Nov 23, 2009

காசி-பாதசாரி

1 

 
போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்துவிட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான்.உறைந்த ரத்தப் படுக்கைமீது நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப் புகுந்து எடுத்து ஜி.எச்.சில் அட்மிட் செய்தார்கள்.
ஊரில் நான்கு பேர் 'மறைலூஸ்' என்று கருதும் காசியைப் பற்றி எனக்கு அப்படி நினைக்க முடியவில்லை. எல்லோரையும் போல, தனக்கும் இந்த நாக்கு பேருக்கும் இடையிலான 'ஷாக்' அப்ஸார்பரை' பழுது பார்த்து சரியாக வைத்துக் கொள்ளாமல், இவர்கள் உறவென்று மெச்சுகிற பாதையின் குண்டு குழிகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 

 
நேற்று காசியிடமிருந்து கடிதம், 'காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம்' என்று ஸ்ரீராமஜெயம் மாதிரி இன்லேண்டு முழுக்க எழுதியிருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் போனபோது ஒரு டீக்கடை வாசலில் காசியை யதேச்சையாக சந்தித்தேன். உணர்ச்சி முண்ட கைகளைப் பற்றிக் கொண்டான். தன்னோடு அதிக நேரம் இருக்க வேண்டுமென்று கெஞ்சினான். என் அப்பாவுக்கு அடுத்த நாள் வருஷாந்திரம். இரவுக்குள் மலைக்கிராமம் என் தோட்டம் போய்ச் சேர வேண்டியிருந்தது. சொன்னேன். வாடினான். சரி என்று பார்க் பக்கம் போனோம்.

David Zimmerman 1

எனக்கு வேலை ஏதும் கிடைக்காமலிருந்த காலத்தில் யாராவது என்னைப் பார்த்து 'இப்ப என்ன பண்றீங்க?' என்று கேட்டால் சங்கடத்தில் கூசிப் போய் சமாளிப்பாக எதையாவது சொல்வேன். அந்த வேதனை தனிரகம். காசியிடம் அதே கேள்வியை பூடகமாக விட்டேன் - ''அப்புறம்...? இப்ப...'' 

 
''ஒரு நண்பனோடு சேர்ந்து, மருந்து மொத்த வியாபாரம் சின்னதாப்பண்றோம். அப்பாகிட்டே இனி வீட்டுப் பத்திரம்தான் பாக்கி. தரேன்னார். அதை வைச்சு பேங்க்லே லோன் முயற்சி. கிடைச்சா இது ஒரு மாதிரியா தொடரும்...''
கேட் பூட்டியிருந்தது. பார்க்கில் சுவரெட்டிக் குதித்து உள்ளே போனோம். மறைவான புல்வெளி தேடி உட்காரும்போது ஞாபகம் தட்டியது. சிகரெட் வாங்கவில்லை. 'இருக்கு' என தன் ஜோல்னாப் பையிலிருந்து சிகரெட், தீப்பெட்டி எடுத்துப் புல்மீது வைத்தான்.

''வியபார உலகம் ரொம்ப கஷ்டப்படுத்துது. நிறைய கேவலமான அனுபவங்கள். மறைமுக-வரி மாதிரி மருந்து வியாபாரத்தில் மறைமுக பங்குதாரங்களா இருக்காங்க டாக்டர்ஸ். எப்படீனா, ஒரு டானிக் பாட்டில் பிரிஸ்கிரிப்ஷன் எழுத வைக்க, ஒரு டாக்டருக்கு மூணுரூபா லஞ்சம் தரணும். நூறு பாட்டில் டானிக் விக்க மாசம் முன்னூறு ரூபா லஞ்சம்...இதில்லாம பெரிய கம்பெனி மருந்துக்குன்னா, கம்பெனியே நேரடியாக அன்பளிப்பு டி.வி., கிரைண்டர், ஃபிரிட்ஜ்னு... குமட்டுதுடா குணா...'' 

 
காசியின் முகத்துமேல் செல்லமாகப் புகை வளையங்களை ஊதிவிட்டேன்.
''இதிலே எவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பேன்னு தெரியலை. பழையபடிதாண்டா இருக்கு குணா. அடுத்த வினாடி மேலே எடுத்த காலூன முடியலே.'' காசி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். அவனது ஜோல்னாப் பைமீது 'சொத்' தென வெள்ளையும் பழுப்பும் கலந்த எச்சம் தெறித்தது. 

 
''ஆனா முன்னமாதிரி என்னப் பிச்சு வீசி வாந்தியிலே புரட்டி ஆபாசப்படுத்திக்றதில்லேடா. கஷ்டப்பட்டு விழுங்கிக்கறேன். அப்பாவுக்காகதான். அவர் போயிட்டா என்ன ஆவேன்னு புரியலை. எதை ஆதாரமாக்கி இந்தப் பேய் மனசை சமாதானமா நடத்தப் போறேன்னே தெரியலடா...'' 

 
காசியின் அப்பா, காசிக்கு ஒரு வயதாகியிருக்கும் போது மனைவியை இழந்தார். காசிக்கு நான்கு வயது மூத்த ஒரு அக்கா உண்டு. வேறு உடன்பிறப்பு இல்லை. காசியின் அப்பா இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இரண்டோடு, காசியின் பெரியப்பா - தன் அண்ணன் - குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டு விட்டார். மில் வேலை. சாந்தமான குணம். 

 
''அப்பா எப்படியிருக்கார் காசி?'' 

 
''அப்பாவும் நானும் ஒரு வீட்லே இருக்கோம். அக்காவுக்கு வீட்லே பாதி பாகம் உயில் எழுதி வைச்சாச்சு. உயிலை கையில் குடுக்கலே. செவரு வெச்சு ரெண்டு பாகமாக்கியாச்சு வீடு வாசலை... மச்சான் அவ்வளவா பிரச்னை இல்லை... அப்பா அக்கா வீட்லேதான் சாப்புட்டுக்கறார். எனக்கு பத்து நாளைக்கொடு ஓட்டல். பத்தே நாளுக்குள்ள எந்த ஓட்டலும் சலிச்சிருது... முன்னூறு, முன்னூத்தம்பது மாசம் கிடைக்கும். ஆத்மாவை, மனசை, வயத்தை, உடம்பை எல்லாத்தையும் அதிலேதாங் கழுவணும்...'' பக்கத்தில் சிமெண்ட் பெஞ்சில் படுத்திருந்த நாய் எழுந்து உடலை உதறி சடசடத்தது. 

 
'' நீ பெண்ணா இருந்திருக்கக் கூடாதான்னு தோணுது. சரியாச் சொன்னா நீ பெண்ணா மாறிடக் கூடாதான்னு... உன்னோட இருந்தா பாதுகாப்பா, தைரியமா இருக்குடா குணா. அறிவோட குத்தலைப் பொருட்படுத்தாம சொன்னாகடவுளோட மடியிலே இருக்கிற மாதிரி... அதுவும் பெண்களவுள். என்னால் ஒரு ஆணை கடவுளா கற்பனை செய்யவே முடியலே.. விளையாட்டு மைதானமா முள்ளுவேலி இல்லாத மனசு உனக்க.'' 

 
''இல்லடாகாசி, என்னோட மனசு உனக்கு அந்த மாதிரி இருக்குது. ஆனா அங்கேயும் சில பேர் கண்ணுக்கு வேலி இருக்கும். இருக்குது, சரி.. இப்பெல்லாம் ஏதாவது எழுதறயா?'' 

 
''இல்லே, டயரி மட்டும்தான். கவிதை, கதைன்னு எழுதினா சுய புலம்பலா இருக்குது.''
எதிரில் நாய் ஒற்றைக் காலைத் தூக்கி பெஞ்ச் கால்மேல் மூத்திரம் அடித்தது. காசியின் வாயில் கால் சிகரெட் சாம்பலாக நின்றிருந்தது. சற்றே மெளனம்.
'' என்னால், இந்த சிகரெட்டை விடவே முடியலே காசி.'' 

 
''நானுந்தான்... கூடவே இந்த மாஸ்ட்ருபேஷனையும்... எவ்வளவு முயற்சி பண்ணியும் இந்த ரெண்டையும் நிறுத்தவே முடியலேடா குணா. சிகரெட்டால் எனக்கு ஒண்ணுமேயில்லே...நிகோடின் நெஞ்சுக்குள்ளே பரவி எதுவும் பண்றதா தெரியலே... பால் வராத மொலக்காம்பை உறிஞ்சற மாதிரிதான் அது எனக்க. மாஸ்ட்ருபேஷன்லேயும் ஒரு விஷயம். பல பேர் மாதிரி கைகொண்டு இல்லே. தலையணையை அணைச்சுட்டு... தாயான முப்பது முப்பத்தஞ்சு வயசுப் பொண்ணுகளத்தான் நினைவிலே அடைச்ச.'' 

 
காசிக்கு இருபத்தொன்பது தான் வயதென்று நினைக்கிறேன். திடீரென வேறெதாவது பொதுவாகப் பேசலாம் என்ற காசி, என்னைப் பற்றிக் கேட்டான். என் அம்மாவை விசாரித்தான். எனக்கும் அவனுக்கும் பழக்கமான ஒரு சாமியாரைப் பற்றிக் கேட்டான். சாமியாரோடு இருந்த அழகான பெண்ணைப் பற்றிக் கேட்டான்.
''சாமியார், ஆர்.எஸ்.எஸ்.லே பூந்துட்டார். கார் எல்லாம் குடுத்திருக்காங்க. அந்த சிஷ்யை 'ரம்பை' இப்ப சத்தியிலே ஒரு துணிக்கடையிலே சேர்ஸ் கேர்ள்.''
காசி சிகரெட்டை வீசி எறிந்தான். புல்லில் லேசாக புகை கசிந்தது. நான் மீண்டும் ஒரு சிகரெட்டுக்குப் பார்த்தேன், இல்லை. எனக்குப் பரபரத்தது. நானும் கூட காசியைப் போல சும்மாத்தான் சிகரெட் குடிக்கிறேன் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் தோட்டத்துப் பக்கம் கும்மிருட்டில் நின்று குடிப்பேன். குடித்த திருப்தியே இருக்காது. புகையை ஊதி கண்ணால் பார்ப்பதில்தான் திருப்திபோல இருக்கிறது. காலிப் பெட்டியை நசுக்கி தூக்கிப் போட்டான் காசி. ஒண்ணு பத்து என்றேன்.போவோமா என்று அரைமனதாகக் கேட்டான் காசி.
நடந்து சென்றபோது காசியைக் கேட்டேன். 

