Oct 19, 2008

மருமகள் வாக்கு-கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பி (நன்றி : ஸ்நேகா பதிப்பகம் வெளியீடு. )

மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது.

சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கரியக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள் பல குடும்பங்களுக்கும் பால் வார்த்துக்கொண்டிருந்தவர் வீரபாகுக் கோனார்தான்.

modern_art_gallery.-contemporary_galleries_of_modern_art_paintings.merello.-_la_nina_sevillana

மீனாட்சி அம்மாளிடம் சொந்தமாகப் பசு இருந்தது. வேளைக்குக் கால்படிப் பாலை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு மிச்சத்தை நியாயமாகத் தண்ணீர் சேர்த்து விலைக்கு விற்றுவிடுவாள். ரொக்கந்தான். கடனுக்குத்தான் இந்தக் கடங்கார வீரபாகுக் கோனார் இருக்கிறானே!

மீனாட்சி அம்மாள் அப்படியொன்றும் வறுமைப்பட்டவள் அல்ல. இருந்த வீட்டுக்கும், ஊரடியில் அறுபத்தாறு சென்ட் நஞ்சைக்கும் அவள் சொந்தக்காரி. தாலுக்கா பியூனாக இருந்து சில வருஷங்களுக்கு முன் இறந்து போன அவள் கணவன் அவள் பெயருக்குக் கிரயம் முடித்து வைத்த சொத்து இது. ராமலிங்கம் ஒரே பையன், ஸாது. தகப்பன் வேலையைப் பாவம் பார்த்துப் பையனுக்கே சர்க்கார் போட்டுக் கொடுத்துவிட்டது அவனுடைய அதிர்ஷ்டந்தான். கல்யாணமும் பண்ணி வைத்துவிட்டாள் மீனாட்சி அம்மாள். தள்ளாத வயதில் உதவிக்கு ஒரு மருமகள் வேண்டும் அல்லவா?

ருக்மிணி மெலிந்து துரும்பாக இருந்தாலும் வேலைக்குக் கொஞ்சமும் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகும் முன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பது வரை எல்லா வேலைகளையும் அவள் அப்பழுக் கில்லாமல் செய்துவிடுவாள். சமையலில் அவளுக்கு நல்ல கை மணம். வெறும் வற்றல் குழம்பும் கீரைக் கறியும் பண்ணிப் போட்டால் கூடப் போதும்; வாய்க்கு மொரமொரப்பாக இருக்கும். (மாமியார்கள் எப்போதும் ஏதேனும் குற்றம் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எல்லாம் மருமகள்காரிகள் திருந்து வதற்கும் மேலும் மேலும் முன்னேறுவதற்கும் தானே.)

ருக்மிணிக்கு பால் கறக்கவும் தெரியும். பால் கறந்தால் நெஞ்சு வலிக்கும் என்று பக்கத்து வீட்டுப் பெண்கள் சொல்வதுண்டு. ஆனால் பலரும் பேசுவார்கள்; ஒன்றையும் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது, பதில் பேசவும் கூடாது. ஏன் யாரிடமும் எதுவுமே பேசாமலிருப்பது ரொம்ப ரொம்ப உத்தமம். நாம் உண்டு, நம் காரியம் உண்டு என்று இருந்துவிட வேண்டும். இப்படி, மருமகள் வந்த அன்றே மாமியார் புத்திமதிகள் கூறியாகிவிட்டது. மேலும், கல்யாணத்துக்கு முன்பே ருக்மிணிக்கு லேசாக மார்வலியும் இறைப்பும் உண்டு. டாக்டர்கள் அவளைப் பரிசோதித்திருந்தால் `டிராபிகல் ஈஸ்னோபீலியா’ என்றிருப்பார்கள். ஆனால் ஏன் அப்படிப் பரிசோதிக்க வேண்டும்? வைத்தியம் செய்கிறேன் என்று வருகிறவர்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுக்குக் காசு ஒன்றுதான் குறி. மீனாட்சி அம்மாளுக்குத் தெரியாதா? அவள் வயசு என்ன? அநுபவம் என்ன? ஒரு குழந்தை பிறந்துவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று சொல்லி விட்டாள். அவள் மட்டுமல்ல; டாக்டரிடம் போவதற்கு இங்கு யாரும் சாகக் கிடக்கவில்லையே?

மருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்கம் சம்பளம் உள்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்க்ஸில் பணம் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான். இவை மட்டுமா? ஓய்ந்த நேரங்களில் ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் லட்சத்துச் சொச்சம் தரம் எழுதி, அக்ரகாரத்துப் பெண்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறாள். சாவதற்குள் பத்து இலட்சத்து ஒன்று எழுதி முடித்துவிட வேண்டும் என்பது அவள் திட்டம்.

ருக்மிணியும் மாமியாரும் என்றுமே சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். பரிமாறியபடியே, `பெண்டிற்கழகு உண்டி சுருக்குதல்’ என்று மீனாட்சி அம்மாள் அட்சரச் சுத்தத்துடன் கணீரெனக் கூறுகையில், அந்த அரிய வாக்கை மீனாட்சி அம்மாளே அவளது சொந்த அறிவால் சிருஷ்டித்து வழங்குவதுபோல் தோன்றும் ருக்மிணிக்கு. மேலும் அதிகமாகச் சாப்பிட்டால் ஊளைச் சதை போட்டுவிடும் என்று மாமியார் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று மருமகள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. (ரொம்பவும் பொறுக்க முடியாமல் போய், யாரும் அறியாதபடி ருக்மிணி அள்ளிப் போட்டுக் கொண்டு தின்றது இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில்தான்.)

மருமகள் என்று வருகிறவர்களின் வாயைக் கிளறி எதையாவது பிடுங்கிக்கொண்டு போய், மாமியார்க்காரிகளிடம் கோள்மூட்டிச் சண்டை உண்டாக்கி வேடிக்கை பார்க்காவிட்டால் ஊர்ப் பெண்களுக்குத் தூக்கம் வராதல்லவா? ஆனால், ருக்மிணியிடம் அவர்கள் வித்தைகள் எதுவும் செல்லுபடியாகாமல் போனது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. சதா வீட்டோடு அடைந்து கிடக்கும் போது அவள் எப்போதாவது கோவிலுக்கோ குளத்துக்கோ அனுப்பப்படும்போது, அவளை விரட்டிக்கொண்டு பின்னால் ஓடிய பெண்கள் இப்போது ஓய்ந்து, `இந்தப் பெண் வாயில்லாப் பூச்சி’ என்று ஒதுங்கிக்கொண்டு விட்டார்கள்.

இரவு நேரத் திண்ணை வம்புகளின்போது, ``மாட்டுப் பெண் எப்படி இருக்கா?’’ என்று துளைக்கிறவர்களிடம், ``அவளுக்கென்ன, நன்னார்க்கா’’ என்று மேல் அண்ணத்தில் நா நுனியை அழுத்திப் பதில் சொல்லி அடைத்துவிட்டு அடுத்த விஷயத்துக்கு நகர்ந்து விடுவாள் மீனாட்சி அம்மாள். ``அவளா? அவளை ஜெயிக்க யாரால் முடியும்?’’ என்பார்கள் ஊர்ப் பெண்கள், ஒருவித அசூயையுடன்.

தேர்தலுக்கு முன்தின இரவுப் பேச்சுக் கச்சேரியில் தேர்தல் விஷயம் பிரதானமாக அடிபட்டதில் ஆச்சரியம் இல்லை. மீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், ``ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி?’’ என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. ``ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா?’’ என்றாள் மீனாட்சி அம்மாள். ``ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?’’ என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. ``பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள்? நானும் அவளும் ஒண்ணு, அது தெரியாதவா வாயிலே மண்ணு’’ என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.

காலையில் வாக்குப் பதிவு சற்று மந்தமாகவும் மதியத்துக்கு மேல் ரொம்பச் சுறுசுறுப்பாகவும் இருந்தது. மீனாட்சி அம்மாள் முதல் ஆளாகப் போய் வோட்டுப் போட்டுவிட்டு வந்துவிட்டாள். வீட்டிலிருந்து கூப்பிடுகிற தூரத்தில் ஆற்றுக்குப் போகிற வழியில் இருக்கிற தொடக்கப் பள்ளிதான் சாவடி. ராமலிங்கம் குளித்துவிட்டுத் திரும்புகிற வழியில் ஆட்கள் பிடித்திழுக்க, ஈரத் துணியோடு அவன் வோட்டளிக்கும்படி ஆயிற்று.

