Mar 8, 2012

ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்-ஆதவன்

டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.

ஒரே கணம்தான்; அதோ, அவனும் அவனுடைய‌ வாகனமும் தூரத்தில் சென்று மறைந்துவிட்டன.

அவருக்குப் படபடப்பு அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தன. அவர் மனaathavanதில் அந்த  இளைஞன்பால் மீண்டும் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. அவன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்கிறானென்பதை இந்தக் கணம் மறுபடி ருசுப் படுத்தியிருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே இறங்க‌ வேண்டியதுதான் தாமதம், உடனே அவனுடைய மோட்டார் சைக்கிள் எங்கிருந்தோ அவரைத் துரத்திக் கொண்டு வந்து விடுகிறது. அவரைப் பதட்டமடையச் செய்வதில் அவனுக்கு ஒரு குரூரமான மகிழ்ச்சி கிடைப்பதாகப் தோண்றியது. உருப்படியான எதிலும் தீவிரப் பிடிவில்லாமல், ஆழமான‌ எதனுடனும் தம்மை முழுமையாகச் சம்பந்தப்படுத்திக் கொண்டு அதன் விளைவுகளைச் சந்திக்கத் துணிவில்லாமல், தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும் இக்கால இளைஞர்களுக்கு இதுபோன்ற பொறுக்கித்தனமான முறைகளில்தான் மனக் கிளர்ச்சியையும் பரவசத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. தம்மை நிரூபித்துக்கொள்ளத்தெரிகிறது. அவருடைய பதட்டம் அவனுக்கு ஒரு எல்.எஸ்.டி. அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவர் ஒரு ஊறுகாய்.

இல்லை, இது அவ்வளவு சரியான உருவகமில்லை. அவன் ஒரு பஞ்சாபி இளைஞன். உப்புமா அவருக்கு இருப்பதைப் போல அவனுக்குச் சலிப்பின் சின்னமில்லை; வேறெந்த விதமான சின்னமும் கூட இல்லை. ரொட்டி என்று வேண்டுமானால் சொல்லலாம். அல்லது பூரி அல்லது ஸமோஸா.

அவர் ஸலூனை அடைந்தபோது வாசலிலிருந்து நாற்காலியின் ஒய்யாரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஒரு பையன் முள்ளங்கியைப் பேனாக் கத்தியால் சிறுசிறு துண்டங்களாக நறுக்கி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தான். அவர் உள்ளே நுழையும்போது அவரை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தான். வம்புக்கிழுக்கும் பார்வை. ‘அல்லது முள்ளங்கி’ என்று தன் முந்தைய நினைவின் தொடர்ச்சியாக அவனைப் பார்த்து அவர் சேர்த்துக் கொண்டார். முள்ளங்கியை நேரடியாகப் பல்லால் கடித்துத் தின்று அவனுக்கு அலுத்திருக்க வேண்டும். எனவே கத்தியால நறுக்கித் தின்னுகிறான். சலூனில் அந்த முள்ளங்கிப் பையனைத் தவிர இன்னும் நாலைந்து பேர் காத்திருந்தார்கள். இருவர் நடுத்தரப் பிராயத்தினர். வேறு இருவர் அவரைப் போல அறுபதின் வாசலில் இருப்பவர்கள். இவர்களை அங்கே பார்த்ததில் அவருக்கு ஆச்சரியமுண்டாக வில்லை. ஆனால் முள்ளங்கிப் பையனையும், புகை பிடித்தவாறு ஃபிலிம்ஃபேரைப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த இன்னொருவரையும் (இவனுக்கு முள்ளங்கியை விட இரண்டு மூன்று வயது அதிகமிருக்கும்) பார்த்துத்தான் ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் ஸலூனுக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்ததைத் தலை மயிரின் அடர்த்தி மூலம் பறைசாற்றிக் கொண்டு, அந்தப் பிராயத்து இளைஞர்களிடமிருந்து வேறெந்த விதத்திலும் கூட மாறுபட்டவர்களாக இல்லாமலிருந்தார்கள். இன்று திடீரென்று அவர்கள் ஏன் சலூனுக்கு வரவேண்டுமென்று அவர் யோசித்தார். ஒரு வேளை யாருடனாவது தலைமயிரைப் பணயமாக வைத்துப் பந்தயம் கட்டி அவர்கள் தோற்றிருக்கலாம். அல்லது இந்தப் பேட்டையில் விருதாவாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ரவுடிப் பையன்கள் கும்பலைச் சேர்ந்தவர்களாக இவர்களும் இருக்கலாம்-அந்த மோட்டார் சைக்கிள் இளைஞனைப் போல. காலையிலிருந்து இரவு வரையில் இவர்கள் பஸ் ஸ்டாண்ட் வெற்றிலை பாக்குக் கடை, டீக்கடை, ஸலூன் என்று ஒவ்வொரு இடமாகப் போய் உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரை வம்புக்கிழுத்துக் கொண்டிருப்பார்கள். சம்பந்தப்பட்ட கடைக்காரர்களும் இவர்களை எதுவும் சொல்வதில்லை. இதெல்லாம் தினசரி வாழ்க்கையின் ஒரு சாதாரணப் பகுதியாகிவிட்டது. ரோஷமிருந்தவர்களுக்கும் ரோஷம் மரத்துப் போய் விட்டது. எந்த வீட்டுப் பிள்ளையோ, யாருடைய பிள்ளையோ? அவனுடைய அப்பா செல்வாக்குள்ள இடங்களில் தொடர்புடையவராக இருக்கமாம். எதற்கு வீண் பொல்லாப்பு?

ஆம். ரவுடித்தனமே ஒரு பண்பாக வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியதாக ஆகிவிட்டது.

ஃபிலிம்ஃபேர் பையனுக்கருகில், பெஞ்சில், அன்றையத் தினசரி கிடந்தது. அது அவர்கள் வீட்டில் வாங்குகிற தினசரி இல்லை. ஆனால் உண்மையில், அதுதான் அவருக்குப் பிரியமான தினசரி. அவர் அதைக் கையிலெடுத்துக் கொண்டு, பெஞ்சில் அமர்ந்தவாறே அதைப் பார்வையிடத் தொடங்கினார்.

டில்லிக்கு வந்து இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக தினசரி காலையில் அவர் படித்து வந்தது அந்த தினசரியைத்தான். அதாவது அவர் உத்தியோகத்திலிருந்த வரை. ஆனால் இப்போது ரிட்டையராகி மகனுடன் அவனுடைய வீட்டில் தங்கியிருக்கும்போது, அவன் விரும்பித் தருவிக்கும் தினசரியைத்தான் அவரும் படிக்க வேண்டியிருக்கிறது. அவருக்கு விருப்பமான தினசரியையும் வேண்டுமானால் தருவிக்க அவன் தயாராகவே இருந்தான். ஆனால் ‘எதற்கு இரண்டு பேப்பர்!’ என்று அவர் தடுத்துவிட்டார். பலனாக, இப்போதெல்லாம் அவருக்கு தினசரி படித்த மாதிரியே இருப்பதில்லை.

இப்போது அவர் தன் பழைய தினசரியை வெகு நாட்களுக்குப் பிறகு ஆசை தீரப் படித்துத் தீர்த்தார். மனதில் ஒரு அலாதியான நிறைவு ஏற்பட்டது. இந்தத் தினசரியில் தலைப்புகளின் தன்மை, செய்திகளை வெளியிடும் முறை எல்லவற்றிலும் அவர்கள் இப்போது வாங்கி வந்த‌ திணசரியில் இல்லாத ஒரு அடக்கமும் அமைதியும் இருந்தது. அவருடைய மகனுக்கோ அந்த இன்னொரு தினசரியில் வரும் பளீரென்ற தலைப்புகள், காரசாரமான தலையங்கங்கள் இவைதான் பிடிக்கின்றன. எப்படி அவனுடைய மனைவியின் காரமான சமையல் பிடிக்கிறதோ, அப்படி எல்லாம் சுவையைப் பொறுத்த விஷயம்தான்.

அவ‌ருக்குத் த‌ன் மாட்டுப் பெண்ணின் ச‌மைய‌ல் பிடிப்ப‌தேயில்லை. ஆனால் என்ன‌ செய்ய‌ முடியும்? பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இனி அவ‌ர் அதைத்தான் சாப்பிட்டாக‌ வேண்டும். க‌ல்யாணி இப்ப‌டி அவ‌ரை விட்டுவிட்டுப் போய் விட்டாளே! அவ‌ள் குண‌ம் மாதிரியேதான் அவ‌ள் ச‌ம‌ைய‌லும். சாத்வீக‌மாக‌ இருக்கும். ஆனால் ச‌ப்பென்று இருக்காது. அவ‌ள் இருந்த‌ வ‌ரையில் அவ‌ர் முடி வெட்டிக் கொள்ள‌ப் போகும் தின‌ங்க‌ளை ஒரு வைபவ‌மாக‌வே கொண்டாடுவாள்; ஸ்பெஷ‌லாக‌ ஏதாவ‌து ப‌ல‌கார‌ம் செய்து விடுவாள். அவ‌ர் ஸலூனுக்குப் போய்த் திரும்பி வ‌ந்த‌ பிற‌கு இர‌ண்டாவ‌து டோஸ் காப்பி, எண்ணெய், வெந்நீர் எல்லாம் த‌யாராக‌ இருக்கும். பாவ‌ம், அந்த‌க் கால‌த்து ம‌னுஷி. ‘பெண்க‌ள் விடுத‌லை இய‌க்க‌த்தினால் பாதிக்க‌ப்ப‌டாத‌வ‌ள். க‌ண‌வ‌னுக்கு பணி விடை செய்வ‌திலேயே நிறைவு பெறுப‌வ‌ள்.’ அவ‌ருக்குத் திடீரென்று அவ‌ள் மீது கோப‌ம் கூட‌ ஏற்ப‌ட்ட‌து. அவ‌ள் இருந்த‌ வ‌ரையில் அவ‌ரை அள‌வு மீறிச் சீராட்டிய‌த‌ன் கார‌ண‌மாக‌த்தானே, இன்று அவ‌ர் மிக‌ அதிக‌மாக‌த் துன்ப‌ப்ப‌ட‌ வேண்டியிருக்கிற‌து! ‘பாவ்லாவ்’வின் நாய் போல‌, முடி வெட்டிக் கொள்ளும் தின‌ம் வ‌ந்த‌வுட‌னேயே அவ‌ருடைய‌ நாக்கு ருசியான‌ சிற்றுண்டிக்கு ஏங்க‌த் தொட‌ங்குகிற‌து.

