Sep 30, 2010

விடியுமா? - கு.ப.ரா.

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது.
‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல்kupara ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.
என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.
ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள்.
எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. ‘இருக்காது!’, ’ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்’ என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. ‘இருக்கும்!’ என்ற கட்சி, தந்தியின் பலத்தில் வேரூன்றி வலுக்க வலுக்க, ‘இருக்காது!’ என்ற கட்சி மூலைமுடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.
தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்துதான் வந்திருந்தது. சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள். குஞ்சம்மாள் பேருக்குத்தான்! தவறு எப்படி நேர்ந்திருக்க முடியும்?
ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு சௌகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?
என் தமக்கையும் நானும் சாயந்தரம் ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப்  போகும் முதல்வண்டி.
புறப்படுவதற்கு முன் நல்லவேளை பார்த்துப் ‘பரஸ்தானம்’ இருந்தோம். சாஸ்திரிகள், ‘ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும், அவ்வளவுதான்!’ என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக் கூடவிடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு, மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைத்தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைப் பாக்கு க்ஷேமதண்டுலம் எல்லாம் மறந்து போகாமல் மடி நிறையக் கட்டிக்கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று. புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள்.
குஞ்சம்மாள், இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்; ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு!’ என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள்.
அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவள் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு, முதல் தடவையாக அன்று, எங்கோ அடங்கிவிட்டது.
அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். திவ்யமான சகுனம். காவேரியிலிருந்து அடுத்தவீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள்.
‘ஒண்ணும் இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒருத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே’ என்றெல்லாம், அம்மா அடிக்கடி தன்னையும் பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.
ரெயில் ஏறுகிறபோது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும், கலக்கலுங்கூட மட்டுப்பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம்.
‘நீ புறப்படுகிறபோது ஒன்றுமே’ இல்லையே, அக்கா?’ என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று.
‘ஒண்ணுமில்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?’ என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள்.
‘அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!’
எது எப்படியானாலும், மனசைச் சில மணி நேரங்களாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது போலப் பேச்சு வெளிவந்தது.
‘நான், இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல், போயிருக்காமல் போனேன்!’
’ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்துவிட்டாரோ?’
‘ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?’
’ஆஸ்பத்திரி பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக் கூடாதா?’
‘அப்படி அடிக்க முடியுமோ?’ குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது.
‘ஏன் முடியாது? தந்தியாபீஸில் - ‘
‘ஒருவேளை அப்படி இருக்குமோ?’ என்று கேட்டபொழுது குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது.
‘அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தா நாள் தானே கடிதாசு வந்தது?’
‘ஆமாம்! அதில் ஒடம்பெப் பத்தி ஒண்ணுமே இல்லையே?’
‘தந்தி அடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால் கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரி பேரை வைத்து அடித்திருக்கிறார்’.
‘அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி? அப்படியிருக்குமா?’ என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்ட பொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ?
‘நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்’ என்றேன்.
மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒரு தரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரமடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.
சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?
ரெயில் வண்டி வெறி பிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.
துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம்போல தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது.
சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப் போலப்பின் தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப் போல, அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூட வராது! சென்னையில் காலைதான்! - இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருந்தது.
குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.
எங்களவர்க்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்கு தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு.
அன்று என்னவோ, இன்னும் அதிகமாக, அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் என்று முதல் முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவள் அழகு மிளிர்ந்து தோன்றினாள்.
குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யாரு கேலி செய்தாலும் லட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக் கொள்ளுவாள். ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக் கொண்டிருந்த பூவைப்போல, அது என்றும் சோபித்ததில்லை என்று என் கண்களுக்குப் பட்டது. வெற்றிலைக்காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்ததுபோல இருந்தது.
சோர்வில்தான் சௌந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது-? கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு-? இல்லை! இல்லை!
குஞ்சம்மாள் அன்று என்னவோ அப்படி இருந்தாள்.
வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, ‘அம்பு, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்றாள் குஞ்சம்மாள்.
அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.
‘என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? - என் வாழ்வே அழுகையாக-’ என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.
‘எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது!’
இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தோம். ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை.
நல்ல நிசிவேளை. வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள், மௌனமாகப் பிசாசுகள் போல. அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், ‘இதென்ன ஸ்டேஷன்?’ என்று தலையை நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி வழிந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும்.
சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய் நின்றது. அதுவரையிலும் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும் கூக்குரலும் அதிகமாயின. அது வரையில் காலியாகவே வந்த எங்கள் பலகையில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண் குழந்தையும் புட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
அவள் அணிந்திருந்த முதல் தரமான வைரங்களுடன் அவள் முகமும் ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப்பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள்.
வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி; ‘எங்கிட்டுப் போறீக அம்மா?’ என்று கேட்டாள்.
என் தமக்கை சுருக்கமாக, ‘பட்டணம்’ என்றாள்.
’நானும் அங்கேதாம்மா வாரேன்!’ என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள்.
என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, ‘கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!’ என்று சொன்னதுபோல எண்ணினாள்.
அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக் கொண்டு வந்தவள். உடனே இளகி, அவளிடம் சங்கதி பூராவும் சொன்னாள்.
‘மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!’ என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டுவிட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்ச நேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. ஏதோ பெருத்த குற்றம் செய்தவள் போலத் திகிலடைந்தாள். ‘ஐயையோ! பைத்தியம் போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிக் கொண்டிருக்கிறேனே!’ என்று எண்ணினவள்போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.
ஆனால் எவ்வளவு நேரந்தான் கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம்.
துக்கத்தில், நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு சிறு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?
வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக்கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு குக்கிராமத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தபொழுது கோழி கூவியதுகூடக் காதில் வந்துபட்டது.
‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒருபக்கம்.
‘ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.
இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவதுபோல் இருந்தது.
எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
‘செங்கற்பட்டில் பல் தேய்த்துக்கொண்டு காபி சாப்பிடுவோமா?’ என்று கேட்டேன்.
‘எல்லாம் பட்டணத்தில்தான்!’ என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள். பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
‘இதோ ஆயிற்று, இதோ ஆயிற்று!’ என்று சொல்வதுபோல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.
ஆனால் எங்களுக்கு என்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வண்டி வேண்டுமென்றே ஊர்வதுபோல இருந்தது.
எழும்பூர் வந்தது கடைசியாக.
ஸ்டேஷனில் யாருமில்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை - எல்லோரு இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வரவேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று.
வீட்டுக்குப் போனோம். வீடு பூட்டியிருந்தது.
உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை இப்பொழுது!
ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணி நேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.
‘நீங்கள் கும்பகோணமா?’ என்றார்.
’ஆமாம்-’ என்றேன்.
‘நோயாளி - நேற்றிரவு - இறந்துபோய்விட்டார்’ என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்.
’இறந்து-? அது எப்படி? அதற்குள்ளா?’ அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை.
‘சிவராமையர்-?’
’ஆமாம், ஸார்!’
‘ஒருவேளை-’
‘சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.
கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம்.
அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!
ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.
பிறகு-?
விடிந்துவிட்டது.
*****
தட்டச்சு : சென்ஷி

Sep 29, 2010

''இன்றைய கவிதையை விளக்க இன்னொருவர் தேவை''-நீல. பத்மநாபன்


எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1938-ம் ஆண்டு பிறந்தவர். கேரள மாநில மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவரது படைப்புகளில் மண்ணின் தன்மையும், மக்களின் யதார்த்த வாழ்வையும் காணலாம். ''உதயதாரகை'' இவர் எழுதிய முதல் நாவல். ஆனால் இவர் பேசப்பட்டது இவரின் நான்காவது நாவலான 'தலைமுறைகள்' மூலம்தான். அடுத்தது 'தேரோடும் வீதி'. இது அவரின் சுயசரிதை என பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர் இதனை மறுத்து வருகிறார். அண்மையில் தி.ஜானகிராமனின் இலக்கியப் படைப்புகள் பற்றிய விவாதத்திற்காக சென்னை வந்திருந்தபோது, அம்பலம் வாசகர்களுக்காக அவர் அளித்த விசேஷ பேட்டியிலிருந்து...

neelapadmanaban_2
இலக்கியம் எப்படி உங்களை வரித்துக் கொண்டது?

என் சின்ன வயதிலேயே பாட்டி, அப்பா, அம்மா இவர்களிடமிருந்த வாசிப்பு அனுபவம் என்னையும்  தொடர்ந்தது. அதிலிருந்து கையெழுத்துப் பிரதியாக இலக்கியங்களை உருவாக்கினேன். அப்போது எங்கள் வீட்டுப் பக்கத்தில் டி.ஆர்.ராஜமாணிக்கம் கம்பெனி நாடகம் நடந்து வந்தது. அதில் வரும் பாட்டின் ராகங்களுக்கு ஏற்ப நான் பாட்டு எழுதுவேன். இப்படியே என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. என் 10, 12 வயதிலேயே நிறையப் படித்தேன். பின்னர் college magazine-ல் நிறைய எழுதினேன். இவையெல்லாம்தான் என்னை நிறைய எழுத வைத்தது. இதைத் தொடர்ந்து நான் நேரடியாக எழுத்துத் துறைக்கு வந்துவிட்டேன்.


உங்கள் நாவலில் இன்றும் பேசப்படுகிற, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 'தலைமுறை' நாவல் குறித்து...?

நீங்கள் நேரடியாக தலைமுறைக்கு வந்ததினால் அதற்கு முன்னால் நான் எழுதிய நாவல்கள் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. தலைமுறை எனது நாலாவது நாவல். முதலில் 'உதய தாரகை' என்ற நாவல், வாஞ்சிநாடு இதழில் வந்தது. 'தலைமுறை' நாவலின் உண்ணாமலை ஆச்சி, கூனாங்காணி பாட்டா போன்றவர்கள் என் சமூகத்தைச் சார்ந்தவர்கள். என் செட்டியார் சமூகத்தில் பின்பற்றப்பட்ட ஆசார அனுஷ்டானங்கள், என் பக்கத்து வீட்டில் திருமணமாகிச் சென்ற பெண்ணை திரும்பப் கொண்டு வந்துவிட்டது. இவையெல்லாம் என்னை பாதித்ததால்தான் 'தலைமுறைகள்' பிறந்தது. நீங்கள் சொல்வதுபோல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் நாவல் இதுதான் என்பதில் சந்தோஷமடைகிறேன்.

'யாத்திரை' என்ற கதை மரணத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்த கதை வந்த காலம் romantic கதைகள் பிரபலமாக இருந்தது. எப்படி இந்த ஐடியா வந்தது?

திருவனந்தபுரத்தில் எனக்கு திருமணமாகி மனைவியுடன் மாடி வீட்டில் தனியாக இருந்தோம். அந்த வீட்டிலிருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் மாடியில் இருந்ததினால் கீழே நடப்பவைகள் காட்சிகளாகத்தான் தெரியும். அப்படித்தான் ஒரு பிணத்தை எடுத்துச் சென்றார்கள். அது என்னுள் கேள்வி கேட்கச் செய்தது. அதுதான் 'யாத்திரை'. இறந்தவனைப் பற்றி... தூக்கிச் செல்லும் நாலு பேரும் நினைத்துக் கொள்வதுதான் கதை. அதை எழுதி முடித்தபோது எனக்கும் வித்தியாசமாகத் தோன்றியது.

'தலைமுறை' நாவலிலிருந்து முற்றிலும் மாறானது 'பள்ளி கொண்டபுரம்'. திருவனந்தபுரம் பற்றிய புரிதல் இல்லாமலும்-நாயர் சமுதாயம் பற்றி தெளிவு இல்லாமல் அந்த நாவல் படைக்க முடியாது. அதைப் பற்றி...?

ஏற்கெனவே சொன்னதுபோல் என் சமூகம் எதுவென்று சொல்லிவிட்டேன். இப்போது திருவனந்தபுரம் என்று சொல்லப்படும் இடம் திருவாங்கூர் என்று சொல்லப்பட்ட காலத்தில் கன்னியாகுமரி, நாகர்கோயில், பத்மநாபபுரம், இவையெல்லாம் அதனுள் வந்தவைதான். ஆனால், நீங்கள் சொன்ன மாதிரி 'பள்ளி கொண்டபுரம்' நாவலை நகரம் சார்ந்து எழுதுவதாகத்தான் தீர்மானித்தேன். அதுவும் நாயர் சமூகத்தில் உள்ள சிக்கல் நானறிந்தது. அதை தமிழர் பார்வையில் பதிவு செய்வதை மட்டுமே நான் செய்தேன். இன்னொன்று நாவலில் கதாபாத்திரங்கள் எதார்த்தமாக இருப்பதை வைத்து எழுத்தாளரை மதிப்பிடக்கூடாது. நான் காட்டியது நகரத்தின் ஒரு பகுதியை மட்டுமே.

எழுத்தாளனுக்கு சமூகப் பற்று அவசியமா?

நான் கலந்துகொண்ட தி.ஜானகிராமனின் எழுத்துத் தொடர்பான கூட்டத்தில் அவர் அறியாமலே அவரின் படைப்புகளில் சமூக அக்கறை வந்ததாக சொல்கிறார்கள். அப்படி இல்லை. சமூக அக்கறை இல்லாமல் எந்த எழுத்தாளனும் இலக்கியம் பண்ண முடியாது. ஆனால் அந்த வழி ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். அதனால் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வழியில் கலகக்காரனாக இருக்கிறான். ஏனென்றால் அந்த எழுத்தாளனும் சமூகத்திலிருந்துதானே வந்தவன். ஆகவே எல்லா எழுத்தாளர்களும் சமூக உணர்வுள்ள கலகக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதே நிஜமானதும், உண்மையானதும்.

ஒரு மனிதனுக்கு அறிவுசார்ந்த செயல்பாட்டைவிட உணர்ச்சி செறிவுதான் கலைப்படைப்பிற்கு முக்கியமானது என்கிறீர்கள், படைப்பை அறிவு ரீதியாக அணுகுவது தப்பு என்கிறீர்களா?

எல்லா செயல்பாட்டையும் அறிவுரீதியாகப் பார்த்தால் அது முடிந்த முடிவாகும். அதன் தாக்கமோ, எதிர்ப்போ நமக்கு தெரியாமல் போகும். அறிவு ரீதியாகப் பார்க்கும் பார்வைக்கு அடுநிலை என்று எதுவும் இல்லை. உணர்ச்சி ரீதியாகப் பார்க்கும்போது அதன் அடுத்த கட்டம் நமக்கு கிடைக்கிறது. நடந்த செயற்பாட்டிற்கு புதுவகையான முடிவும் கிடைக்கிறது. அது கற்பனைகளுக்கும், தளங்களை விரிவுபடுத்தவும் ரொம்ப உதவியாக இருக்கிறது. அதன்பின்னர் கலைப்படைப்புக்கு ஏற்றவாறும், கலைத்தன்மையுடனும் உருமாற்றம் பெறும். அதற்கு உணர்ச்சி இருந்தால்தான் அங்கு கலைத்தன்மை வரும். இல்லையென்றால் போட்டோ போல் இருக்கும்.

எஸ்.குப்தன் நாயர் எழுதிய விமர்சனத்தில் ''நீலபத்மநாபனின் கதைகளில் கதை அம்சம் மிகுதியாக இல்லை என்கிறாரே'' இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

கதை அம்சம் என்பது, நவீனத்துவச் சிந்தனையில் வந்ததுதான். நிகழ்ச்சிக்கு முக்கியமில்லாத விஷயத்தை கதையாகச் சொல்லி நிரூபிப்பதுதான் எழுத்தாளனின் வேலை என்று நினைக்கிறேன். ஆனால் கதை சொல்வது என்பது சங்க காலம் தொட்டே மாறிவரும் சமாச்சாரமாகும். இப்போது பல இஸங்களும், பல பாணிகளும் வந்தபின்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கதை சொல்கிறார்கள். எதை சொன்னாலும் அங்கு சொல்லப்படும் நிகழ்ச்சிதான் முக்கியம். நவீன கதையில் கதை இல்லாத கதையை சொல்வதுதான் வடிவமாகும். குப்தன் நாயர் அப்படிச் சொன்னதில் எனக்கு சந்தோஷம்தான்.

சிறு பத்திரிகைகள்-வணிகப் பத்திரிகைகள் இரண்டிலும் எழுதுகிறீர்களே! இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

தமிழில் சிறு பத்திரிகைகள் ஒரு கௌரமான விஷயமாக இருக்கிறது. சோதனைப்படைப்புகள் முதலில் சிறுவட்டத்தில்தான் வரும். நானே அறிமுகமானது சிறுபத்திரிகை மூலம்தான். ''சாந்தி'', ''இலக்கிய வட்டம்'' போன்ற பத்திரிகைகள்தான் என்னைத் தெரியப்படுத்தியது. நாங்கள் சிறுபத்திரிகை மூலமாக பல இலக்கியம் தொடர்பான விஷயங்களை செய்துவருகிறோம். வணிகப் பத்திரிகைகளும் அவ்வப்போது நல்ல படைப்புகளை வெளியிடுகிறார்கள். நாங்கள் விழா நடத்தி புத்தகம் வெளியிட்டபோது அந்த விழாவில் நடந்த ஒரு நல்ல விஷயம் ''குருஷேத்திரம்'' புத்தகம் வெளியானதுதான் என்று சொன்னவர்கள், இன்று தமிழ் இனி விழா நடத்தியிருக்கிறார்கள். இது சிறு பத்திரிகைகள் ஆரோக்கியமானதாக இருந்ததினால் நடந்ததுதான்.

உங்கள் நாவல்கள் யதார்த்த வகையைச் சார்ந்தது என்று சொல்லலாமா?

என் நாவல்களைப் பற்றி நான் சொல்லக் கூடாது. ஆனால் பலர் என் நாவல்களை யதார்த்த வகை என்று சொல்லுகிறார்கள். நானும் பல எழுத்தாளர்களின் படைப்புகள் படித்துவருகிறேன். எனக்கு எழுத்துக்கு வைக்கும் பெயர்கள், இஸங்கள் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் மனதில் தோன்றுவதைதான் நான் எழுதுகிறேன், அதை கற்பனையுடன் இணைத்து எழுதுகிறேன். இது யதார்த்தம் என்றால் இது என் பாணி. அதை விட்டு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையாக பிரிக்கக் கூடாது. சில இடங்களில் யதார்த்தத்தை மீறவும் நான் முயற்சி செய்ததுபோல் தெரியும். ஆனால் அப்படியல்ல. அவையும் யதார்த்த வகை நாவல்கள்தான்.

உங்கள் கவிதைகள் பாட்டுப் போல் இருக்கும்-இப்போதைய கவிதைகள் குறித்து?

