Jun 17, 2010

விடுமுறை வேண்டும் உடல்-சமயவேல்

விடுமுறை வேண்டும் உடல்

எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு
தன்னைப் பற்றியே
பெரும் கவலை கொள்கிற உடல்
முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு
நச்சரிக்கிறது
பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என samyavel6
எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது
சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும்
முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது
வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை
என எப்படியும் இருப்பேன் என்கிறது
விடுமுறை விடுமுறை எனும்
யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது
எதுவும் செய்யாமல் அக்கடா என்று
சும்மா கிடக்கும் ஆனந்தம்
பற்றிய அனேக நிறமிகளை
மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது
மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன்
வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது
எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம்
கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன்.


அழகென்னும் அபாயம்

ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில்
ஊர்தி எந்திரம் நிறுத்தி
சாலையோரம் கொஞ்சம் நடந்து
ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி
சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன்
நுணா மரப் புதரொன்றில்
ஒரு சிறு பறவை
இறகுகள் அடர் சிவப்பு
கழுத்து மயில் நீலம்
உருண்டை வயிறு சாம்பல் நிறம்
கொண்டை மஞ்சள் நிறம்
கண்கள் என்ன நிறம்?
கால்கள் பசுமஞ்சள் நிறம்
விரல்கள் அரக்கு நிறம்
நிற்கிற மரமோ மர நிறம்
அந்த இத்தினியூண்டு பறவை
கொண்டையை ஆட்டி
ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது
என் பெரு நகர ஆத்மாவின் தலை
வெட்டுண்டு உருண்டது
மரணத்தின் விளிம்பை
ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல்
கூவல் முடித்து பறவை
விருட்டென்று பறந்தோடியதும்
உயிர் மீட்டு
ஓர் குழந்தையாக நின்றேன்

இரவென்றால் என்ன ?


என் எல்லாக் காயங்களையும்
இந்த இருட்டா ஆற்றிவிட முடியும் ?
கோர்த்துக் கொள்கிறேன்
உன் விரல்களுக்குள் என்னை.
என் எல்லாத் தாகங்களும்
அடங்கிவிடும் என்று
உன் சிறிய உதடுகளைக்
கவ்விக் கொள்கிறேன்
கால்கள் வயிறு மார்பு என
முழுசுமாய் ஒட்டிக் கொள்ள
உயிர் நாக்கின் தீண்டல்கள்
மூச்சென்பது
ஒன்று, இரண்டு அல்லாது
பூமி தழுவிய
வளி மண்டலம்
*
இரவென்றாலே அடங்கா
இரவு தான்

சாதாரண அதிசயம்


இன்னும் இப்பொழுதும்
அதே ஈரத்துடன் இருக்கின்றன
உதடுகள்
நொடிகளையும் நிகழ்வுகளையும்
புறந்தள்ளிக் கொண்டு
சுற்றிச் சுற்றி வருகிரது
உன் வாசனை
மிருதுவான மிருதுவைத் தொட்ட
விரல்களில் ஆனந்தம்
கசிந்து கொண்டே இருக்கிறது
லட்சக் கணக்கான நொடிகள்
மனம் ஒருமுகப்பட்டு
நடந்த கூடலின் நறுமணம்
இயற்கை நமக்கு வழங்கிய
வெதுவெதுப்பான பரிசு


*************
நன்றி : அட்சரம் ( இதழ் 3)

2 comments:

  1. அற்புதமான கவிதைகள். இந்த மாதிரி பதிவுகளில் ஆசிரியர் அறிமுகத்தையும் சேர்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. //////இன்னும் இப்பொழுதும்
    அதே ஈரத்துடன் இருக்கின்றன
    உதடுகள்
    நொடிகளையும் நிகழ்வுகளையும்
    புறந்தள்ளிக் கொண்டு
    /////

    கவிதைகள் அனைத்தும் அருமை அதிலும் என்னை இந்த வரிகள் மிகவும் கவர்ந்தது

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.