல டாக்டராய் பார்த்துக் காட்டலாம் என்று பாலிகிளினிக் வாசல்களில் பெயர்ப்பலகைகளை படித்துக்கொண்டு நடந்தான்.மனதுக்கு பிடித்த மாதிரி ஒரு பெயரும் அமையவில்லை.ஜரிவாலா,லோகன்ட் வாலா,பாட்லி வாலா என்று தொழிலுகு சம்பந்தமில்லாமல்...சூரத் மிட்டாய் வாலா கடைக்கு அடுத்த வாசலில் டாக்டர் விஜய் நெகலூர் என்று கண்டிருந்தது.இவரே ஆகலாம் என்று முதல் மாடி ஏறி போனான்.மாடிப்படி ஏறுகையில் இளைத்தது.மூச்சு வாங்கும் சத்தம் சன்னமான சோகரசம் பிழியும் ஷெனாய் வாத்தியம் போல பொதுமக்களுக்குக் கேட்குமோ என்று அச்சமாக இருந்தது.

டாக்டர் இருந்தார்.கூட்டம் அதிகமில்லை.’இந்த நோயினால் நீங்கள் செத்து போகத்தான் வேண்டுமென்றால் கவலைப்பட்டு பயனில்லை. சாகப்போவதில்லை என்றால் எதற்காக கவலைபட வேண்டும்’ என்ற ரீதியில் ஆங்கில வாசகம் கொண்ட அட்டை சுவராசியம் தருவதாக இருந்தது.

தன்முறை வந்ததும் உள்ளே போனான்.சுருக்கமாகச் சொன்னான்.குழல் வைத்து பரிசோதித்து,நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் பார்த்தார்.கண் இமைகளைத் தாழ்த்திப் பார்த்தார். பலமாக மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்தச் சொன்னார்.மிகச்சிரமமாக இருந்த்தது.நெற்றியில் வியர்வை துளிர்த்தது. குறுஞ்சுவாசம் பறிந்தது.

“கடுமையான பிராங்கைடிக் அட்டாக்.எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால்தான் நுரையீரலுக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தை அனுமானிக்க முடியும்.ஆனால், எக்ஸ்ரே எடுக்கும்போது, இந்த நிலையில் மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொள்வது முடியாத காரியம். கூட யார் வந்திருக்கிறார்கள்?”

“ஒருத்தரும் இல்லை.தனியாகத்தான் வந்தேன்.”

“உடனே அட்மிட் ஆவது நல்லது.குளுகோசுடன் நரம்பு மூலமாகத் தொடர்ந்து ஒருநாள் மருந்து செலுத்த வேண்டும்.”

“மாத்திரையிலே சரியாகாதா டாக்டர்?”

“சரியாகும்.ஆனால்,நாளாகும்.நான் சொல்வது உடனே கண்ட்ரோல் ஆகும்.”

“வீட்டுக்கு தகவல் சொல்லணும்.”

“அதுக்கு வேணும்னா ஏற்பாடு செய்யலாம்.”

“இல்லை.பயந்திருவாங்க. நாளை காலையிலே வந்து அட்மிட் ஆயிருவேன்.”

“சரி.அப்படியே செய்வோம்.இப்போ இண்ட்ரா வெயின்ல ஒரு இன்ஜக்சன் தர்றேன்.கொஞ்சம் ரிலீஃப் இருக்கும்.”

காலரா தடுப்பு ஊசியும் அம்மை குத்தும் மாத்திரம் மற்றும் ஏற்றுக்கொண்ட உடம்பு.நரம்புக்கு அலைந்து தேடிப்பிடித்து ஊசி மூலம் மருந்து செலுத்தும்போது உடல் முழுவதும் ஒரு கணப்புப் பரவியது.சூடாகச் சற்றுப் பருகத் தந்தனர்.

“எப்படி வந்தீங்க?”

“நடந்துதான்.”

“போகும்போது ஆட்டோல போங்க.தூசு வந்தா கர்சீப்பால மூக்கைப் பொத்திக் கொள்ளணும்.”

வீடு வந்து சேர்ந்து,நயமாக சொன்னான்.இரா முழுக்க காலையில் போய் அட்மிட் ஆகிக்கொள்வதா,இல்லை வேறு டாக்டரைப் பார்க்கவா என்று சர்ச்சை.எரிகிற கொள்ளியில் எதுவானால் என்ன என்றொரு தேறுதல்.காட்சிகளைத் தாறுமாறாகப் பிரித்துப் போட்டது பொல் கனவுகள்.

