Oct 28, 2013

மௌனியின் கதையுலகம் – திலீப்குமார்

மௌனியுடன் கொஞ்ச தூரம் - நூலிலிருந்து…

மௌனியின் கதையுலகம் – பகுதி 1

1936-ம் ஆண்டுவாக்கில் மணிக்கொடியில் மௌனி முதன் முதலாகச் சிறுகதைகளை எழுதத் துவங்கினார். அந்தக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் கு.ப.ரா ஆகியோரும் மணிக்கொடியில் எழுதினார்கள. தமிழ்ச் சிறுகதைத் துறை முதிர்ச்சியடையத் துவங்கிய காலமும் இதுதான் எனக் கொள்ளப்படுகிறது. மணிக்கொடியில் மௌனியின் பிரவேசம் mowni வெகுவாக ஊர்ஜிதப்படுத்தியது. மௌனி படைப்புத் துறைக்கு வந்த்து ஒரு தற்செயல் நிகழ்வு என்று பலரும் அறிவித்திருக்கிறார்கள். மௌனி மணிக்கொடியில் எழுதினாலும் மணிக்கொடி என்ற இயக்கத்தின் படிம்த்தோடு இனம் காணப்படக் கூடாதவர் எனவும் வலியுறுத்தப்படுகிறது. மௌனிக்குத் தமிழில் முன்னோடிகள் யாருமே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஒருவகையில் கலைக்கும் மரபுக்குமான உறவு மிகவும் சிக்கலானது. கலைகளின் மீது மரபின் பாதிப்பு ஒரே சீராகவும் முற்றாகவும் என்றும் இருந்ததில்லை. ஆண்டுகளின் வரிசைக்கிரமப்படியும் அடியொற்றி அமைந்ததில்லை. விளைவாக கலை வரலாறுகளை நாம் பார்க்கும் பொழுது புதுமையான கலை வடிவங்களுக்கு ஒரே மரபான மரபையொட்டிய முன் முயற்சிகள் எல்லாச் சந்தர்பங்களிலும் காணக் கிடைப்பதில்லை. அதே மாதிரி எந்தப் புதுமையான கலைப் படைப்பும் முற்றாக மரபிலிருந்து விடுதலை பெற்றதாகவும் இருந்ததில்லை.அதில் மரபின் பல்வேறு காலப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அம்சங்கள் சம்பந்தப்பட்ட கலைஞனின் பக்குவத்திற்கும் அவனது சமகால வெளிப்பாட்டுத் தேவைக்கும் ஏற்ப வெவ்வேறு கோணங்களில் பிரயோகப்படுத்தப் பட்டிருப்பதை பல சந்தர்பங்களில் காணலாம்.

கலைகள் மீது மரவின் செல்வாக்கு ஒருபுறமிருக்க அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மரபென எஞ்சி நிற்கும் ஒன்றேகூட தீவிரமான பல மாறுதல்களுக்கு ஆளாகிவிட நேர்வதுண்டு. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நம் வாழ்க்கைப் போக்குகளிலும் கலைத்துறைகளிலும் கணிசமான மாற்றங்களை நாம் சந்தித்திருக்கிறோம். அதேபோல மொகலாயர்கள் ஆண்ட காலத்திலும் பல அம்சங்கள் நம் மரபோடு வந்து ஒட்டிக்கொண்டுவிட்டன என்பதை நாமறிவோம். நீடித்த ஆங்கிலேய அட்சி நம்மை மேற்குடன் நெருக்கம் காண வைத்தது. ஆங்கிலக் கல்வி தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி ஆகியவை இந்த இடைத் தொடர்பைத் துரிதப்படுத்தின. இதன் நேரடியான / மறைமுகமான விளைவாகத் தமிழ் இலக்கிய மரபு மேற்கிலிருந்து சிறுகதை நாவல் ஆகிய புதிய இலக்கிய வடிவங்களைச் சுவீகரித்துக்கொண்டது. மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமாக புதுமைப்பித்தன் மௌனி இருவரும் மேலை இலக்கியத்தில் மிகுந்த பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தார்கள். மௌனி காப்காவின் எழுத்துக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவராகத் தெரிகிறது. காப்காவி்ன கதைகளைப் படித்த மௌனி அவை பிரத்யேகமாகத் தனக்காகவே எழுதப்பட்டவை எனக் கூறுமளவிற்கு உணர்ந்தார். இருப்பினும் காப்காவுக்கும் மௌனிக்கும் பல்வேறு தீர்மானவான வித்தியாசங்கள் உள்ளன. அவரை காப்காவுடன் ஒப்பிடுவது அவ்வளவு சரியில்லை. மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் மேற்கின் சிறுகதைத் துறையிலிருந்து அதன் நவீன வடிவத்தையும் வடிவம் சார்ந்த அதன் சிறப்பான பல கூறுகளையும் மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள். கதையம்சத்திலும் மொழிப் பிரயோகத்திலும் அவர்கள் தம் இந்திய வாழ்க்கை மற்றும் மரபிலிருந்தே பல அம்சங்களை எடுத்துக்கொண்டார்கள். இதில் மௌனி புதுமைப்பித்தன் கு.ப.ரா மற்றவர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான் வெற்றி பெற்றார்கள் என்றே கூறலாம். இந்திய இலக்கிய தத்துவ மரபின் பல அம்சங்க்ளைத் தம் தனித்துவமான பார்வை கோணங்களுக்கு ஏற்ப வடிவ நுட்பத்தோடு அவர்கள் வெளிப்படுத்திய விதமே அவர்களது எழுத்துக்களுக்கு “நவீன”த் தன்மையை வழங்கியது. மௌனி தமிழ் இலக்கிய உலகம் அதுவரை அலசிப் பார்க்காத உணராத இந்திய வாழ்க்கையின் பல உள் மன பரிமாணங்களை முன்வைத்தார். புதுமைப்பித்தன் தமிழ் மொழிக்கு புதியவீச்சும் தமிழ் சிறுகதைக்கு ஒரு கலக பண்பையும் வழங்கினார். குபரா ஆண்-பெண் உறவில் உறைந்துகிடந்த குரூரத்தை மிக மென்மையான குரலில் வெளிப்படுத்தினார்.

