Sep 27, 2012

க.நா. சுப்ரமணியம்(1912-1988)

க.நா.சு 100

சமகால படைப்பாளிகள் மீது மிகக் கறாரான மதிப்பீடுகளை முன்வைத்த விமர்சகர். க.நா. சுப்ரமணியத்தை இலக்கியச் சிற்றிதழ்களில் இயங்கிய விமர்சகர்களுள் முன்னோடியாகக் குறிப்பிட வேண்டும்.

மணிக்கொடி இதழில் முன்னோடிகளைத் தொடர்ந்து இரண்டாம் தலைமுறை படைப்பாளியாகத் தன் படைப்புலக வாழ்வைத் துவங்கிய க.நா. சுப்ரமணியம் வாழ்வின் இறுதிவரைத் தொடர்ந்து இயங்கினார். இடையில் சிலகாலம் வாழ்விற்கான பொருளைத்தேட ஆங்கில இதழ்களில் எழுதினாலும் வாழ்வின் பிற்பகுதியில் தமிழில் தொடர்ந்து இயங்கினார். சிறுகதை, நாவல் என்னும் புனைகதையின் இரு வடிவங்களிலும் பங்களிப்பு செய்தாலும், நாவலில் அவர் நிகழ்த்திய சாதனைka-naa-su-1 குறிப்பிடத்தக்கது. அவருடைய பொய்த்தேவு வடிவச்சிறப்பு பெற்ற முதல் தமிழ் நாவலாக அமைகிறது. மயன் என்னும் புனைபெயரில் புதுக்கவிதைகளையும் எழுதியுள்ளார். சூறாவளி, சந்திரோதயம், இலக்கிய வட்டம் என்னும் இதழ்களையும் வெளிக்கொணர்ந்தார். இலக்கிய வடட்டம் இலக்கிய விமர்சனத்தை முன்னிலைப்படுத்திய இதழாக அமைகிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுக்களில்தான் க.நா. சுப்ரமணியம் விமர்சகராக இயங்கத் துவங்கினார். எனினும் 1948 தேனீ இதழில் ‘மௌனியின் மனக்கோலம்’ வெளியானபோது, மௌனியைக் குறித்து அவர் எழுதிய அறிமுக உரை அவருடைய எதிர்கால விமர்சனப் பயணத்தை அறிமுகம் செய்வதாக அமைந்துள்ளது. “மௌனியின் கதைகளில் எல்லாச் சிறுகதை நயங்களும் அமைந்துவிடுகின்றன. கதாபாத்திரங்கள் வேண்டிய அளவுக்கு உருவமாகி விடுகின்றன. பின்னணி சரியாக அமைந்து விடுகிறது. ஒரு மனோபாவம் பலமாக உருவம் பெற்றுவிடுகிறது. சிறுகதையில் வேறு என்ன வேண்டும்?” (சர்வதாரி ஆனி 15) க.நா. சுப்ரமணியம் தொடர்ந்து இலக்கியப்படைப்புகள் மீதான தன் கவனிப்பை இதுபோல்தான் பதிவு செய்துள்ளார். படைப்புடனான வாசக உறவில் விமர்சகனாக தான் குறிக்கிடாமல் தனக்குச் சிறப்பு என்று பட்டதைத் தொட்டுக் காட்டுவதையே தன் விமர்சனப் பாணியாகக் கொண்டுள்ளார்.

ஐம்பதுக்களில் வாசக எண்ணிக்கை இலக்கியத் தரத்தின் அடையாளமாக பொழுதுபோக்கு எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டது. கல்வி வட்டத்தினர் இலக்கியப் படைப்புகளின் உள்ளடக்கங்களைச் சமூகச் சிக்கல்கள் அடிப்படையில் தொகுத்து வகைசெய்து பொழுது போக்கு எழுத்தாளர்களைப் படைப்பாளிகளாக முன்னிலைப்படுத்தினர். மார்க்சிய சார்பு கொண்ட விமர்சகர்கள் சமூக மாறுதலுக்கான இலக்கியத்தின் பங்களிப்பினை முன்னிலைப்படுத்தினர். இச்சூழலில் இலக்கியத்தரம் குறித்ததான தேடலை க.நா. சுப்ரமண்யம் இலக்காகக் கொண்டார்.

