Jun 23, 2012

பிரம்மராஜன் கவிதைகள்-நகுலன்

அப்படித்தான் தோன்றுகிறது: பழகிப் பழகி நைந்துபோன விஷயங்கள் சிந்தையில் கவ்விப் பிடிப்பதில்லை. பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று யந்திர ரீதியில் இழுத்துப் பார்ப்பது போல் பழக்கங்களின் பிடியிலிருந்து மாறுகையில்தான் சிந்தனை தீவிரமாக இயங்குகிறது. பிரக்ஞை சிலிர்க்கிறது; ஒரு புதிய மரபின் தொடக்கம்; பிறகு மீண்டும் பழைய கதை; பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று இழுத்துப் பார்ப்பதுபோல். ஆனால் பழக்கத்தின் பிடிப்பை உதறி ஒரு புது உலகை – அப்படி முழுவதும் புதிதில்லை – படைப்பாளி சிருஷ்டிக்கையில், பழக்கத்தின் வேகத்தில் nagulan-by-viswamithran-1 மரத்துப்போன பிரக்ஞை புதியதையும் , அது நைந்துபோன பாஷையில்லை என்ற அதே காரணத்தின் அதை அசட்டை செய்கிறது!

ஞானக்கூத்தன் சொல்வது மாதிரி பிரம்மராஜன் கவிதை “ஒரு வித்தியாசமான குரல்” என்பது மாத்திரமில்லை; அது ஒரு சாசுவதமான குரல் என்பதிலும் ஐயமில்லை. அதன் தன்மைகளை பின்வருமாறு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். அது படிம வியாபகமானது; இங்கு படிமம் நுண்மையாகக் கட்டுக் கோப்புடன் இணைகிறது; இறுக்கமான நடை; அவரே சொல்கிற மாதிரி அறிவுலகின் இணைப்பிருந்தாலும் அறிவு உணர்வாக மாறுகிறது. எனவே கவிதை பிறக்கிறது. அவர் Co-authorship என்பதையும் புறக்கணிப்பதற்கில்லை. ஏன் என்றால் ஒரு கவிஞன் உலகம் அவன் அனுபவ உலகம்; இந்த அனுபவ உலகம் வாசகனுடைய அனுபவ உலகுடன் இணைகையில்தான் உண்மையான ரஸனை சூடு பிடிக்கிறது. இது வாசகனுக்கு அவனுக்குரிய மதிப்பைத் தருகிறது.

கவிதையில் வார்த்தைகள் ஒன்றிற்கு மேற்பட்ட “அர்த்தங்கள்” உடையவை. ஐம்புலன்களால் கிரகிக்கப்பட்டு, அனுபவச் சூழல்களால் வளர்ச்சியுற்று, சப்தமும் சித்திரமுமாக உள்வியாபகமுற்று அனுபவம் வார்த்தையின் மூலம் அதீத எல்லைகளை நோக்கி நகர்கிறது. சுருக்கமாகக் கவிதையில் வார்த்தையின் உள்வியாபகம் எல்லையற்ற பரிமாணம் உடையது. பிரம்மராஜன் வார்த்தையில் “அரூபமான வார்த்தைகள் செயல் இழந்து போகும் பொழுது அந்த இடத்தை நிறைவு செய்யப் படிமங்களால் மட்டுமே முடியும்.” மீண்டும், “படிமங்கள் இயக்கம் மிகுந்தவை” எங்கு ”படிமம் இயக்கமற்றதாக இருப்பின் அதைக் கொண்டிருக்கும் கவிதை செயல்வீச்சு அற்றதாகவே இருக்கும்”. ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஒரு இந்தியக் கவிஞர் சொன்னதாகக் கேள்வி: சில இந்தியக் கவிஞர்களின் படைப்புகளை நோக்குகையில் அவர்கள் ஐம்புலன்கள் அற்றவர்கள் என்று சந்தேகம் தோன்றுகிறது” என்று. அது எப்படியாவது போகட்டும்.

எதிர் கொள்ளல்” என்று ஒரு கவிதை. பாரதி கவிதையில் இருந்து ஒரு வரி. “வீணையடி நீயெனக்கு; மேவும் விரல் நானுக்கு”. இங்கு ரஸனை என்பது நேர்கோடாக இணைக் குறியீடாகச் செல்கிறது. ஆனால் பிரம்மராஜன் கவிதை இந்த அனுபவத்தை அதன் நானாவிதமான, ஏன், தாறுமாறான தன்மைகளுடன் காட்டுகிறது. ஆமாம், முதல்வரியே விதவிதமான விபரீதமான சப்த அலைகளை எழுப்புகிறது.

“அரங்கத்தில் அடிக்கடி இருள்”. இந்தக் கவிதையில் கலைஞனுக்கும் கலைக்கும், கலைக்கும் அதை எதிர்கொள்பவர்களுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிப் பேசப்படுகிறது. இந்த அடிப்படையில்; இருள், வானவில், கழுதைகள், அன்னை மடியில் பால் சுரப்பது, வீணை, கங்கை நீர், தகரத்தின் பிய்ந்த குரல்கள், மனதின் சுவர்கள், தளிர், உதயம் என்ற படிம வரிசைகள் இணைகின்றன. மௌனமாகப் படிப்பவர்களுக்கு நிறையவே கிடைக்கும்.

தொடர்கிறேன். தொடரும் பொழுதே இப்படியெல்லாம் தெளிவு படுத்த வேணுமா என்று என்னையே  நான் கேட்டுக் கொள்கிறேன். புதுக் குரலின் பரிணாமத்தில் ஈடுபாடுள்ளவன் bramarajanஎன்பதனாலும், அந்தக் குரல் அதன் இயல்பில் வெளி உலகிலும் தொடர்ந்து ஒலிக்க ஒரு சூழலைச் சிருஷ்டி செய்ய வேண்டியிருப்பதும் ஒரு அவசியம் என்ற நோக்கத்திலும் என்னைத் திருப்திப் படுத்திக் கொள்கிறேன். “அறிந்த நிரந்தரம்” என்ற கவிதை, வாழ்க்கையை மீறியது ஒன்றுமில்லை என்ற ஒரு தத்துவச் சரடு (இந்தத் தத்துவத்தின் மீது உங்களுக்கும் எனக்கும் ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது இல்லையே இங்கு விஷயம்) இதில் வரும் படிம வரிசை :-

கருப்புச் சூரியன் X ரேடியம் முட்கள்
நகராத காலம் X ஊரும் நத்தை
காகம் X குழந்தையின் ரோஜாப் பாதங்கள்
சாமச்சேவலின் கூவல் = ஒரு ஸிம்பனி

வாழ்க்கையில் எந்த பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு என்ற மையம். இந்தக் கவிதையில் ஒரு படிம ப்ரயோகத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மூன்று வரிகள் :_

அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.

இங்குச் சில வாசகர்களேனும் “விழித்த காகம்… ரோஜாப் பாதங்களை கேட்காமல் மறதியில் கரைகிறது” என்ற அடிக்குறி இடப்பட்ட தொடரைக் கண்டு “புரியவில்லை” என்று சொல்லலாம். இதற்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தரலாம்; ஆனால் மீண்டும் அது இல்லையே இங்கே விஷயம்! நவீன கதையில் ஒரு புலனால் உணர்வதை இன்னொரு புலனுக்கு இணைப்பது என்பது ஒரு உத்தியாகக் கையாளபடுகிறது. மாத்திரமில்லை, இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் ரௌத்ரம் என்ற அனுபவம் வரும்போது ரத்தச் சிவப்பை நினைவு கூர்கிறோமென்றால், ரோஜாவின் இளஞ் சிவப்பில் இனிமையான மெல்லிய இசையின் நாதத்தைக் கேட்கிறோமென்று சொல்லலாம்.