மத்தியான்ன உணவுக்குப் பிறகு வழக்கமாகிவிட்ட சாப்பாட்டு மயக்கத்தில் மீனாட்சி அம்மாள். தாழ்வாரத்து நிலைப்படியில் தலைவைத்துப் படுத்துக் கிடந்தாள். ருக்மிணி தொழுவத்தில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்டிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் அது சுமட்டுக் கட்டுக்கு ஒரு கட்டுப்புல் தின்று தீர்த்திருந்தது. அது குடிப்பதையும் தின்பதையும் பார்த்துக்கொண்டே இருப்பது ருக்மிணியின் மிகப்பெரிய சந்தோஷம்; மாமியாரின் அதிகார எல்லைகளுக்கு வெளியே கிடைக்கிற சந்தோஷம். ``சவமே, வயத்தாலிக் கொண்டே எம்பிட்டுத் தின்னாலும் ஒம் பசி அடங்காது’’ என்று பொய்க் கோபத்துடன் அதன் நெற்றியைச் செல்லமாய் வருடுவாள். ``மாடுன்னு நெனைக்கப்படாது, மகாலக்ஷ்மியாக்கும்! ஒரு நாழி கூட வயிறு வாடப்படாது; வாடித்தோ கறவையும் வாடிப் போயிடும். கண்ணும் கருத்துமாக் கவனிச்சுக்கணும்’’ என்பது மீனாட்சி அம்மாளின் நிலையான உத்தரவு. ``பசுவே, நீ மட்டும் பெண்டிர் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடையாதா சொல்லு!’’ என்று அதன் முதுகில் தட்டுவாள் ருக்மிணி. அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வரும். அதன் கழுத்துத் தொங்கு சதையைத் தடவிக் கொடுப்பதில் அவளுக்குத் தனியான ஆனந்தம், அதற்கும் இது பிடிக்கும். முகத்தை இவள் பக்கமாகத் திருப்பி இவள்மேல் ஒட்டிக்கொள்ளப் பார்க்கும். ``நான் இன்னிக்கு ஓட்டுப் போடப் போறேன். ஒனக்கு அந்த ஒபத்ரவம் ஒண்ணும் கெடையாது. நான் ஆருக்குப் போடணும் நீ சொல்லு. செல்லுவியா? நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ? கிளி பிடிக்குமோ? சொல்லு, எனக்கு ஆரப் பிடிக்குமோ அவாளைத்தான் ஒனக்கும் பிடிக்கும், இல்லையா? நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அதுமாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, அதைவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளையைக் கண்டாலே ஆகாது.’’

வாளியில் தண்ணீர் தணிந்து விடவே, குடத்திலிருந்து மேலும் தண்ணீரைச் சரித்துத் தவிடும் அள்ளிப் போட்டாள். அதற்குள் பசு அழியிலிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கடித்துக்கொண்டு அப்படியே தண்ணீரையும் உறிஞ்சத் தொடங்கவே, எரிச்சலுடன் அதன் வாயிலிருந்து வைக்கோலை அவள் பிடுங்கி எறியவும், வாளி ஒரு ஆட்டம் ஆடித் தண்ணீர் சிந்தியது. ``சவமே, எதுக்கு இப்படிச் சிந்திச் செதறறாய்? தேவாளுக்காச்சா, அசுராளுக்காச்சா? ஒழுங்கா வழியாக் குடியேன்’’ என்று அதன் தாடையில் ஒரு தட்டுத் தட்டினாள். அது இடம் வலமாய்த் தலையை ஆட்டி அசைக்க, தவிட்டுத் தண்ணீர் பக்கங்களில் சிதறி ருக்மிணியின் மேலும் பட்டது. அவள் புடைவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

பசு இப்போது தண்ணீரை உறியாமல் வாளியின் அடியில் வாயைத் தணித்து, பிண்ணாக்குக் கட்டி ஏதாவது கிடைக்காதா என்று துழாவ, தண்ணீரின் மேல்மட்டத்தில் காற்றுக் குமிழிகள் சளசளவென வெளிப்பட்டன. மூச்சு முட்டிப் போய் முகத்தைச் சடக்கென அது வெளியே எடுத்து, தலையை மேல்நோக்கி நிமிர்த்தி, முசு முசென்றது. அதன் முகத்தைச் சுற்றி விழுந்திருந்த தவிட்டு வளையத்தைப் பார்க்க அவளுக்குச் சிரிப்பு வந்தது. ``கேட்டாயா, பசுவே! நீ இப்போ மட்டும் இப்படிக் கறந்தாப் போறாது. எனக்குக் கொழந்தை பொறந்தப்புறமும் இப்படியே நெறயக் கறந்துண்டிருக்கணும். எங் கொழந்தை ஒம் பாலைக் குடிக்க வேண்டாமா? ஒங்கொழந்தை குடிக்கற மாதிரி எங்கொழந்தையும் ஒம் மடீல பால் குடிக்க சம்மதிப்பியோ? எங்காத்துக்காரர் சொல்றாப்லே, எனக்குத் தான் மாரே கெடையாதே. மார்வலிதான் இருக்கு. மாரில்லாட்டாப் பாலேது? ஆனா, நிச்சியமா எனக்கும் கொழந்தை பொறக்கத்தான் போறது. பெறப் போறவள், எங்க மாமியார் சொல்றாப்லே, எப்பவாவது ஒரு தரம் படுத்துண்டாலும் பெறத்தான் செய்வாள். பெறாதவ என்னிக்கும் பெறப் போறதில்லை. யுத்தத்திலே செத்துப் போனானே எங்கண்ணா மணி, அவன்தான் எனக்குப் பிள்ளையா வந்து பொறக்கப் போறான். தெரியுமா ஒனக்கு? கொம்பக் கொம்ப ஆட்டு. ஓரெழவும் தெரியாது ஒனக்கு. நன்னாத் திம்பாய்!’’ பசு பொத் பொத்தென்று சாணி போட்டு, ஒரு குடம் மூத்திரத்தையும் பெய்தது. உடன் அவளே அவசரத்துடன் சாணியை இரு கைகளாலும் லாகவமாக அள்ளிக் கொண்டுபோய்ச் சாணிக் குண்டில் போட்டுவிட்டு வந்தாள். புல்தரையில் கையைத் துடைத்துவிட்டு, மிகுந்திருந்த தண்ணீருடன் வாளியையும் குடத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். பசு அவளை நிமிர்ந்து பார்த்து, `ம்மா’ என்று கத்திற்று. ``போறேன், போய் ஓட்டுப் போட்டுட்டு வந்து கன்னுக்குட்டியைக் குடிக்க விடறேன். மணி மூணுகூட இருக்காதே. அதுக்குள்ள ஒனக்கு அவசரமா?’’ பால் கட்டி மடி புடைத்துக் காம்புகள் தெறித்து நின்றன.

மீனாட்சி அம்மாள் சொல்லி வைத்திருந்தபடி, பக்கத்து வீட்டுப் பெண்கள் சிலர் ருக்மிணியையும் சாவடிக்கு அழைத்துச் செல்ல, இருப்பதில் நல்ல உடைகளணிந்து வந்திருந்தனர். கிணற்றடியில் கை, முகம் எல்லாம் கழுவிக்கொண்டு ருக்மிணி வீட்டுக்குள் வந்தாள். ``சரி, சரி, தலய ஒதுக்கிண்டு, நெத்திக்கிட்டுண்டு பொறப்படு’’ என்று மாமியார் முடுக்கவும், ருக்மிணி அலமாரியைத் திறந்து சிறிய சிறிய பச்சைப் பூக்கள் போட்ட ஒரு வாயில் ஸாரியைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு மறைவுக்காக ஓடினாள். முகத்தின் மூன்றில் ஒரு பங்கு தெரிகிற கையகல வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்து, சீப்பு சமயத்துக்குத் தட்டுப்படாமல் போனதால் விரல்களாலேயே முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டு, நெற்றியில் ஏதோ ஒரு இடத்தில் குங்குமம் வைத்துக்கொண்டு வாசல் பக்கத்துக்கு ஓடோடியும் வந்தாள். வந்திருந்த பெண்களில் ஒருத்தி மீனாட்சி அம்மாள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, ``ஏண்டி, எம்பிட்டு நேரம்டீ?’’ என்று கேட்கவும் ருக்மிணிக்குத் துணுக்கென்றது. ``தலயக் கூடச் சரியா வாரிக்காமன்னா ஓடிவரேன்’’ என்று அவள் அடைக்கிற குரலில் பதில் சொல்லி முடிப்பதற்குள், ``சரி, சரி, கிளம்புங்கோ!’’ என்று எல்லாரையும் தள்ளிவிட்டாள் மாமியார் அம்மாள். படி இறங்கியவளைக் கையைத் தட்டி, ``இந்தா, சொல்ல மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ’’ என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, ``ஞாபகம் வைச்சிண்டிருக்கியா? தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா. பூனப் படமும் கிளிப்படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத போ’’ என்றாள்.

சாவடி அமைதியாக இருந்தது. பல வளைவுகளுடன் ஒரு பெண் வரிசையும் சற்று நேராக ஓர் ஆண் வரிசையும். பெண் வரிசையின் நீளம் சிறிது அதிகம். வர்ணங்கள் நிறைந்த பெண் வரிசை மலர்கள் மலிந்த ஒரு கொடி போலவும் ஆண் வரிசை ஒரு நெடிய கோல் போலவும் தெரிந்தன. வோட்டளித்து வெளிவந்த சில ஆண் முகங்களில் தந்திரமாய் ஒரு காரியம் நிகழ்த்தி விட்ட பாவனை தென்பட்டது. ஒரு சாவுச் சடங்கை முடித்து வருவது போல் சில முகங்கள் களையற்று வெளிப்பட்டன. அநேகமாய், பெண்கள் எல்லாருமே மிதமிஞ்சிய, அடக்கிக்கொள்ள முயலும் சிரிப்புகளுடன், பற்களாய் வெளியே வந்தனர். ருக்மிணிக்கு ரொம்பச் சந்தோஷம். எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது.

அந்தப் பள்ளிக் காம்பவுண்டுக்குள் செழிப்பாக வளர்ந்து நின்ற வேப்பமரங்களை அவள் மிகவும் விரும்பி நோக்கினாள். வெயில் மந்தமாகி, லேசுக் காற்றும் சிலுசிலுக்க, அது உடம்பை விட மனசுக்கு வெகு இதமாக இருப்பதாய் அவள் உணர்ந்தாள். கண்ணில் பட்டதெல்லாம் அவளைக் குதூகலப்படுத்திற்று. `இன்னிக்கு மாதிரி என்னிக்காவது நான் சந்தோஷமா இருந்திருக்கேனா?’ என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஆ! அதோ அனிசமரம்! ஒரு கோடியில், ஒரு கிணற்றடியில் ஒற்றைப்பட்டு அது நிற்கிறது. அது அனிச மரந்தானா? ஆம், சந்தேகமே இல்லை. வேம்பனூரில்தான் முதல் முதலாக அவள் அனிசமரத்தைப் பார்த்தாள். அதற்குப் பின் இத்தனை வருஷங்களில் வேறு எங்குமே அவள் பார்க்கவில்லை. உலகத்தில் ஒரே ஒரு அனிசமரந்தான் உண்டு; அது வேம்பனூர் தேவசகாயம் ஆரம்பப் பாடசாலைக் காம்பவுண்டுக்குள் இருக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டிருந்தவள் இவ்வூரில் இன்னொன்றைக் கண்டதும் அதிசயப்பட்டுப் போனாள். ஒருகால் அந்த மரமே இடம் பெயர்ந்து இங்கே வந்துவிட்டதா? ஆ! எவ்வளவு பழங்கள்! ருக்மிணிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அனிசமரம், அனிசமரம் என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது. அனிசம்பழம் தின்று எவ்வளவு காலமாகிவிட்டது! அதன் ருசியே தனி!

