Nov 15, 2013

ஆத்மாநாம் நேர்காணல் - பிரம்மராஜன்

ஆத்மாநாம்

(18. 1. 1951 - 6. 7. 1984)

ஆத்மாநாமின் இயற்பெயர் S. K. மதுசூதன். 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தார். சென்னையிலேயே வளர்க்கப்பட்டார். தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும் ஆத்மாநாமுக்குத் தமிழில் இருந்த ஈடுபாடு அதிகம். அம்பத்தூரில் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பெற்று பிறகு வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்றார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பட்டப்படிப்பைathmanam_thumb6 (B. Com) அதே கல்லூரியில் மாலை வகுப்புகளில் சேர்ந்து படித்தார். 1967ஆம் ஆண்டு சதர்ன் சுவிட்ச்கியர்ஸ் என்ற  கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். 1968ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டுக் கணக்குத்துறை சேர்ந்த விஷயங்களைக் கற்க ஆடிட்டர் அலுவலகம் ஒன்றுக்குச் சென்றார். இந்தப் பின்னணி அவருக்கு கோரமண்டல் கார்மெண்ட்ஸ் என்ற கம்பெனியில் வேலை கிடைக்க ஏதுவாக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1971இல் தயார் உடைகள் தயாரிக்கும் நிறுவனமான ரெங்கா அப்பாரெல்ஸ்க்கு மாறினார். இங்கிருந்துதான் ஆத்மாநாமின் சிக்கலான வருடங்கள் ஆரம்பிக்கின்றன. 1978ஆம் ஆண்டு அய்யப்பன் என்பவருடன் சேர்ந்து டாப்டென் என்ற தயார் உடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை உருவாக்கினார். இதே சமயத்தில்தான் ழ இதழையும் தொடங்கினார். தன்னுடைய நிறுவனத்தைக் கட்டி எழுப்ப இரவுகளிலும் வேலைசெய்ய வேண்டிவந்தது. இரண்டு மூன்று ஈடுபாடுகளில் ஒரே நேரத்தில் தீவிரமாய் இயங்கியபோது Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு 1979 புரசைவாக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு இன்டர் கிராப்ட் என்ற கம்பெனியில் பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு ஓய்வு முக்கியம் என்று மருத்துவர் கருதியதால் தொடர்ந்து பணிக்குச் செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டது. மூளையின் அதி தீவிர இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆத்மாநாம், Lithium, Hyportrym, Largatyl, Fenargon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. 1983 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகத் தனக்கு சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துகளையே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். காப்பாற்றப்பட்டார்.

இந்தச் சமயத்தில் அவர் இடைவிடாது படித்துக்கொண்டிருந்த நூல் A. K. ராமானுஜனின் The Speaking of Shiva. 1983ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் Affective Disorderன் இரண்டாவது தாக்குதல் ஆத்மாநாமுக்கு ஏற்பட்டது. 1984 ஜனவரி இறுதிவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்கை அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் அவர் பெங்களூரில் அவரது சகோதரர் ரகுநந்தனின் வீட்டில் இருந்தார். மார்ச் 9ஆம் தேதி (1984) தனக்குத் தரப்பட்ட மருந்துகளை உட்கொண்டு இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் National Institute of Mental Health and Neurological Sciences மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 20 வரை NIMHANSல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீடு திரும்பிய பின்னர் தனது சகோதரர் வீட்டில் எவரிடமும் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். ஏறத்தாழ ‘உயிரற்ற மனித உடம்பாக’ ஆத்மாநாம் வீடு திரும்பியதாக அவரது சகோதரர் ரகுநந்தன் குறிப்பிட்டார். மார்ச் 1984லிருந்து தனது இறுதி மறைவு வரை (ஜு லை 1984) ஆத்மாநாம் தனக்கு வந்த கடிதங்களையோ, பத்திரிகைகளையோ, அழைப்பிதழ்களையோ படிக்கவில்லை. பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. பெங்களூரில் தன்னுடைய சாவை முன்கூட்டித் தீர்மானித்ததுபோல ஏறத்தாழ 120 தபால் கார்டுகளை வாங்கி வைக்கிருந்திருக்கிறார். நண்பர்களின் முகவரிகள் முதலிலிருந்து கடைசி வரை திருத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தன.

**********

ந்தப் பேட்டி 14-4-83 அன்று மதியத்திற்குமேல் உதகமண்டலத்தில் நிகழ்த்தப்பட்டது. இடம் செயின்ட் மேரீஸ் ஹில். கோடை என்பதால் கண்ணாடி ஜன்னல்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. தூரத்துத் தோட்டங்களில் மருந்து தெளிக்கும் யந்திரங்களின் தொடர்ச்சியான ரீங்காரம் கேட்கிறது. அறைக்குள் தாமோதர் தீட்டிய தைல வண்ண ஓவியம். அதை நோக்கியபடி ஆத்மாநாம் ஒரு நீல நிற ஒயர் நாடாக்கள் பின்னிய நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பேட்டியின்போது Charms சிகரெட்டுகளைப் பிடித்தவண்ணம் இருக்கிறார். ஸ்டீல் டீப்பாயின் மீதிருந்த Nippo batteries-ன்டீ ட்ரேயை சாம்பல் கிண்ணமாகப் பயன்படுத்துகிறார். காலர் வைத்த காக்கியுமல்லாத மிலிட்டரி பச்சையுமில்லாத ஒரு நிறத்தில் ஜிப்பா ஷர்ட் அணிந்திருக்கிறார். பதில்களை இடைவிட்டு நிறுத்திப் பேசுகிறார். சில நேரங்களில் தடையற்ற பிரவாகமாகவும் பதில்கள் வெளிப்படுகின்றன. இந்தச் சமயத்தில் ஆத்மாநாம் படித்துக்கொண்டிருந்த புத்தகங்கள், Stalin : an Impartial Study of the life and works of JosephStalin (Stephen Graham), Octavio Paz-ன் கவிதைகள், Gunter Grass-ன் கவிதைகள், நவீன ஐரோப்பியக் கவிஞர் வரிசையில் வெளிவந்த Tadeuz Rosewicz. பேட்டி பதிவு செய்யப்பட்டுப் பிரசுர நிலையை அடைந்திருக்கிறது. கேள்விகள் மட்டுமே முன்தீர்மானத்துடன் உருவாக்கப்பட்டு இருந்தன. மேலும் அக்கேள்விகளும் ஆத்மாநாமின் பதில்களால் ஈர்க்கப்பட்டுவேறு வடிவங்களை அடைந்திருக்கின்றன. 24-4-83 அன்று இரவு கோவை, அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட இந்தப் பேட்டிக்கும் தொடர்பு ஏதுமில்லை.

பிரம்மராஜன்: தமிழ்ப் புதுக்கவிதைல 20 வருஷம் பழக்கம் இருக்குன்னு கணக்கு வெச்சுக்கலாம். எழுத்து பத்திரிகைல இந்தப் புதுக்கவிதை ஒரு ஆரம்ப நிலைல இருந்தது. கொஞ்சம் கழிஞ்சு கசடதபற பத்திரி்கை காலத்தில எழுதப்பட்ட கவிதைகள் வளர்ச்சியாயிருந்தது. பின்னால ‘ழ’ பத்திரிகையில வந்த கவிதைகள், இப்ப ‘எழுத்து’ கவிதைகள், ‘கசடதபற’ கவிதைகள் என்கிற ஒரு காலப்பிரிவாக வைத்துக்கொள்ளலாம். இவை வளர்ச்சி ரீதியா என்னென்ன நிலைகளில் இருந்தன? இயல்பு ரீதியா என்ன வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கு?