நீங்கள் என் கவிதையைப் பாட்டுப் போல் என்கிறீர்கள். என் கவிதைகளை அதாவது, பாடல்களை நான் நாடகக் கொட்டகையிலிருந்துதான் எழுதக் கற்றுக் கொண்டேன், அதனால் இருக்கலாம். என் 16 வயதில் எழுதிய கவிதைகளை பிற்பாடு வெளியிடும்போது அவைகள் பாடல்கள் போல் இருக்கின்றன. இப்போது வரும் கவிதைகளை நான் படித்து வருகிறேன். சிலதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கவிதை என்பது மனசில தைக்கிற மாதிரியும், தீயை உண்டாக்குவதாகவும் இருக்கவேண்டும். தமிழில் அப்படி கவிதைகள் இப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்தக் கவிதைகளை விளக்கிச் சொல்வதற்கு இன்னொருவர் தேவைப்படுகிறார்.

உங்கள் சிறுகதைகளிலிருந்து நாவல் மிகவும் வேறான ஒன்றாக இருக்கிறதே?

நீங்கள் சொல்லும் சிறுகதை, நாவல் இரண்டும் இருவேறு ஊடகங்கள். அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சிலர் சொல்வதைப்போல் சிறுகதையின் நீட்சியல்ல நாவல். கதாசிரியன் என்பவன் விரிவான விளக்கம் தர வேண்டியவன். சிறுகதை, கவிதை எல்லாம் தளத்திற்குள்ளேயே நின்று கதை சொல்லவேண்டும். அதனால் என் கதைகளும் அதுபோலவேதான். நான் முதல் சொன்னதுபோல் சம்பவங்களின் தொகுப்புத்தானே நாவல். எனக்கு மட்டுமல்ல, எந்த எழுத்தாளர்களுக்கும் வேறு வேறாகத்தான் இருக்கும்.

உங்கள் எழுத்துகளில் தத்துவார்த்த தேடல்கள் அதிகமாக இருக்கிறதே?

தத்துவம் என்பது சாமியார்களுக்கு மட்டுமே கை வருவதல்ல. நல்ல முறையில் குடும்பம் அமைந்துள்ளவர்களுக்கும் கைவருவதுதான். வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொண்டால், அதுவே நம் ஆன்மாவை நாம் உணர்வதற்கான வழிகாட்டியாக இருக்கும். நான் யார் என்பதை எனக்கு உணர்த்துவதற்கும் என்னை 'நான்' யார் என்று கேள்வி கேட்கவும் ஆரம்பித்தபோது உருவான நாவல்தான் 'கூண்டினுள் பட்சி' நாவல்.

இன்னொரு நாவலான 1215 பக்கங்கள் கொண்ட 'தேரோடும் வீதி'யில் சொல்ல வந்தது என்ன? அது உங்கள் சுயசரிதையா?

'தேரோடும் வீதி' என் சுயசரிதை என்றால் 'பைல்கள்', 'தலைமுறை', இவையெல்லாம் எந்த வகையில் வரும். எழுத்தாளன் எழுதினால் அதை மட்டுமே பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு சுயசரிதையா என்பதெல்லாம் அபத்தமானது. அந்த நாவலில் எழுத்தாளன் சிவ கதிரேசன் முன்னுக்கு வரத்துடிக்கும் ஆர்வம்தான் கதையாகும். அறிவியல்வாதி தற்கொலை பண்ணிக் கொள்வதில்லை. அடுத்த கட்டம் தன்னை நிலைநாட்டுவதற்குத்தான். எந்த எழுத்தாளனையும் குறிவைத்து அதை எழுதவில்லை. அது எழுத்தாளனைப் பற்றிய கதை அவ்வளவே!

விமர்சகர் எம்.ஏ. நுஃமான் 'தேரோடும் வீதி' நாவலில் வரும் சிவ.கதிரேசனின் தோல்வி எழுத்தாளர் நீல.பத்மநாபனின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ளாரே?

நுஃமான் அவர் சார்ந்திருக்கும் குழுவை சந்தோஷப்படுத்தச் சொன்ன விமர்சனம் அது. அப்படிப் பார்த்தால் ஜே.ஜே. சில குறிப்புகள் எழுதிய சுந்தர ராமசாமியைச் சொல்லவேண்டும். திரவியத்தை எப்படி எடுத்துக் கொண்டார். இதுதான் தமிழர்களிடம் உள்ள குழுச்சண்டை மனப்பான்மை. எழுதுவதற்கு ஒரு பத்திரிகை அனுமதிப்பதால் வேண்டாதவர்களையெல்லாம் திட்டிக்கொண்டேயிருப்பார். இது ஆரோக்கியமான இலக்கியத்தின் வளர்ச்சியாக இருக்க முடியாது.

கடைசியாக நீங்கள் படித்த எழுத்தாளர்கள் யார்?

இளம் வயதிலேயே கையில் கிடைத்த எல்லாப் புத்தகங்களையும் படித்து வந்துள்ளேன். புதுமைப்பித்தன் கதைகள், க.நா.சு.வின் 'பொய்த்தேவு' போன்றவைகளும், ஷேக்ஸ்பியரின் படைப்புகள், நகுலன், டால்ஸ்டாய், தாஸ்தவ்யேஸ்க்கி, மலையாளத்தில் என்.வி.கிருஷ்ணவாரியாரின் படைப்புகள் என நான் தேடிப்பிடித்த படைப்புகள் அதிகம். இன்றுவரை வாசகனாக இருக்கிறேன்.