 
''டி.ம். எல்லாம் இப்ப ஒண்ணும் பண்றதில்லையா?'' 

 
''எதையும் தொடர்ந்து செய்ய முடியலே...காபிக் கரண்டியாலே வாழ்க்கையை அளந்து பார்த்ததா எலியட் சொல்லுவான். எதை எடுத்து அளக்கன்னே எனக்கு முடிவுக்கு வர முடியலே...'' 

 
காபியா, டீயா என்று கேட்கும்போது வெடுக்கென்று ஒரு விருப்பத்தைச் சொல்ல முடியாதவன் காசி. ஆனால் சாவை எடுத்து அளந்து பார்த்திருக்கிறான்.
சுவரெட்டிக் குதித்தோம். 

 
''தூங்கின திருப்தியே இருக்கிறதில்லே. ஓயாம கனவுகள். பகல்லே யோசனை யோசனைகள்... எனக்குள்ளே நான் ஓயாம நடமாடிட்டு இருக்கற மாதிரி... சில சமயம் எனக்குள்ளே இருக்கற 'நான்' தான் நிஜம் - இந்த வெளியிலே 'நான்' சூட்சுமம்னு பயமா தோணுதடா...'' 

 
''நியூஸ் பேப்பரெல்லாம் ஒண்ணும் படிக்கறதில்லையா காசி?''
''எப்பவாவது படிப்பேன். செய்தி, படமாகத்தான் எல்லாம் எனக்குள்ள மிச்சமாகுது. பிடிப்பே இல்லை. வெத்து ஒலக்கையும், ஒரலுமா மனசும் புத்தியும் அடிச்சிட்டுக் கெடக்கு...'' 

 
பொது நூலகம் தாண்டி தார்ச் சாலையை நெருங்கினோம். ''குணா, நீ இங்க வந்தா வராமப் போகாதே. வீட்டுக்கு வா. என்னோட கல்யாண மேட்டர்லே இன்னும் நீ கில்டியா ஃபீல் பண்றதா தன்ராஜ் சொன்னான்'' என்று கைகளைப் பிடித்துக் கொண்டான் காசி. 

 
2

 
எனக்குத் தெரிந்த காசி எட்டு வருஷங்களாக அப்படியேதான் இருக்கிறான். கர்ப்பம்விட்டு வெளியேறிய பின் அவனுடைய நினைவுப் பாதையில் முதலடி பற்றி ஒரு முறை காசி சொன்னான். அவன் அம்மா இறந்து ஆறாவது மாதமோ, வெய்யிலில் கற்றாழை அடர்ந்து சூழ்ந்த ஒரு வறட்டு இட்டேறி வழியே பாட்டியின் இடுப்பில் கதறிக் கொண்டு வருகிறான் காசி. அவனது பெரியப்பா வீட்டு வாசலில் கொண்டு வந்து இறக்கிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகிறாள் ஒரு வெள்ளைச்சீலைக் கிழவி. அது காசியின் அம்மாவைப் பெற்ற அம்மா. மாமன்மாரின் பகல் தூக்கத்தைக் கலைத்து குழந்தை அழுதால் யாரால் சகிக்க முடியும். 

 
காலேஜ் பருவத்தில்தான் காசி எனக்கு நட்பானான். 'ஹிப்பாக்ரசி'யை அம்பலப்படுத்தி மனிதர்களை, எங்களை, பரிகசித்துக்கொண்டு கில்லாடிகளாக உணர்ந்து குதூகலித்துத் திரிந்த எங்கள் நட்பு புத்தகங்கள் மூலம் பலப்பட்டது. வித்தியாசமானவர்களாக மாற்றிமாற்றி மெச்சிக் கொண்டு நடந்தோம். 'ஆதவனை' ரசித்துப் படித்தோம். 'புவியரசு'வை நேரில் சந்தித்தோம். காசிதான் கூட்டிப் போனான். மெல்லமெல்ல ஜானகிராமன், லா.ச.ரா., பிச்சமூர்த்தி, அசோகமித்திரன், சுந்தரராமசாமி என்று ஈடுபாடு கொண்டோம். 'மெளனி' புரியாதபோதும் 'பயங்கரம்' என்ற பாவனை பூண்டு பாராட்டினோம். இடையில் நான் படிப்பதில் ஏனோ தேங்கிப் போனேன். பெண் வேட்கை. பட்ட பின்பு விவேகானந்தர், பித்துக்குளி முருகதாஸ், ரஜனீஷ் என்று கலவையாக ஜல்லி கலக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது ஜே.கே.வை அடிக்கடி படிக்கிறேன். அரசாங்க வேலை கிடைத்து கடலூர் போன பின்தான் காசியின் நெருக்கத்தை இழந்துவிட்டேன். 'ஆவேசமாகப் பாய்ந்து அரைக் கிணறு தாண்டும்' சுபாவம் சிறுவயதிலிருந்தே காசிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவனுடைய பள்ளி வாழ்க்கையைப் பற்றி அதிகம் அவன் சொன்னதில்லை. நான்காம் வகுப்பு படிக்கும்போது காதலில் தோல்வி என்றும், ஹைஸ்கூலில் பிரேயரின்போது காலையில், கனிகள் அல்லது ஐசக் நியூட்டன் பற்றி கட்டுரை படித்து ஸ்கூலையே அறுப்பான் என்றும் ஏதோ சொல்லியிருக்கிறான். எஸ்.எஸ்.எல்.சியில் மிக அதிக மார்க்குகள் வாங்கினான் என்பது எனக்குத் தெரிந்தது. 

 
76-இல் காலேஜ் விட்டு வெளியே வந்தான். இரண்டு பேப்பர்கள் ஃபெயில். அப்புறம் அதை எழுதவே இல்லை. கொஞ்ச நாட்கள் தபால் மூலம் தமிழ் வழி ஹிந்தி படித்தான். விட்டான். கொஞ்ச நாட்கள் தாய்மொழி அபிமானத்தில் தெலுங்கு. தெலுங்கு வாத்தியார் வீட்டுப் பெண் தினமும் காபியில் கொஞ்சம் காதல் கலக்கிக் கொடுத்தாள். இந்த காலத்தில்தான் வீட்டுப் பக்கமாயிருந்த ஒரு இன்ஜீனியரிங் கம்பெனியில் டைம் கீப்பராக வேலை பார்த்தான். அவன் ஓரிடத்தில் தொடர்ந்து ஒரு வருஷம் பார்த்த வேலை. பூப்பந்து விளையாட்டில் சுமாரான வீரன் காசி. காலேஜ் நாட்களில் அவன் ஈடுபட்டிருந்த இரண்டு விஷயங்கள் கவிதையும், விளையாட்டும்தான். என்.டீ.சி. மில் ஒன்றில் விளையாட்டுத் தகுதியின் பேரில் வேலை கிடைத்தது. இந்த கேலைதான்... இதிலிருந்துதான் 'காசி' புறப்பட்டான். என்.டீ.சி.மில் வேலை ஆறே மாதம்தான். மனக் குமட்டல், மன நலத்திற்கு சிகிச்சை, அப்போது நன் கடலூரில் அரசு ஊழியன். 

 
திருநள்ளாறு போய் மொட்டை அடிக்கிறேன் பேர்வழி என்று அப்பாவிடம் பணம் பறித்துக் கொண்டு வந்தான் காசி. இரண்டு நாட்கள் என்னோடு உற்சாகமாக இருந்தான். நிஜமாகவே 'திருநள்ளாற்றின்'மீது நம்பிக்கை கொண்டிருப்பானோ என்று நினைத்தேன். ஒரு நாள் போய் மொட்டை போட்டுவிட்டு, மத்தியானம் காரைக்கால் வந்து ஒரு லாட்ஜில் பீர் அடித்துவிட்டுத் தூங்கினோம். 

 
சாயங்காலம் காற்றாட வெளியே நடந்தபோது ஒரு திடுக்கிடும் உண்மையைக் கக்கினான் காசி. ''உண்மையிலேயே நான் ஒரு பாவி - கயவன்டா குணா. அன்பான அப்பாவை ஏமாத்திட்டிருக்கேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. டாக்டர்களையே ஏமாத்தி நடிக்கிறேன். எனக்கு வேலைக்குப் போக பயமாயிருக்குடா... 'ஃபியர் ஆஃப் ரெஸ்பான்ஸிபிலிட்டி அண்ட்ஃப்ரீடம்' டா.''
'8எந்த புஸ்தகத்துல படிச்சே இந்த இங்கிலீஷ் வரியை- பொறுப்பு பத்தின பேடித்தனம் சரி.. அதென்னடா சுதந்திரம் பத்தின பயம்? சுதந்திரத்தையே தப்பாப் புரிஞ்சிக்கே நீ... மேதாவிங்கற பிம்பத்தை வளர்த்தி வெச்சுக்கிட்டு, பிம்பத்தோட கர்வத்துக்கு பங்கமா இருக்ககுதோ வேலை செய்யற இடம்? நீ முட்டாள்!''
''இல்லடா குணா... எனக்கு வந்து ஜாப் ஒத்து வரலைடா... எந்த ஜாப்புமே ஒத்து வராது. என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலே. தினம் தினம் தினம் ஒரே நேரத்திலே அத அதச் செயயறது, செயற்கையா 'டாண்'ணு ஒரே நேரத்துக்கு எந்திரிக்கறது, செயற்கையா தினமும் ஒரே நேரத்தைப் புடிச்சிட்டு வெளிக்கு உட்கார்றது, 'கன்' டயத்துக்கு குளியல்... கட்டுப்பாடான தினம் தினம் தினம் தினம்கள் எனக்கு சலிக்குதுடா... வெறுத்து, குமட்டி.... இதுக்கு மேலே பொறுப்புன்னா பயம் வேறே... அதிகாரி உருட்டல்... ஓவர் டைம்... அப்பா! 