காலையிலிருந்தே அவ‌ருக்கு ந‌ல்ல‌ ப‌சி. ஆனால் வீட்டில் ‘பிரெட்’ கூட‌ இல்லை. பிரெட் தொழிற்சாலைக‌ளில் ஒரு வாரமாக ஏதோ ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கிறது. அவருடைய மாட்டுப் பெண் அவளுடைய ’ஸ்பெஷாலிடி’யான உப்புமா கிண்டினாள். அவருக்கென்று இல்லை. எல்லோருக்குமாகத்தான். மாணவர் ரகளையொன்றைத் தொடர்ந்து யுனிவர்ஸிடி சென்ற இரண்டு வாரங்களாக மூடப் பட்டுக் கிடக்கிறது. அவருடைய மகன், மாட்டுப்பெண் இருவரும் யுனிவர்ஸிடியில் லெக்சரர்கள். இப்போது போனஸ் விடுமுறை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்போது சில நாட்களாகவே தினசரி காலையில் பலகாரம், பிறகு தாமதமாகச் சாப்பாடு. பலகாரம் என்பது பெரும்பாலும் பிரெட், அல்லது உப்புமா.

உப்புமாவைக் கூட ஒருவர் மோசமாகப் பண்ண முடியுமென்பது அவள் மூலமாக அதைப் பண்ணிச் சாப்பிடுவது வரையில் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. வழக்கம் போல எப்படியோ அதை விழுங்கிவிட்டு, ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடுத்தாள்.அதைக் குடித்துவிட்டு, ஸலூனுக்கு வந்து சேர்ந்திருந்தார்.

முள்ளங்கிப் பையன் முள்ளங்கியை முடித்துவிட்டு கொய்யாப் பழம் தின்னத் தொடங்கியிருந்தான். அவர் ஒரு கணம் பொறாமையுடன் அவனைப் பார்த்தார். கொய்யாப் பழத்தையும் அவன் அந்தக் கத்தியால்,நறுக்கித்தான் தின்றான். தின்னுவதை விடவும் அதிகமாக அந்தக் கத்தியைப் பயன்படுத்துவதில்தான் அவனுக்கு இன்பம் கிடைத்தது போலிருந்தது.

ஆரம்பத்தில் முடி வெட்டிக் கொள்ள உட்கார்ந்தவர்களில் இருவர் எழுந்து போனார்கள். காத்திருந்தவர்களில் இருவர் எழுந்து அந்த இடங்களில் போய் உட்கார்ந்தார்கள். அவருடைய முறை வருவதற்கு இன்னமும் நேரமாகும். அவர் நாவிதர்களின் கைவரிசையைச் சற்று நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஃபிலிம்ஃபேர் பையன் இன்னமும் அந்தப் பத்திரிகையைக் கீழே வைக்கவில்லை. அங்கே வேறு பத்திரிகைகளும் இல்லை. அவருக்கு அந்தப் பையன் மீது அனுதாபமேற்பட்டது. அவ்வளவு ஒரு இடத்தில் அமர்ந்து எதயோ படித்துக் கொண்டிருப்பது அதுஃபிலிம்ஃபேராகவே இருந்தால் கூட-அவனுக்கு மிகவும் இயல்பற்ற ஒரு செயலாக அவருக்குப் பட்டது. என்ன துரதிர்ஷ்டம்! இந்த ஃபிலிம்ஃபேரை மட்டுமாவது அவன் படித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் நாளை யாராவது ராஜேஷ் கன்னா சம்பந்தப்பட்ட புதிய வம்பை அவனிடம் பேச வரும்போது அவன் பேந்தப் பேந்த விழிக்க வேண்டி வரும். பாவம்! இந்தப் படிப்பைக் கூட அவன் தவிர்க்க முடிந்தால்!

எல்லோருக்குமே ஆசையாகத்தான் இருக்கிறது, படிப்பைத் தவிர்ப்பதற்கு. படிக்காமலேயே புத்திசாலியாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். அதாவது புத்தகப் படிப்புமட்டுமல்ல, வாழ்க்கைப் படிப்பும் கூடத்தான்.எம்.ஏ. படித்த தன் மாட்டுப் பெண்ணுக்கு கல்யாணியின் புத்திசாலித் தனத்தில் கால் பங்கு கூட கிடையாதென்று அவருக்குத் தோன்றுகிறது. இதை அவர் வாய் விட்டுச் சொல்ல முடியுமா? ரிடையராகிற சமயத்தில் அவருக்குத் துணையாக இருந்த ஒரு மகானுபாவன்,ஃபைல்களை ஆதியோடந்தம் படிப்பதையே கௌரவக் குறைச்சலா நினைத்துக்கொண்டு ஏதோ நுனிப்புல் மேய்ந்து தப்பும் தவறுமாக எதையோ எழுதி ஒப்பேற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு சமீபத்தில் பிரமோஷன் கிடைத்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய மகன் பளீரென்ற தலப்புகளும், சாதாரணமான தலையங்கங்களும் உள்ள தினசரியைக் காலையில் கரைத்துக் குடித்துவிட்டு, நாளின் எஞ்சிய பகுதியில் வருகிறவர் போகிறவர்களிடம் அந்தக் கருத்துக்களைத் தன் கருத்துக்களைப் போலச் சொல்லிக் கொள்ளுகிறான். ஆனால், உண்மையில் அவனுக்கென்று எந்த விஷயத்திலும் எந்தவிதமான திடமான அபிப்பிராயமும் கிடையாது என்பதை அவர் வெகு நாள் முன்பே அறிந்திருந்தார். இல்லாவிட்டால் இவளுடைய சமையலை மறு பேச்சில்லாமல் இவ்வளவு நாள் சாப்பிட்டுக் கொண்டிருப்பானா, அறிவில்லாதவன். இப்படிப்பட்டவர்கள் மாணவர்களுக்கு என்ன போதிக்க முடியும், என்ன திடமான வழியை அவர்களுக்குக் காட்ட முடியும்?

கடைசியில் அவருடைய முறையும் வந்தது. அவர் நாற்காலியில் போய் உட்கார்ந்தார். நாவிதன் அவரைக் கழுத்துக்குக் கீழே வெள்ளைத் துணியால் போர்த்தினான். அவருக்குத் திடீரென்று அமைதியும் ஆசுவாசமும் ஏற்பட்டது. மீண்டும் சிறு பையனாகிவிட்டது போல; பொறுப்புகள் இல்லாதவராய், சீராட்டலுக்குரியவராய். இப்போது அவர் எதுவும் செய்ய வேண்டியதில்லை, எல்லாம் நாவிதன் பார்த்துக் கொள்வான். ஒரு நல்ல தந்தையைப் போல, தாயைப் போல மனைவியைப் போல. எல்லா நாவிதர்களிடமும் அவர் இப்படி ஆசுவாசமாக உணர முடிந்ததில்லை. ஒரு வருடம் முன்பு இவனைக் கண்டுபிடிக்கும் வரையில் அவர் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது!

பல வருடங்களாக கனாட் பிளேஸில் ஒரு குறிப்பிட்ட ஸலூனிலிருந்து ஒரு குறிப்பிட்ட கிழவனிடம்தான் அவர் முடி வெட்டிக் கொண்டார்; ஆனால் திடீரென்று ஒரு நாள் அந்தக் கிழவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அன்று இன்னொருவன் அவருக்கு முடிவெட்டி விட்டான். அவன் அவர் தலையைத் தொட்டுத் திருப்பிய விதம், தலைமயிரை வாரிய விதம், சிரைத்த விதம், காதுகளின் மேல் புறத்தில் மழித்த விதம், எல்லாமே அவருக்கு அருவருப்பூட்டின. அவர் அதன் பிறகு அந்த ஸ்லூன் பக்கமே போகவில்லை. நாவிதனுடன் நாம் கொள்ளும் உறவு வெறும் வார்த்தை உறவல்ல. ஸ்பரிச உறவு- மனைவியுடன் கொள்ளும் உறவைப் போல -சிலரால்தான் நாம் கவரப்படுகிறோம். சிலர் தீண்டுவதுதான் நமக்கு இதமளிக்கிறது. நம்மைக் கவராதவர்கள் பேச்சைப் பொறுத்துக் கொள்ளலாம். ஸ்பரிசத்தைப் பொறுக்க முடியாது. அவனை அவருக்குப் பிடிக்காமல் போனது அவனுடைய குறையென்றுகூடச் சொல்ல முடியாது. அவருடைய துரதிர்ஷ்டமென்றுதான் சொல்ல வேண்டும். இந்த துரதிர்ஷ்டம் பல நாட்கள் நீடித்தது. எத்தனை சலூன்களுக்குச் சென்றிருப்பார், எத்தனை நாவிதர்களிடம் பண்ணிக் கொண்டிருப்பார்! யாருமே அவருக்குத் திருப்தியளிக்க முடியவில்லை. கடைசியில் ஒரு வருடத்துக்கு முன்பு அவர் வீட்டருகிலேயே இந்த சலூன் திறந்தது. அதனுடைய முதலாளியாகிய இந்த நடுத்தர வயது நாவிதனிடம் தான் ஸலூன் நாற்காலிகளில் பெற விரும்பிய ஆசுவாசத்தை அவர் மீண்டும்-வெகு நாட்களுக்குப் பிறகு -பெற முடிந்தது. அவனுக்கு வயதென்னவோ முப்பத்தைந்துக்குள்தான் இருக்கும். ஆனாலும் அவருடைய பழைய கிழட்டு நாவிதரிடம் இருந்த அதே பக்குவமும் இங்கிதமும் மென்மையானதொரு கர்வமும் அவனுடைய ஒவ்வொரு அடைவிலும் ஸ்பரிசத்திலும் இருந்தது. அவன் ஒரு கலைஞன். தான் செய்கிற தொழில் குறித்து அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. இந்தத் தாழ்வு மனப்பான்மை விளைவிக்கும் முரட்டுத்தனமோ அல்லது போலியான பணிவோ அவனிடம் இல்லை.

