Apr 30, 2011

வெளிப்பாடு - அம்பை

அந்தப் பேருந்து நிலையத்தை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதன் ஓசைகளையும், பிம்பங்களையும் மனதில் உறைந்து போக வைத்துவிட வேண்டும். பின்னால் நினைவுகூற. முக்கலும், முனகலும், பெருமூச்சுமாய் ஒரு தமிழ் சினிமாப் பாட்டு. வீடியோ கோச்சுகளின் அழைப்பை விடுக்கும் கூவல்கள். அறிவிப்புகள். பாட்டின் அதிர்வுப் பின்னணியில், மடக்கிய ரவிக்கையிலிருந்து வெளிப்பட்ட ஒரு முலை. காம்பு விறைத்து, பழுத்து. அதைச் சிறு சப்பலுடன் கவ்விய சிறு  உதடுகள். நீலமும் சிவப்புமாய், கூச அடித்த பட்டுப் புடவையின்  கழுத்துப்புற ஈரம். எண்ணெய் தடவி இறுக்கிப் பின்னிய தலையோடு ஒட்டிக்கொண்டிருந்த பின் தலையில் விரல்கள் நுழைத்த மல்லி, கதம்பம். கட்டணக் கழிப்பிடம் அருகேயே சுவரில் பீச்சியவனின் ஒரு கருத்த பிருஷ்டம். உள்நாக்குத் தெரிய, வாயைத் திறந்து கேவலின் உச்சக்கட்ட ஒலி செத்த நிலையில் ஒரு ரெட்டைக்குச்சிப் பின்னல் பெண்.

கண்டக்டரைச் சுற்றி இருந்த கூட்டத்தில் அவன் - சிதம்பரம் - மோதிக்imagesகொண்டிருந்தான் அவளுக்காக. வேஷ்டியைக் கீழேயே விடமாட்டான் போலிருந்தது. அவள் காலையில் பார்த்ததிலிருந்து அது மடித்தே இருந்தது. ஒரு அரைக்கைச் சட்டை. காலில் ஒரு தேய்ந்த செருப்பு. காலையில் ரயில் நிலையத்துக்கும் இப்படித்தான் வந்தான். நொடியில் அவளை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான். சிறு பெட்டியை அவள் கையிலிருந்து வாங்கினான் முதலில். அவளால் பெட்டி தூக்க முடியாது; டிக்கெட் வாங்குதல் போன்ற விஷயங்களைச் செய்ய முடியாது என்பது பற்றித் தீர்மானமாக இருந்தான். ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து நடக்கத் தொடங்கியது, “ஏ யப்பா! இப்படி விறுவிறுன்னு நடக்கறீங்களே!” என்று வியந்தான். நடத்திக்கொண்டே போனான்.

“எங்கே போறோம்?”

“இதோ, இந்த முக்குவரிக்கும்தான். தாமிரவருணிக்கு. ஆத்துல குளிச்சிட்டுப் போயிடலாம்.”

“ஐயோ! எனக்கு அங்கல்லாம் குளிக்க வராது.”

”அய்ய! ஒண்ணுமில்லிங்க. எத்தன பேரு குளிக்கறாங்க பாருங்க.”

மார்பில் பாதித் துணி. மீதி, கல்லில் பட் பட். நீர் தெறித்தது. மஞ்சள் கன்னங்களும், பாதங்களும், ஈரத் தொடைகளும். ஈரமுடி முதுகில். தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது. மின்னல் மாதிரி இடையும், பின்பகுதியும் பளீரிட்டபின், மந்திரம் போட்டதுபோல் புடவை இடுப்பில்.

முடியாது. அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன அணிந்துகொள்ள. எளிமையானவை அல்ல. திறந்தவெளியில் அவிழ்க்கவும் முடியாது.

“முடியாதுங்களா?”

”இல்ல. பழக்கமில்ல.”

“இங்க வந்து தாமிரவருணி குளிக்காம போகலாமா?”

“இல்லல்ல. முடியாது.”

மறுப்பால் சற்றுப் பாதிக்கப்பட்டான். “ஏங்க, ஆத்துல குளிக்கறது என்னங்க கஷ்டம்?” என்று முணுமுணுத்தான். “சரி வாங்க” என்று மீண்டும் நடத்தினான்.

ஒரு மரக்கதவின் முன் நின்று, “அண்ணி, அண்ணி” என்றான். கதவு திறந்தது.

திறந்தவரிடம், “இவங்கதான்... நான் சொன்னேனே? ரிப்போர்ட் எழுதணுமாம். கிருஷ்ணமூர்த்தி உதவி பண்ணச் சொல்லிக் கடுதாசி போட்டிருந்தார். கணபதி இல்ல ஊர்ல. ஓட்டல்லே ரூம் போடலாம்னு பார்த்தேன். வேணாங்கறாங்க. அரை நாள்தானே இங்கன. அதான் கூட்டிட்டு வந்தேன்.”

”ஓட்டல் எதுக்கு நம்ம வீடு இருக்கச் சொல்ல? உள்ளாற வாங்க,” என்றார்.

உள்ளே, சமையலறையிலிருந்து ஒரு முகம் எட்டிப் பார்த்தது.

“குளிக்கணுமாம்.” என்று அறிவித்தான் செய்தி மாதிரி.

“என்ன?” என்றாள் அண்ணி.

“குளிக்கணுமாம்.”

“ஆத்துப் பக்கமா வரலியா?”

“வந்தமே.  பளக்கம் இல்லியாம்.”

”இருக்கட்டும். இப்ப குளிக்கலாம்.” என்றாள்.

காப்பி வந்தது.

“வாங்க” என்றாள்.

சமையலறையின் முற்றத்தைக் காட்டி, “பக்கிட்டுல தண்ணி வெச்சிருக்கேன். ஊத்திக்கிடுங்க. கதவு சாத்த வேண்டாம். யாரும் வரமாட்டாங்க” என்றாள்.

அடுப்பில் பருப்பு மஞ்சள் வாசனையுடன் வெந்தது. இன்னொரு அடுப்பில் தோசைக்கல்.

“மஞ்சத்துண்டு பொறையில இருக்கு”. என்று விருக்கென்று உள்ளே வந்து தோசைக்கல் முன்னால் அமர்ந்தாள். அவள் அப்படி சர்வசாதாரணமாய்ப் புகுந்தது பாதிப்பதற்குமுன், தோசைக்கான மாவை ஊற்றினாள்.

ஜிவ்வென்று பசி வயிற்றைக் கவ்வியது. அம்மியில் சிதைந்த முதல் பச்சை மிளகாய் நெடி மூக்கில் ஏறித் தலையில் போதையாய் முட்டியது.

“முதுகு தேய்க்கணுமா?”

”இல்ல, இல்ல, வேண்டாம்.”

“கூச்சப்படுறீகளோ? பொம்பளைகளுக்குள்ள என்ன கூச்சம்?”

முதல் தோசை, பொன் நிற முறுகலாய் வாழை இழைமேல் விழுந்தது. இன்னொரு ‘சொய்’. கரண்டியால் ஒரு தேய் தேய்த்ததும் வட்டமாய் விரிந்தது.

“முடிக்கு எண்ணெய் தேக்க மாட்டீகளோ?”

”தேப்பனே.”

“பின்னே ஏன் இப்படி உதுந்துபோய்க் கிடக்கு? கரகரன்னுட்டு ரெண்டு கை எண்ணெய் தேய்ச்சு சீக்காய்ப் பொடி கொழச்சு தாமிரவருணில குளிச்சா முடி ஏன் வளராதுங்கேன்?”

அவள் தலையைப் பார்த்தாள். கருகருவென்று வெங்கலப் பானை மாதிரி முடிந்த தலைமயிர்.

”என் முடியைப் பாக்கீகளா? எனக்கு வயசு அம்பது. ஒரு முடி நரைக்கல. இன்னும் தூரம் போகலை.”

உனக்கு மறைக்க ஒன்றுமே இல்லையா? உன்னையும் என்னை மாதிரி அடக்கி அடக்கித்தான் - தலைப்பு ஏன் இப்படித் தொங்கறது? இடுப்பில் செருகு. வாசல் பக்கம் என்ன பண்றே? வாயை மூடு. கொரல் வெளில வரக்கூடாது. படிப்பு கிடக்கட்டும்; இந்தக் காயை நறுக்கித் தா. அப்புறம் தயிர் கடையலாம் - வளர்த்திருப்பார்கள். எந்த பலத்துடன் இப்படி வெள்ளையாய்ப் பேசுகிறாய்? சிரிக்கிறாய்?

“பதினாலு வயசிலே கல்யாணம். இவுகளுக்கு வயசு இருபது. அல்லு அசலு இல்ல. சொந்த மாமா பையன். பெறகு என்ன? சோறு வடிக்கிற ராச்சியந்தான். ரெண்டு பொட்டச்சிக. ஒரு மகன். கட்டிக் கொடுத்தாச்சு. அட, பேரன் எடுத்திட்டன்னா பாத்துக்குங்களேன்.”

இதுதான் உன் வாழ்க்கையின் கதையா? நாலு வரியில்?

உள்ளாடைகளை எப்படி அணிவது என்று யோசித்தாள்.

”தோசை வெச்சுட்டு வாரேன் அவுகளுக்கு. சாப்பிடச் சாப்பிட வெக்கணும். இல்லாட்டா மூக்கு மேல கோவம் புசுக்குன்னு ஒரு அறை வெச்சார்னா....” சிரித்தாள். வெளியே விரைந்தாள் வாழை இலையுடன்.

வேகமாக உடைகளை அணிந்தாள். சரியாகத் துடைக்காத உடம்பில் ரவிக்கை சுலபமாக ஏறவில்லை. முழங்கை அருகே பிடித்தது.

”சாப்பிட வரீகளா? எனக்குப் பசிக்கி.”

“நான் தோசை சுடட்டுமா?”

“அட, தோசை சுடத் தெரியுமா?”

“ஏன், தெரியாதுன்னு நீனைச்சீங்களா? ஒங்களை மாதிரி அவ்வளவு அழகா வராது. ஆனா சுடுவேன்.”

“என்ன மாதிரின்னா, என் வயசு என்ன, உங்க வயசு என்ன? பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை... அம்மம்மா...”

ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள்? எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்? இவள் சிரிக்கிறாள்.

“என்னா ரிப்போர்டு எளுதணும்?”

“பொம்பளைங்க பத்தி.”

”பொம்பளைங்க பத்தி எளுத என்ன இருக்கு?”

”அதாவது அவங்க எப்படி வாழறாங்க என்னெல்லாம் வேலை செய்யறாங்க அவங்க தங்களோட வாழ்க்கையைப் பத்தி என்ன நெனைக்கிறாங்க...”

”என்ன நெனக்கிறாங்க? புள்ள பெறுதோம். ஆக்கிப் போடுதோம்.”

”எப்பப் பாரு புள்ள பெறலியே? நடுவிலே ஏதாவது யோசிச்சிருப்பீங்க, இல்ல?”

”ஆமா, ரோசிச்சோம், போங்க.”

மௌனமாகச் சாப்பிட்டார்கள்.

தோசை விள்ளலைச் சட்டினியில் தோய்த்தபின், வாயில் போடாமல் இவளைப் பார்த்தாள்.

“ஒரு பொஸ்தகமுங்க. எங்க வூட்டுல இருந்திச்சு. நான் சின்னப் புள்ளையா இருக்கச்சொல்ல. ஒரே போட்டோவுங்க. சமுத்திர போட்டோ, நொரையா அலை. செல போட்டோவுலே அப்படியே கண்ணாடி மாதிரி கெடக்கு சமுத்திரம். திருச்செந்தூர் கோயில் விளால நான் பாத்திருக்கேன் சமுத்திரம். ஒரு வாட்டி சொரம் வந்து சமுத்திரம் சமுத்திரமுன்னுட்டு பெனாத்தினேன். ‘பயித்தியாரி, பயித்தியாரி’ன்னு இவுக ஒரே கோவம். அதென்னமோ வியாதிங்க. சமுத்திர சாபம். சமுத்திரம் பாக்கணுமே பாக்கணுமேன்னுட்டு பறப்பேன். இவுக ஒரு அறை வெப்பாக பாருங்க, அடங்கிடுவேன். முருக பக்தருங்க இவுக....”

ஒரு நகரத்தில் ஒரு சின்னப் பெண். அவள் வசித்த தெருவின் முனையில் ஒரு சிறு புத்தகக் கடை. கண்ணாடிச் சுவர்கள். இவள் மூக்கும் கண்களும் மட்டும் கண்ணாடிச் சுவர்வரை எட்டும் எம்பினால். ஒரு சுழல் அலமாரியின் பின்னால் அது இருந்தது. நீலக் கடலின் ஒரு ஓய்ந்த முனை. நிலாவின் ஒளிக்கதிர்கள் மெத்தென்று ஊடுருவியது ஒரு தையல்போல். ஒரு படகு, கடல், படகு, நிலா எல்லாம் ஒன்றோடொன்று கலந்திருந்தது நீலமாக. அவளுக்கு நீலம் பிடிக்கும், ரொம்ப. தெரு முனையை அடையும் போதெல்லாம் அவள் கண்களும் மூக்கும் கண்னாடியை அழுத்தும். அவர் பார்த்தார் ஒருநாள், கடைக்காரர்.

“என்ன பாப்பா?”

“சமுத்திரம்.” இவள் காட்டினாள்.

“உள்ளே வா.”

அவர் அதைக் கழற்றி அவளிடம் பார்க்கத் தந்தார். அது ஒரு ஐரோப்பிய ஓவியம். மோனேயா? நினைவில்லை. ஒருநாள் அதை அவளுக்குத் தந்தார். அவள் குழந்தை பருவத்தின் ஒரு மென்மையான பகுதி. ஓவியக் கடல்.

“என்ன டீச்சர், இவகிட்ட பேசறீங்களா? ஒண்ணும் தெரியாது இவளுக்கு. மீன் கொளம்பு வேணா நல்லா ஆக்குவா.” சிரித்தார்.

இவள் நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். அவள் இவளை அரைக்கணம் பார்த்துவிட்டு இலையுடன் எழுந்து தன் கணவனைத் தாண்டிப் போனாள்.

கிளம்பும்போது, “அடுத்த வாட்டி ரெண்டு நாள் இருக்குற மாதிரி வாங்க டீச்சர். திருச்செந்தூர் போகலாம்,” என்றாள்.

