Aug 21, 2010

ப. சிங்காரத்துடன் ஒரு நாள்…..

எல்லாம் யோசிக்கும் வேளையில்...’
ந. முருகேசபாண்டியன்

பெரிய கட்டடத்தின் மாடிப் படியேறும்போது இயந்திரங்களின் பேரிரைச்சல் காதைத் துளைத்தது. பெரிய அறையினுள் நுழைந்தேன். தூய வெள்ளாடை உடுத்திய கருத்து வாட்டசாட்டமான பெரியவர் எழுதிக் கொண்டிருந்தார். வழுக்கைத் தலை பளபளத்தது. சுவரையொட்டியிருந்த டெலிபிரிண்டர்கள் கட-கடத்தன. அடுத்திருந்த பெரிய ஹாலில் ராட்சத அச்சு இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தன. கரடுமுரடான ஓசை. எங்கும் மிஷின் எண்ணெய் நெடியும் புழுக்க நாற்றமும் கசகசப்பான மனநிலை. ‘திரும்பிப் போயிடலாம். அவரை இன்னொருக்க பார்க்கலாம்.’ மனதின் ஊசலாட்டத்-தையும் மீறி வெள்ளாடைப் பெரியவரிடம் கேட்டேன். ‘‘ஐயா... வணக்கம்... இங்க ப. சிங்காரங்கறது யாருங்க?’’

‘‘நான்தான்’ உட்காருங்க’’ மூக்கைத் தடவிக்-கொண்டார். இறுக்கமான முகம். ஆழமான இடுங்கிய கண்கள். என்ன விஷயம் என்பது போல முகத்தை முன்னுக்குத் தள்ளி என்னை உற்றுப் பார்த்தார்.

‘‘நான்... உங்களோட புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்... ரெண்டு clip_image002நாவல்களையும் படிச்சிருக்கேன்.’’

‘‘அப்படியா?’’ வறட்சியுடன் மெல்லச் சிரித்தார். இப்ப அதுக்கென்ன? அது ஏதோ சம்பந்தமில்லாத விஷயம் என்பது போன்ற முகபாவனை. அவரது நாவல்களைப் பற்றிய எனது அபிப்ராயங்களைக் கூறினேன். தமிழில் மிகவும் முக்கியமான நாவல், முதல் புலம்பெயர்ந்த நாவல்... இப்படிப் பாராட்டினேன்.

‘‘நீங்க இப்படிச் சொல்றீங்க. அஞ்சாறு மாசத்துக்கு முந்தி கோணங்கின்னு ஒருத்தர் வந்து நாவலைப் பற்றிப் பேசிட்டுப் போனார். பத்து வருஷங்களுக்கு முந்தி பிரகாஷ்ங்றவர் திடீர்னு வந்து ரொம்பவும் பாராட்டிச் சொன்னார். இன்னும் சில பேர் தேடிவந்து பாராட்டியிருக்காங்க. சுமார் ஐந்து வருஷங்களுக்கு முந்தி கி. ராஜநாராயணன்னு ஒருத்தர் புயலிலே ஒரு தோணி நாவலைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார்... இவங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? எதுவும் பெரிசா எழுதியிருக்காங்களா?’’

‘‘நீங்க சொன்னவங்க எல்லாரும் எனக்கு நண்பர்கள். தமிழ் இலக்கிய, சிறுபத்திரிகைச் சூழலில் முக்கியமானவங்க’’ என்றேன்.

கொஞ்ச நேரம் விசித்திரமாக எனது முகத்தைப் பார்த்தார்... ‘‘அப்படிங்களா... கி. ராஜநாராயணன் மூலம் எனது நாவலைப் பற்றிக் கேள்விப்பட்ட சிட்டி, சிவாபாதசுந்தரம்னு ரெண்டுபேர் வந்து நாவலைப் பற்றி ரொம்ப உயர்வாகப் பேசினார்கள். சென்னையில கொண்டு போய் Original Version_க்கு நல்ல பதிப்பு கொண்டு வாரோம்னு என்னிடமிருந்த ஒரே பிரதியையும் வாங்கிட்டுப் போனாங்க. பல வருஷமாச்சு. இன்னும் ஒரு பதிலயும் காணாம்’’ எவ்விதமான ஈடுபாடும் இல்லாமல் தகவல்களைச் சொன்னார். ‘‘புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க... இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விஷயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க... அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னிக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம்வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனே-ஷியாவிலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். புயலடிச்சதால சரக்குகளைக் கடலில் வீசினோம். நாவல் எழுதறப்ப தோணும்னா சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்டே கேட்டேன். ஆமா போனோம் வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுங்கிறதெல்லாம் ஞாபகமில்லேனுட்டாங்க. அது எதுக்கு... வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப்பிடுவான். மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா? மூணுசீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழமாசி வீதிப் பலசரக்குக் கடைகள்... அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா? உண்மையைச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விஷயமிருக்கு தெரியுமா? ஆனால் கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது.’’