வேம்பனூரில் அவள் ஐந்தாவது வரை படித்தபோது எத்தனை பழங்கள் தின்றிருப்பாள்! கணக்கு உண்டா அதற்கு? பையன்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அவள் மரத்தில் ஏறுவாள். இரு தொடைகளும் தெரியப் பாவாடையைத் தார்பாய்ச்சிக் கட்டிக் கொள்வாள். மரம் ஏறத் தெரியாத அவளுடைய சிநேகிதிகள், `ருக்கு, எனக்குப் போடுடி, எனக்குப் போடுடி’ என்று கத்தியபடி கீழே அண்ணாந்து, நிற்க, மரத்தின் உச்சாணிக் கிளைகளில் இருந்தபடி பழம் தின்று கொட்டைகள் துப்பி மகிழ்ந்ததை நினைத்தபோது அவளுக்குப் புல்லரித்தது. கண் துளிர்த்தது. புளியங்கொட்டை ஸாரும் சள்சள் ஸாரும் ஞாபகம் வரவே அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. பாவம், அவர்கள் எல்லாம் செத்துப் போயிருந்தாலும் போயிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டாள். மீண்டும் சின்னவளாகிப் பள்ளிக்குப் போக முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு!

மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ருக்மிணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அனிசமரத்தின் ஒரு நுனிக்கிளையில் ஒரு பச்சைக்கிளி சிவந்த மூக்குடன் பறந்து வந்து உட்கார்ந்து கிரீச்சிட்டது கிளை மேலும் கீழுமாக ஊசலாடியது. என்ன ஆச்சரியம்! `கிளியே, வா! நீ சொல்ல வேண்டியதில்லை. என் ஓட்டு உனக்குத்தான். முன்பே நான் தீர்மானம் செய்தாயிற்று. ஆனால், என் மாமியாரிடம் போய்ச் சொல்லிவிடாதே. பூனைக்குப் போடச் சொல்லியிருக்கிறாள் அவள். நீயே சொல்லு, கிளிக்குப் போடாமல் யாராவது பூனைக்குப் போடுவார்களா?. என் மாமியார் இஷ்டத்துக்கு வித்தியாசமாக நான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்ய, சொல்லு? சரி, இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கள் வீட்டுக்கு வாயேன். நீ எப்போது வந்தாலும் என்னைப் பார்க்கலாம். மாட்டுத் தொழுவத்தில் தான் இருப்பேன். இப்போது வரச் சௌகரியமில்லை என்றால் பின் எப்போதாவது வா. எனக்குக் குழந்தை பிறந்த பிறகு வந்தாயானால் ரொம்பச் சந்தோஷமாக இருக்கும். என் குழந்தையும் உன் அழகைப் பார்ப்பான் அல்லவா? வரும்போது, கிளியே, குழந்தைக்குப் பழம் கொண்டு வா!’

ருக்மிணி அன்றுவரை கியூ வரிசைகளைக் கண்டவள் இல்லை. இது அவளுக்குப் புதுமையாகவும் ஒரு நல்ல ஏற்பாடாகவும் தெரிந்தது. ரெயில் மாதிரி நீளமாக இருந்த வரிசை இப்போது குறுகிப் போய்விட்டதே! ஆண்கள் ஏழெட்டுப் பேரே நின்றனர். சாவடி அவள் பக்கம் வேகமாக வந்துகொண்டிருந்தது. அவளுக்கு முன்னால் எட்டொன்பது பேர் பெண்கள். தான் அறைக்குள் பிரவேசித்ததும் வேற்று ஆண்களின் அருகாமை அவளுக்குக் கூச்சத்தையும் ஒருவகை மனக்கிளர்ச்சியையும் உண்டு பண்ணிற்று. யாரையும் நிமிர்ந்து பாராமல், சுற்றியிருப்பவற்றை மனசில் கனவுச் சித்திரமாக எண்ணிக்கொண்டு முன் நகர்ந்தாள்.

இளம் கறுப்பாய் மயிர் இன்றிக் கொழுகொழுவென இரு கைகள், ஒரு நீள் சதுர மேசையின் மேல் காகித அடுக்குகள், சிவப்பு, மஞ்சள் பேனா பென்சில்களுக்கிடையே இயங்க, அவளுக்கு ஒரு வெள்ளைச் சீட்டு நீட்டப்பட்டது. யார் யாருடையவோ கால்கள் குறுக்கும் நெடுக்குமாய்க் கோடுகளிட்டன. ஒரு நாணயம் தரையில் விழுந்த சத்தம் காதில் விழுந்தது. கடைசியில் ஒரு ஸ்கிரீன் மறைப்புக்குள் எப்படியோ தான் வந்துவிட்டதை ருக்மிணி உணர்ந்தாள். அவளுக்குப் பின்னால் திரைக்கு வெளியே ஒரு பெண் சிரிப்பொலி தெறித்து, நொடியில் அடங்கிற்று. ருக்குவின் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. பொறுக்க முடியாதபடி மூத்திரம் முட்டிற்று. `ஸ்வாமி. என்ன அவஸ்தை இது!’ பற்கள் அழுந்தின. `ஐயோ, பால் கறக்க நேரமாயிருக்குமே’ என்ற நினைவு வர மடியில் பால் முட்டித் தெறிக்க மருகும் பசுவும், கட்டிலிருந்து தாவித் தவிக்கும் அதன் கன்றும் `ம்மாம்மா’ என்று அவள் செவிகளில்அலறிப் புடைக்கலாயின. அவள் உடம்பு இப்படிப் பதறுவானேன்? மாரும் லேசாக வலிக்கிறது. ஆ, கிளி! கிளிக்கு எதிரே முத்திரை நெருங்கிவிட்டது. இப்போது ஒரு கை ருக்மிணியின் கையைப் பற்றவும், திடுக்கிட்டு, `யாரது?’ என்று அவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் அங்கில்லை. ஆனால், அவள் கையை வேறொரு கை இறுகப் பற்றியிருந்தது என்னவோ நிஜந்தான். பெண் கைதான். வேறு யாருடைய கையும் அல்ல; மாமியார் மீனாட்சி அம்மாளின் கைதான். கிளிக்கு நேர் எதிராக இருந்த அவள் கையை, பூனைக்கு நேராக மாமியார் கை நகர்த்தவும், பளிச்சென்று அங்கு முத்திரை விழுந்துவிட்டது. ஆ! ருக்மணியின் வாக்கு பூனைக்கு! ஆம், பூனைக்கு!

பரபரவெனச் சாவடியை விட்டு வெளியேறினாள் அவள். அவளுக்காகப் பெண்கள் காத்திருந்தனர். இவள் வருவதைக் கண்டதும் அவர்கள் ஏனோ சிரித்தனர். பக்கத்தில் வந்ததும், ``ருக்கு, யாருக்குடி போட்டே?’’ என்று ஒருத்தி கேட்க, ``எங்க மாமியாருக்கு’’ என்ற வார்த்தைகள் அவள் அறியாது அவள் வாயிலிருந்தது வெளிப்படவும் கூடிநின்ற பெண்கள் பெரிதாகச் சிரித்தார்கள். ருக்மிணி தலையைத் தொங்கப் போட்டபடி, அங்கு நிற்காமல் அவர்களைக் கடந்து விரைந்து நடந்தாள். முன்னை விடவும் மார்பு வலித்தது. பொங்கி வந்த துக்கத்தையும் கண்ணீரையும் அடக்க அவள் ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

கிருஷ்ணன் நம்பி

தமிழகத்தின் தென்முனையில் கன்னியாக் குமரி மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்றான அழகியபாண்டிபுரத்தில் 1932 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கிருஷ்ணன் நம்பி பிறந்தார். பெற்றோர்களுக்கு கிருஷ்ணன் நம்பி முதல் குழந்தை. அவருக்கு அவர்கள் இட்ட பெயர் அழகிய நம்பி. கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர் ; இரண்டு சகோதரிகள்.

அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ணன் நம்பியின் தந்தை

1939இன் பிற்பகுதியில் நாகர்கோவிலில் உர வியாபாரத்தை clip_image002[6]ஆரம்பித்தார். நாந்சில் நாட்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட உரக்கடை அதுதான். வியாபாரம் நன்றாக நடைபெறவே 1940 ஆம் ஆண்டு நம்பியின் தந்தை குடியிருப்பை அழகிய பாண்டியபுரத்திலிருந்து நாகர்கோவிலில் கிருஷ்ணன் கோவிலுக்கு மாற்றிக் கொண்டார். அப்போது கிருஷ்ணன் நம்பிக்கு எட்டு வயது. நாகர்கோவிலில் அவரின் பள்ளிப் படிப்பு தொடங்கியது. ஆனால் பள்ளிப் படிப்பு அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. குறிப்பாக கணிதம் கடைசிவரை அவருக்கு வரவேயில்லை. எட்டாவதிலும், பள்ளி இறுதி வகுப்பிலும் அவர் முதல் முறை தேறாமல் மீண்டும் எழுதிதான் வெற்றிபெற்றார். பின்பு நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அதில் இறுதித் தேர்வில் அவரால் தேர்ச்சிபெற இயலவில்லை. அத்துடன் படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது.