ஊரில் விறகுக்கம்பு தறிக்கையில் வெட்டுக்கத்தி காலில் பாய்ந்து நெல் நீளத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து கொப்பளித்த ரத்தம் பார்த்து மயக்கம் வந்து விட்டது ஒருமுறை.

கல்யாணம் ஆகுமுன் அறையில் உடன் தங்கியவன் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் கிடந்தபோது பார்க்கப் போனதில் அவன் மயக்கம் தெளியாமல் கிடந்தது காண தலைச்சுற்று வந்தது.

காலையில் வெந்நீர் போட்டுக் குளித்து அரைகுறையாய் ஆகாரம் செய்து,ஆட்டோ பிடித்து நர்சிங் ஹோம் போய்ச் சேர்ந்தபோது டாக்டர் வந்திருந்தார்.

படுக்கை எதுவும் காலியாக இல்லை.தற்காலிகமாய் இண்டன்ஸிவ் கேர் யூனிட் காலியாக இருந்ததால் அதில் படுக்கப் போட்டார்கள்.இரும்புக் கட்டில் உயரம் சரிசெய்து குளுக்கோஸ் பாட்டில் ஸ்டாண்ட் போட்டு, பாட்டில் தொங்கவிட்டு, இடது புறங்கையில் நரம்பு பிடித்து,ஊசி ரப்பர் குழல் எல்லாம் பொருத்தி குளுகோஸ் சொட்டுச் சொட்டாக இறங்க ஆரம்பித்தபின் மருந்தொன்றை அதில் மஞ்சளாய் கலந்துவிட்டுப் போனாள் செவிலி.பார்க்க நன்னாரி சர்பத் போல இருந்தது. நிமிடத்துக்கு ஆறு சொட்டுகள் வீதம் இறங்கி கொண்டிருந்தது.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு, சொட்டுகளைச் சற்று துரிதப்படுத்தி விட்டுப் போனார். மனைவியிடம் வீட்டுக்குப் போய்விட்டு மத்தியானம் சாப்பிடச் சூடாக ஏதும் கொண்டு வரச் சொன்னார்.கையை அதிகம் அசைக்க வேண்டாம் என்றும் பாத்ரூம் போக வேண்டுமானால் நர்சிடம் சொல்லி குளுக்கோஸை நிறுத்திவிட்டு சட்டென்று போய்வரும்படியும் சொன்னார்.

ஏ.சி ரூம் குளிர்ச்சியாக இருந்தாலும் நேரம் நகராமல் புழுக்கமாக இருந்தது.ஏதாவது படிக்கக் கொண்டுவந்திருக்கலாம்.

நிமிடத்துக்கு பதினேழு சொட்டுகள் என இறங்கிக் கொண்டிருந்தன. அவ்வளவு அழகும் சதைப்பிடிப்பும் நிறப்பொலிவும் இல்லாத மலையாளத்து நர்ஸ் ஒருத்தி வந்து மிகவும் வேகமாகப் போகிறது என்று கூறி குறைத்துவிட்டுப் போனாள்.

தீவிரமான பசியாக இல்லை.ஐந்து விரல்களில் பிசைந்து தின்னும் ஈடுபாடு ஸ்பூனில் கிளறிச் சாப்பிடுவதில் இல்லை.கீரைத் தண்டு புளிக் கறியும் சோற்றுப் பருக்கைகளும் சம்மந்தமில்லாமல் கிடந்தன. பாத்ரூம் போய்விட்டு வந்தபின் மறுபடியும் ஊசியில் மடித்து வைத்திருந்த ட்யூபைச் செருகிய நர்ஸ் சொட்டுக்களின் வேகத்தை அதிகரித்துவிட்டுப் போனாள். நிமிடத்துக்கு இருபத்தி மூன்று சொட்டுக்கள் வீதம் இறங்கிக் கொண்டிருந்தது. சனியன் சாயங்காலத்துக்குள் தீர்ந்தால் சரி என்று தோன்றியது.

சரியாக உறக்கம் வரவில்லை. இடது கையை அசையாமல் வைத்துக் கொண்டு மல்லாந்து படுத்துப் பிணம்போல் எவ்வாறு தூங்க முடியும்? கையை மட்டும் கட்டில் தள நிரப்பில் வைத்துக்கொண்டு சற்றுநேரம் உட்கார்ந்திருந்தான். நெடுநேரம் அவ்வாறு உட்காரலாகாது என்று வேறு ஒரு நர்ஸ் அதட்டிவிட்டுப் போனாள். பூமி இருசில் சுழல்வதற்கான அரவங்கள் அற்றுப்போனது போல் இருந்தது.

