Mar 23, 2017

அஞ்சலி - அசோகமித்திரன்

Mar 22, 2017

கம்மங்கதிர் - கோணங்கி

அவர்கள் விலகிச்சென்றார்கள். திரும்ப முடியவில்லை. நெருங்கி அழைத்து நேர் நின்று பார்க்க முடியாமல் போகும். சந்திக்க நேர்ந்தால் ஒவ்வொரு கணமும் கழுமரம்.

கடந்த மலைகளுக்கு அப்பால் மறைந்து போனார்கள்.திரும்பவும் பயணமான நிலப்பரப்பில் வெளியில் நிலைகுத்திய பார்வை, அசையும்வானத்தில் துழாவி களைப்புற்ற பயணம்,
மெலிந்துபோன சுவாதீனத்துடன் நடந்து போகிறான். முள் மரங்கள் உலர்ந்த பாதை, வண்டித்தடம் மனதை இழுத்து நகரும் தொலைவில் மேட்டுப் பரப்பில் ஒட்டு வீடுகள். தனி கடந்த மலைகளுக்கு அப்பால் மறைந்து போனார்கள். திரும்யில் பருந்து மேல் எழுந்து விரிந்து மிதக்கிறது. அண்ணாந்த அலகில் விழும் வெக்கையைப் பருகி அலையும். தனிமை குடித்த பருந்தின் மூச்சு. ஓடுகளுக்கு மேல் அதிக வெக்கை யான அலை, சன்னமாக கரைந்து நெளியும் உருவங்கள், ! வேணாத வெயிலில் குனிந்து கருப்பு நிலத்தை பிசைகிற வலி, எங்கும் சிறு நிழல் கூட இல்லை. குத்துச் செடியின் நிழலில் கட்டெறும்புக் கூட்டம் இறந்து மடிகிறது.

ஆதாரமில்லாத சமவெளியில் மயங்கும் உருவங்கள். நில விருவில் எதையோ தேடி அலையும் மெலிந்த மாடுகள்.மையில் உயரமான கருப்பு பனை, கூந்தல் அறுந்த பனை பாலையில் கதறும். காலத்தில் உருவான ஓடைகளும் சிற்றாறுகளும் மணலைச் சுமந்து கிடக்கிறது.

புலர்காலையில் மரநிழலில் ததும்பிவழியும் சொந்த கிராமத் தின் ஆகிருதி மங்கி மங்கி கரைகிறது. வீடுகளை விட்டு வெளி யேறிப் போன கருப்பு நிலவாசிகள் புகையும் நகரில் மடிந்து முடங்கிய தெரு.

ஊரில் எல்லையை நெருங்க முடியாமல் திரும்பி வருகிறான் தொலைவான கிராம வீடுகள்  க்ஷீணதசையடைந்துள்ளன. வீடுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட உழவுச் சின்னங்களின் பெரு மூச்சு இரவில் எழும். ஒருஇரவு ஊரில் தங்க முடியாது. பாவத்தில் திளைத்துப் புரண்ட சீவுநாற்று வேய்ந்தகூரைவீடு. கை தேர்ந்த கொத்தன் தட்டுத் தட்டாய் வேய்ந்த கூரையும் பளுப்படைந்து உதிர்ந்த வீட்டின் ஆத்மாவைப் போல் கருகி உலர்கிறது.

கிராமத்தின் உடல் ஒவ்வொரு உயிருக்கும் இரையாகி அரிக்கப்பட்ட மீதத்தில் சிறு துடிப்பு, ஆதாரம் எங்கிருக்கிற தென்று தெரியவில்லை. 

சூனியத்தில் அதிர்ந்து காயும் கருப்பு நிலம் பளுத்ததோடு மூடிக்கிடக்கும். யாரோடும் சேர்ந்து சாயல் காட்டாமல் தனிமைப் பெருநிலையில் ஆழ்ந்த கிராம மனிதர்கள்.

கடைசிமரம். கடைசி எறும்பு. கடைசிப்பருந்து இந்தக் கிராமத் தின் கடைசி மனிதனாய் நடந்து போகிறான். உயிரின் ஈரத்தில் நகர்ந்து செல்ல கணங்கள் தான் உள்ளது, அங்கங் கே உறைந்து மடிந்த கணங்கள். மாறிக்கொண்டேஇருக்கும். சூரியனோடு நேரடியாக எரியும் அழிவு. இறுதி மூச்சு வரை அழிவு. சரித்திரத்தின் வெறுமை கிராமத்தைச் செதுக்கும்.

உயிர்ப்பின் கணங்கள் சிறு அளவானாலும் சுவர்களில் அதிர்ந்து கொண்டே இருக்கும். பின் தொடரும். நிச்சய மின்மை என்ற ஒளியில் தெரியும் வீடு, நீர் ஓவியம் போல்காலத்தில் வெட்டப்பட்ட தெரு, எங்கெல்லாம் இருக்கிறார்கள். அவனால் சொல்ல முடியாது. அவர்கள் மறைந்த மணல் மேட்டில் உரசும் காற்றின் புலம்பல்.

அவன் ஜன்னலை எட்டாத கம்மங்கதிர் தொலைவில் எங்கோ அதன் இருப்பில் அசையும். பழமையான கிராமத்தெருவில் யாருக்கோ கல்யாணமாகிப் போன சித்துப்பெண் உடையம்மா. பாட்டியின் வேர்களின் ஆழத்தில் தோன்றிய பெண்ணுரு. முப்பது வருஷங்களுக்குப் பின்னால் பிள்ளை குட்டிகளோடு பஸ்டாண்டில் வைத்து சந்தித்து ஒரு துளி மெளனத்தால் அவனைக் கொன்ற உடையம்மா. வாடி உலர்ந்த கதிரில் கண் தொட மறுக்கிறது.

ஒப்பனைத் தெருவில் அவளை விலை கூறிச் சென்ற புகையடைந்த பாதை வெயிலோடு சேர்ந்து வருகிறார்கள். டவுன் பக்கம் "அவருக்கு எதிலோ வேலை என்றாள். 

உடையம்மாவைப் பார்த்து, அவள் மெளனம் ஒரு கணம் கருப்பாய் விழுந்தது. இடிவிழுந்து இன்னொரு கல்லானான்.

இதுவரையான நிச்சயங்கள் சருகாகி உதிர்ந்தன. உடையம்மா கிளம்பிப்போன விளாத்திகுளம் பஸ். பிள்ளை களோடு ஜன்னலில். அவனது வார்த்தைகள் உணர்வு செத்து விழுந்தன.

கண்களில் நகராமல் நின்ற உடையம்மாளின் பிராயகாலம், பாட்டியின் உடம்பில் ஒட்டிக் கிடந்த உயிர்கள். அந்தரங்கமான இருளில் அவள் இன்னும். மாறாத சிரிப்பில், கண்களில் விழுந்த கருவளையம் நீண்ட கால பிரிவை உணர்த்தியது. இற்று நரம்பான உடையம்மா. கையில் போட்டிருந்த பளுப்பு ரப்பர் வளையல். நரம்பு துருத்திய உலர்ந்தகைகள். எல்லாம் பிரமைகளா. கூட்டமாக பஸ்டாண்டில் குரல்களும் சப்தங்களும் பின்னணியாகக் கேட்கிறது.

கல்யாணம் விதி காலம் என்ற நியதிகளைக் கடந்து அழுத துளிகளில் அவன் பாட்டியின் மரணம். பாட்டியை நினைந்து அழுதார்கள்.

பெரிய முலைகளுடன் பாட்டியின் கருமையான உடல், பாட்டி யின் அந்தரங்கம் சொன்ன சேதிகளை உடையம்மா முணு முணுத்தாள். மொலிங்கை மூட்டில் நெத்துக் கூடான ஸ்திதி யில் இருந்தாள்.

உடையம்மா வேண்டாமென்று அவளை கட்டிக் கொள்ள மறுத்து எழுதியது. நிச்சயதார்த்தம் நடந்த அன்று ஏனோ" அழுதான். எல்லாரும் கட்டாயப் படுத்தியதாலா. அவள் மேல் உருத்து இல்லையா. ஏன் விலகினான் என்று அவனுக்கே தெரியவில்லை.

அவளோடு சேர்ந்த அனாதையென்று உணர நேர்ந்தது. நகரின் பஸ்டாண்டில் சம்பந்தமில்லாதவர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வு.

நூற்றி மூணாவது வயதில் செத்துப்போன பாட்டிக்காக அழுதார்கள். பிறந்த ஈரம் மாறாத கண்களுடன் அவன் உடையம்மா.
 
எங்கோ இருளில் அசையும் கம்மங்கதிர்கள். மங்கலான கிராமம். களிமண்ணைப் பிசைந்தெடுத்த உருவங்கள் பாட்டியின் முலைகளில் பொங்கிக் குலைத்த ஈரத்தில உலர்ந்து கொண்டிருக்கும். பதமிழந்து காயும் நூற்றுக்கணக் கான நத்தைக் கூடுகள். நிலங்களின் மீது விசில், அவளும் அவனும் நத்தைக் கூடுகளை சேகரித்து வந்தார்கள். அதை ஊதி உயிர் உண்டாக்க முயன்றபோது நத்தைகள் கொம்பு முளைத்து வெளிப்பட்டன. தீங்கருதுப் பருவத்தில் கம்மங் கதிர் மீது கொம்புகளை ஆட்டி ஆட்டி ஏறும் நத்தை கதிரின் உச்சி வரை ஸ்பரிசித்து கொம்புகளில் நடனமிடும்.

இன்று நத்தையாய் கூடுசுமந்து அலைகிறான். தீங்கதிரில் நாட்டியம். அந்தக் கதிரை நெருங்க, கானல் வெயிலெனினும் கருங்கோடையெனினும் கடும்பயணம் தொடருமோ.

*******

கொல்லனின் ஆறு பெண்மக்கள் தொகுப்பு


Mar 19, 2017

நிலை நிறுத்தல் - கி. ராஜநாராயணன்

"மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்.” எப்பேர்க் கொத்தி வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய முதலாளிக்கேண்ணு உள்ள கெட்டவார்த்தை வசவுகள் இருக்கு புழுத்தநாய் குறுக்கே போகாது அதைக் கேட்டால். அதோடு எத்தனையோதயா அவரிட்டெ அடியும் வாங்கி இருக்கான் இந்த மாசாணம் பயல்.

ஏசுங்க, எம்புட்டு வேனுமானாலும் ஏசுங்க என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான் அவன். -

இப்பொ அவன் வாங்கின வசவுக்கு ஒரு காரணமும் கிடையாது. "சுண்ணாம்பு எடுத்துட்டுவாலே மாசாணம்"ண்ணாரு எடுத்துட்டு வந்தான்.

ஒரு பிஞ்சு சுண்டைக்காய் அளவுதான் வெத்திலையில்
வைத்துக் கொண்டாரனும்; மஞ்சாடி கூடீரப்படாது, வசவுதான். 

சம்மந்தகார முதலாளி வந்திருந்தப்பொ, இவுக முதலாளிகிட்டே சொன்னாரு ஒருநா.

"வே மாப்ளே, மாசாணம் இங்கெனதான் நிக்கான் போலுக்கு! செமத்தியா வாங்கலாம் வேலை. சிறுசுலேர்ந்தே நல்.ல பாட்டாளி பாத்துக்கொ. இவங்க சாதியிலேருக்கிற சில்லரைத்தனம் புளுகுணித் தனம் கைநீளுறதெல்லாம் வள்ளிசாக் கிடையாது இவங்கிட்டெ, தப்பிப் பிறந்தவன் பாத்துக்கொ"

மாட்டை வச்சி வேலை வாங்கின சம்சாரி மாட்டைப் பாத்ததும் சொல்லிருவான்; வேலையாட்களை வச்சி வேலை வாங்குறவர்களுக்கு இதுகூடத் தெரியாட்டா எப்படி

பெரிய முதலாளிக்கும் தெரியும்; ஆனாலும், அவரிட்டெ ஒரு குணம் தன்னுட்டுள்ள வேலைக்காரங்களை பிறத்தியார்ட்டெ பாராட்டிச் சொல்லமாட்டாரு. காரணம், எவனும் களுதைப் பெரட்டிக் கூட்டிட்டிப் போயிருவாண்ணுதான்.