நன்றி: அம்பலம் இணைய இதழ்

Sep 27, 2010

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே LAASARAA இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? “அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதம் எழுதிக்கிறாள்!” என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத்திலடிக்காமல், தன் கன்னத்திலேயே இடித்துகொண்டு, ஏளனம் பண்ணலாம்! பண்ணினால் பண்ணட்டும், பண்ணட்டும்; நான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலை தீபாவளியதுமதுவுமாய், அவ்வளவு தூரத்திலிருக்கிறவர், படித்தது படித்ததுதான். எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே? வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ?
இதென்ன முதல் கடிதமே முகத்தில் அறையற மாதிரி ஆரம்பிக்கிறது என்று தோன்றுகிறதோன்னோ? சரி, நான் அசடு, போங்கோளேன்; திருப்திதானே? நான் வெகுளி, எனக்கு மனசில் ஒண்ணும் வைத்துக்கொள்ளத் தெரியாது. அப்பாகூட அடிச்சுப்பார்; ”ஜகதாகிட்டே யாரும் அசதி மறதியாய்க்கூட ஒரு ரகஸ்யத்தைச் சொல்லிடாதேயுங்கள். ஒருத்தர்கிட்டேயும் சொல்லக்கூடாது என்றால் ஒரு கடிதாசுத் துண்டிலாவது அதை எழுதி எறிந்து விடுவாள். இல்லாவிடில் அவளுக்கு மண்டை வெடித்துவிடும். ஜகதா அவ்வளவு ஆபத்தான மனுஷி.” ஆமாம். அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்கள். நான் பின் யாரிடத்தில் சொல்லிக் கொள்வது, தலை தீபாவளிக்கு என் கணவர் என்னுடன் இல்லாத கஷ்டத்தை? என் அப்பா அம்மாவுக்கு எழுதலாமா? எழுதினால், புக்காத்து விஷயங்களைப் பிறந்த வீட்டுக்கு விட்டுக் கொடுத்தேன் என்கிற பொல்லாப்பைக் கட்டிக்கவா? நான் அசடாயிருக்கலாம்; ஆனால் அவ்வளவு அசடு இல்லை. அப்புறம் எனக்கு யாரிருக்கா; நீங்களே சொல்லுங்களேன்!
தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன்னால் அம்மா வந்திருந்தாள், ஆசையா பெண்ணையும் மாப்பிள்ளையையும் தலை தீபாவளிக்கு அழைத்துப் போகணும் என்று. நீங்கள் ஊரில் இல்லை. இருக்கவும் மாட்டேள் என்று தெரிந்ததும் அவள் முகம் விழுந்ததைப் பார்க்கணுமே, எடுத்து மறுபடியும் சேர்த்து ஒட்ட வைக்கிற தினுசாய்த் தானிருந்தது.
”சரி, மாப்பிள்ளைதான் இல்லை, ஜகதாவைக் கூட்டிக் கொண்டு போகிறேனே! நாங்களும் பிரிஞ்சு கொஞ்ச நாளாச்சு. உங்களிஷ்டப்படியே கல்யாணமாகி நாலாம் நாளா கிருஹப்பிரவேசத்துக்கு விட்டதுதானே!” என்று சொல்லிப் பார்த்தாள்.
ஆனால் அம்மா (உங்கள் அம்மா - இப்போ எனக்கு இரண்டு அம்மான்னா ஆயிட்டா!) ஓரக் கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே, “என் பிள்ளை எப்போ அங்கே வர முடியல்லியோ உங்கள் பெண் இங்கேயே நாலு பேரோடு ஸல்லோபுல்லோன்னு இருந்துட்டுப் போறாள்! இனிமேல் எங்கள் பெண்ணும்தானே! அப்புறம் உங்களிஷ்டம். அவளிஷ்டம். இங்கே ஒருத்தரும் கையைப் பிடிக்கிறதாயில்லே!” என்றார்.
இதென்ன கன்றுக் குட்டிக்கு வாய்ப்புட்டை போட்டு பாலூட்டற சமாசாரமா? என்னை அம்மா ஆழம் பார்க்கிறது தெரியாதா, என்ன? நான் ஒண்ணும் அவ்வளவு அசடு இல்லை. இந்த வீட்டிலேயே யாரு பளிச்சுனு பேசறா? இங்கேதான் பேசினதுக்குப் பேசின அர்த்தம்  கிடையாதே! எனக்குத் திடீர்னு சபலம் அடிச்சுண்டது. என் கையொட்டின தம்பி சீனுவைப் பார்க்கனும்னு. ஒரு நிமிஷம் என்னை பிரிஞ்சு இருந்ததில்லை. காலையில் கையலம்பி நனைஞ்ச சட்டையை மாத்தறதிலிருந்து, ராத்திரி தொட்டிலில் அவன் படுக்கையை விரிக்கிற வரைக்கும் அக்காதான் எல்லாம் பண்ணியாகணும். இப்போ குழந்தை என்ன பண்றானோ? ஆனால் நான் இங்கேயே இருக்கேன்னு சொல்லிவிட்டேன். அம்மா கண் தளும்பிற்று. அம்மா பேசாமே போயிட்டாள். நான் கொஞ்ச நாழி திக்பிரமை பிடிச்சு நின்றேன். அம்மா குறுஞ்சிரிப்புடன் என்னை ஒரு நிமிஷம் ஆழ்ந்து நோக்கி விட்டுக் காரியத்தைப் பார்க்கப் போயிட்டார். அவருக்கு உள்ளூற சந்தோஷம். எனக்குத் தெரியும், நான் பரீட்க்ஷையில் ஜெயித்து விட்டேன் என்று. என்ன பரீக்ஷை? பெண்ணாய்ப் பிறந்தபின் ஸ்வதந்திரம் ஏது என்கிறது தான்.
“ஆமாம்; நான் கேட்கிறேன் - இதென்ன உத்தியோகம், ஒரு நாள் கிழமைக்குக் கூட பெற்றவர் உற்றவர் கூட இல்லாமல்படிக்கு? என்னதான் ‘காம்’பில் கிளம்பிப் போனாலும் சமயத்துக்கு லீவு வாங்கிக் கொண்டு திரும்பி வர முடியாதா?
ஆனால் எனக்கே தெரிகிறது; பெண்கள் என்ன, புருஷர்களுக்குத்தான், என்ன சுதந்திரம் இருக்கிறது? எங்களுக்கு வீடு என்றால் உங்களுக்கு உத்தியோகம். பார்க்கப்போனால் யார்தார் விடுதலையாயிருக்கிறார்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையிலிருக்கிறோமே, இந்த உலகத்தில்! பணக்காரன் தங்கக் கூண்டில். இந்த இரண்டு ஸ்திதியிலுமில்லாமல் நம்மைப் போல் இருக்கிறவர்கள் இதிலுமில்லை; அதிலுமில்லை; காலை ஊன்றக்கூட ஆதாரமில்லாமல், அந்தரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். இல்லாவிடில் இந்தச் சமயத்தில் நாம் பிரிந்து நீங்கள் எங்கேயோ இருப்பானேன்? நான் ஏங்கி உருகித் தவித்துக்கொண்டு? உத்தியோகத்தை உதறிவிட்டு ஓடிவந்துவிட முடிகிறதா? நான் ஒண்ணும் அவ்வளவு அசடு இல்லை. மனஸு வெச்சேன்னா எல்லாம் எனக்குத் தெரியும். இப்போ மனஸு வெச்சிருக்கேன்!
ஆனால் அதற்காக என்னோடு பேசக் கூடாது என்று இருந்ததா? போகிற சமயத்தில் என்னிடம் வந்து, ‘ஜகதா, நான் போயிட்டு வரட்டுமா?” என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால், தலையைச் சீவி விடுவார்களா? அதையும் தான் பார்த்து விடுகிறது; என்ன ஆகிவிடும்? சாந்தியைத்தைக்குத் தள்ளிப்போட்டு விட்டாலும் வாய் வார்த்தை கூட பேசிக்கக்கூடாது என்றால் பிள்ளைகள் கலியாணம் பண்ணிக் கொள்வானேன்? இந்த வீடே வேடிக்கையாய்த்தானிருக்கிறது. நீங்கள் எல்லாம் இப்படியிருக்கிறதால்தானே நாங்கள் எல்லாம் வெட்கம் கெட்டவர்களாகி விடுகிறோம்?
ஆனால் அம்மாவே சொல்லியிருக்கிறாள். கூட்டுக் குடித்தனம் என்றால் அப்படித்தானிருக்கும் என்று. அவளும் சம்சாரி வீட்டில்தான் வாழ்க்கைப்பட்டாளாம். இடம் போகாத வீட்டில் நாலு ஜோடிகள் வாசம் பண்ணுமானால் என்ன பண்றது? வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டால் கேட்கவே வேண்டாம். திடீர்னு ஒரு ஜோடியின் ஒரு படுக்கை தானாகவே திண்ணையில் வந்து விழுந்து விடுமாம். சீட்டைப் போட்டுக் குலுக்கினாற் போல் யார் படுக்கை என்று போட்ட பிறகுதான் தெரியுமாம். சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது; திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி வாயை மூடிண்டிருக்க வேண்டியதுதான். அம்மா சொல்றப்போ எனக்கு சிரிப்பாய் வரும், இந்தச் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னால் அப்பா கூடச் சொன்னார்: “இதென்னடி, இது அவ்வளவு உசிதமோ? ஒரே சம்சார வீடாயிருக்கிறது. பையன் நாலு பேருக்கு நடுவே நாலாமவனாயிருக்கிறான். இன்னும் கலியாணத்துக்கு  ஒன்று இரண்டு பெண்கள் காத்திருக்கிறாப் போலிருக்கிறது...”
“இருக்கட்டும், இருக்கட்டும், நிறையக் குடித்தனமாயிருந்து நிறையப் பெருகட்டும். நாளாவட்டத்தில் இது தான் நம் பெண்ணுக்கு நல்லதா விளையும், பாருங்கோ. இப்போ நமக்கு என்ன குறைஞ்சு போச்சு? எடுத்தவுடனே பிக்கு பிடுங்கல் இல்லாமல், கையை கோத்துண்டு போனவாளெல்லாம் கடைசியில், உலகம் தெரியாமல், எது நிலைச்சுது தெரியாமல், நாயும் பூனையுமா நாறிண்டிருக்கிறதை நான்  பார்த்துண்டுதானே இருக்கேன்! பையன் நல்ல வேளையா நாலாம் பிள்ளையாத்தானே இருக்கான்? என் மாதிரி, என் பெண், வீட்டுக்கு மூத்த நாட்டுப்பெண்ணாய் வாழ்க்கைப்படவேண்டாமே?”
அம்மா அப்படிச் சொல்றப்போ நன்னாத்தானிருக்கு. நாவலில் கதாநாயகியாயிருக்க யார்தான் ஆசைப்பட மாட்டார்கள்? ஆனால் தனக்கென்று வரப்போத்தானே தெரியறது? நிஜம்மா, நீங்கள் அன்றைக்கு ஆதரவாய் எனக்கு ஒரு வார்த்தை கூட இல்லாமல் வண்டியிலேறிப் போயிட்ட பிறகு, எனக்கு அழுகையா வந்துவிட்டது. என் நெஞ்சின் பாரத்தை யாரிடம் கொட்டிக் கொள்வேன்? எல்லாரும் எனக்குப் புதிசு, வாயில் முன்றானை நுனியை அடைச்சுண்டு கிணற்றடிக்கு ஓடிப்போயிட்டேன்.
எத்தனை நாழி அங்கேயே உட்கார்ந்திருதேனோ அறியேன்.
“என்னடி குட்டீ, என்ன பண்றே?”
எனக்குத் தூக்கிப் போட்டது. அம்மா எதிரே நின்னுண்டிருந்தாள். உங்கம்மா செக்கச் செவேல் என்று நெற்றியில் பதக்கம் மாதிரி குங்குமமிட்டுக் கொண்டு கொழ கொழன்னு பசுப்போல் ஓரொரு சமயம் எவ்வளவு அழகாயிருக்கிறார்!
”ஒண்ணுமில்லையே அம்மா!” என்று அவசரமாய்க் கண்ணைத் துடைத்துக் கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை.
“அடாடா! கடுஞ் ஜலதோஷம். மூக்கையும் கண்ணையும் கொட்டறதா? ராத்திரி மோர் சேர்த்துக்காதே” (கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது!) “என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே; உன் உடம்பு எங்களுக்குப் பிடி படறவரைக்கும் உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ- அட; குட்டி இதென்ன இங்கே பாருடீ!”
அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த்தார். அவசரமாய் நானும் எழுந்து என்னென்று பார்த்தேன்; ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.   
“ஏ குட்டி, எனக்குத்தான், கண்சதை மறைக்கிறதா? கிணற்றில் ஜலம் இருக்கோ?”
“இருக்கிறதே!”
“குறைஞ்சிருக்கா?”
”இல்லையே, நிறைய இருக்கே!”
”இருக்கோன்னோ? அதான் கேட்டேன்; அதான் சொல்ல வந்தேன். கிணற்று ஜலத்தை சமுத்திரம் அடித்துக் கொண்டு போக முடியாதுன்னு! நேரமாச்சு. சுவாமி பிறையின் கீழ் கோலத்தைப் போடு-” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.
நான் கிணற்றடியிலேயே இன்னும் சற்று நேரம் நின்றிருந்தேன். நெஞ்சில் சின்னதாய் அகல் விளக்கை ஏற்றி வெச்ச மாதிரியிருந்தது. மேலே மரத்திலிருந்து பவழமல்லி உதிர்ந்து கிணற்றுக்குள் விழுந்து கொண்டிருந்தது. தும்பையறுத்துக் கொண்டு கன்றுக்குட்டி முகத்தை என் கையில் தேய்த்துக் கொண்டிருந்தது.
இந்த வீட்டில் யார்தான் பளிச்சென்று பேசுகிறார்கள்? வெளிச்சம் எல்லாம் பேச்சில் இல்லை. அதைத்தாண்டி அதனுள்தான் இருக்கிறது.
ஆனால் ஊமைக்கு மாத்திரம் உணர்ச்சியில்லையா? அவர்களுக்குத்தான் அதிகம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் அசல் ஊமையில்லையே, ஊமை மாதிரி தானே! எனக்கு ‘ரெஸ்பெக்டே’ இல்லையோன்னோ? ஆமாம், அப்படித்தான். போங்கோ நான் உங்களுக்கு இப்போ கடிதம் எழுதவில்லை. உங்களுடன் கடிதத்தில் பேசி கொண்டிருக்கிறேன். இல்லை, கடிதாசியில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் யோசனை என்னுடையது. அதை யாராலும் தடுக்க முடியாது. என்னாலேயே தடுக்க முடியாதே, நான் என்ன செய்வேன்? நான்தான் அப்பவே சொல்லிவிட்டேனே, என் நெஞ்சிலிருக்கிறதை அப்படியே கொட்டிவிடுவேன் என்று!
எனக்கு மாத்திரம் தெரியாதா, நீங்கள் நெஞ்சில் முள் மாட்டிண்ட மாதிரி, கண்டத்தை முழுங்கிண்டு, முகம் நெருப்பாய்க் காய, வாசலுக்கும், உள்ளுக்குமா அலைஞ்சது? அப்போ உங்களுக்கு மாத்திரம் என்னோடு பேச ஆசையில்லை என்று நான் சொல்ல முடியுமா? அதை நினைத்தால்தான் எனக்குத் துக்கம் இப்போகூட நெஞ்சை அடைக்கிறது. என்ன பேசவேண்டும் என்று நினைத்தீர்களோ? அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லை. இதற்கு முன்னால் நீங்கள் யாரோ, நான் யாரோ? பரதேசிக் கோலத்தில் படி தாண்டி உள்வந்து நீங்கள் என் கைபிடித்தும் ஜன்மேதி ஜன்மங்கள் காத்திருந்த காரியம் நிறைவேறி விட்டாற்போல் எனக்குத் தோன்றுவானேன்?
அப்படிக் காத்திருந்த பொருள் கைகூடிய பின்னரும், இன்னமும் காத்திருக்கும் பொருளாகவே இருப்பானேன்? இன்னமும் ஜன்மங்களின் காரியம் நிறைவேறவில்லையா? இப்பொழுது நெருப்பு என்றால் வாய் வெந்துபோய் விடாது. தாலி கட்டின வீட்டில் அடித்து விழுகிறாயே என்று கேட்காதேயுங்கள். இப்போ நான் சொல்லப் போவதைத் தைரியமாய்த்தான் சொல்லவேணும். நீங்கள் எங்கேயோ ‘காம்ப்’ என்று தூரதேசம் போய்விட்டீர்கள். இந்த நிமிஷம் எந்த ஊரில் எந்த ஹோட்டலில், சத்திரத்தில், எந்தக் கூரையை அண்ணாந்து பார்த்தபடி என்ன யோசனை பண்ணுகிறீர்களோ? நானும் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் திரும்பி வருவதற்குள் எனக்கு எதுவும் நேராது என்று என்ன நிச்சயம்? நினைக்கக்கூட நெஞ்சு கூசினாலும், நினைக்கத்தான் செய்கிறது. உங்களைப் பற்றியும் அப்படித்தானே? அந்தந்த நாள் ஒரு ஒரு ஆயுசு என்று கழியும் இந்த நாளில், நாமிருவரும், இவ்வளவு சுருக்க, இவ்வளவு நாள் பிரிந்திருக்கும் இந்தச் சமயத்தில், நம்மிருவரிடையிலும் நேர்ந்திருக்கும் ஒரு ஒரு பார்வையிலும், மூச்சிலும் தாஅழ்ந்த ஒன்றிரண்டு பேச்சுக்களும், நாடியோ, அகஸ்மாத்தாவோ, ஒருவர் மேல் ஒருவர் பட்ட ஸ்பரிசமோ, நினைவின் பொக்கிஷமாய்த்தான் தோன்றுகிறது. நாங்கள் அம்மாதிரி பொக்கிஷங்களைப் பத்திரமாய்க் காப்பாற்றுவதிலும் அவர்களை நம்பிக் கொண்டிருப்பதிலும் தான் உயிர் வாழ்கிறோம்.
என் தகப்பனாருக்கு வாசலில் யாராவது வயதானவர்கள் போனால், அவரை அறியாமலே அவர் கைகள் கூம்பும். “என்னப்பா?” என்று கேட்டால் சொல்வார், “அம்மா இந்தக் கிழவனார் வயது நான் இருப்பேனா என்று எனக்கு நிச்சயமில்லை. இந்த நாளில் இத்தனை வயசு வரைக்கும் இருக்கிறதே, காலத்தையும், வயசையும் இவர்கள் ஜயம் கொண்ட மாதிரிதானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்குகிரேன்,” என்று வேணுமென்றே குரலைப் பணிவாய் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்கையில், ஏதோ ஒரு தினுசில் உருக்கமாயிருக்கும்.
ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? இந்தக் குடும்பத்திலேயே, ஆயுசுக்கும் ரணமாய், தீபாவளிக்குத் தீபாவளி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் திருஷ்டாந்தம் இல்லையா? நீங்கள் இப்போது நால்வராயிருப்பவர்கள், ஐவராயிருந்தவர்கள் தானே.
கடைசியில் எதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேனோ, அதுக்கே வந்து விட்டேன். நீங்கள் இல்லாமலே நடந்த தலை தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பற்றித்தான்.
அம்மாவைப் பார்த்தால் ஒரு சமயம் ப்ரமிப்பாய்த்தானிருக்கிறது. அந்த பாரி சரீரத்துடன் அவர் எப்படிப் பம்பரமாய்ச் சுற்றுகிறார், எவ்வளவு வேலை செய்கிறார். ஓய்ச்சல் ஒழிவில்லை! சிறிசுகள் எங்களால் அவருக்குச் சரியாய்ச் சமாளிக்க முடியவில்லையே! மாடிக்குப் போய் அவர் மாமியாருக்குச் சிசுரூஷை பண்ணிவிட்டு, மலம் முதற்கொண்டு எடுக்க வேண்டியிருக்கிறது - வேறொருவரையும் பாட்டி பணிவிடைக்கு விடுவதில்லை - அப்பாவுக்கு என்ன, இந்த வயசில் இவ்வளவு கோபம் வருகிறது! ஒரு புளியோ, மிளகாயோ, துளி சமையலில் தூக்கி விட்டால், தாலத்தையும், சாமான்களையும் அப்படி அம்மானை ஆடுகிறாரே! அவரைக் கண்டாலே மாட்டுப் பெண்களுக்கெல்லாம் நடுக்கல். அழகாயிருக்கிறார், வழிந்த சுழி மாதிரி, ஒல்லியாய், நிமிர்ந்த முதுகுடன்; இந்த வயசில் அவர் தலையில் அவ்வளவு அடர்த்தியாய்த் தும்பை மயிர்! கண்கள் எப்பவும் தணல் பிழம்பாவேயிருக்கின்றன. அம்மா சொல்கிறார்: “என்ன செய்வார் பிராம்மணன்? உத்தியோகத்திலிருந்து ‘ரிடையர்’ ஆனபிறகு பொழுது போகவில்லை. ஆத்தில் அமுல் பண்ணுகிறார். ஆபிஸில் பண்ணிப் பண்ணிப் பழக்கம்! இனிமேல் அவரையும் என்னையும் என்ன செய்கிறது? எங்களை இனிமேல் வளைக்கிற வயசா? வளைத்தால் அவர் ‘டப்’பென முறிஞ்சு போவார். நான் பொத்தைப் பூசணிக்காய் ‘பொட்’டென உடைஞ்சு போவேன். நாங்கள் இருக்கிறவரைக்கும் நீங்கள் எல்லாம் ஸஹிச்சுண்டு போக வேண்டியதுதான். இந்த மாடியிலிருக்கிற கிழவியை வந்த இடத்துக்குச் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒண்ணு இருக்கு. அப்புறம்-”
“ஏன் அம்மா இப்படியெல்லாம் பேசறேள்?” என்பார் மூத்த ஓர்ப்படி.
”பின்னே என்ன, நாங்கள் இருந்துண்டேயிருந்தால், நீங்கள் உங்கள் இஷ்டப்படி எப்போ இருக்கிறது?”
”இப்போ எங்களுக்கு என்னம்மா குறைச்சல்?”
அம்மாவுக்கு உள்ளூறச் சந்தோஷந்தான். ஆனால் வெளிக் காண்பித்துக் கொள்ள மாட்டார். “அது சரிதாண்டி, நீ எல்லோருக்கும் முன்னாலே வந்துட்டே. பின்னாலே வந்தவாளுக்கெல்லாம் அப்படியிருக்குமோ? ஏன், என் பெண்ணையே எடுத்துக்கோயேன்; அவளுக்குக் காலேஜ் குமரியா விளங்கணும்னு ஆசையாயிருக்கு. இஷ்டப்படி வந்துண்டு போயிண்டு, உடம்பு தெரிய உடுத்திண்டு... நான் ஒருத்திதான் அதுக்கெல்லாம் குந்தகமாயிருக்கேன். அவள் பிறந்ததிலிருந்தே அப்பா உடன் பிறந்தமார் செல்லம். நான் வாயைப் பிளந்தேன்னா முதன்முதலில் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பவள் அவள்தான். என் வயிற்றுப் பிண்டமே இப்படியிருந்தால், வீட்டுக்கு வந்தவா நீங்கள் என்ன என் பேச்சைக் கேட்டுடப் போறேள்?”
”இல்லேம்மா; நாங்கள் நீங்கள் சொன்னதைக் கேட்கறோம்மா..” என்று ஏகக் குரலில் பள்ளிப் பையன்கள், வாய்ப்பாடு ஒப்பிப்பது போல், கோஷ்டியாய்ச் சொல்லுவோம்.
“ஆமா என்னமோ சொல்றேள்; காரியத்தில் காணோம். என்னைச் சுற்றி அஞ்சுபேர் இருக்கேள். முதுகைப் பிளக்கிறது; ஆளுக்கு அஞ்சு நாள் - ஏன், நானும் செய்யறேன். என் பெண் செய்யமாட்டாள்; அவள் வீதத்தை நான்தான் செஞ்சாகணும். ஆளுக்கு அஞ்சு நாள் காலையிலெழுந்து காப்பி போடுங்களேன் என்கிறேன். கேட்டதுக்குப் பலன் எல்லோரும் இன்னும் அரைமணி நேரம் அதிகம் தூங்கறேள்.”
எங்களுக்கு ரோஸமாயிருக்கும். இருந்து என்ன பண்ணுகிறது? அம்மாவை எதிர்த்து ஒண்ணும் சொல்லமுடியாது. நாங்கள் 5 1/2 மணிக்கு எழுந்தால் அவர் ஐந்து மணிக்கு எழுந்து அடுப்பை மூட்டியிருப்பார். ஐந்து மணிக்கு எழுந்தால் அவர் 4 1/2 மணிக்கு எழுந்து காப்பியைக் கலந்து கொண்டிருப்பார். நாலரை மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு. இந்தப் போட்டிக்கு யார் என்ன பண்ண முடியும்?
“வாங்கோ, வாங்கோ; காப்பியைக் குடிச்சுட்டுப் போயிடுங்கோ, ஆறி அவலாய்ப்போய் அதை மறுபடியும் சுட வைக்காதபடிக்கு; அதுவே நீங்கள் பண்ற உபகாரம். நான்தான் சொல்றேனே; நான் ஒண்டியாயிருந்தப்போ எல்லாத்தையும் நானேதானே செஞ்சாகணும்; செஞ்சிண்டிருந்தேன். இப்போ என்னடான்னா கூட்டம் பெருத்துப் போச்சு; வேலையே ஏலம் போட்டாறது. ஊம், ஊம்... நடக்கட்டும்.. நடக்கட்டும். எல்லாம் நடக்கிற வரையில் தானே? நானும் ஒரு நாள் ஓஞ்சு நடு ரேழியில் காலை நீட்டிட்டேன்னா, அப்போ நீங்கள் செஞ்சுதானே ஆகணும்? நீங்கள் செஞ்சதை நான் ஏத்துண்டுதானே ஆகணும்? மடியோ, விழுப்போ, ஆசாரமோ, அநாசாரமோ-”
அம்மா அவர் காரியத்தைப் பற்றிச் சொல்லிக்கட்டும். எல்லாமே அவரே செஞ்சுண்டாத்தான் அவருக்குப் பாந்தமாயிருக்கிறது. எங்களைப் பெற்றவர்களும் ஏதோ தங்களுக்குத் தெரிஞ்சதை எங்களுக்குச் சொல்லித்தான் வைத்திருக்கிறார்கள். எங்களுக்குத் தெரிஞ்சதை, எங்களால் முடிஞ்சவரை நன்றாய்த்தான் செய்வோம். ஆனால் அவர் ஆசாரத்தைப்பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வதில் கடுகளவு நியாயம்கூட கிடையாது. ஜலம் குடிக்கும்போது ஒரு வேளையாவது பல்லில் டம்ளர் இடிக்காத நாள் கிடையாது; இதை யாராவது சொன்னால்- இதற்கென்று கொஞ்சம் தைரியமாய் மூத்த ஓரகத்திதான் கேட்கமுடியும்- ஒப்புக்கொள்ள மாட்டார். “எனக்குக் காது கேட்கல்லையே!” என்று விடுவார். இதென்ன காதுக்குக் கேட்காவிட்டால் பல்லுக்குத் தெரியாதா என்ன?
உங்கள் தங்கை எங்கேயாவது திரிந்துவிட்டு, ரேழியில் செருப்பை உதறிவிட்டு காலைக்கூட அலம்பாமல் நேரே அடுப்பங்கரையில் வந்து, “என்னம்மா பண்ணியிருக்கே?” என்று வாணலியிலிருந்து ஒற்றை விரலால் வழித்துப் போட்டுக் கொண்டு போவாள். அதற்கு கேள்விமுறை கிடையாது. அதுக்கென்ன செய்வது? நான் அப்படியிருந்தால், என் தாயும் என்னிடம் அப்படித்தான் இருந்திருப்பாளோ என்னவோ? ஆனால் அம்மா ஏதோ, தன் வார்த்தை சொல்றதுன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இவ்வளவு பெரிய சம்சாரத்தில் இத்தனை சிறிசுகள், பெரிசுகள், விதவிதங்கனிடை உழல்கையில், எந்த சீலத்தை உண்மையா கொண்டாட முடியும்?
ஓரோரு சமயம் அம்மா சொல்வதைப் பார்த்தால், என்னவோ நாங்கள் அஞ்சு பேரும் வெறுமென தின்று தெறித்து வளைய வருகிற மாதிரி நினைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வீட்டுக்கு எத்தனை நாட்டுப் பெண்கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் மிஞ்சி வேலையிருக்கிறது. சமையலை விட்டால், வீட்டுக் காரியம் இல்லையா, விழுப்புக் காரியம் இல்லையா, குழந்தைகள் காரியம் இல்லையா,  சுற்றுக் காரியம் இல்லையா? புருஷாளுக்கே செய்யற பணிவிடைக் காரியங்கள்.. இதெல்லாம் காரியத்தில் சேர்த்தியில்லையா? இந்த வீட்டில் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பந்திகள், ஒவ்வொருத்தருக்கும் சமயத்துக்கு ஒரு குணம். ஒருத்தருக்கு குழம்பு, ரஸம், மோர் எல்லாம் கிண்ணங்களில் கலத்தைச் சுற்றி வைத்தாக வேண்டும்; ஒருத்தருக்கு எதிரே நின்று கொண்டு கரண்டி கரண்டியாய்ச் சொட்டியாக வேண்டும். நீங்களோ மௌன விரதம்! தலை கலத்தின் மேல் கவிழ்ந்துவிட்டால் சிப்பலைச் சாய்க்கக் கூட முகத்துக்கும் இலைக்கும் இடையில் கிடையாது; ஒருத்தர் சதா சளசளா வளவளா, கலத்தைப் பார்த்துச் சாப்பிடாமல் எழுந்த பிறகு, “இன்னும் பசிக்கிறதே, ரஸம் சாப்பிட்டேனோ? மோர் சாப்பிட்டேனோ?” என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார். குழந்தைகளைப் பற்றியோ சொல்ல வேண்டாம்.
எல்லோர் வீட்டிலும் தீபாவளி முந்தின ராத்திரியானால் நம் வீட்டில் மூணு நாட்களுக்கு முன்னதாக வந்துவிடுகிறது. அரைக்கிறதும், இடிக்கிறதும், கரைக்கிறதுமாய் அம்மா கை எப்படி வலிக்கிறது? மைஸூர்ப்பாகு கிளறும்போது கம்மென்று மணம் கூடத்தைத் தூக்குகிறது. நாக்கில் பட்டதும் மணலாய்க் கரைகிறது. அது மணல் கொம்பா, வெண்ணையா? எதை வாயில் போட்டாலும் உங்களை நினைத்துக் கொள்வேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மௌனம். ஒன்றைத்தவிர வேறெதைத் தனியாய் அநுபவிக்க முடியும்? மௌனம் கூட ஒரு ‘ஸ்டே’ஜூக்குப் பிறகு அநுபவிக்கிற விஷயமில்லை. வழியில்லாமல் ஸஹித்துக் கொள்ளும் சமாசாரம்தான். உங்களுக்கும் எனக்கும் மௌனமாயிருக்கிற வயசா? நெஞ்சக் கிளர்ச்சியை ஒருவருக்கொருவர் சொல்லச் சொல்ல, அலுக்காமல், இன்னமும் சொல்லிக் கொள்ளும் நாளல்லவா? நீங்கள் ஏன் இப்படி வாயில்லாப் பூச்சியாயிருக்கிறேள்? நீங்கள் புருஷாள். உங்களுக்கு உண்மையிலேயே விரக்தியாயிருக்கலாம். நான் உங்களைவிடச் சின்னவள்தானே! உங்கள் அறிவையும் பக்குவத்தையும் என்னிடம் எதிர்பார்க்கலாமா? உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது என்னுடன் நீங்கள் பேசணும், எனக்குப் பேச்சு வேணும். உங்கள் துணை வேணும்... ஐயையோ, இதென்ன உங்களைக் கையைப் பிடித்து இழுக்கிற மாதிரி நடந்து கொள்கிறேனே! என்னை மன்னிச்சுக்கோங்கோ, தப்பா நினைச்சுக்காதேங்கோ. ஆனால் எனக்கு உங்களையும் என்னையும் பற்றித் தவிர வேறு நினைப்பில்லை. ‘நானும் நீயும்’ எனும் இந்த ஆதாரத்தி ஒட்டின சாக்குத்தான் மற்றதெல்லாம். எனக்கு இதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், எழுத வந்ததுகூட மறந்து விடுகிறது.
ஆனால், ‘நானும் நீங்களும்’ என்று எல்லாம் எண்ணவும், எழுதவும் சுவையாயிருந்தாலும் குடும்பம் என்பதை மறந்து எங்கே ஒதுக்கி வைக்க முடிகிறது, அல்லது மறந்துவிட முடிகிறது? குடும்பம் என்பது ஒரு க்ஷீராட்சி. அதிலிருந்துதான் லக்ஷ்மி, ஐராவதம், உச்ரவஸ் எல்லாம் உண்டாகிறது. குடும்பத்திலிருந்து நீங்கள் முளைத்ததனால் தானே எனக்குக் கிட்டினீர்கள்? ஆலகால விஷமும் அதிலிருந்துதான்; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதில்தான். ஒன்றுமில்லை, அல்ப விஷயம்; இந்தக் குடும்பத்திலிருப்பதால்தானே, தீபாவளியை நான் அநுபவிக்க முடிகிறது! நீங்க்ள் எங்கேயோ இருக்கிறீர்கள்.
எனக்குத் தோன்றுகிறது. நானும் நீயுமிருலிருந்து பிறந்து பெருகிய குடும்பத்தில் நானும் நீயுமாய் இழைந்து மறுபடியும் குடும்பத்துக்குள்ளேயே மறைத்துவிட்ட நானும் நீயின் ஒரு தோற்றசாக்ஷிதான் தீபாவளியோ? குடும்பமே நானும் நீயாய்க் கண்டபின், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. தீபாவளிக்கு முதல் ராத்திரி. கூடத்து ஊஞ்சலில் புது வேஷ்டிகளும் புடவைகளும் சட்டைகளும் ரவிக்கைகளும் போராய்க் குவிந்திருப்பதைப் பார்த்ததும் ஏன் இத்தனை துணிகளையும் நானே உடுத்திக் கொண்டு விட்டால் என்ன? பொம்மனாட்டி துணிகளை நானும் புருஷாள் துணிகளையும், உங்களுக்காக நானே! நீங்கள்தான் இல்லையே, எல்லாமே இந்த விசுவரூப நானும் நீயுக்குந்தானே?
அம்மா ஒரு மரச் சீப்பில் கரும் பச்சையாய் ஒரு உருண்டையை ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தார்.
”குட்டீ, சாப்பிட்டுட்டையா?”
”ஆச்சு அம்மா”
”தின்ன வேண்டியதெல்லாம் தின்னாச்சா?”
”ஆச்சு -” (அந்தக் கோதுமை அல்வாவில் ஒரு துண்டு வாங்கிட்டால் தேவலை. நான்தான் துண்டு போட்டேன். ஆனால் கேக்கறதுக்கு வெக்கமாயிருக்கே!)
“அப்படியானால் உக்கார்ந்துக்கோ, மருதாணியிடறேன்.”
அம்மா என் பாதங்களைத் தொட்டதும் எனக்கு உடல் பதறிப்போச்சு. “ என்னம்மா பண்றேள்?” அம்மா கையிலிடப் போறாராக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் பேச்சு அம்மாவுக்கு  காது கேட்கவில்லை. என் பாதங்களை எங்கோ நினைவாய் வருடிக் கொண்டிருந்தார். வேலை செய்தும் பூப்போன்று மெத்திட்ட கைகள் எனக்கு இருப்பே கொள்ளவில்லை. அம்மா திடீரென்று என் பாதங்களைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு அவை மேல் குனிந்தார். அவர் தோளும் உடலும் அலைச்சுழல்கள் போல் விதிர்ந்தன. உயர்ந்த வெண் பட்டுப்போல் அவள் கூந்தல் பளபளத்தது. என் பாதங்களின் மேல் இரு அனல் சொட்டுகள் உதிர்ந்து பொரிந்தன.
“அம்மா! அம்மா!” என்று அழுகை வந்து விட்டது. அதுவே ஒட்டுவாரொட்டி. எனக்கும் தாங்கிக்கிற மனசு இல்லை.
”ஒண்ணுமில்லேடி குட்டி. பயப்படாதே.” அம்மா மூக்கை உறிஞ்சிக்கொண்டு கண்ணைத் துடைத்துக்கொண்டார். “எனக்கு என்னவோ நினைப்பு வந்தது. எனக்கு ஒரு பெண் இருந்தாள். முகம் உடல்வாகு எல்லாம் உன் அச்சுதான். இப்போ இருந்தால் உன் வயசுதான் இருப்பாள். என் நெஞ்சை அறிஞ்சவள் அவள்தான். மூணு நாள் ஜூரம். முதல் நாள் மூடிய கண்ணை அப்புறம் திறக்கவேயில்லை. மூளையில் கபம் தங்கிவிட்டதாம். இப்போத்தான் காலத்திற்கேற்ப வியாதிகள் எல்லாம் புதுப்புது தினுசாய் வரதே? பின்னால் வந்த விபத்தில் அவளை நான் மறந்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் இப்போத்தான் தெரியறது. உண்மையில் எதுவுமே மறப்பதில்லை. எதுவுமே மறப்பதற்கில்லை. நல்லதோ கெடுதலோ அது அது, சாப்பாட்டின் சத்து ரத்தத்துடன் கலந்து விடுவதுபோல், உடலிலேயே கலந்துவிடுகிறது. நாம் மறந்துவிட்டோம் என்று மனப்பால் குடிக்கையில், ‘அடி முட்டாளே! இதோ இருக்கிறேன், பார்!’ என்று தலை தூக்கிக் காண்பிக்கிறது. உண்மையில் அதுவே போகப்போக நம்மைத் தாக்கும் மனோசக்தியாய்க்கூட விளங்குகிறது. இல்லாவிட்டால் என் மாமியாரும் நானும், எங்களுக்கு நேர்ந்ததெல்லாம் நேர்ந்தபின் இன்னும் ஏன் இந்த உலகத்தில் நீடிச்சு இருந்திண்டிருக்கணும்...?”
இதைச் சொல்லிவிட்டு அம்மா அப்புறம் பேசவில்லை. தன்னை அமுக்கிய ஒரு பெரும் பாரத்தை உதறித் தள்ளினாற்போல் ஒரு பெருமூச்செறிந்தார்; அவ்வளவுதான். என் பாதங்களில் மருதாணி இடுவதில் முனைந்தார். ஆனால் அவர் எனக்கு இடவில்லை. என் உருவத்தில் அவர் கண்ட தன் இறந்த பெண்ணின் பாவனைக்கும் இடவில்லை; எங்கள் இருவரையும் தாண்டி எங்களுக்குப் பொதுவாய் இருந்த இளமைக்கு மருதாணியிட்டு வழிபட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்துக்கு அந்த இளமையின் சின்னமாய்த்தான் அவருக்கு நான் விளங்கினேன்; எனக்கு அப்படித்தான் தோன்றிற்று. இப்படியெல்லாம் நினைக்கவும் எனக்குப் பிடிக்கும். அதனால்தான்  எனக்கு அப்படித் தோன்றிற்றோ என்னவோ?
இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன. உங்கள் பாட்டி, பிறகு அம்மா - அப்பா, பிறகு நாங்கள் - நீங்கள், பிறகு உங்கள் அண்ணன் அண்ணிமார்களின் குழந்தைகள். ஆனால் இங்கே எல்லா உயிரினங்களின் ஒருமையின் வழிபாடு இருக்கிறது. இங்கே பூஜை புனஸ்காரம் இல்லை. ஆனால் சில சமயங்களில், இந்த வீடு கோவிலாகவே தோன்றுகிறது. மலைக்கோட்டை மேல் உச்சிப் பிள்ளையார் எழுந்தருளிய்யிருப்பது போல் பாட்டி மூன்றா மாடியில்  எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றா மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ரகாரம். ஆறுகால பூஜைபோல், அம்மா பாரி சரீரத்தை தூக்கிக் கொண்டு, குறைந்தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பகமா, சாதமா- எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம்காயத் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது.
சில சமயங்களில் அம்மா, அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள். ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவது போல், ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில், ‘சடக்’கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது.
“என்னடி குட்டீ, இப்போ என்ன விசேஷம்?”
எனக்கேத் தெரிந்தால்தானே? உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிகிறது. அம்மா முகத்தில் புன்னகை தவழ்கின்றது. அன்புடன் என் கன்னத்தைத் தடவிவிட்டு இருவரும் மேலே நடந்து செல்கிறார்கள். அம்மா தாழ்ந்த குரலில் அப்பாவிடம் சொல்லிக் கொள்கிறார்.
“பரவாயில்லை. பெண்ணைப் பெரியவா சின்னவா மரியாதை தெரிஞ்சு வளர்த்திருக்கா.”
அதனால் ஒன்றுமில்லை. என்னவோ எனக்குத் தோன்றிற்று. அவ்வளவுதான். இந்தச் சமயத்தில் இவர்களை நான் நமஸ்கரித்தால், மேலிருந்து இவர்கள் பெற்று வந்த அருளில் கொஞ்சம் ஸ்வீகரித்துக் கொள்கிறேன். சந்ததியிலிருந்து சந்ததிக்கு இறங்கி வரும் பரம்பரை அருள்.
எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளி ஆன பிறகு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தை விடச் சுருக்கவே திரும்பிவருகிறார். சமாசாரம் தந்தி பறக்கிறது. “பாட்டி கீழே வர ஆசைப்படுகிறார்.” அப்பாவும், அம்மாவும் மேலேறிச்  செல்கிறார்கள். நாங்கள் எல்லோரும் சொர்க்க வாசல் தரிசனத்திற்குக் காத்திருப்பது போல் பயபக்தியுடன் மௌனமாய்க் காத்திருக்கிறோம். சட்டென நினைப்பு வந்தவனாய் ஒரு கொள்ளுப்பேர வாண்டு ‘ஸ்டூலை’ வைத்து மேலேறி, மாடி விளக்கின் ‘ஸ்விட்சைப்’ போடுகிறான்.
திடீரென மாடி வளைவில் பாட்டி தோன்றுகிறார். விமானத்தில் சுவாமியை எழுப்பினாற் போல் நாற்காலியில் அவர் இருக்க, அம்மாவும் அப்பாவும் இரு பக்கங்களிலும் நாற்காலியைப் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாய், மெதுவாய், கீழே இறங்குகிறார்கள். பிறகு பத்திரமாய் அப்பா பாட்டியை இரு கைகளிலும் வாரித் தூக்கிக்கொண்டு போய் மனைமீது உக்காத்தி வைக்கிறார். அப்பா பிடித்துக் கொண்டிருக்க, அம்மா, பதச்சூட்டில் வெந்நீரை மொண்டு மொண்டு ஊற்றி, பாட்டி உடம்பைத் தடவினாற்போல் தேய்க்கிறார். நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்க்கிறோம்.
இது ஆராதனை இல்லாது ஏது? ஆமாம், பாட்டியின் உடல்நிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் மாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்ஸவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பது போல், பாட்டிக்கு, நாள், கிழமை, பண்டிகை தினம்போதுதான். சரிவ ஜாக்கிரதையாய் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை பிய்ந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில், மானம் வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப் போகிறோம் என்று தான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்துவிட்டாலும், வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச்சென்று நினைக்கிறேன். வருடங்களில் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது.
பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள், நாங்கள் எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மௌனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்து விட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல, குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது; இவர் இவரா, இதுவா? கோயிலில் நாம் வணங்கிடும் சின்னத்திற்கும்,  இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம்? கோவிலில் தான் என்ன இருக்கிறது?
“ஐயோ ஐயோ-” என ரேழி அறையிலிருந்து ஒரு கூக்குரல் கிளம்புகிறது. என்னவோ ஏதோ எனப் பதறிப் போய், எதிரோலமிட்டபடி எல்லோரும் குலுங்கக் குலுங்க ஓடுகிறோம். ‘வீல்’ என அழுதபடி குழந்தை அவன் பாட்டி மேல் வந்து விழுகிறான். “என்னடா கண்ணே?” அம்மா அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். சேகர் எப்பவும் செல்லப் பேரன். இரண்டாமவரின் செல்வமில்லையா?
“பாட்டி! பாட்டி!” பையன் ரோஸத்தில் இன்னும் விக்கி விக்கி அழுகிறான். “அம்மா அடி அடின்னு அடிச்சுட்டா-”
“அடிப்பாவி! நாளும் கிழமையுமாய் என்ன பண்ணீட்டடா உன்னை!” அம்மாவுக்கு உண்மையிலேயே வயிறு எரிந்து போய்விட்டது. கன்னத்தில் அஞ்சு விரலும் பதிஞ்சிருப்பதைப் பார்த்ததும்,
“காந்தீ! ஏண்டி காந்தீ!!-”
ரேழியறை ஜன்னலில், காந்திமதி மன்னி உட்கார்ந்திருந்தாள். ஒரு காலைத் தொங்கவிட்டு ஒரு காலைக் குத்திட்டு, அந்த முட்டி மேல் கைகளைக் கோர்த்துக்கொண்டு, கூந்தல் அவிழ்ந்து தோளில் புரள்வது கூட அவளுக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் கோபக்கனல் வீசிற்று. உள் வலியில் புருவங்கள் நெரிந்து, கீழ் உதடு பிதுங்கிற்று. அம்மாவைக் கண்டாதும் அவள் எழுந்திருக்கக் கூட இல்லை.
“ஐயையோ!” என் பக்கத்தில் சின்ன மன்னி நின்று கொண்டிருந்தாள். முழங்கையை பிடித்துக் காதண்டை, “காந்தி மன்னிக்கு வெறி வந்திருக்கு” என்றாள்.
காந்தி மன்னிக்கு இப்படி நினைத்துக் கொண்டு, இம்மாதிரி முன்னறிக்கையில்லாது குணக்கேடு வந்துவிடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ மூன்று நாட்களுக்குக் கதவையடைத்துக் கொண்டு விடுவாள். அன்ன ஆகாரம், குளி ஒன்றும் கிடையாது. சந்திரனை ராகு பிடிப்பது போல் பெரிய மனச்சோர்வு அவளைக் கவ்விவிடும். அப்போது அம்மா உள்பட யாரும் அவள் வழிக்குப் போக மாட்டார்கள்.
காந்தி மன்னியின் வாழ்வே தீராத் துக்கமாகி விட்டது. சின்ன மன்னி அப்புறம் என்னிடம் விவரமாய்ச் சொன்னாள். என்னால் நிஜமாகவே கேட்கவே முடியவில்லை. காதையும் பொத்திக்கொண்டு கண்ணையும் இறுக மூடிக்கொண்டு விட்டேன். அந்த காக்ஷியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் இரண்டாவது அண்னா, தீபாவளிக்குச் சீனி வெடி வாங்கப் போய்ப் பட்டாசுக் கடையில் வெடி விபத்தில் மாட்டிக்கொண்டு விட்டாராமே! எந்த மஹாபாவி சிகரெட்டை அணைக்காமல் தூக்கி எறிந்தானோ, அல்ல வேறு என்ன நேர்ந்ததோ? வெடித்த வெடியில் கடைச் சாமான்கள் பனை மர உயரம் எழும்பி விழுந்தனவாமே! அண்ணாவுக்குப் பிராணன் அங்கேயே போய்விட்டதாம் அண்ணாவுக்கு முகமே இல்லையாம்; சில்லு சில்லாய்ப் பேந்து விட்டதாம். முகமிருந்தவிடத்தில் துணியைப் போட்டு மூடிக் கொண்டு வந்தார்களாம்.
சேகர் அப்போ வயிற்றிலே மூணு மாசமாம். இப்போ சேகருக்கு வயது ஏழா, எட்டா?
நிஜம்மா கேக்கறேன்; இந்தக் கஷ்டத்தை நீங்கள் எல்லோரும் எப்படி ஸஹிச்சிண்டிருந்தீர்கள்? அம்மாவும், அப்பாவும் எப்படி இதிலிருந்து மீண்டார்கள்? நீங்கள் எல்லோரும் முதலில் எப்படி உயிரோடிருக்கிறீர்கள்? காந்திமதி மன்னி கருகிப் போனதற்குக் கேட்பானேன்? இது நேர்வதற்கு முன்னால், அவள்தான் ரொம்பவும் கலகலப்பாய், எப்பவும் சிரிச்ச முகமாய் இருப்பாளாமே!
இப்போக்கூட, அந்த முகத்தின் அழகு முற்றிலும் அழியவில்லை.  அவள் சீற்றம் எல்லாம் அவள் மேலேயே சாய்கையில், நெருப்பில் பொன் உருகி நெளிவது போல, தன் வேதனையின் தூய்மையில்தான் ஜ்வலிக்கிறாள். அவளுக்கு அவள் கதி நேர்ந்த பின், மற்றவர் போல் தெறித்துக்கொண்டு பிறந்தகம் போகாமல், எங்களோடு ஒருவராய், இதுவரை இங்கேயே அவள் தங்கியிருப்பதிலும் ஒரு அழகு பொலிகின்றது.
அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச்  சற்றுக் குரல் தணிந்தது.
“ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கல்லே? வா வா, எழுந்திரு - குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக்கையே, இது நியாயமா?”
“நியாயமாம் நியாயம்! உலகத்தில் நியாயம் எங்கேயிருக்கு?”
காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று.
“அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?”
”பாட்டி! பாட்டி! நான் ஒண்ணுமே பண்ணல்லே. ஊசி மத்தாப்பைப் பிடிச்சுண்டு வந்து ‘இதோ பாரு அம்மா’ன்னு இவள் முகத்துக்கெதிரே நீட்டினேன். அவ்வளவுதான்; என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனிய வெச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ்சுட்டா, பாட்டீ!” பையனுக்குச் சொல்லும் போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவனை அணைத்துக் கொண்டார்.
“இங்கே வா தோசி, உன்னைத் தொலைச்சு முழுகிப்பிடறேன்! வயத்திலே இருக்கறபோதே அப்பனுக்கு உலை வெச்சாச்சு, உன்னை என்ன பண்ணால் தகாது?”
அம்மாவுக்குக் கன கோபம் வந்துவிட்டது.
“நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தைக் கொண்டாடிக்க? நானும் தான் பிள்ளையத் தோத்துட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளையவில்லை?”
மன்னி சீறினாள். “உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?”
நாங்கள் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். அம்மாவை நேரிடையாகப் பார்த்து இப்படிப் பேசறவாளும் இருக்காளா? இன்னிக்கு விடிஞ்ச வேளை என்ன வேளை?
அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழேயிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார்.
மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக் கொண்ட குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின. மருமகளின் கூந்தலை முடித்து நெற்றியில் கலைந்த மயிரைச் சரியாய் ஒதுக்கிவிட்டார்.
“காந்தி, இதோ பார், இதோ பாரம்மா-”
சேகர் ஒரு ஊசி மத்தப்பாடை அம்மாவுக்கும் பாட்டிக்கும் முகத்துக்கு நேர் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் கன்னத்தில் கண்ணீர் இன்னும் காயவில்லை.
எங்களில் ஒருவர் விலக்கில்லாமல் எல்லோருக்கும் கண்கள் நனைந்திருந்தன.
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்......
******
தட்டச்சு : சென்ஷி