ஏழு மணிக்கு டாக்டர் வந்தார்.மருந்து தீரும் தறுவாயில் இருந்தது.மூச்சுவிடுவதில் சற்று ஆசுவாசம் கிடைத்திருப்பது போலத் தோன்றியது.ஆனால் ஒரு விதமான வாந்தி வரும் உணர்வும் லேசான தலை சுற்றலும் புலப்பட்டுக் கொண்டிருந்தது.டாக்டரிடம் சொன்னான்.இவ்வளவு வேகமாக மருந்தை அட்ஜஸ்ட் செய்தது யார் என்று நர்ஸை சத்தம் போட்டார்.

“ஐ யாம் சாரி..இருபத்தி நாலு மணி நேரம் மருந்து போயிருக்கணும்.வேகமாக ஓடி விட்டது. பீப்பில் ஆர் ஸோ கேர்லெஸ் யூ ஸீ…எனிவே நத்திங் டு வொரி.. நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க.காலையில் பார்க்கிறேன்.”

எட்டு மணி வாக்கில் குளுக்கோஸ் ஸ்டாண்ட்,கையில் செருகி இருந்த ஊசி, ரப்பர் குழல் எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு,காயம் இருந்த இடத்தில் சதுரப் பொட்டு ஒன்றை ஒட்டிவிட்டுப் போனாள்.

இரவு மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது. நர்சிங் ஹோம் காற்றில் மிதந்த அரசிலைச் சருகு போல் அலைந்து அலைந்து அடங்கிக் கொண்டிருந்தது. நல்ல உறக்கத்தில் இருந்த போது ‘தடதட’ வென்று சத்தம் கேட்டது. அவசர அவசரமாக ஒருவரைக் கொண்டு வந்து காலியாக இருந்த மற்ற கட்டிலில் கிடத்தினார்கள். குள்ளமாக உருட்டுக் கட்டை போல இருந்தார். ஐம்பது வயது இருக்கும். சூழல்,பதட்டம் நிறைந்ததாக மாறியது.

இரவு ட்யூட்டியில் இருந்த பயிற்சி டாக்டரைச் சுற்றி இரண்டு மூன்று நர்சுகள். இ.சி.ஜி. இயந்திரம் பொருத்திய உடன் உணர்ச்சிமயமான தமிழ் திரைக்காவியம் போலப் படம் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. கனமான ஊசி ஒன்றைப் போட்டுவிட்டுப் போனார்கள். சற்று நேரத்தில் டாக்டர் நெகலூர் வரும்போது சுரேஷ் பிரதான் ஆழ்ந்த சுக நித்திரையில் இருந்தார். மாஸ்ஸிவ் அட்டாக், பிழைக்கும் வாய்ப்பு ஐம்பதுக்கு ஐம்பது என்று சொன்னார்கள்.

இரவு பதினொன்றரை மணி இருக்கும்.உறவுகள்,தெரிந்தவர்கள் ஒவ்வொருவராய் வந்து பார்த்து போனவாறு இருந்தனர். கவலை தோய்ந்த முகங்கள். சேலைத்தலைப்பை வாயில் புதைத்தபடி மனைவி,உடன் பிறந்தவள்…

யாராவது ஒருவர் இரவு அருகில் தங்கலாம் என்று மற்றவரைத் துரத்தியவாறு இருந்தனர். ஆரிய நிறம் மாசற்று இறங்கியிருந்த, மீன் மாமிசம் உண்கிற காயஸ்த பிராம்மணர் என்று தெரிந்தது.

தூக்கம் முற்றிலுமாக பறந்து விட்டது. சாவின் மூச்சுக்காற்று நரை படர ஆரம்பித்திருந்த காதோர முடிகளைக் கலைத்துக்கொண்டிருப்பது காணக்கிடைத்தது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உயிருக்கு மனிதன் என்ன நாற்பத்தெட்டு மணி நெரக் கெடு வைப்பது என்று இலேசான நகைப்பொலி.

என்ன வேலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.பெண்கள் கல்யாணத்துக்கு நிற்பார்களோ என்னவோ? அல்லது தங்கைகளுக்கு கல்யாணம் செய்து களைத்துப் போனவராகக்கூட இருக்கலாம். குடியிருக்கும் ஃபிளாட்டுக்கு இன்னும் பத்தாண்டுகளுக்கு தவணை பாக்கி இருக்கலாம்.

