Sep 29, 2017

மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்

தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி  போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில்  நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோணத்தில் தம் மனப்போக்கிற்கிசைந்த ஒரு சிலரின் கோஷ்டியில் சேர்ந்து, தெளிவுகாண அநேக விஷயங்களைப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை, 1933ல் மகாமகம் வந்தது. அதற்காக ஒரு கண்காட்சி நடந்தபோது, கதர் ஸ்டாலுக்கு வந்திருந்த பி.எஸ்.ராமையாவைச் சந்தித்தார் விவாதத்தில் பிரிதி உள்ள மெளனியிடம், பிஎஸ்ஆர். எதையேனும் கண்டிருக்கலாம்: மெளனியே எதிர்பாராதபடி, "நீங்கள் சிறுகதைகள் நன்றாக எழுத முடியுமென்று நினைக்கிறேன், "மணிக்கொடி" பத்திரிகைக்கு எழுதுங்கள்" என்றார் மெளனி, இதற்கு

அந்த வேளையில் என்ன சொன்னாரோ, எப்படி இதை எடுத்துக்கொண்டாரோ தெரியவில்லை. ஆனால் 1934க்கும் 35க்கும் இடையில், இப்போதும் அவர் வசமுள்ள குறிப்புப்புத்தகங்களில், அவ்வப்போது பளிரெனத் தோன்றியவற்றுடன் சிறுகதைகளுக்கான குறிப்புகளையும் எழுத ஆரம்பித்தார் தொடர்ச்சியாக, 1934ஆம் வருஷ இறுதியில் ஆறேழு சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் ஏதோ வேகத்தில் எழுதினார். இதுதான் ஆரம்பம்
மெளனியைப் புதுமைப்பித்தன், "சிறு கதையின் திருமூலர்" என்று
குறிப்பிட்டது. திருமூலரைப்பற்றி ஐதீகமாகச் சொல்லப்படுவதுபோல், மெளனியும் ஆண்டுக்கு ஒரு கதை எழுதியவர் என்பதற்காக அல்ல என்று, அவ்வொற்றுமை இல்லாததால், இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. திருமூலர், மிக எளிய பதங்களையும் பதச்சேர்க்கைகளையும் கொண்டு உயர்ந்த தத்துவங்களைச் செய்யுளில் வடித்தாற்போல, மெளனியும், "கனமான விஷயங்களை ஏற்க மறுக்கிற மெலிந்த சொற்களில்", உந்நத அநுபவங்களை எழுப்பியிருக்கிறார் என்ற ஒற்றுமைக்காகவே, பு:பி. அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், தமது எழுத்தின் இந்தத் தரத்தைப் பற்றி, மெளனிக்கே ஆரம்பத்தில் ஒரு நிர்ணயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. "இலக்கியத்தைச் சாதிக்கும்" நோக்கம், அந்தவரையில் அவருக்குத் தோன்றவும் இல்லை. அவரே சொல்வதுபோல், "பிரசுரிக்கும் நோக்க(மு)ம். இல்லை. எழுத முடிகிறதா என்று பார்க்கும் நோக்கம் போலும்" இலக்கிய ரசனை மிக்க நண்பர் ஒருவர் அக்கதைகள் பற்றிச் சொன்ன உயர்ந்த அபிப்ராயமோ, மெளனி எதிர்பார்த்ததை விடக் "கொஞ்சம் திடுக்கிட இருந்தது" அவர் ஆலோசனைப்படி, பி.எஸ்.ஆரைத் தமக்கு அறிமுகப்படுத்திய வாக்கில் நண்பரிடம் கதைகளை அனுப்பி, சென்னையில் "எந்தப் பத்திரிகை ஆசிரியரிடமாவது காட்டி", போடத் தகுதியுள்ளதாயின் போடும்படி எழுதினார், வக்கீல் நண்பர், மணிக்கொடியுடன் தொடர்புள்ள பிஎஸ்ஆரிடம் கதைகளைத்தந்தார். இதிலிருந்து, மெளனிக்கும் மணிக்கொடிக்கும் இருந்த "தொடர்பை"யும் நாம் நிதானிக்கலாம். 1936 பெப்ரவரி தொடக்கம், மெளனி கதைகள் அவ்வப்போது வெளியாகின. அவரது பெரும்பாலான கதைகளைத் தாங்கிவந்த சிறப்பு மணிக்கொடிக்கு உரியது. மௌனி, இதர கதைகளுடன் அனுப்பிய குறுநாவல் பிரசுரிக்கப்படவில்லை; அதன் பிரதியும் காணாமற் போயிருக்கிறது. மெளனி அது பற்றிச் சொன்னதைக் கொண்டு பார்த்தால், அது அவரது தரமான கதைகளின் வரிசையில் வராதது என்று தெரிகிறது.

சிறுகதைத் துறையில், அதுவும் முதல் சந்திப்பில் பி.எஸ்.ஆர் சொன்னதை மனதில் வைத்துத்தானோ என்னவோ, "எழுதிப்பார்த்து" எழுத்தாளரான மெளனி, தமது ஆரம்ப நாட்கள் தொட்டுச் சங்கீதத்திலும் ரசிகராக ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில், பிடில் வித்வானான ஒரு நண்பரோடு மௌனியின் நெருங்கிய ஈடுபாடும் ரசனையும் சர்ச்சைகளும் தான், அவர் கதைகளில் சங்கீதம் வகிக்கும் இடத்திற்கு ஒரு அந்தரார்த்தம் கொடுப்பதற்கு காரணமானது போலும் அவர் எழுத்து சொல் ஜாலத்தை நிராகரித்துப் பிறந்தது.

பிடில் சங்கீதமும் எழுத்தும் தற்செயலான விளைவுகளுக்கு இடம் தருவன. இதனால், கலைஞனின் உண்மையான மனநிலைகள், உணர்வுகள் போன்றவற்றுக்குக் கட்டுப்படாமல், தற்செயலான தினம்வர வளைவிலோ, படிமங்களிலோ தடுமாறி, பிடில் வாசிப்பும் எழுத்துக்கலையும் செயல்படமுடியும். இந்தத் தற்செயல் விளைவுவேறு, தன்னை மறந்த வேகத்தில் பிறக்கும் படைப்பு வேறு என்பதை பெரும்பாலான கலைஞர்கள் மறந்து விடுகிறார்கள். முதிர்ந்த சில கலைஞர்கூட, இவ்விருதுறைகளிலுமே, தற்செயல்  விளைவுகளை விஸ்தரித்துக்கை தட்டலையும் கைதட்டலையும் வாசகரஸனையையும் பெற்று விடுகிறார்கள்.