மாசாணமும் அவன் குடும்பத்தாரும் இந்த ஊருக்குப் பஞ்சம் பிழைக்க வந்த சமயத்தில், ஊர் மடத்துக்குப் பின்னுள்ள புளிய மரத் தடியில்தான் தங்கி இருந்தார்கள். வெளிக்குப் போக கம்மாக்கரைப் பக்கம் வந்த முதலாளி கண்ணுலெ தட்டுப்பட்டது மாசாணம்தான்.

பயலைக் கூர்ந்து பார்த்தார். அப்பொ, அவனுக்கென்ன பதிமூணு பதினாலு வயசிருக்கும். கருமெழுகு நிறத்தில் நல்ல எலும்புத் தாக்காய் அந்த அத்தப் பட்டினியிலும் ஆயாசம் தெரியாமல் ஈரம் உலராத கருப்பு உதடுகளுடன் திடமான மாட்டுப்பற்களுடன் மினுங்கிக் கொண்டிருந்தான். பெரிய முதலாளியைப் பார்த்ததும் அவனறியாம லேயே ஒரு மரியாதை பிறந்து எழுந்து ஒடுக்கமாய் நின்றான்.

கிட்டே கூப்பிட்டு நன்றாகப் பார்த்தார். பிறந்த மண் நல்ல செவக் காடு என்று கந்தல் உடுக்கை சொன்னது. அந்த ஆரோக்ய உடம்பி லிருந்து ஒரு மனித ஊத்தை நெடி

திரும்பவும் அவனை நன்றாகப் பார்த்தார்; மனசுக்குள் உடனே தேர்ந்தெடுத்துவிட்டார்.

"வாடேய், வா. நம்ம வீட்டுக்கு வந்து ஒருவாய் கஞ்சி சாப்டுட்டுப் போவெ"

விசுவாசமான கருப்பு நாய்க்குட்டிபோல அவருக்குப் பின்னால் மரியாதையோடு நடந்தான்.

சட்டியில் கம்மஞ்சோறு வைத்துக் கொடுத்தார்கள். சாப்பிடு வதையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். மீண்டும் சோறு வைக்க சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். உடனே பெரிய முதலாளிக்குச் சந்தோஷம் வந்துவிட்டது! இவன் வயித்துக்குச் சாப்பிடுகிறவன். நாக்குக்குச் சாப்பிடுகிறவனில்லை.

வேலை செய்து காய்காய்த்துப் போன கை பருப்புக் கறியை சிக்கனமாக சிந்தாமல் சிதறாமல் உணவின் அருமை தெரிந்து எடுக்கிறது சட்டியிலிருந்து. எடுக்கும் கவளத்திலிருந்தே வாய் அடம் தெரிந்தது. ஒரு பலாட்டியனாகப் பின்னால் விளங்குவான் வேலையில். அடடா ஒரு செல்வம் கிடைத்துவிட்டது நமக்கு: Cl

இப்படித்தான். வேலைக்குப் புதுசாக வந்த ஒருவனுக்கு அம்மா வட்டிலில் சோறு வைத்துக் கொடுத்தாள். முதல்த்தரம் சாப்பிட்டு முடித்த உடனேயே போதும் என்று அவன் சொன்னதைப் பார்த்ததும் கோவம் வந்துவிட்டது. "போடா வெளியே, ஒருப்பணிக்கழுதை நீ இப்படித் தின்னு வேலை செய்யவா? நீ வேலைக்கு இருந்தது போதும் போ” என்று விரட்டிவிட்டாள்.

பிடிக்கப் போகும் மாட்டுக்கு முன்னால் ஒரு தளுக்கு நாத்துக் கூளத்தை எடுத்துப் போடுவார்கள். எப்படி அது வாய் நிறைய்ய அள்ளி எடுத்துத் திங்கிறது என்று கவனிப்பார்கள். "சோத்தை அள்றதி லேந்தும் நாத்தை அள்றதிலேந்தும் தெரிஞ்சிரும் பூளாக்கு" என்பார் பெரிய நைனா.

அன்றிலிருந்து பெரியமுதலாளியின் குடும்பத்தில் ஒருவனாக' மாசாணம் ஆனான். வாரத்துக்கு ஒரு தலைமுழுக்கு உண்டு. வருசத் துக்கு ஒரு ஜோடி வேட்டி சாப்பாடு போக மாசம் மூணு ரூபாய் சம்பளம்.

அவன் வந்தது ஐப்பசி வருகிற சித்திரையிலிருந்துதான் கணக்கு. அடுத்த சித்திரை வரையிலும் இருந்தால்தான்; பாதியிலேயே அரைகுறையாக போனால் போனதுதான். சம்பளம் கிடையாது.

மாசாணத்தின் குடும்பத்தாரிடம், அவர்களுடைய பூர்வீகம், தொழில், சொந்தவீடு இருக்கா முதலிய எல்லாம் விசாரித்ததில் பூர்வீக வீடு மட்டும் உண்டு என்றும், அது ஒத்தியில் இருக்கிறது என்றும்,

பரம்பரையாக நல்ல பாட்டாளிகள் என்றும், உடம்புதான் அழுக்கு நாக்குசுத்தம் என்றும் ஆரம்பரை சாமி கொண்டாடிகளாக இருந்தார் களென்றும் கால வித்தியாசம் இப்படித்தங்களை வலசைக்காரர்களாக ஆக்கிவிட்டது என்றும் சொன்னார்கள்.

அக்கம்பக்கத்தில் ஆட்களைவிட்டு விசாரித்துப் பார்த்ததில் இதெல்லாம் நெசந்தான் என்று தெரிந்தது. 

"தினி நல்ல தீனிதான் திறுக்குகதான் பட்டு முடியலை" என்று தனது வீட்டாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னான் மாசாணம் பல சமயம் அங்கிருந்து ஒடிப் போய்விடுவோமா என்ற நினைப்பு வரும். சித்திரையை விட்டுறப்படாது' என்று பல்லைக் கடித்துக்கொண்டிருப்பான்.

வேலையின் சுமையையாவது தாங்கிக்கிடலாம், வசவுகளையும் சமயத்தில் விழும் அடிகளையும் எப்படித் தாங்கிக்கிடறது என்று திகைத்தான்.

ராத்திரி பதினோரு மணிக்கு வந்து படுக்கையில் விழுந்தால் அதி காலை'நாலுமணிக்குக் காலால் எத்தினால்தான் எழுந்திருக்க முடியும்.

வேலைக்குச் சேர்ந்த வருசத்தில் நடந்த ஊர் சாத்திரைப் பொங்கல் விழாவின்போது பகலில் வேலை செய்துவிட்டு ராத்திரியில் நடக்கும் மந்தை நாடகங்களை முன்னால் போய் உட்கார்ந்துகொண்டு பார்த்தான். இப்படி ஏழாம் நாள் நாடகம் முடிந்து தலைக்கோழி கப்பிட அவன் நடந்து வீட்டுக்கு வரும்போது தன்னுசார் இல்லை! எந்த இடத்தில் போய் விழுந்தால் நிம்மதியாகத் தூங்கலாம் என்று தள்ளாடிக்கொண்டே வந்து, ரெண்டு தானியப் பட்டரைகளுக்கு இடையில் சுவரை ஒட்டியுள்ள தூசி படர்ந்த இடத்தில் துண்டை விரித்ததுதான் அவனுக்குத் தெரியும்.

மாசாணத்துக்கு முழிப்புத்தட்டி எழுந்திருக்கும்போது தொழுக் கரையின் உச்சியிலிருந்த தலைக்கோழி கூப்பிட்டது. ஒண்னுக்கு இருந்துவிட்டு வெள்ளியை வானத்தில் தேடினான். ஒன்றும் நிதான்ப்படவில்லை. கூரை உச்சியில் திரும்பவும் ஒரு "கொக்கரக் கோ.கோ" கேட்டது. இரு இரு எண்ணைக்கு உன்னை வந்து வெருகு வேட்டு வைக்கப் போகுதோ தெரியலை சிரிப்போடு நினைத்துக் கொண்டு ஆட்டுரலில் நனையப்போட்ட பருத்திக்கொட்டையைக் கட கட கட என்று சத்தங் கேட்க வேகமாய் ஆட்ட ஆரம்பித்தான்.

வாசக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த பெரியமுதலாளி கவனித்துவிட்டார் இது யார் என்று, கோவமான கோவம் அவருக்கு. திண்ணையில்க் கிடந்த சாட்டைக் கம்பை எடுத்து சுளிரென்று ஒரு சுளுப்புச் சுளுப்பினார். "எங்கெலே போயிருந்தெ ஒரு வாரமா" 'என்னது, ஒரு வாரமாவா!'

"நா எங்கேயும் போகலையே முதலாளி: இங்கென தான் பட்டரைகளுக்கு இடுக்கிலெ படுத்துக்கிடந்தேன்"

"சிறுக்கி பிள்ளெ பொய்யி; பொய்யா சொல்லுதெ-" என்று பேவாங்கு வாங்கினார்.

துடித்துப்போனான் மாசாணம். அந்தக் குளிர்ந்த வேளையில்

அவனுடைய அலறல் எல்லோரையும் எழுப்பிக் கூட்டம் கூடிவிட்டது. சாட்டையின் வெடிப்பு நாலு தரத்துக்குத்தான் வலிக்கிறமாதிரி இருந்தது.

இடது முஷ்டியை வானத்தைப் பார்த்து உயர்த்தி சாமி கொண்டாடிகள் தங்கள் உடம்பிலேயே புனித சாட்டையால் அடித்துக் கொள்ளும் பேரோசை அவன் மனக்கண்ணில் மின்னலிட்டது.

உணர்ச்சியால் இரண்டு முஷ்டிகளையும் இறுக்கிக்கொண்டு வானத்தைக் குத்துவதுபோல்த் தூக்கி நிறுத்தி படுமுடிச்சிவிடும் கயிறுபோல் உடம்பை முறுக்கிக்கொண்டு அப்படியே நின்றான்.

சில்லுகளாய் முறிந்த மனஎலும்புகள் உருகி, பின் ஒன்றுகூடி கரடுமுறடான ஒரு எலும்பாய்க் கூடியது அந்த வினாடியில் அவனுள். அவன்மேல் விழுந்துகொண்டிருக்கும் அடிகளை அங்கே வந்து கூடியவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். 

என்ன என்று பார்த்தபிறகுதான் தெரிந்தது! தூசி படிந்த தரையில் அவன் கிடந்த தடமும் விரித்த துண்டும் அங்கே கிடந்தது.

பெரிய முதலாளியின் வீட்டில் இப்படி யாரும் பார்க்காமல் வருஷத்துக்கு ஒருதரம் மட்டும் ஒட்டடை அடிச்சி வெள்ளை ஆத்துகிற இடம் பலது இருக்கும். அதுலெ இதும் ஒண்ணு.

"நல்ல கூத்துதாம்போ அப்பவும் குண்டியிலே போற குசு தெரியாமெ ஒரு ஆம்பளை ஏழுநா ராவா பகலாத் துரங்கியிருக்கானே பாவி மட்டை' அதிசயத்தாள் ஒரு கிழவி.

"ஹிம், நீ ஒண்ணு. ஒரு வாரம் முழிச்சிருக்கான், ஒரு வாரம் துங்கிருக்கான். கணக்கு சரியாப் போச்சி!” என்று கெத்தோடு சொன்னார் ஒரு கிழவனார்.