கல்யாணியிடம் அவரைக் கவர்ந்ததும் இவ்வகைக் குணங்கள்தாம். அவளுக்கு அவர்பால் போலியான மரியாதை கிடையாது. தன்னம்பிக்கையின்மையும் பலவீனமும் ஏற்படுத்தும் காழ்ப்புணர்ச்சிகளும் போர்க் கோலங்களும் கிடையாது. தன் சூழ்நிலை, தன் வேலை,தன் உறவுகள் ஆகியவைபால் அவளுக்கு ஒரு நிச்சயமும் நம்பிக்கையும் இருந்தது. அன்பும் ஈடுபாடும் இருந்தது. ஷரத்துகளில்லாத ஈடுபாடு. அவளுடைய இந்த நிச்சயம் அவருக்கு அவர் வேண்டிய திண்மையையும் பாதுகாப்பையும் அளித்தது. அவளுடைய உலகம் குழப்பமில்லாத உலகம்; மிக எளிமையான உலகம். அந்த எளிமை வெகுளித்தனமானதல்ல, விவேகம் நிரம்பியது. முதிர்ச்சியை உள்ளடக்கியிருப்பது. இந்த நாவிதனின் எளிமையைப்போல. அவனுடைய மௌனத்தைப் போல.

இவனுடைய தொழிலின் தன்மை காரணமாகவே இவனுக்கு ஒரு முதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த நாவிதனுக்கு முடி திருத்திக் கொள்வதற்காக வருகிற பலர் இப்படி வெட்ட வேண்டும் அப்படி வெட்ட வேண்டும்’ என்று உத்தரவிடும்போதெல்லாம், மனிதர்களின் சுய முக்கியத் துவத்தையும் அகந்தையையும் அவன் நெருக்கத்தில் தருசித்து இந்தத் தரிசனங்களின் பின்னணியில் தன்னுடைய சுய அபிமானம், சுய வெளிப்பாடு ஆகியவற்றையும் தவிர்க்க முடியாமல் பரிசீலனைக்கு உள்ளாக்க நேர்ந்தது. மற்றவர்களை உறுத்தாத விதத்தில் இவற்றை மொண்ணையாக்கிக் கொள்வதற்குப் பயின்றிருக்க வேண்டும். சில புடவை அல்லது நகை வியாபாரிகளிடமும், தையல்காரர்களிடமும் இதே விதமான முதிர்ச்சியை அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் கல்யாணியின் முதிர்ச்சியை உருவாக்கிய உலைக்களம் எது என்றுதான் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னுடைய ஆதி நாட்களின் முன்கோபமா? குடித்துக் குடித்துக் குட்டிச்சுவராய்ப் போன அவளுடைய அப்பாவின் பொறுப்பின்மையா? அவளுடைய நாத்தனாரின் தன் தமக்கையின் மௌடிகத்தை வித்தாகக் கொண்ட குரோதமும் பொறாமையுமா?

‘ஹேர் கட்’ முடிந்துவிட்டது. அவரைச் சுற்றியிருந்த வெள்ளைப் போர்வையை அவன் அவிழ்த்து உதறினான். டவலால் அவர் முகம், கழுத்து யாவற்றையும் அழுத்தித் துடைத்து, அவர் சட்டை மேலெல்லாம் தட்டினான். இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதேயென்று அவருக்கு ஏக்கமாக இருந்தது. அவர் நாற்காலியிலிருந்து இறங்கி, ஐந்து ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுத்தார். அவன் காத்திருந்த அடுத்த ஆசாமியை ‘வந்து உட்காரலாம்’ என்று சைகை செய்துவிட்டு, அங்கே அறை மூலையிலிருந்த மேஜையின் இழுப்பறையைத் திறந்து- அதுதான் அவனுடைய பணப்பெட்டி -அவருக்குச் சில்லறை எடுத்துக் கொடுத்தான். அவர் அதை எண்ணிக்கூடப் பார்க்காமல் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, வந்தனம் தெரிவிக்கும் முறையில் அவனைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டுக் கிளம்பினார். அந்தப் பணப் பரிவர்த்தனை அவர்களிருவரையும் எப்போதுமே சங்கடத்திலாழ்த்துவதாகத் தோன்றியது. அது அவர்களுடைய சம்பந்தம் பிரயோஜன ரீதியானது என்பதை உணர்த்தியது. அதுதான் உண்மையுமா? அப்படியல்லவென்று அவர் நினைப்பது – தன் சொந்த மகன் கூடத் தன்னிடம் காட்டாத ஒரு அக்கறையை
இந்த நாவிதன் காட்டுவதாக நினைப்பது ஒரு பிரமைதானா?

அவர் சலூன் வாசலையடைந்த அதே சமயம் அந்த முள்ளங்கிப் பையன் பக்கத்து டீக்கடை ரேடியோவிலிருந்து ஒலித்த சினிமாப் பாடலினால் கவரப்பட்டு சற்று முன்னர் அங்கிருந்து எழுந்து சென்றிருந்தவன் – மீண்டும் சலூனுக்குள் பிரவேசித்தான். “நீ என்னப்பா, எனக்கு அப்புறமாக வந்தவர்களுக்கெல்லாம் பண்ணிவிட்டாய்; நான் இரண்டு மணி நேரமாகக் காத்திருக்கிறேன்! நீ என்ன, கிழடுகளுக்காக மட்டும்தான் கடை திறந்திருக்கிறாயா?” என்று திடீரென்று உரத்த குரலில் சத்தமிட்டான். நாகராஜனுக்குச் சுருக்கென்றது. அவர் சலூன் வாசலில் நின்றார். நாவிதன் சாந்தமாக ஏதோ பதில் கூற முயன்றான். அதற்குள் ஃபிலிம்ஃபேர் இளைஞன், “இந்த நாவிதனும் கிழடுமாதிரி தாண்டா -ஸாலா!” என்றான். இருவருமாக உரக்கச் சிரித்தார்கள். தொடர்ந்து அவனுடைய ஆண்மையைப் பற்றிச் சந்தேகம் தெரிவித்து இரு பொருள்பட அவர்கள் பேசிக் கொண்டு போனார்கள். அவனைச் சீண்டுகிற முறையில், ஃபிலிம்ஃபேர் பையன் ஒரு ஆபாச மான சினிமாப் பாட்டைப் பாடியவாறு அந்த நாவிதனைத் தழுவிக்கொள்ள முயன்றான். முதலாளி நாவிதனைத் தவிர அந்தக் கடையிலிருந்து வேறு இரண்டு நாவிதர்கள் எதுவுமே நடக்காதது போலத் தங்கள் வேலையில் ஆழ்ந்திருந்தார்கள். அவனும் பதட்டமில்லாமல், “தயவு செய்து இங்கே சத்தம் போடாதீர்கள்” என்று மட்டும் சொன்னான். கடைசியில் காத்திருந்த மற்றவர்கள் அந்தப் பையன்களின் நடத்தையில் அதிருப்தியுற்றவர்களாக, ஆனால் அந்த அதிருப்தியை வெளிப்படுத்தவும் தயங்கியவர்களாக அமர்ந்திருந்தார்கள்.

