Dec 21, 2011

சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.

தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

venkatesan1_300 Kaval_Kottam-su.venkadesan_buy_tamil_book__66978_zoom

 

அழியாச்சுடர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகள்.

Dec 20, 2011

பிம்பம் – லா.ச.ராமாமிருதம்

மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் –  பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான்.

‘ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!’ அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன. கன்னங்கள் கருங்குழம்பு. “நான் எதிரே பார்த்துண்டு வரல்லே’’.  அப்போதுதான் விஷயம் புரிந்து கடுங்கோபம் பற்றிக்கொண்டது.  LAA-SA-RAA-17

“எதிரே குத்துக்கல் மாதிரி நிக்கறேன். அப்படி என்ன கண் தெரியாமல் பராக்குப் பார்த்துண்டு வரது’ இதென்ன நிஜம்மா பராக்குத்தானா இல்லே Jayvalking, eveteesing-லே புது டெக்னிக்கா?’

“இல்லேம்மா,  நான் இந்தப் பக்கம் வந்து இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு மேலே ஆறது. இங்கே ஒரு கட்டடத்தைத் தேடி வரேன். அதிலே எதிலே வரவா நினைப்பேயில்லே.’’

“உன்னுடைய இருவத்தி அஞ்சு வருஷத்தில் கட்டடம் பறந்துடுமா என்ன? இடிச்சுப் போட்டுப் புதுசு எழுப்பியிருப்பாங்க. ஆனால் காணாமல் போற புதுமையை உன்னிடமிருந்துதான் தெரிஞ்சுக்கணும்.’’

“அது ஸ்கூல். நான் படிச்சி ஸ்கூல்.”

“இந்தச் சிரத்தை இந்த நாளில் சத்தே ஆச்சரியந்தான். ஸ்கூல் இங்கேதான் இருக்கு. ஆனால் பெரிசாகி கட்டடம் விரிவடைஞ்சு, முதலதைப் பின்னுக்குத் தள்ளிடுத்து.”

“ஓ quite possible.. என்னை இங்கே விட்டுத் துரத்திட்டாங்க, L.K.G.யிலிருந்து.”

“ஓ அப்பவே உன் நடத்தை இப்படி இருந்திருந்தால் அதில் ஆச்சரியமில்லே. விளையும் பயிர் முளையிலே.’’

“எனக்குக் கோபம வராதம்மா. நான் இடிச்சது தப்புத்தானே! அங்கே நான் தேடற டீச்சர் இப்போ இருக்காங்களோ ரிடையர் ஆயிருப்பாங்களோ!’

அவளுக்குக் கோபம் மறந்து curiosity தூக்கிற்று. “நான் இங்கேதான் வேலை செய்யறேன். யார் அந்த டீச்சர்?’

“டீச்சர் சுமதி.”

“நான் தான் டீச்சர் சுமதி.”

அவன் திக்கெனப் பின்னடைந்தான். “நான் விளையாடல்லேம்மா.”

“ஏன் நீ இருவத்தி அஞ்சு வருஷத்துக்கப்புறம் தேடிட்டு வரப்போ, நான் இங்கேயே முப்பது வருஷம் சர்வீஸ் பார்க்கக்கூடாதா? அடுத்த வரஷம் ரிடையர்மெண்ட்” அதன் Problems அதுக்கு மேலே இருக்கு. அதையெல்லாம் உன்கிட்ட சொல்லியாகணுமா?”

அவன் ஒன்றும் பேசவில்லை. சற்று திடப்பட்டு நின்று அவளை மேலுங்கீழுமாய்ப் பார்த்தான். ஆமாம். இருக்கக்கூடும். உடம்பு சற்று அகன்று தடித்துவிட்டது. கூந்தல் சாம்பல் பூத்து (வேறு எப்படி இருக்க முடியும்?) விட்டதே தவிர அடர்த்தி குறைந்த மாதிரி தெரியவில்லை. முகவார்ப்படம் எல்லாம் அவளாய் இருக்கக்கூடும். அவளேதான். அந்த அடையாளம் நிச்சயமானதும் அவனுள் ஒரு எழுச்சி பொங்குவதை உணர்ந்தான். தான் ஆடிப்போகாமல், பூமியில் பாதங்களை அழுத்தமாய்ப் பதித்துக் கொண்டான்.

“என்னைத் தெரியல்லே? நான் கண்ணன் அம்மா!’’

“இந்த சர்வீஸ்ஸிலே எத்தனை கண்ணன்கள், கசுமாலங்கள் வந்து போயிருக்கும்! எதைத் தனியா நினைவு வெச்சுக்க முடியறது?’’

“ நான் ஸ்பெஷல் துஷ்டை.”

“சர்க்கரை போட்டிருக்குமா. இல்லே ஸ்பெஷல் மசாலா சேர்த்திருக்குமா?”

“அப்படித்தான் வெச்சுக்கோங்களேன்” பையன் படு உற்சாகமாகிவிட்டான்.

“பக்கத்ததுப் பெஞ்சு பசங்களைச் சீண்டிக் கிட்டேயிருப்பேன். பின் பெஞ்சைக்கூட விடமாட்டேன். பின்னலைப் பிடிச்சு இழுக்கறது. அவங்க கொண்டுவந்த ஸ்னாக்ஸைப் பிடுங்கியோ திருடியோ தின்கறது, அவங்க பென்சிலைப் பிடுங்கிக்கிறது. ஜன்னல் வழியா வீசி எறியறது. அவங்க மூஞ்சியை நாய்க்ககுட்டியாட்டம் நக்கறது. கையிலே எச்சில் துப்பறது, சொல்லிண்டே போகலாம்.”

“எந்தப் பையன் செய்யாத Mischief புதுசா நீ செஞ்சுட்டே?”

“இதே வார்த்தையை அப்படியே பிட்டு வெச்சுதுப் போலத்தான் என் தாத்தா, பிரின்சிபாலிடம் சொன்னார். அவர் சீட்டெழுதி எங்களுக்கு அனுப்பிச்சபோது! அப்போ உங்களுக்குச் சொல்லி அனுப்பிச்சு,  நீங்க வந்து அவர் பக்கத்திலே உக்கார்ந்தீங்க.”

“எல்லாம் வானரங்கள்னா, வாலில்லாத வானரங்கள்! இன்னமும் க்ளாஸ் கூட மாத்தல்லே. இன்னமும் L.K.G.லேதான் மாரடிச்சுண்டிருக்கேன். இதுவே போறும்னு  Management தீர்மானிச்சுடுத்து. என் பிழைப்பும் இப்படியே போயிடுத்து. அடுத்த வருஷத்திலிருந்து வேறு பிழைப்பைத் தேடியாகணும். சே! என்ன பிழைப்போ?”

அவள் அவனை மறந்தாள். பாரதியை மறந்தாள். தன் பொருமலில் எதிரே போவோர் வருவோர் அவளைச் சற்று ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டே போகுமளவுக்கு அவள் சத்தமாகிவிட்டதை உணர முடியவில்லை.

அவன் அதைக் கண்டுகொள்ளாதது மாதிரி “என் தாத்தா இது வேறே சொன்னார்: “இவன் ஜாதக ராசிப்படி இவன் அசாதாரணமானவன். ஒண்ணு பெரிய பதவிக்குப் போயிடுவான், இல்லே உலகம் மெச்சும் துறவி ஆயிடுவான், ஸ்வாமி விவேகானந்தர் மாதிரி அதீதம்தான்.”

மொத்தத்தில் உங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பெருமையைத் தரப்போறான். இவனை நீங்கள் வெளியில் அனுப்பினால் பள்ளிக்கூடத்துக்குத்தான் நஷ்டம். நான் தம்பட்டமடிச்சுக்கலே. எனக்கு Astrology கொஞ்சம் தெரியும். சயன்ஸாகவே ஆராய்ஞ்சிருக்கேன்.

பிரின்சிபால் உங்கள் பக்கம் திரும்பி, “சிஸ்டர் என்ன சொல்றீங்க?”

நீங்கள்: “இல்லேங்க இவனைச் சமாளிக்கிறது கஷ்டம். பேரண்ட்ஸ் கம்ப்ளெயின்ட் பண்றது சமாளிக்கமுடியல்லே. I wish him all luck in his next school      அங்கே போய் சரியாக மாறலாம். இஙகே நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதுதான் இப்போ தெரியுது. We have given him all chances” பிரின்சிபால் உதட்டைப் பிதுக்கி கையை விரித்தார்.

“நீங்களே கேக்கிறீங்க. நாங்க இப்போ நடக்கறதைக் கவனிக்க வேண்டியிருக்கு. எங்கள் பள்ளிக்கூடம் நடக்கணும். And we have to live you know. I am sorry, next year வாங்க. பார்க்கலாம்.’’

தாத்தா சிரித்தார். “Next Year நான் இருக்கேனோ இல்லேயோ?”

பிரின்சிபால் நாற்காலியை விட்டு எழுந்தார். “நாம டாப்பிக் மார்றோம். இந்த விஷயம் முடிஞ்சுப் போச்சு. டயம் வீணாவுது.”

நீங்களும் எழுந்தீங்க. “வரேன். பாதி கிளாஸ்லே வந்திருக்கேன். அழைச்சீங்களேன்னு வந்தேன்.”

“ஆகவே நீங்க ‘Out’ முத்திரை குத்தித்தான் நான் இந்த ஸ்கூலை விட்டு வெளியே வரும்படி ஆயிடுச்சு.”

“ஆமாம் லேசாக கண்ணுல பூச்சி பறக்கற மாதிரி நினைப்பு. ஒரு பையன். அவன் மண்டை குடுமி பிய்ச்ச தேங்காய் மாதிரி உருண்டையாய் இருக்கும். Special feature”

“Correct”      பையன் சந்தோஷத்தில் கைகொட்டிச் சிரித்தான். “பிரசவக் கோளாறு ஒண்ணும் கிடையாது. இன்ஸ்ட்ரூமென்ட் ஒண்ணும் அப்ளையாவல. வயிற்றைக் கிழிச்சு அப்படியே அலக்கா எடுத்துட்டாங்க. ஸிஸரியன் – குறைமாஸம். அதனால் Hyporactive. இப்பவும் அப்படியே தான் இருக்கு. ஆக்ஸிடென்ட். அது இதுன்னு மண்டையை உடைச்சுக்கலே நசுங்கலே.”

“இன்னொரு நல்ல பாயின்ட் ஞாபகம் வருது. உனக்கு இஷ்டப்பட்டால் “நல்லா recite பண்ணுவே. மாரிலே கை கட்டிக்கொண்டு ஸ்லோகம் சொன்னால் கடைசிவரை க்ளியரா, நல்லா சொல்லுவே. அந்தச் சமயத்துலே அழகாயிடுவே.”

“ம்ம்………”

அவன் முகத்தில் சந்தோசம் குழுமிற்று.

“ஆமாம் கண்ணன். உங்க தாத்தா ஜோஸ்யம் என்னவாச்சு?”

“தாத்தா போயிட்டாரு. ஆனா ஜோஸ்யம் பலிச்சிடுச்சி. நான் படிச்சு படிப்படியா உசந்து சிங்கப்பூர், சைனான்னு தேசம் தேசமா சுத்தி இப்போ அமெரிக்காவுல மூணு வருசமா இருக்கேன். ஒரு மாசம் லீவுலே வந்திருக்கேன். என் employers அனுப்பிச்சிருக்காங்க. அங்கே அவங்க ஆபீஸ மானேஜ் பண்றேன். அதை விருத்தி பண்ணும் பொறுப்பு. அவங்க நல்ல பேரிலே இருக்கேன்.’’

அவள் முகம் லேசாக வெளிறிற்று. “அப்போ தாத்தா ஜோஸ்யம் பலிச்சுப்போச்சு!”

“எல்லாம் பெரியவா ஆசீர்வாதம். உங்கள் ஆசீர்வாதம். ஆனால் எனக்கு சர்ட்டிபிகேட்டு கொடுத்து அனுப்பிட்டிங்க.”

“என்னை என்னப்பா பண்ணச் சொல்றே. அன்னிய நிலைமை அப்படியிருந்தது. இப்பொ சொல்லிக்காட்டி வஞ்சம் தீர்த்தாச்சு இல்ல?”

“வஞ்சம் தீர்ப்பதா? அவன் வெளியில் சொல்லவில்லை. அன்றைய சுமதி டீச்சர் – அவள் வழக்கை மன்றாட, அவன் தாத்தா பள்ளிக்கு வந்திருந்தபோது, பிரின்சிபாலுடன் உட்கார்ந்திருந்த அன்றையவளை நினைத்துக் கொண்டிருந்தான். அவளுடைய பழுப்புநிற அழகுடன் மனம் எங்கோ நூலோடி விட்டது.

டம்பை உருவினாற்போல உடுத்தியிருந்தாள். ஒரு சுருக்கமில்லை. வாட்டசாட்டமான ஆகிருதியில் ரவிக்கை சதைப்பிடிப்பாய் – அவள் வயதை நிர்ணயிக்கும்படி அவள் தோற்றமில்லை. மதிப்பிட அவனுக்கும் தகுதியேது? ஆனால் ஏதோ காந்தம் அவளிடமிருந்தது. முதல்நாள் அவன் கொண்டு வந்திருந்த சாக்லேட், குழந்தைகளுக்குப் பங்கீடானபோது வெட்கத்துடன் அவளிடம் இரண்டு சாக்லேட் நீட்ட, அவள் அவன் வாயைத் திறந்து ஒன்றைப் போட்டு மற்றதைத் தான் போட்டுக் கொண்டான்.

‘Ok?” அவன் மறக்கவே மாட்டான். முடியல்லியே”?

மேஜையை அடிக்கடிக் கையால் தட்டுவான். பையன்கள் சத்தம் போடாதிருக்க அது நடக்கிற காரியமா? “தங்களுக்குத் தொந்தரவு கூடாதுன்னு பெத்தவங்க இங்க அனுப்பிச்சுடறாங்க. நம்ம மேய்க்க வேண்டியிருக்கு.”  ஸீட் அவுட் ஆனால் அலுத்துக் கொள்வாள். மற்ற நேரங்களில் சிரித்தபடிதான். எல்லாரும் என் குழந்தைகள்தான். இல்லாட்டி என்னால் இத்தனை பெத்துக்கொள்ள முடியுமா? இப்படிச் சொன்னதும் அதன் தமாஷ் உறைத்ததும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டாள். விஷயம் புரியாமலே அவனும் சிரித்தான். என் சுமதி டீச்சர்…. ஏதோ பெருமையாயிருக்கும்.

அவள் சொல்லும் பாடங்களைக் கேட்டானோ? ஏதோ சத்தம் இந்தக் காதில் புகுந்தது அந்தக் காது வழி…

அழுந்த வாரிய அவள் கூந்தலில் நெற்றியின் பக்கவாட்டில் இரண்டு பிரிகள் எதிரும் புதிருமாய் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அவைகளைக் கவனித்துக் கொண்டிருப்பான். இப்போது அவை இருக்குதோ. அன்றைய சகவாச ஞாபகத்தில் கண்கள் தேடின. இருப்பதாய்த் தெரியவில்லை. உதிர்ந்து போயிருக்கும் அல்லது இப்போது அழுந்தியிருக்கலாம். என்ன அசட்டுத்தனம்! இன்னுமா குழந்தைத் தனம்?    Why not இப்போது நார்மலாகவா இருக்கேன். ஏதோ துக்கம் தொண்டையை அடைத்தது. என் அம்மாவைவிட ஏன் எனக்கு இவளைப் பிடிச்சுப்போச்சு?

குழந்தைகள் பாடு நிம்மதி என்கிறோம். பார்க்கப்போனால் அவர்கள் வாழ்க்கை தான் சலனமும் சஞ்சலமும். ஒவ்வொரு உணர்வும் அப்போதுதான் விழித்தெழுந்து அழுத்துகின்றன. அவைகளின் அந்நியம் தாங்க முடியனவாக இல்லை. இவ்வளவு ஸ்பஷ்டமாய் இப்போது விளங்கி என்ன பயன்? அதுவே புரியாத கோபம், பக்கத்துப் பையன்கள்மேல் ஆத்திரம். தன்மேலேயே ஆத்திரம். பசிப்பதில்லை. சாப்பிடத் தோன்றுவதில்லை.

ஒரு நாள் கொண்டுவந்திருந்த இட்லியை, வகுப்பின் குப்பைத் தொட்டியில் ஒவ்வொன்றாய் அவன் எறிந்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு முதுகில் அறைந்தாள். ‘திக்’கென ஆகிவிட்டது.

“அத்தனை குட்டி குட்டியா அவ்வளவு சிரத்தையா அன்போட வார்த்து அனுப்பிச்சிருக்கா. அவ்வளவு திமிரா உனக்கு ராஸ்கல்”

பிறகு அவளுடைய மதிய சாப்பாட்டு வேளையில் தன்னுடைய டிபன் பாக்ஸிலிருந்து ஒரு வாய் அவனுக்கு ஊட்டி, கையிலும் ஒரு கவளம் வைத்தாள்.

“அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா கண்ணு, பசிக்குமில்லே? அம்மா இல்லே.”

அந்த ரசஞ்சாதம், தான் கொண்டு வந்திருந்த இட்லிக்கீடாகுமா? அவனுக்குத் தெரியாதா? இருந்தாலும் இன்னொரு பிடி கொடுக்கமாட்டாளா? நான் ஏன் இப்படி ஆயிட்டேன். அப்படித் தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ளக்கூடத் தெரியாத வயசு. ஆனால் துக்கம் தொண்டையை அடைத்தது.

அவளுடைய மேலுதட்டில் லேசாய் செவ்வரும்பு கட்டியிருந்தது. இப்போது அது இருக்குமோ?   Damn it, எனக்குப் பைத்யம் பிடிச்சுடுத்தா? இல்லை இன்னும் விடல்லியா?

மாலைவேளையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவள் புருஷன் வருவார் (வருவான்). நல்லாத்தான் இருந்தார்(ன்). டைட்பான்ட், டீசர்ட். ஆனால் இல்லை. அதனாலேயே அவனுக்கு அவரைப் பிடிக்கவில்லை. லேசாகிக் கொண்டிருக்கும் மண்டையுச்சியைச் சாமர்த்தியமாய் மறைத்து விரலிடுக்கில் சிகரெட்டை இடுக்கிக்கொண்டு…

அவன் தன் உதடுகளை விரலால் பொத்தி எச்சரித்தும் கேட்பதாயில்லை. ஒருநாள் கண்ணன் எதிரிலேயே அவளுடைய வார்த்தை தடித்தது. “இங்கே உங்களுடைய சிகரெட் துண்டுகளைப் போட்டுவிட்டுப் போனால் என் பேர் கெட்டுவிடும். குழந்தைகள் புழங்குகிற இடத்தில் நல்ல அடையாளம். நியாயமாய் நீங்கள் ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளேயே வரக்கூடாது. நீங்க வந்தாலே என் ஸஹாக்களின் நெத்தியும் முதுகுத்தண்டும் சுருங்குது. என் பிழைப்பைக் கெடுத்தீடாதீங்க.”

அப்பவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் சிரிப்பு நல்லாயிருந்தது. கன்னங்கள் இறுகிக் குழியும்.

அவளுக்கு ஒரு தெற்றுப்பல். ஆனால் அழகு.

இப்போது அவர் இருக்கிறாரோ?

பாரதியைக் காட்டி “இவள் யார்?”

‘இவள் என் பெண்?’ சுமதி டீச்சர் மாதிரி இவள் இல்லை: சதைப் பிடிப்பாய் அப்பா ஜாடை. தூக்கல் இருந்தாலும் என் சுமதி டீச்சர் மகள்.’

“அது சரி. உன் சுபிஷத்தைப் பத்தி மொத்தமா சொல்லிட்டே. சந்தோசம். இத்தனை நாள் கழிச்சு என்ன இந்தப் பக்கம்? இருவத்தி மூணு வருசங்கழிச்சு உன் பள்ளிக்கூடத்தைத் தேடிண்டு வரது பெரிசுதான். எங்களுக்குப் பெருமைதான். யார் இவ்வளவு சிரமமெடுத்துக்கறா?”

“டீச்சர். நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். உங்களை மறக்கமுடியல்லே. I was in love with you.”

“So, you have come to declare your love?” கைகொட்டிச் சிரித்தாள்.

“நீங்கள் சிரிக்கிற மாதிரி இல்லை. இருவத்தி மூன்று வருஷங்கள் டீச்சர்.”

சட்டெனத் தெளிந்தாள். “That happens sometimes; that is called puppylove” – ஒரு  disease,  வந்து இருந்துவிட்டுப் போயிரும்.

“அது மாதிரி டீச்சருக்கு  Student மேல் நேர்வதில்லையா?” அவன் பரிதாபமாயிருந்தான்.

“Oh. Yes எங்களுக்குக் குழந்தைகள் மேல் நேர்வது சகஜம். இயற்கையிலேயே எங்களுக்குத் தாய்மை உண்டே! உள்ளத்திலும் உடல் அமைப்பிலும் அப்படித்தானே இருக்கிறோம்!”

“நான் மனதில் அதை வைத்துக் கேட்கவில்லை.’

“புரிகிறது. அப்போ அவள் கிருஷ்ணப்பிரேமி ஆகிவிடுகிறாள். ஹே ராதா கிருஷ்ணா, பரவசமானாள். ஆனால் புத்தகத்தில் படிக்கிறோமே ஒழிய அப்படி நிகழ்வது ரொம்ப அபூர்வம். பையன்கள் வகுப்பு மாறும்போது அல்லது பள்ளியையே விட்டுப் போகும்போது எல்லா முகங்களும் ஒருமுகமாத்தான் தெரியும். முகங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனவே. நாங்கள் கோபியர். எங்களுக்குப் பிருந்தாவனம் ஒன்றுதான் உண்டு. மாறுவதில்லை. நாங்களும் மாறுவதில்லை.”

“கலியாணம் ஆகி பள்ளியைவிட்டு, ஊர்விட்டு, நாட்டையே விட்டுப் போனால் எங்கள் கிருஷ்ணனை ஏந்திக்கொண்டு விடுகிறோமே!”

அவரவர் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. தழும்பேறிவிட்டாலும் இப்போது புதிதாய்ச் சூட்டைக் காய்ச்சியிழுத்தாற்போல் நெஞ்சு ‘சுறீல்.’

ன்றொரு நாள் வகுப்பில் அவள் அவன் பக்கமாய் வருவதற்கும், அவளைப் பார்க்காமல் அவன் தன்னிடத்திலிருந்து எழுவதற்கும் சரியாக – பென்சிலைத் தேடினானோ ரப்பரைத் தேடினானோ இருவரும் மோதிக் கொண்டனர். அவள் மார்பின் விம்மலில் அவன் முகம் பதிந்தது. மார்த்துணி ரவிக்கை முடிச்சுக்கும் கீழே சரிந்தது.

அவளுக்குக் கோபம் வரவில்லை. வீறிட்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு, மேலாக்கையும் இடுப்புச் செருகலையும் சரிப்படுத்திக்கொண்டு,

“என்ன அப்படித் தட்டுக்கெட்டுப்போற அவசரம்?’ குரல் உயரக்கூட இல்லை. Soft and melodies. அவனுக்குக் கேட்டதோ இல்லையோ? மூர்ச்சையாகிவிட்டான்.

ஜன்மம், ஜீவராசி

யாவதுக்கும் பொதுவாய்

ஆண், பெண் எனும் அடித்தளம்

தான் உண்மைநிலை.

தன் முகம், இனம்

இழந்த ஆதிவேட்கை

அவன் பச்சைப் பாலகன்

அவள் முதிர்ந்த மாது

பகலிலிருந்து இரவா?

இரவிலிருந்து..

எது முன்? எது பின்?

விடியிருட்டின் விழிம்பில் வெள்ளி

எதைத்தான் யார் அறிவார்.

ஆனால்

Ecstasy

அவனுடையது அது என்று ஒன்று உண்டு என்று

பாவம் அதையும் அறியான்.

திகைப்பூண்டு மிதித்தமாதிரி அவன் வளையவந்தான்.

அவள் எதையும் கண்டுகொள்ளாமலே வளைய வந்தாள்.

Yes, that is as it should be.

We Forgot because we must.

Such is the cavalcade of life.

முதலில் அவன்தான் மீண்டான். குரல் சற்று அடக்கமாய் “சரி. உங்களைத்தான் கட்டிக்க முடியாது. உங்கள் பெண்ணைக் கட்டிக்கலாமில்லையோ?”

“என்ன உளறல்?”

“இல்லை. சரியாய்த்தான் பேசுகிறேன். கலியாணம் பண்ணிக்கத்தான் அமெரிக்காவிலிருந்து ஒரு மாத லீவில் வந்திருக்கிறேன். அதற்குள் எனக்குப் பெண்பார்த்து என் பெற்றோர்கள் எனக்குக் கலியாணம் பண்ணி எங்கோ அமெரிக்காவுக்குக் குடித்தனம் பண்ண அனுப்பிவிடுவார்கள். எனக்கு இந்தப் பெண் பிடிச்சுப் போச்சுன்னு நான் சொன்னால் அப்பா அம்மா குறுக்கே நிக்கமாட்டா.  அப்படி ஒண்ணும் மீனமேஷம் பாக்கறவாயில்லே. போன இடத்தில் தனியா உழன்று மாட்டின்டு அவா பாஷையிலே கழுநீர் பானையில் கைவிடாமல் இருந்தால் சரி. சம்பந்தம் பேச உடனே வாருங்கள். கன்னாபின்னான்னு கேக்கமாட்டா. மஞ்சள் கயிறிலே மாட்ட ஏன், அதையும் நான் பாத்துக்கறேன். பையன் பெரியவனாயிட்டான். என்னை என்ன பண்ணமுடியும்?’

பேச்சும் இந்த முத்தல்லே போறதுனாலே, “அவள் தடுத்தாள்” “நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும். இவளுக்கு அப்பா இல்லை’”

“அப்படின்னா அன்னிக்கு அவரைப் பார்த்தேனே” குழம்பினான்.

“இவளுக்கு அப்பா இல்லை. நான் ஏமாந்து போனேன் கண்ணா. இவள்தான் அவர் தந்த பரிசு.”

அவன் ஆச்சர்யம்கூடக் காட்டவில்லை.

“ So what! அதை நாமா தெரிவிச்சுக்கணுமா? தண்டோரா போட்டு ஊரை அழைக்கப்போறோமா?  A simple Affire”

“கோவிலில் தெரியாமல் இருக்கப்போறதா?”

“அட. தெரிந்தால்தான் தெரியட்டுமே.”

அவள் சற்று நேரம் மௌனமாய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முகம் பிட்டாய் பிசைந்தது. உதடுகள் நடுங்கின. அவன் மேல் சாய்ந்து கட்டிக் கொண்டு பொட்டென உடைந்துபோனாள்.

அவன், அவளை அணைத்துக்கொண்டான். எத்தனை நாள் பாரமோ? வேடிக்கை பார்ப்பவர் பார்த்துக்கொண்டு போகட்டும். சுமதியைத் தாண்டி அவன் பார்வை பாரதிமேல் தங்கிற்று. பாரதி சுமதியாக மாட்டாள். பரிகாரமாகக் கூட மாட்டாள். சுமதியே அவன் கண்ட சுமதியாகமாட்டாள். அந்த சுமதி அவன் நெஞ்சில் உண்டானவள். அங்கிருந்து நெஞ்சக் கடலில் ஆழ்ந்து அதன் ஆழத்தில் புதைந்து போய்விட்டாள். இனிமேல் வரமாட்டாள்.

அழியவும் மாட்டாள்.

*******

நன்றி: http://www.natpu.in

Dec 17, 2011

சாரல் விருது 2012

 
ராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது.
 
 

VANNANILAVAN-7

vannadhasa

வண்ணநிலவன்

வண்ணதாசன்

  saral-award-invi-1asaral-award-invi-4b

Dec 11, 2011

"என் கணவர்" - செல்லம்மாள் பாரதி

 

 

மகாகவி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).

bharathi1a

திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.

எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.

images (1)

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும்

அவர் கவிதை.காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை  எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.

பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

 

வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்வாழிய

பாரத மணித்திரு நாடு

நன்றி: பாரதியார் சரித்திரம்

Dec 8, 2011

பூமணியின் படைப்புலகம்-ஜெயமோகன்

பூக்கும் கருவேலம்--பூமணியின் படைப்புலகம்

ஜெயமோகன்

விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பூமணி தமிழின் இயல்புவாத[naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு ' ' வெக்கை ' ஆகிய இரு நாவல்களும் ' ரீதி ' pooman என்ற சிறுகதைதொகுப்பும் முக்கியமானவை என்று கூறலாம். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ , பிரச்சினைகளை எளிமைப்படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப்படைப்புகள் அவை.அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்புவாதத்தின் உச்சங்களை தொட்டமையினால் தான் தமிழில் தொடர்ந்து அடுத்தகட்ட எழுத்துக்கள்,----யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் என்று இவற்றை தொகுத்துக் கூறலாம் ---பிறக்க முடிந்தது.

தமிழ் இயல்புவாதமும் பூமணியும்

தமிழின் முதல் இயல்புவாதப் படைப்பு எது ? இதற்கு பதில் பலவகைப்படலாம் என்றாலும் முக்கியமான ,இலக்கண சுத்தமான ,முன்னோடியான, இயல்புவாதப் படைப்பு ஆர் ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள் தான் என்பது வெளிப்படை. இயல்புவாதத்தின் இலக்கணம் என்ன ? துல்லியமான தகவல்கள் ,விமரிசனப்பாங்கற்ற சித்தரிப்பு நடை , முற்றிலும் நம்பகமான [அதாவது செய்திச் சித்தரிப்பு தன்மை கொண்ட ] கதையாடல் என்று சிலவற்றைகூறலாம்.மேற்கே இயல்புவாதம் இந்த அம்சங்களுடன் அப்பட்டமான அழுக்கு மற்றும் கொடுமைச் சித்தரிப்புகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டது.அதாவது சித்தரிப்பாளனின் குரல் ஒழுக்க நெறிகளையோ அழகியல் நெறிகளையோ கூட கணக்கில் கொள்ளாத அளவுக்கு நேரடியானதாக மாறியது.

எனினும் தமிழில் அப்படி நடக்கவில்லை .அதே சமயம் நாகம்மாள் கதையில் வரும் பேச்சுகள் அந்த காலத்தை வைத்துப் பார்க்கும்போது அப்பட்டமானவையேயாகும்.கொங்கு வட்டார வாழ்க்கையின் அறிக்கையாகவும் ,அப்பட்டமான சித்தரிப்பாகவும் தன்னை பாவனை செய்து கொண்டது நாகம்மாள் [இலக்கியப் படைப்பு எந்நிலையிலும் முன்வைப்பது ஒரு புனைவுப் பாவனையையே ,உண்மையை அல்ல. உண்மை அதை வாசிக்கும் வசகனால் அவன் அந்தரங்கத்தில் உருவாக்கப்படுவது மட்டுமே] ஆகவே அக்கால கட்ட வாசகனுக்கு அது சுவாரசியம் தரவில்லை ,அத்துடன் சற்று அதிர்ச்சியையும் தந்தது .அதை ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக முன்வைத்ததும் ,விமரிசன பூர்வமாக நிறுவியதும் க நா சுப்ரமண்யமே. பிறகு வெங்கட் சாமிநாதன்.

நாகம்மாளுக்கு பிறகு நீல பத்மனாபனின் 'தலைமுறைகள் ' , 'உறவுகள் ' இந்த வகை இலக்கியத்தின் முக்கியமான உதாரணங்கள் ஆகின. பிறகு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ' புத்தம் வீடு ' அதன் பிறகு பூமணியின் வருகை நிகழ்ந்தது. க நா சு வைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து முன்வைத்த உதாரண இலக்கிய வடிவம் இதுவே.பிறகு வெங்கட் சாமிநாதனும் இப்பார்வையையே கொண்டிருந்தார். இரண்டு அம்சங்கள் இதில் கவனத்துக்கு உரியவை.ஒன்று அக்காலத்தில் சோஷலிச யதார்த்தவாதம் அசாதாரண முக்கியத்துவம் பெற்றிருந்தது. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும் ' இதற்கு முன்னோடியாக இருந்தது.[கடைசியில் ரகுநாதனே இந்த அழகியல் வடிவம் பொருத்தமற்றதும் ,செயற்கையாக உண்டு பண்ணப்பட்டதுமான ஒன்று என்று கூற நேர்ந்தது, 1992 ல் .] செ.கணேச லிங்கனை மாபெரும் நாவலாசிரியராக முன்னிறுத்தி கைலாசபதி ,சிவத்தம்பியும் இவ்வடிவத்தை பிரச்சாரம் செய்தனர் .இதன் வெற்றி உச்சமாக ஜெயகாந்தனின் இலக்கிய திக்விஜயம் அமைந்தது.இவ்வடிவம் அடிப்படையில் எழுத்தாளனின் [சமூக சீர்திருத்த ] நோக்கத்தையே தன் மையமாகக் கொண்டிருந்தது.

சோஷலிச யதார்த்தவாதம் என்பது [ ரகுநாதனைப்போலவே எனக்கும் ] இன்று பொருத்தமில்லாத சொல்லாட்சி . ஆகவே இதை விமரிசன யதார்த்தவாதம் என்று சொல்லலாம். இந்த அழகியல் வடிவம் மீது க நா சு மரபுக்கு கடுமையான அவநம்பிக்கை இீருந்தது. ஆசிரியன் குரலை அவர்கள் வடிவத்தில் உட்புகும் புற அம்சமாகவே கண்டனர். படைப்பு என்பது வாசகக் கற்பனையில் உருவாவது என்று நம்பிய அவர்களுக்கு ஆசிரியனின் குரலை மையமாகக் கொண்ட விமரிசன யதார்த்தவாதம் ஒரு வகை திரிபுநிலையாக , கலையில் அரசியலின் அத்துமீறலாகப் பட்டது. அந்நிலையில் இயல்பு வாதத்தின் துல்லியமான மெளனம் அவர்கள் விரும்பி ஏற்கும் அழகியல் வடிவமாக இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

நாகம்மாள் ,தலைமுறைகள் ,பிறகு ஆகிய நூல்கள் தமிழ் அழகியல் [ வடிவவாத ] விமரிசகர்களால் போற்றப்பட்டமைக்கு முக்கியமான காரணம் அவை அவர்களின் தரப்பை விளக்கும் மூன்னுதாரணங்களாக அமைந்தன என்பதே. அழகியல் குறித்த பேச்சு இலக்கியத்தில் ஜனநாயகத்தன்மை உருவாவதற்கோ , எளிய மக்களின் வாழ்க்கை இலக்கியத்தின் கருப்பொருள் ஆவதற்கோ எதிரான ஒன்றல்ல என்று காட்ட இவர்கள் விரும்பினார்கள் .முற்போக்கு என்பது பிரச்சாரம் மட்டுமல்ல என்று சொல்லவும் இவை பயன்பட்டன. மேலும் அன்று பிரபல இதழ்கள் மூலம் பரவலாக ரசிக்கப்பட்ட ஆர்வி ,எல்லார்வி ,சாண்டிலயன்,பி வி ஆர் ரக ' அதி சுவாரசியக் ' கதைகளுக்கு மாற்றாக இக்கதைகளை முன்வைக்க இவ்விமரிசகர்கள் முயன்றனர்.