இவ்விபத்துக்களையே அதுசரித்துப் பிறக்கும் கலை, கைதட்டலையும் ஆரவாரிப்பையும் தான் பெறமுடியும், ஆனால், "கைதட்ட வைப்பதோ, "பேஷ், பேஷ்" என்று ஆரவாரிக்க வைப்பதோ அல்ல - நீண்ட பெருமூச்சுக்களை உண்டாக்குவதுதான் உயர்ந்த சங்கீதம்" என்று, மெளனி ஒருதடவை சம்பாஷணையில் குறிப்பிட்டிருக்கிறார். பிடில் போன்ற ஒரு வாத்யத்தில், சாஸ்திரக் கட்டுமானங்களின் முடுக்கப்பட்ட ஓட்டத்தில் சில தற்செயல் விளைவுகள், கலைஞனின் உண்மையான உணர்ச்சிகள் போன்றவற்றுக்குக் கட்டுப்படாமல் பிறப்பதுண்டு. இது ஒரளவு எழுத்துத் துறைக்கும் பொருந்தும். இந்த தற்செயல் விளைவு, கலைஞனின் மனநிலையிலிருந்து வேறுபட்டதாக இருக்க, அந்த மனநிலையாலேயே ஆளப்பட்டு, பளீரெனப் பிறக்கும் சங்கீதமும் எழுத்தும் உண்டு. இப்படித் தன்னை மறந்த வேகத்தில் பிறப்பதற்கும் தற்செயல் விளைவுகளுக்கும் இடையே உள்ள வேறு பாட்டை, தமிழில் சில பழம் பெரும் எழுத்தாளர்கள் கூட உணரவில்லை: இன்றும், கைதட்டலையும் ஆரவாரிப்பையும் பெறும் அவர்கள். அந்தத் தற்செயல் விளைவுகளை விஸ்தரித்து எழுதுபவர்கள்தான் என்பதை, அவர்களது எழுத்துக்கள் கைதட்டலையும் ஆரவாரிப்பையும் மட்டுமே பெறுகின்றன என்ற ஒன்றன் மூலமே நிரூபிக்கலாம். மெளனியோ, நீண்ட பெருமூச்சுகளை எழுப்புபவர்.

சாஸ்திரப் பயிற்சி, மனநிலைகளை வெளியிடாமல் தன் போக்கிற்கு விளைவுகளை உண்டாக்கும் என்பதால், அத்தகைய பயிற்சி நிலையிலேயே தேங்குபவரை "விரல் ஞானஸ்தன்" என்பதுண்டு: எழுத்துத்துறையிலும் அத்தகையவர்களை இப்படிக் குறிப்பிடலாம் இவர்கள், தற்செயல் விளைவு நேராத சமயத்தில்தான், ஒரு "விரல் ஞானஸ்தன்” சாஸ்திரீயமாகத் தான்  கற்ற ஸ்வர உருப்படிகளை மட்டுமே வாசிப்பதுபோல், காது புளித்த லட்சியங்களை உண்டாக்குவதும் தத்துவச்சரடு திரிப்பதும்
அடுத்தது, மெளனி நடப்பியல்பு"க்குப் புறம்பான வகையாக எழுதுபவர் என்பது ஆனால் நடப்பியல்புக்கு "இசைய" எழுதுபவர்களில் சிலர் சாதிக்க முடியாத மனநிலைப் போக்குகளை, மெளனிதான் இயல்பானதாகத் தென்படும்படி சாதிக்கிறார் ஆளில்லா வேளையில் வீடு பெருக்குபவளை வரச்சொல்லிவிட்டு, அவள் வந்ததும் அந்த

இக்கட்டான சமயம் பார்த்து "மனம் மாறி" விடுகிறதாக எழுதியுள்ள ஒரு கதையுடன், மெளனியின், 'மனக்கோலத்தை ஒப்பிட வேண்டும். நடப்பியல்பு என்ற அளவில் இயல்பானது, அந்த இக்கட்டான நிலையில் செய்யத் திட்டமிட்ட "கெட்ட” காரியத்தை நிறைவேற்றுவதுதான். மனம் மாறுவது, மனோதத்துவ இயல்பு தென்படும் வகையில் சித்தரிக்கப்படாத அளவில், அம்மனமாற்றம் அக்கதையின் நடப்பியல்பு அல்ல. அந்த இயல்பைச் சித்தரிக்கும் சிரமத்தைத் தவிர்த்து விட்டு, தத்துவச் சரடு திரித்தேபாத்திரத்தின் மனதை மாற்றுவது, வில்லனைக் காரால் அடித்துத் தீர்த்துவிடுவது போன்ற ஒரு சுளுவான காரியம்தான். மெளனி, சுளுவான தத்துவச்சரட்டை அனுமதிப்பதே இல்லை, பாத்திரத்தின் இயற்கையையே கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி எழுப்புகிறார்,