‘‘நீங்க எப்ப மலேசியா போனீங்க?’’

‘‘எனக்கு இன்னிக்கி அறுபத்து நாலு வயசாகுது. பதினெட்டு வயசுல கப்பலேறினேன். வட்டிக் கடையில வேலை பார்த்தேன். அப்ப ரெண்டாம் உலக யுத்தம் தொடங்கினதால இந்தியாவுக்குக் கப்பல் போக்குவரத்து இல்ல. இந்தியாவிலிருந்து எந்த தமிழ்ப் பத்திரிகையும் அங்க வராது. வேற வழியில்லாம பினாங்கு லைப்ரேரியில ஹெமிங்வே, தல்ஸ்தோய், பாக்னர், செகாவ், தாஸ்தாயேவ்ஸ்கி... இப்படிப் பலரையும் படிக்க ஆரம்பிச்சேன். ஹெமிங்வேயோட ‘ஏஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்’ நாவல்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல். அது அமெரிக்க இலக்கியத்ல திருப்புமுனைன்னு நினைக்கிறேன். தல்ஸ்தோயோட அன்னா கரேனினா நம்பர் ஒன். ஆனால் மேல்நாட்டு க்ரிட்டிக்ஸ் ‘வார் அண்ட் பீஸ்’ தான் சிறந்ததுன்னு சொல்றாங்க.’’

‘‘தமிழ்ல யாரெல்லாம் படிச்சிருக்கீங்க?’’

‘‘என்னோட பதினெட்டு வயசுக்கு முந்தி இந்தியாவுல இருக்கிறப்ப ‘மணிக்கொடி’ பத்திரிகை வாசிச்சிருக்கேன். புதுமைப்பித்தன், மௌனி கதைகள் படிச்சிருக்கேன். அப்புறம்தான் அங்கே போயிட்டேனே! இன்னிக்கி வரைக்கும் தமிழ்ல நாவல்கள் வாசித்தது இல்லை. பூரா ஆங்கிலம்தான். இப்பத்தான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கம்கூட வாசிக்க முடியல.’’

தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். ‘‘அவங்க எழுதியதை படிக்கவில்லை’’ என்றார்.

‘‘யுத்த காலத்தை மையமாக வச்சுத் தமிழில் விரிவாக நாவல் எழுதுனது நீங்கள்தான். நீங்க ஐ.என்.ஏ.யில் இருந்தீங்களா?’’

‘‘இல்லை. என்னோட நண்பர்கள் பலர் ஐ.என்.ஏவுல இருந்தாங்க. ஆர்மியில பெரிய பதவியில இருந்தாங்க. அங்க பினாங்கில காபி, டீ கடைகள் ஐரோப்பிய மாதிரியில இருக்கும். அதை கிளப்ன்னு சொல்வாங்க. சாயங்கால நேரம் ஒரு கோப்பை காபியைக் குடிச்சிட்டு ஐந்தாறு மணிநேரம் பேசிக்கிட்டிருப்போம். அப்பத்தான் யுத்தம் பத்தின பல சமாசாரங்களைக் கேள்விப்பட்டேன். அப்புறம் நண்பர்களுடன் சேர்ந்து நானே பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாகப் போயிருக்கேன். நாவல்னா என்னா? கற்பனையில எழுதுறதுதானே! அப்படியேவா எழுதணும்? நாம கேள்விப்பட்ட விஷயங்கள், அனுபவங்களைத் தொகுத்துக் கற்பனையோடு எழுதலாம். ஒரு கதாபாத்திரம்னா அவன் ரெண்டு மூணு பேரோட சேர்க்கையா இருக்கலாம். நாவல்ல வர்ற சின்னமங்கலம் கிராமம்கூட ரெண்டு கிராமங்களை ஒன்றாக்கியதுதான்.’’