ஊரெல்லாம் ஒரே கெக்கோல்; சொல்லிப் பேசிச் சிரிக்க விஷயம் கிடைத்துவிட்டதே

அடி வாங்கியதுக்குப் பிறகு ரொம்பநேரம் அழுதுகொண்டிருக்கும் மாசாணம் அழாமல் அன்று கணத்த மெளனமாய் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது பெரிய முதலாளிக்குப் புதிய விஷயம்.

சித்திரையை முடித்த மாசாணம் விடுப்புக் கேட்டான் ஊருக்குப் போக முப்பத்தி ஆறு வெள்ளி ரூபாய்களை எண்ணி அவன் முன் வைத்தார் பெரிய முதலாளி. அவனைப் பார்த்து அவர் ஒரு பாராட்டுச் சிரிப்புச் சிரித்தார். பிறகு, "இண்ணைக்கு விசாளக்கிழமை. நாளைக்கு ஒரு நா தைப்பாறிக்கொ; நாளண்ணைக்கி சனிக்கிளமை எண்ணை தேச்சித் தலைமுளுகி கோழியடிச்சி சாப்ட்டுட்டுப் போ" என்றார்.




ஊருக்குப்போன மாசாணம், அந்த வருசம் வரலை; அடுத்த வருசம் வரலை; அதுக்கடுத்த வருசமும் வரலை.

நாலாவது வருசம் வந்த மாசாணம் நெலைச்சட்டமாக ஒரு வீட்டில் நிற்காமல் ஒவ்வொரு சித்திரைக்கும் ஒரு வீட்டில் நின்றான்.

என்றாலும் கிராமத்தில் அவன்பேரில் சுத்தமான ஆளு' என்ற பெயர் நிலைத்தது.

குமருகளும் இளவட்டங்களும் பால் உணர்ச்சிப் பேச்சுகளால் அவனைச் சாடையாகச் சீண்டுவார்கள்.

"லேய் மாசாணம் மாடு மிதிச்சிட்டதா உனக்கு!” என்றுகூடக் கேட்டிருக்கிறார்கள்.

கேலியைப் பொறுத்துக்கொள்பவனைக் கண்டால் எல்லார்க்குமே குஷிதான். சிறுசுலிருந்து பெருசுவரை அவனோடு வாயாட்டம் ஆடாதார் கிடையாது.

சனிக்கிழமைதோறும் ஊர் பஜனை மடத்தில் நடக்கும் பஜனைக்கு மாசாணம் தவறாமல்ப் போய் உட்காருவான். பாடாவிட்டாலும் கேட்டுக்கொண்டே இருப்பான். தெலுங்குப்பாடல்களின் அர்த்தம் அவனுக்கு விளங்காவிட்டாலும் கேட்பதற்கு ரம்மியமாய் இருந்தது.

சில தமிழ்ப்பாடல்கள் வரும்போது மனசுள் ஒரு பிச்சிப் பூ மலரும். "ராம நாமமே கல்க்கண்டு; வாயிலெ பட்டால் இனிப்புண்டு;" ஒரு நாள், ஸ்ருதிப்பெட்டி போடும் ஆள் வராததாலோ என்னமோ மாசாணத்தைப் போடும்படி சொன்னார்கள். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான்.

முதலில் கொஞ்சம் முகச்சுளிப்பு இருந்தாலும், பிறகு சரியாய் வந்து கொண்டிருந்தது ஸ்ருதி. அப்போதுதான் கவனித்தான்; தன்னை அது ஒரு அமுததாரையால் கரைக்கிறது என்பதை லயித்துப்போனான் அதன் சொகத்தில்,

அதிலிருந்து சனிக்கிழமை இரவுதோறும் அவனுக்கு அந்தப் பதவி கிடைத்து வந்தது. கண்ணன் பிறப்பு, ஏகாதசி, புரட்டாசியின் கடேசிச் சனி இவைகளில் சப்பரம் எழுந்திருத்தாகி வரும்போது பின்னால் பஜனை கோஷ்டி பாடிக்கொண்டே வரும். அவர்கள் மாரிலே சந்தன மும் பூமாலையும் அணிந்து இருப்பார்கள். அதில் மாசாணமும் இருந்தான். அது அவனுக்கு ஒரு உயர்வாகத் தெரிந்தது. அனைவ ரோடும் தான் சமதையாகத் தோன்றியது. அங்கே தன்னை இளப்பமாகப் பார்ப்பவர்களோ கேலி செய்பவர்களோ இல்லை.

3
மாசாணத்துக்கும் கலியாணம் வந்தது. ஊருக்குப் போனான். கொஞ்சநாட்களுக்கெல்லாம் ஒரு பெண்ணோடு வந்தான். அவர்களை பார்த்ததும் "அட! மாசாணம் பயலுக்கு கிடைச்ச யோகத்தைப் பாத்தியா' என்று பேசிக்கொண்டார்கள். கண்ணால் ஒருவருக் கொருவர் ஜாடை செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இருக்க இடம் கொடுக்க நான் நீ என்று முன்வந்தார்கள்.

மாசாணம் பெண்டாட்டியின் பெயரும் மாசாணம்தான்! இதைக் கேட்டதும் ஊர்க்காரர்களுக்கு ரெட்டைச் சந்தோஷம். கால் கை சுளுக்கிக்கொண்டால் எண்ணெய் இட்டுத் தேய்த்துவிட இனிமேல் ஒரே பெயருடைய தம்பதியர் வீட்டைத்தேடி விசாரிக்கவேண்டாம். தேடிப்போகும் மூலிகை வந்து காலில் சிக்கிக்கொண்டதே

குடும்பஸ்தனாகிவிட்டதால் இனிமேல் எந்த சம்சாரி வீட்டிலும் சம்பளத்துக்கு நிற்கமுடியாது. அத்தக்கொத்து வேலைக்குப் போய் தினமும் மூனுபடி கம்மம்புல் தானியம் கொண்டுவந்தான்.

ஒருநாள் சாய்ந்திரம் ஏகாலிச்சுப்பன் கால்ச்சுளுக்கைத் தடவிவிட சிரட்டையில் கொஞ்சம் விளக்கெண்ணெயுடன் வந்தான். "அப்பச்சி, ஒங்க கையாலெ தடவிவிடுங்க" என்றான். மாசாணத்துக்கு கொஞ்சம் திகைப்புதான்; என்ன செய்ய, பெண்சாதியும் புருஷனும் ஒரே பெயர் உடையவர்கள் தடவிவிட்டால் தேவலையா விடும் என்று இருக்கிறதே கடவுளே என்று தடவிவிட்டான்.

மறுநாள் காலையிலேயே சுப்பனால் கைவீசி நடக்க முடிந்தது. அவனுடைய பெண்சாதி ராக்கி கஞ்சி வாங்கப்போன வீடுகளில், ஊர் பூராவும் மாசாணத்தின் கைராசியைப்பற்றி மெச்சிப் பேசினாள்.

பிடிப்புகளுக்குத் தடவிவிட, திருஷ்டி கோளாறுகளுக்குப் பச்சிலை பூக பார்வை பார்க்க, தண்ணிர் தெளிக்க, விபூதி போட என்று ஆட்கள் ஆட்களைக் கூட்டிக்கொண்டு மாசாணத்தின் வீட்டைத் தேடிவர ஆரம்பித்தார்கள். 

மாசாணத்துக்கு இதெல்லாம் பெருமையாக இருந்தாலும் மாசாணத்திக்கு ஆரம்பத்தில்தான் பெருமையாக இருந்தது. காசு பெறாத இந்த நட்டணை வேலைகள் அவளுக்கு பிடிக்காததோடு புருஷனையும் பிடிக்காமல் போய்விட்டது. இவன் தனக்கு சமதை இல்லை என்ற நினைப்பு அவளுக்கு உள்மனசுக்குள்; அதோடு தான் வந்தபிறகுதானே இவனை இத்தனை பேர் தேடிவர இருந்தது என்கிற நினைப்பும்.

ஆரம்பத்தில், குளிக்கும்போது அவனுக்கு முதுகு தேய்த்து விட்டாள். சாப்பிட்ட வட்டிலைக் கழுவி வைத்தாள். பிறகு அவனே தான் செய்துகொள்ள வேண்டியதாகிவிட்டது. சில நாளைக்குள் அவள் "ஒரு வடியா வருது, ஊத்திச் சாப்பிடு கஞ்சியெ" என்று திரும்பிப் படுத்துக்கொள்வாள், சுடுசொல் ஒன்றும் சொல்லமாட்டான் அவளை, கோவங்கூட வராத அவனுடைய இந்த மதக்கம் அவனிடமிருந்து ரொம்ப விலகிக்கொள்ளச் செய்தது அவளை.

மற்றவர்களிடம் அவள் பேசிக்கொண்டிருக்கும்போது இவன் காதில் படும்படியாகவே "ஆடுண்ணா ஒருசுறுகுப் பால் கொடுக்கனும் கிடாண்ணா ஒரு முட்டாவது முட்டணும்" என்று பொரிவாள். 

சாய்ந்திரம் பெரியமுதலாளியின் வீட்டம்மா மாசாணத்தைத் தேடி வீட்டுக்குப் போனாள். மாசாணத்தி முழுகிய தலையை படலைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சினுக்குவலியால் சிக்கெடுத்து நீவிவிட்டுக் கொண்டிருந்தாள். முதலாளியம்மாவின் கண்ணில் முதலில் பட்டது மாசாணத்தியின் சிறுத்த இடையும் நீண்ட கூந்தலும்தான். பசப்புக் கார முண்டை ஊர்ப் பிளைகளையெல்லாம் கெடுத்திட்டாளே என்று மனசுக்குள் ஏசிக்கொண்டே "ஏ மாசாணத்தி, மாசாணம் வந்ததும் வீட்டுக்கு வரச்சொல்லு" சின்ன மொதலாளிக்கு திருநாறு போடணும்" என்று சொல்லிவிட்டு நாறச் சிறுக்கி, எடுபட்ட முண்டெ' என்று மனசுக்குள் ஏசிக்கொண்டே போனாள்.

காட்டிலிருந்து மாசாணம் வந்தவுடனே முதலாளியம்மா வந்த
தகவலையும் சொல்லி, வழக்கம்போல் அவனுக்குக் கொடுக்கிற வாழ்த்துமானங்களையும் கொடுத்தாள்.

வென்னீரை அவனே சோமாரி வைத்துக்கொண்டு குளித்தான். போயி விபூதி போட்டுட்டு வந்து சாப்பிட்டுக்கிறலாம் என்று கிளம்பிவிட்டான்.

விபூதிபோட வந்தாலோ, பச்சிலை பூச வந்தாலோ, வருகிறவன் யாருடனும் பேசுவதில்லை. அதனால் "வா" என்றும் அவனை வீட்டார் சொல்லமாட்டார்கள்.

பெரிய முதலாளியின் வீட்டுக்குள் மாசாணம் மெளனமாக நுழைந்ததும் ஒரு சின்ன பரபரப்பு; ஒரு சின்ன மரியாதை

பட்டகசாலையில் கன்னி மூலையில் போய் பேசாமல் சப்பணம் போட்டு உட்கார்ந்துகொண்டான். அவன் முன்னால் தாம்பாளத்தில் விபூதி குவித்து அதன் உச்சியில் சூடக்குவியல்,

முதலாளியம்மா ஒன்பது வயசுள்ள "சின்னமொதலாளி"யைக் கூட்டிக்கொண்டு வந்து மாசாணத்துக்கு முன்னால் உட்கார்த்தி வைத்து தானும் உட்கார்ந்துகொண்டாள். குடும்பத்தார் அனைவரும் மாசாணத்தின் எதிரே பவ்யமாக வந்து உட்கார்ந்துகொண்டார்கள். பெரிய முதலாளியும்கூட எவ்வித அட்டகாசம் இல்லாமல் ஒரு பக்கத்தில் வந்து அமைதியாக உட்கார்ந்துகொண்டார்.

