Dec 11, 2009

ஒற்றை அறை-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்

எஸ்.சம்பத்

எல்லா மேன்ஷன்களி லும் ஐம்பது வயதைத் தொட் டும் திருமணம் செய்துகொள்ளாத ஒரு பிரம்மச்சாரி இருக்கிறார். கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமல் அவர் இப்படி வாழ் கிறார் என்று சொல்ல முடியாது. சரியான வேலையின்மை, குடும்பப் பிரச்னைகள், வெளியில் தெரியாத தோல்விகள் என ஏதேதோ சிக்கல்கள் அவர்களது கால்களில் கொடியாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

Matthew Booth

மற்ற அறைகளைப் போல இன்றி அவர்களது அறையில் தினமும் சரியான பூஜை நடக்கிறது. மாலை நேரம் ஜன்ன லில் ஊதுபத்தி கொளுத்தி வைக்கப் படுகிறது. அறையில் படுக்கை, அலமாரி யாவும் சுத்தமானதாக இருக்கின்றன. சுவரில் உள்ள ஹேங்கரில் ஒழுங்காக உடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

அறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் மிகச் சிறியதாக இருக்கிறது. (கண்ணாடி முன் நின்ற படி தன்னைப் பார்த்துக்கொள்வது அவர்களுக்குச் சுளீர் என்று வலிப்பது போலிருக்குமோ!) காலையில் அலுவலகம் புறப்படும்போது வெளுத்த உடையும் திருநீற்றுக் கீற்றுமாக அவர்கள் சந்தோஷத்துடன் புறப்படுகிறார்கள். ஆனால், அவர்களது மனதில் குளத்துத் தண்ணீரில் தெரியும் மேகம் போல, பெண்களின் மீதான ஆசை ஊர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவர்கள் அதை வெளிப்படையாகப் பேசிக்கொள்வது கிடையாது.

திருமணம் செய்துகொள்ளாததால், ஒருவன் குடும்ப வாழ்வில் இருந்து விடுபடக்கூடும். ஆனால், காமத்திலிருந்து விடுபட முடியுமா? கனியில் துளை யிட்ட புழு, வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டு இருப்பது போல, காமம் பிறர் அறியாமல் உடலினுள் நெளிந்துகொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர் கொள்வதும் வெற்றிகொள்வ தும் எளிதானதில்லை. காமத்தைப் பற்றிய நமது அறிதல் மிக ரகசியமானதாக வும், அறியாமை நிரம்பியதாக வுமே இருக்கிறது.

காமம் குறித்த அறிதல் பதின்பருவத்தில் துவங்குகிறது.sambath வேட்டைக்குச் செல்பவன், மிருகங்களின் கால் தடங்களை வைத்து என்ன மிருகம் அது, எப்படி அதன் உருவம் இருக் கும், எந்தத் திசையிலிருந்து எந்தத் திசை நோக்கிப் போகிறது என்று அடையாளம் கண்டுகொள்வது போல கொஞ்சம் கொஞ்சமாக செவி வழிச் செய்திகளாலும், ரகசிய வாசிப்பாலும் காமத்தை அறிந்துகொள்ளத் துவங்கு கிறோம். அதன் பிறகு, நம் மனதில் நிரம்பி வழிவதெல்லாம் அடக்கப்பட்ட காம உணர்ச்சி தரும் எண்ணங்களும், அதன் விசித்திரக் கற்பனைகளுமே!

ஆணோ, பெண்ணோ எவராயினும், காமம் உடலில் தோன்றும்  ஒரு சூறாவளி. அது எப்போது கரையைக் கடந்து செல்லும் என்று எவராலும் சொல்ல முடியாது.
இங்மர் பெர்க்மனின் ‘வர்ஜின் ஸ்பிரிங்’ என்றொரு படத்தில், மிகப் பரந்த பசுமையான புல்வெளி ஒன்று காட்டப்படுகிறது. தொலைவில் நாலைந்து ஆட்டிடையர் ஆடு மேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவாலயத்துக்குச் செல்கிற ஓர் இளம்பெண் கையில் பூக்கூடையுடன் கடக்கிறாள். ஏகாந்தமான காற்றும், அழகும் அவள் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
கடந்துபோகும் வழியில் உள்ள இடையர்களைக் கண்டு அவள் சிரிக்கிறாள். அவர்களும் கபடமின்றிச் சிரிக்கிறார்கள். ஆனால், நிமிஷ நேரத்தில் அவர்களது முகம் மாறுகிறது. ஒரு மிருகத்தைப் போல காமம் அவர்களது கண்களில் கொப்பளிக்கிறது. அந்தப் பிராந்தியத்தில் யாருமில்லை என்பதைக் கண்டுகொள்கிறார்கள்.

