Jul 9, 2011

சாகுருவி - ந.பிச்சமூர்த்தி

கொக்கு

படிகக் குளத்தோரம்na_pitchamurthy
கொக்கு.
செங்கால் நெடுக்கு
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு.
உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்குக்
கட்டாயக் கட்டணம்.
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும்...
வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலழகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு-
தெரிவதே போதாதா?

சாகுருவி

இருள் பழுத்த இரவினில்
விண்ணின் மீன்கள் உதிர்ந்தன.
உயிர் முடிந்த சருகுகள்
ஊசலாடி விழுந்தன.
நிழலும் நீரும் முடிய மாந்தர்
மாரகனடி சேர்ந்தனர்
பூவும் பிஞ்சும் காயும் கிழமும்
சாய்ந்தது நெஞ்சில் காய்ந்தது...
காலை விழித்த கிராமத்தார்கள்
கண்கலங்கி வெதும்பினர்.
கருத்தைச் செலுத்தி உன்னிப் பார்த்தும்
காணவில்லை காரணம்
கோவில் கோபுரத்தில் வாழ்ந்த
சாகுருவி தெரிந்தது.
இரவு முழுதும் அவச்சொல் ஓசை
கேட்டது காதில் மூண்டது
காரணத்தைக் கண்டது போல்
களிப்புடன் கைசொடுக்கினர்.
“சாகுருவி சபித்துச் சபித்து
ஊர்முழுதும் நாச மாச்சு.
சாகுருவி மாள வேண்டும்
கிராமம் மீளத் தழைக்க வேண்டும்“
துடுக்குப் பிள்ளை இரண்டு மூன்று
போபுரத்தில் தாவினர்
சாகுருவி பிடித்து வந்து
ஊர் முழுதும் காட்டினர்
அரிசி காசு தண்டி வந்து
எமனின் தோல்வி முழக்கினர்.
பின்னும் பாசம் விழுந்தது.
பின்னும் மனிதர் இறந்தனர்.
சாகுருவி செத்துப் போயும்
சாவு நித்தியம் வாழ்ந்தது.

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.