ஆரம்பிப்பதற்கு முன்னால் மாசாணம் அந்த வீட்டையும் அங்குள்ள பொருள்களையும் அந்த மனிதர்களையும் ஒரு பார்வை பார்த்தான், இவ்வளவுதானா நீங்கள்ளாம்! என்று இருந்தது அவன் பார்த்தது.

சூடத்தைக் கொளுத்தினான். அது எரிவதையே அவன் கண்கள் உக்கிரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன. எரிதியின் நாக்குக் குறையக் குறைய பார்வை உக்கிரமும் குறைந்து விழி மெளனம் ஆகி மூடிக் கொண்டது. நிமிர்ந்த மார்புடன் அப்படியே இருந்தவன் மெல்ல விழித்து அந்தப் பாலகனை அருள் சுரந்த கண்களால் பார்த்தான்.

தாம்பாளத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அந்த வெது வெதுப்பான திருநீற்றை சமன்படுத்தி அதில் விரலால் ஏதோ எழுதி னான். கொஞ்சம் தலைதுாக்கி பெரிய முதலாளி அதைக் கவனித்தார். ஒன்றும் விளங்கவில்லை. மாசாணத்துக்கோ எழுதப் படிக்கத் தெரியாது.

மூடிய கண்களுடன், ஒலி எழாமல் அவன் உதடுகள் வேகமாக எதையோ சொல்லிக்கொண்டே உடம்பை சற்றே முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டே இருந்தவன் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் தரையில் ஓங்கி பெருத்த சத்தம் எழ கைபொத்தி அடித்தான். நெஜமாகவே பதறிப்போனார்கள் எல்லோரும்! அவனுடைய விழிகள் வெளியே பிதுங்கும்படியாக ஓங்கிய குரலில் ஒம் ரீம் ஸம் என்று இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டு அவர்களைக் கோபமாகப் பார்த்தான். அது அனைவரையுமே கொஞ்சம் திகில டையச் செய்தது. அடுத்த வினாடியே சாந்தமடைந்து மிருதுவான குரலில் "மொதலாளியம்மா, சின்ன மொதலாளி எங்கையோ பயந்திருக்காக, வேற ஒண்னுமில்லெ இந்தத் திருநீறை காலையிலும் ஒரு தபா பூசுங்க. ராத்திரியே காய்ச்சல் இறங்கி சரியாபோயிரும்" என்று

சொல்லி அந்தச் சிறுவனுக்கு நெற்றியில் இட்டு புஜங்கள் இரண்டிலும் தடவிக்கொண்டே போய் ஒரு சொடக்குடன் முடித்தான். அவன் இப்படிச் செய்தது குழந்தைகள் அனைவருக்குமே பிடித்திருந்தது.

பெரியவர்கள் வந்து திருநீறைக் குனிந்து மரியாதையாக வாங்கிக் கொண்டார்கள். பெரிய முதலாளிக்கு இந்தப் பயலிடம் போய் இப்படிக் குனிந்து வாங்கவேண்டுமா என்றிருந்தது. வீட்டம்மாவின் அழுத்தம் அவரையும் வந்து குனிந்து ரெண்டு கைகளையும் நீட்டி வாங்கும்படி செய்தது.

"சின்ன முதலாளி"யின் காய்ச்சல் இறங்கி மறுநாளே சரியாகி விட்டது. ஒரு பக்கம் ஊராரின் இளப்பம் அவன்பேரில் நீங்கிக் கொண்டு வரும்போது இன்னொரு பக்கம் கேலிபீரங்கிகள் அவன்மீது தரமாரியாய்க் குண்டு மாரி பொழிந்துகொண்டிருந்தன. இவர்களுக்கு ரொம்பச் செளகரியமான விஷயம் அவன் முகத்துக்கு நேரேயே அதைப் பிரயோகிக்கலாம். 

அந்த வருஷம் மழைக்காலம் சீக்கிரமே தொடங்கும்போல் தெரிந்தது. ஆவணி மத்தியில் ஒரு நல்ல மழையும் ஒரு துணை மழையும் பெய்து நிலத்தையும் மனசையும் குளிர்வித்தது, சொல்லி வைத்தது போல உடனே கரிசல்க்காடு அனைத்தும் சுறுசுறுப்படைந்தது.

பருவம் செய்ய ஆரம்பித்தார்கள், முங்க உழறது குப்பை சிதறுகிறது எழுப்படிக்கிறது என்று.

புரட்டாசி முதல் பட்டத்தில் விதைக்க எல்லோருமே தயார். பருவ மழையைத்தான் காணோம்.

சரி போகுது; நடுப்பட்டத்தில் பேயும், அதுதானே நமக்கு உகந்த படடம.

நடுப்பட்டத்திலும் பெய்யவில்லை. சம்சாரிகளின் நெற்றி சுருங்கியது. முகம் கடுக்க ஆரம்பித்தது.

விறுவிறு என்று காரியங்கள் மழையைத் தருவிக்க என்று ஆரம்பமாயின.

மழைக்கஞ்சி எடுத்தார்கள். கொடும்பாவி கட்டி இழுத்து ஒப்பு சொல்லி அழுதார்கள். கிராம தேவதைகளுக்கெல்லாம் கொடை நடத்தி, பலி கொடுத்து அவைகளின் மனசைக் குளிர்வித்தார்கள்.

புரட்டாசியின் கடேசிப்பட்டமும் வெள்ளைவெயிலாகவே கடந்து போனது.

கடவுளே, ஐப்பசி மாசமாவது நீ மழையாக வரமாட்டீயா? பிறாந்துகளே நீங்கள் எங்கே போய்த் தொலைந்தீர்கள்?

வானத்தின் உச்சியில் நூற்றுக்கணக்காய்ப் பறந்து வட்டமிட்டு மழை வரப்போவதைச் சொல்லுவீர்களே.

சிறிய நங்கூர வடிவத்தில் பறக்கும் சலங்கைப் பறவைகளையும் காணோமே.

சாயந்திரங்களில் மேகங்கள் நீர்வாய்க்கால் இடவில்லையே, சந்திரன் எட்டத்தில் கோட்டை கட்டவில்லையே, ட்ொர்க் டொர்ர்க் என்று எங்காவது ஒரு தவளை கூப்பிடாதா.

மோசம் போயிட்டோம்! மோசம் போயிட்டோம் என்று

சம்சாரிகள் ஒருவருக்கொருவர் மாறிமாறி சொல்லிக்கொண்டார்கள்.

வேலைகள் ஸ்தம்பித்துப் போனதால் கூலிகள் பட்டினி கிடந்தார்கள்.

மாசாணத்தின் வீட்டில் ஐப்பசியின் அடைமழைக்காகக் கொஞ்சம் சேமித்து வைத்திருந்த தானியமும் தீர்ந்தது. "இனி மண்ணைத் திங்க வேண்டியதுதான்" என்று சொன்னாள் மாசாணத்தி, கடேசியாகக் கிண்டிய கம்மங்கழை அவன் கும்பாவில் ஊற்றிக்கொண்டே

"மண்ணை என்னத்துக்காகத் திங்கனும் மாசாணன் இருக்கிற வரைக்கும்?” என்றான் அவன் உடனே, "ஆஹ ஹாக" என்று இளப்பமாக அவனை நோக்கி வலிப்புக்காட்டிக் குரல் கொடுத்தாள் மாசாணத்தி.

4
பட்டினி ஊரோடு ஆரம்பமானது. ஒரளவு வசதியான வீடுகளில் மட்டும் அடுப்பு புகைந்தது. கூலிகள் பஞ்சம் பிழைக்கக் கிளம்ப வேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டார்கள். ஆனாலும் பூமாதேவி தனது குழந்தைகளுக்குக் கொடுக்க என்று தன் மடியில் கிழங்கு வகைகளை வைத்துக்கொண்டிருந்தாள்.

மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டு போய் காடுகளில் புதைந் திருக்கும் சட்டிக்கிழங்கு சானைக்கிழங்கு வகைகளைத் தோண்டிக் கொண்டு வந்து பக்குவம் செய்து தின்று கிடைத்த தண்ணிரைக் குடித்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

மழை பெய்யாமல் போகாது; அப்படி இருக்கமுடியுமா; இருந்தால் உலகம் என்னத்துக்காகும் என்று நினைத்தார்கள்.

மாசானம் இரண்டு நாள் பட்டினி இருந்தான். ராத்திரிகளில் துக்கமே வரவில்லை, குத்தப்பட்டவன் துங்கினாலும் குறைவயித்துக்காரன் துரங்கமுடியுமா

மூணாவது நாள் மதியம் ஒரு முடிவோடு படுக்கையிலிருந்து எழுந்து நின்றான். தலைசுற்றும்போல் இருந்தது நிலையைப் பிடித்துக் கொண்டான்.

நேரே பார்வதி அம்மன் கோவில்முன் வந்து நின்றான். வேலை இல்லாததால் ஊர்க்காரர்கள் அங்கே உட்கார்ந்து மழை செய்த வங்கொடுமையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மாசாணம் அவர்கள் முன்னால் வந்து நின்று மே வேட்டியை எடுத்து இறுக்கிக்கொண்டு தரையில் விழுந்து அம்மனை வணங்கினான். நீட்டி கூப்பிய அதே நிலையில் ஒன்றிரண்டு நிமிடங்கள் கிடந்தான். ஊர்க்காரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

எழுந்திருந்த மாசாணம் தரையைக் கிள்ளி நெற்றியில் இட்டு சபதம் போல் உரத்துச் சொன்னான், மழை பெய்கிறவரை இங்கேயே அம்மனுக்கு முன்னால் உட்கார்ந்து வயணம் காக்கப்போவதாகவும் மழை பெய்யாமல் போனால் பட்டினி இருந்து இங்கேயே உயிரை விடப் போவதாகவும் சொல்லி அந்த மைதானத்தில் கிழக்காமல் பாாத்து சப்பனம் போட்டு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

பலபேருக்கு இது வேடிக்கையாகவும் சிலபேருக்கு இது கோமாளித் தனமாகவும் பட்டது. ஊருக்குள் இதைக் கேள்விப்பட்டவர்களுக்கு அப்படி இல்லை; கேள்விப்பட்டதும் உணர்ச்சிவயப்பட்ட ஒரு பரபரப்புக் கொண்டார்கள்.

பார்க்க பலபேர் அந்த இடத்துக்கு விரைந்து வந்தார்கள். ரொம்ப நேரம் நின்று பார்க்கமுடியாமல் வெயில் வாட்டியது.

உடம்பெல்லாம் வேர்த்து வடிய அதேநிலையில் மாசாணம் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

ராத்திரியில் அவனை அந்த நிலையில் விட்டுவிட்டு வீட்டில் படுக்க ஊராருக்கு மனசு வரவில்லை.

ஒருவர் மாற்றி ஒருவர் முழித்துக்கொண்டு கோவிலின் முன் தாழ்வாரத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு லாந்தர் வெளிச்சத்தில் சத்தம் போட்டு 'விராட பர்வம்" படித்தார்கள், அவர் களுக்குப் பெரிய முதலாளியின் வீட்டிலிருந்து சுடுதண்ணி - கருப் பட்டி போட்ட தேயிலைத் தண்ணி கொடுத்தனுப்பினார்கள்.

மறுநாளும் மாசாணம் அதேநிலையில் இருந்தான். காலையிலி ருந்தே புழுக்கம் தாங்கமுடியாததாய் இருந்தது.

மாசாணத்தின் இந்த முடிவுபற்றிக் கேள்விப்பட்ட தோரி கிருஷ்ணக்கோனார் கிடையிலிருந்து வந்தார்.