உடனே பாய்ந்து, அந்தப் பெண்ணைத் தங்களது இச்சைக்குப் பலியாக்கிவிடுகிறார்கள். யாருமற்ற அந்தப் பிரதேசத்தில் ஒரு பெண் உருக்குலைந்து, உதிரப் பெருக்கோடு கிடக்கும் காட்சியைப் பெர்க்மன் காட்டுகிறார். அப்போதும் அதே புல்வெளி, பசுமை மாறாமல் காற்றில் அலைந்துகொண்டுதான் இருக்கிறது. காம சுகிப்பை இப்படித் திரையில் காணும்போது முகத்தில் அறைவது போலத்தான் இருக்கிறது.

இது ஏதோ கற்காலத்தில் நடந்த சம்பவம் அல்ல. சம காலத்திலும்கூட காமம் இப்படி ஒரு மூர்க்கத்தையும் வன்முறையையும் கொண்டுள்ளதை நாம் அன்றாடம் காண முடி கிறது. பெண் வீழ்த்தி நுகரப்பட வேண்டிய வள் என்ற எண்ணம் காலங்காலமாகவே மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது.

ஆண், காம உணர்ச்சி களுக்கு எத்தனையோ வடிகால் தேடிக்கொள் கிறான். பெண்களோ காமம் குறித்த தங்களது மனதின் சிறு அசைவுகளைக்கூட வெளிப்படுத்த முடியாதபடி கலாசாரச் சூழல் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. ஆண்டாள், தனது பாடலில் தனக்குக் காமம் ஏற்படுத்தும் வலியை, பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறாள். அது பக்தி என்பதைக் கடந்து, உடலின் தீராத குரல் என்றுதான் தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்தவரையில் விருப்பத்துடன் தன் கணவனை முத்தமிடுவதற்குக்கூட ஒரு பெண் பல முறை யோசிப்பதுதான் குடும்பங் களில் நடக்கிறது. தாக மிகுதியால் வரும் மிருகம் தண்ணீரைக் கண்டதும் குடிப்பதற்குத் தான் முயற்சிக்குமே தவிர, தண்ணீரில் தனது உருவம் தெரிவதை நின்று ரசிக்காது. அப்படித்தான் விளக்கை அணைத்துவிட்ட வுடன் இருள் அறையைக் கவ்விக்கொள்வது போல, காமம் துளிர்த்த உடல் ஓர் ஆக்டோபஸ் போல கிடைப்பதைப் பற்றிக்கொண்டு இச்சையைத் தீர்த்துவிடுகிறது.
காமத்தை அறிவது ஒரு கலை என்று இந்திய சமூகம் நூற்றாண்டுகளாகச் சொல்லி வந்தபோதிலும், அது ஒரு வடிகால் என்று மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. கற்பனைதான் காமத்தை அதிகப்படுத்தும் ஒரே சாதனம். கற்பனையற்றுப் போயிருந்தால் காமம் ஒரு இயந்திர நிகழ்வு போலவே ஆகியிருக்கும்.

உடலை நாம் அறிந்துகொள்ளாததுதான் காமத்தைப் பற்றிய தவறான எண்ணங்களுக்கு முதல் காரணம். உடல் சதா கொந்தளிப்பும் பீறிடலும் கொண்ட ஒரு நீரூற்றைப் போன்றது. அது தனக்கென ஒரு இயக்கத்தை எப்போதும் நடத்திக்கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் உறங்கும்போது நம் கனவில் புலி பாய்வதாக இருந்தால்கூட உடல் தானே திடுக்கிட்டு விழித்துவிடுகிறது. உண்மையில், உடல் ஒரு விசித்திரமான இசைக் கருவி. அதிலிருந்து நாம் விதவிதமான இசையை வாசிக்க முடியும். ஆனால், அதை நம் கட்டுக்குள் வைப்பதும், மீட்டுவதும் எளிதானது இல்லை.
எனக்குத் தெரிந்த மேன்ஷன்வாசி களில் ஒருவரான நித்யானந்தம், நாற்பத்தைந்து வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, பெண் பார்த்து பேசி ஒப்புக் கொண்டார். திருமணம் தூத்துக்குடி அருகில் உள்ள ஏதோ கிராமத்தில் நடந்தது. மேன்ஷன் அறையில் இருந்த நண்பர்கள் பலரும் தனது திருமணத் துக்கு வரவில்லை என்பதால், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப் பதாகத் தனக்குத் தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு போன் பண்ணி சொன்னார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஓட்டலில் நடந்தது. அன்று மாலை லேசான தூறல் விழுந்துகொண்டு இருந்தது. நித்யானந்தம் தலைக்கு டை அடித்து, புது கோட்\சூட் அணிந்து, ஆறு மணிக்கே புதுப் பெண்டாட்டியுடன் வந்து நின்றிருந்தார்.