ஒருவகையில் மௌனி முன்னோடியற்றவர்தான். ஆனால் மௌனிக்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம் பெரிதும் அவர் தமிழ் சிறுகதை வளர்ச்சியின் முக்கியமான ஒரு காலகட்டத்தில் செயல்பட நேர்ந்த்தால்தான். மௌனியைப் பொறுத்தவரை, மௌனிக்கு அவர் முன்னோடியற்றவர் என்ற பெருமையைவிட அவர் பின்னோடியற்றவர் என்ற உண்மைதான் நமக்கு முக்கியமானது. புதுமைப்பித்தனுக்கு ஒரு சுந்தரராமசாமி ஒரு ஜெயகாந்தன் போல குபரா வுக்கு ஒரு தி.ஜானகிராமன் போல மௌனிக்கென்று ஒருவரை நம்மால் கூறமுடியாது. மௌனியின் சாதனையும் தோல்வியும் இந்த பண்பில்தான் உள்ளது. புதுமைப்பித்தன் குபரா ஆகியோர்களது இயக்கம் ஒரு வாசகர் கூட்டத்தைத தவிர ஒரு சுந்தர ராமசாமியையும் ஒரு ஜெயகாந்தனையும் ஒரு ஜானகிராமனையும் உருவாக்கியது. ஆனால மௌனியின் இயக்கம் தன் குறுகிய அளவிலேயே முழுமை கண்டு பின்னால் வந்த பலருக்கும ஒரு ஆய்வுப் பொருளாக ஒரு புதிராக மட்டுமே முடிவடைந்த்து. பின்பற்றமுடியாத கலைச் செயல்பாட்டில் சம்மான அளவு பாதகங்களும் சாதகங்களும் உள்ளன. அதன் விளைவுகளைத்தான் மௌனி இன்னும் அனுபவித்து வருகிறார். இந்த அடிப்படையில் மௌனியைப் பற்றி புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற திருமூலர் ஒப்புமைக்கூற்றுக்கு சாதகமாகவும் பாதகமாகவும விளக்கம் கூறலாம். ஆனால் இத்தகைய சர்ச்சைகள் நமக்கு இந்த சந்தர்ப்த்தில் முடிவான பயன்களை தரக்கூடியவை அல்ல. ஒருவகையில் மௌனி சிறப்பை நாம் காலப்போக்கில் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவிர்க்கமுடியாத்தாகி விடும் என்றே தோன்றுகிறது.