படிக்கவும் செய்யாமல் சும்மா இருக்கவே நம்பியின் தந்தை, அவர்மீது தன்னுடைய வியாபாரத்தை கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினார். ஆனால் அவரால் வியாபாரத்திலும் நாட்டம் கொள்ள முடியவில்லை. அவர் கடைக்குச் சென்றுவரும் தினங்களில் வியாபாரமும் வசூலும் மிகவும் குறைவாக இருக்கவே நம்பியின் தந்தை அவரது அம்மாவிடம் ``இவன் உருப்பட மாட்டான்’’ என்பாராம். இந்நிலையில் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிருஷ்ணன் நம்பிக்கு திருமணம் ஆயிற்று. மனைவி பெயர் ஜெயலட்சுமி. அப்பாவின் வியாபாரத்திலும் நாட்டமில்லை. வருமான உத்தரவாதமளிக்கும் வேறு வேலையும் கிடையாது. ஆனால் திருமணமாகிவிட்டதால் குடும்பத்தில் நம்பியின் பொறுப்பு அதிகமாகிவிட்டது. பின்பு காங்கிரஸ் தியாகி கொடுமுடி ராஜகோபாலன் சிபாரிசில் நம்பிக்கு `நவசக்தி’யில் ஃபுருஃப் ரீடர் வேலை கிடைத்தது. மாதம் எண்பது ரூபாய் சம்பளம். சென்னையில் ராயப்பேட்டை மணிக்கூண்டு எதிரே `சங்கர் லாட்ஜி’ல் அறை எடுத்துக் கொண்டார். `நவசக்தி’யில் பணிபுரிந்த காலகட்டத்தில் கிருஷ்ணன் நம்பிக்கு சென்னையிலிருந்த `ஜீவா’வின் நட்பு கிடைத்தது. உள்ளூர்க்காரர் என்பதால் ஜீவாவுக்கும் நம்பியிடம் அளவு கடந்த பிரியம்.

`நவசக்தி’யில் நம்பியினுடைய வேலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அவரது உடல் நிலையும் மோசமாகிக்கொண்டே வந்தது. எனவே அவர் ஊர் திரும்பி விடுவதென்று முடிவு செய்தார். ``ஏராளமான இருமல்களுடனும், அரைக் கிலோ திராட்சையுடனும் நம்பி வெற்றிகரமாக நாகர்கோவில் திரும்பினார்’’ என்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் அவரது சகோதரர் கே. வெங்கடாசலம். ஊருக்குத் திரும்பி சிறிது காலம் விவசாயம் செய்தார். பின்னாளில் அவரது தந்தையின் உடல்நிலை மோசமாகி அவர் படுத்த படுக்கையானதால் மொத்த நிர்வாகத்தையும் நம்பியே கவனிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வியாபாரத்தில் நம்பிக்கு அவரது தந்தையின் நண்பர்கள் உதவினர். தோவானைத் தாலுகாவுக்கான திகிசிஜி நிறுவனத்தாரின் மொத்த வியாபார உரிமத்தையும் நம்பி வாங்கினார். அப்புறம் பூதப்பாண்டியில் வியாபாரத்தை நிறுவுவது என்று தீர்மானித்து குடும்பத்துடன் 1963 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பூதப்பாண்டிக்குச் சென்றார். இந்நிலையில் அவரது தந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகவே அவர் நாகர்கோவிலைவிட்டு பூர்வீகமான அழகியபாண்டியபுரம் வந்து குடியமர்ந்தார். எனவே நம்பியின் பொறுப்பு குடும்பத்தில் இன்னும் அதிகமானது. ஆனாலும் மிகவும் சிரமத்துடன்தான் அவர் சமாளித்து வந்தார். கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். ஒரு மகன் 1986 இல் மறைந்து விட்டார்.

கிருஷ்ணன் நம்பியின் இலக்கிய பிரவேசம் 1948_49 இல் அப்போது மிகவும் முக்கியமான பத்திரிகையான வை. கோவிந்தனின் சக்தியில் வெளிவந்த `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய அவரது முதல் கட்டுரையின் மூலம் ஆரம்பமாயிற்று. பதினாறு வயதே ஆகியிருந்த அச்சமயம் அவர் பத்தாவது வகுப்புப் படித்து வந்தார். அக்காலங்களில் அவரது நெருங்கிய இலக்கிய நண்பர் எழுத்தாளர் ம. அரங்கநாதன். பின்னர் 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கலைமகள் நிறுவனத்திலிருந்து வந்து கொண்டிருந்த சிறுவர் பத்திரிகையான `கண்ணனில்’ தொடர்ந்து `சசிதேவன்’ என்கிற பெயரில் குழந்தைப் பாடல்கள் எழுதினார். கிட்டத்தட்ட சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன. சிறுவயதிலேயே நம்பிக்கு குழந்தைகளிடம் அபரிமிதமான ஈடுபாடு இருந்தது. எனவே அவரது ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பெரும்பாலும் குழந்தைப் பாடல்களாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை. அச்சில் வெளிவந்த நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’ (1951). இக்கதை குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டதே.

1950 இல் கிருஷ்ணன் நம்பிக்கும் சுந்தர ராமசாமிக்கும், ராமசாமி கொண்டுவந்த `புதுமைப்பித்தன் நினைவு மலரை’ ஒட்டி நட்பு ஏற்பட்டது. கிட்டதட்ட 25 வருடங்கள் இடைவெளியின்றி தொடர்ந்த நட்பு இது. சுந்தர ராமசாமியின் நட்பு நம்பியை மேலும் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று கிருஷ்ணன் நம்பியின் அப்பா எண்ணினார்.

விஜயபாஸ்கரன் `சரஸ்வதி’யை தொடங்கியபோது அதில் நம்பி சுமார் 11 குழந்தைக் கவிதைகள் எழுதினார். தொடர்ந்து சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார். `ஜீவா’வுடன் நட்பாயிருந்த காலகட்டத்தில் அவர் நம்பியின் கதைகளை கேட்டு வாங்கி `தாமரை’யில் பிரசுரித்தார்.

1965 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகாலயம் கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களை தொகுத்து `யானை என்ன யானை?’ புத்தகத்தை கொண்டு வந்தது. 1995 ஆம் ஆண்டு ஸ்நேகா பதிப்பகம் `காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலுமுள்ள கதைகளை தொகுத்து 19 கதைகளடங்கிய `கிருஷ்ணன் நம்பி கதைகள்’ புத்தகத்தை கொண்டு வந்தது. 1974 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக கிருஷ்ணன் நம்பியின் இடது காலை ஆபரேஷன் செய்து எடுக்கவேண்டியதாகிவிட்டது. காலை எடுத்தபிறகு ஒன்றரை ஆண்டுகள்தான் அவர் உயிருடன் இருந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி காலையில் நாகர்கோவில் மத்தியாஸ் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. 

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்-ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன்

போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். 'ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் ,ல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா ,ன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று.

adhimoolamdrawing-page-56--

ஏதோ நினைவு வந்தவளாய் ரேழியிலிருந்து படிக்கட்டுகளின் வழியே ஏறி மாடியறைக்குச் சென்று விளக்கைப் போட்டாள். அங்கு கீழறையைக் காட்டிலும் சற்று அதிகமான வசதிகள் ,ருந்தன. பலவகை அந்நிய நாட்டுப் படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் மிகப் பெரிய செட்டிநாட்டுக் கட்டில் ஒன்றும். அதன் மீது 'டபில்' மெத்தை ஒன்றும் சுவரோரமாக ,ருந்தன. 'நைட் புக்கிங்'குக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அவ்வறை சென்ற ஒரு மாத காலமாக மனித நடமாட்டம் அற்றுக் கிடந்தது. கமலாவுக்குத்தான் 'நைட் புக்கிங்' ராசி அதிகம். தேவயானை கட்டிலின் மீது ,ருந்த மெத்தையை ,லேசாகத் திருப்பி, அதன் அடியிலிருந்து ஒரு நீளமான அரை இஞ்சு மணிக்கயிற்றை எடுத்தாள். அவள் ஊரிலிருந்து வரும்போது அவளது தாயார் அவளது படுக்கையைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு அது. அறையின் நடுவில் நின்றுகொண்டு, கயிற்றின் உறுதியைச் சோதிப்பது போல அதைப் பலவிடங்களில் இழுத்துவிட்டுக்கொண்டே, மேலே அறையின் நெற்றுக் கண்ணைப் பார்த்தாள். உத்திரத்தில் ஒரு இரும்பு வளையம் தொங்கிக்கொண்டிருந்தது. அது கட்டிலின் விளிம்புக்கு நேர் மேலே சற்று விலகி அமைந்திருந்தது. கட்டிலின் மீது நின்றுகொண்டு, கயிற்றைக் கொண்டு வளையத்தை எட்ட முடியுமா? நடுவில் இருந்த மெர்க்குரி விளக்கின் மேற்பாதி, ஒரு வளைந்த தகட்டினால் மறைக்கப்பட்டிருந்ததால், வளையம் தெளிவாகக் கண்களுக்குக்குப் படவில்லை. சற்று அவசரமாகக் கீழே சென்று துணி உலர்த்தப் பயன்படும் நீளமான மூங்கிற் கழியொன்றை எடுத்து வந்தாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு, கழியின் ஒரு நுனியில் கயிற்றைச் செலுத்த முடியுமா என்று பார்த்தாள். கீழே கதவு தட்டும் சத்தம் கேட்டது. கழியையும் கயிற்றையும் கட்டிலில் போட்டுவிட்டு, கீழே ஓடினாள். வெளிக் கதவைத் திறக்குமுன் சற்றுத் தயங்கினாள். கதவை யாரும் தட்டவில்லை என்பதுபோல் பட்டது. அடுத்த பூங்காவனத்து வீட்டின் கதவு திறக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. கதவிடுக்கின் வழியே யாரும் நின்றுகொண்டிருந்தனரா என்று பார்த்தாள். யாரும் நின்றுகொண்டிருந்ததாகப் படவில்லை. தேவயானை மாடிப்படியறைக்கு வந்தாள்.