நானும் இன்னொரு நண்பனும் போய்ச் சேர்ந்தபோது, அங்கே இரண்டு பேர் மட்டுமே வந்திருந் தார்கள். நித்யானந்தத்தின் முகம் இறுக்கமாக இருந்தது. நேரம் கடந்து போய்க்கொண்டே இருந்தது. எவரும் வரவே இல்லை. மணி ஒன்பதாகியபோது, மழை வலுத்திருந்தது. மண்டபத்தில் பதினோரு பேர் மட்டுமே இருந்தோம். இருநூறு பேருக்குத் தேவையான சாப்பாடு தயாராக இருந்தது. புது மனைவி நகத்தைக் கடித்தபடி நின்றுகொண்டு இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாத நித்யானந்தம் கோபத்தில் வெடித்துப் பேசினார்...

‘‘நாப்பத்தஞ்சு வயசில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல... அதான், இந்த அவமானப்படுறேன். கூட இருந்தவன், வேலை பாக்கிறவன்னு ஒருத்தன்கூட வரலை, பாருங்க! எத்தனை பேருக்குத் தேடித் தேடிப் போய்ச் செய்தேன்! எல்லாச் சாப்பாட்டையும் அள்ளிக் கொண்டு போய் நாய்க்குப் போடச் சொல்லு!’’ என்றபடி விடுவிடுவென மனைவியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டுப் போய்விட் டார்.
அறைக்கு வந்தபோது பலரும் அவர் சொன்னது போலவே, ‘நித்யானந்தத் துக்கு எதுக்குய்யா அம்பது வயசுல கல்யாணம்? பொம்பளை ஆசை லேசில் விடுதா..? இத்தனை நாள் நம்மகிட்டே நடிச்சிருக்கார். அதான் ஒருத்தனும் ரிசப்ஷனுக்கு போகலை’ என்று கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். சரியாக நான்கு மாதத்துக்குப் பிறகு, நித்யானந்தம் முன்பு போலவே அதே மேன்ஷனுக்கு திரும்பி வந்து சேர்ந்தார். தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சரிவரவில்லை என்றதோடு, ‘மனசு ஆசைப்பட்டாலும் உடம்பு ஒப்புக்கலை சார். அதான் காரணம்!’ என்றார். அறைவாசிகள் அதையும் கேலி செய்து சிரித்தார்கள். ஆனால், அதன் பிறகு அவர் சிரித்து எவரும் பார்க்கவே இல்லை.
பால் உணர்ச்சிகள் குறித்த கதைகள் பெரும்பாலும் மலிவான தளத்தில் எழுதப்பட்டு வரும் சூழலில், அதன் நுண்மையான அதிர்வுகளைப் பதிவு செய்த கதை... எஸ்.சம்பத் எழுதிய ‘சாமியார் ஜூவிற்கு போகிறார்’. சம்பத், நவீன தமிழ் இலக்கியத்தின் தனிக் குரல். மிகக் குறைவாக எழுதியவர். குறைவான காலமே வாழ்ந்த வரும்கூட. அவர் எழுதிய சிறுகதைகளில் மறக்க முடியாததும், வெகு நேர்த்தி யானதும் இக்கதையே!