 
''படுபாவி!'' 

 
''எனக்கு உள்ளூர சத்தியமான ஆசை என்ன தெரியுமா?'' 

 
''சொல்லு'' 

 
''எங்காவது காட்டுக்குள்ளே... மலைப்பக்கம் ஓடிப் போயிணணும்''. 

 
''போயி'' 

 
''ஆதிவாசிகளோட ஆதிவாசியாகணும்'' 

 
''முட்டாள், ஆதிவாசிக் கூட்டத்திலே மட்டும் பொறுப்பு, சுதந்திரம் பத்தின பயம் இருக்காதுங்கிறியா? அங்கேயும் தாளம் இருக்குதுடா... கட்டுப்பாடு இருக்குது...''
காசி பதில் பேசவில்லை. நான் எதிர்பார்க்கவேயில்லை. திடீரென சட்டையைக் கழற்றினான். இடுப்பில் லுங்கியை இழுத்து நழுவவிட்டான். ஜட்டி போட்டிருக்கவில்லை. படுபாவியின் வலது தோள்பட்டை விறைத்துப் பலகை மாதிரி இருந்தது. தள்ளவே முடியவில்லை, கனம். லுங்கியை பலவந்தமாகச் சுற்றி மெல்ல அணைத்தபடி தள்ளிக்கொண்டு போனேன். பெட்டிக் கடையில் சோடா வாங்கி முகத்தில் தெளித்தேன். கொஞ்சம் வாயில் புகட்டி லாட்ஜுக்குக் கூட்டிப் போனேன்.
இரவு பதினோரு மணிக்கு விழித்துக்கொண்டான். இரவு உணவு சாப்பிடவில்லை. நான் கலவரப்பட்டு வருத்தமாக உட்கார்ந்திருந்தவன் அருகே போனேன். மொட்டைத் தலை சொட்டையில்லாமல் வியர்த்திருந்தது. தோளைத் தொட்டு பரிவாக, கட்டிலோரம் உட்கார்ந்தேன். எழுந்து உட்கார்ந்தான். இடுப்பில் லுங்கி இருந்தது, இருக்காமல். முகம் உப்பியிருந்தது. 'பசிக்கிதா' என அவன் கைகளை மெல்லப் பிடித்துவிட்டதுதான் - எதிர்பார்க்கவில்லை. மூக்கும் கோண அப்படியொரு அழுகை, பெருங்குரலெடுத்து முகம் விம்ம. எனக்கு எரிச்சலாகவும் பயமாகவும் துயரமாகவும் ஆகிவிட்டது. பக்கத்து ரூமில் எல்லோரும் எழுந்து வந்தால்... அவன் முகத்தை அப்பி அடக்கப் பார்த்தேன். முடியவில்லை.  ஊ ஊ ஊ என அரைஅணி நேரம் அடங்கவில்லை. மழைவிட்ட விசும்பல் மாதிரி வேறு... நான் லைட்டை அணைத்துவிட்டேன். 

 
''நல்லாத் தூங்கினியா?'' 

 
''தூங்கினேன்'' என்ற காசியின் பதிலில் வாட்டம். காலையில் எட்டு மணிக்கே சாப்பிடப் போனோம். 

 
'' என்ன காசி, சொல்டா...'' 

 
''ராத்திரி ஒரு கனவு... மனசு கஷ்டமாயிருக்குடா.'' 

 
'' என்ன, சொல்லு!'' 

 
''வனாந்தரத்துக்குள்ளே மத்தியான நேரம். மழை பேஞ்சு ஓய்ஞ்சிருக்கு. பிரம்மாண்டமான சிலை ஒண்ணு... மார்லே மொகஞ்சு மொகஞ்சு பாலை குடிச்சிட்டிருக்கேன். திடீர்னு என்னன்னா... புணர்றா மாதிரி... முகம் சரியா தெரியலே. விழித்தபோது அந்தக் கனவு முகம் மனசைக் கஷ்டப்படுத்துச்சு.''
''ஏதாவது சினிமா போலாமா?'' என்று பேச்சை மாற்றினேன். 

 
3 


 
காசிக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்ததற்கு நானும் முக்கிய காரணம். முதற்காரணம். பெண்களுடன் காசியின் அனுபவம் ஒன்றைக்கூட அவன் என்னிடம் ஒளித்ததில்லை. பி.யூ.சி. படிக்கும்போது பக்கத்துத் தெருவில் பெட்டிக் கடைக்காரரின் பெண்ணுடன் காதல். பத்னேழு வயதுப் பெண். காசியின் அன்றைய பாஷையில் தேவதை. உணவாக பெட்டிக் கடை பொரி - வேர்க்கடலையையே அதிக நாட்கள் தின்று வளர்ந்த அந்த தேவதைக்கு திடீரென மஞ்சல் காமாலை. ஒரு நாள் சாம்பல். காசி இந்த தேசதையின் பெயர் சேர்த்து புனைபெயர் வைத்துக் கொண்டு 'கண்ணாமூச்சு' என்றொரு குட்டிக் கவிதை தொகுப்பை பின்னாளில், ஒன்றுவிட்ட அண்ணன் அச்சகத்தில் வேலை பார்த்தபோது வெளியிட்டான். 'வேலை' என்றால் தொகுப்பு அச்சடித்து முடியும்வரை வேலை! 

 
காலேஜ் முதல் வருட நாட்களில் கவிதையுடன் இரண்டு குட்டிக்காதல்கள். ஒரு பெண் மு.வ. ரசிகை. 'கெமிஸ்ட்ரி' படிப்பு. எதிர்வீடு. துணைப் பாடம் 'கணக்கு' சாக்கில் காசி அடிக்கடி மு.வ. ரசிகையிடம் போனான். ஒரு முற்பகல் குளிக்கும்போது சுவரெட்டி விட்டு - விரகதாபத்தில் - பெயர் சொல்லிக் கத்திவிட்டான். முகத்திலேயே விழிக்க வேண்டாமென்று கதவை அடைத்துக் கொண்டுவிட்டது 'அல்லி'. இன்னொரு பெண்வலிய வந்து இவன் நெஞ்சில் சாய்ந்தாள். வேலையில்லாப் பட்டதாரிப் பெண். வேலை கிடைத்து பொள்ளாச்சி போய்விட்டாள். சந்திப்பே இல்லை. கடிதங்களுக்கு பதில் இல்லை. காசி என்.டீ.சி.மில் வேலையைத் தொலைத்துவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில், அப்பா ஜேபியில் பத்து ரூபாய் திருடிக் கொண்டு ஒரு நாள் பொள்ளாச்சிக்கு பஸ் ஏறினான். இரண்டு ரோல்டு கோல்டு காது ரிங்குகளை வாங்கிக் கொண்டு போய், சாயங்காலம் போஸ்ட் ஆபீஸ் வாசலில் அவளைச் சந்தித்தான். அவள் முகம் கொடுக்கவில்லை. ரிங்குகளை நீட்டினான். 'என்னைப் பார்க்க வராதே! எங்கண்ணாவுக்கு லெட்டர் எழுதுவேன். வேறு வேலையில்லை உனக்கு. மென்டல்!' காது அலங்கரிப்புகளை சாக்கடையில் விசிறிவிட்டு எச்சில் விழுங்கியபடி கூசி நடந்தான் காசி.
இன்னொரு காதல் இரண்டு வீட்டிலும் அம்பலமாகிவிட்டது. காசியின் பிடிவாதத்தால் காசியின் அப்பா பெண் கேட்டுப் போனார். வேலை ஏதும் பார்க்கட்டும். யோசிக்கலாம் என்று சொல்லி அனுப்பினார்கள். காசி வேண்டா வெறுப்பாக வேலை தேடினான். கல்யாணத்துக்கு எதுவுமே செலவே வேண்டாம், அந்தப் பணத்தில் ஏதாவது தொழில் செய்கிறேன் என்று கெஞ்சிப் பார்த்தான். காசியைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் அந்தப் பெண் அடம்பிடித்தாள். அவர் வேலைக்குப் போலேன்னா பரவாயில்லே, நாலு எருமை வாங்கிக் கறந்தூத்தி நாங்க பொழுச்சுக்குவோம் என்று சொன்னாளாம் - பொருளாதார முகத்தின் சூதுவாது தெரியாத பெண். ஒரு போலீஸ்காரருக்கு மனைவியாகிப் போனாள்.
அப்புறமும் காசி எங்குமே வேலைக்கு போகவில்லை. 'பிஸினஸ்' என்ற பெயரில் யார் யாருடனோ சேர்ந்து ஊர் சுற்றினான். மெட்ராஸ், பெங்களூரில் வேலைக்கு 'இண்டர்வ்யூ' என்று அப்பாவித் தந்தையை ஏமாற்றி பணம் பிடுங்கிப் போய் செலவழித்துவிட்டுத் திரும்பி வந்தான். ரேடியோ நிலையத்தில் தினம் போய்க் குலாவினான். 'நாளொரு தகவல்', 'உங்கள் கவனத்திற்கு' என்று கண்டதை எழுதிக் காசு வாங்கினான். மாதம் 75,100 என்று வருவதை டீ, சிகரெட், கள்ளென்று செலவழித்துச் சுற்றினான். விஸினஸ் நண்பர்களுக்காக எங்காவது அனுப்பினால் பஸ் ஏறிப் போய் காரியம் செய்வான்.செலவுக்குக் கொடுத்து எங்காவது அனுப்பினால் போதும் குஷி. வீடண்டுவதில்லை. மச்சான் இல்லாத சமயம் சமையல் கட்டில் நுழைந்துவிடுவான்ன. மச்சானுக்கு ஆப்-நைட் (மில்) ஷிப்டென்றால் மூன்று மணிக்கு வீடு வந்தால், இரண்டு தடவை உணவு. அப்பா மில்லைவிட்டு நின்றதால் பெற்ற பணம் பாதிக்கு மேல் கரைந்து விட்டது. மச்சானுக்கு நான்கு குழந்தைகளில் இரண்டு பெண். கூடவே பராமரிப்பாக மூன்று மாடுகள். அவர் கஷ்டம் அவருக்கு. மனிதாவிமானத்தைக் கொஞ்சமேனும் பராமரிக்க அவர் உழைப்பின் ஷிப்டில் நேரம் கிடைக்கவே இல்லை. மச்சானின் நாக்குச் சாட்டை வீச்சு தாங்க முடியாமல் உறைத்தபோது காசி தடுமாறிப் போனான். காசியை அடக்க முடியாத மச்சானின் கோபம், காசியின் அப்பாமீது, இயலாமையின் வடிகாலாக மெல்ல மெல்லத் தொட்டது. அப்பாவுக்கும் 'சுரீர்' விழ, சாட்டையை ஒரு நாள் எகிறிப் பிடித்துப் புரட்டிவிட்டான் காசி, விளைவு- தூரத்தில் இந்த பெரியம்மா வீட்டில் தஞ்சம். 'ஏ மச்சான்னேன்! 