க நா சு வுக்கும் ,வெங்கட் சாமிநாதனுக்கும் அடிமனதில் இவ்வகை படைப்புகள் மீது தான் உண்மையான ரசனை இருந்ததோ என்று இன்று படுகிறது.குறிப்பாக வெங்கட் சாமிநாதனின் இன்றைய விமரிசனங்களை பார்க்கும்போது. ' பிறகு ' விற்கு பிறகு நம் இயல்புவாத மரபில் பல முகியமான எழுத்துக்கள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் விமரிசன யதார்த்தம் எழுபதுகளில் முக்கியத்துவம் இழந்த பின்பு வந்த பெரும்பாலான படைப்பாளிகள் இயல்புவாத எழுத்தையே தங்கள் பாணியாகக் கொண்டனர். மேலாண்மை பொன்னுசாமி .கந்தர்வன் போன்றுசில விதிவிலக்குகளே உள்ளன. முதல் தலைமுறையில் பாவண்ணன்[ சிதைவுகள் , பாய்மரக்கப்பல் ] சுப்ர பாரதி மணியன் [மற்றும் சிலர்,சுடுமணல் ,சாயத்திரை ] சி ஆர் ரவீந்திரன்[ ஈரம் கசிந்த நிலம் ] சூரிய காந்தன் [மானாவாரி மனிதர்கள் ] ஆகியவர்களையும் ; அடுத்த தலைமுறையில் பெருமாள் முருகன் [ ஏறு வெயில் ,நிழல் முற்றம், கூளமாதாரி ] இமையம் [ கோவேறு கழுதைகள் ,ஆறுமுகம்] சோ .தருமன் [தூர்வை ]ஸ்ரீதர கணேசன்[ உப்புவயல் , வாங்கல் ,சந்தி] தங்கர் பச்சான் [ஒன்பது ரூபாய் நோட்டு] போன்றவர்களையும் முக்கியமாக சொல்லலாம் .இவை அனைத்துமே வெங்கட் சாமிநாதனின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளனரென்பது விமரிசன ரெரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது..அவ்வகையில் பார்த்தால் ஆர் . சண்முக சுந்தரம் முதல் பூமணி ஈறாக உள்ள படைப்பாளிகளின் மூலம் இயல்பு வாதத்தை இவ்விமரிசகர்கள் தமிழில் ஆழமாக நட்டுவிட்டார்கள் என்பதைக் காணாலாம்.இன்று வெ சாமிநாதன் கொண்டாடுவது இவ்வெற்றியைத்தான்.

பூமணியின் கலைப்பார்வை

இவர்களில் பூமணி மேலும் அழுத்தம் பெற்ற /பெற்றாகவேண்டிய படைப்பாளி .நீல பத்மநாபன் உயர் சாதியை சேர்ந்த வாழ்க்கையை அதன் மதிப்பீடுகளை முன்வைத்த நாவலாசிரியர். அவரது படைப்புலகம் படிப்படியான சரிவையே எப்போதும் சித்தரிக்கிறது .பூமணி தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்த, அச்சாதியைப்பற்றி எழுதிய படைப்பாளி [அருந்ததியர் அல்லது சக்கிலியர் ] ஆனால் படைப்புக்கு வெளியே இருந்து பெறப்பட்ட எந்த புரட்சிகர யதார்த்தங்களையும் அவர் முன்வைக்கவில்லை .கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவுமில்லை . இது தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் கூட ஒரு ஆச்சரியம்தான் .கன்னட மொழியிலும் மராட்டி மொழியிலும் தலித் இலக்கிய இயக்கம் பிறந்து ஒரு தலைமுறை தாண்டிய பிறகுதான் அப்படைப்பாளிகள் கூட்டு அரசியல்க் குரலுக்கு இலக்கியத்தில் பெரிய இடமில்லை என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். [சமீபத்தில் தான் தயா பவார் ,தேவனூரு மகாதேவ ஆகியோர் அப்படி சொல்லியிருக்கின்றனர் ] மாறாக எழுதத் தொடங்கிய காலத்திலேயே தான் எழுதுவது தன்னால் உருவாக்கப் படும் ஒரு புனைவு யதார்த்தமே என்றும் , அதற்கு படைப்பின் அந்தரங்க தளத்திலேயே மதிப்பு என்றும் உணர்ந்து கொண்ட படைப்பாளி பூமணி. இலக்கியம் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளின் நிழலாகமிருக்காது என்று உணர்ந்தவர்.தலமைப் பொறுப்பை எந்நிலையிலும் அரசியல்வா தியிடம் ,அது எத்தனை புரட்சிகர அரசியலாக இருந்தாலும்கூட , தந்துவிட முன்வராதவர்.

அவரது படைப்புகள் எந்த புறக்குரலையும் பிரதிபலிக்கும் வேலையை செய்யவில்லை. ஆகவே தான் தமிழில் தலித் இலக்கிய மரபு ஒன்றை உருவாக்க முயன்றவர்கள் பூமணி போன்ற ஒரு பெரும்படைப்பாளி முன்னரே இருந்த போது கூட அவரை பொருட்படுத்தவில்லை .அவர்கள் ஒருவேளை அளித்திருக்கக் கூடிய கெளரவங்களை ஏற்க பூமணி முன்வரவுமில்லை.முதலும் முடிவுமாக அவர் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே முன்வைத்தார் .அதற்கு மேல் விழும் எந்த டையாளமும் தன் படைப்பை குறுக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். ' 'அழ கிய லுக்குப் பதிலாக அரசியலை ' ' முன்வைக்கும் குரல்கள் எழுந்த காலகட்டத்தில் இலக்கிய அழகியலின் அடிப்படையான வலிமையைக் காட்டும் முன்னுதாரணமாக பூமணி இருந்தார். தமிழில் அந்த ' அரசியல் ' இலக்கியவெற்றி பெறவில்லை ,பூமணியின் முன்னுதாரணம்தான் வென்றது என்பது சமீபகால வரலாறு

பூமணியின் படைப்புகள்

பூமணியின் படைப்புகளை முன்வைத்து விரிவான விவாதத்துக்கு இங்கு முற்படவில்லை.இக்கட்டுரை அனேகமாக வெளிநாட்டு வாசகர்களை முன்கண்டு எழுதப்படுவது.பூமணியின் படைப்புகளை தமிழின் இயல்புவாத படைப்பின் முன்னுதாரணங்களாகக் கொள்வது முதல்கட்டமென்றால் அவரது தனித்தன்மைகள் மூலம் அவர் அவ்வழகியலின் இலக்கணத்திலிருந்து அவர் விலகும் இடங்களை ஒவ்வொன்றாக அடையாளம்கண்டு அவரை அதிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அடுத்தகட்டமாகும்.எந்த முதன்மைப்படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட அழகியலடையாளத்துடன் முழுமையாக பொருந்திப் போகமாட்டான் .காரணம் அழகியல் இயக்கங்கள் காலகட்டம் சார்ந்தவை ,படைப்பு நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் காலம் சார்ந்தது.

' பிறகு ' பூமணியின் படைப்புகளில் முதன்மையானது என்பதில் விமர்சகர்களிடையே மாற்றுக் கருத்து இல்லை.அதேபோல படைப்பூக்கம் சற்றும் திரளாமல் போன படைப்பு ' நைவேத்யம் ' என்பதிலும் . அதே சமயம் நைவேத்யம் ஒரு முக்கியமான விஷயத்தை பறைசாற்றுகிறது . படைப்பாளிக்கு சூழல் சித்தரிப்பும் சரி ,சமூகச் சித்தரிப்பும் சரி படைப்பின் புற அம்சங்களே. படைப்பை ' நம்பவைத்தலுக்கும் ' படைப்புக்கு தேவையான படிமங்களை உருவாக்கவும் தான் அது பயன்படுகிறது .கரிசல் காட்டுக் கிராமத்துக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை அக்கரிசல் காட்டுக் கிராமத்தில் படைப்பாளியின் மனம் பெரிதும் கலந்திருப்பதனால் அது அகப்படிமங்களாகும்போது உயிர்ப்பு அதிகம் அவ்வளவுதான் . தனக்கு பழகிப்போன அருந்ததிய சாதி சார்ந்த வாழ்வில் இருந்தும் , கரிசல் நிலத்திலிருந்தும் பூமணி விலகி பிராமண வாழ்வைப்பின்புலமாகக் கொண்டு இந்நாவலை எழுதியது அவரது தன்னம்பிக்கையையும் ,புதிய தடங்களை நோக்கி செல்வதற்கான அடிப்படையான துடிப்பையும் தான் காட்டுகிறது .அத்துடன் அச்சாதி மற்றும் நிலப்பின்னணியை தன் இலக்கிய ஆக்கத்தின் ஆதாரமாக அவர் எண்ணவில்லை என்பதற்கும் அது சான்று.

ஆனால் தனக்கு ஆழ்மன அறிமுகம் இல்லாத பிராந்தியத்தில் படைப்பாளியின் மனம் எதையுமே கண்டடையாது என்பதற்குச் சான்றாக அமைந்தது நைவேத்யம் . பூமணிக்கு பின்னால் வந்த படைப்பாளிகள் தங்கள் சாதி ,நிலச் சூழலுடன் தங்களுக்கு இருந்த அடிப்படை உறவை வலியுறுத்தினார்கள் . தாங்கள் எழுதுவது அந்த சமூக , நிலப் பகுதியின் ' அப்பட்டமான ' வாழ்க்கையை என்று நம்பி சொல்லவும் செய்தார்கள்.அந்த நம்பிக்கை இயல்புவாத எழுத்தில் எப்போதும் காணப்படுவது .பூமணிக்கும் இயல்புவாதத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான்.அவர் மன அளவில் இயல்புவாதத்தை ஏற்றுக் கொண்டவரல்ல .தன் சித்தரிப்புகளை அப்பட்டமாக செய்யும்போதேகூட அவர் அதை ஒரு புனைவு உத்தி என அறிந்துமிருந்தார் .

'பிறகு ' நாவலின் அழகிரி தமிழின் மிக முக்கியமான முன்னோடிக் கதாபாத்திரம் .தமிழ் நாவல்களில் ஆண் பெண் வடிவில் அழகிரிப்பகடை இப்போது பலமுறை மறுபிறவி எடுத்துவிட்டார். [இமையத்தின் ஆரோக்கியம் ,தருமனின் மாடத்தி ஈறாக] ' பிறகு ' நாவலின் ஒரு நீட்சியே பெருமாள் முருகனின் கூளமாதாரி [ இவ்விரு நாவல்களை புரிந்துகொள்ள முக்கியமாக உதவக் கூடியது மாற்கு எழுதிய ' அருந்ததியர் வாழும் வரலாறு ' என்ற ஆய்வு நூல் ] சமூகத்தால் இழிந்த நிலையில் கடைப்படியாக கருதப்படும் ஒரு குலத்தில் , சகல அழுக்குகளுக்கும் இருட்டுகளுக்கும் இழிவுகளுக்கும் நடுவே பிறந்து முழு வாழ்க்கையையும் கழிக்கும் அழகிரிப்பகடையில் குடிகொள்ளும் ஆழமான மானுட நேயமும் ,வாழ்க்கை குறித்த புரிதலும் , சமநிலையும் நிதானமும் வாசகனை மிக ஆழமான மறு பரிசீலனைகளுக்கு இட்டுச் செல்கிறது.ஒரு சராசரித்தமிழ் மனம் அழகிரியை 'சான்றோர் ' என்று ஏற்றுக் கொள்ளாது. [சில நற்குணங்களை அது அவரிடம் அடையாளம் கண்டுகொள்ளலாம் ,அது வேறுவிஷயம் ] ஆனால் அழகிரிப்பகடை அச்சமூகமனம் எவற்றை உயர்ந்த விழுமிங்களாகக் காண்கிறதோ அந்த அம்சங்களெல்லாம் நிரம்பிய கதாபாத்திரம். அதே சமயம் அது நா பார்த்தசாரதியின் பாணியில் செதுக்கப்பட்ட ஓர் ' அச்சு இலட்சியவாத ' கதாபாத்திரமல்ல .இங்குதான் பூமணியின் அப்பட்டமான இயல்புவாதம் அவருக்கு கைகொடுக்கிறது. அழகிரிபகடை ' எது மேலான வாழ்க்கையின் இலக்கணம் ' என்ற வினாவை மிக ஆழமாக எழுப்பிவிடுகிறார் .

' பிறகு ' ஒரு வரலாற்று நாவலும் கூட. நூறு வருட காலகட்டத்தில் இந்த அருந்ததிய வாழ்க்கையில் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாறுதல்கள் [அல்லது வேறு ஒரு கோணத்தில் மாறுதலின்மைகள் ] இந்நாவலில் கூறப்படுகின்றன.அழகிரிப் பகடையின் சாதாரண வாழ்க்கையை மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகள் வழியாக பூமணி சித்தரிக்கிறார் .பலவகையிலும் இதனுடன் ஒப்பிடக்கூடிய நாவலான சினுவா ஆச்சிபி யின் ' சிதைவுகள் ' [Things fall apart ] இதனுடன் ஒப்பிடுகையில் மிகச் சாதாரணாமான ஒரு படைப்பே .காரணம் ஆச்சிபி என்ற [மேற்கத்தியக் கண் கொண்ட] சித்தரிப்பாளர் அக்கதையைச் சொல்வது அந்நாவலில் அடிக்கடி வெளித்தெரிகிறது .குறிப்பாக அந்நாவலில் கதையில் வரும் முக்கியமான கால இடைவெளி ஒரு புனைவுத் தோல்வியே ஆகும். வரலாறு ஒரு கதையாக மாற்றப்படும் விதம் பொம்மலாட்டக் காரனின் விரல்கள் போல அங்கு வெளியே தெரிகிறது.மாறாக 'பிறகு ' காலம் போலவே நகர்வு தெரியாமல் நகர்கிறது.மிகவும் சகஜமாக ,மிகவும் நுட்பமாக ,அதே சமயம் மிகவும் சலிப்பூட்டுவதாகவும் கூட!இந்த முதிர்ச்சியான வரலாற்றுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாகவே பூமணியின் நடையும் சித்தரிப்பும் மிக மிக நிதானம் மிக்கவையாக , சமநிலை கொண்டவையாக காணப்படுகின்றன.

'பிறகு 'வை முன்வைத்து இயல்புவாதத்துக்கும் பூமணிக்கும் உள்ள உறவை மேலும் ஆராயலாம். இயல்புவாதத்தின் அப்பட்டமான மானுட யதார்த்தத்தை ' பிறகு ' தவிர்த்துவிடும் இடம் எது ? அழகிரிப் பகடையின் கதை கிட்டத்தட்ட ஒருமூதாதை வரலாறு போலவே உள்ளது.மூதாதை வரலாறுகளில் உள்ள மிகை நவிற்சியும் ,சாராம்சப் படுத்தும் குரலும் தவிர்க்கப் பட்டுள்ளன .அதாவது இயல்புவாத அழகியல் மூலம் முற்றிலும் நம்பகமான சூழலில் நிறுவப்பட்ட மூதாதைக் கதை தான் ' பிறகு ' இந்திய மூதாதைக் கதை ஒன்றில் எதையெல்லாம் நம் மரபு அனுமதிக்காதோ அதையெல்லாம் இக்கதையும் அனுமதிக்கவில்லை --இயல்புவாதமேயானாலும் !ஆக இயல்புவாதத்தின் அடிப்படையான தத்துவத்தை பூமணிீ ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருதலாம் .மனித வாழ்க்கையும் ,வரலாறும் , மனமும் ஆழத்தில் இருள் நிரம்பியவை என்ற நம்பிக்கை இயல்புவாதத்தின் ஆதாரம்.[ஃப்ராய்டிய உளப்பகுப்புடன் இதற்குள்ள உறவு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது] அந்த இருளை எந்த பாவனைகளுமில்லாமல் அப்பட்டமாகக் காட்டவே அது முயன்றது. பூமணிீயி ன் இீயல்புவாதம் அப்பக்கமே போகவில்லை. அது இயல்புவாதத்திடமிருந்து பெற்றுக் கொண்டது விமரிசன நோக்கமற்ற சித்தரிப்பும் , சமநிலை கொண்ட வடிவத்தையும் மட்டுமே என்று சொல்லலாம்.

'வெக்கை ' தமிழில் நவீனத்துவப் படைப்புகள் பரபரப்பாக பேசப்பட்ட காலத்தில் வெளிவந்தது . புகழ் பெற்ற நவீனத்துவ நாவல்களுடன் இதற்கு வடிவம் மொழி ஆகிய இரு தளங்களிலும் நெருக்கமான தொடர்பு உண்டு.எதிரியின் கையை வெட்டிவிட்டு ஓடும் சிறுவனாகிய கதாநாயகனின் சித்திரத்துடன் தொடங்குகிறது நாவல் . அவனது ஓட்டத்தை ஒரு குறியீட்டுத்தளத்திற்கு நகர்த்துவதிலும் நவீனத்துவ நாவல்களின் பாதிப்பு அதிகம். ஆனால் இந்நாவலும் அழகிய இயல்புவாத நாவலேயாகும்.சித்தரிப்பில் எந்த இடத்திலும் சமூகவியல் நிலவியல் நம்பகத் தன்மையை இது இழக்கவில்லை.இதன் பாதிப்பு அதன் செய்தியறிக்கைப் பாணிமூலமே நடைபெறுகிறது . இதை ஒரு நவீனத்துவ நாவலாகாது தடுக்கும் அம்சம் இதிலுள்ள இனவரைவியல் கூறுதான்.இது அடையாளம் இல்லாத 'ஒரு மனிதனின் ' கதை அல்ல .மானுடத்தின் உருவகக் கதையுமல்ல. இன இட அடயாளம் காரணமாக இது மெதுவாக வீரகதைகளின் எல்லைக்குள் சென்றுவிடுகிறது. அதே சமயம் இது அத்தகைய கதைகளுக்குரிய மிகை நோக்கிச் செல்லாமல் தன் இயல்புவாத அம்சத்தை நிலை நிறுத்திக் கொண்டுமுள்ளது.இயல்புவாதத்திலிருந்து நவீனத்துவம் நோக்கிய ஒரு மெல்லிய நகர்வே இந்நாவலாகும்.

பூமணியின் சிறுகதைகளும் நவீனத்துவ அழகியல் வடிவ நேர்த்தியை இயல்புவாத தன்மையுடன் அடைய முயல்பவை என்று சொல்லலாம்.ரீதி தொகுப்பில் உள்ள கதைகளை ஒருவர் எளிய நேரடியான வாழ்க்கைத்துளிகளாக எடுத்துக் கொள்ளலாம் அவற்றை பின்னணியான சமூகச் சித்திரத்துடன் பொருத்திப் பார்க்கையில் அவை விரிவடைந்த படியே போவதைக் காணலாம்.ரீதியும் ராஜேந்திர சோழனின் ' எட்டுகதைகள் ' என்ற தொகுப்பும் முறையே இயல்புவாதத்துக்கும் ,விமரிசன யதார்த்தவாதத்துக்கும் உச்ச உதாரணங்களாக அவை வெளிவந்த காலத்தில் கருதப்பட்டன.