”ஆமா, ஆமா, சாப்பாடெல்லாம் கட்டிட்டுப் போகலாம். நல்லாயிருக்கும் டீச்சர் முருகன் கோவில்,” என்றார் அவர்.

அவள் கன்னத்தை வருட வேண்டும் போலிருந்தது. இறுக்கி முடிந்திருந்த கூந்தலைக் கீழே தளரக் கொட்டிப் பார்க்க வேண்டும். கனத்த தங்கச் சங்கிலிகள் கிடந்த கறுத்த கழுத்தைத் தொட வேண்டும். ஆனால் ஸ்தூலமாகப் பகிர்ந்துகொண்டது தோசையை மட்டும்தான். அதனால், “உங்கள் கைதோசை சாப்பிட வருவேன் இன்னொரு தடவை” என்றாள்.

பஸ் டிக்கெட்டோடு வந்தான் அவன்.

“போயிடுவீங்க இல்ல? அங்க கணபதி வருவார். வேலை முடிஞ்சதும் அவரு வீட்டுக்கு வந்திடலாம். இப்ப அவரு இங்க இல்ல. அதனாலதான்... போயிடுவீங்க இல்ல?”

”டெல்லியிலேர்ந்து இங்க வரலியா? ஏன் போக முடியாது?”

“இல்ல.... ஒத்தையா....”

“அதெல்லாம் போயிடுவேன்.”

பஸ் கிளம்பும்முன் கண்டக்டரிடம், “அவுங்க புதுசு. கொஞ்சம் பாத்து எறக்கிவிடுங்கய்யா,” என்றான்.

மூச்சு முட்டியது. பாதுகாப்பும் ஒரு அடக்குமுறைதான். நீ வீட்டில் இருந்தால் உன்னை நான் காப்பாற்ற முடியும். வெளியே வந்து நான் சுவாசிக்கும் காற்றை நீ உள்ளுக்கு இழுத்தவுடனேயே அபாயம் உன்னைச் சூழ்கிறது. எட்டுத் திக்கும் வாயை அகல விரிக்கிறது உன்னை விழுங்க. என் கரிசனத்தைப் பார். எவ்வளவு அக்கறை பார் எனக்கு. கடல் வேண்டியிருந்தது அவளுக்கு. அலைகளை வீசி வீசிப் போட்டு அலையும் உதாசீனக் கடல்.

கணபதி வந்திருந்தார். வேலையை முடித்து பஸ் ஏறி அவர் வீட்டை அடையும்போது இரவு மணி ஒன்று. நீண்ட, கல்லால் ஆன ரேழியில் நடந்து வெளிமுற்றத்தைத் தாண்டிக் கதவை எட்டினார்கள். கதவைத் தட்டாமல் ‘சந்திரா, சந்திரா’ என்றார் சன்னமாக. சிரித்த முகத்துடன் ஒரு இருபது வயசுப் பெண் வந்தாள். மேல்புறம் இரும்புக்கம்பிகள் போட்ட கதவைத் திறந்தாள். கலைந்த தலை மயிரை ஒதுக்கியபடி “வாங்க” என்றாள்.

“அண்ணி மச்சுலே படுத்திருக்காங்க,” என்றாள் அவரிடம்.

“என் தங்கை” என்றார்.

சிரித்தாள். கூடத்தில் சமையலறையை ஒட்டி ஒரு சிறு பாயை விரித்தாள்.  “உட்காருங்க.”

ஸ்டவ் பற்றவைத்து,  தோசைக்கல்லைப் போட்டாள். உள்ளே விறகடுப்பு கோலத்துடன் உட்கார்ந்திருந்தது.

இரண்டு வாழை இலைக் கீற்றுகளை விரித்தாள்.

தோசை விழுந்தது அதில். மிளகாய்ப் பொடி, நெய், சாப்பிட்டு முடிக்கும்முன் டம்ளரில் சுடச்சுடப் பால்.

காலையில் டீயுடன் எழுப்பினாள்.

“எப்படித் தெரியும் டீதான் சாப்பிடுவேன்னுட்டு?”

“அண்ணா சொன்னாரு, டெல்லிக்காரங்களுக்கு டீதான் பிடிக்கும்ன்னு”

“அப்புறம்?”

“விறுவிறுன்னு நடப்பீங்கன்னுட்டு, ஒத்தையா எல்லா இடத்துக்கும் போவீங்கன்னுட்டு.”

“நீ வரியா என்னோட?”

“நான் எப்பிடி? அனுப்ப மாட்டாக வெளில எல்லாம்.”

”போகவே மாட்டியா?”

“எப்பனாச்சும். கோயில், திருவிழா, அண்ணா அண்ணி அழைச்சிட்டுப் போனா சினிமா.”

“பின்ன வீட்டுல என்ன பண்ணுவ?”

”வேலை இருக்குமே. அம்மா ஒத்தையா எப்படி எல்லாம் செய்வாக? அண்ணியும் நானும் செய்வோம். மாட்டுக்குத் தீனி, தோசை மாவாட்டறது, சட்டினி, தொவையல் அரைக்கறது எல்லாம். துணி தோய்ப்பேன். சின்னண்ணா ஷர்ட்டு, பான்ட்டு தோச்சு, கஞ்சி போட்டு, பெட்டி போட்டு வைக்கணும். இல்லாட்டி ரொம்ப கோவிப்பான். மத்தியானம் நேரம் கெடச்சா பத்திரிகை படிப்பேன். தொடர்கதை....”

“டீ நல்லா இருக்கு”

“அந்த ‘சுரபி’ பத்திரிகைல வர கதேல அந்தாளு கூப்பிடுறான்னு இவ போயிருக்கா. தொடரும் போட்டுட்டாக. அவன் கெடுத்திடுவான்னு பயமா இருக்குது. இவ போகக் கூடாதில்ல?”

”உனக்கு வெளியே போகத் தோணாது?”

“போகலாமே. கல்யாணம் கட்டிட்டா மாப்பிள்ளையோட போகலாம். கடை, கண்ணி, சினிமா, வேத்தூரு எல்லாம். மாப்பிள்ளை பார்த்தாக. ஒண்ணும் கூடிவரல்ல.”

“எந்த மாதிரி புருஷன் வேணும் உனக்கு?”

”ஏன், மாப்பிள்ளை பாத்துத் தருவீகளோ?” குறும்பு கண்ணில்.

“நான் பார்க்கட்டுமா டெல்லி மாப்பிள்ளை? செக்கச் செவேல்ன்னுட்டு பஞ்சாபி மாப்பிள்ளை?”

“கேலி பேசுறீங்க”

”இல்லல்ல. நீ சொல்லேன்.”

“எப்படிப்பட்டவருன்னா? நல்லவரா இருக்கோணும்.”

“நல்லவர்ன்னா? சிகரெட்டு பிடிக்கக் கூடாதா? குடிக்கக் கூடாதா எப்படி?”

“கோவக்காரரா இருக்கக் கூடாது. கை நீட்டக் கூடாது.”

“ஏழையா பணக்காரரா?”

“நல்ல கொணமா இருக்கோணும். படிச்சவர்னா சம்பளம் நல்லாதானே இருக்கும்? நல்லா வெச்சுக்கிடணும்.”

ஒரு பேப்பரை எடுத்தாள். “கல்யாணம் கட்டிட்டு என்னெல்லாம் வேணும் சொல்லு. நான் பட்டியல் போடறேன்.”

“கேலியா?”

”சே, நிஜமாவே. சொல்லு”

ஊஞ்சல் சங்கிலியில் தலையைச் சாய்த்து, முழங்காலைப் பலகையில்  ஊன்றி நின்றாள். கூந்தல் அலையாய் நெற்றியில் விழுந்தது. பாய்மர இமைகள் மேலெழுந்தன படகுக் கண்கள் மிதக்க. பட்டியல் அவளிடம் இருந்தது.

தெருவுல நடக்கணும் தெனம்.

ஓட்டல்ல பலகாரம் சாப்பிடணும்.

கடைக்குப் போய் நானே பொடவை எடுக்கணும்.

சினிமா போகணும்.

நெறைய ஊர் பாக்கணும்.

பின்கட்டு உலகில் பதியப் பதிய நடந்தாள். எருமை மாட்டை அடக்கினாள். தீனி போட்டாள். தீட்டானால் குளிக்கும் இருட்குகை ஸ்நான அறையைக் காட்டினாள். எட்டிப்பார்க்கும் போதெல்லாம் அடுப்படியில். தோசை சுடவா அக்கா? இட்டிலி ஊற்றித் தரட்டுமா? இரவில் புடவை விலகாமல் இரு கால்களையும் அடக்கி, மடக்கிப் படுத்தாள். யார் ஒரு தும்மல் போட்டாலும் எழுந்து மிளகு சீரகம் பொடித்த சுடுதண்ணி போட, விசை தட்டியவுடன் இயங்குபவள் போல் டாணென்று எழுந்தாள். இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில் வைத்துக்கொண்டாள். சோற்றுமணம் அடித்தது. பல யுகங்களின் சோற்று மணம்.

பெட்டியை மூடும்போது சொன்னாள்:

“நீங்க போயிட்டீங்கன்னா உங்களை ரொம்பத் தேடும் எனக்கு.”

“கல்யாணப் பத்திரிகை வெப்பே இல்ல எனக்கு?”

”பின்ன? வெக்காம?”

கணபதி பெட்டியை எடுத்துக்கொண்டார். முன்கட்டுச் சுவர்வரை வந்தாள்.  “அதுவரை வாயேன்” என்று தெருவை ஒட்டிய கதவைக் காட்டியதும் “ம்ஹூம்” என்றாள். சிரித்தாள். கத்திரிப்பூ நிறச் சேலை அணிந்திருந்தாள். தெருக்கதவை எட்டியபோது, “அக்காவுக்கு நம்ம ஊரு அல்வா வாங்கித்தர மறக்காதீக” என்று அவள் குரல் வந்தது. திரும்பிப் பார்த்தபோது அவள் கட்டியிருந்த கத்திரிப்பூ நிறச் சேலையின் தலைப்பு முனை மட்டும் தெரிந்தது.

கத்திரிப்பூ நிறத் துணியை மனதில் படரவிட்டாள். அது மடங்கி விரிந்து அலையாய்ச் சுழன்றது. கத்திரிப்பூ நிறக்கடல். அது சிறிது சிறிதாய் விஷ நீலமாகியது. பொங்கிப் பொங்கி வந்தது. கன்னத்தில் சொடுக்கும் அடியின் ஓசை வந்தது. முருக பக்தரின் அடி.

பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம் ஒரு பொட்டலத்தை நீட்டினான்.

“என்ன இது?”

“அந்த அண்ணிகிட்ட நீங்க கிளம்பறீங்கன்னுட்டு சொன்னேன். தோசை கட்டித் தந்தாங்க. வழியில சாப்பிட.”

சந்திராவின் வேண்டுகோள்படி கணபதி அல்வாவுடன் வந்தார். வாழை இலையில் நெய்யுடன் வழுக்கிய அல்வா.

********

Apr 22, 2011

சுயரூபம் - கு. அழகிரிசாமி

வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.

பழம்பெருமை படைத்த இந்த வேப்பங்குளத்தில் பிறந்த எத்தனையோ பேரில், தற்சமயம் ஐம்பதாku.aaம் வயதைத் தாண்டிய வீ.க. மாடசாமித் தேவரும் ஒருவர். அப்படிச் சொல்லிக் கொள்ளுவதைவிட, வீரப்பத் தேவர் பேரன் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுவதில்தான் அவருக்குப் பிரியம் அதிகம். தாத்தா வீரப்ப தேவரின் அரிய சாதனைகளையும், ஒரு கடுஞ்சொல்லுக்கு ஒன்பது தலைகளைச் சீவி எறியும் மகா தீரத்தையும், உடன்பிறந்த தங்கை ஏதோ ஒரு சமயம் அவரை லட்சியம் செய்யாமல் இருந்ததற்காக அவளுடைய மூத்த மகன் கல்யாணத்தின் போது யார் யாரோ தாங்கியும் கட்டாயப்படுத்தியும் அழுதும் இன்னும் என்ன என்ன விதமாகவோ கும்பிட்டுக் கூத்தாடியும் கை நனைக்காமலே (சாப்பிடாமலே) வந்துவிட்ட வைராக்கியத்தையும் மாடசாமித் தேவர் தம் வாழ்நாளில் சந்தித்த ஒவ்வோர் இரண்டு கால் பிறவியிடத்திலும் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார். அப்பேர்ப்பட்ட வீரப்பத் தேவரின் பேரர், காலனும் அஞ்சும் கந்தசாமித் தேவரின் ஏகபுத்திரர். வீ.க. மாடசாமித் தேவர் என்னும் பெயர் கொண்ட அந்த வேப்பங்குளம் வாசி, அன்றொரு நாள் அதிகாலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, ஊருக்குக் கிழக்கே உள்ள யாரோ ஒருவருடைய மிளகாய்த் தோட்டத்தின் கிணற்றடியில் நின்று பொடி மணலை எடுத்துத் தந்தசுத்தி பண்ணிக் கொண்டிருந்தபோது, முத்தையாத் தேவர் என்ற ஒருவர் எதிர்பாராத விதமாக அங்கே திடீரென்று பிரசன்னமாகி, “என்ன பெரிய தேவரே! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என்னை மாதாந்தம் நடக்கச் சொல்லலாம்னு நெனைச்சிக்கிட்டிருக்கீரு? இல்லே, நாள் காணாதா? காலேயரைக்கால் ரூவாக் காசுக்கு ஆயிரம் நடை நடந்தாச்சு; நீரும் வாய் சலிக்காமல் ஆயிரம் சால்ஜாப்பும் சொல்லியாச்சு!” என்று கர்ஜித்தார்.

கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த ஒரு வேற்று ஜாதிக்காரனின் முன்னிலையில் தம்மை இப்படியெல்லாம் பேசி பாக்கியைக் கேட்கும் முத்தையாத் தேவருக்குச் சரியான புத்தி புகட்டவேண்டுமென்று நினைத்த மாடசாமித் தேவர் “நான் என்ன உமக்குப் பயந்து ஒளிஞ்சுக்கிட்டு அலையறேன்னு சொல்லுறீரா? இல்லே, எதிரே வந்தாத் தலையைச் சீவிருவீரா? தெரியாமத்தான் கேட்கிறேன்” என்றார்.

“ஒளிஞ்சிக்கிட்டு அலையல்லேன்னா வீட்டிலே இருக்கணுமில்லே?”