கேசவன் என்ற ('மனக்கோலம்") அப்பாத்திரம், மனம் மாறுவதற்கான காரணமும் ஏற்கனவே தென்பட ஆரம்பிக்கிறது. அவன் கெளரியை, 'ஒன்றிலும் கட்டுப்படாது, தனியே எட்டி நின்று உற்றுப்பார்க்கும் பெணிமையாகக் காண்கையிலேயே விரும்புகிறான். பெண்மை, அவன் வாழ்வுக்கு லட்சியமாகும். அவளது கருவிழிகள் என்பனவெல்லாம், உடலுறவுக்கும் அப்பாற்றபட்ட அம்சங்கள். (ஆனால், உடலுறவையும் அவன் சரீரத்தின்  தவிர்க்க முடியாத இயல்பால் நாடுகிறான் என்பதுகூட, தன்னறையில் அவளை அவன் தேடுவதில் சூசகமாக காட்டப்படுகிறது) இருந்தும் இன்னொருவரின் மனைவி என்று (உடலளவில்?) கட்டுப்பட்டவளாக, அவள் அருவருப்பையே அளிக்கிறாள். எனவேதான், கெளரி தன்னை, அதுவும் தன் கற்பனையிலேயே பின்னிருந்து அணைத்ததாக உணர்கையில், அவன் அருவருப்படைந்து 'மனமாற்றம்' கொள்கிறான். இங்கு, கெளரியை நேரில் (நடப்பியல் உலகில்?) அவன் அறைக்குக் கொண்டு வந்து அவ்வருவருப்பை உண்டாக்காமல், அவன் கற்பனையில் இதை நிகழ்த்தியதற்காகவும், மெளனியை நடப்பியல்புக்குப் புறம்பானவர் என ஒருவர் வாதிக்கலாம். அவ்விதமானால், அவளைக் கொண்டுவரும் வகையாக நிகழ்ச்சிகளை ஏற்கெனவே எழுப்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் அதனால் அவள் உணர்வுகள் எப்படி ஆகின்றன என்று சித்தரிக்கும் பொறுப்பையும் கொணர்ந்து, சிறுகதைக்கான கூர்மையை அழிக்கநேரும். ஆனால் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி உண்மையில் மனப்போக்குகளால் ஆளப்பட்டு நிகழ்வதால், மனநிலைகளின் இயல்புக்குத் தான் முதலிடம் தரவேண்டும். அதைத் தந்து விட்ட அளவில், புற நிகழ்ச்சிகளின் உதவி அங்கு வேண்டியதில்லை. இதுதான், மெளனியின் கதைகளை மற்றையவர்களினுடைய வற்றிலிருந்து பிரித்துக்காட்டும் அம்சம். அவர் நடப்பியல்புக்குப் புறம்பானவர் அல்ல. மனப்போக்குகளின் நடப்பியல்பையே, அதுவும் பரிபூரணமாகச் சித்தரித்துவிட்டு ஒதுங்குபவர். இது அவர்சாதனை மெளனியின் கருத்தில், நடப்பியல் என்பது புற நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, அப்புறநிகழ்ச்சிகள் மனிதர்களோடு சம்பந்தப்பட்டதால், அவர்களின் மனப்போக்குகளை உரியமுறையில் சித்தரிக்கும் மளவுக்குத்தான், கதைகளும் நடப்பியலானவையாகும். புற நிகழ்ச்சிகள், நிலைமைகன் என்பவற்றைப் பற்றி, மெளனி 'கண்மூடித்தனமாக இருக்கவில்லை நிகழ்ச்சிகளையும் நிலைமைகளையும் சிக்கனப்படுத்தி இருக்கிறார் என்பதே சரி இந்தச் சிக்கனமான எல்லைக்குள்ளேயே, அவர் வாழ்க்கையின் அகண்டத்தை அங்கங்கே சிதறி விழும் வரிகள் மூலம் எழுப்பிவிடுகிறார். இதை அவரது கவித்வம் என்றே கூறவேண்டும் இந்த அம்சத்தை, 'உயிர்வாழ்ந்த ஒவ்வொரு கனமும் ஒரு புரியாத புதிராக அமைகிறது விடை கண்டால், புரிந்த நிகழ்ச்சியும் மறுகணம் இறந்ததாகிறது' என்று சிந்தனைப் பொருளாகவும் 'ஒன்றிலும் கட்டுப்படாது தனியே எட்டி நின்று உற்றுப் பார்ப்பதே, பெண்மையின் பயங்கரக்கருவிழிகள்தான்' என்று கவிப்பொருளாகவும், அவரது சுமாரான கதைகளின் வரிசையிலுள்ள ' மனக்கோலத்திலேயே காணலாம். இவற்றை உணராது, வேலைநிறுத்தம் போன்ற புற நிகழ்ச்சிகளையும் அதற்கான நிலைமைகளையும் சித்தரிக்காததுக்காக, அவர் வாழ்க்கையைப் பற்றிக் 'கண்மூடிக்" கொண்டவர் என்றதுடன், ஃபிராய்டின் வழியில் ஆராயப்படத்தக்கவர் என்றும் அவரது ரசிகர்களே கூற நேர்ந்திருக்கிறது. மேற்சொன்ன வீடுபெருக்குபவளைப்பற்றிய கதையில், கதாநாயகன் மனம்மாறுவதைக்கூடப் 'பிராய்டின் வழியில் ஆராயலாம் என்று நாம் திருப்பிச் சொல்லலாம். சுயநினைவோடு தத்துவமும் லட்சியமும் பேசுபவர்களும், 'பிராய்டிடம் அகப்படுபவர்கள்தாள்.

II
மெளனியின் இலக்கிய முன்னோடிகள் என்று, தமிழில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லி விடமுடியாது. வசன அமைப்புகளிலிருந்து கதையம்சம் வரை, வேறொருவருடனும் அடையாளம் காட்டமுடியாத தனித்தன்மையை அவர்கலை விளக்குகிறது. “மறுமலர்ச்சி" என்ற பிரயோகத்தை (பதினாறாம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் பல கலைத்துறைகளிலும் அறிவுத்துறைகளிலும் புத்துயிர்காட்டி உலகையே பாதித்த 'மறுமலர்ச்சி'யை மனதில் கொண்டு, அச்சொல்லை இங்கும் பிரயோகித்தார்களாயின், அது எவ்வளவுக்கு பரிதாபகரமான தப்பர்த்தங்களைக் காண்பிக்கும்!) 1930க்களின் இறுதியில் சில தமிழ் எழுத்தாளர்கள் உச்சரித்தபடி, அத்தகைய அவர்களது லட்சியம் எதையும் ஏற்றுக்கொண்டு, இலக்கிய மணிக்கொடி பத்திரிகைக்கு மெளனி எழுதியவரல்ல என்பதை, அவருக்கு மணிக்கொடியுடன் ஏற்பட்ட தொடர்பின் விதமே காண்பிக்கிறது. அதோடு, அக்காலத்தில் இயங்கிய இலக்கிய சக்திகள்" என்று குறிப்பிடப்படுபவர்கள் எவராலும்கூட, மெளனி ஆளப்படவில்லை. இந்நிலையில், 'மணிக்கொடி கோஷ்டியுடன் அவரையும் அடையாளம் காட்டுவது எவ்வளவு முரணானது! அவ்வப்போது போய்வந்த தொடர்பைத் தவிர, மெனளிக்குச் சென்னையுடனேயே தொடர்பில்லாது இருக்க, மணிக்கொடியிலேயே நெருங்கிய தொடர்புகொண்ட புதுமைப்பித்தன்கூடத் தம்மை மணிக்கொடி கோஷ்டியினர் என்று குறிப்பிட்டால் சண்டைக்கு வந்து விடுவாராம். அப்பத்திரிகையில் எழுதியவர்களிடையே, மேதாவிலாசம் பொருந்திய எழுத்தாளர்கள் மெளனியும் புதுமைப்பித்தனும் மட்டுமே என்பது என் அபிப்ராயம். அவர்கள் அளவுக்கு மேதைகள் என்று இதுவரை, அவர்களுக்குப் பிறகும் வேறொறுவரையும் குறிப்பிட முடியாது. பாரதி இலக்கியத்தின் 'வாரிசுகள்" என்ற பிரயோகத்துக்குப் புதுமைப்பித்தன் எப்படித்தம்மை ஈடுகட்டிக்கொண்டாரோ தெரியவில்லை. இதரமணிக்கொடி - மறுமலர்ச்சிக் காரர்களோ, இந்த "பாரதி பரம்பரை" என்ற பிரயோகத்தையும் நாணயமாக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால், மெளனி இத்தகைய முத்திரை எதையும் ஏற்கமறுப்பதோடு, பாரதிகலையின் 'வாரிசாக மெளனி கலை பிறக்கவில்லை என்பதையும் நாமாகவே காணமுடிகிறது.