Sep 25, 2010

தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்-ரமேஷ்-பிரேம்

பின் - நவீனத்துவ தத்துவங்கள், விமர்சனக்ramesh-prem கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ரமேஷ் - பிரேம். பின் நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். இலக்கிய இரட்டையர்களாகவும் அறியப்படும் இவர்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என்று நிறைய எழுதியுள்ளனர். இதுவரை 15 புத்தகங்களும் 4 மொழி பெயர்ப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. பாண்டிச்சேரி அரசின். "கம்பன் புகழ் விருது" இரண்டு முறை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ரமேஷ், முழு நேர எழுத்தாளராக பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். பிரேம், டெல்லி பல்கலைக்கழகத்தில் "Indian languages and Literary Studies" துறையில் விரிவுரையாளராக உள்ளார். இந்நேர்காணல் பாண்டிச்சேரியில் உள்ள ரமேஷ் - பிரேம் இல்லத்தில் எடுக்கப்பட்டது. இதன் மொழிபெயர்ப்பு "மாத்தியமம்" மலையாளப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

எழுத்து என்பது தனி மனித மனம் சார்ந்த படைப்புக் கலையென நம்பப்படுகிறது. இந்நிலையில் ரமேஷ் - பிரேம் எவ்வாறு இணைந்து சிந்திக்கவும் எழுதவும் சாத்தியப்படுகிறது?