“ஆமாம். நீர் வருவீர்னு சொல்லி உமக்காக வேலைவெட்டியைப் போட்டுட்டு நான் வீட்டிலேயே உட்கார்ந்துக்கிட்டு இருக்கணும்!”

“இந்த வெவகாரமெல்லாம் எதுக்கையா? எனக்குக் குடுக்க வேண்டியதை விட்டெறிஞ்சிட்டீர்னா, நீர் வீட்டிலே இருந்தாத் தேவலையா, காட்டிலே இருந்தாத் தேவலையா? பெறகு நான் எதற்கு உம்மைத் தேடுகிறேன்?”

”காசு தானே கேக்கிறீர்” என்று நிமிர்ந்து நின்றுகொண்டு ஒரு கேள்வியைப் போட்டார், மாடசாமித் தேவர்.

“வேறு என்னத்தைக் கேக்கிறேன்? அதுகூடவா சந்தேகம்?”

“முத்தையாத் தேவரே! ரொம்ப தூரம் பேச்சுவச்சிக்கிட வேண்டாம். மத்தியானம் காசு வந்து சேருது, பாரும். உம்ம பாட்டிலே என்னென்னத்தையோ...”

மீதிப் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமலே முத்தையாத் தேவர் அப்பால் நகர்ந்துவிட்டார். அங்கே நின்றுதான் என்ன செய்யப் போகிறார்?

மாடசாமித் தேவரும், வாயில் கொப்புளித்த வாய்க்கால் தண்ணீரைத் ‘தூ’வென்று துப்பிவிட்டு, கிழக்கே மங்கம்மாள் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

மங்கம்மாள் சாலை என்பது இந்நாள் டிரங்க் ரோடாகும். சென்னை மாநகரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் செல்லும் அந்தச் சாலையில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் நடுவில் ஒரு விலக்குப் பாதை பிரிகிறது. அரை மைலுக்கு மேற்கில் இருக்கும் வேப்பங்குளத்துக்குச் செல்லும் அந்தப் பாதையும் மங்கம்மாள் சாலையும் சந்திக்கும் இடத்தில், முருகேசம் பிள்ளையின் பலகாரக்கடை என்ற ஒற்றைத் தனிக்குடிசை ஒன்று இருக்கிறது. பஸ்ஸுக்காகப் புளியமரத்து நிழலில் வந்து காத்திருக்கும் பிரயாணிகளையும், தெற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் செல்லும் மாட்டு வண்டிகளையும் மற்றும் பாதசாரிகளையும் நம்பி அவ்விடத்தில் இருபது வருஷங்களுக்கு முன் நிறுவப்பட்ட அந்தக் கடை, முருகேசம் பிள்ளைக்கு ஐந்நூறு ஏக்கம் புன்செய் நிலத்தையும், சிமிண்டுத் தளம் போட்ட ஓர் ஓட்டுவீட்டையும் சம்பாதித்துக் கொடுத்ததுமல்லாமல், அவருடைய மூன்று பெண்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்திருக்கிறது. அந்தக் கடைக்குத் தேவர் போய்ச் சேர்ந்தபோது முருகேசம் பிள்ளை சிலருக்குப் பலகாரம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

முருகேசம் பிள்ளையவர்கள், மாடசாமித் தேவரவர்கள் வந்ததைக் கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாது; கவனிக்க விரும்பவில்லை என்பதுதான் சரி. பஸ்ஸுக்கு வந்த பிரயாணிகளுக்குப் பலகாரங்களைக் கொடுத்துக் காசாக்குவதிலேயே பிள்ளை கண்ணும் கருத்துமாக இருந்தார். தேவரோ, தாம் வந்ததைத் தெரிவிப்பதற்காக இடையிடையே ஏதேதோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அது, ’புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொரு’ளைப் போலவும், தாடகையின் மார்பில் பாய்ந்த ராமபாணம் போலவும் இந்தப் பக்கமாகப் புகுந்து அந்தப் பக்கமாகப் பறந்துவிட்டது.

அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் வேப்பங்குளத்துக்காரன். அவனையும் சேர்த்து, ‘ஐயா’, ‘ராசா’ என்று உபசரித்தார், முருகேசம் பிள்ளை. அதைப் பார்த்த தேவர், ‘நாலு காசு சேர்ந்துட்டதுன்னா கழுதை களவாணிப் பயல்களைக்கூட முருகேசம் பிள்ளை தாங்குவாரு!’ என்று இகழ்ச்சியாக எண்ணிக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்தார்.

எல்லோரும் சாப்பிட்டுப் போய்விட்டார்கள். ‘செல்விருந்து ஓம்பிய’ பிள்ளை, வருவிருந்தைப் பார்த்திருக்கலானார்; ஆனால், அப்போது பரிதாபகரமாக மாடசாமித் தேவர்தான் வந்த விருந்தாகக் காத்துக்கொண்டிருந்தார். ஆள் இல்லாத இந்தச் சமயம் பார்த்து, கோட்டையைப் பிடிப்பதற்காகத் தமது முஸ்தீப்பைத் தொடங்கினார் தேவர்.

“என்ன அண்ணாச்சி, ஆளு ஒருமாதிரி எளைச்சமாதிரி இருக்கிகளே, என்ன சங்கதி?” என்று ஆரம்பித்தார்.

”எளைப்பு என்ன எளைப்பு! எண்ணைக்கும் போலத்தான் இருக்கிறேன்” என்று அலட்சியமாகக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே பதில் சொன்னார் பிள்ளை.

தேவரிடமிருந்து அடுத்த கேள்வி கிளம்பவில்லை.

பஸ் வந்தது. அதிலிருந்து ஒரே ஒரு பிரயாணி மட்டும் இறங்கினான். அவனை வரவேற்றுச்  சாப்பிட அழைத்தார் பிள்ளை. அவன் ‘பசி இல்லை’ என்று சொல்லி அவரிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயன்றான். அகப்பட்டுக்கொண்டால் அரை ரூபாயோ முக்கால் ரூபாயோ கணக்காகிவிடும் என்று அவனுக்குப் பயம். ஆனால் பிள்ளையா விடுகிறவர்? ஓடிப்போய் அவன் கையைப் பிடித்து இழுத்தார்.

“கையை விடுமையா! பசிச்சா வரமாட்டான், மனுஷன்? கடன்காரன் மாதிரி வந்து கையைப் பிடிச்சு இழுக்கிறீரே!” என்று கோபமாகச் சொல்லி, கையையும் உதறிவிட்டு அவன் ஊரைப் பார்த்து நடந்தான்.

முருகேசம் பிள்ளைக்கு இது அவமானமாக இருந்தது. அதை மறைப்பதற்காக மாடசாமித் தேவரிடம் வலிய வந்து பேச்சுக் கொடுத்தார். தப்பி ஓடியவனைத் தமக்கு மிகவும் வேண்டியவனைப் போலக் குறிப்பிட்டுப் பேசினார். வேண்டியவன் இப்படியெல்லாம் முகத்தை முறித்தாற்போல் பேசுவது அவமானப்படத்தக்க விஷயமல்ல என்று தேவர் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கையாண்ட தந்திரம் அது.

பிள்ளையவர்கள் தம்மையும் ஒரு பொருட்டாகக் கருதிப் பேச ஆரம்பித்ததை எண்ணி மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொள்ளத் தொடங்கிய மாடசாமித் தேவர், “என்ன இருந்தாலும் இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு மனுஷாளோட தராதரம் தெரிகிறதில்லை, அண்ணாச்சி” என்றார்.

“ஆனால், இவன் அப்படியில்லே! தங்கமானபிள்ளை.”

”பய போறான், அண்ணாச்சி, பேச்சை விடுங்க. இப்போ யாவாரம் எப்படி?” என்று விசாரித்தார் தேவர்.

“என்னமோ, அச்சில்லாமத் தேரு ஓடுது. போட்ட மொதலைக்கூடக் கண்ணாலே பார்க்கமுடியல்லே.”

“நல்ல யாவாரமின்னுல்லே சொன்னாக?”

”சொல்வாக, சொல்வாக. சொல்றவுகளுக்கு என்ன? முருகேசம் பிள்ளை, கொள்ளையடிச்சுக் கொள்ளையடிச்சு மூட்டை மூட்டையாகக் கட்டி வச்சிருக்கான்னுகூடச் சொல்வாக. என் கண்முழி பிதுங்குறது எனக்கில்லே தெரியும்? பாருங்க, என் மக மாங்கண்ணு (அவர் மூன்றாவது மகளின் செல்லப்பெயர்) ஆடிக்கு வந்தவ இன்னும் இங்கேயே இருந்துக்கிட்டிருக்கறா. அவளுக்கு நாலு வடத்திலே ஒரு முத்துமாலையைப் போட்டு அனுப்பி வச்சிரணும்னு பாக்கிறேன். அதுக்கு ரெண்டு பவும் சேர மாட்டேங்குது” என்று வருத்தத்தோடு சொன்னார்.

தேவர், மிகப்பெரிய பசியேப்பத்தை விட்டுவிட்டு, பிள்ளையின் துயரத்துக்கு அனுதாபம் காட்டுவதுபோல் நடித்துக்கொண்டு, “ரெண்டு பவும் போதுமா, நாலு வடம் முத்துமாலைக்கு?” என்று குழந்தையைப் போலக் கேட்டார்.

“சரியாப் போச்சு போங்க! கையிலே பத்து பவுன் இருக்கு தம்பி. பன்னிரண்டு பவுனாப் பண்ணிப்பிடணும்னு பார்க்கிறேன்”

”ஆமா, அண்ணாச்சி! செய்றதை நல்லாத்தான் செய்யணும்! யாருக்குச் செய்றோம்? நம்ம குழந்தைக்குத்தானே செய்றோம்?” என்று அனுதாபத்தைப் பூரணமாக வெளிப்படுத்தினார்.

‘ஐயாவுக்கு ரொம்பக் கவலை!’ என்று தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் பிள்ளை.

அப்போது தேவர் தமக்குள் சொல்லிக் கொண்டது பின்வருமாறு:

‘இவன் மகளுக்குச் சங்கிலி போடலேன்னுதான் இந்த வீரப்பத் தேவர் பேரனுக்குக் கவலை! நம்ம தலையெழுத்து, இப்படிப்பட்ட அற்பப் பயல்களுக்கெல்லாம் எரக்கம் காட்டிப் பேச வச்சிருக்கு. அவனவன் அரைவயித்துக் கூழுக்கு அலையிறான்; இந்தப் பய மகளுக்கு என்னடான்னா, முத்து மாலைப் பண்ணிப் போடணுமாம், நாலு வடத்திலே! கும்பி கூளுக்கு அழுததாம்; கொண்டை பூவுக்கு அளுததாம்!”

’அற்பப் பய’லுக்கு அனுதாபம் காட்டுவது தேவருக்கும், ‘வெறும் பயல்’ அனுதாபம் காட்டுவது பிள்ளைக்கும் அடியோடு பிடிக்கவில்லை.

முருகேசம் பிள்ளை பேச விரும்பாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். ரோட்டின் தென்கோடியையும் வலதுகோடியையும் ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு, காலை உணவு உட்கொள்ள உட்கார்ந்தார்.

பிள்ளையவர்கள் இட்டிலிகளையும் வடைகளையும் எடுத்து வைத்துக்கொண்டு தேங்காய்ச் சட்டினியைத் தொட்டுச்  சாப்பிடும் காட்சியைக் கண்ட தேவருக்கு நெஞ்சு படபடவென்ரு அடித்தது. முந்தாநாள் சரியாகச் சாப்பிடாமலும், நேற்று அறவே  சாப்பிடாமலும், இன்று வெறும் ஆசாரத்துக்காகவே பல்தேய்த்துவிட்டுப் பசியேப்பம் விட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு மனிதன் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறானே என்ற உணர்ச்சிகூட இல்லாமல் பிள்ளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

“நமக்கும் நாலு இட்டிலி வையுங்க, அண்ணாச்சி” என்று தம்மை மறந்த நிலையில் கேட்டுவிடுவதற்குத் தேவர் வாயைத் திறந்துவிட்டார். நல்ல வேளையாக, திறந்த வாயில் பேச்சு வெளிவராமல், மற்றொரு பசியேப்பமே வந்தது. கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? முருகேசம் பிள்ளை கடன் கொடுக்கக் கண்டிப்பாக மறுத்திருப்பார். அத்துடன் தேவரின் நம்பிக்கையும் தகர்ந்திருக்கும். கேட்காமல் இருந்தாலோ, சாயங்காலம் வரையிலாவது நம்பிக்கையை நீட்டலாம். இதை உணர்ந்து பிள்ளையவர்களை மெள்ள மெள்ள வசப்படுத்தி, கடைசியில் தமது காரியத்தைச் சாதிப்பதற்கான உபாயங்களையும் மார்க்கங்களையுமே தேடலானார், தேவர்.

சிறிது நேரத்தில் அடுத்த பஸ் வடக்கேயிருந்து வந்தது. அதிலிருந்து மூன்று பேர் இறங்கினார்கள். மூவரும் உள்ளூர்க்காரர்கள். அவர்கள் சாப்பிட வரமாட்டார்கள் என்பது பிள்ளையவர்களுக்குத் தெரியுமாதலால் அவர்களை வீணாகக் கூப்பிடவில்லை.

”இப்படி வர்ரவுகளெல்லாம் கடைக்கு வராமப் போனா அண்ணாச்சி சொன்ன மாதிரி, யாவாரந்தான் எப்படி நடக்கும்?” என்று வாயைத் திறந்தார் மாடசாமித் தேவர்.

“செடி வச்சவன் தண்ணி ஊத்துவான். நீர் ஏன் கவலைப்படுறீரு?” என்று பதில் சொல்லிவிட்டு பிள்ளை திரும்பி உட்கார்ந்து கொண்டார்.

மத்தியானம் ஆயிற்று. வயிற்றுச் சோற்றுக்கு முருகேசம் பிள்ளை வீட்டில் எடுபிடி வேலை செய்து உயிரைப் பேணிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் வீட்டிலிருந்து அவருக்கு மத்தியானச் சாப்பாடு கொண்டுவந்தான். காரணம் இல்லாமலே, நித்திய வழக்கப்படி அவன்மீது ஒரு வசை புராணம் பாடி முடித்தார் பிள்ளை. பிள்ளையவர்களைச் ‘சண்டாளன்’ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டு,  அதே சமயத்தில் அவருடைய கட்சியிலேயே சேர்ந்துகொண்டு, அந்தச் சிறுவனை மாடசாமித் தேவரும் கடிந்துகொண்டார். இது பிள்ளையவர்களுக்குப் பிடிக்கவில்லை.