மெளனி ஒரு பெரிய படைப்பாளி என்ற அளவில், பண்டிதத் தனமானவர் அல்ல எனச் சொல்ல வேண்டியதில்லை அவர்சொற்பிரயோகங்கள், இந்த 'பாரதி பரம்பரையில் வராததால் அவரைப் பணடிதத்தனமானவரென்பது அபத்தமானது. போவது' என்றில்லாமல் சென்றது என்று மட்டுமல்ல, நகைத்தல்" என்பது போன்ற பழைய சொற்களைக்கூட அவர் உபயோகிக்கிறார். இதன்காரணம், பாரதியின் கவிதையிலுள்ள தொனியிலிருந்து மாறுபட்ட தொனியில் அவர் சிறுகதைகள் பிறப்பதாலாகும். உதாரணமாக, பின்வரும் மெளனி வசனத்தில் உள்ள நகைத்த' - சென்றது' என்ற சொற்களை நீக்கி, ' சிரித்த, போனது' என்ற சொற்களைப் போட்டுப் படித்துப்பார்த்தால், தொனியில் மாற்றமும் கீழிறக்கமும் தென்படக்காணலாம். "அந்த இருள் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளிகொண்ட ஏதோ ஒன்று உருவாகி எட்டிய வெளியில் மிதந்து சென்றது" (மனக்கோலம்) உயர்ந்த மனவெழுச்சியினர் வசப்பட்ட தொனிக்காகத்தான், இச்சொற்கள் பிரயோகிக்கப் படுகின்றன. ஆனால், மாறாட்டம்' போன்ற கீழ்தளத்து தொனியுள்ள கதைகளில், கொச்சையையும் மெளனி உரியபடி உபயோகிக்கின்றார்  எனக்காணலாம்.

III
மெளனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது சொற்களின் அர்த்தத்தோடு, சிலவேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும்கூட அவர் கவனத்தில் ஏற்கிறார். "எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?" (அழியாச்சுடர்) என்ற வரியில், "எவற்றின்" என்ற சொல் தவறு, "எவைகளின்" என்பதே சரி என ஒருவர் மெளனியிடம் சொன்னாராம் மௌனி, அச்சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுகிறது என்றார் எவற்றின்' என்ற சொல்லின் அழுத்தமான சப்தமே, அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது எனக் காணலாம். தம் கதைகளில் பலவற்றை, பல தடவைகள் வேறு வேறு சொற்பிரயோகங்களுடன் திரும்பத்திரும்ப எழுதி, முக்கியமான இடங்கனைச் சீராக்கும் மெளனியைப்பற்றி, 'சரி - தப்பு' பார்ப்பவர்கள் கொஞ்சம் நிதானித்து தங்கள் அபிப்ராயங்களைச் சொல்வது நல்லது சொற்களைப்பற்றியே இவ்வளவு அக்கறை காட்டும் மெளனி கதைகளுக்கு இடப்பட்ட சில தலைப்புகள், சில கதைகளுக்குப் பொருந்தவில்லை, நினைவுச் சுழல்' என்பது போன்ற படிமங்கள் உவமை உருவகங்கள் செறிந்த ஆடம்பரமான பெயர்களைவிட, மாறுதல்" என்பது போன்ற பெயர்கள்தான் அவர் கதைகளுக்குப் பொருந்தும். ஏனெனில், தானாக இச்சொல் ஒரு மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்திவிடாமல், கதையைப் படிக்கும்போதும் படித்து முடித்த பின்னும் ஏற்படும் உணர்வினால் நிரம்புவதற்கென, வெறுமையாகக் காத்து நிற்கிறது. "நினைவுச்சுழல்" என்பது போன்ற தலைப்புகளோ, தாமாகவே ஒரு உணர்வை எழுப்பி விடுவன கதையைப் படிக்கும் முன்பே, இவ்வுணர்வைக் கதையிலும் எதிர்பார்த்து நாம் தயாரகி விடுகிறோம். சில வேளைகளில், இப்படி எதிர்பார்த்தது நிறைவேறாமலும் போகும் மொத்தத்தில், நாம் மெளனி கதைகளில், பெயர்களைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டுத்தான் அவற்றைப் படிக்கவேண்டும் என்று சொல்லித்தோன்றுகிறது.

இதோடு, தமது கதாபாத்திரங்களின் பெயர்கள்கூட - கதையின் முக்கியமான ஓட்டத்தை மீறிச்சப்தம் போட்டு விடக்கூடாதே என்ற அக்கறையுடன்  பாத்திரங்களின் பெயர்களையும் சாமானியமானவையாகவே உபயோகிக்கிறார். சில கதைகளில், அவசியமில்லை என்று கானும்போது, பாத்திரத்துக்குப் பெயரே இராது. பெயர் இருப்பினும் இல்லாவிடினும், பெயர்கொள்ள, பாத்திரம் உருப்பெறுவதே அதிமுக்கியம் என்பதை அவர் உணர்ந்திருப்பது, இவ்விஷயத்திலே தெரியவரும்,

IV
மெளனி, பல விஷயங்களில் பிரச்சனைக் குரியவராகியிருக்கிறார். பொதுவாக, அவர் எழுதுவதே புரியவில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்று - தமது வசனங்கள் ஏதும் புரியவில்லையா என்று மெளனி கேட்கிறார் அல்ல, புரிய மறுக்கிற சில விஷயங்களை, அங்கங்கே எளிமையான வார்த்தைகளில் மடக்கிக் கொண்டுவரவே அவர் முயல்கிறார். அவ்விடங்களிலும் ஒரிரு வசனங்கள், அதுவும் மெளனியிடத்தே புதுப்பரிச்சயம் கொள்வோருக்குப் புரியாதிருக்கலாம் மற்றப்படி, அப்படி ஒன்றும் மெளனி வசனங்கள் புரியாதவை அல்ல அப்படியானால், தமது கதை எதுவும் புரியவில்லையா என மெளனி கேட்கிறார். அப்படியும் இல்லை. ஒரு அளவுக்கு அவையும்புரிவது போல்தான் தென்படுகின்றன. ஆனால், அதற்கும் மேல் அதில் புரிந்து கொள்வதற்கு ஏதுவும் இருக்கிறதா என்று சந்தேகிக்க அவை இடம் வைக்கின்றன. உதாரணமாக, "அழியாச் சுடர்" கதையில், ஒருவன்
ஒருத்தியிடம் அவளுக்காகத் தன்னால் எதையும் செய்யமுடியும் என்று சொலகிறான். ஒன்பது வருஷங்களின்பிள், பூரண வாலிபப் பருவத்தில் அவளை மீண்டும் சந்தித்தபோது, அவள் அவனை நோக்கி ஏதோ ஆக்ஞையிடுவதாக அவனுக்குத் தோன்றியது. அவள் என்ன செய்யச்சொன்னாள் என்பதே புரியாமல் அவன் மறைகிறான். இவ்வளவும் புரிகிறது. அவ்வளவுதான் அதில் புரிந்துகொள்ள இருப்பது என்கிறார் மெளனி இதற்குமேல், பாத்திரங்கள் ஏன் சாதாரணமானவர்களைப்போல் நடக்கவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு மெளனி, பாத்திரங்களின் பைத்தியக்காரத்தனமான இயல்பை ஒத்த நடத்தையாகத்தானே அவர்களின் காரியங்கள் இருக்கும் என்கிறார். இது இடக்கான பதிலே அல்ல. உண்மையில், பாத்திரங்களே சாதாரண மனிதர்களாகவன்றி, மனக்கோளாறு பிடித்தவர்களாகவோ, குடிப்பவர்களாகவோ, உந்நதமானவர்களாகவோதான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.