பூமணியின் எல்லைகள்

தமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது. பொதுவாக இந்திய மொழிகளைப் பார்த்தால் விமரிசன யதார்த்தவாதம் என்ற அழகியல் வடிவம் மிதமிஞ்சிய வடிவப் பிழைகளிடன் ,அ த்துமீறியுருப்பதைக் காணமுடியும். உதாரணமாக மகா ஸ்வேதா தேவி யின் கதைகளையோ தகழி சிவசங்கரப் பிள்ளையின் [செம்மீன் தவிர்த்த] படைப்புகளையோ பார்க்கலாம் .தமிழ் நவீனத்துவத்துடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக தமிழ் விமரிசன யதார்த்தவாதப் படைப்புகள் கூட கச்சிதமான வடிவத்தை அடைந்துள்ளன.[விதிவிலக்கு பொன்னீலனின் புதிய தரிசனங்கள். ஆனால் அதுவே அவ்வகை நாவலகளில் முதன்மையானது.காரணம் விமரிசன வாதம் என்பது அக்கண்ணோட்டம் முழுமையாக முன்வைக்கப் படும்போதே மதிப்புக்குரியதாகிறது] .

தமிழின் இயல்புவாதப் படைப்புகள் எல்லாமே மிகக் கச்சிதமான வடிவ நேர்த்தியுடன் இருப்பதைக் காணலாம். முதல் உதாரணமான 'நாகம்மாள் ' கூட அப்படிப்பட்ட கச்சிதமான ஒரு படைப்புதான். கலைப் பிறழ்வுகளை இங்கு சுட்டவில்லை.பூமணியின் நாவல்கள் இயல்பாகவே கச்சிதமானவை--நைவேத்யம் கூட.அவற்றின் முக்கியமான பிரச்சினையே அவற்றின் அப்பட்டமான இயல்புவாதத் தன்மைதான்.கனவுகளுக்கோ நெகிழ்வுகளுக்கோ இடமற்ற 'வரண்ட ' இப்பரப்பில் வாழ்க்கையின் ஒரு தளம் மட்டுமே இடம் பெற முடிகிறது.ஆழ்நிலைகளை இது ஐயப்படுகிறது .புறவய யதார்த்தத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது.உதாரணமாக பூமணி பேசும் மக்கள் கூட்டத்தின் கடவுள்கள் சடங்குகள் ஆகியவை அவர்களின் அகம் வெளிப்படும் முக்கியமான ஊடகங்களாகும்.[பார்க்க அருந்ததியர் வழும் வரலாறு] ஆனால் பூமணி இந்த தளத்தை முற்றிலுமே தவிர்த்து விட்டிருக்கிறார்.அவை வெறும் நிகழ்ச்சிகளாக ,தகவல்களாக மட்டுமே அவருடைய படைப்புலகில் தெரிகின்றன.இதன் மூலம் வெளியே தள்ளப்படும் ஆழத்தில் தான் இம்மக்களின் சமூக ,அந்தரங்க பழக்கவழக்கங்களின், நம்பிக்கைகளின் ஊற்றுக் கண் இருக்க முடியும்.

பலவகையிலும் உளவியல்பூர்வமாக அடக்கப்பட்ட இம்மக்கள் தங்கள் தரப்பை நுட்பமான இடக்கரக்கல்கள் மூலமும் , குறியீடுகள் மூலமும் மறை முகமாக இந்த ஐதீக, புராணிகங்களில் பதிவு செய்துள்னர் .அவ்வம்சங்கள் தவிர்க்கப் பட்டதும் ஓர் முக்கியமான அகத்தளம் விடுபடுகிறது .இவ்வம்சத்தை முழுமைப்படுத்தவே பிற்பாடு வந்த மிகுபுனைவுசார்ந்த , மீமெய்வாத [fantacy &surrealism ] படைப்பாளிகள் முயன்றனர்.ஒரு உதாரணம் கூறலாம் .பூமணியின் 'வெக்கை ' கதையின் அகவய நீட்சியே கோணங்கியின் ' கருப்பன் போன பாதை ' என்ற முக்கியமான கதை. பூமணியின் கதையில் ஆண்டையை வெட்டியபிறகு ஓடும் பகடையின் ரத்தம் பரவிய ஆடைகளும் ,அரிவளும் யதார்த்தமாக சித்தரிக்கப் படுகையில் கோணங்கியின் கதையில் அவை குறியீடுகளாக மாறி , தலைமுறை தலைமுறையாக உலராத ரத்தத்துடன் அக்குடிகளிடம் எஞ்சுகிறது. இக்கதையை தான் பூமணியின் கதையின் தொடர்ச்சியாகவே உருவகிப்பதாக அதை எழுதுவதற்கு முன்பே கோணங்கி என்னிடம் சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த ரத்தம் எளிதில் உலராதது ,அதை கழுவ முடியாது என்று அவர் சொன்னார் .இக்கதை நாட்டார் /வாய்மொழிக் கதைகளின் புராணிக /ஐதீக அம்சத்தை சேர்த்துக் கொண்டு பூமணி தொடாத அடுத்த இடத்தைத் தொடுவது முக்கியமானது.

பூமணியின் படைப்புலகில் உள்ள அடுத்த இடைவெளி அதன் இயல்புவாதப் பண்பு காரணமாக அது அங்கத அம்சத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டிருக்கிறது என்பதே. அருந்ததியர் போன்ற அடித்தள மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையில் அங்கதம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தங்கள் கசப்பை ,கோபத்தை,ஏமாற்றத்தை ,ஆங்காரத்தை எல்லாம் இம்மக்கள் அங்கதமாக மாற்றிக் கொள்கின்றனர். அத்துடன் அவர்களிடம் ஒரு களியாட்ட அம்சம் எப்போதும் உள்ளது,அது ஒரு பழங்குடித்தன்மையும்கூட! மற்ற 'உயர் ' சாதியினரின் எதிர்காலம் பற்றிய பதற்றத்தை ,ஒழுங்குகளை, பாவனைகளை இந்த களியாட்டம் மூலம் அவர்கள் நக்கல் செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கை ' முற்போக்கு ' இலக்கியத்தால் காட்டப்பட்டது போல ' அழுவாச்சி ' யால் நிரம்பியது அல்ல .அது ஒரு களியாட்டவெளியும் கூட.நோயும் வறுமையும் அதை தகர்ப்பதில்லை. இந்த அம்சம் பூமணியின் படைப்புக்ளில் சுத்தமாக காணப்படுவது இல்லை.இந்த அம்சத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் சோ. தருமனின் காடுவெட்டி முத்தையா [தூர்வை].அவனது 'இங்கிலீசும் ' அவன் போடும் அவசர அடிமுறை பிரகடனங்களும் எல்லாமே ஒரு வகை சாதிய எதிர்ப்புகளும் கூடத்தான்.

பூமணி திரைப்படம் பக்கமாக சென்றது அவரை இலக்கியத்திலிருந்து ஓரம் கட்டியது என்று சொல்லப்படுவது உண்டு. அவரது இலக்கிய பங்களிப்பு முழுமையடைந்து விட்டது ,அவரது இடைவெளிகளை நிரப்பும் அடுத்த கட்ட படைப்பாளிகள் வந்து விட்டார்கள் என்பவர்களும் உண்டு. வெங்கட் சாமிநாதன் மகன் திருமணத்தில் நான் அவரை ஒரு வருடம் முன்பு சந்தித்தபோது தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் சீக்கிரமே மீண்டும் தன் இலக்கிய பிரவேசம் அமையுமென்றும் சொன்னார்.புதிய தளங்களுக்கு நகர்ந்துவிட்ட பூமணியை எதிர்பார்க்கிறேன்.

***

நன்றி: திண்ணை

Dec 6, 2011

பூமணி-க்கு விஷ்ணுபுரம் விருது

 

விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருதுFR: Poomani

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளார் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளார் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)vishnupuram-11-Invitaion-design-copy-1024x767

பூமணியின் சில சிறுகதைகள்

Dec 5, 2011

சிறுகதை எழுதுவது எப்படி?-தி.ஜானகிராமன்

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு thija4 இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.

இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ, நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி, பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத, அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ், மாப்பஸான், ஹென்ரி ஜேம்ஸ், மாம், மெல்வில், ஸ்டீபன், க்ரேன், ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே, பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும், பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம்,

சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ,நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.

சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.

என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.

எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் “நெக்லேஸை”யோ, “இரு நண்பர்களை”யோ, செக்காவ் “டார்லிங்”கையோ, “கோரஸ் பாடகி”யையோ, கு.ப.ரா. “நூருன்னிஸா”வையோ, பிச்சமூர்த்தி “பதினெட்டாம் பெருக்கை”யோ, டாகூர் “ஊர் திரும்புதலை”யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.

இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)

நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம், பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. (ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம் சொன்னதும், பீடி தோசை முதலாளி போலல்லாமல், அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து “கண்டாமணி’ என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு, சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது, குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம், தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி, “போய்யா பைத்தியம்” என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் “சிலிர்ப்பு” மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.

இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.

என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.

நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.

******

தொகுத்தவர் - மகரம். (1969)

நன்றி: சொல்வனம்

Nov 23, 2011

தியாகமூர்த்தி - புதுமைப்பித்தன்

     செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி, நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ, காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில் ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர் இசைத்த, pu.pi

     தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம்
     தானே வந்தால் இங்கு விடுவானே தோணி 

என்ற மேற்கோள் வரிகளையும் நம்புவதாக இருந்தால்தானே மேலே சொல்ல முடியும்.

     தானே எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் தோணி விடக்கூடிய அந்த ஆற்றிற்கு ஒரு தாம்போதி, மேற்கே இருக்கும் செங்காணியையும் கிழக்குக் கரையில் இருக்கும் தருவைத் திருப்பதியையும் பிணித்து நின்றது.

தாம்போதியைக் கடந்ததும் சாலையின் பக்கத்தில் ஒரு புளியமரம். அதன் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டடை வீடு என்ற முறையில் சின்னாபின்னமாக நின்ற ஒரு குடிசையில் இருபது வருஷங்களுக்கு முன் ராமசாமிப் பத்தரின் திருஅவதாரம் இனிது நடந்தேறியது.

     தகப்பனாரைப் போல் ஓட்டைக் கட்டை வண்டிக்குப் பட்டை போடுவது, பஞ்சத்தில் அடிபட்ட மாடுகளுக்கு லாடம் அடிப்பது, பொழுது போக்காக ஆணிகளைச் செய்து குவிப்பது என்ற கொல்ல சமூகத்தின் வைதிக நடவடிக்கைகளுக்கும், காலம் இருக்கிற தர்பாரில், தனது அபூர்வமான புத்தி விசாலத்திற்கும் ஒத்துவராது என்று கண்ட ராமசாமிப் பத்தர், தலைமுறை தலைமுறையாகத் தம் தகப்பனார் வரையில் வந்த செங்காணி மான்மியத்தை முடித்துக் கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று குடியேறினார்.

     முதலில் 'ஸைக்கிள்' 'கடிகாரம்' ரிப்பேரில் ஆரம்பித்து, வரவர 'மோட்டார் கண்டக்டர்', 'டிரைவர்', பிறகு 'மெக்கானிக்' என்ற பருவங்களைக் கடந்து, தமக்குத்தாமே சொந்தமாக வைத்துக் கொண்ட மோட்டார் என்ஜினீயர் என்ற பட்டத்துடன் 'ஒர்க் ஷாப்' என்ற பெயருடைய ஒரு கொல்லப் பட்டடையை ஸ்தாபித்தார்.

     இந்தப் பத்து வருஷங்களில் பத்தரைக் கையில் பிடிக்க முடியாது. கையில் பணம் ஓட்டமிருந்தால் யாரும் அப்படித்தான். ஏறாத தாசி வீடு இல்லை; உடலில் வாங்காத வியாதி இல்லை.

     இந்தக் காலத்தில்தான் பையன் கெட்டுப் போய்விடுவான் என்று எண்ணி அவருடைய உறவினர்கள் கல்யாணமும் செய்து வைத்தார்கள். அந்த அம்மாணி மூன்று வருஷத்தில் இரண்டு பெண் குழந்தைகளைப் பத்தருக்கு ஒரு பொறுப்பாக வைத்துவிட்டுக் காலமானாள்.

     உறவினர்கள், ராமசாமிப் பத்தரின் குடும்ப வாழ்க்கையில் கவலைப்பட ஆரம்பிக்கு முன்னமே 'ஒர்க் ஷாப்' அவர்கள் தடுத்து விடலாம் என நம்பியிருந்த அந்த நிலைமைக்கு வந்துவிட்டது. எங்கே பார்த்தாலும் கடன். வேலைக்காரர் தொல்லை. வேலையும் அவர் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாததனால் மற்ற கம்பெனிகளைத் தேடிவிட்டன.

     இந்த மாதிரி நிலைமை விரைவில் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையிலேயே ஒரு பத்து வருஷம் கழிந்தது.

     மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும். தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?

     ஒரு சுப தினத்தில் 'ஒர்க் ஷாப்' கதவடைக்கப்பட்டது. அடைத்ததனால் அவருடயை நிலைமை மேலோங்கி விடவில்லை. 'செட்டி இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்' என்ற கதைதான்.

     கொஞ்சநாள், தம் வயசு வந்த பெண்களின் கதியை நோக்கிக் கண்ணீர் விட்டுக்கொண்டு, ஊரைச்சுற்றி வந்தார். கடன் தொல்லை, பெண்களின் பொறுப்பு, எல்லாம் சேர்ந்து அவரை நாற்பது வயசிலேயே ஊக்கங்குன்றிய கிழவனாக்கிவிட்டன. உடல் வன்மையாவது இருக்கிறதா? பழைய சல்லாப காலங்களில் சேகரித்த 'முதல்' வீணாகப் போகவில்லை. மருந்து என்ற சிறிய தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன. 

******
 
       'இண்டோ -யூரோப்பியன் மோட்டார் மெக்கானிகல் ஒர்க்ஸ்' முதலாளியான ராமானுஜலு நாயுடு அவருக்கு ஒரு பிட்டர் வேலை கொடுத்தபொழுது, 'அன்ன தாதா' என்று அவரை மனமாரப் புகழாமல் இருக்க முடியுமா? நீரும் நானும் இந்த மாதிரி இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேலையில்லாமல் திண்டாடியிருந்தால் அம்மாதிரித்தான் புகழ்வோம்.

     மாசம் 20 ரூபாய் சம்பளம். காலை 6 முதல் இரவு எப்பொழுது பட்டடை அடைக்கப்படுகிறதோ அவ்வளவு நேரமும் வேலை.

     இம்மாதிரி ஒரு வருஷம் கொஞ்ச நாட்கள் சற்றுக் கவலையற்ற தரித்திரம். பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அடித்து விளாசுகிறார்களே, அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம் உமக்கும் எனக்கும் பத்தி பத்தியாக நுணுக்கமாக எழுதத் தெரியும்; பேசவும் தெரியும். ராமானுஜலு நாயுடுவுக்குத் தெரிந்ததுபோல் நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

ராமானுஜலு நாயுடு நல்ல குணமுள்ளவர்தாம். சில சமயங்களில் ஐந்து பத்து முன்பின் யோசியாமல் கொடுத்து உதவுகிறவர்தாம். ஆனால் பணம் சேர்ப்பதற்குத்தான் அவர் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தாரே ஒழிய, தொழிலாளிகளுக்குத் தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வரவில்லை.

     அவருடைய சிக்கனக் கத்தி விழுந்தது. பத்துப் பேர் வெளியே போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப் பத்தரும் ஒருவர். கெஞ்சினார்கள்; கூத்தாடினார்கள். பத்து ரூபாய் - பாதி சம்பளம் - கொடுத்தால் கூடப் போதும் என்றார்கள். ராமானுஜலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!

     நல்ல பசுமாடு இருக்கிறது. வேளைக்கு இரண்டு படி பால் கறக்கிறது. அதற்குப் பருத்தி விதை, தீனி என்ன? ராஜயோகந்தான். கண்ணும் கருத்துமாகத்தான் கவனிக்கிறோம். மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் வைத்துக் கொண்டு கும்பிடவா செய்கிறோம்? தோலின் விலைக்காவது தள்ளிவிடவில்லையா? அதில் ராமானுஜலு நாயுடு செய்ததில் என்ன குற்றம்? அது அப்படித்தான். அது நியாயந்தான். இப்பொழுது அதைத் தப்பு என்று சொல்லுகிறவன் முட்டாள், பைத்தியக்காரன்.

*****

     ராமசாமிப் பத்தருக்குச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வரும்போது எதுவும் தோன்றவில்லை. நாலு நாள் சம்பளம் எத்தனை நாட்களுக்குப் போதும்? பிறகு என்ன செய்வது? வேறு எந்தக் கம்பெனியில் எடுப்பார்கள்? எடுத்தாலும் இந்தக் கதிதானே! உலகமே ஓர் இதயமற்ற திருக்கூட்டம் என்று பட்டது. நெற்றிக்கண் இருந்தால் எல்லாரையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பார். இல்லாததனால் நேராகச் சாராயக் கடைக்குப் போனார்.

     இனி என்ன செய்வது?

     இனி என்னதான் செய்வது? எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுக் காவியைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான். சீ! பிச்சையா! அதைப் போல கோழைத்தனம் உண்டா? நம்மைத் திருடுகிற இந்தப் பயல்களைக் கொள்ளையடித்தால் எந்தத் தர்மசாஸ்திரம் ஓட்டையாகப் போகிறது?

     'இரவு பத்துப் பதினொரு மணிக்கு ராமானுஜலு நாயுடு தனியாகத் தான் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பார். ஒரு கை பார்த்தால் தான் என்ன?'

     வீட்டிற்கு வந்து மிஞ்சி இருக்கிற சில்லறையைப் பெண்களிடம் கொடுத்தார். கொடுத்தது, சாப்பிட்டது எல்லாம் மெஷின் மாதிரி. மனசு அதில் லயித்துவிட்டது.