நாகராஜனுக்குப் பொறுக்கவில்லை. அந்த நாவிதனுக்கு ஆதரவாக ஏதாவது சொல்ல வேண்டும்போல இருந்தது. ஆனால் அவருடைய உதவி உண்மையிலேயே அவனுக்குச் சாதகமானதாக இருக்குமாவென்றும் அவருக்குச் சந்தேக மாயிருந்தது. என்ன இருந்தாலும் அவர் இந்த ஊர்க்கார ரில்லை. அவருடைய இந்தி உச்சரிப்பு அந்தப் பையன்களுடைய கொண்டாட்டத்தை அதிகப்படுத்தி, அவரை அவர்களுடைய கிண்டலிலிருந்து காப்பாற்றும் அதிகப் படியான பொறுப்பை வேறு அந்த நாவிதன் மேல் சுமத்தக்கூடும். அவருக்கு புஜபலமில்லை; வேறு பலங்களுமில்லை. அவர் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். இதற்காகத் தன்னையே வெறுத்துக் கொண்டார். தான் செய்யத் தவறியவற்றுக்குச் சுலபமாகச் சமாதானங்கள் கற்பித்துக் கொள்ள அவரால் முடிகிறது. ஆனால் இந்தத் தர்க்கம் ஒரு இறுதியான விடையாகாது. அவருடைய கோழைத் தனத்துக்கு மன்னிப்பாகாது. ஆம், இதுவும் ஒரு கோழைத்தனம். அவன் முடிதிருத்தும் அழகை மனதாரப் பாராட்ட வேண்டும், அவனுக்கு ஏதாவது ‘டிப்’ கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைத்து, பிறகு அதை செயலாக்காமல் விடுகிறாரே, அதுவும் கோழைத்தனம்தான். கல்யாணியின் வேலைத் திறனை ஒரு முறைகூட வாய் நிறையப் புகழாமலிருந்ததும், அவளுடைய நாத்தனாரின் குரோத ஜ்வாலையில் அவள் வெந்த நாட்களில் வெளிப்படையாகத் தன்னை மனைவியின் பக்கம்தானென்று காண்பித்துக் கொள்ளாமலிருந்ததும் கூடக் கோழைத்தனம் தான். ‘என் மனசு அவளுக்குத் தெரியும்’ என்று அப்போதெல்லாம் அவர் தருணங்களை மீண்டும் அசைபோட நேருகையில், அந்தச் சமாதானம் அவருக்குத் திருப்தியளிப்பதாக இல்லை…

அவர் சாலையைக் கடப்பதற்காகக் காலையெடுத்து வைத்த சமயத்தில், சொல்லி வைத்தாற்போல அந்த மோட்டார் சைக்கிள் இளைஞன் பேய் வேகத்தில் நடைபாதைக்கு வெகு சமீபமாகச் சாலையில் தன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு வந்தான். அவர் அவசரமாக முன் வைத்த காலைப் பின்னுக்கிழுத்துக் கொண்டார். மீண்டும் அவருக்குக் கோபம் வெடித்துக் கொண்டு கிளம்பியது. அந்த மோட்டார் சைக்கிள் இளைஞன் மேலெழுந்த கோபம் ஸலூனில் சற்று முன் பார்த்த பக்கம் திசை மாறியது. மறுபடி ஸலூனுக்குத் திரும்பலாமாவென்று நினைத்தார். சென்றிருப்பார்; ஆனால் அப்போது திடீரென்று “தாத்தா! தாத்தா!” என்று அவருடைய பேத்தியின் குரல் கேட்டது. அவர் எதிர்ச்சாரியைப் பார்த்தார். அங்கே அனு தன் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் – அவருடைய பிள்ளை – வாயில் பீடாவைக் குதப்பிக் கொண்டிருந்தான். பீடா போட்டுக் கொள்வதற்காக அவன் வெளியே வந்திருக்க வேண்டும். அவர் ஸ்லூனுக்குத் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டு, சாலையைக் கடந்து அவர்களருகில் வந்தார். “என்ன காட்டுமிராண்டித்தனமா விட்டுண்டு போறான்கள்!” என்று மோட்டார் சைக்கிள் இளைஞன் பற்றிய தன் மனத்தாங்கலை மகனுடன் பகிர்ந்து கொண்டார்.

மகன் ஒரு கணம் பேசவில்லை. பிறகு வெற்றிலைச் சாறை ‘புளிச்’சென்று துப்பிவிட்டு (அனு வியப்புடன் அப்பாவின் வெற்றிலைச் சாறு தரையில் விழுந்த இடத்தை ஒரு கணம் நின்று பார்த்தாள்) “பொழுது போகலை இவாளுக்கெல்லாம்!” என்றான். அவன் அந்த இளைஞனுக்கு அனுதாபம் தெரிவிக்கிறானா அல்லது அவனைக் கண்டிக்கிறானா என்று தெரியாமலிருந்தது. அவர் மேலும் கடுமையாக ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் அனு அவரருகில் ஓடிவந்து அவர் சட்டையைப் பிடித்து இழுத்து, “தாத்தா, நீயும் ஸ்பிட் பண்ணு தாத்தா!” என்றாள்.

அவள் என்ன சொல்கிறாளென்று புரிந்து கொள்ள அவருக்குச் சில விநாடிகள் பிடித்தன. “நான் வெற்றிலை போட்டுக்கலையே!” என்றார்.

“நீயும் போட்டுக்கோயேன்”.

“இப்ப இல்லை; சாப்பிட்டப்புறம்”.

“அப்பா சாப்பிடறதுக்கு முந்தியே போட்டுண்டிருக்கா, பாரு!”

“நீ கொஞ்சம் தொணப்பாமல் வரமாட்டியா?” என்று மாதவன் – அவருடைய மகன் அவளைக் கடிந்து கொண்டான். அவள் அப்பாவைச் சற்றே முன்னே போக விட்டு விட்டு, பின்னாலிருந்து அவனுக்கு வலிப்புக் காட்டினாள்; தாத்தா மட்டும் பார்க்கும் படியாக, ‘உஷ்!’ என்று நாகராஜன் அவளுக்குச் சைகை காட்டினார். அப்பா எங்கேயாவது பார்த்துவிடப் போகிறார் என்பதைப் போல. தாத்தாவும் பேத்தியும் இப்படி நிறைய ரகசியமான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு. அவள் அப்பாவின் கையை விட்டு தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். “தாத்தா!”

“உம்?”

அவள் அவரைக் கீழே குனியுமாறு சைகை செய்தாள். அவள் ஏதோ ரகசியம் சொல்ல வேண்டுமாம்; அவர் குனிந்தார். அவள் அவர் காதில் கிசுகிசுத்தாள். “நீ சாப்பிட்டப்புறம் வெத்தலை போட்டுண்டு ஸ்பீட் பண்றயா?”

அவர் பதிலுக்கு அவள் காதில் கிசுகிசுத்தார். “சரி”.

அனு மட்டும் அந்த வீட்டில் இல்லாமலிருந்தால், இறுக்கமான மௌனங்களிலும் அபிப்பிராய மோதல்களிலும் அவர்கள் எப்போதும் உழன்று கொண்டிருப்பார்கள்; அவள் இருப்பதால் ஒருவருக்கு மற்றவர் சலித்துவிடும்போது, அல்லது பரஸ்பரம் உடன்பாடு ஏற்படாமல் போகும்போது, சட்டென்று அவளுடன் பேசத் தொடங்கிவிட முடிகிறது. பாவம், பெரியவர்கள் தன்னை எப்படிச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களென்று அந்தக் குழந்தைக்குத் தெரியவில்லை. வீடு நெருங்கியதுமே முன்பாக ஓடிச் சென்று காலிங் பெல் விசையை அழுத்தினாள். அவளுடைய அம்மா வந்து கதவைத் திறந்தாள்.

அவர் வீட்டினுள் வந்ததும் உடைகளைக் களைந்துவிட்டு உடனடியாக குளிக்கப் போகாமல் சற்று நேரம் மின் விசிறிக்கடியில் வியர்வை உலர்வதற்காக உட்கார்ந்திருந்தார். ரேடியோ ஒலி சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது; அவளுடைய மாட்டுப்பெண் தயா ரேடியோவுடன் சேர்ந்து, அதில் கேட்ட டியூனை முனகிக் கொண்டிருந்தாள். மாதவன் வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருக்க அனு அவனுக்குப் பழிப்புக் காட்டுவது போல ஒரு பென்ஸிலை சிகரெட் போல வாயில் வைத்துக் கொண்டு ஃபூஃபூ என்று ஊதிக் கொண்டிருந்தாள். சாப்பாட்டு மேஜை மேல் சாப்பிடுவதற்கான சாமக்கிரியைகள் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. அமைதியான குடும்பச் சூழ்நிலை; நாகராஜனின் உடல் இலேசாக நடுங்கியது. வியர்வையின் ஈரம் படிந்திருந்த சருமத்தில் காற்றுப் பட்டதனால் இருக்கலாம். ஸலூனில் நடந்த நிகழ்ச்சியை அவர் நினைத்துக் கொண்டார். அந்த அறையின் அமைதியும் இதமும் திடீரென்று அவரை உறுத்தத் தொடங்கின. அது ஒரு மாயையாகத் தோன்றியது. வெளியே போக்கிரிகள் உலகைச் சின்னபின்னமாக்கிக் கொண்டிருக்கிறாரகள்.

குளித்துச் சாப்பிட்டு விட்டு அவர் தன் பேத்தியுடன் சற்று நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்படியே கண்ணயர்ந்து விட்டார். காலையில் வெளியே சென்ற அசதி மீண்டும் விழித்துக் கொண்ட போது மணி நாலாகிவிட்டிருந்தது. காப்பி வாசனை அடித்தது. குழாயிலிருந்து ஜலம் விழும் ஓசை கேட்டது. இரை கொண்ட மலைப் பாம்பு போல நடுப்பகல் நேரத்தில் ஸ்தம்பித்துக் கிடந்த உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது. அவர் முகத்தை அலம்பிக் கொண்டு வந்தபோது மேஜை மீது காப்பி தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஒரு வாய் அருந்தினார்; இன்று அவ்வளவு மோசமாக இல்லை. காலைக் காப்பியைப் பொறுத்த வரையில், அவர்தான் எல்லாரையும் விடச் சீக்கிரமாக எழுந்திருப்பாராகையால், அவரே கலந்து விடுவார். ஆனால் மாலையில், மாட்டுப் பெண் தயாரிப்பதைத்தான் குடிக்கவேண்டியிருந்தது.