நாங்கள் கலையை மட்டுமல்ல. எந்த ஒரு படைப்புச் செயலையுமே தனி மனித மனம் சார்ந்த, தனித்த உணர்வு சார்ந்த செயலாக எண்ணுவதில்லை. தனித்தனியே எழுதிக்கொண்டிருந்த நாங்கள். கவிதையை மனம் சார்ந்த ஊடாட்டங்களின் விளைவாகவும், மொழியைப் பரந்துப்பட்ட கூட்டு நினைவு மற்றும் கனவின் களமாகவும் புரிந்துகொண்டபின், இணைந்து எழுதத் தொடங்கினோம். இன்றைய சூழலில் கலைத்துவமான மனமும், அறிவும் மிகவும் தனிமைப்பட்டும் விலகியும் இருக்கின்றன. பிற மொழிச் சூழல்களைப் போலவே, தமிழிலும் கலைத்துவமான, கவித்துவமான நட்பும் புரிதலும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் எங்களுக்குள் தொடர் உரையாடலும், பேச்சும், முரண்பட்ட எதிரெதிர் வாதங்களும் நிகழ்வதென்பது எங்களுடைய எழுத்துக்கு மட்டுமல்ல, சிந்தித்தல், வாழ்தல் என்பவற்றிற்குக்கூட அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளன. மையம் உடைய, சுயத்தை நிறுவும் பல எழுத்துக்கள்கூட தனி மனித, தனிமனம் சார்ந்த படைப்புகள் அல்ல. எங்களுடையதோ இவற்றிலிருந்து விலகியது. நாங்கள் இணைந்து சிந்திப்பதும், எழுதுவதும் இயல்பானதும் அறிவியல் அடிப்படையில் சரியானதுமாகவே உள்ளது. தமிழ் மரபின் மிகத் தொன்மையான திணைக் கவிதைகள்கூட கூட்டு மனதின், கூட்டுக் கவித்துவத்தின் படைப்புகளே. தனியே எழுதுகிறவர்கள் தாங்கள் கற்றது, பிறரிடமிருந்து பெற்றது, பிற உணர்வுகளுடன் ஊடாடுவது என்பதை ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு மறைப்புக்கு உட்படுத்தி, தமது "பெயரை" மட்டும் முன்னிலைப்படுத்தி உறுதி செய்து விடுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இணைந்து எழுதுதல், "சுயம்" மற்றும் "தனித்த நிலையென்ற" ஒரு பிளவு நிலையை, சிறிய அளவில் கடந்து செல்வதற்கான ஏற்பாடு. இது சாத்தியப்படுவது என்பது பண்பாடு, அரசியல், அறம் என்பவற்றில் ஏற்படும் சிதைவு, வலி, துயரம் என்பவற்றை முழுமையாக எதிர்கொண்ட படைப்பாளிகளுக்கு இன்று தேவையும் நிர்ப்பந்தமும் கூட.

சிந்தித்தலிலும், எழுதுதலிலுமான இந்த இணைப்பு எப்போது தொடங்கியது?

எங்களின் பதின் பருவத்தில் தொடங்கியது. நாங்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி காலங்களில், ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தவர்கள், மேலும் ஒரே வகை சமூகச் சூழல், ஒரே வகை வர்க்கப்பின்னணி, இவற்றோடு எங்கள் இருவருடைய குடும்பங்களின் பாடுகளும் வலிகளும்கூட ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. எங்களுக்குப் பிடித்தமான கவிஞர்களும், எழுத்தாளர்களும், திரைக்கலைஞர்களும் கலகக்காரர்களும், மகான்களும் கூட எனது ஒத்த சிந்தனை முறைக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

யாருடன் உங்கள் கனவுகளையும் வலிகளையும் மிக உயர்ந்த அறங்களையும் மிகக் கீழான மனச்சிக்கல்களையும் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறீர்களோ, அவருடன் உங்களை முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குருவும், ஒரு வழித்துணையும், மனநோய் மருத்துவரும் தேவைப்படுகிறார். நீங்கள் எதைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்கள். நீங்கள் எவருக்காக கண்ணீர் சிந்துகிறீர்கள். எதைக் கண்டு பயப்படுகிறீர்கள், நீங்கள் எவற்றைக் கண்டு வெறுப்பு கொள்கிறீர்கள் என்பவற்றையெல்லாம் பொறுத்ததுதான் சிந்தித்தலும் எழுதுதலும். உங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் குழந்தையுடனோ, ஒரு நாய்க்குட்டியுடனோ நீங்களும் குட்டிக்கரணம் போடுகிறீர்கள். உங்கள் அரசியலும், அறமும் இவைப்பற்றிய கேள்விகளும் குழப்பங்களும் ஒன்றாக உள்ளன. பிறகு இணைந்து எழுதலாம். ஏனெனில் முடிவுகளை நோக்கியோ சாராம்சத்தை நோக்கியோ நீங்கள் செல்லவில்லை. செயல் மற்றும் சிந்தனை மட்டுமே நிகழ்கிறது. ஒருவர் எழுதிய இசைக்குறிப்பை மற்றவர் தனது கருவியில் இசைக்கிறார். நூறு பேர் இணைந்து ஒரே இசையை உருவாக்குகிறார்கள். கலையின் பல வடிவங்கள் கூட்டாகவே உருவாக்கப்படுகின்றன. மார்க்ஸ் - எங்கெல்ஸ். ழீல் தெலஸ் - பெலிக்ஸ் குத்தாரி போன்றவர்கள் சிலவற்றை இணைந்து எழுதியிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து எழுதுவது பற்றியே சிந்திக்கிறோம், உரையாடுகிறோம், எழுத்துக்காக மௌனமாகவும் இருக்கிறோம். யார் முதலில் தொடங்கினாலும், முடியும்போது இருவருடைய சொற்களாலும் அவை நிரம்பிவிடுகின்றன.

உங்கள் அரசியல் என்ன? உங்கள் எழுத்தின் அரசியல் என்ன?

எங்கள் அரசியல் மிகச் சுருக்கமான வடிவில் வன்முறையை மறுப்பது, ஒடுக்குமுறையை எதிர்ப்பது, விடுதலையை ஏற்பது. எங்கள் எழுத்துக்களுக்கோ பலவித அரசியல்கள் உண்டு. பன்மையை நிறுவுதல், பலவித அணுகுமுறைகளை உணர்த்துதல், உடல் மனம் என்பவற்றின் அதிசயத்தை வியந்து கூறுதல், சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தல், மையப்படுத்தப்பட்ட உண்மைகளைக் கலைத்து, பலவித நிஜங்களின் சாத்தியப்பாடுகளை எடுத்துரைத்தல், முரண்படும் உரிமையை முன்வைத்தல், மாற்று அழகியல்களுக்குக் களம் அமைத்தல். இப்படி எத்தனையோ கூறலாம். என்றாலும், எழுதுவதே எங்களுக்கு ஒரு அரசியல் செயல்பாடாகத்தான் தோன்றுகிறது; அதன் பலவித அர்த்தங்களில், அறமும், அழகியலும் தீவிரமடையும் பொழுது நாம் அரசியல் வயப்படுகிறோம்தானே. எங்கள் எழுத்துக்கள் சில சமயங்களில் நாங்கள் இப்படி அரசியல் வயப்படுவதையும்கூட விமர்சிக்கக்கூடிய ஒரு ஆய்வுக்களமாக இயங்குகிறது. அரசியல் இல்லாமல் இருக்கமுடியாதா என்றும்கூட கேட்கிறது.

ஒரு சமூகத்தில் எழுத்தாளருக்கும் எழுத்துக்குமான பங்கு என்ன என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

எழுத்து ஒரு சமூகத்தின் மனச்செயல்பாடு. அது மொழியை இயக்கத்தில் வைக்கும் தளம். இலக்கியம் என்பதும், எழுத்து என்பதும் உண்மை என்று சொல்லப்படுபவற்றிற்குள் உள்ள புனைவுகள் பற்றியும், அழகு என்பதற்குள் உள்ள அச்சமுறுத்தும் தன்மைகள் பற்றியும் தொடர்ந்து பேசுவது. அர்த்தமுடையவை என்பவற்றுக்குள் உள்ள அபத்தங்களையும் அர்த்தமற்றவை என்று ஒதுக்கப்பட்டவற்றிற்குள் உள்ள அதிசயத் தன்மைகளையும் தேடிக் கண்டடைவது. உலகைப் புரிந்துகொள்ள ஒற்றைவழி மட்டும் இல்லை என்றும், மனிதர்கள் என்பதும் வாழ்வு என்பதும் ஏதோ ஒரு வகையும், வடிவமும் கொண்டு முடிந்து போவதில்லை என்பதையும் ஓயாமல் கூறிக்கொண்டிருப்பது. உண்மைகளால் ஒரு சமூகம் மூடப்படும் பொழுது கற்பனைகள், கனவுகள், புனைவுகளின் சாத்தியங்களைத் திறந்துவிடுவதாக உள்ள எழுத்து புனைவுகளால் மூடப்படுபவற்றில் உள்ள உண்மைகளை வெளிக்காட்டுவதாக மாறிவிடுகிறது. மறதிகளால் சூழப்பட்ட ஒரு சமூகத்தில் நினைவுகளை மீட்டுத் தருவதாக உள்ள எழுத்து, அதிக நினைவுகளால் பீடிக்கப்பட்ட சமூகத்திற்கு சில தேவைப்படும் மறதிகளைத் தரக்கூடியதாகவும் மாறுகிறது. மையங்களில் உள்ள முடிவுகளை ஓயாமல் சந்தேகப்படுவதன் மூலம், விளிம்புகளில் மறைந்துபோன மற்றவற்றின் இருத்தலை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமூகத்தில் ஏதோ ஒரு புலன் மட்டும் மையப்பட்டு, மற்றவை பொருளற்றவைகளாக மாற்றப்படும் பொழுது, மறுக்கப்பட்ட புலன்களைச் செயல்பட வைக்கக்கூடியதாக எழுத்து உள்ளது. ஒரு வகையில் எழுத்து தனிப்பட்ட நோக்கத்திற்குள் அடங்குவதும்கூட இல்லை. அது பன்முகத் தன்மையை நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டியது. மனித இருப்பில் இத்தனைச் சாத்தியப்பாடுகளா? என்ற வியப்பைத் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருப்பதன் மூலம், வேறுபட்ட தன்மைகளுக்கான நியாயத்தை வழங்கும் எழுத்துதான், சில சமயங்களில் எத்தனை முரண்பட்டாலும் வேறுபட முடியாத தன்மையையும் கூறிக்காட்டுகிறது.

பன்மைத் தன்மை உடைய ஒரு சமூகத்தில் ஒன்றிணைந்த சிந்தனையும் எழுத்தும் அரசியலடிப்படையில் சாத்தியமா?

எங்களைப் பொருத்தவரை "ஒன்றிணைந்த சிந்தனை". "ஒன்று கலந்த சிந்தனை முறை" என்பவற்றை நாங்கள் ஏற்கவில்லை. பன்மைத்தன்மையும் பல வகை வடிவமும் ஏற்கப்பட வேண்டும்; வேறுபாடுகளுக்கான நியாயமும் அவற்றிற்கான இடமும் ஏற்கப்படவேண்டும். இந்த ஏற்பில், புரிதலில் உருவாகும் ஒருங்கிணைப்பே அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை. மையப்படுத்தப்பட்ட அறமோ, சிந்தனை முறையோ, மதிப்பீடோ எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் வன்முறையானதாகவே இருக்கும். நிலவியல், பண்பாட்டியல், வரலாறு, வட்டாரத்தன்மை, சூழலியல் என வேறுபாடுகள் விரியும்போது அறிவியலிலும் உலகு பற்றிய பார்வையிலும் அழகியல், அறம் என்பவற்றிலும் பன்மையும் வேறுபாடுகளும் இருக்கும். நவீனத்துவம் இந்த வேறுபாடுகளை மறுத்து ஒற்றைத் தன்மையுடைய உலகையும், கனவையும், அறிவையும், அறத்தையும் முன்வைத்து தனது செயலை நியாயப்படுத்தியது. அதன் அழிவுத் தன்மைதான் இன்று நம்மைச் சூழ்ந்துள்ளது. பரவலையும் வேறுபாட்டையும் மாறுபடும் உரிமையையும் விலகிச் செல்லும் விடுதலையையும் இன்று புரிந்துகொள்ளத் தொடங்கவேண்டும். இன்றைய எழுத்து இவற்றைப் புரிய வைக்கவேண்டும்.

மேற்குலக அறிவு இன்று அடைந்துள்ள இடம் பற்றி எப்படி விளக்குவீர்கள்?

உலகில் எத்தனை இனக்குழு சமூகங்களும் எத்தனை மொழியினச் சமூகங்களும் இருந்தனவோ அத்தனைவித பண்பாடுகளும் அறிவுமுறைகளும் அரசியல் நாகரிகங்களும் இருந்திருக்கின்றன. ஆனால். இன்று இதைச் சொல்வதே முரண்பட்ட ஒரு பயங்கரம் என்று அர்த்தம் ஆகிவிடக்கூடும் என்ற அளவுக்கு அவை அழிவுக்குள்ளாகி இருக்கின்றன. நாகரிகமடைந்த - நாகரிகமடையாத என்ற எதிரிடைகளும், அறிவியல் அடிப்படையிலான சமூகங்கள் - அறிவியல் அடிப்படை அற்ற சமூகங்கள் என்ற எதிரிடைகளும்கூட இன்று உருவாக்கப்பட்டுவிட்டன. இன்று அறிவு, சிந்தனை, தொழில்நுட்பம் என்பதே மேற்குலகின் அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுகின்றன. இது மிகப்பெரிய வன்முறை கொண்ட புனைவு. இன்றுள்ள உலகமயமாதல் என்ற வன்முறைக்கு இதுவே அடிப்படை. பலம் குறைந்த நாடுகளை, தமது பயங்கரவாதச் செயல்களால் அடிமை கொண்டு, பல இன மக்களை அழித்தொழித்த, பல நாடுகளின் இயற்கை வளங்களை நாசம் செய்த மேற்குலக பேரதிகாரத்தின் அழிவுக்கூறுகள் மாறுவேடமிட்டபடி இன்று உலக அறிவியலாக, அழகியலாக, கலை இலக்கியங்களாக, தொழில் நுட்பங்களாக பெரும் தாக்குதலைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிலமும், பண்பாடும் இதில் தனது இடத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய தருணமிது. இந்திய நிலப்பரப்பில் உள்ள மொழிச் சமூகங்கள் கட்டாயம் இந்தச் சிக்கலைப் புரிந்துகொண்டு தமக்கான அறிவை, சிந்தனை முறையை எதிர்காலத்திற்காக கட்டமைக்க வேண்டியது உடனடியாகத் தேவையாக உள்ளது. உலக அறிவைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், உங்கள் நிலத்திற்கானதை உருவாக்கவேண்டும்.

உலகமயமாதலின் பயங்கரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

உலகமயமாதல் என்பது மிகத் தொன்மையான அளவில் ஆக்கிரமிப்புப் போர்களின் மூலம் தொடங்கப்பட்டு, மத்திகால காலனியாதிக்க வன்முறையினால் விரிவுபடுத்தப்பட்டு, நவீனத்துவத்தால் உலக அளவில் உறுதி செய்யப்பட்டு, தற்போது முழுமையான மனித இனங்களை, நிலங்களைப் பற்றிப் பிடித்திருக்கிறது. இது அரசியல், பொருளாதாரம், உற்பத்திமுறை, போர் அச்சுறுத்தல் என்ற கண்ணுக்குப் புலப்படும் முறைகளிலும்; பண்பாட்டு அழிப்புகள், இனக்குழு அழிப்புகள், பன்மைத்துவ அழிப்புகள், சிந்தனை முறைகளை மையப்படுத்துதல் என்ற கண்ணுக்குப் புலப்படாத முறைகளிலும் மனிதக் குழுக்களுக்கு எதிரான பயங்கரத்தைச் செய்து வருகிறது. மனிதகுல முன்னேற்றம், உலகளாவிய பரிமாற்றம் என்ற பொய்யான உறுதி மொழிகளுடன் இந்த உலகமயமாதல் எல்லாத்துறைகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது. இதன் வன்முறை பயங்கரமானது. ஏகாதிபத்திய பாசிசம் இதன்மூலம் உருவாகக்கூடியது. பலகோடி மனிதர்களைப் பயனற்றவர்கள் என்று கொன்றழிப்பதை நியாயப்படுத்தக்கூடியது இந்த உலகமயமாதல். உயர் தொழில்நுட்பவெறி, போராதிக்க அச்சுறுத்தல், ஒற்றைத்தள அறிவு, உலக மேலாண்மை, உலகமயமாதல் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று உறவுடையவை. விடுதலையை, மனித நுண்ணுணர்வுகளை, பிற மனித இருப்பை நேசிக்கும். மரியாதை தரும் யாரும் உலகமயமாதலை ஏற்கவோ, சரியென்று கூறவோ முடியாது. உலகமயமாதலையும் அமெரிக்க, ஐரோப்பிய மேலாண்மையையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் வரும் வன்முறைப் போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி ஆயுதங்கள் அனைத்தும் உலகமயமாதலை ஏதோ ஒருவகையில் விரிவுபடுத்தி மக்களையே அழிக்கும். உலக ஆயுத வியாபாரிகள் பல நாடுகளில் உள்நாட்டுப் போர்களையும், மோதல்களையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமயமாதலின் பிரச்சினை பயங்கரம் பற்றிப் பேசும்போது உலகளாவிய சிந்தனை, உலகளாவிய அறிவுமுறை என்பவற்றை எப்படி விளக்குவீர்கள்?