     "என்ன அப்பா, இப்படி இருக்கே?" என்றதற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. 

    திடீரென்று இருவரையும் கட்டிச் சேர்த்து முகத்தில் மாறி மாறி முத்தமிட்டார். ஹிந்து சமுதாயத்தில் வயது வந்த பெண்களை முத்தமிடத் தந்தைக்கு உரிமையே இல்லை. இருவரும் திடுக்கிட்டார்கள். குடித்துவிட்டாரோ என்ற சந்தேகம். பயந்து நடுங்கினார்கள்.

     "நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது. நாயுடு எனக்கு ஐம்பது ரூபாயில் பட்டணத்தில் வேலை பார்த்துக் கொடுத்தார். வழிச்செலவிற்குப் பணம் ராத்திரி தருகிறேன் வா என்றிருக்கிறார்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தமது தீர்மானத்தை நிறைவேற்றப் புறப்பட்டார்.

     எதிர்பார்த்தபடி நாயுடு தனியாகத்தான் இருந்தார்.

     "வா ராமசாமி, நான் என்ன செய்யட்டும், நீதான் சொல். நீ இங்கே வருவதில் பிரயோஜனமில்லை" என்றார் நாயுடு.

எனக்கு நீங்கள் கொடுத்தது பத்தாது" என்றார் ராமசாமி. குரல் வித்தியாசமாக இருந்தது.

     குடித்துவிட்டு வந்திருக்கிறானோ என்று நாயுடு சந்தேகித்து, "நீ நாளைக்கு வா" என்றார்.

     "நாளைக்கா! பார் உன்னை என்ன செய்கிறேன். என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டாயே, திருட்டு ராஸ்கல்" என்று அவர்மேல் பாய்ந்து மேஜையின் மேல் இருந்த நோட்டுக்களில் கையை வைத்தார்.

     நாயுடு மட்டும் தனியாக இருந்தது உண்மைதான். அதற்காக உலகமே நடமாட்டமற்றுப் போய்விடுமா? ராமசாமி வெகு லேசாகப் பிடிபட்டார்.

     நாயுடுவிற்கு அசாத்தியக் கோபம். "உண்ட வீட்டில் கெண்டி தூக்கிய பயலை விடுகிறேனா பார்" என்றார்.

     விவரிப்பானேன்?

     பலவந்தத் திருட்டுக் கேஸாகியது. ஆறுமாசக் கடுங்காவல்.

     பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டுத் தொழிலாளியின் குடும்பத்திற்கு இந்தமாதிரி உதவி செய்ய முடியும்? நியாயமான உலகமல்லவா?

     பெண்களின் நிலைமையைப் பற்றி எழுதக் கூசுகிறது.

     ஜன்மாந்திர விதி என்ற ஒரு மகத்தான காரணத்தைக் கண்டுபிடித்த ஹிந்து சமுதாயத்தில் இது இயற்கைதானே?

********

காந்தி, 5-9-1934

Nov 22, 2011

வெளியில் ஒருவன்-சுகுமாரன்

வெளியில் ஒருவன்

பரிவில்லாதது வீடு
வெளிக் காற்றில் ஏராளம் விஷம் sukumaran
சோகை பிடித்த தாவரங்கள்
நீர்நிலைகளில் சாகும் பறவைகள் மிருகங்கள்  .
பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில்
சரித்திரம் கெக்கலிக்கும்.
தேசக் கொடிகளின் மடிப்பவிழ்ந்து
எங்கும் பொய்கள் கவியும்.
ஒன்று அல்லது மற்றொன்று -
விலங்குகளை இழுத்து நகரும் மனிதர்கள்.

திசைகளில் அலைந்து திரும்பிய பறவை சொல்லிற்று
மனிதர்கள் எரிக்கப் படுவதை
பெண்கள் சிதைக்கப் படுவதை
குழந்தைகளும் சங்கீதக் கருவிகளும் பிய்த்தெறியப் படுவதை
பூக்களும் கவிதைகளும் மிதிக்கப் படுவதை
‘மூலதனத்தின்’ பக்கங்கள் ஈரமற்றுப் போனதை
கடவுளின் மகுடத்தைப் பேய்கள் பறித்துக் கொண்டதை
சகோதரர்களுக்குக் கோரைப் பற்கள் முளைத்ததை.

பாதுகாப்பற்றது வெளி
தற்கொலைக்கும் துப்பாக்கி முனைக்கும் நடுவில்
நமது வாழ்க்கை. 
இரண்டு குரோத பற்சக்கரங்களுக்கு இடையில்
நமது காலம்.
நாம் எதிர்பார்த்திருக்கிறோம்
அணுகுண்டு வெடிப்பின் கடைசி நொடிக்காய்.
எனினும்
வயலின் ஸ்வரங்களாய்ப் பொழியும் மழை
தாமிரச் சூரியன்
பறவைகள் பச்சிலைக் காற்று குதூகல முகங்கள்
அக்குளில் சிறகு பொருத்தும் இசை - இவற்றுக்காய்க்
காத்திருக்கிறது நம்பிக்கை
பனிப்பாறைகளைப் பிளந்து மூச்சுவிடும் செடிபோல.

கையில் அள்ளிய நீர்

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?