 
கொம்பன்னேன்! குட்றா வீட்டு வாடகையை!' என்று மாதம் நானூறு ரூபாய் வாடகை போட்டுவிட்டார்கள் அப்பனும் மகனும். எல்லாம் காசிக்காகத்தான். உண்மையில் காசியின் அப்பாவுக்கு மனள்மீது அளவு கடந்த பாசம். காசியின் மீது அவன் அக்காவுக்கும்! காசியின் மச்சானும் வேறு யாருமில்லை காசிக் சொந்த அத்தை மகன். 

 
பெரியம்மா வீட்டில் காசிக்கு நிலைமை முற்றிக்கொண்டு வந்தது. மனநோயாளி போல் நடித்துக் திரித்த காசிக்கு மெய்யாகவே லேசாக மனநோய் தாக்கியது என்றுதான் நினைக்கிறேன். 'ஒரு பைத்தியக்காரனுக்கும் எனக்கும் என்ன சின்ன வித்தியாசமென்றால் நான் பைத்தியமில்லை அவ்வளவுதான்' என்று யாரோ ஒரு மேலைப் பெயர் சொன்னதாக சொல்லித் திரிந்த காசியின் சுய எள்ளலையும் கடந்து மெல்லவே மன ஆரோக்கியம் குறைந்தது. ஆனாலும் அங்கே வீட்டிலிருந்த காலத்தில் நிறையப் படித்தான் என்று தெரிகிறது. (எனக்கு) புரியாத கவிதைகள் நிறைய எழுதினான். நான் பதிலே போடவில்லை. 

 
ஒரு வினாடிகூட காலூன்ற முடியாமல் கொந்தளித்தான் காசி. 

தன்னுடம்புக்குள்ளேயே பொறியில் சிக்கிய ஒரு எலியாகிவிட்டது அவன் மனது. ஒரு முட்டாள் மனநல வைத்தியன் நானூறு ரூபாய் காசுக்காக நான்கு தரம் 'ஷாக்' ட்ரீட்மெண்ட் செய்துவிட்டான். கறிவேப்பிலை கருகும் வாசனை தலைக்குள்ளிருந்து வினாடிதோறும் அடிப்பதாக மனப் பிரமையில்(?) பரிதவித்துப் போனானாம் காசி. நிறைய மாத்திரைகள்... மனம் அடங்கவில்லை. ஷணப்பித்தன் - ஷணச்சித்தன் என்றானான் காசி. பத்தடிக்குள் மூன்று திசை. இந்த மலைக்கிராமத்திற்கு வருகிறேன் பேர்வழி என்று நான்கு முறை பஸ் ஏறியவன் ஒரு தரம் 40 கி.மீட்டர் வந்துவிட்டுத் திரும்பி, இரண்டு முறை 100 கிலோ மீட்டருக்கு டிக்கெட் வந்துவிட்டு ஆறாவது கிலோ மீட்டரிலேயே திரும்பிவிட்டானாம். ஒரு ஜின்னிங் பாக்டரியில் பஞ்சு பிரிக்கப் போகும், உறவுக்காரப் பெண்ணை கல்யாணத்திற்குக் கேட்டு அப்பாவை வாதித்தான். பெண் யாருமில்லை. பெரியப்பாவின் பேத்தி. பெரியப்பா இறந்தவுடன் சொத்துப் பிரிப்பில் ஒரே அண்ணனோடு, ஜன்மப் பகை சேர்ந்துவிட்டதான் உறவற்றுப் போன காசிக்கு ஒன்றுவிட்ட அக்காவின் பெண். பெரியம்மாவுக்கு இந்த ஏற்பாட்டில் ரகசிய சம்மதம். காரணங்களில் சொத்தும் ஒன்றாக இருக்கக்கூடும். தெரியவில்லை. அப்பாவும் யாரையோ பார்த்து கேட்டுவிட்டார். 'பெண் கேட்க என்ன தைரியம்' என்று அப்பன் குடிகாரன் தூதுவரை ஏசி அனுப்பினானாம். ''ஏதோ ஒரு பொண்ணுப்பா - கல்யாணம் ஆனா எனக்கு எல்லாஞ் செரியாயிடும். இங்க சொந்தக்காரங்க வீட்டுல எத்தனை நாளுக்கு? எண்ணிப்பாத்தா பயமாயிருக்குதுப்பா...'' என்று பச்சையாகக் கதறியிருக்கிறாள் காசி. தவித்துக் கொண்டே இருந்தவன் ஒரு மாலையில் தேங்காய் பருப்பியைக் கடித்துக் கொண்டே இரண்டு பாட்டில்கள் டிக்-20ஐக் காலி செய்தான். விஷயம் தெரிய, பெரியம்மா அவசர அவசரமாக நாய்ப்பீயைக் கரைத்து வாயில் ஊற்றி விட்டாள். மீண்டும் வேறொரு மனநல டாக்டர். மாத்திரைகள். 

 
திடீரென ஒரு சாயங்காலம் இம்மலைக் கிராமத் தோட்டத்திற்கு வந்தான். உடம்பு ஊதிக் கறுத்து ஆள் பயங்கரமாக இருந்தான். இரண்டாவது நாள் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். யாராவது பொண்ணு வேண்டும் என்று. ஒரு பொண்ணோட ஒரு நாள் முழுக்க தனியா இருக்கணும். ஏற்பாடு செய் என்று பிடிவாதம். முப்து மைல்கள் பிரயாணம் செய்து அந்த எல்லைப் புற சின்ன டவுனுக்கு சென்றால் எனக்குத் தெரிந்த ஒரு பெண் - அவளும் ஊரில் இல்லை. அந்த சமயத்தில் நானும் வேலையில் இல்லை. அப்பா திடீரென இறந்துவிட்டதால், கடலூர் அரசு வேலையைவிட்டு இங்கே தோட்டம் வந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அம்மா, தங்கைகளக்குத் துணையாக விவசாயத்தில் இறங்கியிருந்தேன். கூட எல்.ஐ.சி ஏஜண்ட் வேலை. ஒரு சாமியாருடன் தீவிரப் பழக்கமாயிருந்தது எனக்கு. எங்கள் கிராமப் பக்கம் சின்ன குடிசை ஒன்றில் இருந்தார். சீக்கிரமே தெரிந்தது, கூட அழகான ஒரு சிஷ்யை என்று. நாங்கள் சொந்தக் குடிசையாக ஆசிரமம் கட்ட வசூலித்தோம். 'விவேகானந்தரின் மறு பிறப்பு' என்று சொல்லிக் கொண்ட சாமியாருக்கு நான்தான் பிரதம சிஷ்யன். கீழிறங்கி சாமியார் நகரங்களுக்குப் போனார்.  கீர்த்தி பரவியது. இங்கிலீஷ் சாமியார் அவர். ஃபார்மர் லைப்பில் எம்.பி.ஏ,. ஒரு பழம் பெரும் திரைப்பட அதிபரின் நெருங்கிய உறவுக்காரர். மனைவி படிதாண்டிவிட்டாள். புருஷன் வீட்டையே தாண்டி ஆசிரமம் கட்டிக் கொண்டுவிட்டார். பின்னாளில்தான் எனக்கு எல்லாம் தெரிந்தது. 

 
சாமியிடம் காசியை அழைத்துப் போனேன். எல்லாவற்றையும் சொன்னான். பத்து வயதுப் பையனிடம்கூட மனதைக் கழற்றிக் கையில் தந்துவிட்டு, 'பாத்துட்டு மறக்காம தாடா' என்ற போகிற தன்மையில் காசி இருப்பதை சாமியாரின் மூளை புரிந்து கொண்டுவிட்டது. 

 
'நாலுபேர் மாதிரி லைப்பிலே செட்டில் ஆகணுங்கற ஆசையே அத்துப் போச்சு சாமி இவனுக்கு' 

 
'கடவுள் நம்பிக்கை உண்டா?' 

 
காசியே பதில் சொன்னான். '' இல்லே சாமி... ஆனா 'கடவுள்'னு ஒருத்தர் இருந்துட்டாக்கூட பரவால்லேன்னு படுது சாமி!'' 

 
'நல்லாப் பேசறீங்களே; இதுக்கு முன்னாடி யாராவது சாமியார்கிட்டே போயிருக்கீங்களா?'' 

 
''போயிருக்கேன் சாமி. சகஜ சைதன்யா கிட்டே போனேன். தியானம் கத்துக்கப் போனேன். மந்திரம் தந்தார். மந்திரத்தை வெளியே சொல்லக் கூடாதுன்னார். 'ஐங்'கற அதை வெளியே எல்லாம் சொன்னேன். மறுபடியும் பாத்து அப்படி செஞ்சதை சொன்னேன். பரவால்லே தொடர்ந்து பண்ணுங்கன்னார். கனவுகள் தொந்தரவு பத்தி சொன்னேன். போன பிறவியிலே அடக்கி வெச்ச ஆசைகூட இந்தப் பிறவியிலே கனவா வரும்னார். பயந்து போயிட்டேன் சாமி... அப்புறம் போகவே இல்லை...'' 