மீண்டும் கழியைக் கொண்டு கயிற்றை வளையத்தின் உள்ளே செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். தோள்பட்டைகளில் நோவு எடுத்தது. முகத்தில் வியர்வை அரும்பி, நெற்றி வியர்வை ஜவ்வாதுப் பொட்டைக் கரைத்து வழிந்தது. தேவயானைக்கு ஒரு யோசனை வந்தது. அவசர அவசரமாகக் கழியையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டுக் கீழே ஓடிவந்தாள். புழக்கடையில் ஒரு சன்னலருகே கிடந்த அரையடி நீளமான துருப்பிடித்த ஆணியொன்றைக் கண்டுபிடித்தாள். அதை எடுத்துக்கொண்டு மாடியறைக்கு வந்தாள். ஆணியின் நடுவில் கயிற்றின் ஒரு நுனியை இறுகக் கட்டினாள். அவள் இழுத்த இழுப்பில் கயிறு கையை அறுத்துவிட்டது. வலி பொறுக்காமல் கையில் எச்சிலைத் துப்பிவிட்டு, அதன் மீது ஊதிக்கொண்டாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு கழியின் உதவியால் ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்த முயன்றாள். ஆணி கழி நுனியில் ஸ்திரமாக அமையாமல் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தது. ஒரு நிமிஷம் இளைப்பாறிவிட்டு, கை நடுக்கத்தையும் சரிபடுத்திக்கொண்டாள். பிறகு ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆணியின் ஒரு பாதி வளையத்துக்குள் நுழைந்தாலும், மறு பாதி நுழைவதைக் கயிற்றின் முடிச்சு தடை செய்தது. கயிற்றின் கனமும் ஆணி வளையத்துக்குள் செல்வதைத் தடுத்தது. கயிறு நீளமான கயிறு. அவ்வளவு நீளம் கூடாதென்று தேவயானைக்குப் பட்டது. கயிற்றைப் போதுமான அளவுக்கு வெட்டக் கத்தி எங்கு கிடைக்கும் என்று யோசித்தாள். வீ£££££££ட்டில் கத்தி ஒன்றும் கிடையாது. பிளேடு? அதுவும் இல்லை. தேவயானைக்கு அடுப்பங்கரை அரிவாள்மனை நினைவுக்கு வந்தது. குதித்துத் கீழே சென்று அரிவாள்மணையை எடுத்து வந்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு, தன் கழுத்துக்கும் இரும்பு வளையத்துக்கும் உள்ள இடைவெளியையும், சுறுக்கு விட வேண்டிய நீளத்தையும் உத்தேசமாகக் கயிற்றைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். நல்ல வேளையாக அரிவாள்மணை சற்றுப் பதமாகவே இருந்ததால் , கயிற்றை நறுக்குவதில் சிரமம் இல்லை. மற்றொரு யோசனையும் தேவயானைக்கு வந்தது. அரிவாள்மணையைக் கொண்டே கழியின் ஒரு நுனியை சிறிதளவுக்கு இரண்டாக வகுத்துக்கொண்டாள். இப்போது கயிற்று நுனியைக் கழிநுனியில் இருந்த பிளவில் கவ்வவைத்துக் கயிறு கீழே நழுவாதவாறு கழியை உயர்த்த முடிந்தது. இவ்வாறு ஆணியை வளையத்துக்குள் செலுத்தி, ஆணி வளையத்தைக் குறுக்காக அழுத்திக்கொண்டிருக்க, கயிறு நேர்ச்செங்குத்தாகத் தொங்குமாறு செய்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு கயிற்றின் நுனிப்புறம் தலை செல்லுமளவுக்கு ஒரு வளையம் செய்து சுறுக்கு முடிச்சுப் போடப் பார்த்தாள் தேவயானை. சுறுக்கு முடிச்சும் சரியாக விழவில்லை. அவளுக்கு இதிலெல்லாம் அனுபவம் போதாது. இரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு, ஒருவாறாக முடிச்சு சரியாக விழுந்தது. அப்போது கீழ்க் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தேவயானை சற்றுத் தயங்கினாள். கீழே கதவைத் தட்டும் சத்தம் பலப்பட்டது. 'இப்போது இதுக்கு என்ன அவசரம்?' என்று நினைத்தவள் போல், தேவயானை கீழே ஓடிச்சென்று, சேலை முந்தானையால் முகத்தை ஒற்றிவிட்டு ஆடைகளையும் சரி செய்தவாறே வெளிக் கதவைத் திறந்தாள்.

அத்தானும் வேறொருவரும் வெளியே அறை வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.

''கதவெத் தெறக்க இந்நேரமா?'' என்றான் அத்தான்.

''மேலே இருந்தேன்'' என்றாள் தேவயானை.

''கதவை அடைச்சிட்டு, லைட்டை அணைச்சிட்டு இருன்னா, ஒன்னே யாரு மேலே போகச் சொன்னது?'' என்றுகொண்டே அத்தான் நுழையவும், கூட இருந்தவரும் உள்ளே நுழைந்தார்.

''உம், லைட்டைப் போடு'' என்றுவிட்டு அத்தான் வெளிக்கதவை அடைத்தான். ரேழி விளக்கைப் போட்டாள் தேவயானை. அத்தான கூட வந்திருந்தவர் நன்றாக வளர்ந்து இருந்தார். அரைகுறை பாகவதர் கிராப்போடு, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்திருந்தார். வழக்கமாக வருபவர்களைப் போல் அவளையே உற்று நோக்காது ரேழியையும், ரேழியை ஒட்டியிருந்த அறையையும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ''சரிதானேங்க?'' என்றான் அத்தான், அவரைப் பார்த்து.

ரேழியை அடுத்திருந்த அறையினுள் நுழைந்து, குழல் விளக்கொளியில் அறையின் சுவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ''பரவாயில்லை, எல்லாம் சுத்தமாகவே வச்சிருக்கீங்க'' என்றார் அவர்.

''இங்கே எல்லாம் சுத்தமாகத்தான் இருக்கும்'' என்றான் அத்தான் கள்ளச் சிரிப்போடு. ''அப்ப நா வர்றேன்.''

''பணம்?'' என்றார் வந்தவர்.

''எல்லாம் டாக்டர்கிட்டே வாங்கிக்கறேன்'' என்றுகொண்டே வெளியேறினான் அத்தான்.

வெளிக் கதவைச் சாத்தித் தள்ளிவிட்டு, ரேழி விளக்கையும் அணைத்துவிட்டு, வந்தவரிடத்து, ''வாங்க'' என்று கூறிக்கொண்டே ரேழியை அடுத்திருந்த அறையின் குழல் விளக்கின் பிரகாசத்தில் பிரவேசித்தாள் தேவயானை. அவள் நேராகச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவர் தயங்கியவாறு அருகில் வந்து நின்றார்.

''இப்படி உட்காருங்க'' என்றாள் அவள்.

''இல்லே, அந்த ரேழி ஓரத்துலே ஒரு நாற்காலி இருக்கே, அதை எடுத்திட்டு வா'' என்றார் அவர். அவள் சிரித்தாள்.

''எப்போதுமே சாய்வு நாற்காலியில் சுகமாய் படுத்துத்தான் எனக்குப் பழக்கம்'' என்று அவர் விளக்கினார்.

பலர் அந்தச் சாய்வான பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தேவ¨யானையைக் கொஞ்சியதுண்டு. எனவே உடன் எழுந்து பிரம்பு நாற்காலியை எடுத்து வந்து கட்டிலின் அருகே அதைப் போட்டாள். அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்; அவள் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர்.

''நீ அழகா இருக்கே'' என்றார் அவர். அவள் சிரித்தாள்.

''கொஞ்சம் சேலையை வெலெக்கிக்க'' என்றார் அவர். அவள் மீண்டும் சிரித்தாள். ''உம், வேடிக்கைக்குச் சொல்லலே; ஒன் மார்ப முழுசும் மறைக்காதபடி சேலய கொஞ்சம் வெலெக்கிப் போட்டுக்க.''

அவள் அவ்வாறே செய்தாள்.

''கொஞ்சம் நிமிர்ந்து உட்காரு.''

அவள் மீண்டும் சிரித்தாள்.

''கொஞ்சம் நிமிர்ந்து உட்காரேன்'' என்று கொஞ்சுவது போல் அவர் சொன்னார்.

''நீங்க என்ன போட்டாப் படம் பிடிக்கப் போறீங்களா?'' என்று அவள் சிரித்தாள்.

''ஆமா, அப்படித்தான் வச்சிக்கயேன்'' என்றார் அவர்.

அவளும் அவளது சேலையையும், முடியையும் ஒரு சைத்ரீகனுக்கு முன் உட்கார்ந்து சரி செய்துகொள்வதுபோல் சரி செய்துகொண்டாள். சற்று நேரம் அவளைப் பார்த்து ரசித்துவிட்டு, ஏதோ குறை கண்டவராய், ''உட்கார்ந்திருந்தா சரியாப்படலயே; கொஞ்சம் படுத்துக்க'' என்றார் அவர்.