நவீனத்துவம் கூறிய உலகளாவிய, மனித குலம் சார்ந்த என்ற உறுதிமொழிகள் பொய்யானவை என்பது தற்போது புலப்பட்டுவிட்டது. ஒவ்வொரு நிலத்திற்கும், இனத்திற்கும், இனக்குழுவுக்கும் தனித்தனியே அறிவும், பண்பாடும், அணுகுமுறையும், மொழியும், அழகியலும், அறமும், அறிவியல் தொழிநுட்பங்களும் இருக்கும். இவற்றையெல்லாம் பொருளற்றவை என்றும், பயனற்றவையென்றும், தவறானவை என்றும் கூறி ஒதுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எந்த இனமும் மற்றொரு இனத்தைவிட உயர்ந்ததோ, மேலாண்மை செய்யும் உரிமை உடையதோ அல்ல. அழித்தொழிப்பு, போர்த்தாக்குதல், கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் மூலம்தான் ஒரு அறிவின்மீது மற்றொரு அறிவு மேலாண்மை கொள்கிறது. இன்றுள்ள உலகமயத் தன்மைக்குப் பின்னே உள்ள படுபாதகக் கொலைகள் எத்தனை கோடி. போர்கள் எத்தனை ஆயிரம். இன அழிப்பு எத்தனை பயங்கரமானது. இவற்றை சற்றே நினைவுப்படுத்திக் கொண்டால் உலகமயமான, மேற்கு மயமான சிந்தனை முறைகள் அறிவுமுறைகள் என்பவற்றை நாம் மௌனமாக ஏற்றுக்கொண்டு இருக்கமுடியாது. மேற்குலகின் சில மாற்றுச் சிந்தனையாளர்கள் வெள்ளை மையவாதத்தையும் இன ஒழிப்பு அரசியலையும் எதிர்த்து ஏகாதிபத்திய வன்முறையைத் தொடர்ந்து புலப்படுத்தி வருகின்றனர்.

வரலாற்றின் முடிவு (End of History) என்பது பற்றி கம்யூனிச நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு எண்பதுகள் தொடங்கி பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்டுள்ள தத்துவார்த்தச் சிக்கல் பற்றி நீங்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்?

கம்யூனிசம் என்பதை ஒரு தத்துவம் என்பதைவிட, ஒரு கூட்டுக்கனவு என்று கூறலாம். மனிதர்களை நேசிப்பவர்கள் யாருக்கும் இந்தக் கனவு தோன்றலாம். இந்தியாவில் பௌத்தம் இதை வேறு வகையில் முவைத்தது. அம்பேத்கரும், காந்தியும் இதனை வேறு வேறு வார்த்தைகளில் விளக்க முயற்சித்தார்கள். இந்தியாவில் பல மகான்களும் ஞானிகளும் உண்மையான துறவிகளும் இந்தக் கனவைக் கொண்டிருந்தனர். ஆனால், அது ஒரு அரசியல் வடிவமாக, செயல் திட்டமாக மாறும்போது வேறு வடிவம் கொள்கிறது. விடுதலையை நோக்கிய கனவில் மார்க்ஸூம், ஏங்கெல்ஸூம் முன்வைத்த சோசலிசம் என்பது அற அடிப்படையில் கவித்துவமான ஒன்று. ஆனால் வழிமுறை என்பது, அவ்வளவு தெளிவானதோ, எளிதானதோ அல்ல. சோஷலிச அரசுகள் இருந்த நாடுகளில், கட்சிகளின் ஆட்சி இருந்த அளவுக்கு, சோஷலிச அறங்களும் சோஷலிச பண்பாடுகளும் இருந்தனவா என்பது மிக முக்கியமான கேள்வி. அதே சமயம் சோஷலிச கோட்பாடுகள் இன்று அய்ரோப்பா முழுக்க உள்ளீடான பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

சோஷலிச நாடுகளின் சிதைவுகளுக்குக் காரணம் என்று எதை நினைக்கிறீர்கள்?

முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளின் வன்முறைகளும், மூன்றாம் உலக நாடுகளின் துயரங்களும் நிரம்பிய இருபதாம் நூற்றாண்டில், சில நாடுகளில் சோஷலிச அரசுகள் உருவானது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அவை தேசிய அரசுகளே தவிர வேறு இல்லை. இரண்டாம் உலகப் போரினால் உருவான தேசிய அரசுகள், சோவியத் யூனியனில் ராணுவ கண்காணிப்பின் கீழ் ஒருவித சமூகம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் பண்பாடு, அணுகுமுறைகள், சமூக உளவியல், மதிப்பீடுகள் என்பவற்றில் என்ன வகை மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றி இன்றுவரை சரியான பதிவுகள் இல்லை. இந்நிலையில் அந்நாட்டு மக்களே நமது அரசுகளை மாற்றிக்கொண்டார்கள். இது அந்த வகை நாடுகளில் முடிந்திருக்கிறது. ஆனால், மற்ற ஏகாதிபத்திய நாடுகளில் முடியக்கூடியதா என்ன? அந்நாடுகளில் ஏற்பட்டது மாற்றங்கள்தாம். சிதைவுகள் அல்ல. இதனை முன்வைத்து, உலக அரசியல் - சமூகப் பார்வையிலிருந்தே - விடுதலை மற்றும் சமநீதி, சம உரிமை, மக்கள் நல இலட்சியங்களை, கோட்பாடுகளை நீக்கிவிட வேண்டும் என்று மனித அழிப்பு, ஆதிக்கக் கருத்தியலாளர்களும் முதலாளித்துவ ஜந்துக்களும் கூறுவது விஷமத்தனமானது. அறிவியல் அடிப்படையற்றது.

இதற்கு மாற்றுக்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

மேற்கத்திய அய்ரோப்பிய உதாரணங்களை விட்டுவிட்டு இந்தியச் சூழலை, இந்திய வரலாற்றை, இந்தியாவின் எண்ணற்ற மரபுகளைக் கற்று, இந்திய மரபுகளிலிருந்தே சிலவித விடுதலைக் கோட்பாடுகளைக் கண்டறிய வேண்டும். பண்பாட்டு அரசியல், தனி மனித உளவியல், நுண்ணரசியல், சாதியத்தின் கொடூரம், மதவெறி பாசிசத்தின் வேகம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு மாற்றுகளை உருவாக்க வேண்டும். இந்தியச் சமூகங்களின் அடிப்படை மனக்கட்டமைப்புகளை நிதானமாக ஆய்ந்தறிய வேண்டும். ஏதோ ஒரு கோட்பாடு எல்லாவற்றையும் தீர்த்துவிடும் என்று முரட்டுவாதம் செய்து கருத்தியல் அதிகாரத்தை நிறுவுவதை விட்டுவிட்டு, எல்லா மனிதநேயக் கருத்துக்களிலிருந்தும், அணுகு முறைகளிலிருந்தும் நமக்கான கூறுகளைக் கண்டெடுத்து இணைத்து ஆக்கபூர்வமான அரசியல் அறங்களை, மக்கள் மயமான செயல் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். அம்பேத்கரையும், காந்தியையும், பெரியாரையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு பல அடிப்படைக் கூறுகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது. ஆன்மீகம், அறம், சிறு மரபுகளின் ஆக்கபூர்வமான கூறுகள் ஆகியவற்றைப் புரிந்து புதியவகை சேர்க்கைகளை உருவாக்க வேண்டும். இந்திய - தமிழ் - பின் நவீனத்துவப் புரிதல்கள் எங்களுக்கு இதுபோல் சிலவற்றைக் காட்டித் தந்திருக்கின்றன. என்றாலும், இவைப் பற்றிய நீண்ட ஆய்வுகளும், விவாதங்களும் தேவை. அதுவரை ஜனநாயகத்தையும் தேசியத்தையும் அவற்றின் உண்மையான அர்த்தத்தில் வளர்ந்து பாதுகாப்பதற்கே மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது.

இன்றைய சூழலில் நீங்கள் கூறும் பௌத்தத்தின் முக்கியத்துவம் என்ன?

இதுகுறித்து அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்து கூறியிருக்கிறார். காந்தியின் செயல்பாடுகளில் பௌத்தத்தின் முக்கியமான பல கூறுகள் உள்ளன. இந்திய மண்ணிலிருந்தே தோன்றிய மிகப் பெரும் அறச்சிந்தனையான பௌத்தம் தமிழகத்திலும், இந்தியாவிலும் பல நூற்றாண்டுகள் வாழ்வியலில் பிணைந்து இருந்திருக்கிறது. இன்றைய அரசியல் சிதைவுகள், சமூக நோய்கள், மதவெறி வன்முறைகள், உலகமயத்தாக்குதல்கள் என்பவற்றிற்கு மாற்றான புதிய வாழ்வு என்ற கோட்பாட்டை, பௌத்தத்தின் அறமும் தத்துவமும் அமைத்துத்தர முடியும். நமது மக்கள் மறந்துபோன தமது பூர்வீக சமயமான பௌத்தத்தை நினைவூட்டி, மறுஉயிர்ப்பு செய்வதன் மூலம், ஒரு மாற்று அரசியல் சமூக அறத்தையும், பண்பாட்டையும் கட்ட முடியும். மக்கள் இயக்கங்கள் பௌத்தத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதனை சிந்தனை மற்றும் பண்பாட்டுத்தளத்தில் கொண்டு செல்லும்போது பாசிசம் விரிவடைவதைத் தடுக்கமுடியும். நாங்கள் கூறும் தமிழ் பௌத்தம் இன்னும் பல விரிவான பொருளை உடையது.

உங்கள் பார்வையில் தற்கால தமிழ் அறிவு ஜீவிகளின் நிலைப்பாடு அல்லது நிலை என்னவாக உள்ளது?

தமிழகத்தில் காலம்காலமாக ஒரு எதிர்மரபு இருந்து வந்துள்ளது. அறத்தையும் உண்மையையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மை சிந்தனையாளர் குழு இருந்து வந்துள்ளது. மக்களுக்கானவற்றைப் பேசவும், அதிகாரத்திற்கும் அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரானவற்றை வளர்க்கவும், இந்த வகை அறிவு மரபு தொடர்ந்து முயன்று வந்திருக்கிறது. காலனிய, நவீன காலச் சிக்கல்களிலிருந்து உருவான வைகுண்டசாமி, இராமலிங்க அடிகள் தொடங்கிய அயோத்திதாசர், பெரியார், ஈ.வே.ரா. வழியாக சிந்தனை மரபுகள் தமிழில் விரிவடைந்திருக்கின்றன. ஆனால், இவை மக்களிடத்தில் முழுமையாகச் சென்றடையவில்லை.

தற்போது அறிவு ஜீவிகள் என்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் குழப்பத்தை மறைக்க பல முடிவுகளைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் சிக்கலும், அவலமும் பன்முகப்பட்டது. இவற்றைக் கண்டறிந்து பேசவும் ஆய்வு செய்யவுமான அறிவுத்தளம் மிகச் சிறியதாக உள்ளது. மார்க்சிய, பெரியாரிய, காந்திய, அம்பேத்கரிய சிந்தனைகள் ஏதோ கட்சி மற்றும் அமைப்பு கட்டும் செயல் திட்டங்களாகக் குறுக்கப்பட்டுவிட்டன. அய்யோத்திதாசரை முன்வைத்து உருவான பௌத்த சிந்தனை அய்ரோப்பிய தொண்டு நிறுவனமாகிவிட்டது. விவாதங்கள் விரிவாக்கப்படுவதில்லை. மார்க்சியம் பேசுபவர்களுக்கு கிராமிய, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய அக்கறை இருப்பதில்லை. பெரியாரியம் பேசுபவர்களுக்கு சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் பற்றியும் தமிழ்ப் பண்பாட்டு உள்ளீடுகள் பற்றியும் சமூக மனவியல் பற்றியும் புரிதல் இருப்பதில்லை. காந்தியம் என்பது செயலற்ற, தனி மனிதப் பேச்சாகவும், வசதியான கௌரவ வேடமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. அம்பேத்கரியம் என்பது கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சட்டசபையில் இடம் பிடிப்பதன் தேவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு குறுக்கப்பட்டுவிட்டது.

தமிழில் அறிவு - சிந்தனை என்பதன் விரிவான அக்கறைகள் மறதிக்குள்ளாகியிருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் நிறுவனங்கள், அமைப்புகள் இவற்றைத் தமது கருவிகளாக்கிக் கொண்டது முதல் காரணம். மக்கள் குழு என்பது கும்பல் அரசியல், திரைப்பட அரசியல், மத அமைப்பு அரசியல் என்பவற்றைத் தவிர எதையும் அரசியலாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளது. அறிவுஜீவிகள், சமூகச் சிந்தனையாளர்கள் என்பவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகமயமான சிக்கல்கள் பற்றியும் இந்தியச் சமூகம், தமிழ் சமூகம் அடைந்துள்ள சிதைவுகள் பற்றியும் மிகக் குறைவான புரிதல் மட்டுமே கொண்டவர்களாக இருப்பதுடன் தத்தமது சிந்தனைகளை முடிவுகளிலிருந்து தொடங்குபவர்களாகவும் உள்ளனர். இவை பற்றிய ஓரளவு புரிதல் உள்ளவர்கள் சிதறிப்போய் தனிமைப்பட்டு கண்ணில் காணமுடியாத சிறுபான்மையினராகவே இருக்க வேண்டியிருக்கிறது. தமிழக பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் மேடைகளையும் பார்த்து வரும் ஒருவருக்கு எதிர்காலம் பற்றிய எந்த நம்பிக்கையும் ஏற்பட வழியில்லை. கல்பாக்கம், கூடங்குளம் என இரு அணு உலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட தமிழ்நாடு பெரும் ஆபத்தை எப்போதும் தனக்குள் கொண்டுள்ளது. இது பற்றிய எந்தவொரு சொரணையும் தமிழரிடத்தில் இல்லை. பச்சையற்ற மண்ணாக மாறிவரும் தமிழகத்தில் 90 சதவீதம் பேச்சுக்கள் திரைப்படங்கள், திரைப்பட நடிக, நடிகைகள், கிரிக்கெட் பற்றி மட்டுமே இருப்பதை எந்தப் பின்னணியில் புரிந்து கொள்வது. விவசாயம் அழிந்துபோன நிலங்கள் பற்றிய பேச்சும் அழிந்துகொண்டிருக்கும் காடுகள், மலைகள், நீர்நிலைகள் பற்றிய பேச்சும் கூட சிறுபான்மை பேச்சுகளாகவே இருக்கும் இந்தச் சூழலில் அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் என்பவர்களின் இடம் என்ன? காலம் இன்னும் தேவை என்றுதான் தோன்றுகிறது. தமிழில் அறிவுத்துறையும், சமூக அரசியல் சிந்தனையும் மன அமைப்புடன் ஒன்றிய தொடர் நிகழ்வாக மாற இன்னும் காலம் எடுக்கும். அமைப்புகள் தமது எல்லைக்குள் இயங்குவது தவிர்க்கமுடியாதது. ஆனால், சிந்தனையாளர்கள் அவை கடந்த கேள்விகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டியவர்கள்.

தமிழிலக்கியத்தின் எதிர்காலப் போக்குகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்?

தமிழின நவீன இலக்கியம் தொடங்கிய காலத்திலிருந்து மிக முக்கியமான பிரச்சினைகளும் கேள்விகளும் ஆராயப்பட்டு வருகின்றன. தமிழின் நவீன மனம், நவீன வாழ்வு, நவீன அடையாளம், நவீன மதிப்பீடுகள் அதன் மரபான அமைப்புகளுடன் மோதும்போது ஏற்படும் சிக்கல்களும், மாற்றங்களும் ஏற்பதில் நேரும் குழப்பங்களும் பேசப்பட்டுள்ளன. ஆனால் எதார்த்த எழுத்து, எதார்த்தவியல் பார்வை என்பது முக்கியம் பெற்று உறுதியான வடிவமாகிப் போனதனால், தமிழ்ச் சமூகங்களின் பலவித கதை மரபுகள், கதை கூறும் முறைகள் மறுதலிக்கப்பட்டு, எழுத்துக்கான ஒரு உள்ளார்ந்த தணிக்கையும் ஒடுக்குதலும் ஏற்பட்டுவிட்டது. தற்போது புதிய வகை எழுத்து கதை கூறுதல், கதை அமைத்தல், முரண்பார்வைகள், பலகுரல் தன்மை என்பவற்றின் வகைமைகள் மூலம் புதிய வடிவங்களை நோக்கிச் செல்ல முனைந்திருக்கிறது. ஆனால் தமிழில் பலவகைத்தன்மை, சிறு மரபுகள், கதை கூறலின் பன்மைச் சாத்தியப்பாடுகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்ட செவ்வியல் தன்மை உடைய எழுத்துகள் இனி தேவைப்படுகிறது. எதிர்கால எழுத்துக்கள் அதை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. எழுத்து என்பது நுண்மையான ஒரு கலைத்தொழில் என்பதுடன் பன்முக அறிவும் பல்துறைப்பயிற்சியும் தேவைப்படும் நிகழ்கலை வடிவம் என்ற பிரக்ஞையுடன் எழுதப்படும் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. எப்போதும் போல் வெறும் பேச்சுக் கதைகள், பெருங்கலாச்சாரக் கதைகள் அதிகம் பெருகி நுண்ணுணர்வுகளை, நுண்ணறங்களை, நுண்ணழகியல்களை நசிவுபடுத்தும் என்பது மட்டும் தற்போது தெளிவாகத் தெரிகிறது. அவற்றை எதிர்த்து நிற்கும் வலிமையுடன் சிறுபான்மை நுண்ணிலக்கியவாதிகள் செயல்படுகிறார்களா என்பதை இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே நாம் அறிந்துகொள்ள முடியும். எந்த ஒன்றையும் நுகர்பொருளாக்கி ஆற்றல் அழித்துவிடும் சக்தி தற்போதைய ஊடகங்களுக்கு உண்டு. அவற்றின் வன்முறையை மீறி தமிழிலக்கிய வகைமைகள் வளருவதற்கு கடின உழைப்பும் போராட்டமும் நிறைந்த வாழ்வும் எழுத்தாளர்களுக்குத் தேவைப்படுகிறது.

