வெளியில் ஒருவன்
பரிவில்லாதது வீடு    
வெளிக் காற்றில் ஏராளம் விஷம்     
சோகை பிடித்த தாவரங்கள்     
நீர்நிலைகளில் சாகும் பறவைகள் மிருகங்கள்  .     
பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில்     
சரித்திரம் கெக்கலிக்கும்.     
தேசக் கொடிகளின் மடிப்பவிழ்ந்து     
எங்கும் பொய்கள் கவியும்.     
ஒன்று அல்லது மற்றொன்று -     
விலங்குகளை இழுத்து நகரும் மனிதர்கள்.
திசைகளில் அலைந்து திரும்பிய பறவை சொல்லிற்று    
மனிதர்கள் எரிக்கப் படுவதை     
பெண்கள் சிதைக்கப் படுவதை     
குழந்தைகளும் சங்கீதக் கருவிகளும் பிய்த்தெறியப் படுவதை     
பூக்களும் கவிதைகளும் மிதிக்கப் படுவதை     
‘மூலதனத்தின்’ பக்கங்கள் ஈரமற்றுப் போனதை     
கடவுளின் மகுடத்தைப் பேய்கள் பறித்துக் கொண்டதை     
சகோதரர்களுக்குக் கோரைப் பற்கள் முளைத்ததை.
பாதுகாப்பற்றது வெளி    
தற்கொலைக்கும் துப்பாக்கி முனைக்கும் நடுவில்     
நமது வாழ்க்கை.  
இரண்டு குரோத பற்சக்கரங்களுக்கு இடையில்     
நமது காலம்.     
நாம் எதிர்பார்த்திருக்கிறோம்     
அணுகுண்டு வெடிப்பின் கடைசி நொடிக்காய்.     
எனினும்     
வயலின் ஸ்வரங்களாய்ப் பொழியும் மழை     
தாமிரச் சூரியன்     
பறவைகள் பச்சிலைக் காற்று குதூகல முகங்கள்     
அக்குளில் சிறகு பொருத்தும் இசை - இவற்றுக்காய்க்     
காத்திருக்கிறது நம்பிக்கை     
பனிப்பாறைகளைப் பிளந்து மூச்சுவிடும் செடிபோல.
கையில் அள்ளிய நீர்
அள்ளி   
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்    
நதிக்கு அந்நியமாச்சு    
இது நிச்சலனம்    
ஆகாயம் அலைபுரளும் அதில்    
கை நீரைக் கவிழ்த்தேன்    
போகும் நதியில் எது என் நீர்?
******
 
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
 
 
 
 
1 கருத்துகள்:
நல்லா இருக்கு பாஸ்!
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.