 
கடைசியில் சாமியார் ஒரே வரியில் காசிக்கு அருள் வாக்காகத் தீர்வு சொன்னார். எனக்கு அதிர்ச்சி. ''காசி... உனக்கு செக்ஸ்தான் பிரச்னை... யூ ஹாவ் செக்ஸ் வித் ஹர்'' என்று ரம்பையை அழைத்துக் காட்டினார். 

 
காசி இரண்டு நாட்களாக குழம்பி முடிவெடுக்க முடியாமல் இருந்தா.ன முடியாது என்று ஒரு வழியாக முடிவு சொன்னான். தனக்கு தங்கைபோல இருப்பதாகவும், தான் வேண்டுவது தாயான பெண் என்றும் சாமியாரிடமே உளறினான். ''நோ அதர் கோ... லீவ் ஹிம்... இப்படியே மெண்டலா இருக்க வேண்டியதுதான். ட்ரைஃபார் சப்ளிமேஷன் நாட் ஃபார் செண்டிமெண்ட்ஸ் இன் செக்சுவாலிட்டி வித் சாய்ஸ்! நேத்து குருநாதர்கிட்டே உன்னப் பத்திக் கேட்டேன். இன்னும் பத்து வருஷத்துக்கு உனக்கு சோதனைகள் பாக்கின்னார். மொதல்லே உடம்போட நீ இருந்து பழுகணும்'' என்று முகத்துக்கு நேராக காசியிடம் சொன்ன சாமி, அவனை ஆசிரமத்திற்குள் அழைத்து வர வேண்டாமென்று என்னிடம் ரகசியமாகச் சொல்லிவிட்டார். 

 


 
கீழே போன காசியிடமிருந்து ஒரு மாதமாக தகவலே இல்லை. கீழே கோயமுத்தூரில் சாமியார் ஒரு பணக்கார வீட்டில் அடிக்கடி எழுந்தருளுவார். ஒருமுறை நானும் கூடப் போனேன். அந்த வீட்டில் ஒரு இளம் பெண், கணவனை ஒதுக்கிவிட்டு தாய்வீடு வந்துவிட்ட பெண், மூன்று பெண்களில் நடுப்பெண். 'ஆணாக'சுதந்திரம் பெற்று வளர்ந்த பெண். மூன்று பெண்களில் கல்லுமில்லை, புல்லுமில்லை. ஆனால் 'இம்பொட்டண்ட்' என்று தாலியைக் கழற்றி வீசிவிட்டு வந்துவிட்டவள். மூத்த - இறைய இரண்டு சகோதரிகளும் 'வசதி'யாக வாழ்க்கைப் பட்டவர்கள். சாமியாரிடம் மிகுந்த விசனத்தோடு குடும்பம் முறையிட்டது. காசிக்குத் தெரிந்த குடும்பம் என்று தெரிந்தது. நான் காசியின் நண்பன் என்பதையும், காசியைப் பற்றியும் ஏதோ பேச்சு வாக்கில் சாமி, யதேச்சையாக தன்னிடம் வந்த 'கேஸ் ஹிஸ்டரி'களில் ஒன்றாகச் சொல்லி வைத்தார். காசியைப் பார்த்தபோது நானும் யதேச்சையாக அந்தப் பெண்ணின் துயர ஸ்திதியைப் பற்றி சொல்லித் தொலைத்தேன். தயாராக காசிக்குள்ளிருந்த விதி, காசியின் பாஷையில் 'கேரக்டர்' வீறுகொண்டு எழும்பிவிட்டது. 

 
காசி கல்யாணம் முடித்து ஒரு மாதம்கூட கூடி வாழவில்லை. இரண்டாவது மாதம் ஒரு நாள் மாலையில் இந்த மலைக்கிராமத்து தோட்டத்து வாசலில் வந்து நின்றான். அன்றிரவு முழுவதும் ஊருக்குள் நாங்கள் இரண்டு பேர் மட்டுந்தான் தூங்காமல் இருந்திருப்போம். மாப்பிள்ளைக் களை அறவே இல்லை. முகம் எழுமைச் சாணியில் பிடித்து வைத்தது மாதிரி இருந்தது. 

 
''அரைக்கிலோ முந்திரி கேக்குக் உங்க எந்த கவிதையைத் தூக்கிட்டு கடைக்கு போகன்னு கேட்கறாருடா மாமனார். புஸ்தகங்களைக் கட்டி எடைக்ப் போட்டுட்டு, மூளையை பணம் பண்ண யூஸ் பண்ணணுங்கறார். வீட்டு மாப்பிள்ளையா அங்கயே இருக்கணுமாம். நடுத்தரக் குடும்பங்கள் வாழற எங்க லைனுக்கு அவளால் வந்து குடும்பம் பண்ண முடியாதாம். பணக்காரங்களக் கண்டா பொறாமைப்படற லொக்காலிடியாம் எங்களது. அப்பாவையும் 'மாமனார்' வீட்டுலையே வந்து இருக்கறதானா இருக்கலாங்கறார்... மூணு பேருக்கு ரெண்டு வேலைக்காரங்க இப்ப, இன்னும் ரெண்டு பேர் இருந்தா அவங்களுக்கும் வேலை குடுக்க சரியாயிருக்குமாம். தினமும் ஸ்கூட்டர் சவாரி, ஐஸ்கிரீம்பார், நிச்சயம் சினிமா, வராத புதுத்தமிழ்ப்ட பாட்டு, இவ்வளவுதான் அந்தப் பெண்ணுக்கு அன்றாட உலகம். அல்சேஷன் நாய்க்கும் தெரு நாய்க்கும் ஆன வித்தியாசம். என்னால் சகிக்க முடியலே. என்னோட 'தாய்' இமேஜ் எழவெல்லாம் சனியன் வேண்டாம், ஒரு 'பெண்'ணாவாவது இருந்திருக்கலாம். எண்ணிப் பாத்தா ஒரு பத்து பன்னெண்டு தரம் கூடியிருப்போம் - உன்னால நம்ப முடியாதுடா குணா - முத்தம் கொடுக்க அனுமதிச்சதேயில்லை. பிடிக்காமயிருக்கும் சில பேருக்கு. பரவாயில்லே. ஆனா இங்கே 'லிப்ஸ்' அழகு நடிகை மஞ்சுளாவைவிட ஒருபடி இறங்கிடக் கூடாதுங்கற லட்சியம் எச்சரிக்கை. அழகு உதடுகள். ஆனா பொய் உதடுகள். 

 
ஒத்தயா பயம். தனிமை. வினாடிக எல்லாம் சொடக்கு போடுது. என்னால முடியலே. மறுபடியும் பழைய கோளாறு மனசிலே கிளம்பிருச்சுடா குணா. அப்பாகிட்டே வந்துட்டேன். அப்பா மனம் விட்டுப் போச்சு. 'இந்தப் புத்தகமெல்லாம் படிக்காம, இதப் பிரிஞ்சு என்னாலே இருக்க முடியாதுப்பா... என்னாலே அந்த வீட்லே சமாளிக்க முடியாதுப்பா... அவங்க கெளரவத்துக்கு ஈடுகட்டிப் போக முடியாதுப்பா... எனக்கு பயமா இருக்குது... அங்கிருந்தா நான் தற்கொலை பண்ணக்குவேன்பா' ன்னு கதறினேன்டா. 'போகப் போக சரியாப் போகும். நீ எதாச்சம் வேலைக்குப் போ முதல்லே'ன்னு அக்கா அக்றையா சொன்னா...'மூடிட்டுப் போ'ன்னு அக்கா மேலே எரிஞ்சு விழுந்தேன். 'உன்னப் பாத்துட்டு வந்தா கொஞ்சம் மனசு நிம்மதிப்படும்'னு அப்பாகிட்டே சொன்னேன். மொய் வந்த பணத்திலே நூறு ரூபா தந்து அனுப்புனார்டா''. 

 
ஒரு வாரம் இருந்தான். நானும் சாமியாரிடம் போவதை நிறுத்தி விட்டிருந்தேன். கொஞ்ச நாள் நிதானமாக சும்மா இருக்கச் சொல்லி அனுப்பிவிட்டேன். 

செயலுக்கான முடிவாக எதையும் யோசித்துச் சொல்லி முடியவில்லை எனக்கு. குற்றவுணர்வு வேறு மனதின் ஒரு மூலையில். அவனோடு சேர்ந்து பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் சாம்பலே மிச்சம். 

 
கீழே போன காசியைப் பற்றி இரண்டு மாதங்களுக்குத் தகவலே இல்லை. தன்ராஜ் எழுதித்தான் பின்னாடி விவரம் தெரிந்தது. 

 
காசி பழையபடி ஆரம்பித்துவிட்டிருக்கிறான். கண்ட கண்ட தூக்க மாத்திரைகள். பாதி நடிப்பு, மீதி பைத்தியமென குர்தாவைக் கிழித்திருக்கிறான். ஸ்கூட்டரை வேண்டுமென்றே சுவரில் இடித்தான். மாமனார் பெயரிலுள்ள ஸ்கூட்டர். அவருக்கு கோபம் வராதா? போதை மாத்திரை அடிமை என்று செருப்பால் அடிக்க வந்தார். திடீரென ஒரு நாள்'இனி நல்லபடி இருப்பேன்' என்ற திடீர்கங்கணத்தில் அந்த அழகான உதடுகளுக்கு ஐஸ்கிரீம், புதுப்படம், ஸ்கூட்டர் பவனி, பட்டுச் சேலைக்கு வாக்களிப்பு என்று பூஜை போட்டான். இரவில் கழுத்துக்கு கீழே ஒரு - ஒரு தடவை மட்டுமே - புணர்ச்சி முடித்து, மாத்திரை இல்லாமலேயே நல்ல தூக்கம். விடியும் முன்பு 5 மணிக்கே எழுந்து ஸ்கூட்டரை விரட்டிக் கொண்டு வந்து அப்¡வை எழுப்பினான். இதற்கு 'மொய்' வந்த பணத்தில் நூறு காலி. இப்படி பூஜை நான்கைந்து முறை நடந்தது. பெண் வீட்டிலேயே காசி இரண்டு வாரம் தொடர்ந்து இருந்தான். படிப்பறிவு அதிகமில்லாத அப்பாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறுவன்போல கதறி அழுதார். மீண்டும் தூக்க மாத்திரைகள் விழுங்கிவிட்டான். ஆத்மார்த்தமான தற்கொலை முயற்சி. கடிதம் வேறு எழுதி வைத்துவிட்டு கட்டிலேறினான். கதவைத் தாளிட்டிருந்தான். நம்பிக்கையோடு கண் மூடினான். அடுத்த நாள் காலையில் கண் விழித்துவிட்டது. பயங்கர ஏமாற்றம். ஆத்மார்த்தத்தின் ஏமாற்றம். ஆவேசம் கட்டுப்படாமல் கையில் கவர பிளேடு எடுத்தான். தடுமாறிக் கொண்டே நடந்து போய்... 