“தேவரே, இவன் என்ன, அனாதைப் பயல்னு பார்த்தீரா? நான் தான் திட்டுறேன்னா, நீரும் எதுக்குப் பின் பாட்டுப்பாடுறீரு?” என்று ஒரு போடு போட்டார்.

தேவருக்கு முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. பல்லைப் பல்லைக் காட்டிக்கொண்டு,  “நான் அப்படி என்ன சொன்னேன்...? அவனுக்குப் புத்திதானே சொன்னேன்?” என்று பரிதாபகரமாகச் சொன்னார்.

பையன், தேவரைச் சிம்மப் பார்வை ஒன்று பார்த்துவிட்டுப் போனான்.

காலையிலிருந்து முருகேசம் பிள்ளையோடு வளர்த்த நட்பு இப்படி ஒரு நிமிஷத்தில் தகர்ந்து தரைமட்டமாகி விட்டதே என்று தேவருக்கு ஏமாற்றம். பழையபடியும் அவரோடு சிநேகிதமாகிவிடுவதற்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்தவராய் அந்த இடத்தில் இருந்தபடியே இருந்துகொண்டிருந்தார்.

இரவு ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டது. திருநெல்வேலியிலிருந்தும் கோவில்பட்டியிலிருந்தும் எத்தனையோ பஸ்கள் வந்து போயின. எத்தனையோ பேர் முருகேசம் பிள்ளையின் கடைக்கு வந்து சாப்பிட்டுப் போனார்கள். அவர்களின் சிலருடன் பிள்ளையவர்கள் ‘ஹாஸ்ய’மாகப் பேசியபோது, தேவர் சிரித்தார்; சிலருடன் கோபமாகப் பேசியபொழுது, தேவர் அடி எடுத்துக் கொடுத்தார்; துயரமாகப் பேசியபொழுது, அழாக்குறையாகத் துக்கப்பட்டார். வயிற்றுக் கொடுமை அவரை இப்படியெல்லாம் ஆட்டி வைத்தது. உட்கார்ந்த இடத்தில் கரையான் புற்று வளர்ந்து அவரை மூடாதது ஒன்றுதான் பாக்கி. அந்த மாதிரி அங்கே கிடையாகக் கிடந்தார்.

பிள்ளையவர்களுக்கு அன்று வியாபாரம் சரிவர நடைபெறவில்லை. பத்துப் பன்னிரண்டு இட்டிலிகளும், சில தோசைகளும் மிஞ்சிவிட்டன. அரைப்பானை காபியும் மிஞ்சியது என்றாலும் பிள்ளையவர்கள் அதற்காகக் கவலைப்படவில்லை. எப்போதும் அவர் அதற்காகக் கவலைப்பட்டது இல்லை. அந்தப் பானை ஒரு வற்றாத ‘சமுத்திரம்’. காலையில் அடுப்பில் வைத்துக் கொஞ்சம் கருப்பட்டியையும் காபித்தூளையும் உள்ளே போட்டுக் கொதிக்க வைத்தால், அப்புறம் அது விற்பனை ஆக ஆகப் பானையில் தண்ணீரை விட்டே நிரப்பிக் காபியாக மாற்றிக்கொண்டிருப்பார், பிள்ளை.

இரவு ஒன்பது மணிக்குக் கடைசி பஸ்ஸும் போய்விட்டது. அதற்குமேல் அங்கே வியாபாரம் நடக்காது என்பதோடு மட்டுமின்றி, கடையைத் திறந்து வைத்துக்கொண்டு அவ்விடத்தில் உட்கார்ந்திருப்பதும் தப்பு. ஏகாந்தமான இடம்; நடுக்காடு. அங்கே எவனும் வந்து அடித்துப் பிடுங்கினாலும் கேள்வியில்லை. அதனால் வழக்கம்போல் பிள்ளையவர்கள் கடையைக் கட்டிக் கொண்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானார். காபிப் பானையை எடுத்து வழக்கம்போலவே கடைக்குப் பின்புறத்தில் கொண்டு போய்க் கொட்டினார். மிஞ்சிய பலகாரங்களை எடுத்து ஒரு கூடைக்குள் போட்டார். “அந்த விடியாமூஞ்சி வந்து சனீசுவரன் மாதிரி கடைவாசலில் உட்கார்ந்திருந்தா யாவாரம் எங்கே ஆகும்?” என்று முணு முணுத்துக் கொண்டார்.

தேவர், அந்தச் சமயத்தில் மற்றொரு முறை கடனுக்கு நாலு இட்டிலிகளைக் கேட்க வேண்டுமென்று துடித்தார். ஆனால், அப்போது அவருக்கு வாய் வரவில்லை. பிள்ளை ‘இல்லை’ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற அதே பயம்தான்.

முருகேசம் பிள்ளை தம் தளவாடங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, வெறும் கடையை இழுத்துப் பூட்டிவிட்டு, நிலா வெளிச்சத்தில் விலக்குப் பாதை வழியாக மேற்கே நோக்கி நடக்கத் தொடங்கினார். தேவரை அவர் தம்மோடு புறப்படும்படி சொல்லவில்லை. அவரிடம் வேறு வார்த்தையும் பேசவில்லை. தேவருக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லிமுடியாது. அன்று பகல் முழுவதும் பிள்ளையவர்களின் இன்பதுன்பங்களில் முழுப் பங்கெடுத்துங்கூடத் தம்மை ஒரு மனிதனாக அவர் நினைக்கவில்லை என்பதற்காகத் தேவர் புண்பட்டு வருந்தினார். ஒரே பசி; எழுந்திருக்க முடியாத சோர்வு; போதாக்குறைக்கு அவமானம் வேறு; என்றாலும் அவர் பிள்ளையவர்களைப் பின்பற்றி நடந்தார். ‘ஒருவார்த்தை, வாய் திறந்து கேட்டிருக்கலாம். கேட்காமல் இருந்துவிட்டோம். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்’ என்று எண்ணியவராக நடுவழியில் பிள்ளையவர்களைப் பார்த்து, “அண்ணாச்சி, ஒரு காரியமில்லே...” என்று ஆரம்பித்தார்.

“என்ன சமாச்சாரம்?” என்று கேட்டார் முருகேசம் பிள்ளை.

“இல்லே, மிஞ்சிப்போன அந்த இட்டிலியை எடுத்துக்குடுங்களேன், நாளைக்கு காலையிலே காசைக் கொண்டாந்து குடுத்திடுறேன்?”

“இதுக்குத்தான் நீர் இவ்வளவு நேரமும் வலைவீசினீரா? சரிதான், சரிதான்! ஐயா, நம்பகிட்டே கடன்கிடன் என்கிற பேச்சே கிடையாது” என்று சொல்லி, சற்று வேகமாக நடந்தார்.

“நீங்க கடன் குடுக்காமலா இருக்கிறீக?”

“குடுப்பேன் ஐயா, குடுப்பேன்; குடுக்கிறவுகளுக்குக் குடுப்பேன்; உமக்குக் குடுத்துப்போட்டு நான் எங்கே போய்க் காசை வசூல் பண்றது?”

“என்ன அப்படிச் சொல்லிப்போட்டீக, அண்ணாச்சி? இந்த வீரப்பத் தேவர் பேரன் அப்படிப்பட்டவன் இல்லே.”

“ஆமாமா! உமக்குக் கடன் குடுத்திட்டு, அப்புறம் வசூல் பண்ண வீரப்பத் தேவருகிட்டப் போக வேண்டியதுதான்.”

“சத்தியமாச் சொல்றேன்; வாங்கினக் கடனைக் குடுக்காம நான் ஏமாத்தமாட்டேன். ஊசிப்போன பலகாரத்தைத்தான் நான் கேக்கிறேன். அதைக்கூடக் குடுக்க மாட்டேங்கறீகளே!” என்று கெஞ்சினார்.

பிள்ளைக்குக் கோபம் வந்துவிட்டது. “ஊசிப்போன பலகாரந்தானே? அதை நீர் எதுக்குக் கேக்குறீரு? வீட்டுக்குப் போய்ச் சுடச்சுடத் தோசை சுட்டுச் சாப்பிடுமே; யார் வேண்டாங்கிறா!”

“கோவிச்சுக்காதீங்க. நான் இப்படியெல்லாம் கேக்கிறவனில்லே, ஏதோ இண்ணைக்குக் கேக்கிறேன். என் பாட்டன் பூட்டன் காலத்திலே கூட இப்படி எங்க குடும்பத்திலே யாரும் கெஞ்சினது கிடையாது. எங்க பாட்டனாரு, ஒரு கோவத்திலே சொந்தத் தங்கச்சி வீட்டிலே கூடச் சாப்பிடமாட்டேன்னு வந்தவரு...”

“ஐயா நீர் பொழைச்ச பொழைப்பும், ஒம்ம பாட்டன் பொழைச்ச பொழைப்பும் எனக்குத் தெரியும். சும்மா ஆளைப் போட்டு பிடுங்காதீங்க.”

பாட்டன்மாரைப் பற்றி அலட்சியமாகப் பேசிய அந்த வார்த்தைகளுக்காகவே தேவரின் எரிமலை வெடிப்பதற்குக் காத்திருந்தது போலும்! “என்னடா சொன்னே?” என்று இடிமுழக்கம்போல் குரலெழுப்பிக்கொண்டு முருகேசம் பிள்ளை மீது புலிப் பாய்ச்சலாகப் பாய்ந்தார், மாடசாமித் தேவர். இந்தத் தாக்குதலால், பிள்ளையின் தலையில் இருந்த தளவாடங்கள் கீழே விழுந்து சிதறின. உடனே இருவரும் கைகலந்துவிட்டார்கள். திட்டிய திட்டுகளும், பேசிய பேச்சுகளும்... அது வேறு பாஷை. பலம் கொண்ட மட்டும் ஒருவரையொருவர் ஓங்கிக் குத்தினார்கள். ஒருவரைக் கொல்லாவிட்டால் மற்றொருவர் உயிரோடு மீள முடியாது என்பதும் உறுதியாகிவிட்டது. அந்தப் பேயறைகளும், பேய்க் கூப்பாடுகளும் கேட்பாரற்ற ஓசைகளாகக் காற்றீல் கலந்துகொண்டிருந்தன. சண்டையை விலக்குவதற்குச் சுற்றுமுற்றும் ஒரு ‘சுடு குஞ்சும்’ கிடையாது. கை ஓயக் குத்தினார்கள். கையைவிட்டால் அப்புறம் பல்தான் ஆயுதம். பல்லையும் பகவான் கொடுத்திருக்கிறாரே!.... அடியோடு கடியும் சேர்ந்தது. உடம்பெல்லாம் ரத்தக் கோரைகள்....

நடுக்காட்டில் சில நிமிஷ நேரம் இந்தப் பயங்கரப் போர் நடந்தது. முடிவில் மாடசாமித் தேவரே சொந்து விழுந்தார். வயிற்றுப் பசியை வைத்துக்கொண்டு அவர்தான் எப்படித் தாக்குப் பிடிப்பார்? வீசி எறிந்த கோணிப் பை மாதிரி பாதையோரத்தில் சுருண்டு விழுந்தார் தேவர். முருகேசம் பிள்ளை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே தம் தளவாடங்களைக் கம்பீரமாகப் பொறுக்கி ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தார். தேவர் கிடந்த இடத்தில் மூச்சுப்பேச்சே  இல்லை. ஒரே மௌனந்தான் நிலவியது.

முருகேசம் பிள்ளை புறப்படவிருந்த சமயத்தில், மாடசாமித் தேவர் சுய உணர்வு இல்லாத நிலையில். “அண்ணாச்சி, இன்னுங் கூட ஒங்க மனசு எரங்கலையா? வயத்துப் பசியிலே புத்தியைப் பறி கொடுத்திட்டேன், அண்ணாச்சி” என்று மன்னிப்பையும் இட்டிலியையும் ஏக காலத்தில் கேட்டார்.

முருகேசம் பிள்ளையின் மனமா இரங்கும்? அதற்குப் பதிலாகப் பன்மடங்கு கோபமே வந்தது. “இந்தா, திண்ணுத் தொலை. இப்படி மானங்கெட்ட தீனி திண்ணு உடம்பை வளக்கலேன்னா என்னவாம்?” என்று சொல்லிக்கொண்டே கூடையின் வாய்க்கட்டை அவிழ்த்து இட்டிலியை எடுத்துக் கொடுக்கப்போனார்.

“இந்தப் பயகிட்ட நான் பிச்சை வாங்கித் திங்கவா?” என்று வீறாப்புடன் சொல்லிக்கொண்டு தமது முழுப் பலத்தையும் பிரயோகித்துப் பிள்ளைமீது மறுமுறையும் மறுமுறையும் பாய்ந்தார், தேவர். பாய்ந்த வேகத்திலேயே அடி வயிற்றில் ஒரு பலமான குத்து வாங்கிக்கொண்டு கீழே விழுந்தார். உடம்பில் மூலைக்கு மூலை பரல் கற்கள் குத்தின. திரும்ப எழுந்து சண்டை போடுவதற்குத் தேவரிடம் சக்தி இல்லை.

அப்போது முருகேசம் பிள்ளை, “உம்மை விருதாவாக் கொலைப் பண்ணிட்டுத் தூக்குமேடையில் ஏறுவானேன்னு பாக்கிறேன். இல்லேன்னா, நடக்கிற கதை வேறே” என்று கடைசி உறுமலாக உறுமிவிட்டுப் போய்விட்டார்.

அடிபட்டுக் கிடந்த மாடசாமித் தேவருக்கு, என்னென்னவோ பயங்களெல்லாம் வந்து உள்ளத்தில் புகுந்து கொண்டன. முருகேசம் பிள்ளை ஊருக்குள் போய் நடந்த சங்கதியைச் சொன்னால்?.... வீரப்பத் தேவரின் பேரன் வழிப்பறியடித்துப் பசி தீர்க்க முயன்றதாகக் கதை கட்டினால்...? பிறகு, போலீஸ்காரர்கள் வந்து தம்மை ஊரார் முன்னிலையில் கைதியாகக் கூட்டிக்கொண்டு போனால்?....