******

Nov 15, 2011

மூங்கில் குருத்து - திலீப்குமார்

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான்.
வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக் கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக் கறைபடியச் செய்து கெட்டுப்போய்dilipkumar5க் கொண்டிருந்த அநேகம் கடைப் பையன்களைப் போலத்தான் நானும். அண்ணன் சென்னைக்கு ஓடித்தொலைத்தாயிற்று. அக்காவை நீலகிரியில் ஒரு எஸ்டேட் மானேஜருக்குத் தாரை வார்த்தாகிவிட்டது. அக்காவின் அழகு அவளுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கூட்டிக் கொடுத்தது. தம்பிக்கு ஐம்பது ரூபாயில் ஒரு ரெடிமேட் ஃபாக்டரியில் வேலை. எனக்குத் திரு கிருஷ்ணாஜிராவ் கடையில்.
தறிநெய்கிற தேவாங்கச் செட்டிமார்கள் அதிகமாகப் புழங்குகிற தியாகராஜ புதுவீதியில் இட்லி விற்கும் ஒரு விதவைச் செட்டிச்சியின் வீடு. கட்டடவியலுக்குக் களங்கம் கற்பிக்கிற ஒரு வினோதமான கர்ப்பக்ரஹம் அது. இருளைக் கிழித்து உள்ளே நுழைந்தால், இருபத்தி நாலு வயதில் அப்பாவை இழந்த அம்மா வெள்ளையணிந்து கோட்டுருவமாய்ச் சமைந்து காணப்படுவாள். ஆஜானுபாகுவாயிருந்த அப்பா மூல வியாதி முற்றி ஆசனவாயிலிருந்து ரத்தம் கசியக்கசியக் கதறிய அந்தக் கடைசிக் கதறல் என் நாலு வயது மனத்தில் வடுவாய்ப் பதிந்துவிட்டது. அந்த நாட்களில் அம்மாவின் அழுகுரல் கூரையிலிருந்து அடிபட்டுச் சரியும் காகத்தின் மழுங்கின கரைதலைப் போல் இருக்கும். இன்றும் அக இரைச்சலற்ற அமைதியான இரவுகளில் அந்தக் குரல் எப்போதாவது உயிர்த்தெழும்.
திரு கிருஷ்ணராஜி ராவ் மராத்தியர். குள்ளம், குண்டு நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். நிறையக் குடிப்பார் என்றாலும் தொழிலில் படுகில்லாடி. இதன் விளைவாகவே வெள்ளைக்கார கலெக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகவும் நெருக்கமானவராக ஒரு காலத்தில் திகழ்ந்தார். மல்யுத்த வீரன் கிங்காங்குக்கு “சூட்” தைத்து அதன் கச்சிதத்தில் அந்த மாவீரன் மயங்கி, உற்சாகத்தில் திரு ராவை, குழந்தையைத் தூக்குவதுபோல் தலைக்கு மேல் உயர்த்திக் கொஞ்சி விட்டுப் போனதும், பெருந்தலைவர் காமராஜர்க்குக் கதர்ச்சட்டை தைத்துக் கொடுத்ததும் இவரது நீண்ட தொழில் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள்.
அந்த நாட்களில் இவர் சம்பாதித்த பணம் ஏராளம்! சினிமா எடுத்துத் தோற்றுப்போனது போக மிச்சத்தைப் போத்தனூரின் ஆங்கிலோ - இந்தியப் பரத்தைகளிடம் கரைத்துவிட்டார். இப்போது, காலேஜ் காண்ட்ராக்டிலும், கிழடாய்ப் போய்விட்ட இவரது இளம் வாடிக்கையாளர்களின் தயவிலும் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
சுபிட்சத்திலிருந்து தரித்திரத்திற்குச் சரிந்த திரு ராவின் வீடு, தையற்கடை, நவாப் ஹகீம் ரோடின் கோடியில் ஒரு சினிமாக் கொட்டகைக்கு எதிரில் இருந்தது. மேஜை, நாற்காலிகள், ‘கௌண்டர்கள்’, தையல் இயந்திரங்கள் அனைத்துமே நவீனமற்றுச் சிதைந்து பழமை பகரும். ஒரு கம்மிய இருள் கடைக்குள், எப்போதும்.
செவ்வகமாயிருந்த கடையின் பின்பகுதியை வீடாக உபயோகித்துக் கொண்டிருந்தார் திரு,ராவ். ஒரு குமாரனையும் மூன்று குமாரத்திகளையும் திரு ராவுக்காகப் பெற்றுத்தந்த திருமதி லக்‌ஷ்மிபாய் கொள்ளை அழகாக இல்லாவிட்டாலும் தளராத உடம்புக்காரி. நல்ல உடம்பு. நாற்பத்து மூன்று வருஷங்களை விழுங்கிவிட்டு முப்பதாய் காட்டுகிற வசீகரம். திரு ராவ் குடித்து விட்டு இவளை அறைந்தும் குத்தியும் அவள் இடது காது செவிடாகி இருந்தது. மூத்த பெண் சுமித்ரா பியுசி படித்துக்கொண்டு, ‘சிமெண்ட்டா’ல் மெழுகின, ‘பாவ’மில்லாத முகத்துடன், மதிய வேளைகளில் பாவாடை விலகி, கால்கள் தெரியக் கிடப்பாள். (வீட்டுக்குள்ளிருந்த தொலைபேசி, திரு.ராவ் இல்லாத சமயமொன்றில் கிணுகிணுத்ததனால் கிட்டிய தரிசனம்). இரண்டாவது பெண் கௌரிக்கு வயது பதின்மூன்று. நீண்ட பெரிய கண்கள். நீண்ட நாக்கு. அடுத்தது பையன். எட்டு வயதில் சொத்தைப் பற்களுடன் எல்லோரையும் திட்டிக் கொண்டுத் தாவும் வானரம். கடைசியாய் ’லட்டு’ என்ற சுலோச்சனா. மூணு வயது.ஒரு நாளைக்கு முப்பது தடவை மலம் கழிப்பவளாக இருந்தாள்.
கோபிநாத்ராவ், பத்மநாத் ராவ் , கோவிந்த ராவ், தேஷ் பாண்டே, ரகுநாத் ராவ், பாண்டுரங்க ராவ், மல்லிகார்ஜுன ராவ் என்று ஒரு ஏழை மராட்டியர் பட்டாளத்தையே வேலைக்கு அமர்த்தியிருந்தார் ராவ். சில்லரை பண்ணுகிற சுகுமாரன் (வயது 10) மலையாளி. கணக்குப் பார்க்கிற நான் குஜராத்தி. கணக்கு என்றால் ஏதோ பெரியபெரிய பேரேடுகளைப் புரட்டிப் புரட்டி எழுதுகிற வேலை இல்லை. திரு. ராவ் இல்லாத சமயங்களில் வசூலாகும் பணத்தைக் கணக்கு வைத்து, அவர் வந்து வெற்றுடம்போடு அமர்ந்து ‘கத்திரி’ மார்க்கைச் சப்தத்துடன் உறிஞ்சி ஊதிக்கொண்டிருக்கிற சுமுகமான மனநிலையில் விவேகத்துடன் கொடுத்துவிட வேண்டும். என் சக ராவ்கள் தினம் ஒன்று இரண்டு என்று வாங்கும் முன்பணத்தைப் பற்று எழுத வேண்டும். அளவு எடுக்கும் போது குறித்துக்கொள்ள வேண்டும். குறித்ததைத் துணியுடன் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி கட்டிங் மாஸ்டர் கோபிநாத் ராவிடம் கொடுக்க வேண்டும். (கோபிநாத் ராவ் 50 களின் இந்திப்பட வில்லன்களைப் போல மங்கிய முகத்தில் அம்மைத் தழும்புகளோடு கண்கள் ஜ்வலிக்க, பார்ப்பவர்களைக் கலவரப்படுத்துகிற மனிதன். திரு ராவுக்கும் இவனுக்கும் ஏற்படும் சச்சரவுகளின் போது 32ஐ 22 ஆக வெட்டித் தள்ளிவிடுவான். தான் எழுதித் தரும் துண்டுச் சீட்டிலும் மாற்றிவிட்டு என்னையும் மாட்டிவிடுவான். பிறகு என் கற்பும், என் அம்மாவின் கற்பும் திரு ராவின் நாக்கில் துவண்டு சிதைந்து பறிபோகும்),
கடையில், எத்தனை முறை தட்டினாலும் போகாத தூசியைத் தட்ட வேண்டும். கௌரிக்கு லீவ் லெட்டர் மற்றும் ‘எக்ஸ்கர்ஷன்” பற்றிய காம்போசிசன் எழுதித்தர வேண்டும். ‘லட்டு’வைக் கொஞ்ச வேண்டும். மிச்சமிருக்கிற நேரத்தில் ஒரு கணக்குப் புத்தகத்தை முன்னால் பிரித்துப் போட்டுவிட்டு மேஜைக்கு மேலே தொங்கும் மங்கிப் போன கண்ணாடியில் கணக்குப் பார்க்கிற பாவனையில், முகத்தை வெறித்துக் கொண்டிருக்கலாம்.
அன்று சனிக்கிழமை.
திரு ராவ் காலையிலேயே வெளியே கிளம்பிவிட்டிருந்தார். எதிர்க் கொட்டகையில் திலகங்களில் ஒருவர் நடித்த புதிய திரைப்படம். இரண்டரை மணிக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் மாலைக் காட்சிக்கு இப்போதே நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.
இரட்டை வேடக் கதாநாயகர்களில் முதலாமவன் தாடியும், கந்தல் துணியுமாக வெறிக்க, இரண்டாமவன் ஆக்ரோஷமாகச் சிங்கத்தோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அருகில் கதாநாயகி சம்பந்தமே இல்லாதவள்போல் பெரிய ஒற்றை மார்பைப் பக்கவாட்டில் காட்டியபடி இளித்துக்கொண்டிருந்தாள். அந்தப் புகழ்பெற்ற கதாநாயகியின் மூக்கு, அவள் நிஜ மூக்கை விட லேசாக மழுங்கியிருந்தது என்றாலும் போஸ்டர் வரைந்தவன் - தமிழ்க் கதாநாயகிகளுக்கு முலையையும், தொடையையும் தவிர வேறு எதுவும் எடுப்பாக இருக்கக் கூடாது என்று அறிந்த - புத்திசாலி, மூக்கில் கோட்டை விட்டதை முலையில் சரிக்கட்டி இருந்தான்.
கோபிநாத்ராவ் வாசலில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கடைக்குள் அமைதியாக இருந்தது.
பொதுவாக இந்த நேரத்தில் ‘ராவ்’கள் எல்லோரும் உற்சாகமாகப் பேசிக்கொள்வார்கள். தையலைப் பற்றி, தையல் இயந்திரங்களைப் பற்றி, அங்கே இல்லாத ‘காஜா’ எடுக்கும் இயந்திரங்களைப் பற்றி... இந்தப் பேச்சுகள் எங்கிருந்து துவங்கினாலும் அநேகமாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாலுணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே சென்று முற்றுப்பெறும். - எல்லா இந்திய சர்ச்சைகளையும் போல். அன்று அது பற்றிக்கூட பேச ஒன்றுமில்லாததுபோல மௌனமாக இருந்தார்கள் எல்லோரும்.
அன்று வசூல் பிரமாதம் இல்லை. பிற்பகல் மூன்று மணிவரை பதினைந்து ரூபாய்கூட வரவில்லை. இதற்குள் எல்லோரும் என்னிடம் ஓரிரு முறை வசூல் எவ்வளவு என்று தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தார்கள். மாலைக்குள் இருநூறு ரூபாயாவது ஆனால்தான் அனைவருக்கும் கூலி தர முடியும். ஆகும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை.
திரு ராவின் ஊழியர்களுக்கு இம்மாதிரியான இக்கட்டுகள் புதியவை அல்ல. மாதத்தின் கடைசி வாரத்தில், அநேகமாக எல்லா மாதங்களிலும், இப்படி நடந்துவிடும். சென்ற மாதம் திரு ராவ் பெங்களூர் சென்றிருந்தபோது வசூலே ஆகாத ஒரு சனிக்கிழமையன்று திருமதி லக்ஷ்மிபாய் எல்லோருக்கும் இரண்டுலிட்டர் அரிசி கொடுத்தனுப்பினாள். ஆனால் திரு ராவ் இம்மாதிரியான அதீதச் செயல்களில் இறங்கமாட்டார். இன்று பணம் வராவிட்டால் அரிசி கூட இல்லாமல் வெறும் கையோடு செல்லவேண்டியது நிச்சயம்.
எல்லோரும் கூலியைப் பற்றிய பீதியில் அரைமனத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
புதிதாய்க் கல்யாணமானவன் பத்மநாத் ராவ், தாய்வீட்டிலிருந்த தன் மனைவியை அழைத்து வர, கூலியைத் தவிர இருபது ரூபாயை முன்பணமாக எதிர்பார்த்தவன். உற்சாகம் குன்றி அடிக்கடி எழுந்துசென்று பீடிகுடித்துக்கொண்டிருந்தான்.
எனக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அவள் கூட எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். இன்றோடு அரிசி தீர்ந்தது என்று மதியமே அறிக்கைவிட்டிருந்தாள். மறுநாள் அப்பாவின் ’திவசம்’ வேறு.திவசத்தன்று பிராமணனுக்குப் போடுகிற சாப்பாடு அப்பாவைச் சென்றடைகிறதோ இல்லையோ, இப்படி மாதக் கடைசியில் செத்துப் போய் கழுத்தறுத்திற்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன். பின் அதற்காக வருத்தப்பட்டேன். தொடர்ந்து, நான் பெரியவனான பின் அப்பாவின் திவசத்திற்கு ஊரையே கூட்டி சாப்பாடு போடவேண்டும் என்று லஜ்ஜையன்று மனது உறுதி பூண்டது.
அண்ணாவும் கருணாநிதியும் கொடி கட்டி ஆண்டுகொண்டிருந்த காலம். தமிழக லாட்டரிக்கு மக்கள் நாயாக அலைந்துகொண்டிருந்தார்கள். அரிசி மட்டும் மலிவாய்க் கிடைத்தது. வாடையடிக்கிற பழுப்பு நிறத்தில், ரூபாய்க்கு இரண்டு படி!. அம்மா அதற்குச் செல்லமாக பெயர் கூடச் சூட்டியிருந்தாள், ‘ரப்பர் சம்பா’ என்று. இல்லாத வேலைக்காரியையும் சேர்த்து நாலு பேருக்கு 12 கிலோ, கோதுமை 4 கிலோ, எல்லாம் சேர்த்து பதின்மூன்று ரூபாய் சொச்சம். தம்பியின் முதலாளி முன்பணம் தராத ராட்சசன். என் வாரக்கூலியில் ரேஷன் வாங்க வேண்டும் என்பது தான் வழக்கமான திட்டம். நான் வாசலைநோக்கியபடியே அமர்ந்திருந்தேன் நிறைவேற.
பாண்டுரங்கராவ் சுகுமாரோடு பேச ஆரம்பித்தான்.
எதிர்த் திசையிலிருந்து தெருவைக் கடந்து திரு ராவ் வருவது தெரிந்தது. நன்றாக வெயிலில் அலைந்ததால் முகம் கிழடு தட்டிய ஆப்பிள் பழம் போல் சிவந்திருந்தது. அவர் ஒவ்வொரு அடியை வைத்த போதும் அவர் தொந்தி குலுங்கி குலுங்கி ஆடியது. திரு ராவின் தொந்தியானது மற்றெல்லா தொந்திகளைவிடவும் பிரத்தியேகமானது.
ரோமம் இல்லாத மார்புக்கு கீழே, மேல்வயிற்றில் ரகசியமாய்த் துவங்கி, அமைதியாய் முன் எழுந்து அவசரமில்லாமல் அரைவட்டம் போட்டு, பின் ‘வெடுக்’கென்று இறங்கிச் சரிந்து மறைந்தது அது. ராஜ வம்சத்து அழகிகளின் அழகான மார்பகங்கள், மதுக்கிண்ண வார்ப்புகளுக்கு மாதிரிகளாய்த் திகழ்ந்த மேற்கத்திய கதைகள் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால் வடிவ நேர்த்தி பற்றி அதிகம் கவலைப்படாத இந்தியக் குயவர்களுக்கோ, கால்பந்து தயாரிப்பாளர்களுக்கோ இது தெரிந்திருக்க நியாயமில்லை. இதன் விளைவாகவே ரொம்பவும் துரதிர்ஷ்டவசமாக திரு ராவின் தொந்தி பார்ப்பாரற்றுக் குலுங்கிக் கொண்டிருந்தது.
மற்ற ராவ்கள் கவனிக்கும் முன் திரு ராவ் கையிலிருந்த துணிப்பொட்டலத்தை மேஜைமேல் போட்டபடி உள்ளே நுழைந்தார். நான் ஏற்கனவே எழுந்துவிட்டிருந்தேன்.
திரு ராவ் வந்ததை அறியாத பாண்டுரங்க ராவ் தனக்குத் தெரிந்த ஒரு மலையாளக் கெட்ட வார்த்தைக்குச் சுகுமாரிடம் அர்த்தம் கேட்டு அவனைச் சீண்டிக்கொண்டிருந்தான். திரு ராவ் மௌனமாக ஒரு ஒற்றனைப் போல் அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றார்.
மற்ற ராவ்கள் எல்லோரும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்கள்.
நாணிச் சிணுங்கிச் சிரித்தபடித் தலைநிமிர்ந்த சுகுமாரன் திரு ராவைக் கண்டதும் திகைத்து மிரண்டு போனான். திரு ராவுக்குக் கோபம் பீறிட்டது. மேஜைமேல் வைத்த துணிப் பொட்டலத்தை அவன் முகத்தை நோக்கி வீசிக் கொண்டே “என்னடா லௌடே கா பால் சிரிக்கிறே?” என்று பாய்ந்தார். துணிப் பொட்டலம் சுகுமாரனின் பிடரியில் பட்டு சிதறியது. அவன் நடுங்கிக் குனிந்தபோது அவன் காதில் பாதியும் கன்னத்தில் பாதியும் சேர்த்து ஒரு அறை விழுந்தது. “மாதர் சோத்! வேலையெ பாப்பானா சிரிச்சிட்டிருக்கான்... லௌடே கா பால்” தொடர்ந்து திட்டியபடி திரு ராவ், பாண்டுரங்க ராவ் பக்கம் திரும்பினார். அவர் திரும்புவதற்காகவே காத்திருந்தவன் போல சட்டென்றுத் தலையைக் கவிழ்த்து வேலையில் ஆழ்கிற பாவனை செய்தான் இவன். இப்படிச் செய்ததும் திரு ராவுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.
“ஏய் காய் கொஸ்டியே, புத்தி நஹி பெஹ்ன் சோத்” (ஏய் என்ன பேச்சு இது! புத்தி இல்லையா பெஹ்ன் சோத்) என்று உரத்த குரலில் சத்தம் போட்டார் திரு ராவ். பாண்டுரங்கராவ் ஏதோ சமாதானம் சொல்ல வாயெடுத்தான். உடனே திரு ராவ் அவனை மறித்து, “அமி விட்சார்த்தோ (த்) கசாலா? கசாலா ரே மா....தர் சோத்?” (நான் கேட்கிறேன் எதற்கு? எதற்கடா மாதர்சோத்?) என்று முன்பை விட வேகமாகக் கத்தினார். பின் ஓரிரு வார்த்தைகளைத் தாழ்ந்த குரலில் முனகிவிட்டு மீண்டும் குரலை உயர்த்தி “புட்டா மாதர் சோத்!... புட்டா மாதர் சோத்!” (கிழட்டு மாதர் சோத்! கிழட்டு மாதர் சோத்) என்று தீர்மானமான குரலில் கூறிவிட்டு வேகமாகத் தன் நாற்காலியை அடைந்து அமர்ந்தார்.
பாண்டுரங்க ராவ் குறுகி, மடியிலிருந்த கோட்டின் கைக்குப் பட்டன் வைக்க ஆரம்பித்தான். பாண்டுரங்கராவுக்கு அறுபது வயதிருக்கும், வழுக்கைத் தலை. சென்ற மாதம் தான் பருவமடைந்த அவன் பேத்தி இறந்துபோயிருந்தாள்.
திரு ராவ் கோபம் தணியாமல் பெரிதாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.
கௌரி, அருகே பெட்டிக்கடை வைத்திருந்த சூப்பியிடமிருந்து அந்த வாரத்து ‘ராணி’யை இரவல் வாங்கிக்கொண்டு அப்போது தான் உள்ளே நுழைந்தாள். தன் மகளைப் பார்த்ததும் திரு ராவின் கோபம் சட்டென்று அவள் பக்கம் திரும்பியது. கடுமையான மராத்தியில் அவளை அழைத்தார். திரு ராவ் வந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்த கௌரி ஒரு கணம் தயங்கி நின்றாள். பின், மெல்ல, பயந்துகொண்டே அவரருகில் சென்றாள். காட்டமான ஐந்து மராத்திக் கேள்விகளுக்கு அச்சம் கலந்த நான்கு பதில்களே வந்தன. பின் திடீரென்று ஐந்தாம் கேள்விக்குப் பதிலாக கௌரியின் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. அவள் அழுதுகொண்டே விலகினாள். திரு ராவ் அவளைப் பிடிக்க முயன்றார். கௌரியின் பின்னல் திரு ராவின் கையில் சிக்கி நழுவியது. கௌரி உள்ளே ஓடினாள். திரு ராவும் அவளைத் துரத்திக்கொண்டு உள்ளே சென்றார். தொடர்ந்து கௌரியின் கதறலுடன் அவள் பிடரியிலும் முதுகிலும் விழுந்த நாலைந்து அடிகளின் சத்தம் கேட்டது.
ஒன்றுமே நடக்காதது போல் உள்ளே வந்தான் கோபிநாத்ராவ். தன் மேஜையின் மையத்திலிருந்த கத்தரிக் கோலை ஓசைபட நகர்த்தி வைத்துவிட்டு, அடுத்து வெட்ட வேண்டிய துணியை விரித்துக்கொண்டான்.
சிறிது நேரம் கழித்து ஃபோன் கிணுகிணுத்தது.
ஃபோன் செய்தவரோடு நெடுநேரம் ஒருமையில் சிரித்துப் பேசிவிட்டு வெளியே வந்தபோது திரு ராவின் கோபம் கணிசமாய் மறைந்துவிட்டிருந்தது.
இயங்கிக் கொண்டிருந்த தையல் இயந்திரங்களைத் தாண்டி அங்கொரு நிசப்தம் நிலவியது.
நான் தயங்கித் தயங்கி திரு ராவிடம் டீ குடிக்க வெளியே செல்ல அனுமதி கேட்பதற்கு மணி ஏழாகிவிட்டது. இரவுக் காட்சிக்காக நின்ற கும்பலை விலக்கித் தெருவுக்குள் இறங்கியதும் திடீரென்று ஒரு விடுதலையுணர்வு ஏற்பட்டது.
சிறிது தூரம் சென்றதும் இஸ்திரி போடுகிற நடராஜன் தலைப்பாகையோடு எதிர்ப்பட்டான். நடராஜன் படுசோம்பேறி. மனைவி, பகலெல்லாம் தோள்கள் வலிக்கத் துவைத்து சம்பாதிக்கிற பணத்தை மாலையில் இவன் குடித்துத் தீர்த்துவிடுவான். என்னைப்பார்த்ததும் சிரித்துக்கொண்டே அருகே வந்து, “ராவ் இருக்கானா?”என்று கேட்டான். திரு ராவ் எதிரில் இல்லாத சமயங்களில் அவரை ஒருமையில் அழைப்பது தான் வழக்கம். பதிலாக, நான் தலையை ஆட்டியதும் உற்சாகத்துடன் “வரட்டுமா” என்று வேகத்தைக் கூட்டி நடந்து சென்றான்.
நம்பியார் கடை ரேடியோ விவசாயிகளுக்கான நிகழ்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தது. சுவையில்லாத ஆனால் சூடான டீ தொண்டைக்குள் இறங்கியதும் சிறிது தெம்பாக இருந்தது. கடைக்குள் நிறைய பேர்களிருந்தனர். சிக்கனம் பார்க்கிற பதினெட்டு வயதுட்குட்பட்ட கடைப்பையன்களும், ஐம்பதைத் தாண்டிய கஞ்சத்தனம் பிடித்த ஜவுளிக் கடை குமாஸ்தாக்களுமே அதிகம் இருந்தனர். காரணம், மற்ற இடங்களில் பதினைந்து காசுக்கு விற்கும் டீ நம்பியார் கடையில் பன்னிரெண்டு காசு!
டீக் கடையிலிருந்து வெளியே வந்து ‘டவுன் ஹால்’ பக்கமாக நடக்க ஆரம்பித்தேன். டவுன் ஹால் அருகே ஒரு பெரிய கூட்டம் கூடியிருப்பது தெரிந்தது. கூட்டத்தின் நடுவிலிருந்து அடர்த்தியான கரிய புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது. நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். கூட்டத்தை நெருங்க நெருங்க ரப்பர் எரியும் துவர்ப்பான நெடி அடிப்பதை உணர்ந்தேன். வழக்கம்போல், நரிக்குறவர்கள் டயர் துண்டுகளை எரித்துச் சோறு சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
அரை வட்டமாகச் சுற்றி நின்ற கூட்டத்தின் நடுவே இரண்டு போலிஸ்காரர்கள் குறவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே பிரம்பால் அடித்துக்கொண்டிருந்தார்கள். குறவர்கள் அடிக்குப் பயந்து பதறிப் பதறி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
சாக்கடை விளிம்பிலிருந்து சற்று விலகி, காய்ந்த மலங்களினூடே மூன்று கற்களாலான அடுப்புகளின் மேல் சிறிய சிறிய சட்டிகளில் சோறு வெந்துகொண்டிருந்தது. இதுவரை எப்படியோ அவற்றைக் கவனிக்கத் தவறிய போலிஸ்காரன் ஒருவன் அதைக் கவனித்துவிட்டான். மறுகணம் சட்டிகளை எட்டி உதைத்தான் அவன். ஒரு குரூரமான உற்சாகத்துடன் அவன் அதைச் செய்தான். சட்டிகள் உருண்டு சாக்கடைகளில் விழுந்தன. உடைந்த ஒரு சட்டியின் பகுதி மட்டும், சோறு வழிய சாக்கடை விளிம்பிலேயே நின்றுவிட்டது. அதைக் கண்ட மற்றவன் அதையும் எட்டி உதைத்துச் சாக்கடையில் தள்ளினான். கூட்டம் நிதானமாக வேடிக்கை பார்த்தது.
குறவர்களைக் குறித்த சில அடிகள் தப்பி அவர்களின் சிறிய குழந்தைகளின் மீதும் விழுந்துகொண்டிருந்தன. கதறிக்கொண்டிருந்த குழந்தைகளுடன் குறத்திப் பெண்களும் ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தார்கள்.
ஓரிரு நிமிடங்களுக்குப் பின் சட்டிகளை எட்டி உதைத்தவன் எதையோ சாதித்து விட்ட களைப்பில் திரும்பினான். கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்கு மீண்டும் கோபம் வர ஆரம்பித்தது. அவன் திட்ட ஆரம்பிப்பதற்கு முன் நான் விலகி நடந்தேன்.
கடைக்குத் திரும்பியபோது திரு ராவ் உற்சாகமாக ஒரு வாடிக்கையாளரிடம் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார். தவிர, இன்னும் பல வாடிக்கையாளர்கள் வந்து போனதற்கான தடயங்கள் காணப்பட்டன. பத்மநாத் ராவ் ஒரு சட்டை காலரின் உட்பக்க தையலை முடித்து விட்டு அதை வெளிப்பக்கம் உதறலுடன் திருப்பி நிமிர்ந்தான். என்னைப்பார்த்ததும் பற்களைக் காட்டிச் சிரித்தான். கூலிக்கான பணம் வசூலியாகியிருக்க வேண்டும்.
எனக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