குருத்துப்பனை ஒலையைப் பட்டை பிடித்து அதில் ஆட்டுப் பாலைக் கறந்துகொண்டு வந்திருந்தார். அவன் இருப்பு அவருடைய

மனசைத் தொடுவதாய் இருந்தது. மாசாணத்தின் முன்னால் மண்டியிட்டு அவனுடைய வாய்க்குப் பக்கத்தில் பால்ப்பட்டையை ஏந்திப் பிடித்துக்கொண்டு "மாசானம்; மாசாணம்" என்று மெல்லிய குரலில் சத்தங்கொடுத்துக் கூப்பிட்டார். மாசாணம் கண்ணைத் திறந்து பார்க்கவில்லை. பலர் இதை வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டார்கள்.

"மாசாணம், ஐயா மாசாணம், இந்தா கொஞ்சம் பால் கொண்டு வந்திருக்கேன். ஒரு மடக்கு குடியய்யா"

மெதுவாகக் கண்ணைத் திறந்து கீதாரியைப் பார்த்தான். அவர் தனது வாயருகே ஏந்தியிருக்கும் பட்டையில் ததும்பும் பாலைப் பார்த்தான். அதே மெதுவாக கண்களை மூடிக்கொண்டே வேண்டாம் என்று சொல்வதுபோல் தீர்மானமாகத் தலையை அசைத்துவிட்டான். அங்கே கூடியிருந்த முகங்களில் புன்சிரிப்போடு கூடிய வியப்புத் தோன்றி மறைந்தது.

வயசாளியான அந்தக் கீதாரி சொன்னார். "பிள்ளே, எல்லாரும் தமக்காகத்தான் வயணம் காப்பாக உலகத்துக்காகக் காக்கெ ஒன் புண்யத்திலெ மழை பெஞ்சி ஜீவராசிக பொழைக்கட்டும்." என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்து பக்கத்திலுள்ள கங்கையில் கொண்டுபோய் பாலை ஊற்றிவிட்டு பட்டையை நெரித்து அதை ஒரு ஒரமாகப் போட்டுவிட்டு வந்தார்.

எல்லோரும் தோரியைச் சுற்றிக்கொண்டு மழை வரும் அறிகுறி ஏதாவது கிடையில் தெரிகிறதா என்று கேட்டார்கள்.

"நேத்துலேயிருந்து ஆடுக சரியா மேயாமெ கூடிக்கூடி அடையுது மழை வராமப் போகாது" என்றார். பால் கறந்துகொண்டு வர

விடலைப் பனையில் குருத்தோலை வெட்டப் போனபோது துரக்கணாங்குருவிகள் வேகமாய் கூடுகள் கட்டி முடிப்பதைப் பார்த்திருந்தார்.

தரைப் புற்றுகளிலிருந்து தேங்காய்ப்பூப் போன்ற வெண்ணிறத்தில் தங்களின் முட்டைகளை அள்ளிக்கொண்டு மொலோர் என்ற எறும்புக் கூட்டங்கள் கிளம்பிப் போவதையும் அவர் பார்த்திருந்தார்.

மூணாம்நாள் காலையில் மஞ்சள் வெயில் அடித்தது. அலசி விட்டதைப்போல் வானம் சுத்த நீலமாய் இருந்தது.

யாரோ மேற்கே கைகாண்பித்தார்கள். வெகுதுரத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை இன்று ரொம்பக்கிட்டெ வந்து இருப்பது போல்த் தெரிந்தது. எப்பவும் ஒரு நீளமான நீலநிற அம்பாரமாக மட்டுமே தெரியும் மலை இன்று, அதனுள்ளே இருக்கும் மலையின் திருப்பங்கள் மடங்கள்கூடத் தெளிவாகத் தெரிந்ததைப் பார்த்தார்கள். யாரோ அதிலுள்ள பாறைகள் மரங்கள் கூடத் தெரிவதாக சொன்னார்கள். கோவிலின் படிக்கட்டின் அடியிலிருந்து "டொர். டொறக்" என்று ஒரு சொரித்தவளை சத்தம் கொடுத்தது. ஒருவர் முகத்தை ஒருவர் சந்தோஷமாய்ப் பார்த்துக்கொண்டார்கள்.

ஏறுவெயிலின் வெக்கை தாளமுடியாதபோது மாசாணத்தின் மேலே நிழல் படும்படியாக ஒருவர் ஒரு காடிவண்டியை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினார்.

துடைத்ததுபோலிருந்த வானத்தில் நேரம் ஆக ஆக மேக கோபுரங் கள் எழுந்து வந்தவண்ணமாக இருந்தன. திடீரென்று காலநிலையில் சொல்ல இயலாத மாறுதல் - பார்த்துக்கொண்டிருக்கும்போதே - நிகழ்ந்துகொண்டிருந்தது.

வேகமாக நகர்ந்துகொண்டிருந்த வெள்ளை மேகங்கள் மதியத்துக்கு மேல் நிறைசூல்கொண்ட யானை மந்தைகளைப்போல் நகரமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது உச்சியில் கட்டுத்தரையிலிருந்து கயிற்றை அறுத்துக்கொண்ட காளையொன்று குதியாளம் போட்டது. இரைக்குச் சென்றிருந்த கரைமரத்துக் காகங்கள் பாதியிலேயே கத்திக் கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தன. வடஞ்சுருட்டி - மூலையில் திடீரென்று மின்னல் அந்தப் பகலிலும் கண்ணை வெட்டியது.

இருட்டிக்கொண்டு வருகிறது மழை என்று யாரோ சத்தம் போட்டுச் சொல்லுவது தூரத்தில் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு இரைச்சல் நெருங்கி வருவதை உணர்ந்தார்கள்.

நெல்லிக்காய் அளவுள்ள கனமுள்ள குளிர்ந்த துற்றல் முகத்தில் தலையில் கையில் விழ ஆரம்பித்தது.

அந்த இரைச்சல் இப்போது பெரிதாகக் கேட்டது. அருகேயுள்ள பன்ங்காட்டின்மேல் கொட்டுகிற மழையின் சப்தம் அது.

திடீரென்று தட்டாங்கற்களை வாரி இறைப்பதுபோல ஆலங் கட்டிகள் தரைமேல்க் கொட்டியது. அனைவரும் கோவிலுக்குள் ஒடி நுழைந்துகொண்டார்கள். நிழலுக்காகக் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்த காடிவண்டி மாசாணத்துக்குப் பாதுகாப்பாக அமைந்தது.

மாசாணம் கண்ணைத் திறந்து பார்த்தான் "ஈஸ்வரீ," என்று சொல்லிக்கொண்டே தனக்குப் பக்கத்தில் உருண்டு வந்த ஒரு ஆலங்கட்டியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.

ஆகாயத்துக்கும் பூமிக்கும் பாவாற்றியதுபோல் இறங்கிக்கொண்டிருந்த கம்பித்தூதூறல் திடீரென்று வலுத்த மழையாகக் கொட்டியது. மழையின் ஒசை காதுக்கு இனிமையாக இருந்தது. காற்றின் இசைவுக்கு ஏற்ப மரங்கள் முதுகைத் திருப்பித் திருப்பி காட்டிக் குளித்தது மழையில்,

மாசாணம் தெப்பமாக நனைந்துவிட்டான். உட்கார்ந்திருந்த இடத்திலெல்லாம் மழைநீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. பிரம்மாண்டமான ஒரு இடி முழக்கத்தை தொடர்ந்து "அர்ஜ்ஜுனன் பேர் பத்து" என்று கூவினார்கள் அங்கிருந்தவர்கள்.

விடாமல் பெய்துகொண்டே இருந்தது மழை. மாசாணத்தை எல்லோரும் கோவிலுக்குள் வந்துவிடும்படி அழைத்தார்கள். அதை மறுத்துவிட்டு அவன் எழுந்திருந்து நின்றான். நிற்கமுடியாமல் தள்ளாடியதால் ஒருவர் ஓடிவந்து அவனைப் பிடித்துக்கொண்டார்.

வானத்தையும் அவர்களையும் அவன் பெருமிதத்தோடு நிமிர்ந்து பார்த்தான். -

ஆனந்தமாக எல்லோரும் நனைந்துகொண்டே கைத்தாங்கலாக நடத்திக்கொண்டு ஊர்வலம்போல் அவன் வீட்டுக்குப் போனார்கள்.

வாசலில் வந்து நின்று பார்த்த மாசாணத்தி தனது புருஷனை ஊர்ப் பெரியாட்கள் அம்பலகாரர். பெரிய முதலாளி முதலானோர் மாலைபோட்டுக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வருவது பார்க்க அவளுக்கும் பெருமையாகவே இருந்தது.

எப்படி அங்கே பூமாலை வந்தது, மாசாணத்துக்கு உடைமாற்றிக் கொள்ள எப்படிப் புதுவேட்டி வந்தது என்று கேட்கவில்லை. அந்த மழைக்கு ஒழுகிக்கொண்டேயிக்கும் அந்தச் சிறிய்ய கூரைவீட்டில் இடம் போதவில்லை அந்த ஜனக்கூட்டத்துக்கு; தெருவிலும் நின்றார்கள்.

சூடான பசும்பாலை சில்வர் டம்ளரில் விட்டு "இந்தா, மாசாணம்; குடி" என்று பிரியத்தோடு நீட்டினார் பெரிய முதலாளி, அதை வாங்கிக்கொண்டான். வாங்கிக்கொண்டு, எல்லோருடைய முகத்தையும் பார்த்தான். மாசாணத்தியின் முகத்தையும்தான்.

பிறகு, அண்ணாந்தே இதுவரை குடித்து வந்த மாசாணம் அன்று அந்த டம்ளரில் சப்பிக் குடித்தான்.

"போதும்" என்று அவன் சொன்னபோதும் "இன்னும் கொஞ்சம்" என்று பெரிய முதலாளி சொன்னதும் எல்லோரும் "இன்னுங் கொஞ்சம், இன்னுங்கொஞ்சம்" என்று அவனை வற்புறுத்தினார்கள்.

********

கணையாழி அக்டோபர் 1981

Mar 17, 2017

மடித்தாள் பட்டி - பி. எஸ். ராமையா

மதுரையிலிருந்து பழனிக்குப்போகும் சாலையிலிருந்து நாலைந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குப் போய் விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். ஒரு காலத்தில் காட்டோடையாக இருந்த அந்த நொடிப் பாதையில், வண்டி அடிக்கொரு தரம் குலுங்கி விழுந்து ஆடி அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி, "இடது காளைக்கு ஒரு லாடம் விழுந்திருக்குதுங்க மாடு நொண்டுது” என்றான்.

"இந்த நடுக் காட்டிலே என்ன செய்ய முடியும்? மெள்ள வெள்ளைப் பட்டிக்குப் போய்விடுவோம்.அங்கே லாடம் கட்டிக் கொள்ளலாம்” என்றேன்.

"அதுவரை தாங்காதுங்க மாடு வீணாப் போயிடும். கொஞ்சம் இறங்கி அப்படி அந்த ஆலமரத்தடியிலே குந்திக்குங்க ஒரு நொடியிலே மடித்தாள் பட்டிக்குப் போயி லாடம் கட்டிக்கிட்டு வந்துடறேன்" என்றான்வண்டிக்காரன்.

அவன் குரலில் மாட்டின் பரிதாப நிலை பிரதிபலித்தது. சலிப்புடன்
வண்டியிலிருந்து குதித்தேன்.வண்டிக்காரன் மாடுகளை அவிழ்த்து வண்டியை ஒருபுறம் தள்ளி நிறுத்தினான். ஒரு மாட்டை மாத்திரம் அங்கேயே அருகிலிருந்த ஒரு மரத்தின் வேரில் கட்டி விட்டு, இன்னொரு மாட்டைஓட்டிக்கொண்டு புறப்பட்டான்.