‘‘நீங்க படிச்சது முழுக்க ஆங்கிலத்துல... தமிழ்ல எழுதணும்னு உங்களுக்கெப்படி தோணுச்சு.’’

‘‘தமிழ்ல _ தாய்மொழியில _ எழுதினாத்தான் உணர்ச்சிபூர்வமா நாம நினைக்கிறத சொல்ல முடியும்னு எழுதினேன்.’’

‘‘திரும்ப இந்தியாவுக்கு எப்ப வந்தீங்க?’’

‘‘சுதந்திரங்கிடைச்ச பின்னாடி வந்தேன். உடனே ‘தினத்தந்தியி’ல வேலைக்குச் சேர்ந்தேன். அப்பயிருந்து மதுரையிலதான் இருக்கேன்.’’

‘‘முதல் நாவலை எப்ப எழுதினீங்க?’’

‘‘1950_இல் ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினேன். அதைப் பிரசுரம் செய்ய பல பிரசுரகர்த்தர்களைக் கேட்டேன். அதுக்காகவே மதுரைக்கும் சென்னைக்கும் பல தடவைகள் அலைஞ்சேன். யாரும் வெளியிட முன்வரலை. ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினேன். திரும்பி வந்தது. ஆனால் தேர்வுக் குழுவில இருந்த ஒருத்தர் தனிப்பட எனக்குத் கடிதமெழுதி நாவலைப் பாராட்டியிருந்தார். அவர் அந்த நாவலை என்னிடமிருந்து வாங்கி ரெண்டு மூணு வருஷமாப் பிரசுரிக்க முயன்று தோற்றுப் போனார். கடைசீல ‘கலைமகள்’ பரிசுப் போட்டிக்கு அவரே அனுப்பினார். அதுக்கு முதல் பரிசு கிடைச்சுது. நாவலும் 1959_ல் பிரசுரமாச்சு.’’

‘‘புயலிலே ஒரு தோணி?’’

‘‘அது மட்டுமென்ன? அது பிரசுரம் ஆனதும் பெரிய கதை. அதை 1962_வாக்கில எழுதினேன். பல பிரசுரகர்த்தர்களிடம் கிடந்தது. ஒண்ணும் ஆகலை. கடைசீல சென்னை நண்பர் ஒருத்தரின் விடாத முயற்சியினால் கலைஞன் பதிப்பகம் 1972_இல் வெளியிட்டது. அதுவும் வெட்டிச் சுருக்கி வெளியாச்சு.’’

‘‘நாவலைப் பற்றி விமர்சனம் வந்ததுங்களா?’’

‘‘ம்... ஒரு பாத்திரம் தன் மனதுக்குள் யோசிப்பதை எழுதும்போது ஒற்றைக் குறிக்குள் போடலைங்கிற-துக்காக ‘கண்ணதாசன்’ பத்திரிகையில ஒருத்தர் யார் யாரிடம் பேசுறாங்க என்பதுகூடப் புரியலை... குழப்பமாயிருக்குன்னு எழுதியிருந்தார். நம்ம ஆளுகளுக்கு எல்லாத்தியும் வெளிப்படையாப் பெருவெட்டாகச் சொல்லணும். தமிழ்ல பீணீsலீ_க்கும் லீஹ்ஜீலீமீஸீ_க்கும் வித்தியாசமே பலருக்குப் புரியல.’’

காபியை ரெண்டு கிளாஸ்ல ஊத்துங்க என்று அலுவலக உதவியாளரிடம் சொல்லிவிட்டு சற்று நேரம் கண்ணைமூடி யோசித்தவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

‘‘அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும், எழுத்தாளன் சொல்லக்கூடிய உலகம் ரொம்பப் புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம் வாசிக்கிற யாருக்கும் தெளிவாப் புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர், வெளிநாட்டுச் சூழல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் _ தமிழ் ஆளுகளுக்குப் புதுசு என்றாலும் _ நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படலை.’’ அவரது குரலில் நம்பிக்கை தொனித்தாலும் முடிவில் வருத்தம் வெளிப்பட்டது.

‘‘குடிங்க’’ காபி கிளாஸை என்னை நோக்கி நகர்த்தினார். பணியாளிடமிருந்து சிகரெட்டை வாங்கி மேசை டிராயருக்குள் வைத்தார்.