இளம் இரவில் இறந்தவர்கள்” என்ற இன்னொரு கவிதை இந்த வார்த்தைச் சேர்க்கையே, பிரம்மராஜன் கூறுகிறது மாதிரி, ஒரு கலாபூர்வமான விளைவை உண்டு பண்ணுகிறது. முக்கியமாக “இளம்” என்ற வார்த்தை. நவீன இலக்கியத்தில் வாழ்க்கை சிக்கல் நிரம்பியதாக இருப்பதால் நமது கவிதை படிம மயமாகி விடுகிறது. இந்தக் கவிதையில் படிம ப்ரயோகத்தைப் பற்றிச் சற்று விரிவாகவே எழுதலாமென்று நினைக்கிறேன். பிணவாடை தொங்கும், பூக்கும்-காளான் பூக்கும் என்பதால் இதயச் சுவர்கள் பிறகு குயில்X சில் வண்டு . இதைத் தொடர்ந்து காகை மரங்கள் X மூளைச் சாலைகள் (தொகுதியை ஒரு முறை முழுவதும் படித்தவர்களுக்கு மிஷின்களுக்குப் பின்னாலும் மனிதர்கள் என்ற கவிதை ஞாபகம் வரும்)

லாரி எஞ்ஜின்கள் ஸிம்பனி முற்றுப் பெறும்.  விஞ்ஞானம் வியாபார உலகை நோக்கி நகரும் புகைப்பலம். இதற்கு எதிராக இயற்கையின் உயிர்த்தெழல்- … இறந்த இவைகள் கிசுகிசுக்கும். இதை நவீன விமர்சன பாஷையில் குறிப்பிடுவதென்றால் எழுத்துக்கொண்டு ஜனனம் X மரணம் என்ற எதிர்மறைகளை இசைக்கும் வித்தை. மறுபடியும் காடு கருக, உடல் நாற்றம் வீச, ஒயற்கை உயிர்த்தெழுவது போல் படிமம் மூலம் நூலறுந்த பட்டம் மூங்கையில் படபடப்பது யோனியில் நீந்தும் விந்து என்பதால் அது போல்-இது என்ற ஒத்திசைப்பு- மீண்டும் வார்த்தை மூலம் ஒரு ஒத்திசைப்பு-முரண்பாடு இணைகிறது என்று கடைசியாக உச்சம் – நாளைக்கும் காற்று வரும். கவிதையில் அர்த்தம் எலியட் பாஷையில் சொல்வதென்றால் வாசகனுக்குப் போடும் இறைச்சித் துண்டு! அனுபவத்தின் ஐக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இதைப் படிமங்கள் இயங்குவதால் வெவ்வேறு உலகங்களை மாறுபட்ட நிலைகளை ஒற்றுமை அடையச் செய்வது மாறாக நிற்கும் அனுபவ உலகங்களிலிருந்து படிமங்களை இணைப்பதால் பிரம்மராஜன் கூறியமாதிரி படிமம் தனியாகி நிற்காமல் ஒரு சுழற்சி மூலம் கட்டமைப்பில் பாய்கிறது. இன்னும் ஒரு கவிதையை விஸ்தரித்து விட்டு மேலே போகின்றேன். கடைசிக் கவிதை, இதைப் பற்றி நான் அதிகமாக எழுத விரும்பவில்லை. படிமங்களை ஊன்றிப் படிப்பவர்களுக்கு -

பச்சைப் புதரில்
வெறும் விரல் பிடுங்கிய மூங்கில் கிளை ஒன்று

என்றதில் “வெறும் விரல்” என்பது எந்தத் தோல்வியும் அதன் இயல்பை மீறி சாசுவத்தை நோக்கி நகர்கிறது என்று.

இந்தக் கவிதைகளைப் படிப்பவர்கள் படிமங்களைக் கவனமாகப் படிப்பவர்களுக்குப் “புரியாமல் இருக்கிறது” என்ற பிரமை நீங்கி விடும். மேலும் கவிதையில் வார்த்தை “கருத்துத் தொடர்பு” என்ற அடிப்படையில் வித-விதமான நிலைகளைப் பெறுகிறது. இன்னும் ஒன்று – கவிதையில் வரி- சப்த அடிப்படையில் நகர்கிறது என்ற பிரமையில் மயங்காமல் வரிக்குவரி “அர்த்தம்” தொடர்கிறது என்பதையும்  ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வாசித்தால் “புரியவில்லை” என்ற பிரச்னை தலை காட்டாது! ஆனால் படிமம் மாத்திரமில்லை கவிதை, உயிரின் துடிப்பு உணர்ச்சி வேகத்தில் இங்கு கவிதையாக மிளிர்கிறது. அனுபவத்தின் பல குரல்களை இங்கு கேட்கலாம். அவற்றில் சில வருமாறு:

மனிதன்தான் வாழ்க்கைக்கு, இயற்கைக்கு, ஏன் சாவுக்குக்கூட அர்த்தம் கொடுக்கிறான். (இறப்புக்கு முன் சில படிமங்கள்) கலைஞனுக்கு அனுபவத்தின் வெளிப்பாடு மாத்திரம் போதும். (எதிர் கொள்ளல்) இந்த நிற்கும் பொழுது கூட எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு ஜ்வலிக்கிறது. (இப்பொழுது)

இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். முன்னர் கூறிய மாதிரி – இவற்றில் எல்லாம் மனித குலத்தின் மாறாத புராதனமான குரல் மிகப் புதுமையாக வருகிறது. ஒரு சமயம் கூறிய மாதிரி மிகப் புதியதின் பின் மிகப் பழையதின் சாயை காணப்படுகிறது.

சில உதாரணங்கள் :-

ஒரு யுகம் வேண்டும் முகம் தேட அய்யப்ப பணிக்கர்
மீட்சிக்குப் பயனற்றுப் போயினும் தாறு மாறாய்க் கிடக்கும்
வார்த்தைகளை எழுப்ப வேண்டும் உலுக்கி.
”புத்தகங்களை விட்டுச் சென்றவன் தனக்கு”
என்று ஒரு பெண் சொல்லலாம்.
இந்த வரிகள் உன்மனதின் கேள்வியாகும் நேரம்
என்னுருவம் எங்கோ தொலைவில் கல்மரம்.

***

நன்றி: ஆபிதீன் பக்கங்கள்

அறிந்த நிரந்தரம்

ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.
இரவெனும் கருப்புச் சூரியன்
வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.
நெட்டித் தள்ளியும் நகராத காலம்
எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.
அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.
இதோ வந்தது முடிவென்ற
சாமச் சேவலின் கூவல்
ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.
இரண்டாம் தஞ்சம்
பொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.
நாதியற்றுப்போன நாரைகள்
கால்நடைகளின் காலசைப்பில்
கண் வைத்துக் காத்திருக்கும்.
எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்?
தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த
மனிதன் ஒருவன்
ஒட்டடை படிந்த தலையுடன்
வாசல் திறந்து வருகிறான்
கோதும் விரல்களிடம்.
காயும் நிலவிலும் கிராமக் குடிசை
இருள் மூலைகள் வைத்திருக்கும்
மறக்காமல்
மின்மினிக்கு.
வாழும் பிரமைகள்
காலம் அழிந்து
கிடந்த நிலையில்
கடல் வந்து போயிருக்கிறது.
கொடிக்கம்பியும் அலமாரியும்
அம்மணமாய்ப் பார்த்து நிற்க
வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.
நினைவின் சுவடாய்  உதட்டில் படிந்த கரிப்பும்
காற்றில் கரைந்துவிட
வந்ததோ எனச் சந்தேகம் கவியும்.
பெண்ணுடல்  பட்டுக் கசங்கிய ஆடைகள்
மறந்த  மனதின்
இருண்ட மூலைகளினின்று
வெளிப்பட்டு
உடல் தேடி  அலைவதால்
எங்கும் துணியின் சரசரப்பு.
அன்று பக்கவாட்டில்  நடந்து  வந்த மஞ்சள் நிலா
தசைகளின் சுடரை
நகல் எடுக்க முயன்று
கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது.
இறந்த நாள்களின்
குளிர் நீளக் கைகள்
நீண்டு வந்து
மறதியைக் கொண்டு தூர்த்துவிட
கற்பனைக்கும்  சொந்தமில்லை
கோலங்கள்.

அறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி - பிற கவிதைகள்

Jun 12, 2012

நாற்காலி - கி.ராஜநாராயணன்

'நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?' எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோருக்கும் தோன்றிவிட்டது.அவ்வளவுதான்; குடும்ப 'அஜெண்டா'வில் வைக்கப்பட்டு இந்த விஷயத்தில் விவாதம் தொடங்கியது.

முதல் நாள் எங்கள் வீட்டுக்கு ஒரு குடும்ப நண்பர் விஜயம் செய்தார். அவர் ஒரு சப்ஜட்ஜ். kee.ra.8வந்தவர் நம்மைப் போல்வேட்டி சட்டை போட்டுக்கொண்டு வரப்படாதோ? சூட்டும் பூட்டுமாக வந்து சேர்ந்தார். எங்கள் வீட்டில் முக்காலிதான்உண்டு. அதன் உயரமே முக்கால் அடிதான். எங்கள் பாட்டி தயிர் கடையும்போது அதிலேதான் உட்கார்ந்து கொள்வாள்,அவளுக்கு பாரியான உடம்பு. எங்கள் தாத்தா   தச்சனிடம் சொல்லி அதைக் கொஞ்சம் அகலமாகவே செய்யச்சொல்லியிருந்தார்.

சப்ஜட்ஜுக்கும் கொஞ்சம் பாரியான உடம்புதான். வேறு ஆசனங்கள் எங்கள் வீட்டில் இல்லாததால் அதைத்தான்அவருக்கு கொண்டுவந்து போட்டோம். அவர் அதன் விளிம்பில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு உட்காரப் போனார்.இந்த முக்காலியில் ஒரு சனியன் என்னவென்றhல் அதன் கால்களுக்கு நேராக இல்லாமல் பக்கத்தில் பாரம்அமுங்கினால் தட்டிவிடும்! நாங்கள் எத்தனையோ தரம் உறியில் வைத்திருக்கும் நெய்யைத் திருட்டுத்தனமாகஎடுத்துத் தின்பதற்கு முக்காலி போட்டு ஏறும் போது அஜாக்கிரதையினால் பலதரம் கீழே விழுந்திருக்கிறோம். பாவம்,இந்த சப்ஜட்ஜும் இப்பொழுது கீழே விழப்போகிறாரே என்று நினைத்து, அவரை எச்சரிக்கை செய்ய நாங்கள் வாயைத்திறப்பதற்கும் அவர் தொபுகடீர் என்று கீழே விழுந்து உருளுவதற்கும் சரியாக இருந்தது. நான், என் தம்பி, கடைக்குட்டித்தங்கை மூவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. புழக்கடைத் தோட்டத்தைப் பார்க்க ஓடினோம். சிரிப்புஅமரும்போதெல்லாம் என் தங்கை அந்த சப்ஜட்ஜ் மாதிரியே கையை ஊன்றிக் கீழே உருண்டு விழுந்து காண்பிப்பாள்.பின்னும் கொஞ்சம் எங்கள் சிரிப்பு நீளும்.

எங்கள் சிரிப்புக்கெல்லாம் முக்கிய காரணம் அவர் கீழே விழும் போது பார்த்தும் எங்கள் பெற்றோர்கள், தாங்கள்விருந்தாளிக்கு முன்னாள் சிரித்துவிடக்கூடாதே என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டதை நினைத்துத்தான்!

ஆக, நாங்கள் எல்லாருக்கும் சேர்த்துச் சிரித்துவிட்டு வீட்டுக்குள் பூனைபோல் அடி எடுத்து வைத்து நுழைந்துபார்த்தபோது அந்தப் பாரியான உடம்புள்ள விருந்தாளியை காணவில்லை. அந்த முக்காலியையும் காணவில்லை. 'அதை அவர் கையோடு கொண்டு போயிருப்பாரோ?' என்று என் தங்கை என்னிடம் கேட்டாள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே, எங்கள் வீட்டில் எப்படியாவது ஒரு நாற்காலி செய்துவிடுவது என்ற முடிவுஎடுக்கப்பட்டது. இந்த நாற்காலி செய்வதில் ஒரு நடைமுறைக் கஷ்டம் என்ன என்றால், முதலில் பார்வைக்கு எங்கள்ஊரில் ஒரு நாற்காலி கூடக் கிடையாது; அதோடு நாற்காலி செய்யத் தெரிந்த தச்சனும் இல்லை.

'நகரத்தில் செய்து விற்கும் நாற்காலியை வாங்கிக்கொண்டு வந்துவிட்டால் போச்சு' என்று எங்கள் பெத்தண்ணா ஒருயோசனையை முன் வைத்தான். அது உறுதியாக இராது என்று நிராகரித்துவிட்டார் எங்கள் அப்பா.

பக்கத்தில் ஒரு ஊரில் கெட்டிக்காரத் தச்சன் ஒருவன் இருப்பதாகவும் அவன் செய்யாத நாற்காலிகளே கிடையாதுஎன்றும், கவர்னரே வந்து அவன் செய்த நாற்காலிகளைப் பார்த்து மெச்சி இருக்கிறார் என்றும் எங்கள் அத்தைசொன்னாள்.

அத்தை சொன்னதிலுள்ள இரண்டாவது வாக்கியத்தைக் கேட்டதும் அம்மா அவளை, 'ஆமா, இவ ரொம்பக் கண்டா'என்கிற மாதிரிப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அப்பா வேலையாளைக் கூப்பிட்டு, அந்தத் தச்சனுடைய ஊருக்கு அவனை அனுப்பிவிட்டு எங்களோடு வந்துஉட்கார்ந்தார். இப்போது, நாற்காலியை எந்த மரத்தில் செய்யலாம் என்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது.

"தேக்கு மரத்தில் தான் செய்ய வேண்டும். அதுதான் தூக்க வைக்க லேசாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும்இருக்கும்" என்றாள் பாட்டி, தன்னுடைய நீட்டிய கால்களைத் தடவி விட்டுக் கொண்டே. (பாட்டிக்குத் தன்னுடையகால்களின் மீது மிகுந்த பிரியம். சதா அவற்றைத் தடவிவிட்டுக் கொண்டே இருப்பாள்!)

இந்தச் சமயத்தில் எங்கள் தாய் மாமனார் எங்கள் வீட்டுக்குள் வந்தார். எங்கள் பெத்தண்ணா ஓடிபோய் அந்தமுக்காலியைத் தூக்கிக்கொண்டு வந்தான். சிறிதுநேரம் வீடே கொல்லென்று சிரித்து ஓய்ந்தது.

மாமனார் எங்கள் வீட்டுக்கு வந்தால் அவருக்கென்று உட்காரு வதற்கு அவரே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துவைத்திருக்கிறார். தலை போனாலும் அந்த இடத்தில்தான் அவர் உட்காருவார். பட்டக சாலையின் தெற்குஓரத்திலுள்ள சுவரை ஒட்டியுள்ள ஒரு தூணில் சாய்ந்துதான் உட்காருவார். உட்கார்ந்ததும் முதல் காரியமாகத் தம்குடுமியை அவிழ்த்து ஒருதரம் தட்டித் தலையைச் சொறிந்து கொடுத்துத் திரும்பவும் குடுமியை இறுக்கிக்கட்டிக்கொண்டு விடுவார். இது அவர் தவறாமல் செய்கிற காரியம். இப்படிச் செய்து விட்டு அவர் தம்மையொட்டியுள்ளதரையைச் சுற்றிலும் பார்ப் பார். "தலையிலிருந்து துட்டு ஒன்றும் கிழே விழுந்ததாகத் தெரிய வில்லை" என்று அண்ணாஅவரைப் பார்த்து எக்கண்டமாகச் சொல்லிச் சிரிப்பான்.

அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் இப்படிக் காகித பாணங்களினால் துளைத்தெடுக்கப்படுவார்! 'சம்பந்திக்காரர்கள்; நீங்கள் பார்த்து என்னைக் கேலி செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்' என்கிற மாதிரிதிறக்காமல் கல்லுப்பிள்ளையார் மாதிரி அவர் பாட்டுக்கு உட்கார்ந்து புன்னகையோடு இருப்பார். எங்களுடைய ஏடாகிப்பேச்சுக்களின் காரம் அதிகமாகும்போது மட்டும் அம்மா எங்களைப் பார்த்து ஒரு பொய் அதட்டுப் போடு வாள். அந்தஅதட்டிடு வாக்கியத்தின் கடைசி வார்த்தை "கழுதைகளா" என்று முடியும்.

மாமனார் வந்து உட்கார்ந்ததும், அம்மா எழுந்திருந்து அடுப்படிக்கு அவசரமாய்ப் போனாள். அவளைத் தொடர்ந்துஆட்டுக்குட்டியைப் போல் அப்பாவும் பின்னால் போனார்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஆளோடி வழியாக அம்மா கையில் வெள்ளித் தம்ளரில் காயமிட்ட மோரைஎடுத்துக்கொண்டு நடந்து வர, அம்மாவுக்குப் பின்னால் அப்பா அவளுக்குத் தெரியாமல் எங்களுக்கு மட்டும் தெரியும்படிவலிப்புக் காட்டிக்கொண்டே அவள் நடந்துவருகிற மாதிரியே வெறுங்கையைத் தம்ளர் ஏந்துகிற மாதிரிபிடித்துக்கொண்டு நடந்து வந்தார்! அவர் அப்படி நடந்து வந்தது, 'அவா அண்ணா வந்திருக்கானாம்; ரொம்ப அக்கறையாமோர் கொண்டுபோய்க் கொடுக்கிறதைப் பாரு' என்று சொல்லு கிறது மாதிரி இருந்தது.

மோரும் பெருங்காயத்தின் மணமும், நாங்களும் இப்பொழுதே மோர் சாப்பிடணும் போல் இருந்தது.

மாமனார் பெரும்பாலும் எங்கள் வீட்டுக்கு வருகிறது மோர் சாப்பிடத்தான் என்று நினைப்போம். அந்தப் பசுமாட்டின்மோர் அவ்வளவு திவ்வியமாய் இருக்கும். அதோடு எங்கள் மாமனார் எங்கள் ஊரிலேயே பெரிய கஞ்சாம்பத்தி.அதாவது, ஈயாத லோபி என்று நினைப்பு எங்களுக்கு.

இந்தப் பசுவை அவர் தம்முடைய தங்கைக்காகக் கன்னாவரம் போய்த் தாமே நேராக வாங்கிக்கொண்டு வந்தார். இந்தக்காராம்பசுவின் கன்றுக்குட்டியின் பேரில் என் தம்பிக்கும் குட்டித் தங்கைக்கும் தணியாத ஆசை. வீட்டைவிட்டுப்போகும்போதும் வீட்டுக்குள் வரும்போதும் மாமனார் பசுவை ஒரு சுற்றிச் சுற்றி வந்து அதைத் தடவிக்கொடுத்து (தன்கண்ணே எங்கே பட்டு விடுமோ என்ற பயம்!) இரண்டு வார்த்தை சிக்கனமாகப் புகழ்ந்து விட்டுத்தான் போவார். 'பால்வற்றியதும் பசுவை அவர் தம்மு டைய வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவார். கன்றுக்குட்டியும் பசுவோடு போய்விடும்'என்ற பெரிய பயம் என் சிறிய உடன் பிறப்புகளுக்கு.

பின்னால் ஏற்படப் போகிற இந்தப் பிரிவு அவர்களுக்குக் கன்றுக்குட்டியின் மெல் பிரீதியையும் மாமனாரின் பேரில்அதிகமான கசப்பையும் உண்டுபண்ணி விட்டது. அவர் ருசித்து மோரைச் சாப்பிடும்போது இந்தச் சின்னஞ்சிறுசுகள்தங்களுடைய பார்வை யாலேயே அவரைக் குத்துவார்கள்; கிள்ளுவார்கள்!

நாற்காலி விவாதத்தில் மாமனாரும் அக்கறை காட்டினார். தமக்கும் ஒரு நாற்காலி செய்ய வேண்டுமென்று பிரியம்இருப்பதாகத் தெரிவித்தார். எங்களுக்கும் ஒரு துணை கிடைத்தது மாதிரி ஆயிற்று.

வேப்ப மரத்தில் செய்வது நல்லது என்றும், அதில் உட்கார்ந்தால் உடம்புக்கு குளிர்ச்சி என்றும், மூலவியாதி கிட்டநாடாது என்றும் மாமனார் சொன்னார். வேப்பமரத்தைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் அப்பா மாமனாரை ஆச்சரியத்தோடுகூடிய திருட்டு முழியால் கவனித்தார். எங்கள் மந்தைப் புஞ்சையில் நீண்ட நாள் நின்று வைரம் பாய்ந்த ஒருவேப்பமரத்தை வெட்டி ஆறப்போட வேண்டுமென்று முந்தாநாள் தான் எங்கள் பண்ணைக்காரனிடம் அப்பாசொல்லிக்கொண்டு இருந்தார்.

பெத்தண்ணா சொன்னான், "பூவரசங் கட்டையில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும். அது கண் இறுக்கமுள்ள மரம்.நுண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்; உறுதியுங்கூட" என்றhன்

அக்கா சொன்னாள், "இதுகளெல்லாம் வெளிர் நிறத்திலுள்ள வைகள். பார்க்கவே சகிக்காது. கொஞ்சநாள் போனால்இதுகள் மேல்; நமக்கு ஒரு வெறுப்பே உண்டாகிவிடும். நான் சொல்லு கிறேன், செங்கரும்பு நிறத்திலோ அல்லதுஎள்ளுப் பிண்ணாக்கு மாதிரி கறுப்பு நிறத்திலோ இருக்கிற மரத்தில்தான் செய்வது நல்லது; அப்புறம் உங்கள் இஷடம்."பளிச்சென்று எங்கள் கண்களுக்கு முன்னால் கண்ணாடி போல் மின்னும் பளபளப்பான கறுப்பு நிறத்தில் கடைந்தெடுத்தமுன்னத்தங் கால்களுடனும், சாய்வுக்கு ஏற்றபடி வளைந்த, சோம்பல் முறிப்பது போலுள்ள பின்னத்தங் கால்களுடனும்ஒரு சுகாசனம் தோன்றி மறைந்தது.

எல்லாருக்குமே அவள் சொன்னது சரி என்று பட்டது. ஆக எங்களுக்கு ஒன்றும், எங்கள் மாமனார் வீட்டுக்கு ஒன்றுமாகஇரண்டு நாற்காலிகள் செய்ய உடனே ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டு நாற்காலிகளும் எங்கள் வீட்டில் வந்து இறங்கியபோது அதில் எந்த நாற்காலியை வைத்துக்கொண்டு எந்தநாற்காலியை மாமனார் வீட்டுக்குக் கொடுத்தனுப்புவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒன்றைப் பார்த்தால்மற்றதைப் பார்க்க வேண் டாம். அப்படி ராமர் லெச்சுமணர் மாதிரி இருந்தது. ஒன்றை வைத்துக்கொண்டு மாமனார்வீட்டுக்கு ஒன்றைக் கொடுத்தனுப் பினோம். கொடுத்தனுப்பியதுதான் நல்ல நாற்காலியோ என்று ஒரு சந்தேகம்.