 
ஜி.எச்.சில் இரண்டு வாரங்கள் இருந்தான் காசி. அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல் வாரம். கழுத்தில் ஒரு சின்ன ஆபரே'ன். கால்மாட்டில் கேஸ் நோட்டீஸ். Personality disorder, Affection seeking phenomenon, Advised psycho therapy. 

 

 
காசியின் இன்-லேண்ட் மேஜை விரிப்பின்கீழ் சொருகிவிட்டு வெளியே வந்தேன். மேக மூட்டம். கன்னுக்குட்டியை 'பலனு'க்கு பக்கத்துத் தோட்டத்திற்குப் பிடித்துக்கொண்டு போகவேண்டிய வேலை. அம்மாவும், தங்கைகளும் அவரைக்காய் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்றை அவிழ்த்துப் பிடித்தேன். காசியின் மீதான நினைவுகள், மூட்டம் கலையாமல் நடந்து கொண்டிருந்தது.
இலக்கியமாக எவ்வளவோ நல்ல நல்ல புத்தகங்கள் படித்தும் காசி இவ்வளவு துன்பப்பட்டான் என்பதை நினைத்தபோது காசியின் அந்தப் படிப்புமீதே எனக்கு சந்தேகமும், சற்று எரிச்சலும் உண்டாயிற்று. எதையும் சந்திப்பதற்கு முன்னாலேயே பயப்பட்டுவிடும் சுபாவம் அவனுக்குள் அடிப்டை சுபாவமாக ஓடிக் கொண்டிருந்தபோல - ரத்த ஓட்டத்தினூடே குமிழியிட்டு ஒரு அவநம்பிக்கையாக, தெரியவில்லை. 

 
திடீரென பத்திருபது நாட்கள் இரவுகளில் கண் விழித்து நிறையப் படிப்பான். காசி. அப்போதெல்லாம் நான்கு கடிதங்கள் வாரத்துக்கு எழுதிவிடுவான். கோயமுத்தூரில் ஒரு கட்டத்தில் காசிக்கு வேறொரு நல்ல நண்பனும்கூட இருந்தான். அவன் இளம் வயசு. புல்லாங்குழல், ஓவியம், இரவில் நெடுஞ்சாலையோரம் ஒரு டீக்கடை முன்பு, அரைமணிக்கொரு டீ குடித்துக்கொண்டு, விடியற்காலை நான்கு, ஐந்து மணிவரை பேசிக்கொண்டே இருந்துவிட்டுப் பிரிவார்களாம். தனக்கு கலை - இலக்கிய விஷயங்களில் நிறைய கற்றுத்தந்து, ரசனையை வளர்த்துவிட்டதில் அவனுக்குப் பெரும் பங்குண்டு என்று காசியே அவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். விளைவுகள் பற்றி அஞ்சாத காசியின் ஓட்டை வாய் பலவீனம் பல மென்மையான இதயங்களை சில தருணங்களில் பாயப்படுத்திவிடும். அப்டி காயப்படுத்திய ஒரு கெட்ட தருணத்தில் அந்த இளங்கவியின் நட்பையும் இழந்துவிட்டான். காசி. இவ்வளவு தூரம் காசி சரிந்ததற்கு, தொடராமல் போன அந்த நட்பும்கூட ஒருவகையில், காரணங்களில் ஒன்றாக எனக்கு படுகிறது. 

 
காசி முக்கால் சந்திர கிரகணத்தின்போது பிறந்தவனென்னு ஒரு தரம் சொல்லியிருக்கிறான். சில காலம் ஜோஸ்யத்தில் கூட நம்பிக்கை வைத்துப் பார்த்தான். தன் மன வழக்கப்படி அதையும் விட்டான் இடையில். அவன் வரையில் எதுவும் உறுதியில்லை என்னறே போய்க் கொண்டிருக்கிறான். தஸ்தாவாஸ்கியின் 'The House of the Head' ஐத் தமிழில் படித்துவிட்டு எனக்கு ஒரு கடிதத்தில் எழுதினான். 'ஒவ்வொரு கைதியும் சிறையிலே விருந்தாளியா இந்த இடம் வந்துவிட்டுப் போறோம்'ங்க மனப்பாங்குல தான் இருக்காங்க. அதனாலே ஐம்பது வயசுலேயும் அவன் முப்பத்தஞ்சு வயசுக்காரனாட்டமே நினைச்சுட்டு நடந்துக்கறான்-னு கதைசொல்லி பெட்ரோவிச் எழுதறான்... ஒரு விருந்தாளியா நானும் என்னை நினைச்சட்டு, இங்க காரியம் செஞ்சுட்டுப் போக முடிஞ்சா எவ்வளவு எவ்வளவு நல்லா இருக்கும்?'' 

 
ஆஸ்பத்திரிலிருந்து வந்தவன், மூன்றாவது வாரம் எனக்கொரு கடிதத்தில் எழுதினான்: வில்லியம் கால்லோஸ் வில்லியம்ஸ் படிச்சிட்டிருக்கேன். நிறைய கவிதைகள் எனக்கு பிடிச்சது. இடையிலே ஒரு தமாஷ். ஜி.எச்.சிலே குடுத்த ஒரு குறிப்புச் சீட்டு, பழைய டயரிலே இருந்தது கண்ணிலே பட்டது. 'மறுமுறை பார்க்க... கிழமை மாலை 2 மணிக்கு வரவும். இந்த சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்' னு குறிப்பு அச்சடிச்சிருந்த குட்டி Case notes சீட்டு அது. அதிலே Diagnosis ங்கற இடத்திலே பேனாவிலே பெரிசா எழுதியிருக்கு: CUTTHROAT - Psychiatric-ன்னு cut-throat ன்னா நம்பிக்கை துரோகம் இல்லையே? எவர் இருவர்க்கிடையே யாருக்கு யார் பரிசளிச்சிட்ட நம்பிக்கை துரோகம்டா அது? டாக்டருக்குள்ளே பூந்து மாமனார் எழுதீட்டார் போல... 

 

 
அந்த இன்-லேண்ட் 'ஸ்ரீராமஜெய'த்திற்கு பதிலாக காசிக்கு நான் ஒன்றுமே எழுதவில்லை. அவனிடமிருந்தும் இந்த ஒன்றரை வருடங்களாகத் தகவலே இல்லை. ஆனால் சென்ற வாரம் எனக் இனிய அதிர்ச்சி. எதிர்பாராத விதமாக பெங்களூரில் ஒரு மதுபான 'பாரில்' காசியைச் சந்தித்தேன். சற்றே இளைத்திருந்தான் காசி. நவீன மோஸ்தரில் உடையும் தலைவாரலும். கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் மெல்ல வெளுத்து வருகிறதுபோல. 

 
இருமனமொப்பிய திருமண விலக்கு (Mutual Divorce) கிடைத்து விட்டதாகச் சொன்னான். முதல் முறை விலக்கு பெற்றது போலவேத தனது அதே 'குடும்ப வக்கீல்' மூலமாகத்தான் தன் பெண்ணுக்கு இம்முறையும் அதைச் செய்ய வேண்டும் என மாஜி மாமனார் பிடிவாதம் பிடித்து இழுத்ததில் கொஞ்சம் கால தாமதமாகிக் கிடைத்தது என்றான். அந்தச் செய்தியில் சிறு அதிர்ச்சியோ, முழு சந்தோஷமோ எனக்கில்லை. ரம்மில் ஒரு குவாட்டர் குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தான். வாயில் புகைந்து கொண்டிருந்தது. 

 
ஆச்சரியமான சந்திப்புதானிது என ஆர்வம் பொங்க அவன் முன்னால் உட்கார்ந்திருந்தேன். 'அப்புறம்... என இங்க' என்றதற்கு தன் விசிடிங் கார்டாக மேல் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான். மார்க்கெட்டிங் டைரக்டர். அடேயப்பா! எனக்கு மிகுந்த சந்தோஷமாகிவிட்டது. பழையபடி இல்லாமல் எப்படியோ ஒரே தொழிலில் ஒட்டிக் கொண்டு, நட்பறுத்துக் கொள்ளாமல் கவனமாக முன்னேறி இருக்கிறான் போல. வெயிட்டரிடம் இன்னொரு டம்ளர் கேட்டான் காசி. ஒரு வேளை அபயக் கட்டையாகப் பற்றினானே 'காசு, காசு' என்று, அந்த ஸ்ரீராமஜெயம் பண்ணுகிற வேலையோ இவ்வளவும்! 

 
'எப்படி - எல்லாம்' என்றேன் உற்சாகமாக. 

 
'அது அது எப்படியோ அப்படித்தான் அது அது' என்றான் வேதாந்தி மாதிரி. மாலையில் தொடங்கியது இரவு பத்தரைவரை பேசிக் கொண்டிருந்தோம். தனது ஒன்றுவிட்ட அண்ணனிடம் வட்டிக்கு கொஞ்சம் பணம் வாங்கி முதலீடு செய்திருப்பதாகச் சொன்னான். கூட இருக்கும் நண்பரும் நல்ல மாதிரி, பொருளாதார விஷயத்தில் நிறைய ஒத்துழைக்கிறார் என்றான். இனி காசி பிழைத்து விடுவான் என்று வாய்விட்டே சொன்னேன். வாய்விட்டுச் சிரித்தான். 'நானெங்கே இங்கே' என்று என்னைக் கேட்டான். ஆயுள் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அலுவலக வேலையாக என்று நீட்டிச் சொன்னேன். சிரித்தான். 'நோ ப்ராப்ளம்' என்றான். 