முன் அறையிலிருந்து உரத்த பேச்சுக் குரல்கள் கேட்டன. பிற்பகல் நேரம்தான் பெரும்பாலும் அந்த வீட்டில் பேச்சு நேரம். அவர்கள் ‘சமூக மிருகங்களாக’ ஆகும் நேரம். மனிதன் தான் வெறும் மிருகமில்லை என்று தனக்கும் மற்றவர்களுக்கும் நிரூபித்துக் கொள்ள ஏன் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொள்கிறான்? வெளியிலிருந்து யாரும் வராவிட்டால்கூட, அவர்கள் மூவரும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று யாரோ வந்திருந்தார்கள் போலிருக்கிறது. அவருடைய பிள்ளையின் குரலையும் மாட்டுப் பெண்ணின் குரலையும் தவிர, இன்னொரு ஆண் குரலும் ஒரு பெண் குரலும் கேட்டன. அவையும் அவருக்குப் பரிச்சயமானவையாகவே தோன்றின. அந்தச் சிரிப்பு! ருஷ்யாவுக்குப் போய்விட்டு வந்திருந்த புரொபசர் மோட்வானி மாதிரியல்லவா இருக்கிறது! ஆமாம், அவர்தான் மனைவியுடன் வந்திருக்கிறார்… மோட்வானி அதே பேட்டையில் இன்னொரு ப்ளாக்கில் இருந்தார். தற்போதுள்ள துணை வேந்தருக்கு அடுத்த படியாக இவர் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சர்வகலாசாலை வட்டங்களில் பேசிக் கொள்ளப்பட்டது. சரியான இடங்களில் சரியான நபர்களை அவருக்குத் தெரிந்திருந்தது. சந்தர்ப்ப வசத்தால் ஏற்பட்ட அவருடைய இந்த அண்மையை மகனும் மாட்டுப் பெண்ணும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதில் முனைந்திருந்தார்கள். மாட்டுப் பெண்ணின் பங்குதான் இதில் அதிகமிருக்கும். அவள் அவளுடைய அப்பாவின் பெண்தானே?

அவளுடைய குரல்தான் எல்லாருடையதும் விட அதிகமாகக் கேட்டுக் கொண்டிருந்தது; சிரிப்பும் கூட. இரண்டாவது ஸ்தானம் பெறும் குரல் யாருடையதென்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காப்பியிலிருந்து அவருடைய கவனத்தைத் திருப்ப இது பயன்பட்டது. அவருடைய‌ பிள்ளையின் குரல் அபூர்வமாகத்தான் எப்போதாவது ஒலித்தது. அவனை முத‌லிலேயே அவர் தள்ளுபடி செய்ய‌ வேண்டியதாயிற்று.

அவள் மாட்டுப்பெண் அவர்கள் எல்லாரையும் விட‌ அதிகமாக டிராயிங் ரூம் கலாச்சாரத்தில் ஊறியவளா யிருந்தாள். எல்லாம் பயிற்சியைப் பொறுத்த விஷயம்தான். அவளுடைய அப்பா அளித்த பயிற்சி. தீவிரச் சார்புகள் உள்ளவர்கள்போல் காட்டிக் கொள்ள வேண்டும். ஆவேசமாக எதையும் ஆமோதித்தோ அல்லது மறுத்தோ பேச வேண்டும். தன்னிடமோ பிறரிடமோ எதையும் புனிதமாகக் கருதாமல் ஒவ்வொன்றையும் ரஞ்சகப்படுத்த‌ வேண்டும். நாடகமாக்க வேண்டும். டிராயிங் ரூம் ஆடியன்ஸுக்காக. அவளுடைய அப்பாவுக்கு நாகராஜுக்கு இருந்த அளவுகூடத் தீவிரச் சார்புகள் கிடையாது. ஆனால் அவர் அப்படியிருப்பது போல நடிக்கத் தெரிந்தவர். பேசிப் பேசியே முன்னுக்கு வந்துவிட்டார். அவருடைய மகளும் இந்தத் திறமைகளுக்கு வாரிசாகியிருக்கிறாள்.

அவருக்கு இது போன்ற தருணங்களில் தன் மகன் மீது ஏற்படும் அனுதாபம் இப்போதும் ஏற்பட்டது. மகனே, இவர்கள் உன்னை ஏமாற்றிவிட்டார்கள். தாயின் தாத்தா காலத்திலிருந்து இவர்கள் டில்லியில் இருந்து வருகிறார்கள். நீயும் நானும் நேற்றைக்குத்தான் இங்கு வந்தோம். அவர்கள் வீட்டு டிராயிங் ரூம் சூழ்நிலை தேர்ச்சியான அந்த‌ நடிப்பு உன்னை மயக்கிவிட்டது. உன் அப்பவைப் போல‌ அன்றி அவர் உன்னுடன் அமர்ந்து சிகரெட் குடித்தார். அவருடைய பெண்ணும் மனைவியும் உனக்கு மது ஊற்றிக் கொடுத்து இனிய வார்த்தைகள் பேசி புதிய உலகங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். அது உண்மையிலேயே புதிதுதானென்று நீ நினைத்தாய். அவருடைய மகளுடன் நீ சுதந்திரமாகப் பேசவும் பழகவும் அனுமதித்து, தன் மதிப்பீடுகள் எவ்வளவு நவீனமானவையென அதன் மூலம் காட்டி உன்னைக் கவர்ந்தார். அதே சமயம், தன் மகளுடன் அந்த அளவு பழகிய பிறகு அவளைத் திரஸ்கரிக்க உன் மதிப்பீடுகள் இடந்தராதென்பதை உணர்ந்து அதன் மூலமே உன்னைச் சிறைப்படுத்தி விட்டார். மதிப்பீடுகளின் குழப்பம் உன் சுதந்திரத்தைப் பறித்து விட்டது. உனக்குப் பயிற்சியேயில்லாத ஆயுதங்களை உன் மேல் பிரயோகித்து உன்னை இவர் கட்டிப் போட்டுவிட்டார். எவ்வளவு நேர்மையற்ற, விதிகளை மீறிய விளையாட்டு!

ஆனால் இவருடைய விளையாட்டுகள் எல்லாமே விதிகளை மீறியவைதாம். அவருடைய வீட்டில் டெலிவிஷன் இருந்தது. பல விலையுயர்நத விளையாட்டுப் பொருள்கள் இருந்தன. அவற்றை வைத்து ஆசை காட்டி அவர் அனுவைத் தன்னுடன் இரண்டு நாள், மூன்று நாள் இருப்பதற்காக அழைத்துப் போவார். இதில் என்ன சாமர்த்தியமிருக்கிறது? நேர்மையுள்ளவனாக இருந்தால் அவனும் என்னைப் போல அனுவுக்குக் கதை சொல்லட்டும். அவளுடைய பாஷையில், அவளுடைய மட்டத்தில், அவளுடன் பேசட்டும். கொனஷ்டைகள் காட்டிச் சிரிக்க வைக்கட்டும். பிறகு பார்க்கலாம், அனு யாரிடம் வருகிறாளென்று. ஜப்பானிலும், ஜெர்மனியிலும் செய்த ரஞ்சகப் பொருள்களைச் சாட்சிக்குக் கூப்பிடுவானேன்!

நேற்றுக் கூட அவர் வந்திருந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார். தவிர்க்க முடியாமல் சர்வகலாசாலை மூடப்பட்டிருந்தது பற்றியும், மாணவர் ரகளையைப் பற்றியும் – மாணவர்களுடைய போக்கைக் கண்டித்துப் பேசினார். இளைஞர்களிடையே ரவுடித்தனமே வாழ்க்கை முறையாகி வருகிறது, என்றார். இவன் பெரிய யோக்கியன் மாதிரி!

நாகராஜன், அவருடைய கட்சிக்கு எதிர்க்கட்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே நேற்று அவரிடம் மாணவர்களை ஆதரித்துப் பேசினார். பெரியவர்கள் இளைஞர்களிடம் அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களைப் புரிந்துகொள்ள முயலுவதில்லை, என்றார். இளைஞர்கள் பாவம், தாரதம்மியங்களை ஆராயாமல் உணர்ச்சி வேகத்தில் அலைக்கழிக்கப் படுபவர்கள். பெரியவர்கள்தான் அவர்களைப் பக்குவமாக சரியான திசையில் திருப்பிவிட வேண்டும்…

இப்போது, தன்னுடைய நேற்றைய பேச்சை நினைத்து அவருக்குச் சிரிப்பாக இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. சே! நம்முடைய வெளிப்பாடுகள் பல சமயங்களில் எத்தகைய தவறான உந்துதல்களின் அடிப்படையில், தவறான நோக்கங்களுடன் உருவாகின்றன! சம்பந்திக்குப் பதிலாக வேறு யாராவது இருந்திருந்தால் நாகராஜனின் பேச்சும் வேறு விதமாக இருந்திருக்கும்.

அவர் காப்பியைக் குடித்து முடித்துவிட்டு அங்கேயே உட்கார்ந்திருந்தார். அடுத்த அறைக்குச் சென்று அங்கு நடந்த சம்பாஷணையில் கலந்து கொள்ள அவருக்குப் பயமாக இருந்தது. தம்முடைய வெளிப்பாடுகள் மறுபடி கட்டுக்கடங்காமல் தறிகெட்டுப் பாயத் தொடங்குமோவென்று கவலையாக இருந்தது…

அப்படியானால் அவருக்குத் தன் உந்துதல்களைப் பற்றிய நிச்சயமில்லையா?