மணி ஒன்பதரை.
தரையில் அமர்ந்து வேலை செய்வதற்காக காலையில் விரித்த ‘காடா’ துணியை பாண்டுரங்க ராவ் உதறி மடிக்க ஆரம்பித்தான். நான் என் மேஜைக்குச் சென்றமர்ந்து ஒவ்வொருவார் கணக்கையும் சரிபார்த்து வைத்துக் கொண்டேன். பின் சொல்ல ஆரம்பித்தேன். வழக்கம் போல கூலி பட்டுவாடா நடைபெற்றது.
திரு ராவ் ஒவ்வொரு முறையும் பாக்கெட்டிலிருந்துப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார். தன் பாக்கெட்டில் எத்தனை ரூபாய் இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் மிக நாட்டம். அனாவசியமாக இக்கூலிப்பட்டாளத்தின் முன்னே பணத்தைப் பிரஸ்தாபித்து அதன் விளைவாக இவர்கள் முன்பணம் கேட்கத்தூண்டப்பட்டு, கேட்டுப் பின் ஏமாந்து, (தன்னை) சபித்துச் சோர்ந்து திரும்புகிற அவஸ்தையில் ஆழ்வதைத் திரு ராவ் என்றுமே விரும்புவதில்லை.
ஒரு சில நிமிடங்களில் எல்லோரும் கூலியைப் பெற்று கிளம்பினார்கள். அதிர்ஷ்டவசமாக பத்மநாத் ராவ் மட்டும் இருபது ரூபாய் முன்பணத்தை எப்படியோ பெற்றுக் கொண்டான்.
நானும் திரு ராவும் தனிமையில் விடப்பட்டோம்.
ஒரு சில கணங்களின் யோசனைக்குப் பின் திரு ராவ் என்னைப் பார்த்து “நீ திங்கட்கிழமை வாங்கிக் கொள்கிறாயா?” என்று இந்தியில் கேட்டார். அம்மாவின் சிவந்த மூக்கு ஞாபகம் வர எனக்கு வயிற்றைக் கலக்கியது. நான் தாழ்ந்த குரலில் ”நாளை ரேஷன் வாங்க வேண்டும்” என்றேன். மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார் திரு ராவ். சிறிது நேரத்துக்குப் பின் தன் பாக்கெட்டிலிருந்த மொத்தப் பணத்தை வெளியே எடுத்தபடியே கறாரும் அலட்சியமும் கலந்த குரலில் “வீட்டில் ஏதாவது பணம் தேவையா என்று கேட்கிறேன். தேவையில்லை என்றால் உனக்குத் தருகிறேன். அல்லது நீ திங்கட்கிழமைதான் வாங்கிக் கொள்ள வேண்டும்” என்று கூறி லக்ஷ்மிபாய்க்குக் குரல் கொடுத்தார்.
லக்ஷ்மிபாய்க்கு நூறு ரூபாய் தேவைப்பட்டது. திரு ராவ் பணத்தை எண்ணிப்பார்த்தபோது அதில் எழுபத்தைந்துரூபாய்தான் இருந்தது. அறுபது ரூபாயை லக்ஷ்மிபாயிடம் கொடுத்து பின் மராத்தியில் ஏதோ கூறினார். “பதினைந்து ரூபாய் தான் இருக்கிறது. நாளை எனக்கு செலவுக்கு வேண்டும். நீ திங்கட்கிழமை வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறிவிட்டு நாற்காலியில் சென்று அமர்ந்தார். நான் நிராசையுடன், கடைசியாக மூட வேண்டிய கதவை மூட முனைந்தேன்.
என்னையே வெறித்துக்கொண்டிருந்த திரு ராவுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. “நாளைக் காலை ஏன் நீ காலேஜுக்குச் சென்று கோட்டுகளை டெலிவரி செய்து விட்டு வரக்கூடாது? பணம் வந்தால் நீயும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கும் உபயோகமாக இருக்கும்”. இதைக் கூறியவுடன் என் மனத்திற்குள் நம்பிக்கை, பொறியாய்த் துவங்கித் தீயாய் வியாபித்தது. நான் ஆர்வத்துடன் பலமாகத் தலை ஆட்டி அதை ஏற்றுக் கொண்டேன். “நேரமாகிவிட்டது. கோட்டுகளை நாளைக் காலை வந்து ‘பாக்’ செய்துகொள்ளலாம்” என்று திரு ராவ் கூறிக்கொண்டிருக்கும்போது “என்னா.....ராவ்” என்று உற்சாகத்துடன் கூவிக்கொண்டே உள்ளே நுழைந்தார் எதிர்க் கொட்டகை மானேஜர் ராமநாதன். ராமநாதன் வந்தால் அன்று விசேஷம் தான்.
விரல்களிலிருந்த மோதிரம் மின்ன வெள்ளை வேட்டியும் சட்டையும் உடுத்தியிருந்த கொட்டகை மானேஜர் ராமநாதன் சொகுசு மாப்பிள்ளை! கொட்டகை, நகைக்கடை வைத்திருக்கும் அவர் மாமனாருக்குச் சொந்தமானது. தன் சொத்தை முழுவதும் கிண்டியில் ஓடிய நத்தைகளாய்ப்பார்த்து பந்தயம் கட்டித் தீர்த்துவிட்டு, இருபது வருஷமாய் இந்தப் புளியங்கொம்பைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறார் ராமநாதன். அவர் மனைவிக்கு உடம்பெல்லாம் வெண்குஷ்டம்.
திரு ராவும் ராமநாதனும் நெடுநாள் ஸ்நேகம். ஒரே தம்ளரில் பட்டை அடிப்பார்கள். ஒரே பொம்பளையுடன் படுத்துக் கொள்வார்கள். கொட்டகையில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் சந்தர்ப்பங்களில், திரு ராவ் கடையில் தொழில் மந்தமாக இருந்தால் முதல் வாரம் முழுதும் காட்சிக்கு 25 டிக்கெட்டுகளைத் தந்துவிடுவார் ராமநாதன். நானும் நடராஜனும்தான் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று, ஒன்று தொண்ணூறை ஒன்பது ரூபாய்க்கு விற்றுவிட்டு வருவோம். நடராஜன் எம்டன்! அடிக்கிற சுங்கிடியைத் தவிர திரு ராவிடம் டிக்கெட் ஒன்றுக்கு எட்டணா வாங்கிவிடுவான்.
விடைபெற்றுக்கொள்ள திரு ராவின் முன் சென்று நின்ற போது ராமநாதன் என்னைப் பார்த்து லேசாக முறுவலித்தார்.
“போகிற வழியில் அப்படியே கொஞ்சம் நடராஜனை வரச் சொல்லிவிட்டுப் போ” என்று கூறிய திரு ராவ் “மாணவர்கள் சினிமா பார்க்க, அங்கே இங்கே கிளம்பிவிடுவார்கள். காலை ஆறு மணிக்கே புறப்பட்டால்தான் அவர்களைப் பிடிக்க முடியும்” என்று எச்சரித்தார். நான் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன்.
நடராஜனின் வீடு டோபி-கானாவில் இருந்தது. சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது சிம்னி விளக்கின் ஒளியில் பெரிய நிழலோடு கிடந்தான் அவன். என்னைப் பார்த்ததும் எழுந்து வரவேற்றான். நல்ல வேளை! சுவாதீனமாகவே இருந்தான். நான் விஷயத்தைக் கூறிவிட்டுத் திரும்பி நடந்தேன்.
தியாகராஜ புதுவீதியை அடைந்ததும் “பாவா கெண்ட என்த்த” என்ற தெலுங்குக் குரல் வரவேற்றது. யாருக்காகவோ தெருவில் காத்திருந்த பெண்தான் யாரிடமோ கேட்டாள். மணி பத்தரை ஆகிவிட்டிருந்தது.
கதவு வெறுமனே சாத்திக் கிடந்தது. அம்மா ‘அகண்ட் ஆனந்த்’ (மத சம்பந்தமான குஜராத்திப் பத்திரிக்கை) படித்தபடியே கண்ணாடியுடன் உறங்கிப் போயிருந்தாள். நான் குனிந்து கண்ணாடியைக் கழற்றி ஓரமாக வைத்தேன். அம்மா குழந்தையைப் போல் படுத்துக் கிடந்தாள். கண்கள் குழிவிழுந்து, கன்னங்கள் ஒட்டிப் போய், சதை தளர்ந்து சிதைவுற்றுப் போயிருந்தது முகம். நெற்றியில் மெலிதான ரேகைகளாய்ச் சுருக்கங்கள் விழுந்துகொண்டிருந்தன. இளம் வயதில் அடர்த்தியாய் சுருள்சுருளாய்த் ததும்பி வழிந்த கேசம், இப்போது களைத்துப் படிந்துவிட்டிருந்தது. காதோரங்களில் நரை கண்டுவிட்டது. வயதாகிவிட்டது. ஆமாம். அம்மாவுக்கு வயதாகிவிட்டது. எத்தனை நாட்கள்; எத்தனை வருடங்கள். வருடங்களை அவள் தின்றுவிட்டிருந்தாள்; வருடங்கள் அவளைத் தின்றுவிட்டன.
முகம் கழுவிவிட்டு வந்தபோது அம்மா எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
வாரக்கூலி கிடைக்கவில்லை என்று அறிந்தபோது ஆவேசமாய், திரு ராவின் குடும்பத்திற்கே சாபம் கொடுத்தாள் அம்மா. பின் குழம்பிப் போய் மௌனமானாள்.
அம்மாவின் சீற்றம் இப்படி ஒரே வரியில் வெளிப்பட்டு அடங்கிவிட்டது எனக்கு நிம்மதியாயிருந்தது. ஓரிரு கணங்கள் நிசப்தத்தில் கழிந்தன. ஒருவேளை விஷயம் இன்னும் உறைக்கத் துவங்கவில்லையோ என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே “ராஸ்கல், நாளை உன் அப்பாவுக்கு திவசத்தை வைத்துக் கொண்டு வெறும் கையோடு வந்திருக்கிறாயே! வெட்கமாக இல்லையா நாயே” என்று நான் கூறிய செய்தியை நம்ப மாட்டாவளாய் பரபரப்போடு எழுந்து கையை ஓங்கிக் கொண்டே என்னை நோக்கி திடீரென்று ஓடி வந்தாள் அம்மா. பிறகு, ஓங்கிய கையை மடக்க மறந்து தமிழும் குஜராத்தியும் கலந்த மணிப்பிரவாளத்தில் திட்ட ஆரம்பித்தாள். ஒவ்வொரு வாக்கியத்திற்குமிடையே ஓரிரு கணங்கள் இடைவெளி விட்டு விட்டுக் குரலை உயர்த்தி உயர்த்தித் திட்டினாள்.
வசவுகளை மட்டுமே மனத்தில் கொண்டு ஆத்திரத்தில் ஆரம்பித்துவிட்ட அநேக வாக்கியங்களை முடிக்க முடியாமல் திணறிய போதெல்லாம் என்னையும் சபித்தாள். நான் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.
அம்மாவின் வசைப்பாட்டில் உள்ளடக்கமாய்த் திரு ராவ் இருந்தாலும் உருவாக நாளை வர இருந்த பிராமணரே திகழ்ந்தார். பிராமணர் தமிழர்தான். குஜராத்தி பிராமணர்களை அழைப்பது கைக்கு மீறிய காரியம். சோறு போட்டு ரூ 5.25 தட்சிணை தவிர ஒரு மேல் துண்டாவது தர வேண்டும். சலவன் வீதியில் வியர்வை வழியும் கறுத்த வெற்றுடம்புடன் திண்ணையில் அமர்ந்து மலிவான பேச்சுப்பேசி மகிழும் தரித்திரம் பிடித்த தமிழ் பிராமணனே போதும் என்று முடிவுசெய்து பல வருடங்கள் ஆகிவிட்டது இந்த வீட்டில். வாக்குக் கொடுக்கப்பட்ட அந்த பிராமணர் நாளை வந்து எப்படி இந்த நிலைமையை எதிர்கொள்வார் என்று கற்பனை செய்த போது வேடிக்கையாகவும் வருத்தமாகவும் இருந்தது.
ஒரு சில நிமிடங்களுக்குப் பின் கடை சைக்கிளை ஓசைப்படாமல் சாத்தி வைத்துவிட்டுத் திடீரென்று உள்ளே நுழைந்தான் தம்பி. அவன் வந்ததும் ஒரு கணம் மௌனமாய் இருந்துவிட்டு, அவனுக்கும் விஷயம் தெரியட்டும் என்று, கோபத்துடன் “நாளைக்கு நீங்களும் மண்ணைத் தின்னுங்கள்! வருகிறவனுக்கும் மண்ணைப் போடுங்கள்” என்றாள்.
தம்பியின் முகத்தில் திடீரென்று படர்ந்த திகைப்பையும் உற்சாகமின்மையையும் பார்த்த அம்மா தனது ஆற்றாமை குறைந்தவளாய் சீரான மூச்சு விட்டுக் கொண்டு, அர்த்த புஷ்டியான மௌனம் அனுஷ்டித்துக் காத்திருந்தாள்.
விஷயத்தை ஓரளவு புரிந்துகொண்ட தம்பி அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள என்னைக் கலவரத்துடன் பார்த்தான். பின் தயங்கி “உன் முதலாளி பணம் தரவில்லையா?” என்று கேட்டான். நான் தலையை ஆட்டிப் பதிலைச் சொன்னதும் அவன் முகம் வாட ஆரம்பித்தது. அம்மா தன் கோபத்தைப் பகிர்ந்துகொள்ளவும் நியாயப்படுத்தவும் இன்னுமொரு ஆள் கிடைத்தான் என்று சில கணங்களாகத் தேக்கி வைத்த குரோதத்துடன் மீண்டும் வெளிப்பட்டாள். “அவன் எப்படி வாங்கிக்கொண்டு வருவான்? அந்த பாழாய்ப்போன ராவுக்குப் பாடை கட்டிய பிறகுதான் வாங்கிக்கொண்டு வருவான். சூதாடி நாய்! குடிகார நாய்!” அம்மா பேசிக்கொண்டே இருந்தாள்.
அவனையே உற்றுக்கவனித்துக் கொண்டிருந்த தம்பி திடீரென்று, “லெக்சர் போதும், நிறுத்து இனி” என்று உறக்கக் கத்தி அவளை அடக்க முயன்றான். அம்மா அடங்கவில்லை. மாறாக, “நான் பேசுவதை லெக்சர் என்றா சொல்கிறாய் நாயே” என்று அவன் பக்கம் பாய்ந்தாள். தம்பி சும்மா இருக்கப் பழகி இருந்தான்.
ஒருவாறாக அம்மாவின் ஓலம் அடங்கி கீழ்ஸ்தாயியில் அவள் பொரும ஆரம்பித்த பிறகுதான் வெகுநேரமாய் ஒரே இடத்தில் நின்றுவிட்டிருந்ததை நான் உணர்ந்தேன்.
லுங்கியை உடுத்திக்கொண்டு சமையற்கட்டின் விளக்கைப் போட்டான் தம்பி.
அப்போது ஏறக்குறைய தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த அம்மா பேச்சோடு பேச்சாகக் குரலை உயர்த்தி, “இந்த லட்சணத்தில் உன் அக்கா மூங்கில் குருத்தையும் வாங்கிக்கொண்டு வந்து போட்டு விட்டாள், நாளை குழம்பு வைக்க!” என்ற செய்தியையும் சொல்லி வைத்தாள்.
சட்டென்று எங்கள் இருவரின் பார்வையும் சுவரில் மாட்டியிருந்த பைக்குள் ஒளிந்துகொண்டிருந்த மூங்கில் குருத்துகளின் மேல் விழுந்தது. நான் உடனே போய் அதை எடுத்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தன. பசுமையாய்!.
மூங்கில் குருத்துகள் அப்பாவின் நண்பர் நாயகத்தின் எஸ்டேட்டில் நிறைய விளைந்தன. கத்தரிக்காயின் மழமழப்போடு, வாழைக்காயின் மதர்ப்போடு, தாவரங்களின் முரட்டு மனம் கமழ, ஊறிய குழம்பு பீறிட்டு, அவை மொளுக் மொளுக் என்று தொண்டைக்குள் இறங்கும் போகமே அலாதி தான். பருப்புச் செலவு இல்லாமல் குழம்பு வைத்துவிடலாம் என்பதோடு சாப்பிடும்போது ஏதோ ஒரு வித்தியாசமான உணவைச் சாப்பிடுகிறோம் என்கிற பெருமிதம் உபரி. மூங்கி குருத்துக் குழம்பு எல்லோருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும். எதேச்சையாக அப்பா இறந்த தினத்தன்றும் அம்மா மூங்கில் குருத்தையே சமைத்திருந்தாள். அப்பாவின் திவசத்தன்று தவிர மற்ற நாட்களில் அம்மா அதைச் சாப்பிட மாட்டாள்.
அம்மா சுவரையே வெறித்துக் கொண்டிருந்தால். அவளது மூக்கிலும் காதுகளிலும் லேசாகச் செம்மை படர்ந்திருந்தது. அவள் மூச்சிலும் ஒரு தீவிரம் தலைப்பட்டது. இன்னும் ஓரிரு கணங்களில் அவள் அழக்கூடும். அம்மா செருமி, திடீரென்று அதிகம் சப்திக்காத, வதைக்கும் விசும்பல்களுடன் அழுதாள்.
மூங்கில் குருத்தை இந்த வருஷமும் அம்மா சாப்பிட மாட்டாள் என்று நினைத்தபோது ரொம்பவும் அபத்தமாகப் பட்டது.
சிறிதுநேரம் அழுதபின்பு சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தீர்மானமாக எழுந்தாள். முகத்தில் படிந்த கலவரத்தை விழுங்கித் தின்றுவிட்டு, கண்களில் ஒரு விவேகமிக்க சோகத்தைத் தேக்கிக்கொண்டிருந்தாள் அவள்.
நான் பையை மாட்டிவிட்டுச் சமையல் கட்டிற்குள் நுழைந்தேன். அம்மா அந்த வாரத்தின் கடைசிச் சோற்றைப் பரிமாறினாள்.
இரவு வெகுநேரம் கழித்துத் தம்பி இருட்டிலிருந்து ஏதோ பேசினான். அம்மா தூக்கமும் களைப்பும் பாரித்த குரலில், “வீட்டுக்காரியிடம் இரண்டு ரூபாய் கைமாத்து வாங்கித் தருகிறேன். காலையில் பிராமணன் வந்ததும் ‘கிருஷ்ணா மந்தி’ரில் அளவுச் சாப்பாடும் ஒரு ஸ்வீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்துவிடு, அடுத்த வருஷம் வீட்டிலேயே சாப்பிட வைக்கலாம்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
தெருவில் இருளையும் அமைதியையும் நேர்க் கோட்டில் கிழிக்கிற மாதிரி நீளமாய் ‘விசில்’ ஊதிச் சென்றான் பாராக்காரன்.
மறுநாள் காலை வீட்டைவிட்டுக் கிளம்பிய போதே ஆறேகால் ஆகிவிட்டது. வீட்டுக்காரச் செட்டிச்சி மஹா கறார்க்காரி! வாங்கப் போகும் இரண்டு ரூபாயை மதியம் வந்ததும் கொடுத்துவிட வேண்டும் என்ற ஷரத்து விதித்து அனுப்பினாள் அம்மா.
நவாப் ஹகீம் ரோடு வழக்கத்தை விட ரொம்பவும் அமைதியாய் இருந்தது. ‘முபாரக் டீ ஸ்டாலி’ன் முன்பெஞ்சில் அமர்ந்து ‘டீ’யைச் சப்தத்துடன் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த தாடிக்கார சாயபுகள், டீக்கடை ரேடியோவின் சன்னமான நாதஸ்வர முனகல், பின்னால் குறுகி நீள்கிற தெரு, மூடிய கடைகள், அப்பால் கிழக்கில் உதித்த சூரியனின் சாயலில் நீலம் மின்ன ஆரம்பித்திருந்த வானம். வெண்மையான மேகங்கள். ஒலியெழுப்பி மறையும் காகங்கள், குருவிகள். எல்லாம் ரம்மியமாகத்தான் இருந்தன. இரைச்சல் மிக்க கசப்பான யதார்த்தங்களிலிருந்து இன்று தெருவுக்கே விடுமுறை.