தினகரன் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குச் செல்கிறான். அன்று விடுமுறை நாள். அவனது மனைவி பத்மா காலையிலிருந்தே பால் உணர்ச்சிமிக்கவளாகத் தாபத்தில் இருக் கிறாள். கணவனிடம் எப்படி அதை வெளிப்படுத்துவது என்று தெரியாத நிலையில், அவர்கள் மிருகக்காட்சி சாலைக்குப் புறப்பட்டுவிடுகிறார்கள்.
அவளுக்கு எப்படியாவது அன்று முழுவதும், கணவனைத் தனது பிடியிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு உருவாகிறது. இதனால் அவனுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ணும் ஜார்ஜெட் புடவையை உடுத்திக்கொள்கிறாள். மிருகக்காட்சி சாலையில் அன்று ஏகக் கூட்டம். அதைப் பயன்படுத்திக்கொண்டு சிறிதுசிறிதாக கணவனுடன் சரசம் செய்கிறாள். அன்று எதிர்பாராதவிதமாகக் கூண்டில் இருந்த ஒரு புலி தப்பி வெளியே வந்துவிடுகிறது. அதைக் கண்டு, பலரும் அலறி ஓடுகிறார்கள். புலி எங்கே பாய்வது என்று தெரியாது தடுமாறி ஓடுகிறது. முடிவில் அது சுடப்பட்டு இறக்கிறது.
இந்தக் காட்சி, வீடு திரும்பிய பிறகும் தினகரனுக்கு மிகுந்த மனவேதனையை உருவாக்குகிறது. மனைவியோ காமத்தால் அதிகம் பீடிக்கப்பட்டவளாகிறாள். மனிதன் தன்னால் அடக்க முடியாத வற்றுக்கு கூண்டுகள் உண்டாக்கி, அடக்கி வைத்திருக்கிறான். சுதந்திரத்துக்கு எதிராக நிறைய கூண்டுகள் இருக்கின்றன என்று யோசிக்கும்போது அவனது மனைவியின் காமமும் அந்தப் புலி தப்பியது போன்றது தான் என்று தினகரன் புரிந்து கொள்கிறான்.
அன்று கூடலில், தினகரன் ஒரு பஞ்சைப் போல எடை அற்றவனாக இருப்பதாகச் சொல்கிறாள் அவன் மனைவி. அவனோ புலி, கூண்டை விட்டு வெளியே வந்ததும், தனது சுதந்திரத்தைத் தேடியே! அதை அடைவதற்குள் புலி கொல்லப்பட்டு விட்டதே என்று ஏதேதோ புலம்பியபடி கனவு காணத் துவங்குகிறான்.

ஒரு விளக்கின் சுடரைப் போல காமம் சதா அசைந்துகொண்டே இருப்பதைப் பற்றி நுட்பமாகச் சித்திரிக்கும் கதை இது. ஒருபுறம் அதிவேக நாகரிகம், காமத்தை மலினப் பொருளாக்கி விற்பனை செய்கிறது. மறுபுறம் கண்களைக் கட்டிக்கொண்டு சித்திரம் வரைவது போல பால் உணர்வுகளின் அறியாமை நம்மைப் பீடித்திருக்கிறது.

காமம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட வேண்டிய ஒரு ரகசியமல்ல; அதே சமயம், கூட்டம் போட்டு உபதேசிக்கப்பட வேண்டியதுமல்ல. சிரிப்பதும், அழுவதும்போல அது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு! அந்த இயல்பை நாம் புரிந்துகொள்ளாதவரை பெர்க்மனின் ஆட்டு இடையர்களைப் போலவே இருப்போம்! எஸ்.சம்பத் 1941&ல் திருச்சி யில் பிறந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தில் அரிய வகை எழுத்து இவருடை யது. பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற சம்பத், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங் களிலும் சில காலம் பணியாற்றியுள்ளார். விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுகதை கள் மட்டுமே எழுதியுள்ளார். இவரது ”இடைவெளி” என்ற நாவல், மரணம் குறித்த ஆழ்ந்த கேள்விகளை முன் வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகும்.

சம்பத்தின் அப்பா ரயில்வே உயர் அதிகாரியாக வேலை செய்தவர் என்ப தால் வளர்ந்தது, படித்தது யாவும் டெல்லியில்! Ôருஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியைப் போன்றதொரு எழுத்துலகை உருவாக்க வேண்டும்Õ என்று ஆசை கொண்ட சம்பத், எதிர்பாராத மூளை ரத்தக்கசிவு நோய் காரணமாக, தனது 42-வது வயதில் மரணமடைந்தார்.
இன்றும் தமிழ் இலக்கியத்துக்கு புதிய வழிகாட்டுதலாக இவரது எழுத்துகள் உள்ளன.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

மகா on December 11, 2009 at 2:56 PM said...

மிக நல்ல பதிவு ....

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்