ஒவ்வொருத்தராய் உட்கார்ந்து பார்த்தோம். எழுந்திருக்க மனசே இல்லை. அடுத்தவர்களும் உட்கார்ந்துபார்க்கவேண்டுமே என்பதற் காக எழுந்திருக்க வேண்டியிருந்தது. பெத்தண்ணா உட்கார்ந்து பார்த்தான். ஆ…ஹா என்றுரசித்துச் சொன்னான். இரண்டு கைகளா லும் நாற்காலியின் கைகளைத் தேய்த்தான். சப்பணம் போட்டு உட்கார்ந்துபார்த்தான். "இதுக்கு ஒரு உறை தைத்துப் போட்டு விட வேணும். இல்லையென்றால் அழுக்காகிவிடும்" என்று அக்காசொன்னாள்.

குட்டித் தங்கைக்கும் தம்பிப் பயலுக்கும் அடிக்கடி சண்டை வரும், "நீ அப்போப் பிடிச்சி உட்கார்ந்துகிட்டே இருக்கியே?எழுந்திருடா, நான் உக்காரணும் இப்போ" என்று அவனைப் பார்த்துக் கத்துவாள். "ஐயோ, இப்பத்தானே உட்கார்ந்தேன்;பாரம்மா இவளை" என்று சொல்லுவான், அழ ஆரம்பிக்கப் போகும் முகத்தைப் போல் வைத்துக்கொண்டு.

தீ மாதிரி பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் பெருங்கூட்டமாக வந்து வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் தடவிப் பார்த்தார்கள். சிலர் உட்கார்ந்தே பார்த்தார்கள். ஒருகிழவனார் வந்து நாற்காலியைத் தூக்கிப் பார்த்தார். "நல்ல கனம், உறுதியாகச் செய்திருக்கிறான்" என்று தச்சனைப்பாராட்டினார்.

கொஞ்ச நாள் ஆயிற்று.

ஒரு நாள் ராத்திரி ரெண்டு மணி இருக்கும். யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். உள் திண்ணையில் படுத்திருந்தபெத்தண்ணா போய் கதவைத் திறந்தான். ஊருக்குள் யாரோ ஒரு முக்கியமான பிரமுகர் இப்பொழுதுதான் இறந்துபோய்விட்டாரென்றும் நாற்காலி வேண்டுமென்றும் கேட்டு எடுத்துக்கொண்டு போனார்கள்.

இறந்துபோன ஆசாமி எங்களுக்கும் வேண்டியவர் ஆனதால் நாங்கள் யாவரும் குடும்பத்தோடு போய் துட்டியில்கலந்துகொண் டோம். துட்டி வீட்டில் போய் பார்த்தால்...? எங்கள் வீட்டு நாற்காலியில் தான் இறந்துபோன அந்தப்'பிரமுகரை' உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.

இதற்குமுன் எங்கள் ஊரில் இறந்து போனவர்களைத் தரையில் தான் உட்கார்த்தி வைப்பார்கள். உரலைப் படுக்கவைத்துஅது உருண்டுவிடாமல் அண்டை கொடுத்து, ஒரு கோணிச் சாக்கில் வரகு வைக்கோலைத் திணித்து, அதைப்பாட்டுவசத்தில் உரலின் மேல் சாத்தி, அந்தச் சாய்மான திண்டுவில் இறந்துபோனவரை, சாய்ந்துஉட்கார்ந்திருப்பதுபோல் வைப்பார்கள்.

இந்த நாற்காலியில் உட்காரவைக்கும் புதுமோஸ்தரை எங்கள் ஊர்க்காரர்கள் எந்த ஊரில் போய் பார்த்துவிட்டுவந்தார்களோ? எங்கள் வீட்டு நாற்காலிக்குப் பிடித்தது வினை. (தரை டிக்கெட்டிலிருந்து நாற்காலிக்கு வந்துவிட்டார்கள்)

அந்தவீட்டு 'விசேஷம்' முடிந்து நாற்காலியை எங்கள் வீட்டு முன்தொழுவில் கொண்டுவந்து போட்டுவிட்டுபோனார்கள். அந்த நாற்காலியைப் பார்க்கவே எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயப்பட்டன. வேலைக்காரனை கூப்பிட்டுஅதைக் கிணற்றடிக்குக் கொண்டுபோய் வைக்கோலால் தேய்த்துத் தேய்த்துப் பெரிய வாளிக்கு ஒரு பதினைந்து வாளிதண்ணீர்விட்டுக் கழுவி, திரும்பவும் கொண்டுவந்து முன் தொழுவத்தில் போட்டோம். பலநாள் ஆகியும் அதில் உட்காரஒருவருக்கும் தைரியம் இல்லை. அதை எப்படித் திரும்பவும் பழக்கத்துக்குக் கொண்டு வருவது என்றும் தெரியவில்லை.

ஒரு நாள் நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தார். அந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு வந்துஅவருக்குப் போடச் சொன்னோம். அவரோ, "பரவாயில்லை, நான் சும்மா இப்படி உட்கார்ந்து கொள்கிறேன்" என்றுஜமக்காளத்தைப் பார்த்துப் போனார். எங்களுக்கு ஒரே பயம், அவர் எங்கே கீழே உட்கார்ந்து விடுவாரோ என்று.குடும்பத்தோடு அவரை வற்புறுத்தி நாற்காலி யில் உட்கார வைத்தோம். அவர் உட்கார்ந்த உடனே சின்னத் தம்பியும்குட்டித் தங்கையும் புழக்கடைத் தோட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். மத்தியில் வந்து நாற்காலியில் உட்கார்ந்தவருக்குஎன்ன ஆச்சு என்று எட்டியும் பார்த்துக் கொள்வார்கள்!

மறுநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு உள்ளூர்க் கிழவனார் தற்செயலாகவே வந்து நாற்காலியில் உட்கார்ந்துஎங்களுக்கு மேலும் ஆறுதல் தந்தார். ('இப்போதே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துக் கொள்கிறார்!' என்றுபெத்தண்ணா என் காதில் மட்டும் படும்படியாகச் சொன்னான்.)

இப்படியாக, அந்த நாற்காலியைப் 'பழக்கி'னோம். முதலில் வீட்டிலுள்ள பெரியவர்கள் உட்கார்ந்தோம். குழந்தைகளுக்குஇன்னும் பயம் தெளியவில்லை. "கொஞ்சம் உட்காரேண்டா நீ முதலில்" என்று கெஞ்சுவாள், குட்டித் தங்கை தம்பிப்பயலைப் பார்த்து. "ஏன் நீ உட்காருவதுதானே?" என்பான் அவன் வெடுக்கென்று.

எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பக்கத்துத் தெரு சுகந்தி தன்னுடைய ஒரு வயசுத் தம்பிப் பாப்பாவைக் கொண்டுவந்துஉட்காரவைத்தாள், அந்த நாற்காலியில். அதிலிருந்துதான் எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பயமில்லாமல் உட்காரஆரம்பித்தார்கள்.

திரும்பவும் ஒரு நாள் ராத்திரி, யாரோ இறந்துபோய்விட்டார்கள் என்று நாற்காலியை தூக்கிக்கொண்டுபோய்விட்டார்கள் இப்படி அடிக்கடி நடந்தது.

நாற்காலியை வருத்தத்தோடுதான் கொடுத்தனுப்புவோம். வந்து கேட்கும் இழவு வீட்டுக்காரர்கள் எங்கள் துக்கத்தைவேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். தங்களவர்கள் இறந்து போன செய்தியைக் கேட்டுத்தான் இவர்கள்வருத்தம் அடைகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள்!

தூக்கம் கலைந்த எரிச்சல் வேறு. "செத்துத் தொலைகிறவர்கள் ஏன்தான் இப்படி அகாலத்தில் சாகிறார்களோதெரியவில்லை?" என்று அக்கா ஒருநாள் சொன்னாள்.