டீக்கடையைப் பார்த்ததும் டீ குடிக்கவேண்டும் போல தோன்றியது. பாக்கெட்டிலிருந்த பதினைந்து பைசாவுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டு சிகரெட்டா அல்லது சிங்கிள் டீயா என்ற சின்ன மனப் போராட்டத்தில் ஈடுபட்டு, கடைசியில், ஜெயித்த சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு நகர்ந்தேன்.
‘ஐந்துமுக்கு’ சந்திப்பை அடைந்தபோது ஓரிரு கசாப்புக் கடைகள் திறந்திருந்தன. உயிரும் தோலும் உரிக்கப்பட்ட ஆடுகள் மாமிசப் பிண்டங்களாகக் கால்களுடன் வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. உள்ளே சிறிய சிவப்பு விளக்கு பதிக்கப் பெற்ற கடவுள் படத்தின் கீழ் ஊதுபத்திகள் எரிந்துகொண்டிருந்தன. குருதியின் பச்சை நெடி அந்த இடமெங்கும் படர்ந்திருந்தது.
கொட்டகை வாசலில் தரை, பெஞ்சு டிக்கட்களுக்காக இப்போதே மனிதர்கள் குழுமிவிட்டார்கள். அநேகமாக எல்லோரும், கண் விழித்துக் களைத்துப் போய் அரைத்தூக்கத்தில் இருந்தார்கள். இரண்டு வரிசைகளாகத் தவளைகள் போல் நெருக்கமாக அணிவகுத்து அமர்ந்திருந்தார்கள்.
தெருஇவிலிருந்து பார்த்தபோது கடையின் ஒரு கதவு திறந்திருப்பது தெரிந்தது. லக்‌ஷ்மிபாய் விழித்திருக்க வேண்டும். நான் அவசர அவசரமாக மாடிப்படிகளில் ஏறினேன். இரண்டாவது படியில் வலது காலை வைத்ததும் பாதத்தில் ஏதோ குறுகுறுத்துக் குழைவது போல் தோன்றியது. மலம்! நான் உணர்ந்து குனிவதற்குள் விரலிடுக்களிலிருந்து பிதுங்கி காலெங்கும் அசிங்கமாகிவிட்டது. ஒரு கணம் தயங்கி, பின் மேலே ஏறினேன். மற்ற படிகளும் அசிங்கமாவதைத் தவிர்க்க முன்பாதத்தைத் தரையில் படாமல் உயர்த்திக் குதியை மட்டும் பதித்துப் பதித்து நடந்து கதவை அடைந்தேன். உள்ளே “லட்டு” வெற்றுடம்போடு திரிந்து கொண்டிருந்தாள். மலம் கழித்ததற்கான அடையாளங்கள் அவள் புட்டத்தில் இருக்கின்றனவா என்று தேடினேன். நிறைய இருந்தன.
லக்‌ஷ்மிபாய் உள்ளே உட்கார்ந்து அடுப்பு ஊதிக்கொண்டிருந்தாள். மலம் அப்பிய என் காலைப் பார்த்துக்கொண்டே அவளை அழைத்தேன். அவள் காதில் அது விழவில்லை. நான் மீண்டும் அழைத்தேன். அதுவும் அவள் காதில் விழவில்லை. நான்காவது முறை அவளைக் கூவி அழைத்தபோது தான் அவள் ஒருபக்கச் செவிடு என்பது எனக்கே ஞாபகம் வந்தது. உடனே எனக்கு திரு ராவின் கழுத்தை நெரித்துவிட வேண்டும்போல் தோன்றியது.
எதற்காகவோ கதவுப் பக்கம் திரும்பிய லக்‌ஷ்மிபாய் என்னைப் பார்த்ததும் தலையை ஆட்டி பற்கள் தெரிய சிரித்தாள். பின் மீண்டும் அடுப்பு ஊத திரும்பிக்கொண்டாள். ‘லட்டு’ என்னையும் தன் தாயாரையும் மாறிமாறிப் பார்த்து வியந்து சிரித்துக்கொண்டு நின்றாள். நான் காலைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து ஒருவாறாக விறகு எடுக்க வெளியே வந்தபோது லக்‌ஷ்மிபாய் கால் கழுவ தண்ணீர் கொடுத்தாள். ‘லட்டு’வை ஒரு கிள்ளும் கிள்ளி வைத்தாள் கோபத்துடன்.
திரு ராவ் ‘கட்டிங் டேபி’ளின் மேல் உறங்கிப் போய்விட்டிருந்தார். அருகே பட்டை அடித்ததின் ருசுக்களாக சோடா பாட்டில்கள் இருந்தன.
நான் வேகமாகக் கோட்டுகளை மடித்துக் காகித உறைகளில் போட்டுக்கொண்டேன். மொத்தம் ஒன்பது தேறின. எல்லாம் கம்பெனிக் கோட்டுகள். அதிகம் இல்லாவிட்டாலும் நல்ல கணம். லக்‌ஷ்மிபாயிடம் ஒரு ரூபாயை பஸ்ஸூக்காக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன். நான் வாசற்படிகளைக் கடந்ததும் அவள் கழுவ ஆரம்பித்தாள்.
வழக்கமாக இந்தக் கோட்டுகளுக்கான முழுப் பணத்தைக் கல்லூரி நிர்வாகமே வசூலித்துவிடும். ஆனால் இந்தத் தொகைக்கு ஏற்றார்போல் தையல் தரமும் சுமாராகவே இருக்கும். கோட்டுகளின் உள்ளே இடப்படும் உள்துணி மலிவானதாய் இருக்கும். இதை விரும்பாத மாணவர்கள் தனியே பத்து ரூபாய் கொடுத்து உயர்ந்த ரக உள்-துணையைப் போட்டுக்கொள்ளலாம். இந்தக் கோட்டுகள் அனைத்தும் ‘சாட்டினை’ உள்-துணியாகக் கொண்டவை. மொத்தம் தொண்ணூறு ரூபாய் வசூலாகும். நான் எனது பதினைந்து ரூபாயை அசைபோட்டுக்கொண்டு நடந்தேன்.
கல்லூரி, நகரத்திலிருந்து சுமார் நான்கு மைல்கள் தள்ளியிருந்தது. ஊரின் மையத்தைக் கடந்ததும் சாலையோரங்களில் பசுமை காண ஆரம்பித்தது. பசுக்கள் பின் தொடர வெற்றுடம்போடு நடந்த பால்காரர்கள், சிறுவர்கள், வயலில் வேலை செய்த பெண்கள்... எல்லாம் ரொம்பவும் இயல்பாக இயங்குவது போல் இருந்தது. பஸ்ஸில் டிரைவரும் கண்டக்டரும் கூட பரபரப்பற்று நிதானமாகவே காணப்பட்டார்கள். முழுதாய் விடிந்துவிட்டால் எல்லோரும் மாறிவிடுவார்கள்!
அந்தப் பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதி. பின் கட்டில் இருந்தது. கல்லூரியின் முன்புறக் கட்டடத்தை ஒட்டி நீண்ட பாதை தெருவிலிருந்து சுமார் இரண்டு பர்லாங்கு இருக்கும். பஸ்ஸை விட்டு இறங்கியதும் நான் பாக்கெட்டிலிருந்த மற்ற சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். கல்லூரி அரவமற்று அமைதியாய்க் கிடந்தது.
பாதித்தூரம் சென்றபின் காக்கிச் சட்டையணிந்த தோட்டக்காரன் பதறியபடி “சிகரெட்டைக் கீழே போடுய்யா” என்று கோபமாக என்னை நோக்கி சிறிய அடிகள் எடுத்து ஓடிவந்தான். நான் பயந்து போய் சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்தேன். நான் கடந்து செல்லும் வரை இடையில் கைகளை வைத்து என்னையே வெறித்துக்கொண்டு அசையாமல் நின்றான் அவன். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது அவன் மீண்டும் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தான்.
விடுதி, ஒரு பெரிய மைதானத்தைச் சுற்றி, நான்கு பிரம்மாண்டமான கட்டடங்களாக நின்றது. ஒவ்வொரு கட்டடத்திலும் நூற்றியெண்பது விசாலமான அறைகள் இருந்தன. மைதானத்தின் மையத்தில் நாலைந்து மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அமைதியாக இருந்ததால் அவர்கள் கீழ்ஸ்தாயியில் பேசுவதைக் கூட கேட்க முடிந்தது. வேறு சில மாணவர்கள் மைதானத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் மெதுவாகவே ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரு மாணவன் மட்டும் ஆழ்ந்த சுயபிரக்ஞையோடு, கோபித்துக்கொண்டு ஓடிப்போன நாயகியைத் துரத்தி ஓடும் தமிழ்ப் படக் கதாநாயகனைப் போல் கால்களை உதறி உதறி ஓடிக்கொண்டிருந்தான்.
‘ஏ’ ப்ளாக்கில் சீதாராமனும் ஹரிஹர கிருஷ்ணனும் இருந்தார்கள். சீதாராமன் அறை பூட்டி இருந்தது. இரண்டாவது மாடியிலிருந்த 132இல் இருந்த ஹரிஹர கிருஷ்ணனுக்குப் பதிலாக, கண்ணாடியுடன் பனியன் வேட்டி அணிந்துகொண்டு ஒரு மாணவன் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான். ஹரிஹர கிருஷ்ணன் ஊருக்குப் போயிருந்தான்.
‘சி’யில் யாருமில்லை. ‘டி’யில் மூன்று பேர். ‘பி’யில் கிருஷ்ணகிரி என்ற ஒருவன், மற்றவர்கள் இந்தக் கட்டடங்களுக்குப் பின்னாலிருந்த ‘பழைய விடுதி’யில் இருந்தார்கள். ‘டி’ பிளாக் சலனமற்று இருந்தது. இரண்டு மாடிகளை ஏறி இறங்கியதுதான் மிச்சம். எல்லோரும் டவுனுக்குப் போய்விட்டிருந்தார்கள். படிகளில் இறங்கும்போது இரண்டு மாணவர்கள் கையில் ‘குமுதம்’ சகிதமாக எதிர்ப்பட்டார்கள். என் கையிலிருந்த பாக்கெட்டுகளைப் பார்த்து ஒருவன், “என்னப்பா டிரை கிளீனர்ஸா” என்று அசிரத்தையாய்க் கேட்டான். நான் பதில் சொன்னதும், மற்றவன் சம்பந்தமில்லாமல் விசில் அடிக்க, இருவரும் என்னைக் கடந்து சென்றார்கள்.
கிருஷ்ணகிரியின் அறையில் நாலைந்து மாணவர்கள் லுங்கி அணிந்து கட்டிலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கதவை இருமுறை தட்டி உள்ளே நுழைந்ததும் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். நான் சுபாவமாகத் தோன்றிய ஒரு மாணவனின் முகத்தைப் பார்த்து விஷயத்தைக் கூறினேன். அவன் நான் சொல்லி முடித்ததும் ஒரு கணம் யோசித்தான். பின், “அவன் தூங்கறாம்பா” என்று தயங்கினான். நான் அப்போது தான் கவனித்தேன். கட்டிலின் சுவரோரப் பகுதியில் நீள மூட்டையாய் உறங்கிக்கொண்டிருந்தான் கிருஷ்ணகிரி. ஒரு மாணவன் கிருஷ்ணகிரியை எழுப்ப யோசனை கூறினான். மற்றவன் அதை மறுத்தான். நான் அமைதியாக யோசித்துக்கொண்டு நின்றேன். அதற்குள் ஒருவன் கிருஷ்ணகிரியை இடைக்குக் கீழே பக்கவாட்டில் அடித்து எழுப்பினான். கிருஷ்ணகிரி முனகிக்கொண்டு திரும்பிப் படுக்க ஆரம்பித்தான். எழுப்பிக்கொண்டிருந்தவனோடு மற்ற இரண்டு பேர்களும் சேர்ந்து உற்சாகத்துடன் கிருஷ்ணகிரியின் துயில் கலைப்பதில் முனைந்தார்கள்.
இவர்கள் அவனது போர்வையை இழுத்தவுடன் கிருஷ்ணகிரி பதறிக்கொண்டு எழுந்தான். நழுவியிருந்த லுங்கியைக் கட்டிக்கொண்டே மற்றவர்களைத் திட்ட வாயெடுத்தவன் என்னைப் பார்த்ததும் மௌனமாகித் திகைத்தான். கிருஷ்ணகிரி ரொம்பவும் மெலிந்து காணப்பட்டான். முதல் சவரம்கூடப் பண்ணாத முகத்துடன், ஒரு குழந்தையைப் போல இருந்தான். துறுதுறுவென்று நேசிக்கும் சிறிய கண்கள். நான் ‘குட்மார்னிங் சார்’ என்று பேச்சைத் துவங்கினேன். நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தன்னிடம் பணம் இல்லை என்றும் புதன்கிழமை தானே வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறினான்.
பழைய விடுதியின் முற்றத்திலேயே பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள், குருமூர்த்தியும் கருணாகரனும். நான் தனித்தனியாய் அவர்களை அணுகிக் கேட்டபோது, இரண்டு வித்தியாசமான பற்பசைகளின் மணங்கள் கமழ கிருஷ்ணகிரி சொன்ன பதிலையே அவர்களும் சொன்னார்கள். கடைசியாய், நான் ரமேஷ்பாபுவின் அறைக்கு நடந்தேன்.
ரமேஷ்பாபு என்ற பெயர் அவன் வட இந்தியனாக இருக்கக் கூடும் என்பதாகப் பட்டது. அப்படியிருந்தால் அவனிடம் இந்தியிலேயே பேசலாம் என்று தீர்மானித்தேன். என் கொச்சையான இந்தியைத் தவிர்த்து எவ்வாறு செறிவாகப் பேசலாம் என்ற என் வார்த்தை வாக்கியங்களை மனதிற்குள் அமைத்துக்கொண்டே சென்றேன். அறைக்கதவு பாதி மூடியிருந்தது. நான் தட்டித் திறந்தேன்.
யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்தது போல் தோன்றிய ரமேஷ்பாபு, தாடியும் கண்ணாடியும் அணிந்து என் கற்பனை வரம்பிற்குள் அடங்காத அளவு அகலமாகவும் உயரமாகவும் இருந்தான். அவனைப் பார்த்ததும் ஒரு கணம் பயமாகக் கூட இருந்தது. என்னைக் கண்டதும் ‘விருட்’டென்று எழுந்துகொண்டான். பின் பரபரப்புடன் என்னை நோக்கி வந்தான். ஒரு கணம் அப்படியே நின்றவன் நெற்றியின் நரம்புகள் புடைக்கக் கண்களாலேயே அலட்சியமாக என்னை விசாரித்தான். நான் தடுமாறித் தடுமாறி உடைந்த ஆங்கிலத்தில் அவனிடம் விஷயத்தைக் கூறி முடித்தேன். அடுத்த கணம் அவனை ரௌத்ரம் கொண்டாண்டது. “நான் உன்னைக் கொண்டுவரச் சொன்னேனா?” என்று கோபத்துடன் துண்டாகக் கேட்டான். நான் மீண்டும் தயங்கி “இல்லை” என்றேன். “பின் போ! வந்து வாங்கிக்கொள்ள எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டுக் கதவைப் படாரென்று சாத்திக் கொண்டான்.
நான் அசடு வழிய கோட்டுகளைச் சுமந்து வெளியே வந்தேன்.
விடுதியின் பிரதான வாசலைக் கடக்கும்போது சுமார் இருபது இருபத்தைந்து ஆட்டுக்குட்டிகள் அன்றைய மதியப் புலால் உணவுக்காக உள்ளே இழுத்துசெல்லப்பட்டுக்கொண்டிருந்தன. சில சின்னக் குட்டிகள் உற்சாகத்துடன் கத்தியும் துள்ளியும் ஓடின.
கடையில், திரு ராவ் இல்லை என்பதை உணர்ந்தேன். கோட்டுகளைத் திரும்பவும் மாட்டி வைத்துவிட்டு லக்‌ஷ்மிபாயிடம் உரத்த குரலில் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்.
வழக்கம்போல் கொட்டகைவாசலில் கூட்டம். குறவர்கள் மறுபடியும் பாதையோரத்தில் கிளைத்துவிட்டிருந்தார்கள். வெள்ளைப் பூண்டையும், பின்னூசிகளையும் வினோதக் கலவையாக வைத்து விற்றுக்கொண்டிருந்த ஒரு குறத்தி குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒரு குறவன் தலையைக் குனிந்து காது குடைவதில் முனைந்திருந்தான். அவர்களருகே நேற்று சிதறிய சோற்றுப்பருக்கைகள் மண்ணில் தோய்ந்து இறைந்துகிடந்தன. நல்ல வெயில். நல்ல பசி. நான் நடையைத் தளர்த்திக் கொண்டு நடக்கத் துவங்கினேன்.
வீட்டுக்குள் தம்பி ‘மதர்-இந்தியா’வின் பழைய இதழ் ஒன்றிலிருந்து கேள்வி-பதில் பகுதியைப் படித்துக்கொண்டிருந்தான். அம்மா ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள். உடையை மாற்றிக்கொண்டு நானும் ஒரு பாயை விரித்துக்கொண்டேன். யாருமே பேசவில்லை.
மறுநாள் கடைக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது அம்மா என்னையே வெறித்துக்கொண்டிருந்தாள். சுத்தமாகக் குளித்துவிட்டுப் பளிச்சென்று காணப்பட்டாலும் அவள் முகம் பட்டினியால் வாடித்தான் போயிருந்தது. நான் தலைவாரிக் கொண்டிருந்தேன். தலைவார நேரம் பிடித்தது. அம்மா கவனித்துக் கொண்டிருந்ததால் ஒரு வேளை நானே வேண்டுமென்று அதிக நேரம் எடுத்துக்கொண்டேனோ!
நான் வாசற்கதவை அடைந்ததும் தன்னருகே இதற்காகவே வைத்திருந்த பையை, “இதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போ” என்று வன்மத்துடன் என்னை நோக்கி வீசி எறிந்தாள் அம்மா. பை என் காலில் பட்டுத் தெறித்தது. அதிலிருந்த மூங்கில் குருத்துகள் தரையெங்கும் சிதறின. அவை வாடிப்போயிருந்தன.
நான் அம்மாவுக்கு முதுகைக்காட்டியவாறே ஒரு கணம் நின்றேன். திரும்பி அவளை நேருக்கு நேர் பார்க்கும் திராணி இல்லை. மனம் குழம்பி, நிறையக் கோபம் எங்கிருந்துமில்லாமல் வந்தது. “நீயே போய்ப் போட்டுக்கொள்” என்று கூறிவிட்டு நடந்தேன். எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது.
தெருவில் இறங்கியதும் திடீரென்று எதிர்வீட்டின் சிறிய சந்திலிருந்து அம்மணமாய் ஒரு எட்டு வயதுப் பையன் குறி குலுங்க ஓடி வந்து பாதையோரம் அமர்ந்துகொண்டான்.
வெயில் அறைந்து தாக்கியது.
******
1980  - 1/4  
Kadavu-fullநன்றி: கடவு தொகுப்பு –க்ரியா வெளியீடு, 
பிரதி உதவி: அஜய்  தட்டச்சு உதவி:  சுபைர்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்