ஆத்மாநாம்: தமிழின் புதுக்கவிதைகள் பாரதியாரிடமிருந்து ஆரம்பமாகின்றன என்று கணக்கு பார்த்தா சுமார் 60 ஆண்டுகளுக்குத் தமிழ்ல புதுக்கவிதைகள் இருக்குன்னு சொல்ல முடியும். பாரதியாருக்கு அடுத்து வரக்கூடிய கவிஞர்கள்னு ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ‘எழுத்து’ பிரசுரமான புதுக்குரல்களின் மூலம் தெரியவந்த கவிஞர்களின் பெரும்பான்மையான கவிதைகள் மேற்கத்திய தத்துவத்தையோ அல்லது கிழக்கத்திய

தத்துவத்தையோ தூக்கலாக அறிவிக்கும்படியாக இருந்தன. அதற்கப்பறம்வந்த ‘கசடதபற’ கவிதைகளில் பௌதிக உலகத்தின் தாக்குதல் மற்றும் அனுபவம் வெளிப்படையா தெரியவந்தது. சமீபத்திய ‘ழ’ கவிதைகள் சுய அனுபவம், சுய சிந்தனையின் அடிப்படைல இருந்தன.

பிரம்மராஜன்: எழுபதுகளில் இருந்த புதுக்கவிதைகளுக்கும், தற்போதைய புதுக்கவிதைகளுக்கும் என்ன வித்தியாசம்? முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா?

ஆத்மாநாம்: 70களில் இருந்த புதுக்கவிதைகள் விரைவாக உற்பத்தி செய்யப்பட்டவை. தற்போது கொஞ்சம் நிதானமாக யோசித்து எழுதப்படுகின்றன. 70ன் கவிதைகள் இன்றைய பிரபல வாரப் பத்திரிகைகளில் வெளிவரும் கவிதைகளுக்கு முன்மாதிரியாக அமைந்துவிட்டது ஒரு சோகமான விஷயம்.

பிரம்மராஜன்: நடை இதழில் சி. மணி, ‘புதுக்கவிதை புரியவில்லை’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதாவது 1969-70ல். இன்றைக்கும் இந்த நிலை மாறிவிடவில்லை. இதுபற்றி?

ஆத்மாநாம்: இதைப்பற்றிச் சொல்லும்பொழுது - இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் கவிதைகளில் இருப்பதால் - ஒருவிதப் போக்கின் கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுகின்றன, இன்னொரு வகை மீண்டும் ஓரிரு முறை படித்தவுடன் ஓரளவோ அல்லது முழுமையாகவோ புரிகின்றன. ஆனால் புரிதல் என்பது தனிப்பட்ட நபரின் விஷயமாகும். எனவே கவிதைகள் புரிகின்றன, புரியவில்லை என்பது தன்னிலை விளக்கமாகத்தான் அமைகின்றது.

பிரம்மராஜன்: ஒரு நல்ல கவிதைக்கும் அதிலிருக்கும் obscurity, அதாவது புரியாத தன்மைக்கும் சம்பந்தமிருக்கா?

ஆத்மாநாம்: இது கவிதையின் கருப்பொருளைப் பொறுத்த விஷயம். ஒருவரின் அனுபவம் சிக்கலானதாக இருந்தால் கவிதைகள் இருண்மையுடன் கூடியதாக இருக்கும். சிலசமயம் கவிதைகள் தெளிவாகவே வெளியாகவும் கூடும். எனவே கவிதைக்கும் obscurityக்கும் நேரடித்தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. சில கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுவதால் அது வார்த்தைக்கு மீறிய பொருளைக் கொள்ளவில்லை அல்லது கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியாது. அதே சமயம் ஒரு கவிதை புரியவில்லை என்னும் பொழுதும் அந்தக் கவிதைவில் குற்றமுள்ளதுஅல்லது வாசகனிடம் குற்றமுள்ளது என்றும் சொல்லமுடியாது. சிறிது காலம் தாழ்த்தித்தான் எதுவும் சொல்ல முடியும்.

பிரம்மராஜன்: ஒரு கவிதை சிக்கலா இருக்கறதுக்கு வாழ்க்கைல இருக்கற complexity காரணமா, இல்லை அதை எழுதின கவிஞன் ரொம்ப complex ஆன அனுபவமுடையவனா இருக்கான்கிறது காரணமா, அல்லது அவனது சிந்தனை, வெளிப்பாட்டு முறையே complex ஆக இருப்பது காரணமா? சிந்தனை வெளிப்பாட்டு முறையே complex ஆக

இருக்கும்போது it is indirectly influenced by his sociallife. அதனால் வாழ்க்கை நிர்ப்பந்திக்கிறதால்தான் கவிதை complex ஆகிறதா?ஏன்னா, மேற்கத்திய அரூப ஓவியங்களைப் பத்திச் சொல்லும்பொழுது வாழ்க்கை அரூபமாகிவிட்டதால்தான் ஓவியங்களும் அரூபமாயிருச்சுங்கறாங்க.

ஆத்மாநாம்: கவிதைகள், ஓவியங்கள் அரூமாயிருப்பது காலத்தோட நிர்ப்பந்தம்.

பிரம்மராஜன்: விளக்கமா சொல்லுங்க.

ஆத்மாநாம்: ஒரு நேரிடையான புகைப்படத்துடன் ஓவியத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது ஓவியம் குழப்பமாகத் தெரிகிறது. ஆனால் ஓவியம் வரைபவன் தன் முழு தீட்சண்யத்தையும் அதில் கொண்டுவருவதற்காக அப்படி வரைகிறான். ஆனால் கவிதை புரியாததா வருதுன்னு சொல்லும்போது அந்த obscurity ஒரு சில சமயம் forced obscurity ஆக இருக்க முடியும். சில விஷயங்களை நேரடியாக எழுத்தின் மூலம் சொல்ல முடியாது. எனவே வேறுவிதமான வார்த்தைகள் மூலமாய் அதைத் தெரிவிக்கிற முயற்சிகளாக இருக்க முடியும். உதாரணமாக ‘மறு பரிசீலனை’ என்ற கவிதையில் கடைசி வரி.

பிரம்மராஜன்: மறு பரிசீலனை உங்க கவிதை இல்லையா?

ஆத்மாநாம்: ஆமாம். அதில ‘புறப்பட்டாகிவிட்டது கறுப்புப் படை’, அதுக்கு முன்னாடி ‘தொண்டையில் சிக்கிக்கொண்ட மீனின் முள் என’, அப்பறம் ‘துணிக் கயிற்றில் தொங்கும் குரல்வளைகள் போல’ இப்படிப் பல விஷயங்களை indirect ஆகச் சொல்லவேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் obscurity வருது.

பிரம்மராஜன்: அதைத் தவிர்க்க முடியாதுன்னு சொல்றீங்க.

ஆத்மாநாம்: அது ஒரு காலத்தின் நிர்ப்பந்தம்னு ...

பிரம்மராஜன்: அதாவது வெளிப்பாட்டில் தவிர்க்க முடியாததா அல்லது கருப்பொருளிலேயே தவிர்க்க முடியாததா?

ஆத்மாநாம்: அது situationsனால தவிர்க்க முடியாததாகுது.

பிரம்மராஜன்: Situationsனா? இன்னும் தெளிவா சொல்லணும் நீங்க.

ஆத்மாநாம்: Situationsனு சொல்லும்போது ...

பிரம்மராஜன்: ஒரு காலகட்டம்னு சொல்லலாமா அதை?

ஆத்மாநாம்: ஒரு காலகட்டத்தின், சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணிகளைப் பொறுத்து அது அமையறது.

பிரம்மராஜன்: சில கவிதைங்க ரொம்ப plain ஆகவே இருக்கு. சிக்கலான வார்த்தைங்க ஏதும் போடறதில்லை. ஆனா படிச்சு முடிச்ச உடனே comprehensiveஆக ஓரு ஒட்டுமொத்தமான பார்வைக்குப் புரியாம போயிடறது. இதை plain poetryன்னு நாம எடுத்துக்கிட்டோம்னா plain

poetryகூட புரியாம போயிடறதுக்கு chance இருக்குன்னு அர்த்தம்தானே. இதைப் பத்தி நீங்க ஏதாவது சொல்றீங்களா...

ஆத்மாநாம்: Plain poetryன்னு சொல்லும்போது ஆனந்தோட பல கவிதைகள் plain poetry ஆகதான் வருது...

பிரம்மராஜன்: உதாரணத்துக்கு எதையாவது சொல்ல முடியுமா... ?

ஆத்மாநாம்: ‘ம்... அதோ அந்தச் சிறுபறவை அழைத்துவரும் மேகம் தண் என எனை நிறைக்கையில், நான் இல்லாது போவேன்’- இந்தக் கவிதையில் அந்தப் பறவை, அப்றம் ‘நான் இல்லாது போவேன்’ அப்படின்ற expression எல்லாமே தெளிவாக இருக்கு.