''நீங்க உட்கார்ந்துதானே இருக்கீங்க, வெறுமனே'' என்றாள் அவள் சிரிக்காமல்.

''நான் இங்கே உக்காந்து இருந்திட்டுப் போகத்தானே வந்திருக்கேன்'' என்றார் அவர். அவள் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். ஒரு கையை மடித்து அதைக் கொண்டு தலையைத் தாங்கி அவரை நோக்கிச் சிரித்தவாறே அவள் படுத்துக்கொண்டாள். அவர் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

''உங்களுக்கு ஆசை இல்லையா?'' என்றாள் அவள்.

''நிறைய இருக்கு.''

''அப்ப?''

''அதனாலேதான் ஒன்னைப் பார்த்துகிட்டே இருக்கேன்.''

''பாத்துகிட்டே இருந்தாப் போதுமா?'' அவள் சிரித்தாள்.

''தொட்டுப் பார்க்கலாம்.''

''நீங்க தொட்டுப் பாக்கலயே.''

''தொட்டா நீ சும்மா இருக்கணுமே!'' என்றார்.

அவள் சிரித்தாள். ''நான் ஒண்ணும் சேட்டை செய்யமாட்டேன்; நீங்க சும்மா தொட்டுப் பாருங்க.''

வெளிக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் எழுந்திருக்க முடியாது போல் தவித்தாள். அவர் நிதானமாக எழுந்து கதவைத் திறந்தார். கதவைத் தட்டியது அத்தான்தான். அத்தான் அவரை எதுவும் கேட்குமுன் அவர் பையிலிருந்து எதையோ எடுத்து அத்தானிடம் கொடுக்க வந்தார்.

''இல்லே வச்சிக்கோங்க, எல்லாம் டாக்டர்கிட்டேருந்து வாங்கிக்கறேன். டாக்டர் கடைக்கு வந்திட்டாரு; நீங்க வர்லயான்ட்டு கேட்டாரு'' என்றான் அத்தான்.

''இப்ப வந்திடறேன்ட்டு சொல்லுங்க'' என்றார் அவர்.

அத்தான் வெளியேறுகிறான்; அவர் கதவை அடைத்துத் தாளிடுகிறார்.

''கொடுமை'' என்றுகொண்டே அவர் நாற்காலியில் சாய்கிறார்.

''எது?'' என்றாள் அவள், கட்டிலிலிருந்து எழுந்து அவர் அருகே நின்றுகொண்டு.

''இந்த நேரக் கணக்குதான்'' என்று அவர் சொல்லவும் அவள் அவரைக் கட்டியணைக்க முயன்றபடியே, அவரது இரு கன்னங்களிலும்டஇ இறுதியாக அவசரமாக அவர் உதடுகளிலும் முத்துகிறாள்.

''சரி, நீ போய்ப் படுத்துக்க'' என்கிறார் அவர்.

''நீங்க என்ன செய்யறீங்க?'' என்று கேட்டுக்கொண்டே அவள் மெத்தையில் சாய்கிறாள்.

''இங்கே இருக்கேன்'' என்கிறார் அவர்.

''அதெக் கேக்கலே; என்ன தொளில் செய்யறீங்க?''

''பெறந்து, வளந்து, சாவற தொளில்தான் செய்யறேன்.''

அவள் கட்டிலிலிருந்து எழுந்து அவரை கட்டியணைக்க முயலுகிறாள். அவரோ நாற்காலியில் சாய்ந்தவராகவே கிடக்கிறார். தோல்வியுற்றவளாய் அவள் கட்டில் மெத்தைக்குச் சென்று அதன் மீது விழுகிறாள்.

''எனக்குத் தண்ணி தவிக்குது'' என்கிறாள் தேவயானை.

அவர் எழுந்து, ரேழி விளக்கைப் போட்டு, மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுக்கிறார். படுத்தபடியே அவள் தண்ணீரைப் பருகும்போது, அதில் ஒரு பகுதி வாய்க்குள் நுழையாது அவளது மார்பகத்தை நனைக்கிறது.

நின்றுகொண்டிருக்கும் அவர், ''சென்று வருகிறேன்'' என்கிறார்.

''அடுத்த வாட்டி எப்ப வருவீங்க'' என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார்.

இரவு மூன்று மணிக்கு அத்தான் வீட்டுக்கு வந்தான். அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆவல். ஆனால் வாடிக்கைக்காரர் யாரிடத்தும் அவள் விசேட ஆர்வம் காட்டுவது அத்தானுக்குப் பிடிக்காது. எனவே அவள் எடுத்த எடுப்பிலேயே, ''அவர் எனக்கு அஞ்சு ரூவா கொடுத்தார்'' என்றாள்.

''யாரவன்?'' என்றான் அத்தான்.

''அதான் நீங்க மொதல்லே கூட்டியாந்தீங்களே, அவருதான்.''

''மொதல்லே யாரக் கூட்டியாந்தேன்? நான் இன்னிக்கு ஒருவாட்டி தானே வந்தேன்?''

''அதான், ஏளு ஏளரை மணிக்குக் கூட்டியாந்தீங்களே, அவரே நெனப்பில்லையா?''

''ஏளு, ஏளரை மணிக்கா? நான் சுப்பு வீட்லேந்து கிளம்பும்போதே ஒம்பது மணி ஆயிருக்குமே!''

'',ன்னிக்கு சுப்பு வீட்டுக்குப் போயிருந்தீங்களா?''

''ஆமாம், இருபது ரூபா வரைக்கும் கெலிப்பு. இன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் தெருவுலே தலைகாட்ட வேண்டாம்னுட்டு ஏட்டையா சொல்லியிருந்தாரு. நானும் ஒம்பது வரைக்கும் சுப்பு வீட்டோடவே இருந்திட்டேன்.''

''அப்ப, அந்த டெர்லின் சட்டைக்காரரே நீங்க கூட்டியாரலையா? அவர் கூட ஒரு டாக்டர் வந்தாராமே; நீங்க கூட டாக்குட்டரே வேறே வீட்டுக்குக் கூட்டிப் போனீங்களே?''

''டாக்டரா? அவர் யாரு டாக்குட்டரு? ஒனக்கு என்ன புத்தி தடுமாறிடுச்சா, இல்லே கதவெத் தெறந்து போட்டுக்கிட்டு கனவு கண்டிட்டிருந்தயா?''

''இல்லயே, கதவ அடச்சிட்டு மேலேதான் இருந்தேன். நீங்க கதவைத் தட்டினப்பதான் கீளே வந்தேன்.''

அத்தான் முழித்தான். அவள் தொடர்ந்தாள்.

''கொஞ்சம் நீளமா முடி வச்சிருந்தார். நீலநெற டெர்லின் சட்டையும் எட்டு மொள வேட்டியும் கட்டிருந்தாரு. ஆனா என்னெத் தொட்டுக்கக் கூட இல்லே'' என்றுவிட்டு தேவயானை சிரித்தாள்.

''தேவு, சும்மா உளறாதே. நான் தெருவுக்கு வரும்போதெ மணி ஒம்பதுக்கு மேலே ஆயிரிச்சே. அந்த சாயபுப் பையனே மட்டுந்தானே இன்னைக்கு நா கூட்டியாந்ததே. அதுக்கு முன்னாடி யாரெக் கூட்டியாந்தேன்?''

''நா உளர்றேனா, நீங்க உளர்றீங்களா?'' என்றுகொண்டே, தான் அவரிடமிருந்து வாங்கிய ஐந்து ரூபாயை அத்தானிடம் காட்ட தலையணையைத் திருப்பினாள் தேவயானை. தலையணைக்கு அடியே எதுவும் காணப்படவில்லை. தேவயானைக்கு மெய் சிலிர்த்தது. பதட்டத்தில் தலையணையை முழுமையாகப் புரட்டினாள். எதுவும் காணோம். மெத்தைக்கு அடியிலும், பிறகு தலையணை உறைக்குள்ளும் தேடினாள். ஒன்றும் காணவில்லை. தலையணை உறையின் இரு முனைகளைப் பிடித்துக்கொண்டு தலையணையைத் தலைகீழாகக் கவிழ்த்தாள். தலையணை தலையில் விழுந்தது. உறையினுள் தேடினாள். தரையில் தேடினாள். ஐந்து ரூபாயைக் காணோம். அத்தான் முழித்தான்.

''எங்கே போயிருக்கும்; இங்கேதான் எங்காவது இருக்கணும்'' என்றாள் தேவயானை நம்பிக்கையோடு.

''எது?'' என்றான் அத்தான்.

''அந்த டெர்லின் சட்டைக்காரர் கொடுத்த அஞ்சு ரூபாதான்.''

''நீ என்ன கனவு ஏதாச்சும் கண்டாயா?'' என்றுகொண்டே அத்தான் சிரித்தான்.

''நீங்கதான் வெறிச்சீலே எல்லாத்தையும் மறந்திடுவீங்க'' என்றாள் தேவயானை, இன்னும் காணாமற் போன ஐந்து ரூபாயைத் தேடியவாறே.

''ஒருவேளை மேலே மாடியிலே இருக்கும்'' என்றுகொண்டே, தேவயானை வேகமாகப் படிகளேறி மாடிறயறைக்குச் சென்றாள். அவள் அணைக்காது விட்டுப்போன மெர்க்குரி விளக்கு ஒளியில், அவள் பிரயாசைப்பட்டு இரும்பு வளையத்திலிருந்து தொங்கவிட்ட கயிறும், அதன் கீழ் நுனியை அலங்கரித்த வட்டமும் அவளைத் திகைக்க வைத்தன.