மெளனியின் கதைகள், படிக்கும்போதே உயர்வகையான மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இக்கிளர்ச்சிக்கான காரணங்களைக் கதைகளில் ஆராயும்போது, அவைகள் இப்படி அசாதாரணமான பாத்திரங்களைச் சுற்றி அமைவதாக காண நேர்கிறது என்பது, மேற்படி கூற்றுக்களுக்குக் காரணமாகலாம் ஆனால் திரும்பத்திரும்பப் படிக்கிறபோது, இந்த வெளிக் காரணங்களைப் பற்றிய சிரமம் பின்தங்கி மங்கிவிடுகிறது. ஒரு உயர்ந்த மனவெழுச்சியை உண்டாக்கிவிட்டுப் பாத்திரங்கள் மங்கி மறைந்துவிடவே தோன்றின என்ற உணர்வினால் இது நேரலாம் அதற்கப்புறம் பாது படித்தாலும் இந்நிலையே நீடிக்கக் காண்கின்றோம் உண்மையில், மெளனி கதைகள் திரும்பத்திரும்பப்படித்து அநுபவிக்கத்தக்கவை.

அசாதாரணமான பாத்திரங்களாகச் சிருஷ்டிக்கப்பட்ட பின், அவர்களது நடத்தையே அவர்களால் நிகழ்த்தப்படும் சம்பவங்களோகூட, அவர்களைப் பொறுத்த அளவில் நடப்பியல்புக்கு ஒத்தவைதான். குருவி 'ஏன் எங்கே" என்று கத்துவதும் கல்யாளி எழுந்து நின்று சுத்தாடுவதும், கதாபாத்திரங்களைப் பொறுத்த அளவில்தான். வேறு ஆசிரியர்கள் ஆடம்பரமான பெயர்கள், வார்த்தைகள், சிக்கலான நிகழ்ச்சிகள், தத்துவச் சுவடு, அரைவேக்காட்டு நனவோடை யுக்தி'களால் சாதிக்க முடியாத ஒரு தரிசனத்தை, மெளனி இந்த வகையாக அசாதாரணமான பாத்திர அமைப்பு என்கிற ஒரே தந்திரத்தின் மூலம், பிரமிக்கத்தக்க விதத்தில் சாதிக்கிறார் என்பதே, அவரது பாத்திரங்களின் அத்தன்மைக்குப்போதிய சமாதானமாகும்.

மெளனி தமது கதைகளில், பெரும்பாலும் நிகழ்ச்சிகளினாலன்றி கவித்துவத்தினாலேயே பாத்திரங்களிடையே உறவு போன்றவற்றைக் கொண்டு வருகிறார் பிரக்ஞை வெளியில்" கதையிலே, கதாநாயகன் காரில் மோதுண்டு வீழ்வதுபோன்ற புற நிகழ்ச்சிகள் வரும்போது, அவை மங்கலாக்கப்பட்டு பின்னொதுக்கப்படுகின்றன. மனக்கோலம்' என்ற கதையில், கேசவனுக்கும் கெளரிக்கும் இடையே உள்ளக் கவர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை மெளனி தேடவில்லை. கவித்துவம் நிரம்பிய மெளனியின் எழுத்தோட்டத்திலேயே இந்தப் பிணைப்பு அற்புதமாக, உதறமுடியாமல் நேர்ந்துவிடுகிறது அவள் கோலம் வரைவது, தன் மனம் சித்திரம் கொள்ள என்று கேசவன் கற்பிப்பதிலும், அவள் 'முகமே விழிகளென' இவனைப்பார்ப்பதிலுமே, மெளனி அவர்களிடையே வேண்டிய பிணைப்பைக் கொண்டுவந்துவிடுகிறார். 'பிரக்ஞை வெளியில்" கதையில், சேகரும் சுசீலாவும் ஒருவரைப்பற்றி மற்றவர் பேசிக்கொண்டிருந்து, கிட்ட நெருங்கியதும் பேச்சை நிறுத்தி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில், தாம் பேசியது மற்றவருக்குக் கேட்டிருக்குமோ என்ற அழுத்தத்தினால் ஏற்படும் பிணைப்பை வைத்தே, அறிமுகமானவர்கள் போன்று பின்னடி ஹோட்டலில் சந்தித்ததும் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த அளவிற்கு மெளனி கதைகளில், நிகழ்ச்சிகளின் இடத்தைக் கவித்துவமும் மனோதத்துவப்போக்குகளுமே நிரப்புகின்றன.

V
இக்கதைகளில் உயர்ந்தவை இவை என்று கட்டவோ, கதைகளை அலசிப்பார்க்கவோ நான் முயலவில்லை. உள்ளர்த்தம் பார்த்து பிச்சுப்பிடுங்குவது பரம்பரையாகத் தமிழ் இலக்கிய ரஷனையில் ஊறிவிட்ட ஒன்று போலும் ஒரு படைப்பு ஏதும் உள்ளர்த்தம் கொண்டிருக்கவேணும் என்றும் அதுதாள் ஆழமான எழுத்தாகும் என்றும் கருதிப் பழகிவிட்டோம். இதனால், மௌனியின் கதைகளைப்போல், படிக்கும் போதே உயர்ந்த அநுபவங்களை பண்பாக்கக்கூடிய படைப்புகளிையிட பிச்சுப் பிடுங்கி உள்ளார்த்தம் தேடி, அதன் பின்பே "ஆழமான" எழுத்து என்று கருதத்தக்கதாக இலக்கியம் பிரமை நம்மிடையே  என்ற  மாறியிருக்கிறது.

இலக்கியம், படிக்கும்போதே அனுபவிக்கத்தான். மௌனி கதைகள் இதற்குத் தகுந்த உதாரணங்கள் என்பதோடு, அவர்கதைகளில் கண் அர்த்தம், தத்துவச் சரடு ஏதும் கிடையாது அங்கங்கே தெளிவுபட்டு, எட்டி உயர்ந்து செல்லும் சிந்தனைப் பொருள்கள், வேகம் கொண்டவசனங்களில் வருகின்றன. இதுதான் அவரைப்பொறுத்த அளவில் ஆழமானது". அவ்விடங்களில் மெளனியின் வசனம் சிக்கலாவதும் உண்டு ஒன்றுக்கு மேற்பட்ட வசனங்களில் சொல்வதால் பொருளின் வேகம் குறைந்து விடும் எனக்கருதி, சொல்லவந்ததை ஒரு தரிசனமாகக் கண்ட கனத்தின் வேகத்தோடு, ஒரே வசனத்தில் சொல்ல முயன்றவைதான் அவை. உதாரணமாக, "இரவின் அந்தகார இருளைக்கான, ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள்?" என்று 'மனக்கோட்டை'யில் வரும் வசனம். இதுவார்த்தை ஜாலம் அல்ல. வார்த்தை ஜாலம் என்பது பொருட்கிடை இல்லாத அபத்த வசனத்தைத்தான் குறிக்கும். மாறாக, இங்கே இது போன்ற வசனங்கள், பொருட்கிடையோடு தரிசன உணர்வும் செறிந்தவை.