பிரம்மராஜன்: அதாவது statement plain ஆக இருக்கு.

ஆத்மாநாம்: ஆமாம். ஆனா முழுக்கவிதையும் படிச்சா உங்களுக்கு அதில் புரியாத ஏதோஒரு அம்சம் இருக்குன்னு, அதில் அவர் உணர்ந்த ஏதோ அனுபவம் உங்களுக்குச் சரியா transfer ஆகலை அப்படிங்கற மாதிரி quality அந்த poemல இருக்கு. அதனால் Simple poemகூட complexஆக இருக்க வாய்ப்புகள் இருக்கு.

பிரம்மராஜன்: அதையேதான் நானும் கேக்கறேன்.

ஆத்மாநாம்: இன்னொரு நேரத்திலே ஒரு complex poem, ஒரு absurd poem ஒண்ணை நாம assess பண்ணி பாக்கறப்ப புரியக்கூடியதா இருக்கு. இதுக்கு உதாரணம் என்னோட கவிதைகள்லேர்ந்தே எடுத்துக்காலம்.

பிரம்மராஜன்: எந்தக் கவிதைய எடுத்துக்கலாம்?

ஆத்மாநாம்: என் ‘மறுபரிசீலனை’ கவிதையையே எடுத்துக்கலாம். அது நேரிடையா obscure poem கிடையாது; absurd poem ஆகச் சொல்லலாம். கொலாஜ் மாதிரி various cuttingsஐ வச்சு ஒரு paintingஐ paste செய்யற மாதிரி.

பிரம்மராஜன்: இப்படிச் சொல்லலாமா? absurdஆக இருக்கறது ரொம்ப logical ஆகப் பாக்கறவனுக்கு obscure ஆகத் தெரியலாமில்லையா?

ஆத்மாநாம்: That is possible.

பிரம்மராஜன்: ஏன்னா எல்லாம் ஒரு ஒழுங்கிலேயே இருக்கணும்னு எதிர் பார்க்கிறவனுக்கும் absurdஆக இருப்பது ஒரு ஒழுங்கில்லாததாய்த் தோன்றலாம். அதனால இன்றைய சூழல்ல விளக்கம் தர்றது அதாவது interpretations தவிர்க்க முடியாததாகிப் போகிறது. இதற்குக் காரணம் பகையான ஒரு சமூகத்தில் கவிஞன் அந்நியமாகிப் போனதாலா? அல்லது கவிதைங்கற ஒரு அறிவுத்துறையிலே, மற்ற அறிவுத் துறைகளின் பாதிப்புகள், உதாரணத்திற்கு சைக்காலஜி, பெயிண்டிங், இசை மற்றும் ஆஸ்ட்ரோஃபிஸிக்ஸ், டைம் இந்தமாதிரி விஷயங்கள் கலந்துவிட்டது காரணமா?

ஆத்மாநாம்: இதில அந்நியமாகிப் போறதுங்கறது அம்சம் பல நூற்றாண்டுகளாகவே மனிதன் ஒரு சமூகத்திலிருந்து அந்நியமாகிப்போய் வரான்.

அதனால ஒவ்வொரு காலகட்டத்திலேயும் அந்நியமாதல்ங்கற அந்தவிஷயம் உணர்ந்தோ உணராமலோ நடந்திருக்கு. அவன் எழுத் தாளனாயிருந்தா எழுத்திலேகொண்டுவரான். ஓவியனா இருந்தா அதை ஓவியத்துல கொண்டுவரான். அதனால் இந்த அந்நியமாதல்ங்கறதநாம பல ஆயிரம் வருஷங்களாகவே ஒரு விதத்துல உணர்ந்து வரோம். இந்திய சிற்பங்களில் இருக்கக்கூடிய சில புரியாத் தன்மைகள் - யாளி மாதிரி - இல்லாத மிருகங்கள் ...

பிரம்மராஜன்: புரியாத மிருகங்கள...

ஆத்மாநாம்: ஆமாம். புரியாத மிருகங்களைக் கொண்டுவரும்போது அந்த இடத்தில் அவன் அவனுடைய கற்பனையில் அந்நியமானதால்தான் அந்தமாதிரி கொண்டுவர முடிஞ்சிருக்கு. ஆனா இன்றைக்கு ஓருவன் அந்நியமாகிப் போறான்னா அதை அவன் முழுக்க முழுக்க உணர்றான்.

பிரம்மராஜன்: இல்ல... நான் கேக்கற கேள்வி ...

ஆத்மாநாம்: நீங்க கேக்கற கேள்வி பாதிப்புகள், ஓவியம் மற்றும் சைக்காலஜி போன்ற அறிவுத்துறைகள்லயிருந்து வந்த விஷயமான்னு ...

பிரம்மராஜன்: இல்ல... கவிதைங்கற துறையில ஒரு perceptive poet வேறுசில துறைகளை அனுமதிக்கிறான். தன் சிந்தனைக்குள்ள அப்படி அவன் அனுமதிக்கறதால கவிதைகள் சிக்கலாகறதான்னு கேக்றேன்.

ஆத்மாநாம்: இல்லை... அதில தெளிவுதான் வர முடியுமே தவிர...

பிரம்மராஜன்: தெளிவு கவிஞனுக்கு வர முடியும். இந்தத் துறைகள் பற்றித் தெரியாத ஒருவாசகனுக்குத் தெளிவின்மை வரக் காரணமாக இருக்க லாம் இல்லையா?

ஆத்மாநாம்: இருக்கலாம்.

பிரம்மராஜன்: வேறு ஏதாவது விளக்கம் தர முடியுமா? இதைத்தவிர inter- pretationsன் அவசியத்தைப் பற்றி ஏதாவது சொல்லமுடியுமா?

ஆத்மாநாம்: சில கவிதைகள் புரியாமயே போகிறபோது அதைப் புரிஞ்சிருக்கிற ஒருத்தர் வந்து விளக்க முற்படறார். அதாவது ஒருத்தருடைய சுய அனுபவமானது இன்னொருத்தருக்கு முழுக்க முழுக்கவோ இல்லை ஓரளவுக்கோ அந்த அனுபவத்தின் கிட்ட நெருங்கற மாதிரி இருக்கும்போது அந்தக் கவிதையை அவர் புரிஞ்சுக்கறார்னு சொல்ல முடியும். அதனால இது புரியாத சில வாசகர்களுக்கு விளக்க முற்படறார். இதன் மூலமா poetsக்கு quantity wise ஒரு contribution இருக்கு. உங்க கவிதைகளைப் புரியலைன்னு first readingல சொல் லிடறவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. ஆனா அதுக்குத்தான் முன்னாலேயே 2அல்லது 3 தடவை படிக்கணும்னு சொல்லியிருக்கு. அப்பறம் உங்க interpretation பிரகாரமா ஒரு வாசகன் ஒரு கவிஞனின் அனுபவத்துக்கு இணையா தன்னை உயர்த்திக்கணும்கற ஒரு எதிர்பார்ப்பு வந்து அந்த இடத்துல இருக்கு. ஆனா நேரிடையா ஒரு வாச

கன் எங்கேயோ இருக்கான். ஐநூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கான். அவன் இந்தக் கவிதையைப் படிக்கிறான். அவனுக்கு அந்தக் கவிதை புரியுணும்னு சொல்லும்போது வேறு யாரோ ஒருவர் அந்தக் கவிதைக்கு விளக்கம் சொல்லறப்ப ஓரளவுக்கு உள்ள போறதுக்கு வாய்ப்பு கிடைக்குது. அந்த வகையில அந்தமாதிரி விளக்கங்கள் தேவை. ஏன்னு கேட்டா, கவிதைகள்ல இன்னைக்கும் நாம ஒரு புறப் படற நிலையிலேதான் இருக்கோம். நாம எந்த நிலையிலும் போய்ச் சேர்ந்திடலை.