கடைசியில், அங்கு உட்கார்ந்தும் அவருக்கு அலுத்துப் போயிற்று. அவர்களுடைய சம்பபாஷணையை வெறும் கிளர்ச்சியூட்டும் சாதனமாகப் பயன்படுத்தி, தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே இருந்து விடலாம் என்று நினைத்தவராய் அவர் முன் அறைக்குச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிள் இளைஞனைப் போல, அவருக்கும் கிளர்ச்சி வேண்டித்தான் இருக்கிறதோ?

இன்றும், யுனிவர்ஸிடி மூடியிருப்பதைப் பற்றித்தான் இவர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது, தவறு யார் பக்கம் என்பதையெல்லாம் அலசிக் கொண்டிருந்தார்கள். நாகராஜன் அங்கே சென்றதும் “நமஸ்தேஜி!” என்று மோட்வானியும் மிஸஸ் மோட்வானியும் அவருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். நாகராஜன் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தார்.

“தூங்கிக் கொண்டிருந்தீர்களாக்கும்!” என்றார் மோட்வானி.

“ஆமாம்”.

“இந்த வெதரில் வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை”.

“அதுதான் யுனிவர்ஸிடியும் தூங்குகிறது போலிருக்கிறது!” என்றார் நாகராஜன். எல்லோரும் சிரித்தார்கள். ஒரு மரியாதைக்காக அவர்கள் சிரித்தது போலிருந்தது. நாகராஜனின் பிரச்னையே, இப்போதெல்லாம், அவரை யாரும் ஸீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ளாததுதான். வயது காரணமாக அவர் பலமுறை தன் இயலபை மீறிய உரத்த குரலில் பேசவும், எதிராளியை உசுப்புகிற விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தவும் நேருகிறது.

“என்ன, யுனிவர்ஸிடியை எப்போது திறக்கப் போகிறீர்கள்?” என்று நாகராஜனே மறுபடி பேசினார், வேறு யாரும் பேசாததால்.

“என்னைக் கேட்டீர்களானால்? நான் வைசஸ்சான்ஸலர் அல்லவே!” என்றார் மோட்வானி.

“அட்லீஸ்ட், இதுவரையில் இல்லை” என்றாள் தயா, ஆண்களுடைய ஈகோவுக்குத் தீனி போடுவதில் பெண்களுக்கே உரிய சாமர்த்தியத்துடன். மோட்வானி அமுத்தலாகப் புன்னகை புரிந்தார். அவ்வளவுதான்; நாகராஜனுக்கு திடீரென்று அவருடைய ஈகோவைக் காயப்படுத்த வேண்டுமென்ற ஆசை பிறந்துவிட்டது.

“எனக்கு மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் பயங்கரமாக இருக்கிறது” என்றார் அவர். அது பொதுவாகச் சொல்லப்பட்டதா அல்லது குறிப்பாகச் சொல்லப்பட்டதா என்று தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. அவருடைய மகனின் முகத்தில் பதட்டம் ஏற்பட்டது. “அரசியல்வாதிகளின் விளையாட்டுக்குச் சர்வகலாசாலையும் ஒரு நிலைக்களனாகி விட்டதே!” என்றார் அவர் தொடர்ந்து. இதுவும் பொடி வைத்த வாக்கியம்தான். மோட்வானி ஒரு வலதுசாரி அரசியல் கட்சியுடன் சம்பந்தம் கொண்டிருந்தாரென்பது சிதம்பர ரகசியம்.

மோட்வானிக்கு ஏதாவது சொல்லாமல் இருக்க முடியவில்லை. கடவுளரின் ஓவியங்களில் தென்படுவது போன்ற ஒரு கருணை நிரம்பிய – தவறுகளை மன்னிக்கும் – புன்னகை அவர் முகத்தில் தோன்றியது. “இது ஒரு பரிச்சயமான ஆர்குமென்ட்” என்றார். “ஆனால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன் – சர்வகலாசாலையில் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்களா? வாலிபப் பருவத்தையடைந்துவிட்ட ஒரு ஜனநாயகத்தில், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் – சர்வகலாசாலை உட்பட அரசியல் பிரக்ஞையும், வெவ்வேறு அபிப்பிராயக் குழுக்களும் ஏற்படுவது இயல்புதானே? மாணவர்களை அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் காற்றே படாத வண்ணம் ‘இன்சுலேட்’ செய்யும் கல்விமுறை எமக்கு உடன்பாடு இல்லை. அத்தகையதொரு அமைப்பில் உருவாகும் மாணவர்கள், பிற்பாடு நடைமுறைச் சமூகத்துடன் தம்மைப் பொருத்திக் கொள்ள முடியாமல் திணறக்கூடும். மிருகக் காட்சிச் சாலையில் வெகுநாள் இருந்த பிறகு காட்டில் கொண்டு விடப்பட்ட மிருகங்களைப் போல”

“உயர்ந்த நோக்கம்தான்… இதை நேரடியாகவே அமுலாக்கலாமே!”

“எனக்குப் புரியவில்லை”.

“ஸ்டிரைக், வன்முறை, லஞ்சம், குழுச் சண்டை ஆகியவற்றில் வகுப்புகள் நடத்தலாம்; கட்சித் தலைவர்களின் பேச்சுத் தொகுப்பைக் கட்டாயப் பாடமாக வைக்கலாம்”.

“நான் சொன்னதை நீங்கள் மிக குறுகிய பிரமாணத்தில் புரிந்து கொள்கிறீர்கள்!”

“இருக்கலாம். நீங்கள்தான் எனக்கு தயவு செய்து தெளிவு ஏற்படுத்த வேண்டும்!”
மோட்வானி மறுபடி ஜாக்கிரதையாகப் பொறுக்கி யெடுத்துத் தொடுத்த சொற்றொடர்கள் மூலம், தான் நம்பிக்கை வைத்திருக்கும் அல்லது அவர் நம்பிக்கை வைத்திருப்பதாகப் பிறர் அவரைப் பற்றி நினைக்க விரும்பும் – கருத்துகளுக்கு உருவகம் கொடுத்தார். நாகராஜன் மறுபடி இவற்றையெல்லாம் மோட்வானி தம்முடைய சுயலாபத்துக்குச் சாதகமான முறையில் தான் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தர்க்கம் புரிந்தார்.

“நீங்கள் என்னைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை” என்றார் மோட்வானி, சோர்வுடன். (அவ்வளவும் நடிப்பு!)

“நம்மிடையேயுள்ள வயது வித்தியாசம் காரணமாயிருக்க லாம் – ‘ஜெனரேஷன் கேப்’ – இல்லையா?” என்று நாகராஜன் மிஸஸ் மோட்வானியைப் பார்த்தார். அவள் அவர் பார்வையைத் தவிர்த்தாள். பிரபல இடதுசாரிப் பத்திரிகையொன்றின் சமீபத்திய இதழில், சர்வகலா சாலைகளில் அமைதியின்மை ஏற்படுவதற்கு முதல் காரணமாக அவள் தலைமுறை இடைவெளியை அடையாளம் கண்டுகொண்டு விளாசித் தள்ளியிருந்தாள். நமக்குத் தேவை மேலும் மேலும், மாணவர்களுடைய அலைவரிசையில் சிந்திக்கத் தெரிந்த இளம் லெச்சசரர்கள், என்று அறைகூவியிருந்தாள். அவளுடைய கவர்ச்சியில் கால் பங்குகூட இல்லாத மிஸ்டர் மோட்வானியைப் பார்க்கும் போது இளம் லெச்சரர்கள் சர்வகலாசாலையில் வேண்டுமென்ற அவளுடைய தாகம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அந்த இடதுசாரிப் பத்திரிகையில் வழக்கமாக எழுதுவதோடு இல்லாமல், அதன் ஆசிரியர் குழுவிலும் மிஸஸ் மோட்வானி சம்மந்தப்பட்டிருந்தாள். இந்தச் சம்பவம் பல வி.ஐ.பி.- களுடைய அறிமுகத்தை அவளுக்குச் சம்பாதித்துக் கொடுத்திருந்தது. ருஷ்யா சென்று வந்த சர்வகலாசாலைப் பிரதிநிதிகள் குழுவில் மோட்வானி இடம் பெற்றதற்கு அவள்தான் முக்கியக் காரணமென்று பேசிக் கொண்டார்கள். அவளுடைய அரசியல் சார்பு மட்டுமல்ல, நாற்பதிலும் கட்டுக் குலையாத அவளுடைய உடலும் அவளுக்குச் சாதகமாக இருந்தது. மொத்தத்தில், வலது, இடது, நடுப்புறம் முதலிய எந்தத் திசையிலிருந்தும் பார்த்தாலும் மோட்வானியின் எதிர்காலம் பிரகாசம் நிறைந்த ஒன்றாக இருந்தது.

“ஸார், இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள முயல வேண்டும்” என்று மோட்வானி மறுபடி பேசத் தொடங்கினார். அவருடைய குரலின் சுருதியும் தோரணையும் இப்போது கணிசமான அளவு மட்டுப்பட்டிருப்பதை நாகராஜன் திருப்தியுடன் கவனித்தார். “நான் ஒரு லட்சியத்தை,அடிப்படைக் கொள்கையை, மனதில் கொண்டு பேசுகிறேன். நடைமுறையில் நம் அரசியலும் சரி, சர்வகலாசாலையும் சரி, இந்த ல்டசியத்துக்குப் பல மைல் தூரம் தங்கியிருப்பதை நான் உணராமலீல்லை.”

“இதை நாம் உணர்ந்தால் போதும்” என்றார் நாகராஜன். (அயோக்கியன்! என்ன சப்பைக் கட்டு கட்டுகிறான்!”