"நல்ல நாற்காலி செய்தோமடா நாம்; செத்துப்போன ஊர்க் காரன்கள் உட்காருவதற்காக, சே!" என்றுஅலுத்துக்கொண்டான் அண்ணன்.

"நாற்காலி செய்யக் கொடுத்த நேரப் பலன்" என்றாள் அத்தை.

பெத்தண்ணா ஒரு நாள் ஒரு யோசனை செய்தான். அதை நாங்கள் இருவர் மட்டிலும் தனியாக வைத்துக் கொண்டோம்.

ஒரு நாள் அம்மா என்னை ஏதோ காரியமாக மாமனாரின் வீட்டுக்குப் போய்வரும்படி சொன்னாள்.

நான் அவருடைய வீட்டுக்குள் நுழைந்தபோது மாமனார் நாற் காலியில் அமர்க்களமாய் உட்கார்ந்து வெற்றிலைபோட்டுக் கொண் டிருந்தார். அவர் வெற்றிலை போடுவதைப் பார்த்துக்கொண் டிருப்பதே சுவாராஸ்யமானபொழுதுபோக்கு. தினமும் தேய்த்துத் துடைத்த தங்க நிறத்தில் பளபளவென்றிருக்கும் சாண் அகலம், முழ நீளம், நாலுவிரல் உயரம் கொண்ட வெற்றிலைச் செல்லத்தை, 'நோகுமோ நோகாதோ' என்று அவ்வளவு மெல்லப் பக்குவ மாகத்திறந்து, பூஜைப் பெட்டியிலிருந்து சாமான்களை எடுத்து வைக்கிற பதனத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வெளியில்வைப்பார். வெற்றிலையை நன்றாகத் துடைப்பாரே தவிர, காம்பு களைக் கிள்ளும் வழக்கம் அவரிடம் கிடையாது. (அவ்வளவு சிக்கனம்!) சில சமயம் மொறசல் வெற்றிலை அகப்பட்டுவிட்டால் மட்டும் இலையின் முதுகிலுள்ளநரம்புகளை உரிப்பார். அப்பொழுது நமக்கு, "முத்தப்பனைப் பிடிச்சு முதுகுத்தோலை உறிச்சி பச்சை வெண்ணையைத்தடவி...." என்ற வெற்றிலையைப் பற்றிய அழிப் பாங்கதைப் பாடல் ஞாபகத்துக்கு வரும்.

களிப்பாக்கை எடுத்து முதலில் முகர்ந்து பார்ப்பார். அப்படி முகர்ந்து பார்த்துவிட்டால் 'சொக்கு' ஏற்படாதாம். அடுத்துஅந்தப் பாக்கை ஊதுவார்; அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்குப் புழுக்கள் போகவேண்டாமா அதற்காக,ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் இந்த முகர்ந்து பார்த்தலும் ஊதலும் வரவர வேகமாகி ஒரு நாலைந்து தடவைமூக்குக்கும் வாய்க்குமாக, கை மேலும் கீழும் உம் உஷ், உம் உஷ் என்ற சத்தத்துடன் சுத்தமாகி டபக்கென்று வாய்க்குள்சென்றுவிடும்.

ஒருவர் உபயோகிக்கும் அவருடைய சுண்ணாம்பு டப்பியைப் பார்த்தாலே அவருடைய சுத்தத்தைப் பற்றித்தெரிந்துவிடும். மாமனார் இதிலெல்லாம் மன்னன். விரலில் மிஞ்சிய சுண்ணாம்பைக் கூட வீணாக மற்றப்பொருள்களின் மேல் தடவமாட்டார். அவருடைய சுண்ணாம்பு டப்பியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.பதினைந்து வருஷத்துக்கு முன் வாங்கிய எவரெடி டார்ச் லைட் இன்னும் புத்தம் புதுசாக இப்போதுதான் கடையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்ததோ என்று நினைக்கும்படியாக உபயோகத்தில் இருக்கிறது அவரிடம். அதோடு சேர்த்துவாங்கிய எங்கள் வீட்டு டார்ச் லைட் சொட்டு விழுந்து நெளிசலாகி மஞ்சள் கலரில் பார்க்கப் பரிதாபமாக, சாகப் போகும்நீண்ட நாள் நோயாளி யைப் போல் காட்சியளிக்கிறது.

நாற்காலியை அவர் தவிர அந்த வீட்டில் யாரும் உபயோகிக்கக் கூடாது. காலையில் எழுந்திருந்ததும் முதல் காரியமாகஅதைத் துடைத்து வைப்பார். ஓர் இடத்திலிருந்து அதை இன்னோர் இடத் துக்குத் தாமே மெதுவாக எடுத்துக்கொண்டுபோய்ச் சத்தமில்லாமல் தண்ணீர் நிறைந்த மண்பானையை இறக்கி வைப்பது போல் அவ்வளவு மெதுவாக வைப்பார்.

மாமனார் என்னைக் கண்டதும், "வரவேணும் மாப்பிள்ளைவாள்" என்று கூறி வரவேற்றார். "கொஞ்சம் வெற்றிலைபோடலாமோ?" என்று என்னைக் கேட்டுவிட்டுப் பதிலும் அவரே சொன்னார்: "படிக்கிற பிள்ளை வெற்றிலை போட்டால்கோழி முட்டும்!"

அம்மா சொல்லியனுப்பிய தகவலை அவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

ராத்திரி அகாலத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வீட்டில் எல்லாம் அயர்ந்த தூக்கம். நான் பெத்தண்ணாவைஎழுப்பினேன்.

நாற்காலிக்காக வந்த ஒரு இழவு வீட்டுக்காரர்கள் வெளியில் நின்றுக்கொண்டிருந்தார்கள். பெத்தண்ணா அவர்களைத்தெருப்பக்கம் அழைத்துக்கொண்டு போனான். நானும் போனேன். வந்த விஷ யத்தை அவர்கள் சொல்லி முடித்ததும்பெத்தண்ணா அவர்களிடம் நிதானமாகப் பதில் சொன்னான்.

"நாற்காலிதானே? அது எங்கள் மாமனார் வீட்டில் இருக்கிறது அங்கே போய்க் கேளுங்கள், தருவார். நாங்கள்சொன்னதாகச் சொல்ல வேண்டாம். இப்படிக் காரியங்களுக்கு இல்லை என்று சொல்ல முடியுமா? அங்கேகிடைக்காவிட்டால் நேரே இங்கே வாருங்கள்; அப்புறம் பார்த்துக்கொள்வோம்" என்று பேசி அவர் களை அனுப்பிவிட்டு,வீட்டுக்குள் வந்து இருவரும் சப்தமில்லாமல் சிரித்தோம்.

அப்பா தூக்கச் சடைவோடு படுக்கையில் புரண்டுகொண்டே, " யார் வந்தது?" என்று கேட்டார்.

"வேலை என்ன? பிணையலுக்கு மாடுகள் வேணுமாம்" என்றான் பெத்தண்ணா.

துப்பட்டியை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டார் அப்பா.

இப்பொழுது மாமனார் காட்டில் பெய்து கொண்டிருந்தது மழை!

ரொம்ப நாள் கழித்து, நான் மாமனாரின் வீட்டுக்கு ஒரு நாள் போனபோது அவர் தரையில் உட்கார்ந்து வெற்றிலைபோட்டுக் கொண்டிருந்தார். வழக்கமான சிரிப்புடனும் பேச்சுடனும் என்னை வரவேற்றார்.