பிரம்மராஜன்: எழுதப்பட்ட மொழி ஒரு குறியீடுன்னு நாம சொல்றோம். அதை ஒரு அடிப்படையாவெச்சு ஆரம்பிச்சா கவிதையும் எழுதப்பட்ட சொற்களால்தான் ஆகியிருக்கு. அப்ப கவிதைபுரிவதற்கான சாத் தியப்பாடுகள் என்னென்ன?

ஆத்மாநாம்: அகநோக்குப் பார்வைகள் கொண்ட கவிதைகள் சிலதுல மொழி வெறும் குறியீடா மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமா ஆனந்தோட கவிதைல பறவை. அவரோட பல கவிதைகள்ல பறவை வருது. தொடர்ச்சியா வருது. So பறவைங்கறது ஒரு விஷயத்தைக்குறிப்பிடறது. அதாவது பறக்கறது. சுதந்திரமா பறக்கறது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாம பறக்கறது. அப்படிங்கிறதை அது குறிப்பிடறது. அந்த வகையில ஆனந்தோட கவிதைல பறவைங்கறது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஒரு முழு சுதந்திரத்தோட எங்கே வேணும்னாலும் திரியக் கூடிய வாய்ப்பை எதிர்நோக்கறது. அதனால மொழிப்பயிற்சி ஓரளவுக்கு இருக்கிறவாசகர்கள் குறியீட்டோட நியாயத்தையும் அர்த்தத் தையும் புரிஞ்சுக்க முடியும்.

பிரம்மராஜன்: ஆனா கவிதை எல்லோருக்கும் புரியல. புரியாத கவிதை எழுதறது ரொம்பத் தப்புங்கறமாதிரி சொல்றாங்களே அது பத்தி என்ன சொல்றீங்க? அப்ப எதுக்காக எழுதறீங்கனுகேக்கறாங்க. அதாவது உங்களுக்கே புரியாத அல்லது வாசகனுக்குப் புரியாத கவிதை எழுதறதுலஎன்ன பிரயோஜனம்னு கேக்கறாங்க. இது validஆன காரணமாக இருக்க முடியுமா? வாசகர் பக்கத்துல இருந்து.

ஆத்மாநாம்: ஒரு individualங்கறவனுக்கு நேரடியா ஒரு consciousல சில அனுபவங்கள் பதிவாயிருக்கு. சில அனுபவங்கள் sub-consciousல பதிவு ஆகியிருக்கு. இன்னும் சில அனுபவங்கள் அவனுக்கே புரியாம, தெரியாம அவனுடைய brain cellsல போய் record ஆயிருது. இப்ப அவனுக்குக் கனவுகள் வருது. அந்தக் கனவுகள்ல ஒரு ஊஞ்சல் வரது. அவன் சைக்கிள் ஓட்டிண்டு போறான். இல்ல groundல இருக்கானோ, இல்ல யாருமில்லாத கடற்கரையில்தனியா இருக்கானோ, இந்த மாதிரி பல்வேறு காட்சிகளில் அவனே இருக்கான்.

பிரம்மராஜன்: யார்? அவன்... அந்தக் கவிஞனா?

ஆத்மாநாம்: இல்லை ஒரு individual. அவனுக்கு ஒண்ணுமே புரியல. அதை அவன் probe பண்ணிட்டு போகும்போது ஒண்ணு அவன் அதை

சைக்காலஜிகலா அப்ரோச் பண்ணனும். அவனோட life experienceல இருந்து அது கிடைக்கறதா இல்ல lifeக்கு அப்பாற்பட்ட விஷயங்களிலிருந்து கிடைக்கற experienceல இருந்து இந்த மாதிரி ஞாபகங்கள் வருதான்னு அவனுக்கே தெரியாது. அந்த நேரத்தில் அவன் creative writerஆக இருந்தா சில விஷயங்கள் intuitiveஆக புலனாறது. அதை கவிதைல கொண்டுவரபொழுது அது complex metaphor ஆகவோ இல்ல complex imageஆகவோ இருக்கறதுக்கு possibilities இருக்கு. இதை ஒருத்தன் புரிஞ்சுக்கணும்னா அது அந்தக் கவிஞனுக்கே immediate ஆக சாத்தியம் இல்லை. So வாசகன் அந்த இடத்துல கொஞ்சம் தேட வேண்டியிருக்கு. ஆனா அதுக்கு ஏதாவது ஒரு நாள் ஒரு சைக்காலஜிஸ்டோ இல்ல brain chemist டோ ஒரு விளக்கம் தர முடியும். ஆனா அதுகூட ஒரு definite answer என்று கூற முடியாது. இவன், இவனோட அர்த்தம்தான் முழுமையான அர்த்தமாக இருக்க முடியும். அது கிடைக்கிற வரைக்கும் அந்தக் கவிதையை அவன் வாசிச்சிட்டே இருப்பான். அவ்வளவுதான்.

பிரம்மராஜன்: இப்படிச் சொல்லலாமா? அதாவது ஒரு கவிஞன் தனக்கான ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கொண்டு வருவதன் மூலம் பல மனிதர்களுக்கான, பல தனிநபர்களுக்கான தீர்வைக் கொண்டு வரான் அப்ப டின்னு F. R. லீவிஸ், T. S. எலியட்டின் கவிதைகளைப் பற்றிச் சொல்லுவார். அந்த மாதிரி இந்த இருண்மை அல்லது புரியாத தன்மை, conscious, sub-conscious இன்னும் pre-conscious statesல இருக்கிற சில மன நிலைகளை ஒரு கவிஞன் சொல்லறப்போ, அதை முதல்முறை படிக்கற வாசகனுக்குச் சிரமம் ஏற்படலாம். ஆனா அதே கவிதையை அனுபவம் ஏற்பட்ட பிறகு பத்து வருஷம் கழிச்சுப் படிக்கறான்னு வச்சுக்குவோம், அப்ப அந்த கவிதை புரியலாமில்லையா? இந்தக் காரணத்துக்காக அது புரியறதோ புரியலையோ, உபயோகமோ இல்லையோ அதை அந்தக் கவிதையை வாழ்வுக்கு கொண்டுவரது, to bring it into existence அவசியம்தான்னு எனக்குப் படறது.

ஆத்மாநாம்: கண்டிப்பா நாம் காத்திருக்கணும்தான்.

பிரம்மராஜன்: எதுக்கு? கவிதை புரியறதுக்கா?

ஆத்மாநாம்: ஆமா, புரியதுக்காகக் காத்திருக்கணும். ஆனா அதுக்காகப் புரியாத கவிதைகள்தான் கவிதைகள்னு நான் ஒத்துக்கமாட்டேன்.

பிரம்மராஜன்: சரி.

ஆத்மாநாம்: இன்னும் எனக்கு, நான் இருக்கக்கூடிய சமூகத்துல எந்த அளவுக்கு நான் முரண்பட்டிருக்கேன் அல்லது ஒத்துப்போறேன்னு விஷயங்கள் வரும்போது அதுக்கு நான் நேர்மையா இருக்கேன்னா அதை நான் கவிதைல கொண்டுவந்திருக்கணும். அதைச் செய்யாம நான், வெறும் எனக்குள்ள இருக்கற பிரச்சினைகளை மட்டுமே வச்சி ருக்கேன்; அது வந்து பத்து வருஷமோ இல்ல 20 வருஷமோ கழிச்சுப் புரியும்னு, இல்ல வேற யாராவது சைக்காலஜிஸ்டோ, சைக்கியாட்ரிஸ்டோ வந்து அதை interpret பண்ணுவான் அப்படின்னு நான் காத்

திருக்கேன்னு சொன்னா அது முழுமையான வாழ்க்கையை வெளிப்படுத்தினதா ஆகாது. இரண்டும் balancedஆக இருக்கணும்.

பிரம்மராஜன்: கவிதைகள் சில சமயம் அரூபத்தன்மை பெறுகின்றன. எடுத்துக்காட்டா abstract paintings போல, நம் ராகங்களின் வடிவைப் போல, Symphoniesஐ போல, இந்த மாதிரியா இருப்பதற்கு வேறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கறாங்க. அதாவது கவிஞர் intend பண்ணாத அர்த்தங்களை வேற கொடுக்க வேண்டியிருக்கு. அப்படிக் கொடுக்கும்போது கவிஞனின் கவித்துவக் கருத்துருவத்துக்குப் பாதகம் விளையாதா? அவன் என்ன நினைச்சான்கறதுக்கு?