“அதே சமயத்தில், நடைமுறையிலுள்ள சில குறைபாடுகள், ஆரோக்கியமான ஜனநாயகப் போக்குகளுக்கெதிராக நம்மை “ப்ரஜுடிஸ்” செய்துவிடக்கூடாது.

“உதாரணமாக, உங்கள் பேச்சுப் பிடிக்கவில்லை யென்பதற்காக எல்லாக் கிழவர்களிடமும் நாங்கள் பேசாமலிருந்தோமென்று வைத்துக் கொள்ளுங்கள்” என்று மிஸஸ் மோட்வானி மாதவனைப் பார்த்தாள். அவன் முகத்தில் பளிச்சென்று- அவளுக்காக வேண்டி- ஒரு அங்கீகாரப் புன்னகை மலர்ந்தது. அவன் இன்னும் சில நாட்களில் தன்னுடைய தீஸிஸைச் சமர்ப்பிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில், மோட்வானி வீட்டு நாயைக்கூட அவன் விரோதித்துக் கொள்ளத் தயாரில்லை. நாகராஜனை அந்தப் புன்னகை உசுப்பிவிட்டது. “கிழவர்களை உங்களுக்குப் பிடிக்காதுதான். மிஸஸ் மோட்வானி!” என்றாரோ, மிஸ்டர் மோட்வானியின் முகத்தில் சவக்களை ஏற்பட்டது. தயா அவசரமாக ‘இதோ வருகிறேன்’ என்று எழுந்து சென்றாள். மாதவன், சின்னா பின்னமாகத் தொடங்கியிருந்த அந்த மாலை நேரத்தை மிகத் தாமதமாகி விடுமுன் காப்பாற்றும் அவசரத்துடன், “இதென்ன, நாமெல்லாம் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமோ?” என்றான். மோட்வானி அந்தத் துரும்பை நன்றியுடன் பற்றிக்கொண்டு “உங்கள் அப்பாதான் தொடங்கினார்” என்றார். “அவர் எங்கள் மேல் மிகக் கோபமாயிருக்கிறார் போலிருக்கிறது” என்றாள் மிஸஸ் மோட்வானி.(பிச்!)

“நோ, நோ” என்றார் நாகராஜன். “நான் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினேன். அவ்வளவுதான். மிஸ்டர் மோட்வானி-நான் தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.”

“சே, சே! தவறென்ன இதில்! இது ஒரு சிநேகமான சர்ச்சை” என்றார் மோட்வானி.

இப்படியாக, அவர்களுடைய விவாதம் டயர் ‘பங்சர்’, ஆன மோட்டாரைப் போலத் திடீரென்று பாதி வழியில் நின்று போயிற்று. அதற்கு ‘செயற்கைச் சுவாசம்’ அளிப்பது போல டிரிங்க்ஸ் ஊற்றிய கண்ணாடித் தம்ளர்களுடன் வந்தாள்.+ நாகராஜனைத் தவிர மற்றவர்கள் ஆளுக்கொரு தம்ளர் எடுத்துக் கொண்டார்கள். “சீர்ஸ்!”

இப்போது நாகராஜன் வெற்றிகரமாகத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். அந்த அறையில் பரவிய ஜின்னின் மணம் அவரைப் பார்த்துக் கொக்கரிப்பது போலிருந்தது. அவருடைய மாட்டுப்பெண் அவரை ‘செக்மேட்’ செய்து விட்டாள். குடிக்காத அவர் அவருடைய கருத்துக்களுடன் சேர்ந்து சட்டை செய்ய லாயக்கற்றவராகி விட்டார். புதிய உலகத்தின் துடிப்பையும் அசைவுகளையும் பற்றிஅவர் என்ன கண்டார்?

தயா தற்போது சர்வகலாசாலையின் துணை வேந்தராயிருந்த ஒரு வயதான மராத்திக்காரரின் பேசும் தோரணையைக் கேலியாக அபிநயம் பிடித்துக் காட்டினாள். அவர்கள் எல்லாரும் கண்களில் நீர் தளும்ப விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்தத் துணை வேந்தர் நாகராஜன் மிகவும் மதித்த ஒரு அறிஞர், பண்பாளர். நாகராஜனுக்கு இருந்த இந்த மதிப்பை அவருடைய* மாட்டுப்பெண்ணும் அறிவாள். அவரைச் சீற்றம் கொள்ளச் செய்வதற்காகவே இப்படிச் செய்தாள் போலும். அவர் சற்று நேரம் பொம்மை போல அசையாமல் உட்கார்ந்திருந்தார். பிறகு,”ஓகே, யூ காரி ஆன்!” என்று அவர்களிடம் சமத்காரமாகச் சொல்லிவிட்டு எழுந்து வந்து விட்டார். காலையில் ஸலூனிலிருந்து வெளியேறியபோது உணர்ந்ததைப் போலவே இப்போதும் அவர் உணர்ந்தார்.

அந்த வீட்டுக்கு, நல்ல வேளையாக, ஒரு மொட்டை மாடி இருந்தது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதுதான் அவருக்கு ஆசிரமமளித்தது. அவர் மொட்டை மாடிக்குச் சென்று கைபிடிச் சுவர் மேல் சாய்ந்தாற்போல நின்று கொண்டு கீழே தென்பட்ட காட்சிகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார். முன் தோட்டத்தில், கீழ் வீட்டுச் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த அனு, நிமிர்ந்து அவரைப் பார்த்து கையை ஆட்டினாள். அவர் பதிலுக்கு அவரைப் பார்த்து கையை ஆட்டினார். கீழே வீட்டுச் சொந்தக்காரன் தன் குடும்பத்துடன் இருந்தான்; இவர்கள் இருப்பது முதல் மாடியில்.
அவர் மொட்டை மாடியில் இங்குமங்குமாக உலவத் தொடங்கினார். தன் வெளிப்பாடுகளை ஆராயத் தொடங்கினார். தான் உண்மையிலேயே மிக அதிகமாகப் பேசிவிட்டோமோ? ஸலூனில் தன்னைக் காலையில் வெளிப்படுத்திக் கொள்ளாதது அவரை உறுத்திக் கொண்டே இருந்திருக்க வேண்டும். அது இப்படி அவரை வெடிக்கச் செய்திருக்க வேண்டும். அல்லது அவருடைய மகன், மாட்டுப் பெண் ஆகியோருடைய வாழ்க்கை முறை, மதிப்பீடுகள் ஆகியவற்றுக்கெதிராக அவர் போற்றி வரும் வெறுப்புணர்ச்சிதான் இத்தகைய சம்பாஷணைகளின்போது தளும்பி விடுகிறதோ? அல்லது அவர் காலத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை தான் படித்திருந்தாரென்ற ஒரு தாழ்வு மனப்பான்மை காரணமாக, அவருடைய மகனைப் போல மேல் படிப்பு படித்தவர்கள் கூட்டம் எவ்வளவு மேலோட்டமானதென்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ள அவர் விரும்புகிறார் போலும்.

தனக்குள் பதுங்கியிருந்த துவேஷங்களும் குரோதங்களும் அவரை எப்போதும் போல அன்றும் வெட்கமடையச் செய்தன. ‘நான் என்னைச் சற்று முன் வெளிப்படுத்திக் கொண்ட முறை மிக ஆபாசமானது’ என்று அவர் நினைத்தார். இல்லை. வெளிப்படுத்திக் கொண்ட முறைகூட ஆபாசமானதில்லை; உள்நோக்கம் ஆபாசமானது. முந்தின நாள் மாலை சினிமாத் தியேட்டரில் நடந்த நிகழ்ச்சியை அவர் நினைத்துக் கொண்டார். சாதாரணமாக அவர் அவர்கள் சினிமாவுக்குப் போகும்போது தான் வரவில்லையென்று வீட்டிலிருந்து விடுவாரென்றாலும் நேற்று என்னவோ அபூர்வமாக அவரும் அவர்களுடன் சென்றிருந்தார். ஒரு அசட்டுப் பிசட்டென்ற இந்திப்படம். அவருக்குத் தலையை வலிக்கத் தொடங்கிவிட்து. இன்டர்வெல்லுக்குச் சற்று முன்பாக வெளியே வந்து காப்பி ஸ்டாலில் காப்பி ஆர்டர் செய்தார். ஒரு வாய் அருந்தினார். கண்றாவியாக இருந்தது. இந்தக் காப்பிக்கு எழுபத்தைந்து பைசாவா? என்ன கயவாளித்தனம்! வேறு சிலரும் அந்தக் காப்பியை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் எந்தவிதமான பாவமும் இல்லை. உலகமே ரோஷமற்றுப் போய்விட்டதாக அவருக்குத் தோன்றியது. இது போன்ற படங்களைப் பார்க்கிறார்கள்; இது போன்ற காப்பியைக் குடிக்கிறார்கள்.

அவர் ‘டங்க்’கென்று ஓசையுடன் காப்பிக் கோப்பையைக் கௌண்டரில் வைத்தார்.
“இந்தாப்பா!” என்று காப்பி கொடுத்துக் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டார். அவன் அவரருகில் வந்தான். “இதென்ன காப்பியா?”

“ஆமாம், ஸாப்”.

“இல்லை; இது காப்பியே இல்லை”.

அவன் பேசாமல் நின்றான்.
“இது காப்பியில்லை” என்றார் அவர் மீண்டும். சுற்றியிருந்தவர்கள் அந்தப் பக்கம் பார்க்கத் தொடங்கினார்கள்.