பங்குனி மாதத்து வெயில் மூளையுருகும்படி  தாக்கிக்கொண்டிருந்தது. அந்த முரட்டு வழியில் வண்டியின் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து உடலெல்லாம் நோவெடுத்தது. இந்த இடத்தில் லாடம் விழுந்து, மாடு நொண்டும்படி நேர்ந்த அதிருஷ்டத்தைப் பற்றி எரிச்சலுடன் முனு முணுத்துக் கொண்டே வண்டிக்காரன் குறிப்பிட்ட ஆலமரத்தை நோக்கி நடந்தேன். அது வண்டிப்பாதையிலிருந்து கொஞ்சம் உயர்ந்த மட்டத்திலிருந்தது.ஆகையால், நான் இருந்த இடத்திலிருந்து வெறும் மரம் மாத்திரம்தான் தெரிந்தது.

ஆனால் மரத்தடிக்குப்போனவுடன் என்மனத்திலிருந்த எரிச்சலெல்லாம் ஒரே வியப்பாக மாறிவிட்டது. ஆகா! எவ்வளவு கம்பீரமான காட்சி!

அந்த இடத்தைச்சுற்றி மூன்று திசைகளில் அடுக்கடுக்காகப் பல குன்றுகள் அமைந்திருந்தன. ஒன்று வெறும் கருங்கல்லாலேயே அமைந்தது. சாதாரணக் காட்டுக் கள்ளிச் செடிக்குக்கூட இடம் கொடுக்கமறுக்கும் கரடு.

இன்னொன்றின் மேல் அங்கும் இங்குமாக முளைத்திருந்த புதர்ச் செடிகள் மற்றொன்று கொஞ்ச தூரத்தில் நீலப் பச்சை ஆடையணிந்து அந்தவெயிலில் அழகு பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு புறத்தில் இரண்டு குன்றுகளுக்கிடையில் மாரிக் காலத்தில் குளமாக வேஷம் போடும் ஒரு பெரிய பள்ளத்தாக்கு அதில் அடர்த்தியாகக் கருவேலம் செடிகளும், மரங்களும் வளர்ந்து நிறைந்திருந்தன. இந்தக்குளத்தின் மூன்றாவது திசையில்தான் அந்த நீலப்பச்சைமலை நின்றுகொண்டிருந்தது.

ஆலமரத்திற்கு மேற்கே கொஞ்சம்தள்ளி ஒரு பெரிய கிணறு இருந்தது. அதற்குக் கருங்கல்லால் கரை கட்டி உள்ளே இறங்கப் படிகளும் அமைக்கப்பட்டிருந்தன. கிணற்றையடுத்து ஒரு மரத்தடியில் ஒரு சிறிய காட்டுக் கோயில் மண் சாந்து வைத்துக் கருங்கற்களால் கட்டியது.ஒரே ஒர் அறைகொண்டது.கோயிலின் முன்புறச்சுவரின்மேல், இருமூலைகளிலும், ஆணும்பெண்ணுமாக இரண்டு மண் சிலைகள் நிற்க வைக்கப்பட்டிருந்தன. கோயிலை அடுத்திருந்த மரத்திலிருந்து இரும்புச் சங்கிலியில் கட்டிய ஒரு பெரிய வெண்கலமணி தொங்கிக்கொண்டிருந்தது. அந்த மரத்தைச் சுற்றி அங்கங்கே அடுப்பு மூட்டி எரித்த அடையாளமாக மும்மூன்று கரி ஏறிய கற்கள் கிடந்தன.

அந்த இடத்தின் கம்பீரம் நிறைந்த வனப்பில் ஈடுபட்டுச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டு நின்றவன், “முருகா" என்று யாரோ உரக்கச்சொல்லியதைக் கேட்டுத்திரும்பினேன்.

கிணற்றுக்குள்ளிருந்து ஒரு பண்டாரம் கப்பரையில் ஜலம் நிறைத்துக்கொண்டு ஏறி வந்துகொண்டிருந்தார். அறையில் கோவணம். மேலே உடலை மறைத்துப்போர்த்திய ஒருகாவித்துணி, மழ மழவென்று சிரைத்த தலை, நெற்றியிலும் உடலிலும் பளிச்சென்று பூசிய திருநீறு. கழுத்திலே காவித் துணிக்கு மேல் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் ருத்திராட்ச மாலை. வலது கையில் தண்ணிர்நிறைந்ததிருவோடு இடதுகையில் ஒரு முறுக்குத்திடி.

பண்டாரம் படியேறி வெளியில் வந்து திருவோட்டைச் சூரியனுக்குக் காட்டுவது போலத் தூக்கிப்பிடித்து, முருகா! என்று ஒரு தரம் பலமாக உச்சரித்தார். பிறகு ஒருநிமிஷம் கண்களை மூடித் துதிக்கும் பாவனையில் நின்றார். கண்ணைத் திறந்து இன்னொரு தரம்,“முருகா" என்று சொல்லிவிட்டு, நாலைந்துமிடறு தண்ணீர் குடித்தார். மீதித் தண்ணீரைக் கால்களில் ஊற்றிக்கொண்டு என்னை நோக்கிவந்தார்.

யாரோ சோம்பேறிப் பண்டாரமென்ற அலட்சியத்துடன் நின்றேன். ஆனால் அருகில்வரவர அவர் முகத்திலிருந்த தனிக்களை என் உள்ளத்தைக்கவர்ந்தது. சாமுத்திரிகா லட்சணப்படிபார்த்தால் அதை ஓர் அழகான முகமென்று சொல்லமுடியாது. எங்கள் வண்டி வந்த சாலையைவிடக்கரடுமுரடாகத் தோன்றியது. ஆனால் அந்த முரட்டு அமைப்பிலே ஒரு விசேஷக்கவர்ச்சி இருந்தது.உள்ளத்திலிருந்து பொங்கி வந்து முகத்தில் பரவி ஒளி வீசும் ஓர் அதிசய சக்தியின் கவர்ச்சி. கண்கொட்டாமல் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டுநின்றேன்.

பண்டாரம் என் அருகில் வந்து ஏற இறங்கப்பார்த்துவிட்டு "கோவிலிலே பூசைபோடவந்தீர்களா, ஆண்டவனே."என்றார்.

நான், "இல்லை, செம்பட்டிக்குப்போகிறேன்: திடீரென்று ஒரு மாட்டுக்குலாடம் விழுந்துநொண்டஆரம்பித்துவிட்டது.வண்டிக் காரன் லாடம் கட்ட மடித்தாள் பட்டிக்குப் போயிருக்கிறான். நீங்கள்தான்கோவில்பூசாரியா” என்றேன்.

பண்டாரம் கோவிலை ஒரு தரம் திரும்பிப் பார்த்துவிட்டு, "இல்லை. ஊர் சுற்றும் பரதேசிப் பண்டாரம்" என்று சொல்லி விட்டுமேலே நடக்க ஆரம்பித்தார்.

வண்டிக்காரன் வரும் வரை அவரைப் பேச்சுத் துணைக்காவது நிறுத்திக்கொள்ளலாமே என்ற எண்ணம் எழுந்தது என் மனத்தில், "ஸ்வாமி இது என்னகோவில் தெரியுமா?" என்றேன்.

பண்டாரம் நின்று திரும்பி, "மடித்தாளம்மன் கோவில்; அந்தக்கோவில் கதையைக் கேட்க ஆசையுண்டாஆண்டவனே.” என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தார்.

ஆவலுடன்,"சொல்லுங்கள்"என்றவன்.அவர் கண்குறிப்பை அறிந்து மரத்தடியில் ஒரு புறம் உட்கார்ந்தேன். பண்டாரம் திருவோட்டையும் முறுக்குத் தடியையும் அருகில் வைத்துக் கொண்டு உட்கார்ந்துசொல்ல ஆரம்பித்தார்.

"நீங்கள் அருகில் போய்ப் பார்த்தீர்களா கோவிலை? இல்லையா? உள்ளே இருக்கும் தெய்வத்திற்குப் பெயர் மடித்தாளம் மன். இந்தக்கோவிலினால்தான் பக்கத்துக்கிராமத்திற்கு மடித்தாள் பட்டி என்று பெயர் வந்தது.

"பேய் பிசாசுகளை அடக்குவதில் ரொம்ப சக்தியுள்ள தெய்வம் என்பது கிராம ஜனங்களின் நம்பிக்கை, பேய் பிடித்த பெண்களை இங்கே கொண்டுவந்து ஆடவிட்டுப் பொங்கலிட்டுப் பூசைபோட்டால் பேய் பறந்து போய்விடுமாம். அது போனதற்கு அடையாளமாக அந்த மரத்தில் ஆணி அடிப்பார்கள்.

"ஆண்டவனே! மனிதன் குணத்தில் உயரும்போது அவனிடம் தெய்வீகம் பிறக்கிறது. அவனைத் தெய்வாம்சம் என்று வணங்குவதிலே தவறில்லை. ஆனால் பாருங்கள். ஆண்டவனே காலம் போகப்போக அவனே தெய்வமாகிவிடுகிறான். சிலசமயங்களிலே, நல்லபடியாக மக்களை உயர்த்தும் தெய்வநிலையிலிருந்து விழுந்து, அவர்களைப் பயமுறுத்திப் பலிகேட்கும் காட்டேரியாகவும் மாறிவிடுகிறான். அப்படி மாறிய ஒரு தெய்வத்தின் கோவில்தான் இது.

"வருகிற மன்மத வருஷம் பங்குனிக்குச் சரியாக முன்னூறு வருஷமாகும் இந்தக் கோவில் கட்டி என்ன எண்ணுகிறீர்கள்? நடப்பது பார்த்திப பங்குனி சரியாகப் பத்துவருஷம் இருக்கிறது மன்மத பங்குனிக்கு.

"அப்போது மதுரையிலே திருமலைநாயக்கர்,ஆண்டுகொண் டிருந்தார். அவருடைய கடைசிக் காலத்தில் விஜயநகர ராஜ்யம் சீர்குலைந்து போயிற்று. அதையெல்லாம் படித்திருப்பீர்களே? அந்தச் சமயத்தில் மைசூர் ராஜ்யத்தில் கந்தர்வ ராச உடையார் என்பவர் ஆண்டு கொண்டிருந்தார். மதுரைநாயக்கருக்கும், மைசூர் உடையாருக்கும் விரோதம் ஏற்பட்டுவிட்டது. மைசூர் அரசர் மதுரைமேல் படைகளை அனுப்பிவிட்டார்.

"அந்தப் படை முதலில் சத்திய மங்கலம் பிராந்தியத்தைப் பிடித்துக்கொண்டது. அப்போது திருமலைநாயக்கர் உடல்நலம் குன்றிப்படுத்த படுக்கையாக இருந்தார். அவருடையதம்பிகுமார முத்து நாயக்கன் படைகள் திரட்டுவதாகச் சொல்லிக் கொண்டிருந்ததை நம்பியிருந்து விட்டார். ஆனால் குமாரமுத்து நாயக்கனுக்குத் தீரமும் இல்லை, திறமையும், மைசூர்ப்படைகளை எதிர்க்க ஓர் ஏற்பாடும்செய்யவில்லை.

“சத்திய மங்கலத்தைப் பிடித்தபோது எதிர்ப்பு இல்லாமல் போகவே மைசூர்த் தளபதிக்கு ரொம்ப தைரியம் வந்து விட்டது. படைகளை நடத்திக் கொண்டே மடமடவென்று மதுரைக்கருகிலேயே வந்துவிட்டான் தலை நகருக்கே ஆபத்து வந்து விட்ட தென்பதைக் கண்டவுடன்தான் திருமலை நாயக்கர் விழித்துக் கொண்டார். உடனே மறவச் சீமைக்கு அதிபதியான ரகுநாத சேதுபதிக்கு உதவி கோரி ஆளனுப்பினார். சேதுபதி மந்திரத்தால் வரவழைப்பதுபோல ஒரு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு வந்துவிட்டார். நாயக்க மன்னரும் அவசரமாக ஒரு படை திரட்டினார்.இரண்டு படைகளும் சேர்ந்து மைசூர்ப்படைகளை எதிர்த்தன. எதிரிகள் பின்வாங்கி ஓட்டமெடுத்தார்கள்.