நன்றி: தீராநதி 21 SEPTEMBER, 2005

Sep 24, 2010

இ.பா……. எண்பது!-பாரதி மணி

என் ஐம்பதுவருட நண்பர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு எண்பது வயதாகிறது. சென்ற ஜூலை மாதம் 9-ம் தேதி உயிர்மை பதிப்பகமும் மணற்கேணியும் இணைந்து நடத்திய கருத்தரங்கிலும், அடுத்தநாள் TAG Centre-ல் இ.பா. குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடிய விழாவிலும், தன் நீண்ட, பயனுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், இளமைத்துடிப்புடனும் தன் நியதிப்படி வாழ்ந்த ஒரு நல்ல மனிதரைப்பார்க்க முடிந்தது. இ.பா. நண்பர்களிடம் எந்த எதிர்பார்ப்புகளும் bharthimani4 இல்லாமல் பழகுவார். அவருக்கு யாரும் விரோதிகளில்லை. ‘இலக்கிய அரசியல்’ இல்லாதவர். எதற்கும் விட்டுக்கொடுக்காதவர். தமிழக அரசின் கலைமாமணி விருதை வேண்டாமென்று மறுத்தவர். தனது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி தயங்காமல் சொல்பவர். அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் முகுந்த் சிரமப்பட்டு வாங்கிக்கொடுத்த ‘பச்சை அட்டையை (American Green Card) அங்கு வசிக்க தனக்குப்பிடிக்கவில்லையென்று அங்கேயே வீசி எறிந்துவிட்டு, ஆற்காட்டாரின் மின்வெட்டுகளை சந்திக்க நிரந்தரமாக சென்னை வந்தவர். நான் சென்னை வந்தபிறகு, மீண்டும் எங்கள் நட்பு நெருக்கமானது. வாரத்துக்கொருமுறையாவது, அவரை நானோ, என்னை அவரோ தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தால், பேசிக்கொண்டேயிருப்போம். என் வீட்டிலேயோ, அவர் வீட்டிலேயோ யாராவது வந்து அழைப்புமணி அடிப்பதுவரை அது தொடரும். ‘யாரோ வாசல்லே வந்திருக்கா. அப்புறமா பேசுவோம்’ என்பது தான் எங்கள் கடைசி வாக்கியமாக இருக்கும்! பேசின செல் போனில் Call Duration 48 minutes 22 seconds என்று காட்டும்! எங்களுக்கும் பொழுது போகவேண்டாமா?

சி ல வருடங்களுக்குமுன் தன் மனைவி இந்திராவை இழந்த பார்த்தசாரதி, தன் எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தை மனைவியில்லாமல் கொண்டாட விரும்பவில்லை. மனைவியின் மறைவு, இவரை பெரிய அளவில் பாதித்தது. திருமதி இந்திரா இ.பா.வை ஒரு குழந்தையைப்போல் சீராட்டி குடும்ப பாரத்திலிருந்து இவருக்கு விடுதலையளித்து முற்றிலும் இலக்கியப்பணிக்காக இவரை தமிழுலகத்துக்கு தந்தார். அவர் இருந்ததுவரை, எல்லா குடும்பக்கவலைகளையும் அவரே சுமந்தார். மாதச்சம்பளத்தை இந்திராவிடம் கொடுத்துவிட்டு இவர் கவலையே இல்லாமல் இருப்பார். இ.பாவிடம் ‘இப்போ முகுந்த் எத்தனாவது படிக்கிறான்?’ என்று கேட்டால், கொஞ்சம் யோசித்துத்தான் பதில் சொல்வார்! பார்த்தசாரதி கொடுத்துவைத்தவர். எல்லோருக்கும் இம்மாதிரி மனைவிகள் அமைவதில்லை. இப்போதும் அவருக்கு அரிசி என்ன விலை, LPG சிலிண்டர் என்ன விலையென்று கேட்டால் தெரியாது! தன் அக்கா மகளையே மணந்தார். இந்திரா தன் கணவரின் காரியம் யாவினும் கைகொடுத்த அதிசயப்பெண்மணி. குழந்தைகள் பிறந்து சம்சாரம் ஆனபின்பும் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து Master of Music பட்டம் பெற்றவர். புதுச்சேரியில் இருந்தபோது நாடகப்பள்ளி போட்ட ஒரு நாடகத்துக்கு இசையமைத்திருந்தார். இந்திராவை நான் கடைசியாகப்பார்த்தது சென்னையில் அவர் காலில் அடிபட்டு பிளாஸ்டரோடு படுக்கையில் இருந்தபோது. மூன்று மணிநேரம் சுவாரஸ்யமாக பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். அவரது அபார சங்கீத ஞானம் தான் பேத்தி அபூர்வாவிடம் இப்போது பரிமளிக்கிறது. தன் மனைவி இந்திராவின் இழப்பிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. இ.பா.வும் சங்கீதத்தை விரும்பிக்கேட்பார். அவரால் எல்லா முக்கிய ராகங்களையும் அடையாளம் காணமுடியும். நான் சிலகாலம் செயலராக இருந்த தில்லி கர்நாடக சங்கீத சபாவின் எல்லா கச்சேரிகளிலும் இ.பா.வை பார்க்கலாம்.

ஆர். பார்த்தசாரதி, எழுத்தாளர் ஆனபோது தன் மனைவியின் பெயரையும் சேர்த்துக்கொண்டார். அப்போது அது புது ட்ரென்டை உருவாக்கியது. இவருக்குப்பின்னால் வந்த எழுத்தாளர்கள் பலர் தன் மனைவியின் பெயரையும் ஒட்டிக்கொண்டார்கள், சுஜாதா உட்பட. அப்போது சென்னை வந்தால், பல நண்பர்கள் ‘ஓ, இந்திரா பார்த்தசாரதி பொம்மனாட்டி இல்லையா?’என்று வியந்திருக்கிறார்கள். பிற மாநிலங்களிலிருந்து இவருக்கு Mrs. Indira Parthasarathy என்று பல அழைப்புகள் வந்திருக்கின்றன! இவர் சகோதரர் ஆர். வெங்கடாச்சாரி தன் மகனுடன் இப்போது பெங்களூரில் வசிக்கிறார். இவரும் தில்லியில் Times of India Group வெளியிடும் The Economic Times பத்திரிகையில் Chief News Editor ஆக பணிபுரிந்து ரிட்டயரானவர். எனக்கு பலவிதத்திலும் உதவி செய்திருக்கிறார். தில்லி வரும் என் வெளிநாட்டு வியாபார நண்பர்களைக்குறித்து நானே எழுதிக்கொடுக்கும் நேர்காணல்களையும் புகைப்படங்களையும் தானே பேட்டி கண்டதாக அடுத்தநாள் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் எகனாமிக் டைம்ஸிலும் பெரிய புகைப்படங்களுடன் மூன்றாம் பக்கத்தில் வெளியிடுவார். தங்கள் புகைப்படங்களையும் கட்டுரைகளையும் பத்திரிகையில் பார்க்கும் ஜெர்மானிய நண்பர்கள் இந்தியாவில் அன்று அதுதான் முக்கியச்செய்தி என்று நினைத்து சந்தோஷப்படுவார்கள். என் ஆபீசில் என் புகழ் ராக்கெட் வேகத்தில் உயரே பறக்கும். இப்போதும் பெங்களூர் போனால் அவரை சந்திப்பதுண்டு.

34666_1317046215373_1507276454_30664210_3568118_nஇந்திரா பார்த்தசாரதியும் நானும் தில்லிக்குப்பொனது ஒரே வருடம். 1955. அவர் தில்லி Madrasi Education Association (MEA) – பிற்காலத்தில் தில்லிவாசிகள் அதை Money Eating Association என்று கேலி செய்வோம் --– நடத்திவந்த லோதிரோடு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகச்சேர்ந்தார். லோதி ரோடில் ஒரு அறையில் பிரும்மச்சாரியாக வாசம். சிதம்பரம் மெஸ்ஸில் இருவேளைச்சாப்பாடு. அங்கே ஓரிருமுறை பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. பார்த்தசாரதி பார்ப்பதற்கு இப்போதிருப்பதைவிட இன்னும் அழகாக இருப்பார்! (புகைப்படத்தில் நீங்களே பார்க்கலாம்). அவருக்கு அந்தப்பள்ளியில் சக ஆசிரியர் லக்ஷ்மணன். இந்த ‘ராமருக்கும்’ அவர் லட்சுமணனாகவே எப்போதும் இவருடனேயே இருப்பார். ’அந்த’ லட்சுமணனைப்போலவே, அவருக்கு ‘இந்த’ ராமரிடம் ஒரு பக்தி. எந்த வேலை சொன்னாலும், இன்முகத்தோடே செய்வார். இ.பா.வின் வீட்டில் ஒரு அங்கமாகவே மாறியிருந்தார். இவர் மனைவி இந்திராவுக்கு ஒரு தம்பி. குழந்தைகள் முகுந்த், பத்மா, மாதவிக்கு நல்ல மாமா. இவருடன் எப்போதுமே இருந்தாலும், இலக்கியத்துக்கும் அவருக்கும் ஸ்நானப்ராப்தி கூடக்கிடையாது! நல்ல ஆத்மா….இப்போது எங்கிருக்கிறாரோ? இந்தவருட ஆரம்பத்தில் இந்தப்பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கம் தில்லியில் ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்து, அதற்கு தலைமை தாங்க தன்னை நேரில் வந்து அழைத்ததாகவும், கால்வலி, முதுமை காரணமாக தன் இயலாமையைத்தெரிவித்ததாகவும் சாரதி என்னிடம் சொன்னார். ‘என்ன சிரமம் இருந்தாலும் போயுட்டு வாருமைய்யா! உம்மிடம் படித்த பழைய மாணவர்களை ஒருசேரப்பார்ப்பதும், அவர்கள் ஒவ்வொருவராக உங்கள் காலைத்தொட்டு வணங்கி, ‘சார்! நான் இன்ன வருடம் ஒங்ககிட்டெ படிச்ச மாணவன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதும் எல்லோருக்கும் கிட்டாத பாக்யம் ஐயா! எழுத்தறிவித்தவன் இறைவனல்லவா?’ என்று அவருக்கு நான் ‘உபதேசம்’ செய்தேன்!

1956-ல் எங்கள் தட்சிணபாரத நாடக சபா தொடங்கியவுடன், மாலை வேளைகளில் நாடக  ஒத்திகைக்காக லோதிரோடு தமிழ்ப்பள்ளிக்குப்போவோம். பள்ளி நிர்வாகம் எங்கள் நாடக ஒத்திகைக்கு ஓரிரு வகுப்பு அறைகளை இலவசமாக தந்துதவியது. அப்போது பள்ளி வேலைகளை முடித்துவிட்டு, ராம லட்சுமணர்களாக இ.பா.வும் லக்ஷ்மணனும் வீட்டுக்குப்போகும் நேரம். ‘எப்போது நாடகம்? எங்கே மேடையேற்றம்?’ போன்ற விசாரணைகள். நான் ஆனந்தவிகடன், கல்கியில் அவரது முத்திரைக்கதைகளைப் படித்துவிட்டு, அவரை சந்திக்கும்போது பாராட்டுவேன். அதன்பிறகு தான் அவரது ‘தந்திர பூமி’ கணையாழியில் வெளிவந்தது என ஞாபகம். எங்கள் மனதில் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப்பெற்றுவிட்டிருந்தார். அவரிடம் பேசும்போது நாங்கள் காட்டும் மரியாதை அதிகமாயிற்று.

எங்களைப்போன்ற தில்லிவாசிகளுக்கு அவர் கதை, நாவல்களில் தமிழ்நாட்டு வாசகர்களை விட ஆர்வம் அதிகமாக இருந்தது. காரணம் அப்போதிருந்த பல தில்லிப்பிரமுகர்கள் அவர் நாவல்களில் கதைமாந்தராக உலா வருவார்கள். அவர் கதைகளில் முக்கிய விஞ்ஞானியும் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன், பூதலிங்கம் ICS, அவர் ம்னைவி ‘கிருத்திகா’, சக்ரவர்த்தி ஐயங்கார், சி.எஸ். ராமச்சந்திரன் ICS, கர்நாடக சங்கீதசபா தலைவர் ஏ.வி. வெங்கடசுப்பன் (சிலர் அவரை ‘ஆளை விடு வெங்கடசுப்பன் என்று கேலி செய்வார்கள்), National Cultural Organisation (NCO) தலைவர் என்.பி. சேஷாத்ரி –-- இவரைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியே தீரவேண்டும் -- இவர்களெல்லாம் இவரது படைப்புகளில் தங்கள் குண இயல்புகளுடன் வந்துபோவது தில்லியில் வாழ்ந்த எங்களுக்கு ஒரு போனஸ் மகிழ்ச்சி. ஒரு கதையில், ஒரு ICS அதிகாரியின் மனைவி, வெளிநாடு போகும் சின்ன அதிகாரிகளிடம் தங்களுக்குத்தேவையான, ஆனால் இந்தியாவில் அப்போது கிடைக்காத Bras, Sanitary Napkins போன்றவைகளின் அளவு கொடுத்து வாங்கி வரச்சொல்வார். அவர் யாரென்பது தில்லிவாசிகளுக்குத்தான் தெரியும். இன்னொரு நாவலில் – வேஷங்கள் என்று நினைக்கிறேன் -- ஒரு சபாவின் தலைவர் எல்லா சங்கீத வித்வான்களையும், அகால வேளையில் வீட்டுக்கு கூட்டிவந்து, ராக்கூத்தடித்து, கட்டிய மனைவியை ஒரு புழு போல் நினைத்து வேலைவாங்கும் படலம் விவரிக்கப்படும். அந்த முகம் யாருடையதென்று எங்களுக்குத்தான் தெரியும். வெளியூர் வாசகர்களுக்கு அவர் ஒரு பாத்திரம் மட்டுமே. இதைப்பற்றி இ.பா.விடம் கேட்டால், சிரித்துக்கொண்டே, ‘நல்லகாலம், அவர்களுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வெகுதூரம். என் கதைகளை அவர்கள் படிப்பதே இல்லை!’ என்று சொல்வார்! அப்படியும் இவர் தன்னைப்பற்றி எழுதியதை படித்து கோபம் கொண்ட ஒரு சபா தலைவர் இவரை பழிக்குப்பழி வாங்க நினைத்து, எமெர்ஜென்ஸி காலத்தில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் இந்திரா காந்தியைப்பற்றி அவதூறாக எழுதியதாக போலீசில் புகார் கொடுத்தார். எமெர்ஜென்ஸியல்லவா? இ.பா. டிபன்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷனுக்கு போக நேர்ந்தது. நல்ல காலமாக இவரிடம் படித்த ஒரு IAS அதிகாரி சரியான சமயத்தில் தலையிட்டு, கொடுத்த புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லையென்று நிரூபித்ததால் வழக்கு தள்ளுபடியாயிற்று! இ.பா. கொஞ்சமும் கவலைப்படாமல், ‘நான் ஜெயிலுக்குப்போனதேயில்லை. கொஞ்சநாள் செளக்யமா இருந்துட்டு வரலாம்னு பாத்தா, அதுமட்டும் நடக்கலே! எமெர்ஜென்ஸிலே உள்ளே போனா இன்னும் விசேஷம்!’ என்று சிரிக்காமல் சொன்னார்.

இதற்கு நேர்மாறான இன்னொரு நிகழ்ச்சி. இ.பா. கல்கியில் ‘ஹெலிகாப்டர்கள் இறங்கிவிட்டன’ என்ற ஒரு தொடர்நாவல் எழுதிவந்தார். அதில் வரும் கதாநாயகன் மணமாகி இரு குழந்தைகளுக்குத்தந்தை. தில்லி அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பவர். அவருக்கு ஒரு நாடக நடிகையுடன் இருந்த தொடர்பு, அதன் விளைவாக தீக்குளிக்கும் மனைவி, அவர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள்…. இப்படிப்போகும். ஆரம்பமான இதழிலேயே இது யாரைப்பற்றிய கதை என்று எங்களுக்கு தெரிந்துவிட்டது. இந்தக்கதையின் உண்மை ‘நாயகன்’ கோபப்படுவதற்குப்பதிலாக, வாராவாரம் கல்கிப்பத்திரிகைக்காக காத்திருக்கத்தொடங்கினார். இவர் இ.பா.வுக்கும் எனக்கும் நெருங்கிய நண்பர். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் கரோல்பாக் போய், பத்திரிகைக்கட்டு வந்து பிரித்ததும், முதல் பிரதியை வாங்கி அங்கேயே படித்துவிட்டு, எங்கெங்கே உண்மையிலிருந்து கதை மாறுபடுகிறது என்பதைப்பற்றி என்னிடம் சுவாரஸ்யத்துடன் விவாதிப்பார். தன் கதையை பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தொடராக எழுதுவதில் அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி! இ.பா. ஒருதடவை என்னிடம், ‘மணி! எனது ‘தந்திர பூமி’யில் வரும் கதாநாயகன் உங்களை மாதிரித்தான். நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லியிருக்கிறார். But I don’t think he really meant it!
தமிழ்ப்பள்ளிக்குப்பிறகு இ.பா. தில்லி தயாள் சிங் கல்லூரியில் தமிழாசிரியராகப்பணியாற்றினார். பிறகு சிலவருடங்கள் தில்லிப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவில் ப்ரொபஸராக ஆனார். தமிழ் படிக்க வருட ஆரம்பத்தில் பத்து மாணவர்கள்…….பரீட்சை எழுதும்போது நாலுபேர் கூட தேறமாட்டார்கள். ஒரு முறை ஆர்வமாக தமிழ் படிக்க வந்த பஞ்சாபி மாணவனிடம் இ.பா. சந்தோஷமாக, ‘உன் தமிழ்ப்பற்று எனக்குப்பிடித்திருக்கிறது. உன்னை தமிழ் படிக்க தூண்டியது எது?’ என்று கேட்டதற்கு அந்த பஞ்சாபி, ‘ஸார், நான் ஒரு தமிழ்ப்பெண்ணை காதலிக்கிறேன்!’ என்று பதிலளித்தானாம். தமிழ்ப்பிரிவின் தலைவர் டாக்டர் ஆறுமுகம். சரியான அக்மார்க் முனைவர். நச்சினார்க்கினியாருக்குப்பிறகு தமிழில் கவிகளே இல்லையென்று சத்தியம் செய்வார். இ.பா.வின் ஒரு கதையைக்கூட அவர் படித்ததில்லை. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். பிறகு வந்த முனைவர் சாலை இளந்திரையன் இவருக்கு சில நெருக்கடிகளை உருவாக்கியவர். அதன்பிறகு ஐந்தாண்டுகள் வார்ஸா வாசம். தில்லி திரும்பியவுடன் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளியில் இயக்குநர் பதவி. இ.பா. கதைகள்/நாவல்களில் உரையாடல்கள் முக்கியப்பங்கு வகிக்கும். கதைகளின் போக்கை விவரங்களை விட வசனங்களே மேலே எடுத்துச்செல்லும். உரையாடல்களில் அவருக்கே உரித்தான பகடியும் Black Humour கலந்த நகைச்சுவையும் அடிநாதமாக இருக்கும். நாடகத்துக்கு இவையெல்லாம் இன்றியமையாதவை. இவர் கதைகளையும், நாவல்களையும் படித்த எனக்கு ’இவர் ஒரு நல்ல நாடகத்தை உருவாக்கித்தரமுடியும்’ என்ற நம்பிக்கையிருந்தது. அதனால் அவரைப்பார்க்கும்போதெல்லாம், ‘சாரதி சார், எங்களுக்கு ஒரு நாடகம் எழுதித்தாங்களேன்!’ என்று கெஞ்ச ஆரம்பித்தேன். பிறகு தொடர்ந்த என் நச்சரிப்புகள் அவருக்கு ஒரு தலைவலியாக மாறியிருக்கக்கூடும். சில இடங்களில் அவர் என்னை தவிர்ப்பதாக உணர ஆரம்பித்தேன். பிறகு அவரை அதிகம் படுத்துவதில்லை!