தத்துவம், லட்சியம் போன்ற, கதைக்கு அப்பாற்பட்ட எதன் உதவியும் இன்றியே, மெளனியின் கதை வாசகர் மனதைச் சிறகு பெற்றதுபோல் உயர்வடைய வைக்கிறது. ஒரு காவிய இன்பத்தை அளிக்கிறது. இவ்வதுபவமே, ஆழமானதென்று சொல்லத் தக்க இலக்கிய அநுபவம்
கதையம்சத்தை ஆழமாக்குவதாலோ, அதன் உள்ளர்த்தத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும்" சாமத்தியமும் கண்டு பிடித்தோம்" என்ற கர்வமும்தான் வாசகரிடையே வளரும். இது, பண்டிதர்களிடமிருந்து இன்று சில விமர்சகர்கள் வரை பரவி, தமிழ் ரஸனையைப் பிடித்த ஒரு வியாதியாகி விட்டது. இதை மாற்றியமைத்து, மெளனியின் கதைகள் போன்ற படைப்புகளை உணரத்தக்க விதமாக ரஸனையைப் பணிபடுத்துவதுதான் நாம் செய்ய இருப்பது தமிழில் ஆழமான கதையம்சத்தினர் துணையின்றி, சாதாரணமான கதைகளிலேயே ஒரு காவிய உணர்வை, மௌனி மட்டும்தான் இன்று தருகிறார். அவரது சொற்களால் தீண்டப்பட்டதும், இயற்கைப் பொருள்களிலிருந்து, சங்கீதம், பெண்மை என்பனவரை, தம்மை மீறி வியாபகம் பெறுகின்றன. படிக்கப்படிக்க அலுக்காத உணர்வோட்டமும் இலக்கிய நயமும், இதனாலேயே மெளனிகதையில் பரந்து கிடைக்கின்றன.
இந்த அளவு உந்நதமான காவியத்தன்மை, உலக இலக்கியத்திலும் அபூர்வமாகவே காணப்படுகிறது. தமிழுக்கு, இந்த வரண்ட வேளையில் இந்தப் படைப்புகள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். இருந்தும், இவை தமிழுக்கு மட்டும், அதுவும் இந்த வேளைக்கு மட்டும் உரியனவல்ல; சிலவற்றின் ஜோதி, காலத்தால் குன்றாது, தேச வரம்புகளையும் மீற ஜொலிப்பது என்று தோன்றுகிறது

முன்னுரை, மௌனி கதைகள், மௌனி, சிதம்பரம் 1967. திருக்கோணமலை, மே 1967)

சிறுகதையின் திருமூலர் என அழைக்கப்படும் மௌனியின் சிறுகதைகளுக்கு பிரமிள் தனது 28வது வயதில் எழுதிய முன்னுரை இது.


மகுடம் : பிரமிள் சிறப்பிதழ் 2015
நன்றி :rrn.rrk.rrn@gmail.com

Apr 16, 2017

அஞ்சலி - மா. அரங்கநாதன்





மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ஆவணப்படம்

ஆளுமைகள் குறித்த ஆவணப்படங்களோ, ஆளற்ற பொட்டலில் மேடைப் பேச்சு போல் பரிதாபத்துக்குரியவை. இந்த அவலங்களின் மிகச் சில விதிவிலக்குகளில் ரவிசுப்ரமணியனின் 'மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்' ஒன்று.

arang

ஆவணப்படத்தைப் பார்க்க சொடுக்கவும்

https://youtu.be/paOHVNj0zXM





Apr 14, 2017

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா

அப்பா அவன் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது.

ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது.

நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே

அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எவ்வளவோ தடவைகள் அங்கே போயும் அவளைப் பார்க்க முடியவில்லை.

நேற்று போனேன் அவள் மாரடைப்பால் இறந்துபோய் விட்டாளாம்!

மாரடைப்பா

அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை
அடைத்து விட்டனவோ?

அன்றிரவு சிலவற்றைத்தான் வெளியேற்றினாள் போல் இருக்கிறது.
போதும், சிறிது வெளிச்சம் போதும்; இனிமேல் திறந்து சொல்ல முடியாது' என்றாள் கடைசியாக.

திறந்து சொன்னதே என் உள்ளத்தில் விழுந்துவிடாத வேதனையாகி விட்டது.

அது தெரிந்துதான் அவள் நிறுத்திக் கொண்டாள். ஆமாம்!

இனிமேல் என்ன சொல்லுகிறேனே; அவள் இட்ட தடை அவளுடன் நீங்கிவிட்டது

நான் சென்னையில் சென்ற வருஷம், ஒரு வீட்டு ரேழி உள்ளில் குடியிருந்தேன். உள்ளே ஒரே ஒரு குடித்தனம். புருஷன் பெண்சாதி, உலகத்தில் சொல்லிக்கொள்ளுகிறபடி புருஷனுக்கு எங்கோ ஒரு பாங்கில் வேலை. பகல் முழுவதும் வீட்டிலிருக்க மாட்டான்: இரவில் வீட்டில் இருப்பதாகப் பெயர். சாப்பிட்டுவிட்டு வெளியே போவான்; இரவு இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டுவான்.

அந்த வீட்டில் நான் தனியாக இருப்பது எனக்கே சங்கடமாக இருந்தது. நான் எழுத்தாளன் இரவும் பகலும் வீட்டிலேயே இருப்பவன்.

காலையிலும் மாலையிலும்தான் சிறிது நேரம் வெளியே போவேன்.

அந்த மனிதன் முந்திக் கொண்டு விட்டான்.

'ஸார், நீங்கள் இங்கே தனியே இருக்கிறோமே என்று சங்கோசப்பட வேண்டாம். நான் சந்தேகப்படும் பேர்வழியல்ல; நீங்களும் உங்கள் ஜோலியோ நீங்களோ என்று இருக்கிறீர்கள். மனுஷ்யாள் தன்மையை அறிய எவ்வளவு நேரமாகும்? உங்களைப் போன்ற ஆசாமி வீட்டில் இருப்பது, நான் சதா வெளியே போவதற்குச் செளகரியமாக இருக்கிறது.

'உங்களைப் போல என்று சொல்ல என்னிடம் என்னத்தைக் கண்டான்?

அவள்-சாவித்திரி-என் கண்களில் படுவதே இல்லை. நானும் சாதாரணமாகப் பெண்கள் முகத்தை தைரியமாகக் கண்ணெடுத்துப் பார்க்கும் தன்மை இல்லாதவன். எனவே எனக்கு அவள் குரல் மட்டும் தான் சிறிது காலம் பரிச்சயமாகி இருந்தது.