"என்ன இப்படிக் கீழே? நாற்காலி எங்கே?" சுற்று முற்றும் கவனித்தேன். வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத்தடவிக் கொண்டே என்னை ஆழ்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். பின்பு அமைதியாக, "அந்தக் காரியத்துக்கே அந்தநாற்காலியை வைத்துக் கொள்ளும்படி நான் கொடுத்துவிட்டேன். அதுக்கும் ஒன்று வேண்டியதுதானே?" என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பி வரும்போது இந்தச் செய்தியைச் சொல்லப்பெத்தண்ணா விடம் வேகமாக விரைந்தேன். ஆனால் வரவர என்னுடைய வேகம் குறைந்து தன் நடையாயிற்று.

*****

நன்றி - மதுரைத்திட்டம்

Jun 1, 2012

ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா

சிங்களத் தீவினுக்கோர்

பாலம் அமைப்போம்

-மகாகவி

Welcome to delegates of Bharathi International

நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் sujatha_3 பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.

"தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..."

"இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?"

"பேரறிஞர் அண்ணாங்களா?"

"இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்று’ன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க"

"அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க, ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்"

டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக "வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்."

"எதுக்கு?" என்றார் டாக்டர்.

"அ. தெரியாத மாதிரி கேக்கறிங்க."

"உண்மையிலேயே தெரியாதுங்க"

"பாரதி பல்கலைக் கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்."

"ஓ. அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது."

"இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க"

"சேச்சே. அமைச்சருக்கு பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க"

"உங்களை விட்டாப் பொருத்தமா வேற யாருங்க...?"

"எதோ பார்க்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைங்க. அரசியல் வேற கலக்குது.." டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக..

"வள்ளுவர் சொல்லிக்காரு-

`மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`னு.

இப்ப யாருங்க பார்ப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில் தான் பாரதி சொல்லியிருக்காரு..."

ரிஸப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக் கொள்ளும்போது அந்தப் பெண், "ஸர் யூ ஹேவ் எ மெஸேஜ்" என்று புறாக் கூட்டிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள். "செல்வரத்னம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்" நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்னம்? புரியவில்லை. "தாங்க்ஸ்" என்று அவளைப் பார்த்தபோது "யூ ஆர் வெல்கம்" என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது.

கூடிப் பிரியாமலே - ஓரிராவெல்லாம் கொஞ்சிக் குலவியங்கே

ஆடி விளையாடியே - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை

நாடித் தழுவி...

"டாக்டர் வணக்கம்"

"ஓ. பெருமாள். வாங்க, எங்க இருக்கிங்க இப்ப?"

"உத்கல்ல. புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சுருக்காங்க..."

"உத்கல் எங்க இருக்குது?"

பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண் பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து `ஹலோ` என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்தி வைத்தார்.

"இது வந்து கத்தரினா. ரஷ்யாவில் இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி"

"ஆ. ஐ ஸீ" என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண் போல ஏராளமாக இருந்தாள். ஒல்லி இடையில்லை. ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.

"யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட்யூ?"

"நோ... ஐம் பிரிஸைடிங். மத்தியானம்... ஆஃப்டர்நூன். யூ நோ டாமில்?"

"எஸ். காண்ட் ஸ்பீக்."

"இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாடவிட்டாங்க தமிழங்கன்னு கேக்குது"

"அவர் காலத்து தமிழங்க அவர் பெருமையை உணரலை.."

"டாக்டர்.. உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?"

"சேச்சே. இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா?"

"ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருநது எப்படியாவது ரீடரா கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா....? என்னுடைய பைல்ஸுக்கு ஒத்துக்கிடலை."

"பாக்கலாங்க. முதல்ல ஆகட்டும்" செல்வரத்னம்... எங்கேயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே. ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்து விட்டு டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.

மணிமேகலைக்குச் செய்தி சொல்லதான் வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே. அதற்குள் எத்தனை கோட்டைகள்.

மெஸ்ஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்தால் உள்ளே பேச்சுக் கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளேயிருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிபருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது "அவன் சர்வதேசக் கவிஞன். பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்.. என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிப் பாடினான் அவனன்றோ" என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயமில்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான். நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயமுள்ளவர்கள் யாரும் கிடையாது. `பாரதி கவிதைகளில் சமத்துவம்` என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல். மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம். முடிந்தால் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்து விடலாம்.

டாக்டர் லேசாக,

`காதல் செய்தும் பெறும்பல இன்பம்,

கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,

பூதலத்தினை ஆள்வதில் இன்பம்...`

என்று பாடிக் கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும் போது அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனைக் கவனித்தார்.

"வணக்கம் ஐயா"

"வணக்கம். நீங்க"

இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

"கண்டு கன காலம்" என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.

எங்கோ பார்த்திருக்கிறோம்? மையமாக... "வாங்க. எப்ப வந்தீங்க?"

"இஞ்சாலையா?"

இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.

"நீங்கதானா செல்வரத்னம்?"

"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்." இப்போது முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. இவன் வீட்டில் யாழ்பாண உலகத் தமிழ் மகாநாட்டின் போது டாக்டர் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்.

"எங்க வந்தீங்க?"

"சும்மாத்தானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்." மனசுக்குள் மொழிபெயர்த்துக் கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும் "வாங்க வாங்க. உள்ள வாங்க." என்றார்.

அறைக்குள் ஆஷ்-டிரே தேடினான். டாக்டர் அவனை நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.

"விழாவில எண்ட பேச்சும் உண்டு," என்றான்.

"அப்படியா. சந்தோஷம், விழாவில கலந்துக்கறதுக்காக வந்திங்களா சிலோன்ல இருந்து?"

"ஆமாம்."

"ரொம்ப பொருத்தம். சிங்களத் தீவினிக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப.."

இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடு கொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் `நெஞ்சில் உரமுமின்றி` பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன...

"உக்காருங்க. ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?"

"ஊர்ல யாரும் இல்லிங்க"

"அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?"

"தங்கச்சி இல்லைங்க," என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.

"என்ன சொல்றீங்க?"

"எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க"

"அடப்பாவமே. எப்ப? எப்படி?"

"ஆகஸ்ட் கலகத்திலதாங்க"

"ஐயையோ, எப்படி இறந்து போனாங்க?"

"தெருவில வெச்சு... வேண்டாங்க, விவரம் வேண்டாங்க. நான் ஒருத்தன் தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்."

டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,

"ஏதாவது சாப்பிடறீங்களா?"

"கோப்பி" என்றான்.

"இத்தனை நடந்திருக்குன்னு நினைக்கவே இல்லை, அதும் நமக்குத் தெரிஞ்சவங்க, நாம பழகினவங்க இதில பலியாகி இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது."

"அதைப் பத்தி இப்ப பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக,"

"சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்தில என்ன உதவி தேவையா இருக்குது?"

"நிகழ்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?"

"அப்படியா?"

"அருமையான புத்தகங்கள். பாரதியாரே சொந்த செலவில் பதிப்பித்த `ஸ்வதேச கீதங்கள்` 1908-லேயோ என்னவோ வெளியிட்டது. இதன் விலை ரெண்டணா-ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி. லட்சம் புத்தகங் களானா எத்தனை தமிழ் வார்த்தைகள். எண்ணிப்பாருங்க. அத்தனையும் தெருவில எரிச்சாங்க."

"அடடா"

"அதை நான் சொல்ல விரும்பறேன். அப்பறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினைஞ்சு நாளா தமிழ்நாட்டில பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்."

"எங்க சொல்ல விரும்பறீங்க?"

"இன்றைய கூட்டத்திலதான்"

"இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே"

"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?"

"கட்டாயம். கட்டாயம்"

"அதைத்தாங்க சொல்லப் போறேன்."

"அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே.."

"இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்திய தமிழறிஞர்கள் எல்லாரும் வர இந்த மேடையிலே எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கேன்."

டாக்டர் சற்றே கவலையுடன் "குறிப்பா என்ன சொல்லப் போறீங்க?" என்றார்.

"சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்."