அவர் தம்முடைய பயங்களை ஒருவழியாக உதறுவதற்கு வெகு நேரம் ஆயிற்று.

’இனி என்ன கஷ்ட வந்தாலும் வரட்டும். என்னதான் வந்துவிடும்? தலைக்கு மிஞ்சின ஆக்கினையா? கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமா? இந்த அற்பப் பயல் யாசகமாகக் கொடுத்த இட்டிலியை வாங்கி நாய்த் தீனி தின்னாமல் இருந்தோமே, இந்தக் கடும்பசியிலும் - அது போதும்; மற்றக் கேவலம் எது வந்தாலும் வரட்டும்’ என்று தமக்குத்தாமே ஆறுதல் தேடிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி வீட்டை நோக்கி நடந்து வந்தார் மாடசாமித் தேவர்.

கலைமகள் 1959

நன்றி: காலச்சுவடு

Apr 21, 2011

எஸ். ராமகிருஷ்ணனுக்கு தாகூர் இலக்கிய விருது

sra tagore

 

தாகூர் இலக்கிய விருது

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,

91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,

இதற்கானத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்

2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது,  அவ்வகையில் மிகுந்த பெருமையடைகிறார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மே மாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

•••

அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

Apr 19, 2011

அன்பளிப்பு - கு. அழகிரிசாமி

மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதானே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும் போது மணி இரண்டிருக்கும். எவ்வளவு காலதாமதமாகித் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும். எனவே இரண்டரைக்குத்தான் தூங்க ஆரம்பித்திருப்பேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை  மிகப் பெரியதாக இருந்தது. தூக்கம் கலைந்து கண் விழிப்பதற்குள், வலதுபுஜத்தில் எறும்பு கடிப்பதுபோல இருந்தது.

“தூங்குமூஞ்சி மாமா!....” ku ar.sized

“மணி ஏழரையாகிவிட்டது....”

“எழுந்திருக்கிறீர்களா, பலமாகக் கிள்ளவா”

“முகத்தில் ஜலத்தைக் கொண்டுவந்து தெளித்துவிடுவோம். இன்னும் இரண்டு நிமிஷத்துக்குள்  எழுந்துவிட வேண்டும்”...

இப்படியே பல குரல்கள் பேசிக் கொண்டிருந்தன. பேச்சின் நடுவே இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ‘சிரிடா சிரி’ என்று சிரித்தார்கள். கண் விழித்துவிட்டேன்.

“யார் அது? உம்! இதோ வருகிறேன். தூக்கத்திலே வந்து....” என்று அதட்டிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். ஒரு பையனைத் தவிர, அதாவது சாரங்கராஜனைத் தவிர, மற்ற எல்லாக் குழந்தைகளும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

”கடிகாரத்தைப் பாருங்கோ மாமா! மணி எட்டு ஆகப் போகிறது! இன்னும் தூங்கு மூஞ்சி மாதிரி தூங்கிக் கொண்டு....” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் சித்ரா. “அது இருக்கட்டும், விடிந்ததும் எங்கே இப்படிப் பட்டாள ‘மார்ச்’ பண்ண ஆரம்பித்துவிட்டது?” என்று கேட்டேன்.

“இரவில் வெகு நேரம் கண் விழித்தால் உடம்புக்குக் கெடுதல் என்று எங்கள் பாடப் புத்தகத்தில் போட்டிருக்கிறது, மாமா” என்றான், இதுவரையில் மௌனமாக இருந்த சாரங்கராஜன்.

”நான் படித்த பாடப் புத்தகத்திலும் அப்படித்தான் போட்டிருந்தது! என்ன செய்வது?” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் சிறுவன் சாரங்கனிடம் அவ்விதம் சொல்லாமல், “நாளை முதல் சீக்கிரமாகவே தூங்கி விடுகிறேன். கண் விழிக்கவில்லை” என்றேன். அவனுக்குப் பரம சந்தோஷம்... அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டதற்காக..

மறு நிமிஷத்தில், எல்லோருமாகச் சேர்ந்து ஒருமிக்க, “என்ன புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

“ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை!”

“பொய், பொய், சும்மா சொல்கிறீர்கள்!”

”நிஜமாக, ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை”

“நேற்று புத்தகம் கொண்டு வருவதாகச் சொன்னீர்களே!”

“நேற்றுச் சொன்னேன்...”

“அப்புறம் ஏன் கொண்டு வரவில்லை?”

”புத்தகங்கள் ஒன்றும் வரவில்லை. வந்திருந்தால் தான் கொண்டு வந்திருப்பேனே.”

”பிருந்தா! மாமா பொய் சொல்கிறார்; கொண்டு வந்து எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பார். வாருங்கள், தேடிப் பார்க்கலாம்” என்றாள் சித்ரா.

அவ்வளவுதான், என்னுடைய அறை முழுவதும் திமிலோகப் பட்டது. ஒரே களேபரம். சித்ரா மேஜையைத் திறந்து உள்ளே கிடக்கும் பெரிய காகிதங்களையும், துண்டுக் காகிதங்களையும், கடிதங்களையும் எடுத்து வெளியே எறிந்தாள். துழாவித் துழாவிப் பார்த்தாள். மேஜையில் புத்தகம் எதுவும் இல்லாது போகவே, அதிலிருந்து சாவிக்கொத்தை எடுத்துப் பெட்டியைத் திறந்து தேட ஆரம்பித்துவிட்டாள்.

பிருந்தாவும், சுந்தரராஜனும் பீரோவைத் திறந்து புத்தகங்களை எடுத்துக் கண்டபடி கீழே போட்டார்கள்.

சின்னஞ் சிறு குழந்தையான கீதா கீழே உட்கார்ந்து, இறைந்து கிடக்கும் ஆங்கிலப் புத்தகங்களை அர்த்தமில்லாமல் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

சித்ரா பெட்டியில் உள்ள சலவைத் துணிகளை எடுத்து வெளியே போட்டாள். என்னுடைய பழைய டைரிகள், எனக்கு வந்த பழைய கடிதங்கள், இரண்டொரு புத்தகங்கள் - எல்லாம் ஒரே குப்பையாக வந்து வெளியே விழுந்தன.

பீரோவைச் சோதனை போட்ட பிருந்தாவும் சுந்தரராஜனும் ஜன்னல்களில் அடுக்கியிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டார்கள்.

சாரங்கன் ஒருவன் தான் என்னோடு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே குறும்பு பண்ணமாட்டான்; விளையாட மாட்டான். மற்றக் குழந்தைகள் எல்லோரும் ஒரு விதம்; அவன் ஒருவிதம். என்னிடத்தில் பயபக்தியோடு நடந்து கொள்ளும் சிறுவன் அவன் ஒருவன் தான்.

ஜன்னலில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாக வந்து விழும் போது, ஒரே சந்தடியும் இரைச்சலுமாய்ப் போய் விடவே, சமையற் கட்டிலிருந்து என் தாயார் ஓடிவந்தாள். வந்து பார்த்தால் எல்லாம் ஒரே கந்தர் கோளமாகக் கிடந்தது.

“என்னடா இது, இந்தக் குழந்தைகள் இப்படி அமர்க்களம் பண்ணுகிறார்கள், நீ பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாயே” என்று என்னைப் பார்த்துக் கோபித்துக் கொண்டாள்.

“நீ வீட்டுக்குள் போ அம்மா. இது எங்கள் விவகாரம். நீ எதற்கு வேலையைப் போட்டுவிட்டு இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாய்?” சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

”இவ்வளவு வயதாகியும் இன்னும் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடிக் கொண்டிருப்பது ரொம்ப அழகாகத்தான் இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே அம்மா உள்ளே போய்விட்டாள். பாதி தூரம் போனதும் அங்கே நின்ற வாக்கிலேயே, “ஏண்டா நீ எப்போது ஸ்நானம் பண்ணப் போகிறாய்?” என்று இரைந்து கேட்டாள்.

“இரண்டு நிமிஷத்திலேயே வந்து விடுகிறேன்” என்று அம்மாவுக்குப் பதில் குரல் கொடுத்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பும்போது, ஜன்னலிலிருந்து பத்துப் பதினாறு கனமான புத்தகங்கள் ‘தட தட’ வென்று அருவி மாதிரி கீழே விழுந்தன. ஒரு பழைய தமிழ் அகராதி அட்டை வேறு புத்தகம் வேறாகப் போய் விழுந்தது. குப்புற விழுந்த சில புத்தகங்கள் மீது சில கனமான புத்தகங்கள் அமுக்கவே கீழே அகப்பட்ட புத்தகங்கள் வளைந்து, ஒடிந்து, உருக்குலைந்து விட்டன. புத்தகங்கள் ஒரே மொத்தமாகக் கீழே விழுந்துவிட்டதைக் கண்டு எல்லாக் குழந்தைகளும் பயந்ஹ்டு விட்டார்கள். கீழே விழுந்து கிடக்கும் புத்தகங்களையும் என்னையும் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். கீழே விழுந்தவை மொத்தம் அறுபது புத்தகங்களாவது இருக்கும். குழந்தைகளின் முகத்தில் பயத்தின் சாயல் படர ஆரம்பித்துவிட்டது. நான் என்ன சொல்லப் போகிறேனோ என்று எதிர்பார்த்துக் கொண்டு கண்ணிமைக்காமல் என் முகத்தையே பார்த்தார்கள். மற்றக் குழந்தைகளின் பயத்தைப் பார்த்த ஐந்து வயது நிரம்பாத கீதாவும் பயந்து போய் என்னைப் பார்த்தாள். நான் வேண்டுமென்றே மௌனமாக இருந்தேன். புத்தகங்களையும் குழந்தைகளையும் வெறித்த பார்வையோடு பார்த்தேன். மௌனம் நீடித்தது. ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம், மூன்று நிமிஷம்... குழந்தைகளுக்கு என் மௌனம் சித்திரவதையாக இருந்தது. ஒவ்வொரு குழந்தையும் மூச்சுப் பேச்சிழந்துவிட்டது. சித்ராவின் முகத்தில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. பயம் அறியாத சித்ராவே பயந்து விட்டாள். என்னை ஒட்டி உட்கார்ந்து இருந்த சாரங்கன் நாலு அங்குலம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். என்னைத் தொடவே அவனுக்குப் பயமாகி விட்டது. அவனுடைய சலனத்தால் தூண்டப்பெற்று, “நான் வீட்டுக்குப் போகிறேன்” என்று கிளம்பிவிட்டாள் பிருந்தா.

”பிருந்தா! இங்கே வா” என்று யாதொரு உணர்ச்சிப் பிரதிபலிப்பும் இல்லாமல் சொன்னேன்.

நான் சொன்னபடி அவள் உள்ளே வந்தாள். இதற்கு மேல் குழந்தைகளை பயமுறுத்த நான் விரும்பவில்லை.

எழுந்து நின்றேன். என் அறையின் மற்றொரு ஜன்னல் பக்கம் சென்றேன். அங்குள்ள புத்தகங்களில் கை வைத்தேன். என் ஒவ்வொரு அசைவையும் குழந்தைகளின் கண்கள் சர்வ ஜாக்கிரதையுடன் கவனித்துக் கொண்டிருந்தன. புத்தகங்களின் நடுவில் பெரிய புத்தகங்களுக்குக் கீழே இருந்த பதின்மூன்று கதைப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு திரும்பினேன். கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டு, “தோற்றுப் போய்விட்டீர்களா? நீங்கள் தேடு தேடு என்று தேடினீர்களே, புத்தகங்கள் உங்களுக்குத் தட்டுப்பட்டதா? வாருங்கள், வாருங்கள்” என்று ஒரே உற்சாகத்துடன் சொன்னேன். குழந்தைகளுக்கு உயிர் வந்துவிட்டது. என்னைப் பார்த்து ஓடோடியும் வந்தன. சாரங்கன் என் பக்கம் நெருங்கி உட்கார்ந்தான். என் இடது கையில் சாய்ந்தும் உட்கார்ந்து கொண்டான். சித்ராவுக்கு ஏனோ என் மேல் கோபம் வந்துவிட்டது. வெகுநேரம் மௌனமாக இருந்து அவர்களைப் பயத்தில் ஆழ்த்தி வைத்ததை எண்ணிக் கோபப் பட்டாளோ? அல்லது தான் பயந்ததற்காக வெட்கப்பட்டு, தான் பயப்படவில்லை என்பதாகக் காட்டிக்கொள்ளுவதற்கும், அதன் மூலம் வெட்கத்தை மறைப்பதற்குமாகக் கோபப்பட்டாளோ? ‘விறு விறு’ என்று கட்டிலில் ஏறினாள். எனக்குப் பின்புறமாக வந்து, “பொய்தானே சொன்னீர்கள், புத்தகங்கள் கொண்டு வரவில்லை என்று? உம், இனிமேல் பொய் சொல்லாதீர்கள், சொல்லவில்லை என்று சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு, “சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று எச்சரித்துக் கொண்டே முதுகில் தன் பலங்கொண்ட மட்டும் அடித்தாள்.

“ஐயோ! ஐயோ! பொய் சொல்லவில்லை. இனிமேல் பொய் சொல்லவில்லை!” என்று வேதனையோடு சொல்கிறவன் மாதிரி சொன்னேன். குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள்.

சுந்தரராஜன் வந்து, “சாரங்கா, அந்தப் பக்கம் நகர்ந்துக்கடா” என்று சொல்லி அவனைத் தள்ளிவிட்டு எனக்கும் அவனுக்கும் நடுவில் வந்து உட்கார்ந்தான். என் கையிலுள்ள அத்தனை புத்தகங்களையும் ‘வெடுக்’கென்று பிடுங்கிக் கொண்டு ‘விறுவிறு’ என்று ஒவ்வொன்றின் பெயரையும் உரக்க வாசித்தான். கடைசிப் புத்தகத்தின் பெயரை வாசித்ததும் ‘பளிச்’ சென்று எழுந்து “இத்தனையும் எனக்குத்தான்” என்று சொல்லிக் கொண்டே வெளியே கிளம்பிவிட்டான்.

குழந்தைகள் உடனே அழுவதற்கு ஆயத்தமாகி விட்டன. அப்பொழுது மௌனமாக இருந்தவன் சாரங்கன்தான்.

“சுந்தர்! இதோ பார். இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஓடினால் அப்புறம் உனக்குப் புத்தகங்களே கொண்டு வர மாட்டேன்” என்றேன்.