ஆத்மாநாம்: எந்த விதமான பாதகமும் விளையாது.

பிரம்மராஜன்: எப்படி?

ஆத்மாநாம்: ஒரு கவிதைக்கு நாலு பேர் நாலு விதமான பொருள் கொடுக்கறாங்கன்னு வச்சுப்போம். இவன் இவனுக்கு intuitiveஆகப் புரியற போதுதான் அந்தக் கவிதைக்கு ஒரு பொருளைக் கொடுக்க முடியும். அதுவரைக்கும் அந்த நாலு பேர் கொடுக்கறதையும் இவன் ஒரு listener எப்படி respond பண்றாங்கிற levelல அதை observe பண்ணுவானே ஒழிய இவன் அதை interpret பண்ணலை. நாலு பேர் நாலு பொருளைக் கொடுக்கறாங்க. நாலு பேரும் நாலு different persons ஆக இருக்கறதால அவங்கவங்க தங்கள் life styleக்கு ஏத்தபடி அதுக்குப் பொருளைக் கொடுக்க முடியும். So அந்த நாலு interpretationsம் அவங்கவங்க அளவிலே சரி, தப்புன்னு கணிக்க முடியாது. இந்தப் புரியாத தன்மைங்கறது ஒரு மனுஷனுக்கு ஆதிகாலத்துல இருந்து இன்னிவரைக்கும் இருந்திண்டுருக்கற விஷயம். இந்த வாழ்க்கையே எனக்கு விளங்கலை, இதுக்குப் பொருளே இல்லை, அப்படின்னு சொல்ற தன்மை பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே இருந்திட்டிருக்கு. இந்த வாழ்க்கைக்கான அர்த்தத்துக்குத்தான் பல சமயங்களும், பல புத்தங்களும், பல இலக்கியங்களும் முயற்சி செய்யறது. அதனால இந்த வாழ்க்கைக்கான முழுப்பொருளை... அவன் எந்த அளவுக்குத் தன்னோட வாழ்க்கைக்கு நேர்மையானவனா இருக்கான்கறதை வச்சுதான்கணிக்க முடியும். மத்தபடி எந்த விதமான அளவுகோலும் இருக்கவே முடியாது. So நாலு பேர்நாலு விதமா பொருள் கொடுத்தாலும்கூட அந்தக் கவிதைக்கு என்னிக்காவது ஒரு நாள் சரியானபொருள் கிடைக்கும்னே நான் நினைக்கிறேன்.

பிர:அதாவது அந்தக் கவிஞர் intend பண்ணின அளவுக்கு அந்த meaning இருக்குமா? இல்லை அதைவிடவும் அழகாகூடக் கொடுக்க முடியுமா?

ஆத்மாநாம்: ம்ம் அதைவிட அழகாகக்கூடக் கொடுக்க முடியும்...

பிரம்மராஜன்: ஒரு தடவை டி. எஸ். எலியட்டோட Love Song of Alfred J. Prufrockக்கு ஒருத்தர் interpretation எழுதினார். அதைப் படிச்ச எலியட் இது ரொம்ப ஜோரா இருக்கு. ஆனா நான் இப்படி நினைக்கவே இல்

லைன்னு சொல்லிட்டார். சில சமயம் interpretations கவிதைகளையே enhance பண்ற அளவுக்கு வந்துடுது.

ஆத்மாநாம்: ஆமாம்.

பிரம்மராஜன்: Committed poetryன்னு சொல்றாங்க இல்லையா? அதை ஈடுபடுத்திக்கொண்ட கவிதைகள்னு மொழிபெயர்க்கலாம். அந்தமாதிரி தமிழ்ல ஏதும் எழுதப்பட்டிருக்கா?இது முதல் கேள்வி. ஒரு துணைக் கேள்வி: மேற்கத்திய நாடுகள்ல இந்தமாதிரி எழுதப்பட்டிருக்கா? அவைகளின் தரம் எப்படி? நீங்க நிறைய மேற்கத்திய கவிதைகளைப் படிச்சிருப்பீங்கங்கிற நம்பிக்கையில் இதைக் கேக்கறேன்.

ஆத்மாநாம்: Committed poetryன்னு சொல்றப்ப முழுக்க முழுக்க ஒரு கவிஞன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் ஒழிய கவிதைகள் சாத்தியமே கிடையாது. அதுக்குமேல நாம் committed poetryன்னு சொல்றப்ப, ஒரு social commitmentஐ refer பண்ற மாதிரி ஆயிடறது.

பிரம்மராஜன்: Social commitmentனா சமுதாயத்துக்கு உண்மையா இருக்கறது...

ஆத்மாநாம்: சமூகத்துல ஈடுபாடோட நேர்மையா இருக்கறதுன்னு சொல்லலாம். சமூகத்துல ஈடுபாடு கொண்ட கவிதைகள் ஒரு புறம். இன்னொருபுறம் தன்னைப் பற்றித் தேடலுடன் கூடிய கவிதைகள். இரண்டுமே committedதான். ஆனா ஒரு கவிஞன் தன்னைப் பற்றி மட்டுமே தேடிக்கொண்டிருந்து தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு பற்றி எதுவும் கூறாமல் இருந்தால், அந்தமாதிரிக் கவிஞர்கள் காலப்போக்கில் தள்ளப்பட்டுவிடுவார்கள். ஆக, ஒரு கவிஞனை முழுமையான கவிஞன்னு சொல்லணும்னா அவனுக்கு social ஆகவும் ஒரு commitment இருக்கணும் personal ஆகவும் ஒரு commitment இருக்கணும். ஒரு angleல மட்டும், வெறும் social commitment அல்லது Personal commitment மட்டும் இருந்தா முழுக்கவிஞன்னு சொல்லிட முடியாது.

பிரம்மராஜன்: முழுமையடையாத கவிஞன்னு சொல்லிடலாமா...

ஆத்மாநாம்: முழுமையடையாத கவிஞன்னு சொல்ல முடியாது. அது implied. இரண்டும் ஒண்ணுதான்.

பிரம்மராஜன்: சரி, இன்னொரு கேள்வி உள்முகத்தேடல்னு சில கவிஞர்களின் கவிதைகளைச் சொன்னீங்க இல்லையா...

ஆத்மாநாம்: இல்ல, அகநோக்குப் பார்வைன்னு...

பிரம்மராஜன்: சரி, அகநோக்குப் பார்வை அல்லது உள்முகத்தேடல் அல்லது introvert outlook அல்லது inlookனு சொல்லலாம். நீங்க வேறகவிதைகள் இருக்குன்னு சொன்னீங்களே, அதாவது objective ஆக அல்லது புற நோக்கிலே எழுதப்பட்ட கவிதைகளும் இருக்குங்கறீங்க. ஆனா இப்ப நீங்க குறிப்பிட்ட கவிஞர்கள் நிறைய பேர் இந்த அகவயக் கவிதைகள் நிறைய எழுதக் காரணம் அது ஒரு typical ஆன

Indiannessன் பாதிப்போன்னு சந்தேகமா இருக்கு. இதைப் பத்திகொஞ்சம் தெளிவு பண்ண முடியுமா?

ஆத்மாநாம்: பொதுவா கவிதையை seriousஆக எடுத்திட்டிருக்கிற கவிஞர்கள் மிகக்குறைவா இருக்கற இந்த நேரத்துல, சில கவிஞர்கள்தான் committedஆக இருக்காங்க. அவங்க அகநோக்குப் பார்வை கொண்ட கவிஞர்கள் ஆனாலும் சரி, புறவயப்பட்ட பார்வை இருக்கற கவிஞர்கள் ஆனாலும் சரி, மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்காங்க. அவங்க கவிதைகள்ல புறவயமான பாதிப்புகள் இருக்கக்கூடிய கவிதைகள் அதிகமாக இல்லன்னு சொல்றது ஒரு பொதுவான முறைல சொல்லக்கூடிய குற்றச்சாட்டாகத்தான் எடுத்துக்க முடியும். புறவயமான கவிதைகளை எழுதச் சொல்லி எதுவும் force பண்ண முடியாது. எந்த state ஆலயும் force பண்ண முடியாது.