“காப்ப்பிதான் ஸாப்”

“இல்லை”.

“இவ்வளவு பேர் குடித்தார்கள்; யாரும் எதுவும் சொல்லவில்லை. நீங்கள்தான்”

“அவர்களுக்குச் சுரணையில்லை. உனக்கு வெட்கமில்லை. எதையே ஒன்றைக் காப்பியென்று ஏமாற்றி இவ்வளவு பணம் வேறு பறிக்கிறாயே அயோக்கிய ராஸ்கல்!”

“கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்கள்”.

“உனக்கு மரியாதை வேறா திருட்டு ராஸ்கல்!”

அவ்வளவுதான்; அவன் அவர் சட்டையைப் பிடித்துவிட்டான். இதற்குள் இன்டர்வெல் விட்டு அங்கு நிறையக் கூட்டம் கூடிவிட்டது. பலர் அவர்களிடையில் குறுக்கிட்டு அடிதடி நேராமல் விலக்கி விட்டார்கள். அதே சமயம் அவருடைய மகனும் வெளியே சென்ற அப்பாவை இன்னும் காணோமே என்று அங்கே தேடிக் கொண்டு வ‌ந்து விட்டான்.

அந்த‌ வெளிப்பாட்டை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவ‌ருக்குப் பெருமையாக‌ இருந்த‌து. துக்க‌மாக‌வும் இருந்த‌து. ச‌ண்டையைப் பிரித்து விட்டார்க‌ளே த‌விர‌ காப்பியின் த‌ர‌த்துக்கு எதிராக‌ அவ‌ர் உய‌ர்த்திய‌ குர‌லுக்குப் ப‌ல‌ம் சேர்க்க‌ யாரும் முன்வ‌ர‌வில்லை. அவ‌ர்க்குத்தான் ருசி கெட்டுப் போய்விட்ட‌தா? ருசியின் அடிப்ப‌டைக‌ளே மாறிவிட்ட‌ன‌வா?

எப்ப‌டியிருந்தாலும், அந்த‌ வெளிப்பாடு தூய்மையான‌து. இன்றைய வெளிப்பாடுகளைப் போல மோட்வானி போன்றவர்கள்பால் வெறுப்பு, மாட்டுப் பெண்ணின் பால் அதிருப்தி போன்ற உணர்வு கறை படியாதது. அவர் தன்னை இன்னமும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் தன் வெளிப்பாடுகளைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கும், இள வயதில் விதவையாக்கப்பட்டு அவருடனேயே தங்கி அவருடைய தாம்பத்திய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை நரகமாக்கிய அவருடைய தமக்கைக்கும் என்ன வித்தியாசம்? அவளுக்குக் கல்யாணியிடம் தவறு கண்டுபிடிப்பதன் மூலமாகத்தான் தன் முக்கியத்துவத்தை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கும் அது போல ?

சே. சே.

இது அந்தக் காலமில்லை. அவருடைய மனைவி தன் நாத்தனாரைச் சகித்துக் கொண்டதைப் போல, அவருடைய மாட்டுப் பெண் அவரைச் சகித்துக் கொள்ள மாட்டாள். அவள் அப்படி இருக்க வேண்டுமென்று அவர் எதிர் பார்ப்பதும் நியாயமாகாது. இந்த அளவாவது அவள் அவரைச் சகித்துக் கொள்கிறாளேயென்று, வேளா வேளைக்குச் சோறு போடுகிறாளேயென்று – அவர் நன்றியுடன் இருக்க வேண்டும்.

அவர்களின்றி அவரால் இருக்க முடியாது. அனுவைப் பிரிந்து நிச்சயமாக இருக்க முடியாது. தனிமையைப் போக்கிக் கொள்ள அவர் அவர்களையே நம்பியிருப்பவர்.

தனிமை அவருக்குப் பிரியமானதில்லை. நேற்று சினிமாத் தியேட்டரில் ஒரு கணத்துக்கு அந்தப் பெருங்கூட்டத்திடையே தன் தனிமையை அவர் உணர்ந்தார். நேற்று அங்கே அவருடைய எதிர்ப்புக்குத் துணை கிடைக்காததுதான் இன்று சலூனில் அவரைத் தயங்கச் செய்திருக்க வேண்டும். தனிமையைப் பற்றிய பயம்தான், இறுதியில் மனிதனுடைய பாய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது, அவனைச் சமரசங்களில் சிக்க வைக்கிறது.

அவருடைய மகனும் மாட்டுப்பெண்ணும் மட்டும் தம் வர்க்கத்தினரிடமிருந்து வேறுபடுகிறவர்களாயிருக்க வேண்டுமென்றும், தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?

ஒருவேளை, அதன் மூலம்தான் அவர்களுடன் சேர்ந்து வசிப்பதை அவர் நியாயப்படுத்திக் கொள்ள விரும்புகிறார் போலும்.

அட, சுயநலக்காரக் கிழவா!

அவர் மீண்டும் கைப்பிடிச்சுவரருகில் சென்று சாலையைப் பார்த்தார். அவருடைய மகன், மாட்டுப்பெண், மோட்வானி தம்பதியர் நால்வரும் அப்போதுதான் வீட்டிலிருந்து வெளிப்பட்டு சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். மோட்வானி எதற்கோ உரக்கச் சிரித்தார். அவருடைய மாட்டுப்பெண் தான் மறுபடி நகைச்சுவை மிளிர எதையாவது சொல்லியிருக்க வேண்டும்.

அவள் அவருடைய மகனைக் கவர்ந்த, அவனுடைய எதிர்ப் பண்பினள். அப்படியானால், அவள் கல்யாணியின் மறுபுறமா?

கல்யாணியின் சுயநலமின்மை, நேர்மையான வெளிப்பாடுகள்; தீவிர நம்பிக்கைகளும் அவற்றுக்காகப் போராடும் துணிச்சலும்.

கீழே அனு இன்னமும் அந்தச் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரன் ஒரு ஈஸிசேரில் சாய்ந்தவாறு வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். நாகராஜன் நிற்பதைக் கவனித்து ‘கீழே வாருங்களேன்’ என்று சைகை செய்தான்.

நாகராஜன் படிகளில் இறங்கிக் கீழே சென்றார். அவனருகில் இருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தார். “உங்களுக்குத் தெரியுமா ஒரு விஷயம்- இந்த ஸலூனில் இருந்த நாவிதனை யாரோ இன்று கத்தியால் குத்தி விட்டார்களாம்” என்றான் வீட்டுக்காரன்.

நாகராஜனுக்கு படிகளில் இறங்கி வந்ததால் ஏற்பட்ட இதயப் படபடப்பு இப்போது மேலும் அதிகமாவது போலிருந்தது. “யார்”- என்று பதட்டத்துடன் தனக்கு வழக்கமாகப் பண்ணிவிடும் நாவிதனை விவரித்தார். அவன்தான், என்று வீட்டுக்காரன் ஊர்ஜிதப்படுத்தினவுடன், இதை நான் எதிர்பார்த்திருந்தேனா என்ன, என்று தன் விசாரணைக்காக அவர் வெட்கினார்.

பிறகு ஒரு இலேசான நம்பிக்கையுடன், ஒரு இலேசான பயத்துடன் கேட்டார். “உயிருக்கு ஆபத்தில்லையே?”

வீட்டுக்காரன் உதட்டைப் பிதுக்கினான். “ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாம்.குத்தினது யார் தெரியுமா? ஒரு பதினெட்டு வயதுப் பையன்”.

adhavansirukadhaigalஆம். முள்ளங்கியும் கொய்யாப்பழமும் நறுக்கிக் கொண்டிருந்த அந்தப் பையனாகத்தான் இருக்கும். அவர் மேலே பேசவில்லை. ஒரு வேளை, தன்னால் இது நடக்காமல் தவிர்க்க முடிந்திருக்கலாம். தன் கைகளிலும் அந்த நாவிதனின் ரத்தக்கறை படிந்திருப்பது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது.

வெளியே திடீரென்று அவருக்குப் பரிச்சயமான அந்த மோட்டார் சைக்கிள் ஓசை தூரத்தில் மெல்லியதாகக் கிளம்பி, கிடுகிடுவென்று வேகமாக உயர்ந்தவாறே அருகில் நெருங்கி உச்ச கட்டத்தை அடைந்து அவர்கள் செவிகளை அதிரச் செய்துவிட்டு, மறுபடி தூரத்தில் தேய்ந்து மறைந்தது.

“தாத்தா! ஆத்துக்குப் போகலாமா?” என்றாள் அனு. அவரருகில் வந்து.

அவர் அந்தக் குழந்தையின் பரிசுத்தமான ஸ்பரிசத்தினால் தன்னைக் கழுவிக் கொள்ளவிரும்பியவரைப் போல, அவளை அவசரமாக தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார்.

*****

நன்றி: ஆதவன் சிறுகதைகள் – கிழக்கு பதிப்பகம்

புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

3 கருத்துகள்:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி on March 12, 2012 at 2:24 PM said...

அற்புதமான எழுத்தாளார். நல்ல அறிமுகம் எனக்கு.

mmk on November 5, 2014 at 8:45 PM said...

manathin unarvukalai nutpamaha vivarikkum kathai. Mouni, JK kku pin nan paditha arumayana padaippu.

Unknown on April 17, 2022 at 9:06 PM said...

ஒவ்வொரு முறையும் புதிய புரிதலோடு வாசிக்கிறேன்! மனோதத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை! அதிலும் என்னைப் போன்ற வயதானவர்களின் மனக்கவலையை அழகாக சொல்லி இருக்கிறார்!

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்