"சேதுபதி, படைகளுடன் எதிரிகளைத் துரத்திக் கொண்டு போனார். மைசூர்ப் படைகள் பின்வாங்கி அதோ தெரிகிறதே அந்தக் குளம், அங்கே வந்து தங்கினார்கள். அந்த இடம் இயற்கையாக மூன்று புறமும் குன்றுகள் சூழ்ந்துகோட்டைபோல அமைந்திருக்கிறதல்லவா? அதைப் பயன்படுத்திக் கொண்டு, மைசூரிலிருந்து உதவி வரும்வரையில் எதிர்த்துநிற்கவழிசெய்து கொண்டான்.அந்தத்தளபதி துரத்திக்கொண்டுவந்த சேதுபதியின் படைகள் கிழக்கே ஒரு காத துரத்தில் கூடாரமடித்தார்கள்.அவர்கள் துரத்திக் கொண்டு வந்த விறுவிறுப்புடனேயே தாக்கியிருந்தால் எதிரிகளைப் பஞ்சாகப் பறக்கவிட்டிருக்கலாம். ஏனோ அப்படி நடக்கவில்லை. இருதரப்பாருக்கும் கொஞ்சம் களைப்பாறவும், அணிகளைத் திருத்தியமைக்கவும் நேரம் கிடைத்தது.

“சுமார் பத்து நாள்வரை இரண்டு படைகளும் காத தூரத்தி லேயே ஒதுங்கி இருந்தன. பத்தாம் நாள், மைசூரிலிருந்து புதிய படைகள் வந்திருப்பதாகச் சேதுபதிக்குச் செய்தி எட்டியது. எவ்வளவு படைகள் வந்திருக்கின்றன; அவற்றை எப்படி உபயோகிக்கப்போகிறார்கள் அவர்களே தாக்குவார்களா என்பன போன்ற தகவல்களை உளவறிந்து கொண்டுதான் மேலே தம் திட்டத்தை வகுக்கவேண்டுமென்று முடிவு செய்தார்.சேதுபதி.

“உளவறிவதில் நிபுணர்கள் பலர் அவரிடம் இருந்தார்கள். அந்தக்கலையில் சூரர்கள். ஆனால் அவர்களையெல்லாம் அனுப்பாமல், ரகுநாத சேதுபதி, தாமே மாறு வேஷத்தில் புறப்பட்டார். அவர் அப்படிப் புறப்பட்டுப்போனது அவருடைய படையாட்களுக்கே தெரியாது.

"அந்தக்காலத்தில் அதோ இருக்கிறதே. வண்டிப்பாதை அது ஒரு காட்டோடையாக இருந்தது. இந்த மடித்தாள் பட்டி அப்போது நல்ல செழிப்பான கிராமம். பத்துப் பதினைந்து மச்சு வீடுகளும் உண்டு. இந்த எல்லை போர்க்களமாக மாறியவுடன் கிராமத்து மக்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். மைசூர்க்காரர்கள் வந்த பார்த்து யாருமில்லாததால் ஊரை அப்படியே விட்டு விட்டார்கள்.

“ஓடிப்போன கிராம மக்களில் கள்ளிமுத்தன் என்று ஒர் அம்பலகாரன் இருந்தான்.கிராமத்தில் பெரிய பணக்காரன்.அவன் ஊரைவிட்டு ஓடிய அவசரத்தில்தம் சொத்தையெல்லாம் வீட்டின் முற்றத்தில் புதைத்துவைத்துவிட்டுப் போய்விட்டான். பத்துநாளாக இரண்டு படைகளும் கை கலக்காமலிருக்கவே எப்படியாவது புதைத்த பொருளை மீட்டுக் கொண்டு போய்விடுவதென்ற உறுதியுடன்,சேதுபதி மாறுவேஷத்தில் புறப்பட்ட அதே இரவில் அவனும் புறப்பட்டு வந்தான். தானும் கூட வருவேனென்று பிடிவாதம் செய்து, அவன் மனைவி மடிச்சியாச்சியும் அவனுடன் வந்தாள். இருவரும் இருளின் போர்வையில் மறைந்து வந்து வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். இருளிலேயே அவசரமாகத் தங்கள் புதையலைத் தோண்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

"சேதுபதி அந்தப் பக்கம் வந்தபோது அவர்கள் வீட்டிற்குள் தோண்டும் சத்தம் கேட்டது.சந்தேகப்பட்டுச்சுவரேறி முற்றத்தில் இறங்கினார். அம்பலகாரன் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தான். சேதுபதி அவன் பயத்தைத் தெளிவிக்கச் செய்த முயற்சியெல்லாம் பலிக்காமல் போகவே,தான் யாரென்பதைவெளியிடவேண்டியது அவசியமாகிவிட்டது.

அவர் சேதுபதிமகாராஜா என்பதையறிந்தபிறகுதான்.அம்பல காரன் ஒய்ந்தான். புருஷனும் மனைவியும் அவர் காலில் விழுந்து கும்பிட்டார்கள்.அவருடைய வீர வெற்றிகளைப் பற்றிக்கேள்விப் பட்டிருந்த மடிச்சியாச்சி அவரை ஒரு தெய்வீக புருஷனாகவே நினைத்திருந்தாள்.

"சேதுபதி, தாம் மேற்கொண்டு வந்த வேலையை விளக்கி, 'அம்பலகாரனிடம் இந்தப் பிரதேசத்தின் அமைப்பு, எதிரிப் படைகளின் இருப்பு ஆகியவற்றைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். அவர் புறப்படத் தயாரானபோது மடிச்சியாச்சி,  'மகாராஜா இந்த ஏழை சொல்லைக் கேட்க வேண்டும். எதிரிப் படைகளுக்குள்ளே நீங்கள் தனியாகப்போவது சரியில்லையென்று எனக்குப் படுகிறது. உத்தரவு கொடுத்தால் இவரே போய் என்ன விவரம் வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு வந்துவிடுவார். என்றாள்.

"அம்பலகாரனும் உற்சாகத்துடன்,'ஆம் மகாராஜா' மைசூர்க் காரர்களுக்குக் கள்ளில் ரொம்பப் பற்றுதல், நான் போய் இங்கே கள்ளிருப்பதாகச் சொல்லி எதிரிகளில் ஓரிருவரை அழைத்துக் கொண்டுவருகிறேன். உள்ளே கொண்டுவந்து கட்டிவைத்து நமக்கு வேண்டியதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்றான்.

"இந்தத்திட்டத்துக்குச் சேதுபதி எப்படி இணங்கினார், ஏன் இணங்கினார் என்று யாரால் சொல்ல முடியும் இணங்கிவிட்டார். அம்பலகாரன் புறப்பட்டுப்போனான். மடிச்சியாச்சி மகாராஜாவை வீட்டுக்குள் அழைத்துச்சென்று விளக்கேற்றி உட்கார வைத்தாள்.
"அம்பலகாரன் வீட்டிலிருந்து புறப்பட்டபோது சரியாகத் தானிருந்தான். ஆனால் போகும் வழியில் சூழ்ந்திருந்த இருளில் ஆட்சிபுரிந்தபேய்களின் குணங்கள் அவன் நெஞ்சிலும் ஆட்சிபுரிய ஆரம்பித்து விட்டன. சேதுபதிக்கு உதவி செய்வதில் கிடைக்கும் சன்மானம் எவ்வளவு இருக்கும்? ஆனால் எதிரி தளபதியிடம் சேதுபதியையே பிடித்துக்கொடுப்பதாகச்சொன்னால் ஏராளமான சன்மானம் கிடைக்கக்கூடுமல்லவா? இந்த எண்ணத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள அவனிடம் சக்தி இல்லை. தன்னைக் கண்டு அவன் போட்ட பயக்கூச்சலைக் கொண்டே சேதுபதி இதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால்..!

“எதிரிப்படைகளின் முன் எல்லையை அடைந்தவுடனேயே பல படைவீரர்கள் வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். தன்னை அவர்களுடைய தளபதியிடம் அழைத்துச்செல்லும்படி கேட்டுக்கொண்டான்.

“தளபதியிடம் போனவுடன் தனக்குத் தாராளமாகச் சன்மானம்கொடுத்தால்,சேதுபதியையேபிடித்துக்கொடுப்பதாகச் சொன்னான். அவன் கேட்குமளவு பொன்னாகவே கொடுப்பதாக வாக்களித்தான் தளபதி அவனுடன் பொறுக்கியெடுத்த ஐம்பது வீரர்களை அனுப்பினால் சேதுபதியைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதாகச் சொன்னான். அம்பலகாரன், மைசூர்க்காரர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

"அவர் இருக்குமிடத்தைச் சொல்லிவிட்டு நீ இங்கேயே காவலில் இருக்க வேண்டும் என் ஆட்கள் கொண்டு வந்தவுடன் தான் உன்னைப் போகவிடுவேன்” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

"அவர்கள் சொல்லும் வழியில் போனாலல்லாமல்தான் உயிருடன் கூடத் தப்பமுடியாது என்பது தெளிவாகிவிட்டது அம்பலகாரனுக்கு எப்படியானாலென்ன நமக்கு வேண்டியது உளவுக்கூலி பொன்தானே என்று அவர்கள் நிபந்தனைக்கு உடன்பட்டு காட்டோடைக்குக் கிழக்கேயிருக்கும் கிராமத்தில் தெற்குக் கோடியிலிருந்து இரண்டாவது வீட்டிலிருக்கிறார். தனியாகத்தானிருக்கிறார்” என்று சொல்லிவிட்டான்.

“தளபதி பொறுக்காக நூறு வீரர்களைத் திரட்டி அனுப்பினான். அவர்கள் திரும்பிவரும்வரை கவனித்துக்கொள்ளும்படி, அம்பலகாரனை இரண்டுவீரர்களிடம் ஒப்படைத்தான்.

“மைசூர் வீரர்கள் வந்து கிராமத்தைச் சூழ்ந்து கொண் டார்கள். அம்பலகாரனை எதிர்பார்த்துக் காத்திருந்த சேதுபதிக்குக் குறளிசொல்வதுபோல ஏதோ கோளாறு நேர்ந்திருக்கிறதென்று மனத்திலே பட்டு விட்டது. ஆனால் போனவன் துரோகம் செய்திருக்கக்கூடுமென்று அவர் சந்தேகிக்கவே இல்லை.

"மடிச்சியாச்சியிடம், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறதென்று எனக்குப்படுகிறது. நாம் உடனே இங்கிருந்து போய்விடவேண்டும். உன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போக முடியாது. என்னுடன் வந்துவிடு, உன்னை மறுபடி உன் கணவனிடம் சேர்க்க வழி செய்கிறேன்.புறப்படு” என்றார்.

"ஆனால் அவர்கள் தப்புவதற்குச் சமயமே இல்லை என்பது அடுத்த கணமே தெளிவாகிவிட்டது. எதிரி வீரர்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அவர்களில் ஒருவன் சிலரைப் பின்புறமாக முற்றத்தில் ஏறிக் குதிக்க உத்தரவிட்டது உள்ளே கேட்டது.

"மடிச்சியாச்சிநடுநடுங்கிப்போய்விட்டாள்.தங்களால்தான் அந்த வீர தெய்வத்துக்கு ஆபத்து வந்துவிட்டது என்ற எண்ணம் மனத்தில் ஓங்கிவிட்டது.