மௌனியின் கதைகளில் முக்கிய அனுபவங்களாக நாம் காண்பவை வாழ்க்கையின் நிச்சயமின்மை, இரு மனிதர்களுக்கிடையேயான உறவில் இருக்கும் தனித்தன்மைகளும அவற்றின் விளைவுகளாக ஏற்படும் அதிருப்தி தோல்வி மரணம் பயணம் ஆகியவை. இந்த அனுபவங்கள் மௌனியின் கதைகளில் ஆண் பெண் உறவு என்ற அடித்தளத்தின் மீது நிறுவப்பட்டு வெளிப்படுத்தப்படுபவை. அநேகமாக மௌனியின் எல்லாக் கதைகளிலும் காதலில் தோல்வியுற்ற நுண்ணுணர்வு மிக்க ஒரு வேதாந்தியின் எட்டிய வெளியை நோக்கிய சஞ்சாரத்தைப் பார்க்க முடியும். கதையம்சம் என்ற அளவில் நாம் அலட்சியப்படுத்தி விடக்கூடிய காதல் என்ற அனுபவமே எல்லாக் கதைகளிலும் காணப்பட்டாலும் அந்த அனுபவத்தின் உந்துதலில் மௌனியின் பாத்திரங்கள் கொள்ளும விகசிப்பு ஒரு குறிப்பிட்ட உணர்வுத் தளத்திலிருந்து மனித வாழ்க்கையின் அடிப்படையான பல பிரச்சினைகளையும நிலைகளையும் நோக்கி விரிகின்றது என்பதால் அவற்றை நாம் பொருட்படுத்தியே தீரவேண்டியுள்ளது.

தன் கதைகள் வாயிலாக மௌனி கொள்ளும் தத்துவ விசாரம் திட்டமற்றது என்றே கொள்ளலாம். வாழ்க்கையின் பல விஷயங்களைப் பற்றி மௌனியின் தத்துவார்த்த விளக்கங்கள் எந்தவிதமான பொதுத்தர்க்க நியதிக்கும் உட்பட்டவையல்ல. ஏனெனில் அவரது அனுபவங்களின் தன்மைகள் அவற்றின் பாதிப்பை ஏற்றுக்கொள்ளும் அவரது பக்குவம் அதைத் தொடர்ந்து எழும் எண்ணங்கள அவை தோற்றம் கொள்ளும் மனநிலை காலம் இவ்வெண்ணங்களை வெளிப்படுத்த அவர் கைக்கொள்ளும் பல பரிமாணங்கள் கொண்ட இலக்கியவடிவம் இவையெல்லாம் அவரது விளக்கங்களை ஒரு பொது விதிக்கப்பால் இழுத்துச் சென்றுவிடுகின்றன. வாழ்க்கை பற்றிய பல உண்மைகளை அவர் மனம் நொடிந்துபோகும்படியாகவும் குதர்க்கமாகவும் விசித்திரமான மனக்கோணங்களிலிருந்தும் அளிப்பதாகத் தோன்றுவதற்கும் மேற்சொன்ன கூற்றிலிருந்தே விடை பெறமுடியும்.

முதலில வாழ்க்கை அனுபவங்களிலிருந்துதான் நாம் நம் சார்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். பின் அச்சார்புகளிலிருந்து மீண்டும் வாழ்க்கை அனுபவங்களை விளக்க முற்படுகிறோம். அனுபவங்களுக்கு இன்னின்ன சார்புகளை நாம் கொள்ளவேண்டும் என்றும் நினைக்கிறோம். அனுபவங்கள் ஒவ்வொரு மனிதனிடையேயும் ஏற்படுத்தும் வெவ்வேறு dileepe_thumb[1]விதமான விளைவுகளை நாம் கருத்தில் கொண்டாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் ஒரு பொதுவான நியதிக்குள்ளேயே வாழ்க்கையைச் சார்புபடுத்தவும் வகைப்படுத்தவும் முயல்கிறோம். கலைஞர்கள் இதற்கு நேர்மாறான நிலையிலிருந்து செயல்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை சார்புப்படுத்துவதை வகைப்படுத்துவதை விடவும் வாழ்க்கை அனுபவங்கள் மனிதரிடையே உண்டாக்கும் வெவ்வேறுவிதமான விளைவுகளை விசாரிப்பதற்கும் விவரிப்பதற்குமே அதிக அழுத்தம் தருகின்றனர். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தத்துவம் உதவுவதைப் போன்றே இலக்கியமும் இன்னொரு கோணத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. தத்துவத்திற்கான இறுக்கம் இலக்கியத்திற்கு கிடையாது என்பதைப் போன்றே தத்துவத்தில் காணப்படும் தர்க்க –ஒழுங்கும் இலக்கியத்தில் காணக் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் இலக்கியம் தத்துவம் இரண்டுமே முழுமையற்றதான அருவமான இரு உலகங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த உரு உலகங்களும் வாழ்க்கையை விளக்கிக்கொள்வவும் வெற்றி காணவும் யத்தனித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை இந்த உலகங்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.

****

மௌனியுடன் கொஞ்ச தூரம் – வானதி பதிப்பகம் முதல் பதிப்பு-  ஏப்ரல் 1992…

தட்டச்சு.: ரமேஷ் கல்யாண்.

தொடர்புள்ள பதிவு:

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்