1955இல் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் சிறுகதையின் வளர்ச்சி குறித்ததான கட்டுரையை எழுதிய க.நா. சுப்ரமணியம் தொடர்ந்து விமர்சகராக இயங்கத் துவங்கினார். சமகாலத்தில் சி.சு. செல்லப்பாவும் தன் விமர்சன பயணத்தைத் துவங்கினார். இருவரும் துவக்கத்தில் இணைந்தே செயல்பட்டனர். ஆனால் சரஸ்வதி இதழிலேயே க.நா. சுப்ரமணியத்தின் முறையான விமர்சனப் பயணம் துவங்கிவிட்டது. என்றே கூறவேண்டும். ஆகஸ்டு 1958 சரஸ்வதி இதழில் அவர் எழுதிய ‘இலக்கிய விமர்சனம்’ விமர்சனம் குறித்ததான அவர் பார்வையை உணர்த்துவதாக அமைகிறது. “ஸிமீணீறீவீsனீ, ஸிஷீனீணீஸீtவீநீவீsனீ வரையில் பலப்பல வார்த்தைகள் இன்று நம்மிடையே அடிபடுகின்றன. (ஒரு தமிழ் விமர்சகர்?) விஹ்stவீநீவீsனீ என்பதைக்கூட ஒரு இலக்கிய ரீதியாகச் சொல்லிவிட்டார். இந்த வார்த்தைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக மேல்நாட்டு இலக்கிய விமர்சகர்கள் உபயோகப்படுத்துகிற வார்த்தைகள். அவற்றின் அர்த்தமே அப்படி ஒன்றும் பூரணமாகத் தெளிவான விஷயம் அல்ல என்றுதான் சொல்லவேண்டும். நாம் இந்த வார்த்தைகளை உபயோகிக்கும் போது எந்த அர்த்தத்தில் உபயோகப்படுத்துகிறோம் என்று நமக்கும் தெரிவதில்லை; நாம் எழுதுவது வாசிப்பவர்களுக்கும் தெரிவதில்லை என்றுதான் சொல்லவேண்டும்.” இறுதிவரை க.நா. சுப்ரமணியம் கோட்பாடு சார்ந்த விமர்சனம் மீது நம்பிக்கையற்றவராகவே இருந்தார். அவரைப் பொறுத்த வரையில் விமர்சகன் படைப்பிலிருந்து தான் அடைந்த அனுபவத்தை வாசகனோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். விமர்சகன் தன் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னிடம் இயல்பாக இருக்கும் ‘ருசி’யைத் தேர்ந்தெடுத்த இலக்கிய சிகரங்களை வாசிப்பதின் மூலம் வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து உலக இலக்கிய சிகரங்களை அறிமுகம் செய்து வந்தார். மார்ச் 1959 சரஸ்வதி இதழில் ‘பற்றி இலக்கியமும், இலக்கிய விமர்சனமும்’ கட்டுரையில் மரபிலக்கியம் தொடர்பான கல்விவட்ட அறிஞர்களின் நூல்களைக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். அவர்களைப் ‘பற்றி இலக்கியக்காரர்’ என பெயர்சூட்டி அழைத்தார். “முதல் நூலுக்கு முக்கியத்துவம் தந்து, இலக்கியக் கண்ணோடு அதைப் பார்ப்பது விமர்சனமுறை. முதல்நூலில் உள்ளதையெல்லாம் எடுத்துச் சொல்லி, அதில் இல்லாததையும் சேர்த்து என் கெட்டிக்காரத்தனத்தைப்பார் என்று இரண்டு வரிக் கவிதைக்கு இருபது பக்கம் வியாக்கியானம் எழுதுவதுதான் பற்றி இலக்கிய முறை”. தமிழ்க் கல்வி வட்டத்தில் தழைத்து வந்த இலக்கியக் கல்வியின் பலவீனத்தை க.நா. சுப்ரமணியம் அன்றே இனங்காட்டியுள்ளார்.