அவன் ‘கடகட’வென்று சிரித்துக் கொண்டே, “பாவம். மாமா பயந்து விட்டார்!” என்று கூறிக் கொண்டு உள்ளே வந்தான்.

புத்தகங்களை என் கையில் வாங்கி ஏழு புத்தகங்களில், “என் பிரியமுள்ள சித்ராவுக்கு அன்பளிப்பு” என்று எழுதி என் கையெழுத்தையும் போட்டுச் சித்ராவிடம் கொடுத்தேன். மீதியுள்ள ஆறு புத்தகங்களிலும், ”என் பிரியமுள்ள சுந்தரராஜனுக்கு அன்பளிப்பு” என்று எழுதி அவ்விதமாகவே கையெழுத்திட்டுச் சுந்தரராஜனிடம் கொடுத்தேன்.

பிருந்தாவும் தேவகியும் “எனக்கு?” என்று ஏககாலத்தில் கேட்டனர்.

“சித்ராவிடமும் சுந்தரிடமும் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள். இதுவரையிலும் நீங்கள் மற்றப் புத்தகங்களை எப்படி வாங்கிப் படித்தீர்களோ, அப்படியே இப்பொழுதும் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

அந்த இரண்டு பெண்களும் நான் சொன்னதை ஆட்சேபமின்றி ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

“மத்தியானத்துக்குள் இந்த ஏழு புத்தகங்களையும் படித்து விடுவேன். படித்து முடித்த பிறகு வருகிறேன், மாமா” என்று கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டாள் சித்ரா. அவளைத் தொடர்ந்து, சாரங்கனைத் தவிர எல்லோரும் எழுந்து தத்தம் வீடுகளுக்குக் கிளம்பினார்கள். சாரங்கன் இரண்டொரு தடவை என் முகத்தையே ஏறிட்டுப் பார்த்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிவிக்கும் சலனமும் முகத்தில் இல்லை. அப்பொழுது அவன் அவ்வாறு பார்த்ததற்கு ஒரு முக்கியத்துவமோ, ஒரு அர்த்தமோ இருந்ததாக நான் கருதவும் இல்லை. நான் எழுந்து குப்பையாகக் கிடக்கும் புத்தகங்களையும் துணிமணிகளையும் எடுத்து அவையவை இருக்கவேண்டிய இடத்தில் வைக்க ஆரம்பித்தேன். சுருண்டு நசுங்கிக் கிடந்த புத்தகங்களை நிமிர்த்துச் சரி பண்ணினேன். அவற்றின்மீது பெரிய புத்தகங்களைப் பாரமாகத் தூக்கி வைத்தேன். இந்த வேலைகளைச் செய்யும்போது சாரங்கன் நான் எதிர்பாராமலே எனக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.

“எந்த வகுப்பு பாஸ் பண்ணினால் இந்தப் புத்தகத்தைக் கஷ்டமில்லாமல் படிக்கலாம்?” என்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான் சாரங்கன். அவன் குரலில், மூச்சைத் திணற வைக்கும் சங்கோஜம் நிறைந்திருந்தது. அது மட்டுமின்ரி, பயந்தவனைப் போல, முயற்சியில் தோல்வியடைந்து புண்பட்டவனைப் போல, அவன் பேசினான்.

“சாரங்கா! நீ கெட்டிக்காரப் பையன், உன் வயதில் நான் இவ்வளவு கெட்டிக்காரனாக இருந்ததில்லை. அதனால் நீ எஸ். எஸ். எல். ஸி  வகுப்புக்கு வந்ததும் இந்தப் புத்தகத்தைச் சிரமமில்லாமல் படித்துப் புரிந்து கொள்ளலாம் என்று பரிவோடு சொன்னேன்.

அவன் கையில் வைத்துக் கொண்டிருந்தது வால்ட் விட்மனின் கவித் தொகுதி.

"அப்படியானால் இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது” என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பிறகு கையிலுள்ள புத்தகத்தை ஜன்னலில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.

என் தாயார் கோபமாக என்னென்னவோ சொல்லிக் கொண்டு அங்கே வந்தாள். “ஏண்டா, நான் எத்தனை தட்வை உனக்குச் சொல்லுகிறது? வெந்நீர் ஆறி அலர்ந்து ஜில்லிட்டுப் போய்விட்டது” என்று சொல்லிவிட்டு “இந்தப் பொல்லாத குட்டிகளை இப்படி அமர்க்களம் பண்ண விடலாமா? என்ன பிரியமோ இது? ஊரார் குழந்தைகளுக்கு இத்தனை சலுகை காட்டுகிறவர்களை நான் பார்த்ததே இல்லை.... நீ ஸ்நானம் பண்ணப் போடா, நான் எடுத்து வைக்கிறேன்” என்று வந்தாள் அம்மா.

“அம்மா! உனக்குப் புத்தகங்களை இனம் பிரித்து அடுக்கத் தெரியாது. நீ போ, நான் ஒரு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன்.”

”இன்றைக்கு அடுக்கி வைக்கவேண்டியது; நாளைக்கு அவர்கள் வந்து குப்பையாக்க வேண்டியது; அப்புறம் பழையபடியும் அடுக்கி வைக்க வேண்டியது. உனக்கு வேறு வேலை என்ன?” என்று சொல்லிவிட்டு அவள் சமையற் கூடத்துக்குச் சென்றுவிட்டாள்.

நானும் வெகு சீக்கிரத்திலேயே ஸ்நானம் பண்ணக் கிளம்பிவிட்டேன். அப்பொழுது என்னோடு நடுக்கூடம் வரையில் நடந்து வந்தான் சாரங்கன். அப்புறம் பளிச்சென்று மறு பக்கமாகத் திரும்பி, “போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

“அம்மா! குழந்தைகளை இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறாயே! அதுகள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்!” என்று சொலிவிட்டு ஸ்நான அறைக்குள் சென்றேன். நான் சொன்னது புகை மூட்டிய அடுப்பங் கரையில் திக்குமுக்காடும் அம்மாவுக்குக் கேட்டதோ என்னவோ?

***

ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷந்தான். மாம்பலத்துக்கு வீடு மாற்றிவந்ததை என் பாக்கியம் என்றே நான் கருதினேன். இங்கே வந்திராவிட்டால் இந்தப் பொக்கிஷங்களை நான் சந்தித்திருக்க முடியுமா? இங்கு வந்து நான்கு வருஷங்களாகின்றன. வீட்டில் நானும் என் தாயாருந்தான். ஒரு பெரிய வீட்டில் ஒரு பகுதியிலே தான் எங்கள் குடித்தனம். வந்து ஆறு மாதங்களாகும் வரையில் இந்தக் குழந்தைகளின் நட்பு எனக்கு ஏற்படவே இல்லை. ஒரு நாள் திடீரென்று இரண்டு குழந்தைகள் சுந்தரராஜனும் சித்ராவும் வந்தார்கள். அன்று வநதது போலவே தினமும் வந்தார்கள். சில நாட்களுக்குள் சம்பிரதாய மரியாதைகள், நாசூக்குகள் எல்லாம் மறைந்தன. உண்மையான மனப்பாசம் கொள்ளத் தொடங்கினோம். ஒன்றாக உட்கார்ந்து கதைகள் படிப்பது, பத்திரிகைகள் வாசிப்பது, கதைகள் சொல்லுவது, செஸ் விளையாடுவது - இப்படிப் பொழுது போக்கினோம். நான் வேலை செய்யும் பத்திரிகாலயத்துக்கு மதிப்புரைக்கு வரும் புத்தகங்கள் சிலவற்றாஇ எடுத்து, விமர்சனம் எழுதும்படி தலைமையாசிரியர் என்னிடம் கொடுப்பார். அப்படி மதிப்புரைக்காக வந்த புத்தகங்கள் என்னிடம் ஏராளமாக இருந்தன. குழந்தைகளுக்கு அவை நல் விருந்தாக இருந்தன. ஒரே ஆவலோடு ஒரு சில தினங்களுக்குள் அத்தனை புத்தகங்களையும் சுந்தரராஜனும் சித்ராவும் படித்துத் தீர்த்துவிட்டார்கள். அவர்களுடைய புத்தகத் தேவையை என் மதிப்புரைப் புத்தகங்களைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை. இதனால் அவ்வப்போது சில குழந்தைப் புத்தகங்களை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். அதனால், அவர்கள் தினந்தோறும் நான் காரியாலயம் போகும்போது, “இன்று ஞாபகமாகப் புத்தகங்கள் கொண்டு வரவேண்டும்” என்று சொல்லியனுப்புவார்கள். சாயங்காலத்தில் வெறுங்கையோடு வீடு திரும்பினால் ஒரே கலாட்டாதான்.

சுந்தரராஜனும் சித்ராவும் நான் குடியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக் குழந்தைகள்; பணக்காரக் குழந்தைகள். குழந்தை என்று சொன்னாலும் சுந்தரராஜனுக்குப் பதின்மூன்று வயது; சித்ராவுக்கு ஒன்பது வயது. இந்த இருவரின் புத்திசாலித்தனம், களை நிறைந்த தோற்றம்,  எல்லாவற்றையும் விடச் சீரிய மனப்பாங்கு - எல்லாம் சேர்ந்து என்னை வசீகரித்தன; என்னை ஆட்கொண்டு விட்டன. அவர்கள் மேல் நான் வைத்திருந்த அன்பு இம்மட்டு அம்மட்டு என்றில்லை. தினந்தோறும் அவர்களுக்குப் புதியதொரு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்றெல்லாம் என் மனம் துடித்துக் கொண்டிருக்கும். இவர்களுடைய நட்பு தொடங்கி சில வாரங்கள் ஆவதற்குள்ளாக மற்றக் குழந்தைகளின் பரிச்சயமும் எனக்கு ஏற்பட்டது. பிருந்தா, தேவகி, கீதா, சாரங்கராஜன் ஆகியவர்களும் வர ஆரம்பித்தார்கள். பிருந்தாவும் தேவகியும் சித்ராவுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சமவயதுக் குழந்தைகள். கீதா, தேவகியின் தங்கை. சாரங்கராஜன் சுந்தரராஜனுடைய பள்ளித் தோழன். எல்லோருடைய வீடுகளும் ஒன்றையடுத்து ஒன்றாக இருந்தன. இவர்களில் சாரங்கனுடைய வீட்டார் தான் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள். மற்றக் குழந்தைகள் சொந்த வீடு உள்ள பணக்காரக் குழந்தைகள்.

எல்லோரிடத்திலும் நான் ஒன்று போலவே அன்பாக இருந்தேன். சுந்தரராஜனும் சித்ராவும் எனக்கு முதலில் பரிச்சயமானவர்கள் என்பதற்காகவோ என்னவோ அவர்களிடத்தில் எனக்கு ஒரு அலாதிப் பிரியம் இருந்தது. ஆனால் வெளிப்படையான பேச்சிலும் நடவடிக்கைகளிலும் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் நான் வித்தியாசம் காட்டி நடந்து கொள்ளவில்லை. உள்ளன்பிலும் வேற்றுமை காட்டவில்லை. முன்னால் சொன்னதுபோல ஏதோ ஒரு அலாதிப் பிரியம் சித்ராவிடமும் அவளது அண்ணனிடமும் ஏற்பட்டிருந்தது. ஆனால் குழந்தைகளோ என்னை ஒரே மாதிரி நேசித்தன. அவர்களுடைய பிரியத்தில் வேற்றுமை இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனக்காகவே இந்த உலகத்தில் பிறந்த நண்பன் என்று என்னை நினைத்தது. ஒவ்வொன்றும் ஒரு மகத்தான நம்பிக்கையாக, ஒரு பெரிய ஆறுதலாக, ஒரு நல்ல வழிகாட்டியாக என்னைக் கருதியது. எந்த விதத்திலும் தனக்குச் சமதையான ஜீவன் என்று என்னைக் கருதியது. குழந்தைகள் என்னைப் பெரிய மனித பீடத்தில் தூக்கி வைக்காமல், நட்பு முறையில் கைகோத்துக் கொள்ள வந்தார்கள். இவர்கள் என்னோடு விளையாடினார்கள்; என்னோடு சண்டை போட்டார்கள்; என்னை அடித்தார்கள்; என்னைக் கண்டித்தார்கள்; என்னை மன்னித்தார்கள்; என்னை நேசித்தார்கள்.

உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம். மாம்பலத்தில் எனக்கு இவர்கள்தான் நண்பர்கள். குழந்தைகளுடன் இம்மாதிரிப் பழகுவதும் இம்மாதிரி விளையாடுவதும் அம்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஐம்பது வயதுத் தாயாருக்குத் தன் மகனை மனைவி மக்களுடன் குடித்தனம் செய்யும் தகப்பனாகக் காணத்தான் பிடிக்குமே தவிர, குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக் கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பதைக் காணப் பிடிக்குமா?

பதின்மூன்று புத்தகங்களை எடுத்துக் கொடுத்த அந்தத் தினம், அந்த ஞாயிற்றுக்கிழமை கழிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். பிருந்தா ஜுரத்தோடு படுத்துவிட்டாள். அவளுடைய பெற்றோர்களை எனக்கு நேரில் தெரியாது. அதனால் அவளைப் போய்ப்பார்த்துவிட்டு வர எனக்கு சங்கோஜமாக இருந்தது. ஆனால் மற்றக் குழந்தைகளிடத்தில், “பிருந்தாவின் உடம்பு எப்படி இருக்கிறது?” என்று தினமும் விசாரித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் அதற்கு எப்படிப் பதில் சொல்லும்! ஜுரம் அதிகமாக இருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்று அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. “பிருந்தா எப்போது பார்த்தாலும் படுத்துக் கொண்டே இருக்கிறாள்” என்று மட்டும் தெரிவித்தார்கள்.

ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும். வீட்டு முற்றத்தில் ஈஸிச்சேரைப் போட்டுக் காற்றாட நிலா வெளிச்சத்தில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்த பிருந்தாவின் வீட்டு வேலைக்காரனை அழைத்து, “பிருந்தாவின் உடம்பு எப்படி இருக்கிறது? ஜுரம் குறைந்திருக்கிறதா” என்று கேட்டேன்.

”இல்லை ஸார், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. எதுவும் சாப்பிடுவதில்லை. இந்த நான்கு நாட்களில் குழந்தை துரும்பாக மெலிந்து போய்விட்டது. தூக்கத்தில் உங்களை நினைத்துத்தான் என்னென்னவோ புலம்பிக் கொண்டிருக்கிறாள்” என்றான் வேலைக்காரன்.