அவன்-அவன் பெயர் கோபாலய்யர்-ஆபீஸுக்குப் போகுமுன்பே நான் முற்றத்திலிருந்த குழாயை உபயோகித்துக் கொண்டு விடுவேன். பிறகு, அந்தப் பக்கமே போகமாட்டேன். அவன் வெளியே போனதும் அவள் ரேழிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு விடுவாள். சாவித்திரி யாருடனும் வம்பு பேசுவதில்லை; வெளியே வருவதே இல்லை.

இப்படி ஒரு வாரமாயிற்று. இரவு இரண்டு மணிக்கு அவன் வந்து கதவைத் தட்டுவதும், சாவித்திரி எழுந்து போய்க் கதவைத் திறப்பதும், பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு அவள் அவனுடன் உள்ளே போவதும் எனக்கு அரைத் தூக்கத்தில் கேட்கும். ஒரு நாள் அவன் வந்து கதவைத் தட்டியபோது அவள் அயர்ந்து தூங்கிப் போய் விட்டாள் போல் இருக்கிறது. நாலைந்து தடவை கதவைத் தட்டிவிட்டான். நான் எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.

'ஒ! நீங்களா திறந்தீர்கள்? மன்னிக்க வேண்டும்! என்று என்னிடம் சொல்லிவிட்டு அவன் உள்ளே போனான். நான் என் அறையில் போய் படுத்து கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.

உள்ளே போனவன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை என்ன செய்தானோ தெரியவில்லை. பிறகு தெரிந்தது; உதைத்தான் காலால் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, ரொம்ப நாழி தட்டினர்களா? மத்தியானமெல்லாம் தலைவலி, உடம்பு... தெரியாமல்...' என்று அவள் மெதுவாக பயந்து சொன்னது என் காதில் பட்டது.

'உடம்பு தெரியுமா உனக்கு உடம்பு தெரியச் சொல்கிறேன்! என்று சொல்லிக் கொண்டு அடித்தான் அவளை அடித்தது என் காதில் விழுந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. புருஷன் பெண்சாதி கலகத்தில் பிற மனிதன் தலையிடக் கூடாது என்று கடைசியாகச் சும்மா இருந்துவிட்டேன்.

பிறகு இரவு முழுவதும் மூச்சுப் பேச்சு இல்லை. ஆனால் அவள் தூங்கவே இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் நானும் தூங்கவில்லை.

மறுநாள் இரவு கதவை அவள் விழித்திருந்து திறந்தாள். ஆனால், அன்றும் அவளுக்கு அடி விழுந்தது. முதல் நாள் போல அவள் பேசாமல் இருக்கவில்லை.

"என்னை ஏன் இப்படி அடித்துக் கொல்லுகிறீர்கள்? நீங்கள் செய்வது எதையாவது நான் வேண்டாமென்கிறேனா?

'ஒஹோ, இப்பொழுது உனக்கு வாய் வேறா? '

எவ்வளவு நாள்தான் நானும்...'

'சீ, வாயைத் திறந்தால் பல்லை உதிர்த்து விடுவேன்?

'உதிர்த்து விடுங்கள்!"

பளாரென்று கன்னத்தில் அரை விழுந்த சத்தம் கேட்டது. என்னை யறியாமல் நான் எழுந்து ரேழிக் கதவண்டை போய், ஸார், கதவைத் திறவுங்கள் என்றேன்.

அதற்குமுன் என்னோடு பல்லிளித்துக் கொண்டு பேசி வந்த மனிதன் உள்ளே இருந்து மிருகம் போலச் சீறினான்.

"எதற்காக?"

'திறவுங்கள், சொல்லுகிறேன்!

'முடியாது, ஸார்!

" திறக்காவிட்டால் கதவை உடைப்பேன்!"

அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே ரேழிக்கு வந்து மறுபடியும் கதவை மூடிக்கொண்டு என்ன ஸார்?' என்றான்.

'உங்கள் மனைவியை நீங்கள் அடித்தது போல் காதில் பட்டது?

இருக்கலாம், அதைப் பற்றி உங்களுக்கென்ன?

'நீங்கள் அந்த மாதிரிச் செய்யும்படி நான் விடமுடியாது!"

"என்ன செய்வீர்கள்?"

போலீஸுக்குத் தகவல் கொடுப்பேன், முதலில் நானே பலாத்காரமாக உங்களைத் தடுப்பேன்."

அவன் முகத்தில் சோகமும் திகிலும் தென்பட்டன. திருதிருவென்று சற்று விழித்தான். என்னுடைய திடமான பேச்சைக்கண்டு அவன் கலங்கிப் போனான் என்று தெரிந்தது. அவன் கோழை என்று உடனே கண்டேன்; இல்லாவிட்டால் ஒருவன் பெண் பிள்ளையை அடிப்பானா?

'நீங்கள் சாது, ஒரு வழிக்கும் வரமாட்டீர்கள் என்று உங்களை ரேழியில் குடிவைத்தேன். நீங்கள் அனாவசியமாக என் விஷயத்தில் தலையிடுவதாக இருந்தால் காலையிலேயே காலி செய்து விடவேண்டும்.

'நான் காலி செய்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளுவோம். இனிமேல் நீங்கள் விடிகிற வரையில் உள்ளே போகக்கூடாது.

'நீர் யாரையா, இந்த மாதிரியெல்லாம் உத்தரவு செய்ய?

"யாராயிரிருந்தால் என்ன? இப்பொழுது நீர் நான் சொன்னபடி செய்ய வேண்டியதுதான்; மீறினீரானால் உமக்கு நல்லதல்ல.

'பயமுறுத்துகிறீர்களோ?

பயமுறுத்துவது மட்டுமல்ல-செயலிலே காட்டி விடுவேன். வாரும், என் அறையில் படுத்துக் கொள்ளலாம். அம்மா, கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள் என்றேன் அவள் பக்கம் திரும்பி.

போட்டு விடுவாளோ அவள்?"

'நான் இங்கே இருக்கிறவரையில் நீர் இனிமேல் அந்த அம்மாள் மேல் விரல் வைக்க முடியாது."

அப்பொழுது சாவித்திரி கதவைத் திறந்துகொண்டு வந்தாள். என்னுடன் அவள் பேசினதே இல்லை.

தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம் என்று என்னிடம் சொல்லிவிட்டுப் புருஷனைப் பார்த்து, வாருங்கள் உள்ளே! என்றாள்.

'நீ போடி உள்ளே! உன்னை யார் இங்கே வரச் சொன்னா என்று அவன் அவள்மேல் சீறி விழுந்தான்.

'அம்மா, விஷயம் உங்கள் கையிலும் இல்லை. என் கையிலும் இல்லை. நான் தலையிடாமல் இருக்க முடியாது. போலீஸுக்குத் தகவல் கொடுத்தால் அனாவசியமாக உங்களுக்கு சங்கடமே என்றுதான் நானே தலையிடுகிறேன் என்றேன் அவளைப் பார்த்து.

'நீங்கள் இதையெல்லாம் காதில் போட்டுக்கொண்டு தலையிடுவது தான் எனக்குச் சங்கடம் என்று அவள் சொன்னாள்.