"ஆண்டவனே! இந்த பயம் என்கிற குணம் ரொம்ப அதிசயமானது. அதுவே ஒருவனைப் புழுவிலும் புழுவாக மாற்றிவிடுகிறது: இன்னொருவனை வீராதி வீரனாக்கிவிடுகிறது. மற்றொருவனை அமரனாக்கிவிடுகிறது. பயம்.அழிக்கும் சக்தி அதிலிருந்து கற்பனை செய்தும் காண முடியாத துணிச்சலும், தியாகமும் பிறப்பது எவ்வளவு பெரியஅதிசயம்!

"மடிச்சியாச்சியைப் பிடித்த பயம் ஒரே நொடியில் அவளை தெய்வப் பெண்ணாக மாற்றிவிட்டது. அவளிடம் இயற்கையிலே இருந்த தாய்மைதான் பொங்கி எழுந்திருக்க வேண்டும். சேதுபதியைத் தன் சொந்த மகனாக வரித்துக் கொண்ட அந்தத்தாய், அடுத்த கணம். அன்னை பராசக்தியின் ஒர் அவதாரமாகிவிட்டாள்.
"ஒரே கணத்தில் அந்தக்கூடத்துக்காட்சியை மாற்றி அமைத் தாள்.ஒருபக்கத்தில் கிடந்தபாயைக்கொண்டுவந்து நடுக்கூடத்தில்
விரித்தாள். முற்றத்தில் தோண்டிப் போட்டிருந்த மண்ணில் கொஞ்சம்அள்ளிக்கொண்டுவந்தாள்பானையிலிருந்ததண்ணிரில் மண்ணைக் கலந்து சேதுபதியின் நெற்றியிலும், கன்னங்களிலும், மூக்கின்மேலும்பூசினாள்.பாயின்மேல் உட்கார்ந்துசேதுபதியைத் தன் மார் மேல் சாய்த்துக்கொண்டு மகாராஜா, நீங்கள்தான் என் கணவர். உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று ரகசியமாகச் சொல்லிவிட்டு, உரத்த குரலில், 'என் சாமியில்லே! கொஞ்சம் தூங்குங்க. உடம்பு நெருப்பாக கொதிக்குதே காளியாத்தா என் தாலிக் கவுத்தைக் காப்பாத்திக் குடு தாயே! ஒனக்கு ரெண்டு கடா வாங்கிவெட்டச்சொல்றேன் என்று பிரலாபிக்க ஆரம்பித்தாள்.

“வீரர்கள் முற்றத்துக்குள் ஏறிக்குதித்து உள்ளே வந்தார்கள். ஒருவன் வாசல் கதவைத் திறந்துவிட அங்கிருந்தவர்களும் வந்து கூடத்திலிருந்த இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். சிலர் வீட்டின் மற்றப்பகுதிகளில் புகுந்து தேட ஆரம்பித்தார்கள்.

"சேதுபதிரொம்பத்திறமையுடன் நாடகமாடினார்.அவர் எழ முயலுவதும், ஆச்சி அவரை இழுத்து மார்பின் மேல் சாத்திக் கொண்டு, சும்மா இருங்க என் ராசா என் சாமியில்லே! ஐயா, உங்களுக்கெல்லாம் புண்ணியமுண்டு. என் வீட்டுக்காரருக்கு ஏதாவது மருந்து குடுத்துக் காப்பாத்துங்கையா காளியாத்தா! எனக்குத்தாலிப்பிச்சைபோடுதாயே என்றகூவியதுவந்தவர்களைத் திகைத்து நிற்கச் செய்துவிட்டது.

மைசூர் வீரர்களும் நம்ம ஜனங்கள்தானே? தன் கணவனைத் தவிர வேறு ஒர் ஆண்பிள்ளையை ஒருத்திதன் மார்பின்மேலேயே சாத்திக் கொள்வாளா! அதுவும் காளியாத்தாளிடம் தாலிப்பிச்சை கேட்கிறாள்.ஆகையால், அவர்கள் சேதுபதியையும் ஆச்சியையும் நிஜமான கணவனும் மனைவியும் என்றே நம்பிவிட்டார்கள்.

அந்த வீட்டின் இதரப் பகுதிகளிலும் அக்கம் பக்கத்திலும் தேடிய ஆட்கள் வெறும் கையுடன் திரும்பி வந்தார்கள். அதன் பிறகுதான் அவர்களை நடத்திவந்த வீரன், ஆச்சியிடம்கேட்டான்: "ஏய் உண்மையைச் சொல்லிவிடு; இங்கே சேதுபதி வந்தாராமே, எங்கே அவர்? ஏமாற்ற முயன்றால் இருவரையும் துண்டம் துண்டமாகவெட்டிஎறிந்துவிடுவோம் என்றான்.

"ஆச்சி கண்ணிருடன், அப்படியாவது என் கஷ்டத்தை முடிச்சிடுங்க. பத்து நாளாச்சு நாங்க வெயிலைப் பாத்து. பயந்து கிட்டு எலிங்கமாதிரி இப்படிப் பதுங்கிக்கிட்டுக் கெடக்கிறோம். அஞ்சுநாளாச்சு இவரு சோறு தண்ணிபாத்து. நீங்கசொல்ற ஆளை நான் சொப்பனத்திலே கூடப் பாத்ததில்லே. நீங்க கொளந்தை குட்டிங்களோடே நல்லா இருப்பீங்க. உங்க பொஞ்சாதிங்கதாலி கெட்டியாயிருக்கும். எங்க ரெண்டு பேரையும் ஒரே அடியாக் கொன்னு போட்டுடுங்க என்று படபடவென்று பேசினாள்.

“அவள் பேச்சின் முடிவில் சேதுபதி ஒரு தடவை முனகித் தலையைப் புரட்டினார். ஆச்சி தலையைப் பிடித்துத் தடவி விட்டு, ஐயோ,சும்மாஇருங்களேன் என்று சமாதானப்படுத்தினாள்.

வீரர்களின் தலைவனுக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் தீர்ந்துவிட்டது. நம்மிடம் உளவு சொல்ல வந்தவன் ஏமாற்றி இருக்கிறான் என்று சொன்னான் ஒருவன். அப்படித்தான் தோன்றுகிறது. மதுரைக்காரர்கள் ஏதோ சூழ்ச்சியாக அவனை அனுப்பி இருக்கிறார்கள். புறப்படுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டுப் புறப்பட்டான் தலைவன். அந்த அபாய காலத்தம்பதிகளைத் திரும்பிக் கூடப்பார்க்காமல் போய்விட்டார்கள்.

அவர்கள் கன்னடத்திலேயே பேசினாலும் சேதுபதி ஓர் அளவுக்கு உண்மையை ஊகித்துக்கொண்டுவிட்டார்.எதிரியாட்கள் கிராமத்தின் எல்லைக்குப் போகும்வரை அவகாசம் கொடுத்து விட்டுக்குதித்து எழுந்தார்.தம் சொந்தத்தாயைவணங்குவது போல ஆச்சியை வணங்கினார். அம்பலகாரனுடைய துரோகத்தைப் பற்றித்தான் அறிந்துகொண்டதைச் சொல்லி, அவளைத்தன்னுடன் வந்துவிடும்படி அழைத்தார்.

மடிச்சியாச்சி அதற்குச் சம்மதிக்கவில்லை. என் கதி என்ன ஆனாலும் சரி, நீங்கள் தப்பிப் போய் ஊரைக் காப்பாத்துங்கள் வேலையை முடிக்காமல் திரும்புவதில்லை என்று மைசூர்ப் பாசறையைநோக்கிப்புறப்பட்டார்.

மைசூர் வீரர்கள் ஏமாற்றத்துடனும், மதுரைக்காரர்கள் செய்யும் புலன்புரியாத சூழ்ச்சியின் பயத்துடனும் திரும்பிச்சென்று தங்கள் தளபதியிடம் நடந்ததைச்சொன்னார்கள். அவர்கள் தளபதி கோபத்தில் அம்பலகாரனை இழுத்து வரச் சொல்லி, முன்பின் யோசிக்காமல் அவன் மூக்கை அறுக்க உத்தரவிட்டான். மூக்கை இழந்து துடித்துக் கொண்டிருந்தவனிடம், அவன் குறிப்பிட்ட வீட்டிலிருந்த தம்பதிகளைப்பற்றிச்சொன்னான் தளபதி.

அம்பலகாரன், ஐயையோ! அவள் என் பெண்சாதிதான். அவள் மார்மேலே படுத்திருந்தவன்தான் சேதுபதி. சண்டாளி: எனக்கே துரோகம் செய்துவிட்டாள்" என்று கூவித் தன் மூக்கை அறுத்த வாளையே பிடுங்கிக்கொண்டு ஓடினான்.

அவன் வீட்டிற்குள் நுழைந்தகோலத்தைக்கண்டமடிச்சியாச் சிக்கு நிலைமை புரிந்துவிட்டது. கொஞ்சமும் கலங்காமல் அந்த வெறியனின் கோரத்தாண்டவத்திற்கு உட்பட்டாள். அம்பலகாரன் அவளைக் கண்டதுண்டமாக வெட்டி எறிந்தான். அப்பொழுதும் அவன் வெறி அடங்கவில்லை. அவள் மூக்கை அறுத்து எடுத்துக் கொண்டு மதுரைத்தளத்தை நோக்கி ஓடினான்.”

பண்டாரம் இந்த இடத்தில் கதையை நிறுத்திவிட்டு மடித்தாள் பட்டி இருந்த திசையில் பார்த்தார். நானும் திரும்பிப் பார்த்துக்கொண்டே"அப்புறம்” என்றேன் ஆத்திரத்துடன்

அப்புறம் என்ன? சேதுபதி தாமே போய் எதிரியைப் பற்றித் தமக்கு வேண்டியதை எல்லாம் தெரிந்துகொண்டார். புதிதாக வந்த படைபலம் தருவதற்கு அவகாசம்கொடாமல், மறுநாளே மதுரைப் படைகள் தாக்கின. அறுபது நாழிகைஇடைவிடாமல் நடந்த புயல் போரில் இரு தரப்பாரிலும் பெருவாரியானசேதம் மதுரைப் படைகள் எதிரிகளை மைசூர் வரையில் துரத்திக் கொண்டு போனார்கள். மடிச்சியாச்சியின் மூக்குக்கு மைசூர் தளபதியின் மூக்கையே பதில் வாங்காமல் விடுவதில்லை என்று சபதம் கூறித் துரத்தினார் சேதுபதி அதில் வெற்றியும் பெற்றார். அதனால்தான் அந்த யுத்தத்துக்கு மூக்கறுத்தான் சண்டை என்று பெயர் வழங்குகிறது.

சேதுபதி திரும்பி வரும்வ ழியில், இங்கே இதே இடத்தில்தான் தண்டடித்துத்  தங்கினார் .மடிச்சியாச்சியை அடக்கம் செய்திருந்த அந்த இடத்தில் கோவிலைக் கட்டுவித்தார். அவளுக்கு மடி கொடுத்ததாய் என்று பெயரும் வைத்தார்.மடிகொடுத்ததாய் மடி கொடுத்த அம்மனாகி இப்போது மடித்தாளம்மனாகிவிட்டாள்.

"ஆண்டவனே! அதோ உங்கள் வண்டிக்காரன் வந்து விட்டான்.உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா” என்று பண்டாரம் கப்பரையையும், தடியையும் எடுத்துக்கொண்டு எழுந்தார்.

நானும் கூடவே எழுந்து, "இது நிஜக் கதையா ஸ்வாமி” என்றேன். பண்டாரம், "அவ்வளவும் கல்லிலே பொறித்து வைத்திருக்கிறது. கல் அந்தக் கிணற்றுக்குள்ளே கிடக்கிறது. உற்சாகமுள்ள வர்கள் தேடி எடுத்தால் பார்க்கலாம்" என்றுபுறப்பட்டார்.

அவர்போவதையே பார்த்துக்கொண்டு, அரை நாழிகைவரை நான் சிலைபோல் நின்றிருந்தேன் என்பது வண்டிக்காரன் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

**********

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்