”என்னை நினைத்துப் புலம்புகிறாளா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“ஆமாம் ஸார். நேற்று ராத்திரிகூட ‘மாமா புத்தகம்’, ‘மாமா புத்தகம்’ என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள்” என்றான்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்த குழந்தையைப் போய்ப் பார்க்காமல் இருந்ததற்காக மிகவும் வருத்தப்பட்டேன். என் சங்கோஜத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மறுநாள் காலையில் அவசியம் போய்ப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டேன். “போய்வா” என்று வேலைக்காரனை அனுப்பிவிட்டு, தனியாகப் படுத்து என்னென்னவோ யோசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது. அவ்வளவுதான், உடனே எழுந்து வீட்டுக்குள்போய் சட்டையை மாட்டிக் கொண்டு ‘விறு விறு’ என்று பிருந்தாவின் வீட்டுக்குச் சென்றேன். அவளுடைய பெற்றோர்கள் என்னை உள்ளே வரும்படி சொன்னார்கள். பிருந்தா படுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். அவள் கண்களை வெறுமனே மூடிக் கொண்டிருந்தாள்.

”பிருந்தா!” என்றேன்.

கண் விழித்து என்னைப் பார்த்தாள். அப்போது அவளுடைய முகத்தில் யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. அப்புறம் ஒருமுறை கண்களை மூடித் திறந்து என்னை நன்றாக உற்றுப் பார்த்தாள். ஒரு நிமிஷம் இப்படியே பார்த்துவிட்டு, திடீரென்று ‘மாமா!’ என்று உரக்கக் கூவினாள்; அப்படியே எழுந்து உட்கார்ந்து விட்டாள்.

“பிருந்தா! படுத்துக்கொள் அம்மா” என்று சொன்னேன்.

அவள் கேட்கவில்லை. எழுந்து என் பக்கம் வந்தாள். என்னைக் கட்டிக் கொண்டு, என் தோள் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவளுடைய உ டம்பு அனலாகச் சுட்டது. அவளைத் தட்டிக்கொடுத்து, படுக்கையில் கொண்டு போய்ப் படுக்க வைத்தேன்.

“எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” என்றாள் பிருந்தாவின் தாயார்.

என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. வாய் அடைத்துவிட்டது. மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்து விட்டு, வீட்டுக்கு வருவதற்காகப் புறப்பட்டு விட்டேன்.

”போகவேண்டாம் இங்கேயே இருங்கள் மாமா!” என்று பிடிவாதம் பிடித்தாள், பிருந்தா. அப்புறம் அவளைப் பலவிதமாகச் சமாதானப்படுத்தி, “நாளைக் காலையில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அவ்விதமே மறுநாள் காலையில் சென்றேன். வெகு நேரம் அங்கேயே இருந்தேன். அவள் ஜுரத்தினால் கஷ்டப்படுகிறவள் மாதிரியே இல்லை. என்னோரு பேசிக்கொண்டு தான் இருந்தாள். ஆபிசுக்கு நேரமாகி விட்டதென்று அவளிடம் கூறிவிட்டு வெளியே எழுந்து வந்தேன். தெருவோடு வந்து கொண்டிருக்கும்போது சாரங்கன் தன் வீட்டு ஜன்னல் வழியாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த வாக்கிலேயே, “மாமா” என்று கூபிட்டான். நான் திரும்பிப் பார்ப்பதற்குள்ளாகத் தெருவுக்கு ஓடி வந்து விட்டான்.

”எங்கள் வீட்டுக்கும் வாருங்கள்” என்று கையைப் பிடித்து இழுத்தான்.

“உங்கள் வீட்டிற்கு எதற்கு?”

”பிருந்தா வீட்டுக்கு மட்டும்...”

“பிருந்தாவுக்கு ஜுரம். அதனால் போய்ப் பார்த்து விட்டு வந்தேன்.”

“ஊஹூம், எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும். ஆமாம்.”

“சாரங்கா! இன்னொரு நாளைக்கு வருகிறேன். கையைவிடு. எனக்கு ஆபிசுக்கு நேரமாகி விட்டது.”

நான் சொன்னபடியே கையை விட்டுவிட்டான். தன் இடது கையில் வைத்திருந்த இரண்டு நெல்லிக் காய்களில் ஒன்றை எடுத்து “இந்தாருங்கள்” என்று எனக்குக் கொடுத்தான். நான் சிரித்து விட்டேன். “வேண்டாம், நீயே வைத்துக்கொள்” என்றேன். அவனோ கட்டாயப்படுத்தி என்னிடம் கொடுத்தான். நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை. அந்த நெல்லிக்காயை வாங்கிக் கொள்ளாவிட்டால் அவன் என் சிநேகிதத்தையே உதறித் தள்ளி விடுவான் போல் இருந்தது. அதனால் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டேன். அவனுக்கு அப்பொழுது சொல்ல முடியாத ஆனந்தம்.

நான் புறப்படும்போது, “எப்போது எங்கள் வீட்டுக்கு வருவீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே என்னைத் தொடர்ந்து நடந்து வந்தான்.

“அடுத்த ஞாயிற்றுக்கிழமை” என்று பேச்சுக்குச் சொல்லி வைத்தேன்.

“கட்டாயம் வர வேண்டும்”

“சரி”

அவன் வீட்டுக்குப் போய்விட்டான்.

அதற்குப் பிறகு நான் பிருந்தாவின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ”ஞாயிற்றுக்கிழமை வர வேண்டும்; கட்டாயம் வர வேண்டும்” என்று எனக்கு ஞாபகமூட்டிக் கொண்டே இருந்தான்.

பிருந்தாவுக்கு மூன்று நாட்களில் ஜுரம் குணமாகி விட்டது ஓர் ஆச்சரியமாகவே இருந்தது. நான் தினமும் அவள் வீட்டுக்குப் போய் வந்தது தான் அவளுக்கு மருந்தாக இருந்தது என்று அவளுடைய தகப்பனார் என்னிடம் கூறினார். நான் போய் வந்ததன் காரணமாக ஒரு குழந்தையின் நோய் குணமாகிவிட்டது என்று அவர் சொன்னதைக் கேட்க எனக்கு எப்படியோ இருந்தது.  “எப்படியாவது உடம்பு குணமாயிற்றே, அது போதும்” என்றேன். அப்புறம், அவர் சொன்னது ஒரு வேளை உண்மையாக இருக்கலாமோ என்றுகூட எனக்குத் தோன்றியது.

சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு விடுமுறை. பிருந்தா உட்பட எல்லாக் குழந்தைகளும் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். புது வருஷம் பிறந்து இரண்டு மூன்று தினங்களே ஆகியிருந்தன. நான் வாக்களித்தபடி சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் இரண்டு டைரிகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். அவற்றில் வழக்கம் போல “அன்பளிப்பு” என்று எழுதி அந்த இருவர் கையிலும் கொடுத்தேன். மற்றக் குழந்தைகள் தமக்கு டைரி வேண்டுமென்று என்னிடம் கேட்கவில்லை. நான் எத்தனை புத்தகங்கள் கொண்டு வந்தாலும், என்ன பரிசு கொடுத்தாலும் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் தான் கொடுப்பேன் என்று ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவர்கள் இருவர்தான் இப்படிப்பட்ட அன்பளிப்புக்குத் தகுதியானவர்கள், அவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம் என்று எல்லாக் குழந்தைகளும் ஒப்புக்கொண்ட பாவனையில் பேசாமல் இருந்தன. முதல் நட்பு என்ற காரணத்தினால்தானோ என்னவோ, ஒரு அலாதிப் பிரியத்துடன் அவர்களுக்கு மட்டும் நான் புத்தகங்களைக் கொடுப்பது வழக்கமாகி விட்டது. இந்த நெடுநாளைய வழக்கம் மற்றக் குழந்தைகளுக்குப் பழகியும் போய்விட்டது.

டைரிகளை வாங்கிக்கொண்டு அந்த இருவரும் சாப்பிடப் போய் விட்டார்கள். அவர்கள் போனபிறகு மற்றவர்களும் புறப்பட்டார்கள். ஆனால் அன்று சாரங்கன் மட்டும் போகவில்லை. எல்லோரும் போன பிறகும் கூட அவன் உட்கார்ந்து கொண்டுதான் இருந்தான். என்னிடத்தில் அந்தரங்கமாக, “மாமா! நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வருவீர்களா? நாளைக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை” என்றான்.

”சரி சாரங்கா, எத்தனை தடவை சொல்லுகிறது? ஒரு தடவை சொன்னால் ஞாபகமிருக்காதா?” என்றேன்.

அவன் எழுந்து, வால்ட் விட்மனின் கவித் தொகுதியைக் கையில் எடுத்தான்.

“இந்தப் புத்தகத்தை எனக்குத் தருவீர்களா?” என்று கெஞ்சுதலாகக் கேட்டான். எனக்கு அது வேடிக்கையாக இருந்தது. சிரித்துக் கொண்டே, “இந்தப் புத்தகம் உனக்கு எதற்கு? அது உனக்கு இப்பொழுது புரியாது. நான் அன்றைக்கே சொல்லவில்லையா? நீ எஸ்.எஸ்.எல்.ஸி வகுப்புக்கு வந்ததும் கேள்; தருகிறேன்” என்றேன்.

நான் சொன்னதை அவன் கேட்கவில்லை. பதின்மூன்று வயதுப் பையன் ஐந்து வயதுக் குழந்தையைப் போல முரண்டு பண்ணிக்கொண்டு, அந்தப் புத்தகத்தை அவசியம் கொடுத்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.

”சாரங்கா! உனக்குப் புரியாது. சொன்னால் கேள்” என்று சொன்னேன். அப்புறம் அவன் கையிலிருந்து புத்தகத்தை வாங்கி ஜன்னலில் கொண்டு போய் வைத்தேன்.

சாரங்கனின் முகம் ஏமாற்றத்தினால் வெளிறிப்போய் விட்டது. வறண்ட பார்வையோடு என்னைப் பார்த்தான். ஒன்றுமே சொல்லாமல் எழுந்து வாசல் பக்கம் போனான். சரி, வீட்டுக்குப் போகிறான் என்று நினைத்து, நான் என் வேலையைக் கவனிக்கலானேன். இரண்டு நிமிஷ நேரத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு அழுகைக் குரல் கேட்டது. அழுதது சாரங்கன்தான். “சாரங்கா! ஏன் அழுகிறாய்? சேச்சே, அழாதே ராஜா” என்று சொல்லிக்கொண்டே அவன் பக்கத்தில் எழுந்து சென்றேன். ஆனால், நான் போகும் வரையில் அவன் அங்கே நிற்கவில்லை, அழுகையை நிறுத்தினான். என்னைத் திரும்பிப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அவனுடைய வயிறு அசாதாரணமாக குழிந்து புடைத்தது. அப்பொழுது முகம் ரத்தம் போலச் சிவந்துவிட்டது. இதெல்லாம் எதற்கென்றே எனக்குப் புரியவில்லை. அவன் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தேன். என்னைப் பார்க்கவே அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் போய் கையை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

“சாரங்கா!.... சாரங்கா!”

அவன் ஓடியே விட்டான். அன்று அவன் நடந்து கொண்ட விதம் எனக்கு ஒரு புதிராக இருந்தது. எப்பொழுதும் அவன் பிடிவாதம் பண்ணமாட்டான். என்னிடத்தில் பேசுவதற்கே கூசுவான். அப்படிப்பட்ட பையன் எதற்காகப் பிடிவாதம் பிடித்தான்? எதற்காக அப்படி அழுதான்? எதற்காகத்தான் அழுதானோ? அவனைப் பின் தொடர்ந்து சென்று, அழுத காரணத்தைக் கேட்காவிட்டால் என் நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. ஆனால், அவன் வீட்டுக்குப் போகவும் என்னால் இயலவில்லை. அவனுடைய பெற்றோர்கள், பிற பெற்றோர்களைப் போலவே எனக்குப் பரிச்சயமில்லாதவர்கள்.

பாவம்! ஏங்கி ஏங்கி அழுதான், அவமானப்பட்டவன் போல் அழுதான். பிற்பகலில் குழந்தைகள் என் அறைக்கு வந்தால், அவர்களை அனுப்பி அவனை அழைத்துவர வேண்டுமென்று தீர்மானித்தேன். மூன்று மணிக்கெல்லாம் முதல் ஆளாக சுந்தரராஜன் வந்து சேர்ந்தான். அவனைச் சாரங்கனிடம் அனுப்பி வைத்தேன். சாரங்கன் தூங்கிக் கொண்டிருப்பதாக சுந்தரராஜன் என்னிடம் வந்து தெரிவித்தான். அதற்குப் பிறகு அவனை வரவழைக்கும் முயற்சியை நிறுத்தினேன். மறுநாள் காலையில் அவன் வந்தால்  பார்க்கிறது. இல்லையென்றால் நானே அவன் வீட்டுக்குப் போவது இதே தீர்மானத்துடன் மற்றக் குழந்தைகளுடன் அன்றைய மாலைப் பொழுதைப் போக்கினேன்.

இரவில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்ட பிறகு தான் என் மனம் மிகமிகக் கஷ்டப்பட்டது. பக்கத்தில் யாருமில்லாத அந்தத் தனிமையில் மனத்துயரம் பெரிதாகிக் கொண்டே இருந்தது. உள்ளத்தில் எத்தனையோ துயரம் படிந்த சிந்தனைகள்; ‘ஏன் அழுதான்? நான் அவனை ஒன்றும் சொல்லவில்லையே! எல்லாக் குழந்தைகளையும் போலவே அவனையும் என் கண்ணுக்குக் கண்ணாக வைத்துக் கொண்டிருக்கிறேன். வால்ட் விட்மன் கவித் தொகுதியைக் கேட்டான், அது அவனுக்குப் புரியாது என்று வாங்கி வைத்துவிட்டேன், இதற்காகவா அவன் அழுதிருப்பான்? அவன் விபரம் தெரிந்த பையன். எப்போதும் நான் சொல்வதை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்பவன். அப்படிப்பட்ட பையன் புத்தகத்தை நான் திருப்பி வாங்கிக்கொண்டதற்காக இப்படி அழுதிருக்க முடியாது. நான் திரும்பி வாங்கிக் கொண்ட காரியம், விம்மிவிம்மி அழத்தக்க மன வேதனையைத் தர நியாயமில்லை! சாரங்கா! எதற்காக அழுதாய்? எதற்காக அழுதாயடா”

ஞாயிற்றுக் கிழமை.