ஜனவரி 1959 சரஸ்வதி இதழில் தமிழ்க்கவிதை மரபை உலகக் கவிதை மரபோடு ஒப்பிட்டு, வசன கவிதையின் வருகையை வரவேற்றார். இக்கட்டுரைக்கு அவர்தந்த ‘புதுக்கவிதை’ என்னும் தலைப்பே பின்னால் யாப்பினைத் துறந்த கவிதை வடிவிற்குப் பெயராக நிலைபேறு கண்டது. சரஸ்வதி இதழிலேயே க.நா. சுப்ரமணியத்தின் விமர்சன ஆளுமை துவங்கிவிட்டது என்றே கூறவேண்டும். சரஸ்வதி மார்க்சிய சார்புநிலை கொண்ட இதழ் எனினும் தன் கவிதைகளை சரஸ்வதியில் வெளியிட அவர் தயங்கவில்லை. க.நா. சுப்ரமண்யம் எக்கோட்பாட்டையும் பொருட்படுத்தவில்லை. இலக்கியத்தை அவர் அதற்கும் அப்பாலானதாகக் கண்டார்.

க.நா. சுப்ரமணியம் மார்க்சிய சிந்தனைக்கு எதிரிடையானவராகத் தொடர்ந்து இனங்காணப்பட்டார். படைப்பாளிகளின் தத்துவ சார்பு நிலைகளை அவர் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கியதில்லை. ஆனால் குறிப்பிட்ட தத்துவம் பிரச்சாரமாக வெளிப்பட்டு, இலக்கியத்தரத்திற்கு எதிரிடையாக அமைவதையே கண்டனத்திற்குள்ளாக்கினார். மார்க்சியர்கள் அன்று நம்பிக்கை கொண்டிருந்த ‘சோசலிச எதார்த்தம்’ இலக்கியத்தைப் பிரச்சாரக் கருவியாகக் கீழிறக்கியது. மார்க்சியர்களுடனான மோதலின் துவக்கப்புள்ளியாக இந்து நாளிதழில் தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவலுக்கு அவர் எழுதிய மதிப்புரையைக் குறிப்பிடவேண்டும். ‘நாவலாக வேடமணிந்த கட்சியின் பிரச்சார ஏடாக’ அதனைச் சுட்டினார். 1956 டிசம்பர் சரஸ்வதி இதழில் தொ.மு.சி. ரகுநாதன் தன் எதிர்வினையைப் பதிவுசெய்தார். முத்துமோகன், கைலாசபதி போன்ற மார்க்சிய விமர்சகர்கள் தொடர்ந்து க.நா. சுப்ரமணியத்தைக் கடுமையான சொற்களில் தாக்கியுள்ளனர். கைலாசபதி அவர்மீது பெரும் அவதூறுகளையே நூலாக முன்வைத்துள்ளார். க.நா. சுப்ரமணியம் பொழுதுபோக்கு எழுத்துகளையும், பிரச்சார எழுத்துகளையும் இலக்கியமாக ஏற்கவில்லை. இலக்கிய வளர்ச்சிக்கெதிரான இடையூறுகளாக இனங்கண்டார்.

1959இல் எழுத்து இதழ் தோற்றம் கொண்ட போது க.நா. சுப்ரமணியத்தின் விமர்சன இயக்கம் தீவிரமடைந்தது. சி.சு. செல்லப்பாவைப் போல் மணிக்கொடியின் தொடர்ச்சி என்னும் நிலைபாட்டினை க.நா. சுப்ரமணியம் மேற்கொள்ளவில்லை. பி.எஸ். ராமையா, சிட்டி போன்றவர்களைச் ‘சந்தர்ப்ப விசேஷத்தால்’ மணிக்கொடியில் எழுத நேர்ந்தவர்களாகவே குறிப்பிட்டார். புதுமைப்பித்தன், மௌனி, கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி ஆகியவர்களையே மணிக்கொடியின் சாதனையாளர்களாக இனங்கண்டார். ந. சிதம்பர சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா ஆகியோரை மற்றொரு தளத்தில் ஏற்றுக்கொண்டார்.