-கவனம் - மே-1981 (மீள் பிரசுரம்)

குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்

modern-art-07

ஹலோ என்ன சௌக்கியமா

இப்பொழுது புதிதாக என்ன விளையாட்டுக் கண்டுபிடித்துள்ளாய்

உன்னுடைய குஞிச்ட்ணீ எப்படி இருக்கிறது

பூச்செடிகளுக்கிடையே

புல்தலைகளின் மேல்

நெடிய பசும் மரங்களின் கீழ்

சுற்றிலும் வண்ணாத்திப்பூச்சி

மரச்சுவர்களுக்கிடையே

சிவப்பு வீட்டின் உள்ளேயிருந்து

ஷிநீணீனீஜீ எட்டிப் பார்க்கிறான்

வெளியே பழுப்புநாய் இருந்தான்

என்ன விஷயமென்று குஞிச்ட்ணீ வெளியே வந்தான்

தெரியாதா நம்முடைய கூட்டம் மரத்தடியில்

சீக்கிரம் வந்துவிடு என்றான்

பலவர்ண நாய்களுக்கிடையே தாவி நுழைந்தான்

கேட்டது ஒரு கேள்வி

எங்கள் தலைவனை கௌரவிக்க

நாமெல்லோரும் கூடியிருக்கிறோம்

அவர் கண்டுபிடித்ததென்ன

அடக்கத்துடன் ஷிநீணீனீஜீ சொன்னான்

பின்னால் சுமக்கும் பை

கூட்டம் கலைந்தது

அடுத்த கதையை நீ சொல்

அன்புடன் என்றும் உன்

ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன் 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பெற்றோர்களின் சொந்த ஊரான மதுரையில் அவர்களின் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை பெயர் கணேச clip_image002அய்யர்; பழனியில் வக்கில் தொழிலை மேற்கொண்டு வந்தார். நாகராஜனின் நான்காவது வயதில் அவரது தாயார். தமது ஒன்பதாவது பிரசவத்தின்போது மரணமடைந்தார். நான்கு குழந்தைகள் பிறப்பின் போதும், பிறந்து சில மாதங்களுக்குள்ளாகவும் இறந்துவிட்ட நிலையில் ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஜி. நாகராஜனுக்கு இரண்டு சகோதரிகள், ஒரு
அண்ணன், ஒரு தம்பி.
ஜி. நாகராஜன் மதுரையிலேயே அவரது தாய்வழிப் பாட்டி வீட்டில் சகோதர சகோதரிகளுடன் வளர்ந்தார். பிறகு மதுரை _ திருநெல்வேலி சாலையில் மதுரைக்கு பக்கமாக உள்ள திருமங்கலத்தில் அவரது தாய்மாமன் வீட்டில் தங்கி நான்காம் வகுப்பு வரை படித்தார். அப்புறம் கணேச அய்யர் ஜி. நாகராஜன் உட்பட குழந்தைகள் ஐந்து பேரையும் தன்னிடம் பழனிக்கு அழைத்துக்கொண்டார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் ஜி. நாகராஜனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் தானே பாடங்களை சொல்லிக்கொடுத்தார். நாகராஜன் எட்டு, ஒன்பதாம் வகுப்புகளை மாமா வீட்டில் தங்கி திருமங்கலம் பி.கே. நாடார் உயர்நிலைப்பள்ளியிலும், பத்து, பதினொன்றாம் வகுப்புகளை தந்தையுடன் தங்கி பழனி எம்.ஹெச் பள்ளியிலும் பயின்றார். இன்டர் மீடியட்டை மதுரை, மதுரைக் கல்லூரியில் படித்து சிறப்பான முறையில் தேறினார். அப்போது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றதற்காக சி.வி.ராமன், நாகராஜனுக்கு தங்கப் பதக்கத்தை பரிசாக வழங்கினார்.

பட்டம் பெற்ற பின்னர் ஜி. நாகராஜன் காரைக்குடி கல்லூரியில் டியூட்டராக ஒரு வருடம் பணியாற்றினார். பிறகு சென்னை அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வருடம் பணியாற்றினார். அங்கிருந்து விலகியதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். அமெரிக்கன் கல்லூரியில்தான் அவருக்கு கம்யூனிச இயக்கத் தோடும் இலக்கியத்தோடும் பரிச்சயம் ஏற்பட்டது. நாகராஜனுடைய அறிவாற்றலும் கற்பிக்கும் திறனும் மாணவர்களிடையேயும், சக ஆசிரியர்களிடையேயும், நிர்வாகத்திடமும் அவருக்கு மிகுந்த மரியாதையை பெற்றுத்தந்தது. அவரை அமெரிக்காவுக்கு அனுப்பவும் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அப்புறம் அவர் கம்யூனிச கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிந்தபோது நிர்வாகம் அவரை வேலைநீக்கம் செய்தது. பின்னர் வந்த நாட்களில் நாகராஜன் கட்சிப் பணிகளில் ஈடுபட்டபடியே மாணவர்களுக்கு தனியாக பாடம் கற்பித்து அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு சில மாதங்களை நகர்த்தினார்.

1952 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாகராஜன், பேராசிரியர் நா. வானமாமலை திருநெல்வேலியில் நடத்திக்கொண்டிருந்த தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். அடுத்து வந்த நான்கு ஆண்டுகள் தான் நாகராஜனின் வாழ்வையும் ஆளுமையையும் அனைத்து தளங்களில் தீர்மானித் தவை. கே. பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், ஏ. நல்லசிவம், முருகானந்தம் போன்ற கம்யூனிச இயக்கத் தலைவர்களுடனும் தொ.மு.சி. ரகுநாதன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, டி.செல்வராஜ், நெல்லை எஸ். வேலாயுதம் போன்றோருடனும் நாகராஜனுக்கு திருநெல்வேலியில் நெருக்கம் ஏற்பட்டது. இக்கால கட்டத்தில்தான் `சாந்தி’ பத்திரிகையும் திருநெல் வேலியில் இருந்து வந்து கொண்டிருந்தது.

பிறகு நாகராஜன் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு நெல்லை நகரக் கமிட்டி செயலாளரானார். நெல்லைக்கு பக்கத்து ஊரான மேலப்பாளையத்தில் பஞ்சம் ஏற்பட்ட நிலையில், மக்கள் வரி கொடுக்க வில்லை என்பதற்காக நகரசபை ஜப்தி நடவடிக்கை களில் ஈடுபட்டபோது, நாகராஜன் மக்களை திரட்டி போராட்டங்களை நடத்தினார். காவல்துறை அவரை கைது செய்து சிறையிலடைத்தது. இது தவிரவும் நாகராஜன் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார். பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாக கட்சிப் பேரவையைக் கூட்டி தன்னைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரினார். ராஜினாமாவை அவர் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டுமென்று பேரவை கேட்டுக்கொண்டதை ஜி. நாகராஜன் ஏற்கவில்லை. அடுத்த சில மாதங்களில் நா. வானமாமலையின் தனிப்பயிற்சி கல்லூரியிலிருந்தும் விலகினார்.

1956 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருநெல் வேலியிலிருந்து மதுரைக்கு திரும்பிய நாகராஜன், அவருடன் அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்தவரும் கட்சித் தோழருமான சங்கர நாராயணன் நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். 1956 முதல் 1970களின் தொடக்கம் வரை தனிப்பயிற்சிக் கல்லூரி களில் பணியாற்றியதன் மூலம் கிடைத்த வருமா னத்தை மட்டும் கொண்டே இவருடைய வாழ்க்கை நகர்ந்திருக்கிறது. திரையரங்குகளில் _ ஜி. நாகராஜன் எங்கள் கல்லூரியில் வகுப்பு எடுக்கிறார்’ என்று விளம்பர ஸ்லைடு காட்டும் அளவிற்கு அவரது கற்பிக்கும் திறனும் முறையும் அத்துறையில் அவருக்கு நட்சத்திர மதிப்பை ஏற்படுத்தித் தந்தன. அவரது புகழ் உச்ச நிலையில் இருந்தது.

1959 ஆம் ஆண்டு நாகராஜன் ஆனந்தாவை மணந்தார். கலப்புத் திருமணம். காதல் திருமணமல்ல, மணமான நான்காவது மாதம் ஆனந்தி ஸ்டவ் வெடித்து மருத்துவமனையில் மரணமடைந்தார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1962 ஆம் ஆண்டு நாகராஜன் அவரது தங்கை ஏற்பாட்டின்படி மதுரையில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிவந்த நாகலட்சுமியை மணந்துகொண்டார். நாகராஜன்_நாகலட்சுமிக்கு இரண்டு குழந்தைகள், மகள் ஆனந்தி, மகன் கண்ணன்.

ஆரம்பத்தில் மார்க்சியப் பிடிப்போடு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த நாகராஜன் 1960களுக்கு பின்னர் மார்க்சிய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தார். இக்காலத்தில் அரவிந்தர் மீது அலாதியான ஈடுபாடு கொண்டார். பின்னர் காந்தியின் மீது பற்று கொண்டார்.

தந்தை கணேச அய்யருடன் ஜி. நாகராஜன் இருந்தது கொஞ்ச காலமே என்றாலும் அவரிடமிருந்துதான் வாசிப்பு பழக்கம் இவரைப் பற்றிக்கொண்டது. இரவில் நாகராஜனை அருகில் படுக்கவைத்துக் கொண்டு தான் படித்தவற்றைக் கூறும் வழக்கம் அவருக்கு இருந்திருக் கிறது. கணேச அய்யருக்கு தெய்வ நம்பிக்கையோ சடங்குகளில் பற்றோ இருக்கவில்லை. பந்த பாசங்களிலும் அவர் அதிகம் பட்டுக்கொள்ளாதவர். தந்தையின் இக்குணங்கள் இளம் வயதிலேயே நாகராஜன் மீது படிந்துவிட்டன. தந்தையுடன் நட்பு ரீதியான நெருக்கத்தை நாகராஜன் உணர்ந்திருக்கிறார். கணேச அய்யரின் இறுதிக் காலங்களில் அவரால் முடியாமல் இருந்தபோது, மதுரைக்கு அவரை அழைத்து தனி வீடும் பராமரிக்க ஒரு உதவியாளரையும் நாகராஜன் நியமித்தார். கணேச அய்யர் 1961 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.