பிரம்மராஜன்: Stateன்னா அமைப்புன்னு சொல்லலாமா...

ஆத்மாநாம்: ம. எந்த அமைப்பாலயும் force பண்ண முடியாது. அதனால தான்ஜோசப் ப்ராட்ஸ்கி போன்ற கவிஞர்கள் தங்கள் தேசத்தை விட்டு வேற தேசத்துக்குப் போய் கவிதைகள் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உருவாறது. Commitmentங்கறது அவங்ககவிதைக்கு அவங்க committedஆக இருக்காங்களா இல்லையான்னுதான் பார்க்க முடியுமேதவிர மற்றபடி social commitmentஓட எழுதறாங்களா இல்லையான்னு பாக்க முடியாது. அவங்களே மனிதாபிமான அடிப்படைல எழுதினாங்கனா அதை நாம வரவேற்கலாம், அவ்வளவுதான். Force பண்ண முடியாது.

bramarajan_thumb[3]பிரம்மராஜன்: சமூகத்துல ஈடுபடுத்திக்கிட்ட எழுத்துக்கள்... அதனோட வெளிப்பாட்டு முறைக்கும், romanticஆன வெளிப்பாட்டு முறைக்கும் தொடர்பிருக்கா? அப்படி வந்து ஈ டுபடுத்திக்கொண்ட எழுத்துக்கள் எல்லாம் romanticஆகதான் வெளிப்பட முடியுமா? குறிப்பா நீங்க வானம் பாடிக் கவிஞர்கள் பற்றி ஒரு சின்ன குறிப்பு கொடுத்தா தேவலாம்னு தோணுது.

ஆத்மாநாம்: பொதுவா சமூகத்திலே ஈடுபடுத்திக்கொண்ட கவிதைகளுக்கும், romanticஆன கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்னிக்கு romanticஆக எழுதப்படக்கூடிய புரட்சிகரமான கவிதைகள் சினிமாப் பாடல்லகூட இருக்கு. ஆன அதையெல்லாம்நாம கவிதைகளா எடுத்துக்கறது கிடையாது. Romanticஆன வெளிப்பாடு சில குறிப்பிட்ட கவிதைகளுக்குதான் பொருத்தமானதா இருக்க முடியும். சமூக ஈடுபாடுங்கறபோது அந்த இடத்துலஅது romanticஆக வந்தா அது ரொம்ப ஆபாசமாதான் இருக்க முடியும். இந்த வகைல நாம வானம்பாடிக் கவிதைகளைப் பார்க்கும்போது, பொதுவா அவங்க சமூகப் பிரச்சினைகள் பற்றித்தான் எழுதுறாங்க. ஆனா சமூகப் பிரச்சினைகள் எந்த அளவுக்கு ஆழ்ந்த உணர்ந்து எழுதியிருக்காங் கன்னு தெரியல. அவங்க usage of language ரொம்பவும் romanticஆக இருக்கறதால அந்தக் கவிதைகள் நீர்த்துப்போயிடறது. அவை எழுதப்

படுவதின் முக்கியமான purposeஐயோ அவை serve பண்ணுவதில்லை. ஆனா அதில சில exceptionsம் இருக்கும்.

பிரம்மராஜன்: தமிழ்ச் சூழல்ல ... ஏன் இந்தியச் சூழல்லயே நெரூடாவோட statureக்கோ, லோர்காவோட integrityக்கோ அல்லது ஸ்டீவன் ஸ்பென்டரோட் integrityக்கோ ஒரு கவிஞனை நம்மால பார்க்க முடியலை. Outputலயும் சரி, கவிதையை சாதிச்ச முறையிலேயும் சரி, அவங்க நடத்திய வாழ்க்கை முறையிலும் சரி, அவங்கமாதிரி இங்கு ஒருத்தரையும் நாம பார்க்க முடியலை. ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

ஆத்மாநாம்: அங்க பல மாற்றங்கள் உருவாகுது.

பிரம்மராஜன்: எதில... ?

ஆத்மாநாம்: அவங்க systemல்

பிரம்மராஜன்: System of what?

ஆத்மாநாம்: அவங்க வாழ்க்கை முறைல, அதில பல விதமான மாற்றங்கள் அடிக்கடி உருவாறதால அவங்க உடனடியா வெளிப்படுத்திக்கறாங்க. அந்த மாற்றங்களுக்கு அவங்க react பண்றாங்க. ஆனா இந்தியால எவ்வளவோ விதமான மாற்றங்கள் வந்திட்டிருந்தாலும், இவ்வளவு பெரிய நாடா இருந்து இவ்வளவு மொழிகள் இருக்கும் போது, நீங்க சொல்ற statureஉடன் ஒரு poet உருவாற அளவுக்குப் பாதிப்புகள் இல்ல. National levelல்ல ரவீந்திரநாத் தாகூர் ஒருத்தர் பேசப்பட்டிருக்கார். ஆனா பாரதியாரையோ இல்ல ஆந்திராவில, கர்நாடகாவில, இல்ல மஹாராஷ்ட்ராவில் இருக்கிற கவிஞர்களையோ அந்த levelல்ல பேசப்பட்டதாசொல்ல முடியல, அதை posterityதான் சொல்லணும். நாம ஒண்ணும் சொல்ல முடியாது.

பிரம்மராஜன்: அதாவது பின்னால வரவங்கதான் சொல்லணும்...

ஆத்மாநாம்: ஆமாம்.

பிரம்மராஜன்: Mathew Arnoldங்கற ஆங்கிலக் கவிஞர் - விமர்சகர் தன்னுடைய Preface to the Study of poetryங்கற சின்ன கட்டுரையோட முன்னுரையில (1853ல் வெளியானது) தன் காலத்துக்குச் சற்று பின்னால மதத்தோட இடத்தைக் கவிதை நிரப்பிடும்னு சொன்னார். இது டார்வினோட Origin of Species வெளியானதோட காரணமா இருக்கலாம். அந்தச் சமயத்துல கொஞ்சம் மதம் ஆட்டம் கண்டுபோனதால இதைச் சொல்லியிருக்கலாம். அதுக்கும் இன்றைய தமிழ்க் கவிதைக்கும் அல்லது பொதுவா உலகக் கவிதைக்கும் ஏதாவது relevance இருக்குமா?

ஆத்மாநாம்: கண்டிப்பா இருக்கு. முக்கியமா நம்ம நாட்டிலேயே இருக்கு. ஏன்னா நம்ம cultureல் வந்து dogmatic ideas, religious beliefs இதெல்லாம் ஒரு விதமான அர்த்தத்தையும் வாழ்க்கைக்குக் கொடுக்கறது கிடையாது. அந்த மாதிரி நேரத்துல ...

பிரம்மராஜன்: அதாவது வெறும் சடங்காகிப்போன மதத்தைப் பத்திச் சொல்றீங்க இல்லையா? நம்ம இந்து மதம் வாழ்தலே மதமாகியிருக்கிற ஒரு மதம். பின்னால ஏற்பட்டசில விளைவுகளினால அது வெறும் சடங்காகிப் போச்சுன்னு தாகூரே தன்னுடைய பல கட்டுரைகள்ல சொல்லியிருக்கார். அந்த மாதிரிச் சடங்காகிப்போன ஒரு மதத்தை replace பண்ற capacity, ஒரு தகைமை கவிதைக்கு இருக்குன்னு நீங்க நம்பறீங்களா?

ஆத்மாநாம்: அது இப்ப இல்லன்னாலும்கூட இன்னும் literacy rate increase ஆகும்போதும், அப்பறம் literatureல interest improve ஆகும் போதும் அதுலயும் குறிப்பாகக் கவிதைகள்ல interest அதிகரிக்கும் போதுதான் அதைச் சொல்ல முடியும். இப்போ immediateஆக poetry religionஐ replace பண்ணிடும்னு சொல்ல முடியாது. கண்டிப்பா replace பண்ணும், இந்த qualifications வரும்போது, கவிதை தன்னுடைய முழுப் பரிமாணத்தோட மக்களை ஈர்க்கும்போது அந்த effect வர முடியும்.