 
'பாரில்' நிறைய கூட்டமிருந்தும்கூட, ஏ.சி.யானதாலோ என்னவோ அமைதி கூடி இருந்தது. எவர் உரக்கப் பேசினாலும் தாழ்ந்தே கேட்டது. கேட்கவும் சொல்லவும் நிறைய இருந்தும், இருவருக்ம் இடையில் என்னவோ சிறு தயக்கம் நின்றிருந்தது. போதையின் ஒரு முன்னேற்ற கட்டத்தில் தயக்கம் விலகிவிட்டது. ஐஸ் கேட்டான் காசி. என் டம்ளரை சீக்கிரம் காலியாக்கித் தரச் சொன்னான். சிகரெட்டைக் காட்டி எடுக்கவில்லையா என்றான். நிறுத்தியாச்சு! - எப்பாச்சும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மட்டும் என்று, ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தினேன். பீறிட்டுச் சிரித்ததில் ரம் பொறையேறிவிட்டது. 

 
நானும் சிரித்துக்கொண்டே கேட்டேன். 

 
''ஏண்டா காசி இப்படி சிரிக்கிறே? 

 
'நோ ப்ராப்ளம்! இல்லடா குணா.. சமீபத்தில் 'Confessions of Zeno' னு ஒரு இத்தாலி நாவல் படிச்சேன். அதில் 20 பக்கத்துக்கு ரெண்டாவது அத்தியாயம். The Last Cigarette ன்னு. சிகரெட் விடறது பத்தி. விட தீர்மானம் போட்டு முடியாம எப்படி எல்லாம் அவஸ்தைங்கறதப் பத்தியே இருபது பக்கமும்...'' 

 
நான் பழைய காசியைப் பார்த்துவிட்டேன். மேலும் சுயசரிதை பாணியில் எழுதப்பட்ட அந்த நாவலைப் பற்றியே நீண்ட நேரம் புல்லரித்துப் பேசிக் கொண்டே போனான். நாவலில் அதன் ஆசிரியர் Italo Sevevo வும் தன்னைப் போலவே 'ஈக்குஞ்சு' பற்றி கவிதை எழுதியிருப்பதையும் விவரித்து பிரம்மாண்டமாக 

சந்தோஷப்பட்டான். ஒரு வாய் அருந்திவிட்டு, நாடு மொழி இன சூழல் விவரங்கள் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அந்த ஏழு அத்தியாய நாவல் ஏகதேசம் தனது சொன்த வாழ்க்கை வரலாறு போலவே இருக்கிறது என்றான். அவசியம் அதை நான் படிக்க வேண்டும் - போய் அனுப்புகிறேன் என்றான். மேலும் விடாமல், நாவலின் அத்தியாய தலைப்புகளைக் கேள் என்று வியந்து சொன்னான்:
Introduction
The Last Cigarette
The Death of my Father
The Story of my Marriage
Wige and Mistress
A Business Partnership
Psychoanalysis 

 
இன்னொரு குட்டி பெக் வாங்கினான் காசி. நான் போதுமென்று விட்டேன். திடீரென, தான் ஒன்றும் முற்றிலும் மாறிவிட்டதாக நான் நினைத்துவிட வேண்டாமென்று சற்றே நெகிழ்ச்சியாக, லேசாக எச்சரிக்கை விடும் தொனியிலும், கண்கள் வழியாகவும் பேசினான் காசி. ஒரு சின்ன உதாரணம் பார் என்று விட்டு சொன்னான். ஆறு மாதங்களுக்கு முன் நடந்ததாம் இது : 

 
ஒய்.டபிள்யூ.சி.ஏ. விடுதியில் தங்கிக் கொண்டு, கிறிஸ்துவ மத நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கம் ஒரு பெண்கள் கல்லூரியில் வேலை பார்த்து வந்த ஒரு இளம் பெளதிகத் துணை பேராசியை, காசிக்கு ஒரு நண்பன் மூலம் இரண்டொரு சந்தர்ப்பங்களில் அறிமுகமானாள். மிக அழகான யுவதியாம். துரதிர்'டம் - ஒரு குழந்தையோடு அவள் விதவையாகி இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியாகவில்லை. தன்னை மணக்க விருப்பம் வேண்டி விடுதி முகவரிக்கு அவளுக்கு கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறான். நான்கு கடிதங்கள். கடைசி இரண்டு கடிதங்கள் ரெஜிஸ்டர்டு தபால். நான்கும் வார்டன் கையால் பிரிக்கப்பட்டது! நண்பன் காசியை தெருவில் மடக்கி ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளால் அறைந்தான்; பெண்ணின் அண்ணனிடம் இழுத்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுப் போனேன். அந்தப் பெண் மூன்று நாட்களாக அழுது கொண்டிருப்பதாக வேறு சொல்லிவிட்டுப் போனான். ஒரு மாதங் கழித்து கல்லூரி வாசலில் அவள் காலில் விழாத குறையாக வருந்தி மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்தானாம் - மன்னிப்புக் கேட்கப் போனதாலும் அந்தப் பெண்ணைப் பயமுறுத்தி நினைவு தன் உடம்புக்குள் இரத்த ஓட்டத்தில் ஒரு உடையாத குமிழியாக ஓடிக் கொண்டே இருப்பதானது காவிய சோகம் என்றான். 

 
நிமிடத்தில் காவிய சோகம் பட்டுவிடும் காசியின் மனநிலை இன்னும் - குறிப்பாக பெண்கள் விஷயத்தில் - மாறவே இல்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த ரொமாண்டிக் பார்வை ஒரு நோய்க் கூறாகவே இன்னும் படுகிறது. அவனிடம் எனக்கு. ஆனால் வேறு நினைய விஷயங்களில் குணமாகியிருப்பது பேச்சினூடே தெரிந்தது. 'ஆசைப் பட்டதை அடைந்த பின்னாலும் ஒரு பள்ளம் மிச்சமாகி அதில் நலுங்குமே ஒரு சோகம் அதை அனுபவித்தால் தெரியும் ஆசையின் குணம் என்ன என்று' - பின்னால் பேசும்போது எதற்கோ இப்படி சொன்னான். 

 
சமீபத்தில் திருப்பதி போய் வந்தானாம். ஜாலித் துணையாக ஒரு நண்பனோடு போனவன் 'கம்பெனி ஸேக்'குக்கு தானும் மொட்டையடித்துக் கொண்டானாம். கம்பெனி ஸேக் ஆக வேறு கோவில்களுக்கும் அப்படியே போய்விட்டு, திருவண்ணாமலை வந்த போது ராம்சூரத் குமார் என்றொரு யோகியைச் சந்தித்ததாகச் சொன்னான். 'நீ கதவைத் தட்டும் விதம் சகிக்கக் கூடியதாக இல்லை' என்பதையே கோபம் தணிந்த கடைசியிலும் தனக்கான ஒரே ஆசிச் செய்தியாக அவர் வழங்கி அனுப்பியதையும் அதில் பூரண அர்த்தமிருப்பதாகவும் சொன்னான்.
நான் இன்னொரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன். அவன் அப்பாவைப் பற்றிக் கேட்டேன். 'நோ ப்ராப்ளம்' என்றான். அடிக்டி 'நோ ப்ராப்ளம்' என்ற வார்த்தையையே, எதற்கும் பதிலாக அவன் சொல்வதைக் கவனித்துக் கொண்டே வந்தேன். கேட்டேன், சிரித்துக் கொண்டே 'நோ ப்ராப்ளம்' என்றான். எனக்கு அந்த பதில் அருவருப்பாகவும், எரிச்சலாகவும் பட்டது. காரியங்களை காரியங்களுக்காக மட்டுமே செய்வதில் ஒரு விடுதலைஉணர்வும், பரபரப்பற்ற பேரார்வமும் இருப்பதைக் கண்டுகொண்டு விட்டதால், எந்தக் காரியமுமே தனக்குப் பேரானந்தமாக இருக்கிறது என்றான். நான் ஒரு நிமிஷம் பேசவில்லை. சொல்லும்போது அவனுக்கு நாக்கு லாவகம் கொஞ்சம் இழந்து, எழும்புவதில் சிரமப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். என் நான்கு தங்கைகளுக்கும் காரியம் செய்து முடிப்பதற்குள் பட்ட கஷ்ட அனுபவங்கள் எனக்குள் ஒற்றை எண்ணமாக, மின்னலின் ஒரு கீற்றாக உருக்கொண்டு அறைந்தது - ஈயைத் துரத்தும் பல்லியாக அது வேகமாக ஓடியதில், பல்லியின் வால் அறுந்து நினைவில் இடறி விழுந்தது. 'என்ன யோசனை' என்றான். 'நோ ப்ராப்ளம்' என்றேன். சிரித்துக் கொண்டே திடீரென்று உரக்க அவன் நூறு கொசுவர்த்திச் சுருள்களைக் கொடுத்து, இரண்டிரண்டாக ஒட்டி இருப்பதை, ஒன்று ஒன்றாக தனித்தனியாகப் பிரித்துவைக்கச் சொன்னால் என்னால் பொறுமையாகச் செய்ய முடியுமா என்று கேட்டான். மறு நிமிஷமும் நான் பேசாதிருந்தேன். முகம் தொட்டு 'என்ன'? என்றான். கூலி எவ்வளவு என்றேன். எழுந்து என் முன் மண்டையிலடித்துச் சிரித்தா. ஓயவில்லை. இருட்டிவிட்டது வெளியே. ஏ.சி.யிலும் நன்றாக வியர்த்துவிட்டது காசிக்கு. 