நேற்று பிற்பகலில் அவன் வராமல் இருந்து விட்டதால் இன்றும் வரமாட்டான் என்றே எண்ணியிருந்தேன். சப்தரிஷி மண்டலம் போன்ற எங்கள் கூட்டத்தில் இந்த ஒரு நக்ஷத்திரம் மறைந்து நிற்பதை மற்றக் குழந்தைகள் பொருட்படுத்தவில்லை. அத்துடன் அவர்கள் கவலைப்படுவதற்கும் இங்கே என்ன இருக்கிறது? ஒருநாள் பிற்பகலில் அவன் வராமல் இருந்தது அவர்களுக்கு ஒரு பிரிவாகத் தோன்ற நியாயமில்லை. எனக்கும் மற்றச் சமயங்களில் இது கவனத்தைக் கவரத்தக்க விஷயமாக இல்லாமல், சகஜமான காரியமாக இருந்திருக்கும். ஆனால், அவன் நேற்று எந்த நிலையில் என்னைப் பிரிந்து சென்றான். எந்த நிலையில் என்னை விட்டுவிட்டுச் சென்றான் என்ற விபரங்கள் எனக்கல்லவா தெரியும்?

காலை பத்து மணி இருக்கும். ஞாயிற்றுக்கிழமையானதால் சாப்பாட்டைப் பகல் ஒரு மணிக்கு ஒத்திப் போட்டுவிட்டு, காலையில் பலகாரம் பண்ணி நானும் என் தாயாரும் சாப்பிட்டோம். அப்புறம் நான் என் அறைக்கு வந்து ஏதாவது படிக்கலாம் என்று உட்கார்ந்தேன். மனம் என்னவோ அந்த வால்ட் விட்மனின் கவித் தொகுதியைத் தான் படிக்க விரும்பியது. அதைக் கையில் எடுத்து விரித்ததும் என் கண்களுக்குக் கவிதா வாசகங்கள் தென்படவில்லை; சாரங்கன் தான் காட்சியளித்தான்; அவனுடைய கண்ணீரும் ஏக்கமும்தான் காட்சியளித்தன. இது சோதனையாக இருக்கிறதே! அவனாவது இங்கு வரக்கூடாதா? அல்லது வேறு குழந்தைகளாவது வரக் கூடாதா என்று மறுகிக்கொண்டு கிடந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு பிருந்தா வந்தாள். பாக்கிய தேவதை என ஒரு தெய்வ மகள் உண்மையிலேயே இருந்து, ஒரு தரித்திரனின் வீட்டில் அடியெடுத்து வைத்தது போல இருந்தது பிருந்தாவின் வரவு.

”வா பிருந்தா! பிருந்தா என்ற பெயரை மாற்றி ‘பிரியதர்சினி’ என்று பெயர் வைத்தால் உனக்குப் பொருத்தமாக இருக்கும் பிருந்தா!” என்றேன்.

என் பரவசம் அவள் உள்ளத்தைத் தொடவில்லை. என் சொற்கள் அவள் செவிக்கு எட்டவும் இல்லை.

”சுந்தரராஜனும் சித்ராவும் சினிமாவுக்குப் போய் விட்டார்கள்” என்று காரண காரியமில்லாமல் சொன்னாள் பிருந்தா.

“சாரங்கன்?” என்று ஆவலோடு கேட்டேன்.

”நான் பார்க்கவில்லை” என்று சொல்லிவிட்டாள்.

மேற்கொண்டு நான் சாரங்கனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கும்போது, பிருந்தாவின் வீட்டு வேலைக்காரன் வந்து, “அம்மா கூப்பிடுகிறார்கள்” என்று சொல்லி அவளை அழைத்தான். பிருந்தா உடனே, “போய் வருகிறேன்” என்று சொல்லிக் கிளம்பிவிட்டாள். அவள் போன பிறகு பழையபடியும் அந்தக் கவித் தொகுதியை எடுத்து விரித்தேன். அப்போது பிருந்தா வெகுவேகமாக ஓடிவந்தாள். வந்து, “சாரங்கன் வருகிறான்” என்று சொல்லிவிட்டு அந்த க்ஷணத்திலேயே தன் வீட்டை நோக்கி ஓடிவிட்டாள்.

என் இதயம் ‘படபட’வென்று அடித்துக்கொண்டது. அதிவேகமாக வால்ட் விட்மனின் புத்தகத்தை மறைத்து வைத்து விட்டேன். அதைப் பார்த்தால் சாரங்கனுக்குப் பழையபடியும் அழுகை வந்துவிடுமோ என்று எனக்குப் பயம்.

சாரங்கன் வந்துவிட்டான்.

“சாரங்கா....”

“உம்.”

“ஏன் நீ இவ்வளவு நேர வரையிலும் வரவில்லை? நேற்றும் வரவில்லை?”

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை, அவன் முகத்தில் துயரமோ, வேறு விதமான ஆழ்ந்த உணர்ச்சிகளோ பிரதிபலிக்கவில்லை. ஒரே சந்தோஷமாகத்தான் இருந்தான். இது மகிழ்ச்சிக்குரிய மாறுதல்தான் என்று நான் நினைத்துக் கொண்டேன்.

“எங்கள் வீட்டுக்குப் போவோமா?”

”உங்கள் வீட்டுக்கா?”

“ஆம். நீங்கள் வருவதாக அன்றே சொல்ல வில்லையா?”

“சும்மா வேடிக்கைக்குச் சொன்னேன், சாரங்கா! உங்கள் வீட்டுக்கு எதற்கு?”

“எதற்கோ? நீங்கள் வாருங்கள்” என்று இரண்டு கைகளாலும் என் கையைப் பிடித்து இழுத்தான்.

அவனுடைய வேண்டுகோள் எனக்கு ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அன்று பிருந்தாவின் வீட்டிலிருந்து வரும்போது அவனுடைய கட்டாயத்தைப் பார்த்து, “ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்” என்று சொல்லி வைத்தேன். அந்த விஷயத்தை அவன் இவ்வளவு தூரம் வற்புறுத்துவான் என்று தெரிந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். இந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்காக வேற்றார் வீட்டுக்குப் போவது எப்படி? போவதற்குக் காரணமும் வேண்டுமே! பிருந்தா வீட்டுக்குப் போனதற்காவது அவளுடைய தேக சௌக்கியம் காரணமாக இருந்தது. இங்கே போவது எதற்காக? இவனுடைய அப்பாவை வீதியிலும் பஸ் ஸ்டாண்டிலும் ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு தடவைகூட நாங்கள் பேசிக் கொண்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று எவ்வித சைகை ஜாடையின் மூலமாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியிருக்க அங்கு நான் எப்படிப் போவது?

சாரங்கன் மிகவும் அதிகமாக வற்புறுத்தத் தொடங்கினான். அவசரப்படவும் ஆரம்பித்தான். எனக்கு அது ஒரு தொந்தரவாகவே ஆகிவிட்டது. ’இத்தனை நாளும் இவன் வாய்மூடி மௌனியாக இருந்தது போதும், இன்று பாடாய்ப் படுத்துவதும் போதும்’ என்று சலித்துக் கொண்டேன்.

“வாருங்கள் மாமா. சொல்லிவிட்டு மாட்டேன் என்கிறீர்களே?” என்று கெஞ்சினான்.

“சாரங்கா! நீ சிறு பிள்ளை. உன் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் வருவது எப்படி? இந்த நாசூக்கு எல்லாம் உனக்குப் புரியாது. என்னை விட்டுவிடு” என்று பொறுமையிழந்து சொன்னேன்.

“ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள்?” என்று என் முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு ஏக்கத்துடன் கேட்டான்.

“அங்கே எதற்கு?”

“அதென்னமோ, கட்டாயம் வரத்தான் வேண்டும்.”

நான் கோபப்பட்டவன் போல் நடித்து, “என்னால் வரமுடியாது. எனக்கு அவசரமான வேலை இருக்கிறது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால் பார்த்துக் கொள்வோம்” என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டேன். ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடுபவன்போல் மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தேன்.

சாரங்கன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

ஒரு நிமிஷம் கழிந்திருக்கும். அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். நான் பார்த்த மாத்திரத்தில் அவனும் ஒரு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டு “வரமாட்டீர்களா” என்று தடுமாறும் குரலில் கேட்டான்.

அவனுடைய இந்தக் கடைசி முயற்சியைத் தகர்த்து விட்டால், பழையபடியும் அழ ஆரம்பித்து விடுவான் என்பதற்குரிய அடையாளம் அவன் முகத்தில் தென்பட்டது. சாரங்கனைத் திரும்பத் திரும்ப அழ வைத்துப் பார்க்க எனக்கு இஷ்டமில்லை. ‘தங்கமான பையனை ஏன் இப்படிக் கஷ்டத்துக்கு ஆளாக்க வேண்டும்? போய்விட்டுத் தான் வருவோமே! நம்மை வரவேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள்? அப்படியிருக்க ஒரு முறை போய் வருவதில் என்ன நஷ்டம்?” என்று அதிசீக்கிரமாக யோசித்து முடிவு கட்டினேன். அவன் கண்ணீர் சொரிவதற்குள் என் சம்மதத்தை தெரிவித்துவிட்டேன்.

“சாரங்கா! வா! உன் வீட்டுக்கே போகலாம்”

இருவரும் கைகோத்துக்கொண்டே சென்றோம். அவன் வீட்டுக்கு முன்னால் போனதும், என் கையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே வேகமாக ஓடினான். அப்புறம் வெளியில் வந்து வாசல் பக்கத்திலுள்ள அறையைத் திறந்து, “வாருங்கள், வாருங்கள்” என்று படபடப்பாக இரைந்து சொன்னான். என்னுடைய தயக்கத்தையும், என்னுடைய சங்கோஜத்தையும் அளவிட்டுச் சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அந்த அறைக்குள் சென்றேன். அறையின் சூழ்நிலையைக் கொண்டே சாரங்கனின் பெற்றோர்கள் ஏழைகள் என்று எளிதில் தீர்மானிக்க முடிந்தது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் கிடந்த அவனுடைய சரித்திரப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். சாரங்கன் வீட்டுக்குள்ளே ஓடிவிட்டான். அப்போது வெளியிலிருந்து வந்த அவனுடைய தகப்பனார், அறைக்குள் எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்து “வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். “என்ன விசேஷம்?” என்று என்னை அவர் விசாரிக்காமல் விட்டது எனக்கு ராஜமரியாதை செய்தது போல் இருந்தது.

சாரங்கன் திரும்பி வரும்போது, ஒரு தட்டில் உப்புமாவும், ஒரு டம்ளரில் காபியுமாக வந்து சேர்ந்தான். நான் திடுக்கிட்டு விட்டேன்; என் சுவாசம் அப்படியே நின்று விட்டது.

“ஐயோ! இதெல்லாம் எதற்கு? நான் இப்போதுதானே சாப்பிட்டேன்?”

சந்தோஷப் படபடப்பில் ஒன்றுமே சொல்லாமல் வந்து அவன் என் வலது கையைப் பிடித்து இழுத்து உப்புமாத்தட்டில் கொண்டு போய் வைத்தான். சாரங்கன் ரொம்பவும் சிறுபிள்ளையாக இருக்கிறான். இனிமேல் இவனிடம் கொஞ்சம் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்ளவேண்டும். இன்று மட்டும் ஏதோ கசப்பு மருந்தைச் சாப்பிடுவோம். வேறு வழியில்லை என்று எண்ணிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன். சிறு பையன் பேச்சைக் கேட்டு விருந்தாட வந்த என்னைப் பற்றி அவனுடைய பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்ற பயம் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அதிர்ச்சி கொடுத்த வண்ணமாக இருந்தது.

ஒருவழியாகச் சாப்பிட்டு முடிந்தது. தட்டையும் டம்ளரையும் உள்ளே கொண்டுபோய் வைக்கப் போனான் சாரங்கன்.

’இந்தப் பையனுக்கு எதற்கு என் மேல் இவ்வளவு அன்பு? இவன் அன்பு என்னைத் திணற அடிக்கிறதே! இது தாங்கமுடியாத அன்பு! தாங்க முடியாத பேதைமை! இரண்டும் சேர்ந்து என்னை குரங்காட்டம் ஆட்டுகின்றன. ஆனால் இவனைக் கோபிக்கக் கூடாது. இவன் இப்போது எனக்குக் கொடுக்கும் தொந்தரவே இவனுடைய அன்பை அளந்து காட்டுகிறது. ஏதோ ஒரு நாள் என்னைக் கஷ்டப்படுத்துவதனாலவது, இவன் திருப்தியடையட்டும். என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும், திருப்தியும் கொள்ள முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது. தடுக்க முயலுவது அமானுஷிகம்’ என்று எண்ணித் தேற்றிக்கொண்டேன்.

சாரங்கன் வெளியே வந்தான். மேஜையைத் திறந்து ஒரு பவுண்டன் பேனாவை எடுத்தான். என் முகத்துக்கு எதிரில் நிற்காமல் என் முதுகுப் புறமாக வந்து நின்று கொண்டான். அங்கே நின்ற வாக்கிலேயே, நான் கையில் வைத்திருந்த சரித்திரப் புத்தகத்தை மெதுவாகப் பிடித்து இழுத்துத் தூரத்தில் வைத்தான். தூங்கும் குழந்தையின் கையிலிருக்கும் கிலுகிலுப்பையை எவ்வளவு ஜாக்கிரதையாகத் தனியே எடுத்து அப்புறப்படுத்துகிறோமோ, அது போல அதை அப்புறப்படுத்தினான். பிறகு அவன் வலது கையால் தன் கால் சட்டையின் பையில் கையை விட்டு எதையோ எடுப்பதுபோல் எனக்கு ஜாடையாகத் தெரிந்தது. அதை என் முன்பாக மேஜைமேல் வைத்தான்.

அது ஒரு டைரி. நான் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்த டைரிகளைப் போன்ற ஒரு டைரி. அதே கம்பெனியில் செய்தது. அதே நிறமுடையது. அப்புறம் பேனாவை என் கையில் கொடுத்து “எழுதுங்கள்” என்றான்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன எழுத?” என்று கேட்டேன்.

“என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு” என்று எழுதுங்கள்.”

****

சக்தி அக்-நவ 1951

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்