"புரியலீங்க"

"ஐயா. நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க. அவங்களை எப்படி றீட் (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறத்துக்கு.. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ? டிரான்ஸிஸ்டர் வெச்சிருக்கியா? டேப்ரிக்கார்டர் கொண்டு வந்திருக்கியா?

தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்தில கலைஞ்சு போயிருதுங்க. அந்தக் காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை. சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்தில் க்வாரண்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக் காங்க. இரண்டு ரூமுக்கு பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுன்னு பேரு. எல்லாம் அப்பிளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சமில்லாம வாராது. இவங்க உடமைகளை கொண்டு வந்த அற்பப் பணத் தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும், கிடைக்கிறது நாப்ப த்தஞ்சு பைசாதான். எல்லாரும் திரும்பப் போயிரலாம். அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்ப சேர்த்துக்க மாட்டாங் க. போக முடியாது.

1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க. திடீர்னு `இது உன் தாயகம் இல்லை. தமிழ்நாட்டுக்குப் போன்னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டுக் கப்பலில் அனுப்பிச்சுட்டா ங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை இல்லையா?"

"எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்திதான் எனக்கு..."

"வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல்வாதிவாதிங்ககிட்டயா? ஏடிஎம்கே-காரங்க `இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூராவும் கதவடைப்பு செஞ்சோமே` ங்கறாங்க, டிஎம்கே `இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே`ங்கறாங்க"

"இல்லை.. இதைத் தமிழ்ப் பத்திரிக்கைகளில ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க..."

"சொல்றேங்க. எல்லாப் பத்திரிகையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க - நாங்க அட்டைப் படமே கண்ணீர் த்துளியா ஒரு இஷ்யூலே போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்தில விகடன்லே வந்துருச்சேன்னாங்க. ராணில இதைப் பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதுகிட்டிருக் கமேன்னாங்க.."

"நீங்க என்ன எழுதறாதா சொன்னீங்க."

"அந்தப் புத்தகங்களை எரிச்சதைப் பற்றித்தாங்க. ஒரு லட்சம் புத்தகங்க. அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சு போய் ரா த்திரி பூரா வெளிச்சமா இருந்ததை. ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கன்னு.. ஆனா அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க.. அவங்க கலர் ட்ரான்பரன்ஸி இருந்தா கொடுங்க. அட்டையிலே போடுவேம்.. கொஞ்சம் ஹ்யூமன் இன்டரஸ்ட் இருக்கும்னாருங்க. அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பமில்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க. முதல்ல பக்கத்து வீட்டில சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க.. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தது. அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப் போயிருச்சுங்க. சந்துல வெச்சுப் பிடிச்சுத் தெருவில நடுத் தெருவில.. என் கண் முன்னாலலே.. கண் முன்னாலயே. .." அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.

"ரொம்ப பரிதாபங்க"

கொஞ்ச நேரம் அழுதுவிட்டு "எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பமில்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லேயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சமில்லை. ஆனா அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்பில இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க. " சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக் கொண்டு, "எனக்கு ஒரு நாட்டுக் குடிமகன்கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு பேரும் இந்தியாவில இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம், சக்கிலியங்களாம், இதையெல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?"

டாக்டர் மூக்கைச் சொறிந்து கொண்டார். "இவ்வளவு விவரமா சொல்ல வேண்டாங்க. ஏன்னா இது இலக்கியக் கூட்டம். இதில அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க..."

"அரசியல் இல்லைங்க. மனித உரிமைப் பிரச்சினை இல்லையா?

சொந்த சகோதரர்கள்

துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடீ – கிளியே

செம்மை மறந்தாரடீ

-ன்னு பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?"

"அதும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்.."

"எனக்கு இதை விட்டா வேறு வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்தில நடந்ததைச் சொன்னா கண்ணில ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப் போறதில்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்கும் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப் போறேன்."

"என்ன புத்தகம்?" என்றார் கவலையோடு.

"இந்த மாநாட்டு மலரை"

"எதுக்குங்க அதெல்லாம்...?"

"பாரதி சொன்னதை எதும் செய்யாம ஏர்கண்டிசன் ஓட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு பாரதி சொன்னதை நடைமுறையில செய்து காண்பிங்கன்னு சொல்லப் போறேன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலமில்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க. அப்பத்தான் பளிச்சுனு எல்லார் மனசிலையம் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்கு இல்ல கூட்டம்?" அவன் எழுந்து வணங்கி விட்டுச் சொன்றான் செல்வரத்தினம்.

டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது `செல்வரத்தினம், ஸ்ரீலங்கா` என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போலிருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். "பிப்பி கால்.. டாக்டர் மணிமேகலை"

பத்து நிமிஷத்தில் கால் வந்தது.

"மணி.. நான்தான்"

"என்ன, விசாரிச்சிங்களா? கிடைச்சிருச்சா?"

"ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரட்டேரியட்டிலேயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்."

"அப்ப இனிப்பு செய்துட வேண்டியதுதான். இந்தக் கணத்தில் உங்ககூட இருக்க..."

"மணி. ஒரு சின்ன சிக்கல்..."

"என்னது? அருணாசலம் மறுபடி பாயறாரா?"

"அதில்லை மணி, இன்னிக்கு கூட்டத்தில் அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்பாணத்தில உலகத் தமிழ் மகாநாட்டில சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்."

"பேசட்டுமே. உங்களுக்கென்ன?"

"அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்தில கலகத்தில ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்பில இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியா கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்."

"என்ன செய்யப் போறான்?"

"யாழ்ப்பாணத்தில் லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப் போறேங்கறான். கேக்கறத்துக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா கூட்டத்தில கலாட்டா ஆகி எங்கயாவது எனக்கு சந்தர்ப்பம் வரதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா அமைச்சர் வந்து..."

"த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்"

"எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க"

"என்ன. கேக்குதா?"

"கேக்குது, கேக்குது. இதப் பாருங்க, உங்க பேச்சை இன்னைக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்."

"எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே. தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?"

கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.

"என்ன செய்யச் சொல்றீங்க?"

"எப்படியாவது உங்க அண்ணன் கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு.."

"அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. வெச்சுருங்க"

"எப்படியாவது.."

"வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்."

"சரி மணிமேகலை"

"கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்ச மாதிரித்தான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சை கேட்டுட்டா போதும்னாரு.."

டெலிபோனை வைத்து விட்டு டாக்டர் சற்று திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள்.. இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவள் சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி

மாநிலம் காக்கும் மதியே சக்தி

தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி

சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி

இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப் புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு "எண்ணிய முடிதல் வேண்டும். நல்லதே எண்ணல் வேண்டும்..." என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்திருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன. ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, வரவேற்புரைஞர் "தலைவர் அவர்களே. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே.." என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்குமிங்கும் வணங்கிக் கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.

இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம். பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.

"முதற்கண் பிஜித் தீவிலிருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்." என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.

"ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் பெல்லோ டெலிகேட்ஸ். ஐம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐம் ஸாரி ஐம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில், பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி..."

டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசையில் ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த் தார்.

பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான். ஒரு மணிநேரத்தில் சாதித்து விட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.

"அடுத்து பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால் சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்."

தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது.

டாக்டர் இரா.நல்லுசாமி தன் தலைமையுரையின் போது "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல, மனப்பாலத்தை.." என்றார். அமைச்சர் தன் உரையில் அரசு புதிதாகத் துவக்கப் போகும் பாரதி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற செய்தியை அறிவித்தார்.

செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை.

*****

பாரதி நூற்றாண்டு நினைவுத் தொகுப்பாக, பாரதி பதிப்பக வெளியீட்டில் சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய "பாரதி சிறுகதைகள்" முதற்பதிப்பில் (1982) இருந்து.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்