கிளாஸை எடுத்து ஒரு மடக்குக் குடித்தேன். அவர் ஒரே மூச்சில் கிளாஸைக் காலி செய்தார்.

‘‘நீங்க தொடர்ந்து எழுதலியே...’’

‘‘அதெல்லாம் ஒரு காலத்து ஆர்வம். அப்ப உற்சாகப்படுத்தி முடுக்கிவிட ஆளுக யாருமில்லை. இப்ப அந்த மனநிலை இல்ல.. எழுதவும் முடியாது.’’

‘‘புயலிலே ஒரு தோணி நாவலில் பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் வருதே... உங்களுக்கு அதிலே ரொம்ப ஈடுபாடா?’’

‘‘அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லே. 1947_லிருந்து மதுரை சீ.வி.சி.கி.யில தங்கியிருக்கேன். முந்தி பக்கத்து அறையில தியாகராசர் கல்லூரி தமிழ் லெக்சரர் இருந்தார். அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கி அகராதியை வைச்சு நானே படிச்சேன். அவ்வளவுதான். ஈடுபாட்டோட படிச்சா எதையும் படிச்சிடலாம். இங்கிலீஷ்ல பார்த்தீங்களா? எதைப் பத்தியெல்லாம் புத்தகம் வருது தெரியுமா? ஷிஷீutலீ மிஸீபீவீணீஸீ ஜிக்ஷீமீமீsன்னு ஆயிரம் பக்கத்துல பெரிய புத்தகம் போடுறான். அதையும் வாங்கிப் படிக்க ஆளுக இருக்குது. இங்க அதுமாதிரியில்ல. அதனால பப்ளிஷர்ஸ் நல்ல புத்தகம் போடறதில்ல. என்னோட முதல் நாவல் கடலுக்கு அப்பால்... ரொம்ப சொல்ல முடியாது. ஆனால் புயலிலே ஒரு தோணி நல்ல நாவல். ஆனால் என்ன ஆச்சு? எந்த க்ஷீமீsஜீஷீஸீsமீம் இல்ல.’’ மூக்கைத் தடவிக்கொண்டு சிரித்தார். ‘‘அந்த நாவலில் செட்டிமார்பற்றி வருது. பல பப்ளிஷர்ஸ் செட்டிமார். அதனால அதை பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. ஏதாவது மாட்டு வாகடம், கந்தர் அலங்காரம்... இப்படி போட்டுக் காசு பண்ணுவாங்க.’’

‘‘உங்க குடும்பம்...’’

‘‘நான் ஒரு widower.’’

சற்று நேரம் என்ன பேசுவது எனத் தோன்றவில்லை. சூழல் இறுகியது. அவரே தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசினார்.

‘‘மலேயாவில் மனைவியோட முதல் பிரசவத்தில மனைவியும் ஆண்குழந்தையும் இறந்துட்டாங்க. பிறகு இந்தியாவுக்கு வந்தேன். அப்புறம் மறுபடி கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணவேயில்லை. திரும்ப மலேயாவுக்குப் போயிடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன்... ஆனால் போகலை.’’

‘‘அப்ப 37 வருஷமா தனிமையிலேவா இருக்கீங்க?’’

‘‘என்ன தனிமை!’’ கண்களை மூடி வறட்சியாகச் சிரித்தார். ‘‘உண்மையாப் பார்த்தால் எல்லாரும் தனிமையிலதான் இருக்கோம்.’’

‘‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’’

‘‘அதெல்லாமில்ல. கோயிலுக்குப் போவதுமில்லை சாமி கும்பிடுறதும் இல்லை.’’

இடையில் பத்திரிகைக்குச் செய்தி கொடுக்க வந்தவரிடம் ழிமீஷ்s ணிபீவீtஷீக்ஷீஐப் பாருங்க என்று கூறி, பத்திரிகை தொடர்பாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘‘உங்க சொந்த ஊரு?’’

‘‘எங்க சொந்த ஊரு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள பாலையம்பட்டி கிராமம். எங்க அப்பா காலத்திலேயே சிங்கம்புணரிக்குப் போயிட்டோம்.’’

‘‘உங்க சொந்தக்காரங்க...’’

‘‘சிங்கம்புணரியில இருக்காங்க... ரொம்ப போறதும் வர்றதும் கிடையாது...’’