பிரம்மராஜன்: நாம இப்ப புதுக்கவிதை பத்தியே பேசி முடிக்காம இருக்கோம். ஆனா மேற்கில 1940களிலேயே இந்தப் புதுக்கவிதைகளையெல்லாம் தாண்டி அதாவது Verse-libre/Free-Verse என்கிறதையெல்லாம் தாண்டி anti-poetryங்கற விஷயம் வந்துருச்சு. அந்த மாதிரியான ஒரு வளர்ச்சி நிலை தமிழுக்கு இருக்கா? இது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

ஆத்மாநாம்: எதிர்க்கவிதைங்கறதைப் பத்தி இன்னும் எந்த விதமான தெளிவான அபிப்ராயமும் form ஆகல. ஆனா இப்போ கவிதைகள் போற போக்கைப் பார்த்தா வேறவிதமான கவிதைகள் உருவாகும்னு சொல்ல முடியாது; இந்த எதிர்க்கவிதைகள் அப்படிங்கறஒரு வடிவத்துக்குள்ள தான் வர முடியும்னு தோணறது.

பிரம்மராஜன்: இன்னிக்கு எப்படி நவீன ஓவியத்தைப் பயன்படுத்தறவங்க அல்லது பயில்றவங்கன்னு சொல்லலாம் - அவங்க பல பேருக்கு மரபு வழியான ஓவியத்தைப் பத்தினபயிற்சி இல்லாம இருக்காங்க அல்லது புறக்கணிக்கறாங்க. அதே மாதிரி இன்னிக்குத் தமிழ்ல பேரிலக்கியங்கள் பற்றி அறிவு இல்லாமலே நிறைய பேர் கவிதைகள் எழுதிட்டிருக்காங்க. இவங்களோட கவிதைகள்லாம் எப்படி இருக்கும்? அதை identify பண்ண முடியுமா?்

ஆத்மாநாம்: மரபை அறிஞ்சு அதை மீறது ஒண்ணு. அந்த மாதிரிதான் இப்பநிறைய பேர் செய்யறாங்க. மிகச் சிலரே மரபு தெரியாம புதுசா அவங்க கவிதைகள்னு feel பண்ணறதை எழுதறாங்க. அவங்க கவிதைக்கும் இவங்க கவிதைக்கும் content levelல்ல variation இருக்கறதுக்கு possibilities கிடையாது. மரபை மீறறவனும் அவனுக்கு ஒரு clarityக்காகத்தான் அதைச் செய்யறான். ஆனா மரபைத் தெரியாதவன் மரபை மீறின கவிதைகள் இருக்கு இல்லையா? அதைப் படிக்கும்போது அவன் feel பண்ணக்கூடிய விஷயங்களைப் பொறுத்து அவன் கவிதைகள் எழுதறான் இரண்டு பேருமே ஒரே விஷயத்தைப் பத்திதான்

கவிதைகள் எழுதிண்டு வருவாங்க. அதுல வித்யாசம் இருக்கறதுக்கு வாய்ப்பு கிடையாது. மரபு தெரிஞ்சாதான் கவிதை எழுதலாம்கற qualification செல்லுபடி ஆகாது.

பிரம்மராஜன்: ஒரு கலாச்சாரப் பாரம்பர்யம் வேண்டாம்னு சொல்றீங்களா? T. S. எலியட் கவிஞர்கள் ஓரளவுக்காவது படிச்சிருக்கணும்னு நினைக்கறார். எழுதியிருக்கார். அதாவது அவங்களுடைய creativityக்கு அல்லது spontaneityக்குக் குந்தகம் விளைவிக்காத அளவுக்கு அவர்கள் பொது விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சுருக்கனும்னு, awareஆக இருக்கனும்னு சொல்றார்.

ஆத்மாநாம்: மரபு பள்ளிக்கூடங்கள்ல இருந்தே ஆரம்பம் ஆறது. தமிழ்ல எழுதக்கூடிய ஒரு கவிஞனோ அல்லது எழுத்தாளனோ மரபு ஓரளவுக்குத் தெரிஞ்சுதான் எழுதறான். அந்த வகைல மரபு முழுக்க முழுக்கத் தெரியாதுன்னு சொல்ல முடியாது. ரொம்பவும் மரபு பற்றித்தெரியும்னு confidentஆக சொல்றவங்களோட complete பண்ண முடியாமே இருக்கலாம். ஆனா அவங்களுக்கும் ஓரளவு மரபு தெரிஞ்சுதான் அவங்க புது விஷயங்களை எழுதறாங்க.

பிரம்மராஜன்: இந்த மாதிரியான ஆழ்ந்த கலாச்சாரப் பாரம்பரியம் எந்தெந்த கவிஞர்கள்கிட்ட இருந்து வெளிப்பட்டிருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?

ஆத்மாநாம்: ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி, நகுலன், சிவராமு அப்படின்னு சொல்லலாம்.

பிரம்மராஜன்: சரி, Major poets அப்படிங்கற கேள்வியை கவிதை வளர்ந்திட்டிருக்கற அந்த கால கட்டத்துல எழுப்பறது தகுதியா இருக்குமா?

ஆத்மாநாம்: என்னைப் பொறுத்தவரைக்கும் இப்ப எழுதற அத்தனை பேருமே Minor Poetsதான்னு தோண்றது. காவியங்களோ, மிக நீண்ட கவிதைகளோ ரொம்ப உள்ளாழ்ந்த கருத்துக்கள் இருக்கக்கூடிய கவிதைகளோ எழுதக்கூடியவங்களைத்தான் Major Poetனு சொல்லலாம். இப்பொ எழுதக்கூடிய கவிஞர்கள் முக்கால்வாசி பேர் spontaneousஆக எழுதறாங்க, இல்லை technicalஆக அவங்களுக்கு இருக்கற knowledgeஐ வெச்சு எழுதறாங்க, மற்றபடி major poetsங்கற categoryல கம்பன் மாதிரியோ, இளங்கோவடிகள் மாதிரியோ, திருவள்ளுவர் மாதிரியோ, பாரதி மாதிரியோ இப்ப இருக்கற கவிஞர்கள் யாரையுமே சொல்ல முடியாது.

பிரம்மராஜன்: அப்ப நீண்ட காவியங்கள் எழுதினாத்தான் ஒருவன் major poetஆக இருக்க முடியுமா?

ஆத்மாநாம்: ஒரு கவிஞனோட மொத்தப் படைப்பையுமேகூட ஒரு நீண்ட காவியமா எடுத்துக்கலாம். ஒரு தொகுப்பை நீங்க நீண்ட காவியமா எடுத்துகிட்டீங்கனா அதுல ஒரு forceம், clarityம், total understanding of lifeம், அப்பறம் various aspectsthat attract life இதைப் பத்தின understanding இருந்தாத்தான் நீங்க அவரை major poetன்னு சொல்ல

முடியும். அந்த வகைல பாத்தா இப்பொ சிறு சிறு தொகுப்புகள்தான் வந்திருக்கும். So we cannot say anything now.

பிரம்மராஜன்: கவிதை ஒரு தொழிற்சாலை மாதிரி இன்னிக்கு ஆயிருச்சு. நிறைய உற்பத்தி செய்யப்படுது. அப்படிப்பட்ட இந்தக் கட்டத்துல நாம் இனம் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுப்போகுது. நீங்க ஒரு கவிதை இதழோட ஆசிரியர்ங்கற முறைல இதற்கு ஏதாவது அளவுகோல் வச்சிருக்கீங்களா? எப்படி நீங்க கவிதைகளைத் தேர்ந்தெடுக்கறீங்க?

ஆத்மாநாம்: தொழிற்சாலைன்னு குறிப்பிடக்கூடிய கவிதைகள் எல்லாமே துணுக்காகவோ இல்லை விடுகதைகளாகவோ இந்த வகைப்பட்ட கவிதைகளாகவோதான் இருக்கு. அந்தமாதிரி கவிதைகள் மொத்தத்தையும் நீங்க ஒதுக்கித் தள்ளிட்டுப் பாத்தீங்கனா நாங்க editபண்ற பத்திரிகைக்கு வரக்கூடிய கவிதைகள்ல வந்து ஒரு use of language, idea, thoughtஅப்பறம் ஒரு inner beautyன்னு சொல்றாங்க - அதை explain பண்றது கஷ்டம் - அந்த inner beauty, உள்ளழகு ஒரு organic element, அந்த poetryயோட structureல இருக்குன்னா அந்தக் கவிதையை நாங்க பிரசுரிக்கிறோம். அதுல ஏதாவது ஒரு சில elements இருந்தாக்கூட போடறோம். அந்த வகைலதான் கவிதைகளைத் தேர்வு செய்ய முடியறது, வேற எந்த set-rulesம் கிடையாது.