காலதூதர்கள் சற்று கருணை காட்டலாம் என்று தோன்றியது.கருணை காரணமாக ஆள் மாறித் தன்னைக் கொண்டு போய்விடவும் வாய்ப்பு உண்டு என்று எண்ணியபோது கிலி சூழ்ந்தது. கருணை என்பது கூடத் தன்னலம் தாண்டித்தான் போலிருக்கிறது.

உறங்க வேண்டும் போலவும் உறக்கம் வராமலும் களைப்பாக இருந்தது. சற்று கண்ணயர்ந்தபோது தடாலென ஒரு சத்தம். அடித்துப் பிடித்து எழுந்து பார்த்தபோது ப்ரதான் கட்டிலில் இருந்து உருண்டு கீழே கிடந்தார். காவலுக்கு இருந்தவரும் கண்ணயர்ந்தார் போலும். இரண்டு பேருமாய்த் தூக்கி கிடத்தும் கனத்தில் இல்லை அவர். சத்தம் கேட்டு ஓடிவந்த நர்சுகளும் பயிற்சி டாக்டருமாய் சேர்த்துப் பிடித்து கட்டிலில் கிடத்தி, மறுபடியும் உபகரணங்கள் பொருத்தி, காவலுக்கு இருந்தவரை எச்சரித்து…

மணி ஒன்றே முக்காலாகி இருந்தது. மேலும் அரைமணி ஆகியும் உறக்கம் வரவில்லை. காலதூதர்கள் போய் விட்டார்களோ என்னவோ! ஒருவேளை சிரமபரிகாரம் செய்துவிட்டு மறுபடியும் வரலா. அவர்கள் மீண்டும் வரும் வேளையில் இங்கு இருக்க வேண்டாம் என்று தோன்றியது. வேறெங்காவது போய்ப் படுத்தால் இனிமேலும் நான்கு மணி நேரமாவது தூங்கலாம். வீட்டிலிருந்து மூடுவதற்குக் கொண்டு வந்திருந்த பெட்ஷீட்டையும் நர்சிங்ஹோம் தலையணையயும் எடுத்துக்கொண்டு நடந்தான். பயிற்சி டாக்டர் மேஜை மீது தலைகவிழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். நர்சுகள் யாரும் தென்படவில்லை. வெளியே வந்து சற்று எட்டிப் பார்த்தான். நள்ளிரவு தாண்டிய காற்றின் சலங்கையொலி.வராந்தாவில் வாட்ச்மேன் படுத்திருந்தான். டாக்டரைக் காண வருபவர் உட்காரும் பெஞ்சு ஒன்று காலியாகக் கிடந்தது. தலையோடு போர்த்திக் கொண்டு கிடந்ததுதான் தெரியும். கொசுக்களின் ராகமாலிகைகூட அவ்வளவாகத் துன்புறுத்தவில்லை.உறக்கச் சுழல் இழுத்துக்கொண்டு போயிற்று.

தோளைப் பிடித்து யாரோ உலுக்குவது போலிருந்தது. பரபரத்து விழித்தவனுக்கு இடம் பொருள் ஏவல் ஒன்றும் புலனாகவில்லை. மலையாளத்தில் நர்ஸ் ஒருத்தி அதட்டிக்கொண்டிருந்தாள்.

“நிங்கள் எந்தாணு இது காட்டிக் கூட்டியது? ஞான் பேஷண்டைக் காணாத எவிடயொக்க அன்யேஷிச்சு!ம்…ஆளு தரக்கேடில்லல்லோ..போயின்…பெட்டில போய் கிடக்கான்…”

சுவர்க்கடிகாரம் நாலேகால் காட்டியது. சற்று நேரம் உறங்கக் கிடைத்ததே பாக்கியம். ப்ரதான் உடலில் மாட்டியிருந்த ஈ.சி.ஜி திரை சற்று பதட்டம் குறைந்ததுப்போல் இருந்தது.

பாத்ரூம் போய், பல் துலக்கிவிட்டு வந்தபோது சூடாக ‘சாய்’ தந்தார்கள். மூச்சிரைப்பு சற்று அடங்கி நிதான கதிக்கு வந்தது போலத் தோன்றியது. எட்டரை மணிக்கு டாக்டர் வந்து ப்ரதானை நெடுநேரம் பரிசோதித்தார். அவர் கால்மாட்டில் தொங்கிய அட்டவணையில் சில வரைந்தார். பிறகு இவனிடம் வந்து, “ஆர் யூ ஃப்லீங் பெட்டர்?”என்று கேட்டார்.அட்டவணையை பார்த்தார்.”பல்ஸீம் பி.பியும் அதிகமாக இருக்கு..சாயங்காலம் பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்கிறேன்” என்றார்.இரவில் தூங்காததையும் பதட்டமான சூழலையும் சொன்னான். “அதற்கென்ன, படுக்கையை மாற்றி விடுகிறேன்” என்றார். இறைஞ்சுவது போல் மறுபடியும், “சார்” என்றான். “பயப்படாதீங்க…ஒரு டாக்டருக்கு எப்ப டிஸ்சார்ஜ் செய்யக்கூடாது என்பது தெரியும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ப்ரதானுக்கு இந்த அவஸ்தை எல்லாம் இல்லை.ஒன்றும் அறியாத உயிர் ஒடுங்கும் நிலையில் கிடந்தார்.