க.நா. சுப்ரமணியம் ‘வாசக எண்ணிக்கை’ என்பதற்கெதிராக இலக்கியத்தரம் என்பதை முன்நிறுத்தினார். இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளாகதான் இனங்கண்டவற்றைத் தொடர்ந்து வாசகப் பார்வைக்குக் கொணர்ந்தார். தேர்ந்த சிறுகதை ஆசிரியர்களின் பட்டியலைத் தொடர்ந்து வெளியிட்டார். எல்லா பட்டியலிலும் முன்னோடிகளின் பெயர்கள் தொடர்ந்து இடம் பெற்று வந்தபோது, சமகாலப் படைப்பாளிகள் பெயர்கள் தொடர்ந்து இடம் பெறுவதில்லை. அதற்கானக் காரணங்களையும் அவர் முன்வைத்ததில்லை. குறிப்பிட்ட இலக்கியப் படைப்பினைக் குறித்து வேறான மதிப்பீடுகளுக்கும் இடமுண்டு என்பதை ஏற்றுக்கொண்ட க.நா. சுப்ரமணியம் விமர்சகனாகத் தன் மதிப்பீட்டை முன்வைப்பதாகக் கூறினார். தன்னுடைய விரிந்த வாசக அனுபவத்தின் அடிப்படையில் கூறுவதாகச் சொன்னார். மதிப்பீடுகள் பொதுவான தளத்தில் எடுக்கப்படுவதின் அவசியத்தை முன்நிறுத்தி ‘அலசல்’ விமர்சனத்தை சி.சு. செல்லப்பா முன்னிலை படுத்தினார். க.நா. சுப்ரமணியத்தின் எழுத்து இதழுடனான உறவு ஒரு முடிவிற்கு வந்தது.

1963இல் க.நா. சுப்ரமணியம் இலக்கிய வட்டம் இதழைத் தோற்றுவித்தார். ‘அலசல்’ விமர்சனத்தை இலக்கியவட்டம் தலையங்கங்கள் மூலமாகத் தொடர்ந்து கண்டனத்திற்குள்ளாக்கினார். அலசல் விமர்சனம் படைப்பை அல்ல விமர்சகனின் அறிவுக்கூர்மையையே வெளிப்படுத்துகிறது என்றார். “விமரிசனம் இலக்கிய ரஸனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்; கவிதையைப் பற்றிச் சொல்வதைவிட கவிதையைப் படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்” என்பதே அவர் நிலைபாடாக அமைந்தது. “விமரிசனத்தில் ஒரு நோக்குதான் உண்டு என்பதில்லை. பல தரப்பட்ட, பலவிதமான, அடிப்படைகளில் வித்தியாசப்பட்ட நோக்குகள் பலவும் உண்டு” என்பதை அழுத்தமாகத் தொடர்ந்து பதிவுசெய்து வந்த க.நா. சுப்ரமண்யம் இறுதிவரை தன் விமர்சனப் பாதையை விட்டு விலகவுமில்லை. தமிழில் எண்ணிக்கையில் அதிக இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதியவராகக் க.நா. சுப்ரமணியத்தைச் சுட்டவேண்டும். விமரிசனக்கலை, படித்திருக்கிறீர்களா, உலகத்துச் சிறந்த நாவல்கள், முதல் ஐந்து தமிழ் நாவல்கள், இலக்கிய விசாரம், இந்திய இலக்கியம், சிறந்த பத்து இந்திய நாவல்கள் ஆகிய விமர்சன நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய நூற்றாண்டில் அவருடைய விமர்சனக் கட்டுரைகள் இரு தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டுள்ளன. ‘கு.பா.ரா.வின் சிறுகதைகள்’, ‘தமிழில் வசன நடை’ ஆகிய கட்டுரைகள் அவருடைய விமர்சன ஆளுமை வெளிப்பாட்டிற்கு எடுத்துக் காட்டுகளாக அமைகின்றன.

க.நா. சுப்ரமணியத்தை இலக்கிய சிபாரிசுக்காரர் எனக் குறிப்பிடுவதுண்டு. தமிழின் சிறந்த இலக்கியப்படைப்புகளை மீண்டும் மீண்டும் சொல்லி வாசகப்பார்வைக்குக் கொண்டுவந்த பெருமை அவருடையது. உலக இலக்கியத்தைத் தமிழிற்கு அறிமுகம் செய்து தமிழ் இலக்கியப் படைப்பை உலகதரத்தில் மதிப்பீடு செய்ய க.நா. சுப்ரமணியமே வழிவகுத்தார். இலக்கிய விமர்சனம் இலக்கியத்தில் ஒரு துறையாக நிலைபேறு அடைய அவருடைய விமர்சனக் கட்டுரைகள் காரணமாக அமைந்தன. தமிழ் விமர்சகர்களுள் முதன்மையானவராக க.நா. சுப்ரமணியத்தையே மதிப்பிடவேண்டும்.

கிருஷ்ணசாமி. ப, க.நா.சு. இலக்கியத்தடம், காவ்யா.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்