 
வயதான கிழப் பிச்சைக்காரர்களைத் தெருவில் பார்த்தால், மனதின் ஆழத்தில் அவர்களைத் தன் அப்பாவோடு ஒரு கோணத்தில் ஒப்பிட்டுக் கொண்டு, குற்றவுணர்ச்சி - சுய இரக்கம் - இயலாமை - பயம் எல்லாம் கலக் அவசரக் கருணையாக செயல்பட்ட நாட்கள் மாதிரி இப்போது இல்லை. அவர்களை அவர்களாகவே பார்த்து அவர்களுக்காகப் பார்க்க முடிகிறதென்றும், அவர்களைப் போன்ற இன்னும் பலரின் ஸ்திதியை மாற்றிவிட சமூகதளத்தில் காரியமாற்ற முனைந்திருக்கும் சில நல்ல மனக்ளுடனும் தான் பழகிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். 'மனமாக' இதை சுருக்கி விடுவதை அவர்களே ஒத்துக கொள்ள மாட்டார்களெனினும் தன் மனதில் பட்டது இவ்வளவுதான் என்று எனக்கு புரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டு போனான். மேலும் எனக்கு இமைகளில் கனம் சுருட்டி உணர்ந்தேன். வெளியில் போனால் நன்றாக இருக்கும் என்று பட்டது. காசி மேலும் ஒரு சிகரெட்டை, புது பாக்கெட் கிழித்து எடுத்தான். 

 
ஆனாலும், தனக்கு கல்யாண ஆசை இம்சிக்கிறது இன்னும் என்றான் திடீரென்று. தனிமை, துவைத்தல், ஹோட்டல் இவைகளையும் திருமணத்திற்கான சாக்குகளில் ஒன்றாக வைத்து யோசிப்பதில் தவறுண்டா என்று என்னிடம் ஒரு சிறுவன்போல கேட்டான். பைத்தியக்காரன்! பெய்த பெருமழைவிட்ட சில மாலை நேரங்களாக, சில நாட்கள் கழிவதிலிருந்து, தன் வாழ்க்கைக்கு ஊட்டம் சேகரித்துக் கொள்வதாகக் கூறினான். சில சமயம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸில் தொலைதூரம் உட்கார்ந்துகொண்டு போகும்போது, பஸ்ஸின் ரீதி கூட்டும் ஓட்ட வேகத்தின் சங்கீதச் சரடில் இணைந்துவிடும் போது வாழ்க்கையை ஒரு அற்புதப் பரிசாக உணர்வதாகவும் சொன்னான். எனக்கும் கேட்க உற்சாகமாகிவிட்டது. பேச்சை நிறுத்திவிட்டு ஃபிரைடு ரைஸ் சாப்பிடுவோமா என்று ஆர்வமாகக் கேட்டான். எனக்கு அவன் கேட்டவிதம் மிகவும் பிடித்திருந்தது, எனக்கு ஃபிரைடு ரைஸ் பிடிக்காவிட்டாலும். எவ்வளவோ தான் நிதானப் பட்டிருந்தாலும் சில சமயம் எல்லாம் கொட்டிவிடுகிறது என்றான். தனியறையில் பின்னிரவில் மோனத்தில் தனக்கு பிடித்த கவிஞனைப் படித்துக் கொண்டிருக்கும் போது, வாசலில் கட்டிலிலிருந்து அப்பா அவருக்கான ஏதோ ஒரு தொனி சேர்த்து உரத்து கொட்டாவி விட்டால் தாங்க முடியவில்லை. எழுந்து போய் அந்த வாயை அடைத்து அமுக்கிவிடலாம் போலிருக்கிறது. ஒரு கொட்டாவி அந்த மாதிரி வந்தால் போதும், அந்தப் பின்னிரவே தனக்கு பாழ் என்றும் சொன்னபோது சற்றே சோர்வாகிவிட்டான். அப்பா இறந்து விட்ட பின்பும் தான் வாழ்க்கையைத் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை மெல்லவே கூடிவருகிறது என்றான். அடிப்படை சுபாவமாகவே 'சுயம் நசித்து' விட்ட நான்கைந்து நண்பர்கள், எழுத்து, படிப்பு இதெல்லாம் மட்டுந்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்றான். என்ன இன்னும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறாய்தானே? என்று கேட்டுவிட்டு கடைசி 'சிப்'பையும் முடித்தான். சிகரெட் பொருத்திக் கொண்டான். 

 
திடீரென தான் சமீபத்தில் கண்ட கனவுகளைப் பற்றி பேச்சை மடை மாற்றிக் கொண்டான். அழகான கண்ணாடிக் கிண்ணத்தில் மிதந்த மிளகாய் நீரை சில்வர் கரண்டியால் கலக்கிக் கொண்டே பேசினான். முன்னைப் போல கனவுகள் வந்தாலும், நோ-ப்ராப்ளம் என்றான். ரமணரின் பரவச முகம் ஒருமுறை வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை பாம்பு கடித்து ரத்தம் வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை பாம்பு கடித்து ரத்தம் வந்துவிட்டதாம். பாடையில் வைத்து ஒரு கனவில் தன்னைக் கண்டானாம். தீவிரவாதியாக போலீஸாரால் துரத்தப்பட்டு ஒரு கனவில் ஓடினானாம். ஓரிரவு நெடுஞ்சுவர் தாண்டி, மலைகள் தாண்டி, விண்ணில் பறந்து போவது மாதிரி, கைகளால் பேரானந்தமாகக் கடைந்து கடைந்து பறந்துகொண்டே இருந்தானாம். இந்த ஒரு கனவு மட்டும் மீண்டும் வராதா என்று ஏக்கப்படுவதாகச் சொன்னவன், அடிக்கடி திரும்பத் திரும்ப வரும் எரிச்சலூட்டும் ஒரு கனவென, பரீட்சைக்குப் படிக்காமலேயே போய்விட்டு ஹாலில் திணறுவதைச் சொன்னான்.
கனவுகளை நான்கு நாட்களுக்குக் கவனித்து, விடிந்ததும் ஒரு குயர் ரூல்டு நோட்டில் எழுதி வைக்க ஆரம்பித்தால், ஐந்தாம் நாள் வராதென்றான். தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தால் கனவு புறமுதுகு எடுக்கும் என்றான். மீறி, நிச்சயம் வராதா என்றால் பெருவாழ்வின் பல புதிரிகளுக்கும் போல இதற்கும் நிச்சயமாகச் சொல்ல முடியாதுதானே என்று கேட்டான். 

 
கத்தி, கபடாக்ள், முள் கரண்டி அலங்காரமாக சூடு பறக்க மேஜைக்கு வந்தன ஃபிரைடு ரைஸ் தட்டுகள். அநேகமாக என் பங்கில் பாதிக்கும் மேல் காசிதான் சாப்பிட வேண்டியிருக்கும்.


22 comments:

  1. சமீபத்தில் வாசித்து என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் காசியை நண்பர்கள் பலருக்கும வாசிக்கக் கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன், உங்கள் தளத்தில் நீங்கள் பதிவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    இணையத்தில் கிடைப்பதற்கரிய பொக்கிஷங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    மணிக்கொடியில் தொடங்கி இன்று வரையிலான நம் இலக்கிய பாரம்பர்யத்தை இணையத்தில் இப்படி பதிவது மிக முக்கியமானது அவசியமானது. இத்தளத்துள் நுழையும் தோறும் இன்னதென்றறியாத ஒரு உணர்வால் ஆட்படுகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மனம் கனத்துப்போனது.

    ReplyDelete
  4. சென்ஷியின் மூலம் இங்கு வந்தேன். காசியின் கதை மனதை நெகிழ்த்துவிட்டது. யூமாவாசுகியின் மஞ்சள் வெயிலில் வரும் கதிரவனை ஞாபகப்படுத்தியது.

    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நன்றி. நல்லதொரு கதையை பகிர்ந்ததற்கு.

    ReplyDelete
  6. நல்ல கதைகளை பகிர்வது மகிழ்ச்சிக்குறியது. எஸ்.ரா சொன்ன நூறு கதைகளை தேடலாம் என்று நினைத்திருந்தேன். அதை எளிமையாக மாற்றியிருக்கிறது உங்கள் தளம்...

    ReplyDelete
  7. மிக்க நன்றி.. உங்கள் தளம் மிகவும் பயனுள்ளதாகக் காண்கிறேன்..!!! பயணம் தொடரட்டும்..!!!

    ReplyDelete
  8. nalla murachi.manamarntha paaraattugal.

    ReplyDelete
  9. மௌனி on November 24, 2009



    என்னென்ன கதை வேண்டும்

    ReplyDelete
  10. வாழ்நாளில் மறக்கவே முடியாத கதை

    ReplyDelete
  11. நான் YouTube இல் .... இந்த கதையை பவா செல்லத்துரை சொல்லி.... இப்போது படித்தேன். அருமை. இன்னும் நான் ஆழமாக படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  12. பாவா வின் கதை கேட்டு இங்கே காசியை காண வந்தேன் .

    ReplyDelete
  13. உலகத்தில் வாழும் அனைவருக்குள்ளும் இந்த காசி ஒளிந்து கொண்டு இருப்பான்

    ReplyDelete
  14. எஸ் ரா சொல்லியிருக்கிறார் என்பதால் படித்தேன்... நான் அவ்வளவாக இலக்கியங்களில் மூழ்கியதில்லை... ஆனால் சுஜாதாவின் இளமை, ஜெயகாந்தனின் ஆளுமை என ஆழ்ந்து பார்த்திருக்கிறேன்... ஆனால் இந்த காசி ஏதோ ஒன்று செய்கிறான்... கடைசியில் அவனுக்கு வந்த கனவு போல் எனக்கும் பலமுறை படிக்காத எக்ஸாம் ஹால் கனவு வந்திருக்கிறது... அதை படித்தும் அதிர்ந்துவிட்டேன்...

    ReplyDelete
  15. REALITY WAR WITH INCEST MIND, OF COURSE LIFE IS DIFFERENT FOR DIFFERENT PEOPLE

    ReplyDelete
  16. படித்து முடித்து விட்டேன். ஆனாலும் வேறு கதைக்கு செல்ல முடியவில்லை

    ReplyDelete
  17. காசி நிறைய இலக்கியம் படித்தும் ஏன் இப்படிப்பட்ட அலைக்கழிப்புகள்... இலக்கியம் மனிதனை மேம்படுத்தும் அல்லவா?

    ReplyDelete
  18. பாவா செல்லதுரை கதை வழியாக இந்த மூல கதை படிக்க வந்தேன்.

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.