நர்ஸ் வந்து, “ஹோ..நிங்கள் ஒரு சல்லியமாணல்லோ! ஏ.சி.ரூமில் சுகமாயிட்டு கிடந்தா மதி. பெட் ஒழியண்டே…” என்று சொல்லிப் போனாள்.

ப்ரதானுக்கு பகல் பூராவும் விசிட்டர்கள். “துமாலா காய் ஜாலா ஹோ?” என்று அவனைப் பற்றியும் இரண்டொரு உசாவல்கள். மறுபடியும் மாலைவரை ஒரு வேலையும் இல்லாத காத்திருப்பு. இப்படி டென்ஷன் ஆகிக்கொண்டிருந்தால் மாலையும் பி.பி குறையாது என்று தோன்றியது. ப்ரதானுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லை. கடுமையான செடேட்டிவ் கொடுத்திருப்பார்கள்.

மாலையில் பில்லுக்கு பணம் செலுத்தி, நிறைய அறிவுரைகள் வாங்கி, தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைகள் எழுதி வாங்கி, ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து படுத்தபோது விச்ராந்தியாக இருந்தது.

காதுகளை இரண்டு விரல்களாலும் பொத்திக்கொண்டு மூச்சுச் சத்தத்தை கவனித்தான்.எலிக்குஞ்சுகள் பொந்துக்குள் இல்லை.ஆவி பறக்கும் சோறும் வழுதுணங்காய் மொளவச்சமும் முகத்தில் மோதியது.படுத்ததும் தூக்கம் அள்ளிக்கொண்டோடிற்று.

இரண்டு நாட்கள் பொறுத்து அலுவலகம் புறப்படும்போது, மாலை திரும்புகையில் நர்சிங் ஹோம் போய் ப்ரதானைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை இறந்து விட்டிருந்தாலோ என்ற அச்சம் தினமும் தடை செய்துகொண்டிருந்தது. பிறகு மறந்து போய்விட்டது.

சதங்கை ஏப்ரல்-ஜூன் 1996

தட்டச்சு : ராகின்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

9 கருத்துகள்:

கோமதி அரசு on February 23, 2013 at 8:46 PM said...

இரண்டு நாட்கள் பொறுத்து அலுவலகம் புறப்படும்போது, மாலை திரும்புகையில் நர்சிங் ஹோம் போய் ப்ரதானைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை இறந்து விட்டிருந்தாலோ என்ற அச்சம் தினமும் தடை செய்துகொண்டிருந்தது. பிறகு மறந்து போய்விட்டது.//

இதுதான் யதார்த்த வாழ்க்கை.

Bala on March 17, 2013 at 6:41 PM said...

He never disappoints.Always a pleasure enjoying his work.

Catherine Augustine on April 18, 2013 at 1:43 PM said...

Excellent story..

Rathnavel Natarajan on April 28, 2013 at 4:47 PM said...

அருமையான பதிவு.
நன்றி.

krishna on August 8, 2013 at 10:49 AM said...

அருமை.. அழகான நடை...
"வழுதுணங்காய் மொளவச்சமும்" - என்பதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை . யாரேனும் விளக்கவும்.

Rajagopal on September 6, 2014 at 7:05 PM said...

karunai enbathu kuda thannalam thandithan polirukirathu!

Mugilan on February 17, 2016 at 4:04 PM said...

அருமையான நடை! நாஞ்சில் நாடனின் மற்றுமொரு நல்ல சிறுகதை!

Unknown on May 20, 2017 at 8:42 AM said...

நல்ல கதை....

kavignar ara on February 25, 2023 at 1:51 PM said...

அருமையான உளவியல் சிந்த்னையும் சித்தரிப்பும் நாடனுக்கு கை வந்த கலையானது வாழ்க நாடன் நீங்களுமே -- கவிஞர் ஆரா

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்