சரி, கதவு திறந்திருக்கட்டும். நீங்கள் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். வாசற்கதவைத் தாளிட்டு வருகிறேன். இவரும் நானும் என் அறையில் படுத்துக் கொள்ளுகிறோம் என்றேன்.

நான் இங்கே படுத்துக்கொள்ள முடியாது. எனக்க வெளியே போக வேண்டும். ஜோலி இருக்கிறது என்று அந்த மனிதன் வெளியே போக ஆயத்தமானான்.

என்ன மனிதன் அவன் அவன் போக்க எனக்கு அர்த்தமே ஆகவில்லை.

சாவித்திரி உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற்கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய்ப் படுத்துக்கொண்டேன்.

தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என் முன் நின்றது. நல்ல யெளவனத்தின் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேகநீர் பாய்ந்தது போலத் தென்பட்டது. பதினெட்டு வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்லுகிறோமே, அந்த மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. மிகவும் அபூர்வம் இதழ்கள் மாந்தளிர்கள் போல இருந்தன. அப்பொழுதுதான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் கண்டேன். கண்களுக்குப் பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒரு ஒளி அவள் தேகத்திலிருந்து வீசிற்று.

அவளையா இந்த மனிதன் இந்த மாதிரி...!

தாழ்ப்பாள் எடுபடும் சத்தம் கேட்டது.

நான் படுக்கையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போலத் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.

வேண்டாம், விளக்கு வேண்டாம், அணைத்து விடுங்கள் என்றாள் அவள்.

உடனே அதை அணைத்துவிட்டு, படுக்கையிலேயே உட்கார்ந்து விட்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். 'புருஷன் ஒரு விதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சரியம்.

'உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேனே என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று... வந்தேன்.

'அம்மா...'

'என் பெயர் சாவித்திரி.

“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப் போய் விட்டது

'இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே. அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது ?"

ஆனால் அங்கே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்களா? '

வாயைத் திறந்து சொல்ல வேண்டுமா?"

'பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை குருவி போலத்தான் மனிதர்களும். இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?

'புருஷன்...'

'என்னடா இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...'

'நீங்கள் அப்படி...'

'நீங்கள் என்று ஏன் சொல்லுகிறீர்கள், நீங்கள் தானே பெரியவர்கள். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும், எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?’

'இல்லை."

ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால், நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.'

வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில்தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்த துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவையாக இருந்தன.

'அம்மா... சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக்கொண்டு...'

’இனிமேல் என்னை என்ன செய்துவிடப்போகிறான். கொலைதானே செய்யலாம்? அதற்குமேல்?’

'நீ இப்படிப் பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்கு புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்.

'நல்ல வார்த்தையா? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?

பின் என்ன செய்யப் போகிறீர்கள்?"

‘என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை - அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிற வரை அடிபட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.'

அடடா, இப்படியேயா!'

வேறு வழி என்ன இருக்கிறது?

என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

'என்ன பதில் இல்லை? என்று அவள் சிரித்தாள்.

'நான் என்ன சொல்வது... அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?" என்று திடீரென்று கேட்டேன்.

கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே சில மாதங்களுக்குப் பிறகு.? '

என்ன சாவித்திரி..."

அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும்போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஒய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புது முகத்தைப் பார்ப்பீர்கள்."

'நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்பொழுது, நானும் பேசலாமா?

'தாராளமாக!'

'என்னைக் கவர்ந்து வைத்துக்கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது!"

அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்று உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு திருப்தி கொடுக்காது...'

'நீ எப்படி அந்தமாதிரிப் பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?"

‘எப்படியா? என் புருஷனைப்போல் என்னிடம் பல்லைக்காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல, கிழவியல்ல, நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்லுகிறேன். மிருக இச்சைக்கு பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?"

'சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?

“எது சுகம்? நகைகள் போட்டுக்கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப்பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர்; புடவை, ரவிக்கை-நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி. சரீர சுகம்; நான் ஒருநாளும் அடையவில்லை இதுவரையில்.

'அதாவது...'

'என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை."

பின் எதைத்தான் சுகம் என்கிறாய்? '

நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும் கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலுமா என்னைச் சொல்லச் சொல்லுகிறீர்கள்?"

'உன் புருஷன் ஏன்...?"

'என் புருஷனுக்கு என் சரீரம் சலித்துப்போய் விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.

'சாவித்திரி தைரியமாக ஒன்று செய்யலாமே!

'நான் எதையும் செய்வேன். ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம் அவ்வளவுதான்.

'உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்து பார்க்கிறேனே!"

'வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கிவிட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்காக, என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.

“எது சொன்னாலும்...'

'ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.

நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.

'நான் போய்ப் படுத்துக்கொள்ளட்டுமா?"

தூக்கம் வருகிறதா?”

தூக்கமா? இப்பொழுது இல்லை

பின் சற்று தான் இரேன்.

'உங்கள் தூக்கமும் கெடவா?

'சாவித்திரி..."

'ஒன்றும் சொல்லாதீர்கள்!"

நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது

. நிஜம்மா என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

'பொய் சொன்னால்தான் நீ உடனே...

அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்'

'சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.

அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக் கட்டும். என் கட்டை சாய்ந்தபிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.

'ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? '

இல்லை, இனிமேல் இந்த சரீரம் என் சோகத்தைத் தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கேதோ ஒரு திருப்தி ஏற்படுகிறது.

நான் சொல்லவில்லையா? என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல் இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக்கொண்டேன்.

அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தாள்.

இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததை பூசி மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.

மெள்ள அவளைப் படுக்கையில் படுக்கவைத்தேன்... என் படுக்கையில் அப்பொழுதும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகஸ்யங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின இதழ்கள் ஒய்ந்து போனது போலப் பிரித்த படியே கிடந்தன.

திடீரென்று, ‘அம்மா! போதுமடி!’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.

'சாவித்திரி, என்னம்மா? என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக்கொண்டேன்."

போதும்!"

'சாவித்திரி, விளக்கு...'

அவள் திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.

‘ஆமாம், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்றுநேரம் இருந்த வெளிச்சம் போதும்!’ என்று எழுந்து நின்றாள்.

'நீ சொல்வது அர்த்தமாகவில்லை, சாவித்திரி!’

'இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக்கொள்ளுங்கள்!"

'ஏன், ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்?’

'ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக் கூடாது, ஆபத்து என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டுச் சிறிதும் தயங்காமல் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.

சட்டென்று என் உள்ளத்திலும் சற்று எரிந்த விளக்கு அணைந்தது.

போதும்!

எது போதும் என்றாள்? தன் வாழ்க்கையா, துக்கமா, தன் அழகா,என் ஆறுதலா, அல்லது அந்தச் சிறிது வெளிச்சத்தில்...?

******
கலாமோகினி, ஜனவரி-1943

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்