1969-ல் ஒரு நாள். இ.பா. போனில் தொடர்பு கொண்டு, ‘நீங்க கேட்டமாதிரி, ஒரு நாடகம் எழுதியிருகேன். படிச்சுப்பாத்து, பிடிச்சுதுன்னா போடுங்க. இல்லெ திருப்பியனுப்பிடுங்க’ என்று சொன்னார். ஆபீசை கட் பண்ணிவிட்டு உடனே டிபன்ஸ் காலனியில் இருந்த அவர் வீட்டுக்குப் போனேன். ‘மழை’ என்ற தலைப்பிட்ட ஒரு நாடகப்பிரதியைக் கொடுத்தார். அதை முதல் 34234_1317045815363_1507276454_30664208_1212288_nதடவையாகப்படிக்கும்போது, தமிழ்நாடகங்களில் அதுவரை கிடைக்காத, வங்காள, மராட்டிய நாடகங்களில் மட்டுமே பார்க்கக்கிடைக்கும் மூன்றாம்நிலை உன்னதப்பரிமாணத்தை உணர்ந்தேன். தமிழில் இப்படி ஒரு நாடகமா? என்று வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தட்சிண பாரத நாடக சபாவின் மற்ற அங்கத்தினர்களிடம் கலந்தாலோசிக்காமலே, உடனே மறுபடியும் அவர் வீட்டுக்குப்போய், நாடகத்தை வெகுவாகப்பாராட்டி, எங்கள் அடுத்த நாடகம் இதுவாகத்தான் இருக்கும் என்று உறுதியளித்துவிட்டு வந்தேன். நாலே பாத்திரங்களும் மூன்றே காட்சிகளும் கொண்ட மழை நாடகத்தில் வரும் முக்கிய பாத்திரம் நிர்மலா தற்காலப் பெண்ணியத்தில் ஊறியவள். நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையுடன் அவள், தன் தந்தையைப்பார்க்கவரும் ஜேம்ஸ் என்ற டாக்டரிடம், ‘Doctor! Are all the Saints impotent?’……என்றும், இன்னொரு இடத்தில், ” டாக்டர்! I need a man……அது நீங்களாகவே இருக்கலாம்!’ போன்ற வசனங்களை அனாயாசமாக உதிர்ப்பாள். தில்லியில் நாடகங்களில் நடிக்க தொழில்முறை நடிகைகள் கிடையாது. அரசாங்க அலுவலகங்களில் உயர் அதிகாரிகளாகப்பணியாற்றும் IAS ஆபீசர்களின் மனைவி, மகள் போன்றவர்களுக்கு நாடகத்தில் நடிக்க விருப்பமும் திறனும் இருந்தால் அவர்களைத்தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுப்போம். மழை நாடகத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையின் தந்தை என்னை போனில் கூப்பிட்டு, ‘மணி! இந்த நாடகத்தில வர சில டயலாக் ரொம்ப ஷார்ப்பா இருக்கு. என் டாட்டர் அதை மேடையில் பேச கூச்சப்படறா. அதை குறைக்க அல்லது எடுத்துவிட முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஸார், அந்த வசனங்களை எடுத்துவிட்டால் இது நாடகமே இல்லை. இந்த நாடகத்தின் உயிரே அதன் வசனங்கள் தான்!’ என்று சொல்லி போனை வைத்தேன். பிறகு இ.பா.விடம், ‘சார், உங்க நாடகத்தைப்போட எங்களுக்கு சம்மதம். ஆனால் ஒரு கண்டிஷன். நாடகத்துக்கு ஹீரோயினையும் நீங்க தான் தேடித்தரணும்’ என்று வேண்டிக்கொண்டேன்.
இருநாட்களுக்குப்பிறகு, ‘மணி! எழுத்தாளர் க.நா.சு. டிபன்ஸ் காலனிலே என்வீட்டுக்குப்பக்கத்திலெ இருக்கார். அவர் மகள் ஜமுனா Interior Designing படித்துக்கொண்டிருக்கும் மாணவி. அவளிடம் கேட்டேன். நடிக்க ஒத்துக்கொண்டாள். நீங்க போய்ப்பாருங்க’ என்று சொன்னார். 1970-ல் ஜமுனா நிர்மலாவாகவும், நான் ரகுவாகவும் இ.பா.வின் மழை நாடகத்தில் நடித்ததும், அந்த நாடகம் அனைத்திந்திய அனைத்துமொழி நாடகப்போட்டியில், நான்கு வங்காள, மூன்று மராட்டிய நாடகங்களுக்கிடையே ஒரே தமிழ் நாடகமாக போட்டியிட்டு அதில் மழை மிகச்சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் பழைய கதை. மழை நாடகத்தில் நடிக்கும்போது எங்களுக்கிடையே காதல் அரும்பி, துளிர்த்து, மலராகி, நாங்கள் திருமணம் செய்துகொண்டது உங்களில் சிலருக்கு தெரியாத கதை! எங்கள் திருமணத்துக்கு இந்திராவும், சாரதியும் தான் முக்கிய காரணிகள்.
இ.பா. ஆஸ்திரேலியா போயிருந்தபோது, அங்கே ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ.வுடன் ஒரு நேர்காணல். அதில் இ.பா. ‘நான் மழை நாடகம் எழுத முக்கிய காரணம் எஸ்.கே.எஸ். மணி. ஆனால் மணியின் திருமணத்துக்கு நான் மட்டுமே காரணம். தமிழ்நாட்டில் ‘பலஸ்ருதி’யென்று சொல்வார்கள். ஒரு ஸ்லோகத்தைச்சொன்னால், அதற்கு இன்ன பலன் என்று உண்டு. தமிழ்நாட்டில் கல்யாணமாகாத பெண்களுக்கு நான் மழை நாடகத்தை பரிந்துரைக்கிறேன். 1970-ல் தில்லியில் முதன்முறையாக இந்த நாடகத்தில் நடித்த மணிக்கும் ஜமுனாவுக்கும் உடனே திருமணம் நடந்தது. சில வருடங்களுக்குப்பிறகு, லண்டனில் மழை நாடகத்தில் நடித்த பாலேந்திரனுக்கும், நிர்மலாவாக நடித்த பெண்ணுக்கும் திருமணமாயிற்று. அமெரிக்காவிலும் இதே நாடகத்தில் நடித்த இருவரும் தம்பதிகளாயினர். இதனால் அறியப்படுவது யாதெனில் கல்யாணமாகாத பெண்கள் ஒரு தடவை மழை நாடகத்தில் நடித்தால், அவர்களுக்கு விவாகப்ராப்தி உடனே சித்திக்கும்! என்று சொல்லியிருந்தார்.

இந்தியாவில் சாகித்ய அகாடெமி விருதும், சங்கீத நாடக அகாடெமி விருதும் பெற்ற ஒரே எழுத்தாளர் இ.பா. தான். அவர் கையெழுத்து கோழி கிண்டினது போல் படிக்க சிரமாக இருக்கும். சில சமயங்களில், ‘மணி! என்ன எழுதியிருக்கேன், படிச்சு சொல்லுங்க’ என்று என்னிடம் காட்டுவார். அப்போது நான், ‘சார், நீங்க எழுதியிருப்பது ஏதோ மார்ன் ஆர்ட் மாதிரி இருக்கு. இதை லலித் கலா அகாடெமிக்கு அனுப்பினால், இந்த வருஷம் விருது உங்களுக்குத்தான்! இந்தியாவிலேயே மூன்று அகாடெமி விருதுகளும் பெற்றவர் இ.பா. என்ற பெருமை எங்களுக்கெல்லாம் கிடைக்கும்!’ என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். இ.பா. எழுதிய ‘ராமானுஜர்’ நாடகத்துக்கு கே.கே. பிர்லா ட்ரஸ்ட் உருவாக்கிய ‘சரஸ்வதி ஸ்ம்மான்’ விருது கிடைத்தது. இவ்வருடம் அவருக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதைப்பற்றி யாராவது குறிப்பிட்டால், கூச்சத்துடன் நெளிவார்! உங்களில் பலருக்கு இ.பா.வின் ‘உச்சி வெயில்’ நாவலைத்தான் இயக்குநர் சேது மாதவன் ‘மறுபக்கம்’ என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்தாரென்பது தெரிந்திருக்கும். இவரது ‘ராமானுஜர்’ நாடகத்தை பொதிகையில் சீரியலாக உங்களில் பலர் பார்த்திருக்கக்கூடும்.
இ.பா.விடம் என்னை ஈர்த்த இன்னொரு விஷயம் அவருக்கு ஆங்கில இலக்கியத்தில் இருக்கும் ஆளுமை. அவர் ஆங்கிலத்தில் பேசினால், மிகச்சரியான வார்த்தைகள் அங்கங்கே வந்து விழும். பலர் பேசுவது போல ‘I cannot be able to…….’ ரகமாக இருக்காது. இப்போதிருக்கும் தமிழ் எழுத்தாளர்களில் ஆங்கிலத்தை சரியாகக் கையாளும் புலமை அவருக்குண்டு. சுஜாதாவுக்கும் அது இருந்தது. எழுத்தாளர்களில் எத்தனை பேர் இன்று British Council-க்கும், American Library-க்கும் போய் தங்களைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள்? சென்னைக்கு வந்த புதிதில் இவர் பேச்சு ஆங்கிலத்தில் நினைத்து தமிழில் பேசுவதைப்போல இருந்ததுண்டு, க.நா.சு.வைப்போல. ஓரிரு வருடங்களில், இவருக்கு தமிழ் மேடைப்பேச்சு கைவசமாகி விட்டது. அவர் நல்ல மூடில் பேச ஆரம்பித்து முடிக்கும்போது, கைதட்டல்கள் ஒரு சடங்காக இல்லாமல், அவர் இருக்கையில் சென்று அமரும் வரை தொடரும்!
அதே போல, இ.பா.வின் ஆழ்வார்களைப்பற்றிய புரிதலும், நாலாயிர திவ்யப்பிரபந்தம் குறித்த அறிதலும் ஒருசில கட்டுரைகள் வாயிலாகவே வெளிவந்துள்ளன. அவருக்கு டாக்டர் பட்டம் வாங்கிக்கொடுத்ததே ஆழ்வார்களும் பிரபந்தமும் தான்! என்னைக் கேட்டால், நாரத கான சபா செயலர் கிருஷ்ணசுவாமி ஆண்டுதோறும் இ.பா.வை வைத்து தன் அரங்கில் ‘ஆழ்வார்களின் தமிழ் இலக்கியச்சுவை’ என்று பத்துநாள் இலக்கியப்பிரசங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். “ஸ்ரீயப்பதியான எம்பெருமான் சாட்சாத் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும்…….” என்று தொடங்கும் உபன்யாசங்களுக்குப்பதிலாக, ஆழ்வார்களையும், திவ்யப்பிரபந்தத்தையும், தமிழ் இலக்கிய நோக்கில் நமக்கு அறிமுகப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அது அமையும்!

தில்லியில் இ.பா.வும் கணையாழி கஸ்தூரி ரங்கனும் நெருங்கிய நண்பர்கள். இ.பா.வின் டிபன்ஸ் காலனி விலாசம் தான் சிலகாலம் கணையாழியின் முகவரியாக இருந்தது. இணையாசிரியராக இருந்த இ.பா.வுக்கும் சென்னையில் இருந்த அசோகமித்திரனுக்கும் அவ்வப்போது ஊடல்கள் உரசல்கள் ஏற்பட்டதுண்டு. இப்போது இருவரும் நெருங்கிய நண்பர்கள். இலக்கியச்சிந்தனை ப. லட்சுமணனும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் இ.பா.வின் நெடுநாள் நண்பர்கள்.
’உயிர்மை’ பதிப்பகம் என் முதலும் கடைசியுமான பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தை வெளியிட்டபோது, இ.பா.விடம் ஒரு முன்னுரை எழுதித்தர கேட்டுக்கொண்டேன். அதில் பொய்யான புகழாரங்களாகச்சொரிந்து என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார். அதிலிருந்து சில வரிகள்: ……….. ‘ஆனால் இது மட்டும் என்னால் சொல்லமுடியும். மழை அப்போது மணி மூலம் மேடையேறாதிருந்தால், நான் தொடர்ந்து நாடகம் எழுதியிருப்பேனா என்பது சந்தேகந்தான். அது மேடையேறுவதற்கு முழுக்காரணமாக இருந்தவர் மணி தான்’………..’மணி தேர்ந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்ததுதான் என்னை மிகவும் கவர்ந்தது’……….’தில்லிக்கு வரும் சென்னை இசைக் கலைஞர்களில், மிகவும் பிரபலமானவர்களை மணி வீட்டில் தான் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் மணியின் குடும்பத்துடன் ஓர் ஆத்மார்த்த உறவு இருந்ததையும் என்னால் உணர முடிந்தது.’……….’மணியினால் செய்து முடிக்கமுடியாத காரியம் எதுவுமில்லை என்பது போன்ற ஓர் அபிப்பிராயம் அவருடைய நண்பர் வட்டாரத்துக்கு எப்பொழுதுமே உண்டு. ‘மணியா? அவரிடம் சொன்னால் ஒரு வெள்ளை யானையையே உங்கள் வீட்டு வாசலில் கொண்டு வந்து கட்டிவிடுவார்' என்று சொல்வார்கள். தில்லியில் அவரால் பயன் அடையாத தென்னிந்தியக் கலாசாரக் குழு எதுவுமில்லை……….“ ‘முடியாது' என்பது என் அகராதியில் கிடையாது” என்று நெப்போலியன் சொல்வாராம். இது நண்பர் மணியைப் பொறுத்த வரையில் மிகவும் பொருந்தும்’………. முன்னுரையை இப்படி முடித்திருந்தார்: ‘அவருடைய எழுத்தாற்றல் சமீபத்தில் தா ன் எனக்குத்தெரிய வந்தது. ஆனால் நான் ஆச்சரியப்படவில்லை. இதுவரையில் அவர் ஏன் எழுதாமலிருந்தார் என்பது தான் என் ஆச்சரியம்!’

எவ்வளவு பெரிய வார்த்தைகள்? உண்மையிலேயே நெகிழ்ந்துபோனேன். யார் தயவும் இல்லாமலே இ.பா நாடகாசிரியர் ஆகியிருப்பார். அவரால் எங்கள் DBNS குழுவுக்கும் எனக்கும் நவீன தமிழ் நாடக இயக்கங்களின் முன்னோடி என்ற சிறப்பு 1970-லேயே கிடைத்தது. அது அவர் எனக்கு அளித்த பெருமை. எழுபதுகளின் தொடக்கத்தில் அவரை சந்திக்கும்போதெல்லாம் நச்சரித்து நச்சரித்து எழுதச்சொன்ன முதல் நாடகம் மழை, பிறகு போர்வை போர்த்திய உடல்கள், ஒளரங்கசீப் போன்ற நாடகங்களை அப்போதே தில்லியில் பலதடவைகள் வெற்றிகரமாக மேடையேற்றி, அவைகளில் நடித்த பெருமை எனக்குண்டு.

இ.பா. நாடகங்களில் ‘காலயந்திரங்கள்’ நாடகத்தை நான் போட்டதில்லை. அதில் வரும் மஹாதேவன் பாத்திரம் எனக்குப்பிடித்தது. அழகாக, மிகைப்படுத்தாமல், Subtle-ஆக செய்யவேண்டிய கதாபாத்திரம். சென்னையிலோ, மற்ற நகரங்களிலோ யாராவது இந்த நாடகத்தைப்போட முன்வந்தால், கைச்செலவு செய்துகொண்டு போய், காலணா வாங்காமல் மஹாதேவன் பாத்திரத்தை நடித்துவிட்டு வர நான் தயார்! இ.பா.வே சொல்லியிருக்கிறார்: “என் நாடகங்களில் அவர் எந்தப் பாத்திரமாக நடித்தாரோ, அந்தப் பாத்திரத்தைப் பற்றி நான் எப்பொழுதெல்லாம் நினைக்கின்றேனோ அப்பொழுதெல்லாம் மணிதான் என் கண் முன் வந்து நிற்பார். வேறு பலர் அந்த நாடகப் பாத்திரத்தில் பிறகு நடித்திருந்தாலும், மணிதான் என் கண்முன் வந்து நிற்கிறார்.” மஹாதேவனாகவும் நடித்து இ.பா.வை பயமுறுத்தலாமே! சரி, கட்டுரை நீண்டுகொண்டே போகிறது…….. இவரைப்பற்றி சொல்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

எனக்கு ஓர் ஆசை: இ.பா…..நூறு! விழாவிலும் அவரை மேடையில் இதே துடிப்புடன் பார்க்கவேண்டும்!
***** **** **** *****
bharatimani90@gmail.com உயிர்மை ஆகஸ்ட், 2010 இதழில் வெளிவந்தது

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்