1957 ஆம் ஆண்டு ஜனசக்தி வாரமலரில் பிரசுரமான `அணுயுகம்’ கதையிலிருந்துதான் ஜி. நாகராஜனின் படைப்புலகம் தொடங்குகிறது. சரஸ்வதி, சாந்தி, ஜனசக்தி, இரும்புத்திரை, ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, சதங்கை, இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா போன்ற இதழ்களில் நாகராஜனின் எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவந்தன. ஆங்கிலத்திலும் சில சிறுகதைகள் எழுதினார். கீவீtலீ திணீtமீ சிஷீஸீsஜீவீக்ஷீமீs என்றொரு ஆங்கில நாவலும் எழுதியிருக்கிறார்.

ஜி. நாகராஜனின் முதல் புத்தகமாக வெளிவந்தது `குறத்தி முடுக்கு’ குறுநாவல்தான். `பித்தன் பட்டறை’ என்ற பதிப்பகமொன்றை ஆரம்பித்து 1963ஆம் ஆண்டு நாகராஜனே இதனைப் புத்தகமாக கொண்டு வந்தார். முறையாக விநியோகிக்கப்படாமல் முடங்கிய நிலையில் `குறத்தி முடுக்கு’ சரியாக கவனிப்புக்கு ஆளாகவில்லை. 1971ஆம் ஆண்டு அதுவரை எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 கதைகளைக் கொண்ட `கண்டதும் கேட்டதும்’ தொகுப்பைக் கொண்டு வந்தார். 1973ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை `ஞான ரதம்’ பத்திரிகையில் `நாளை மற்றுமொரு நாளே’ நாவல் தொடராக வெளி வந்தது. `பித்தன் பட்டறை’ வெளியீடாக 1974ஆம் ஆண்டு நாகராஜனே இந்நாவலையும் புத்தகமாக கொண்டு வந்தார்.

ஜி. நாகராஜன் மொத்தம் 33 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவற்றுள் 10 கதைகளை 1972_74களில் எழுதினார். கடைசி ஆறேழு வருடங்களில் அவர் எழுதிய ஒரே கதையான ’ஓடிய கால்கள்’ அவரது மறைவுக்குப் பின்னர் `விழிகள்’ சிற்றிதழில் பிரசுரமானது.

கல்லூரி பாட நூலாக்கும் நோக்கத்துடன் டார்வின், கலிலியோ, மார்க்ஸ் ஆகிய மூவரைப் பற்றியும் ‘ஜிலீக்ஷீமீமீ ரீக்ஷீமீணீt ஷிநீவீமீஸீtவீsts’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். இப்பிரதிகளும், ஒரே ஆங்கில நாவலான கீவீtலீ திணீtமீ சிஷீஸீsஜீவீக்ஷீமீs_ம், காந்தியின் நெருங்கிய நண்பரும் காங்கிரசின் பொருளாளருமான பஜாஜ் பற்றிய நாடகமும், `தீரன் மார்க்ஸ்’ என்ற கூலி விவசாயியைப் பற்றிய நாடகமும் இதுவரை புத்தக வடிவம் பெறவில்லை. இதில் `தீரன் மார்க்ஸ்’ நாடகத்தின் கைப்பிரதி தொலைந்துவிட்டது.

நாகராஜனின் மறைவுக்குப் பின்னர் 1991 ஆகஸ்டில் கனடாவிலிருந்து செல்வம் கொண்டுவந்த `காலம்’ சிற்றிதழில் `குறத்தி முடுக்கு’ குறுநாவல் மறுபிரசுரம் செய்யப்பட்டது. பின்னர் 1994இல் மதுரை வர்ஷா பதிப்பகம் `குறத்தி முடுக்கு’_ன் மறுபதிப்பைக் கொண்டு வந்தது. 1983இல் `க்ரியா’ பதிப்பகம் `நாளை மற்றுமொரு நாளே’ நாவலின் இரண்டாம் பதிப்பைக் கொண்டு வந்தது. 1997 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பகம் `நாளை மற்றுமொரு நாளே’, `குறத்தி முடுக்கு’, 35 சிறுகதைகள், 10 கட்டுரைகள் மற்றும் `கண்டதும் கேட்டதும்’ சிறுகதை தொகுப்பிற்கு சுந்தர ராமசாமி எழுதிய முன்னுரையும் கொண்ட நாகராஜனின் முழுமையான தொகுப்பைக் கொண்டு வந்தது. ஜி. நாகராஜன் ஒருமுறை ``சாவும் அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்’’ என்று கூறினார். சாவை எதிர்கொள்ள அவர் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட தருணமும் வந்தது. 1981ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அதிகாலைக்கு சற்று முன்பே, நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் நாகராஜனின் உயிர் பிரிந்தது.

என் ரோஜாப் பதியன்கள்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்

moderart-3

என்னுடைய இரண்டு ரோஜாப்பதியன்களை

இன்றுமாலை சந்திக்கப் போகிறேன்

நான் வருவது அதற்குத் தெரியும்

மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்

பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது

எனக்குப் புரிகிறது

நான் மெல்லப் படியேறி வருகிறேன்

தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன

புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்

செருப்பைக் கழற்றி முகம் கழுவி

பூத்துவாலையால் துடைத்துக் கொண்டு

கண்ணாடியால் எனைப்பார்த்து

வெளி வருகிறேன்

ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி

என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்

நான் ஊற்றும் நீரைவிட

நான் தான் முக்கியமதற்கு

மெல்ல என்னைக் கேட்கின்றன

என்ன செய்தாய் இன்று என

உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என

பொய் சொல்ல மனமின்றி

செய்த காரியங்களைச் சொன்னேன்

அதனை நினைத்துக் கொண்ட கணத்தைச் சொன்னேன்

சிரித்தபடி காலை பார்ப்போம்

போய்த் தூங்கு என்றன

மீண்டும் ஒருமுறை அவற்றைப் பார்த்தேன்

கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்

காலை வருவதை எண்ணியபடி

முத்தம்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்

auguste-rodin-the-kiss-rodin-museum-paris

முத்தம் கொடுங்கள்

பரபரத்து

நீங்கள்

முன்னேறிக் கொண்டிருக்கையில்

உங்கள் நண்பி வந்தால்

எந்தத் தயக்கமும் இன்றி

இறுகக் கட்டித் தழுவி

இதமாக

தொடர்ந்து

நீண்டதாக

முத்தம் கொடுங்கள்

உங்களைப் பார்த்து

மற்றவர்களும்

அவரவர்

நண்பிகளுக்கு முத்தம்

கொடுக்கட்டும்

விடுதலையின் சின்னம் முத்தம்

முத்தம் கொடுத்ததும்

மறந்துவிட்டு

சங்கமமாகிவிடுவீர்கள்

பஸ் நிலையத்தில்

ரயிலடியில்

நூலகத்தில்

நெரிசற் பூங்காக்களில்

விற்பனை அங்காடிகளில்

வீடு சிறுத்து

நகர் பெருத்த

சந்தடி மிகுந்த தெருக்களில்

முத்தம் ஒன்றுதான் ஒரே வழி

கைவிடாதீர்கள் முத்தத்தை

உங்கள் அன்பைத் தெரிவிக்க

ஸாகஸத்தைத் தெரிவிக்க

இருக்கும் சில நொடிகளில்

உங்கள் இருப்பை நிரூபிக்க

முத்தத்தைவிட

சிறந்ததோர் சாதனம்

கிடைப்பதரிது

ஆரம்பித்து விடுங்கள்

முத்த அலுவலை

இன்றே

இப்பொழுதே

இக்கணமே

உம் சீக்கிரம்

உங்கள் அடுத்த காதலி

காத்திருக்கிறாள்

முன்னேறுங்கள்

கிறிஸ்து பிறந்து

இரண்டாயிரம் வருடங்கள் கழித்து

இருபத்தியோறாம் நூற்றாண்டை

நெருங்கிக் கொண்டிருக்கிறோம்

ஆபாச உடலசைவுகளை ஒழித்து

சுத்தமாக

முத்தம்

முத்தத்தோடு முத்தம்

என்று

முத்த சகாப்தத்தைத்

துவங்குங்கள்

ஆத்மாநாம்

athmanam

பிரக்ஞை பூர்வமாக எதிர் கவிதை எழுதியவர்களில் ஆத்மாநாம் முதன்மையானவர். அவரின் சமூகக் கவிதைகளிலும் சரி, நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் சரி, ஒரு மெல்லிய கீற்றாக நம்பிக்கை துளிர்த்து நிற்கிறது. ஆத்மாநாமின் இயற்பெயர் எஸ்.கே. மதுசூதனன். 1951ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தவர். 1978இல் மனநலத்தாக்குதல் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆத்மாநாம் 1983 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். ஆனால் பின்பு பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் 6_7_1984_ல் கிணற்றில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டார். ஜோசப் ப்ராட்ஸ்கி பற்றி அறிமுக நூல் ஒன்றை எழுதியுள்ளார். 1981இல் காகிதத்தில் ஒரு கோடு _ ‘ழ’ வெளியீடாகப் பிரசுரிக்கப்ட்டது. `ஆத்மாநாம் கவிதைகள்’ பிரம்மராஜன் தொகுத்து தன்யா _ பிரம்மா வெளியீடாக 1989இல் வெளிவந்தது. இங்கு இடம்பெறும் கவிதைகள் `ஆத்மாநாம் கவிதைகள்’ தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்