அவரது கலை, இலக்கியம் பற்றிய புரிதல்கள், வாழ்க்கையனுபவம் பற்றிய விரிவான நேர்காணலுக்கு அனுமதி கேட்டேன். ‘‘அதெல்லாம் எதுக்கு...? வேணாம்’’ கைகளை ஆட்டி உறுதியான குரலில் மறுத்தார். நான் இலக்கிய உலகில் அவரது இடம் மிகவும் முக்கியமானது... எனவே நேர்காணல் முக்கியமான பதிவாகும் என்று வலியுறுத்தினேன். ‘‘தயவுசெய்து வேண்டாம்’’ என்று அழுத்தமாக மறுத்துவிட்டார். சற்றுநேரம் இருவருக்குமிடையில் கனமான மௌனம். அடுத்து என்ன பேசுவது? திணறல். அவரது முகம் இறுகியது. சகிக்க முடியாத அமைதி சுவரானது.

‘‘சரி அப்ப வர்ரேன்’’

எழுந்து நின்று கைகூப்பினேன். அவரும் எழுந்து நின்று கைகூப்பி ‘‘வாங்க’’ என்றார் தளர்ச்சியான குரலில்.

மாடிப்படிகளில் இறங்கினேன். அப்பொழுதுதான் ராட்சத இயந்திரங்களின் பலமான ஓசை உறைத்தது. வெயில் கண்களைச் கூசச் செய்தது.

குழு அல்லது அமைப்புடன் எவ்விதமான தொடர்புமற்றுத் தனித்து ஒதுங்கி நிற்பதால் ப. சிங்காரம் தமிழ்ச் சூழலில் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றும் உலகின் சிறந்த நாவல்களுடன் ஒப்பிடும் வகையில் அவரது நாவல் உள்ளது என்றும் நான் கூறியபோது, ஒருவிதமான கூச்சத்துடன் ‘‘அதெல்லாம் இல்லீங்க. நான் என்னமோ எழுதினேன்’’ என்று சாதாரணமாகக் கூறினார். சாதனையாளரான ப. சிங்காரத்தினுடைய இலக்கியத்தின் மீதான புறக்கணிப்பு, தமிழ்ச் சூழலின் மோசமான வெளிப்பாடாகும். ஏக்கமும் கசப்பும் கலந்த மனநிலையுடன் கட்டட வளாகத்தைவிட்டு வெளியே வந்தேன். வெளியே வெப்பக் காற்று புழுதியுடன் வலுவாக வீசிக் கொண்டிருந்தது.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

6 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on August 21, 2010 at 10:33 AM said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

கொழந்த on August 21, 2010 at 7:55 PM said...

எனக்குப் பிடித்த நாவல்களில் இதுவும் ஒன்று. இதைத் தவிர வேறு சிறந்த பயண நாவல் (இதை பயண நாவல் என்ற ஒரு கூட்டுக்குள் அடைக்க முடியா விட்டாலும்) தமிழில் உள்ளதா? தங்களுக்கு தெரிந்தால் குறிப்பிட முடியுமா?

தமிழ்ச் செல்வன்ஜீ on August 25, 2010 at 9:55 PM said...

elloorum thanimaiyil than irukkirom aanal oru silarukku thaan athai vaarthaikalakka mudikirathu

ChandraWingChun on September 17, 2010 at 2:47 PM said...

"எங்க சொந்த ஊரு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள பாலையம்பட்டி கிராமம். எங்க அப்பா காலத்திலேயே சிங்கம்புணரிக்குப் போயிட்டோம்"

சிங்கம்புணரி = சிங்கணம்புரி ? எப்படியிருப்பினும் சிங்கம் புணரி என்ற வார்த்தைப் பிரயோகமும் நன்றாய்த்தான் உள்ளது.
அமானுஷ்யப் பாலியல் புனைவுகள் எழுத உபயோகமாகும்.

Bala on October 23, 2010 at 1:15 PM said...

கலங்கரை விளக்கங்களும் தனிமையில்தானிருக்கின்றன.. தடுமாறும் தோணிகளுக்கு வழிகாட்டிக் கொண்டு..

MARUTHU PANDIAN on March 21, 2012 at 3:38 PM said...

I just completed reading "Puyalile Oru Thoni". The edition that i used was the first published edition(1972) It was coming apart. I think i am the only person to read that copy in these 40 years.

On the whole it was a fantastic novel. The novel reminded me of the movie 'Inglourious Basterds'

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்