Jul 20, 2009

பிரமிள் கவிதைகள்

பிரமிள்

ஒளிக்கு ஒரு இரவு-


காக்கை கரைகிறதே
பொய்ப்புலம்பல் அது.
கடலலைகள் தாவிக் குதித்தல்
போலிக் கும்மாளம்.
இரும்பு மெஷின் ஒலி
கபாலம் அதிரும்.
பஞ்சாலைக் கரித்தூள் மழை
நுரையீரல் கமறும்.
அலமறும் சங்கு இங்கே
உயிர்ப்புலம்பல்.
தொழிலின்
வருவாய்தான் கும்மாளம்.
லாப மீன் திரியும்
பட்டணப் பெருங்கடல்.
தாவிக் குதிக்கும்
காரியப் படகுகள்.
இயற்கைக்கு ஓய்வு ஓயாத
மகத் சலித்த அதன்
பேரிரவு.

நிழல்கள்

பூமியின் நிழலே வானத் திருளா?
பகலின் நிழல்தான் இரவா?
இல்லை,
பூமிப் பந்தின் பின்னே
இருளின் பிழம்பு,
இரவில் குளித்து
உலகம் வீசும்
வெளிச்சச் சாயை பரிதி.
ஆமாம்.
இரவின் நிழலே பகல்;
இருளின் சாயை ஒளி.

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.