பிரம்மராஜன்: ஒரு வாசகனோட ‘status-quo’வை disturb பண்றது நல்ல கவிதைங்கற அளவுகோலை ஒரு உச்சமான தேர்வா வைக்கலாமா?

ஆத்மாநாம்: கண்டிப்பா. இந்த statement உடன் நான் முழுக்க ஒத்துப் போறேன்.

பிரம்மராஜன்: நல்ல கவிதை ‘இரும்பு - மனோநிலை’யை disturb பண்றது...

ஆத்மாநாம்: பாதிக்கிறது.

பிரம்மராஜன்: அது தன்னோட உலகத்துக்குத்தான் வாசகனை இழுக்கிறது. இதுக்கு எதிர்மறையா ஒரு நர்சரி ரைமை எடுத்துக்கலாம். பா - பா ப்ளாக் ஷீப்ங்கற ரைமைப் படிக்கும்போது நாம் disturb ஆகறதில்லை. ஓஹோ! அப்படியான்னுதான் கேக்கறோம். ஆனா சில கவிதைகளைப் படிக்கும்போது நாம நம்பளையே மறந்துடறோம்...

ஆத்மாநாம்: We are moved.

பிரம்மராஜன்: ஆமாம். We don’t forget ourselves...

ஆத்மாநாம்: We are moved.

பிரம்மராஜன்: நாம கவிதையோட உலகத்துக்கு எடுத்துட்டுப் போகப்படறோம். உதாரணமா அக்னிக்குஞ்சொன்று கண்டேன்கற பாரதியோட கவிதையைச் சொல்லலாம். கவிதையை இனம்காணறதுக்கு இதை ஒரு நல்ல அளவுகோல்னு சொல்லலாம் இல்லையா?

ஆத்மாநாம்: கண்டிப்பா. இது மிக முக்கியமான அளவுகோல். இதை வெச்சுதான் நாம் கவிதை இயலையே தீர்மானம் செய்யமுடியும். அப்படின்னுதான் நினைக்கிறேன்.

பிரம்மராஜன்: முதல் நபர் பார்வையில் சொல்லப்படற கவிதை, முன்னிலைப்படுத்தப்பட்ட கவிதை, இவை இரண்டுமே அதிகம் சிரமம் தரவில்லை. இது இல்லாம narratorனு ஒருத்தர் இல்லாத ஒரு omniscient view, point of view அந்த மாதிரி narratorம் இல்லாம, நானும் இல்லாம, நீயும் இல்லாம சிலர் கவிதை எழுதறாங்க. அந்த கவிதைகள் ரொம்ப சிக்கலா இருக்கு. இதுபற்றி?

ஆத்மாநாம்: இந்தமாதிரி கவிதைகள் ரொம்ப கம்மி. ஒண்ணு தன்னிலைபடுத்தியோ இல்லைனா முன்னிலைப்படுத்தியோதான் பெரும்பாலான கவிதைகள் எழுதப்படறது. ஏன்னா அதுதான் simpleஆக இருக்கு communicationக்கு. இப்போ வெறும் description மட்டும் ஒரு கவிதைல நீங்க குடுக்கறீங்கனா அது எப்போதுமே complexஆகதான் இருக்கும்னு சொல்லமுடியாது. ஏதாவது சில சமயம்தான் complexஆக இருக்கும். அந்தமாதிரிக் கவிதைகள் எல்லாமே சிக்கலா இருக்கும்னு என்னால ஒத்துக்க முடியாது. ஆனா இந்த மாதிரிக் கவிதைகள் சிக்கலாறதுக்கு முதல்ல நாம obscurity பத்தி பேசின விஷயங்களைத்தான் மறுபடியும் நினைவுபடுபத்திக்கணும்.

பிரம்மராஜன்: தமிழ்ல கவிதை இயக்கமா வளர்ந்திருக்குன்னு உங்களால சொல்ல முடியுமா?

ஆத்மாநாம்: ஆரம்பத்திலிருந்தே ஒரு இயக்கமாதான் கவிதை இருந்திருக்கு. ஆனா அதுல பல போக்குகள் உருவாகியிருக்கு. ஒவ்வொரு கால கட்டத்திலயும் ஒவ்வொரு விதமான போக்குகள் உருவாறது. ஒரு சிலர் யதார்த்தத்தைக் கடைபிடிச்சாங்க. சிலர் வேற வெளிப்பாட்டுமுறைகள்ல வித்தியாசம் காட்டினாங்க - படிமங்கள் மூலமா தங்களை வெளிப்படுத்திக்கமுயன்றாங்க. தமிழ்ல எப்போதுமே கவிதை இயக்கமாதான் இருந்திருக்குன்னு சொல்ல முடியும். ஆனா பல போக்குகள் இருக்கு. ஒரு போக்கு அழியறது. இன்னொரு போக்கு உருவாறது. இல்லனா இரண்டு மூன்று போக்குகள் parallelஆக வளர்ந்திட்டிருக்கு. இந்த மாதிரிதான் இயக்கத்தைப்பத்தி என்னால சொல்ல முடியும்.

பிரம்மராஜன்: கடைசியா இன்னொரு கேள்வி. நிறைய வார, மாதப் பத்திரி கைகள்லவர்ற கவிதைங்க கவிதையின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு என்ன விளைவைக் கொடுக்கும்?

ஆத்மாநாம்: கண்டிப்பா கவிதையோட ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு நீங்க சொன்ன கவிதைகள் அடிகோலாகாது. ஏன்னா அதுல போலியான கவிதைகள்தான் கவிதைகள்ங்கற பேர்ல வெளியாறது. அதைப்படிக்கறவங்க அதுதான் கவிதை அப்படின்னு நம்பற வாய்ப்புகள் அதிகமா இருக்கு, அதுல genuineஆன கவிதைகள். சிறு பத்திரிகைகள்ல எழுதக்கூடிய கவிஞர்களோட கவிதைகள் வரும்போது அவங்களுக்கு கொஞ்சம் differentஆன reading material கிடைக்கிறது. இப்பலாம் கவிதையை யாரும் ரொம்ப seriousஆக எடுத்துக்கறது கிடையாது அப்படின்னுதான் தோணறது. ஆனா பொதுவா நல்ல கவிதைக்கு வார, மாத பத்திரிகைகள்ல, பல லட்சக்கணக்குல விற்பனையாகிற பத்திரிகைகள்ல வரக்கூடிய கவிதைகள் குந்தகமாகத்தான் இருக்கும் எப்போதும்.

*****

ஆத்மாநாம் படைப்புகள் - பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

-தோழன் மபா, தமிழன் வீதி on November 30, 2013 at 10:53 AM said...

மிகத் தேர்ந்த வாக்கியங்களைக் கொண்டு இந்த சொல்லாடல் புனையப்பட்டு இருக்கிறது. வாழ்க்கைக்கும் உணர்வுகளுக்குமான போராட்டத்தில் இத்தகைய விபரீதங்கள் ஆத்மாநாமுக்கு நிகழ்ந்தது போல நிகழ்ந்துவிடக் கூடிய வாய்ப்புகள் சராசரிக்கும் மேலான இலக்கியவாதிகளுக்கு உண்டு. இதை விட்டு விலகவே முயலும்போது, எதிலிருந்து எங்கு முடிப்பது என்று தெரியாமலேயே இத்தகைய இண்டெலுக்சுவல் லெவல் வீணாய் முடிந்துவிடுகிறது.

உலகை வெல்ல நினக்கும் படைப்பாளிக்கு, தன்னை வெல்வது எத்தகைய கடினம் என்பதை 'ஆத்மாநாம்' வாழ்க்கை, பொட்டிலடித்தாற் போல் சொல்லிவிடுகிறது.

சிறந்ததொரு பதிவு.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்