May 11, 2013

ஒரு புளியமரம்-ஆத்மாநாம்

ஒரு புளியமரம்

ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று
தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோதுathmanam
நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா
திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு
நினைவிருக்கிறதா அன்றொரு நாள்
நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது
என் தமக்கையின் மடியின் அயர்ந்துபோனாய்
அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே
உன் முகத்தில் உடலில் எங்கும்
வா எப்படியும் என் மடிக்கு.

-o00o-

அந்தப் புளியமரத்தை

நேற்றிலிருந்து
அந்தப் புளியமரத்தை
வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்

முதலில்
புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள்
சிறிய சிறிய கிளைகளை
முறித்துக்கொண்டார்கள்
இலைகள் மலர்கள்
உதிர உதிர சிறிய
கிளைகள் பூமியைத் தழுவின

சிறிய கிளைகள் இழந்த மரம்
அருவ உருவில்
வானத்தை
உறிஞ்சிக்கொண்டிருந்தது

மரத்திலிருந்து இறங்கியவர்கள்
ஒரு மாபெரும்
மரமறுக்கும் ரம்பத்தைக்
கொண்டுவந்தார்கள்

புளியமரத்தின்
அடியைக் குறிபார்த்து
கீறிக்கொண்டிருந்தார்கள்
பொடித்துகள்கள்
இருபுறமும் கசிய

நெடுமரத்தைச் சாய்த்தார்கள்
மீதம் உள்ள கிளைகளையெல்லாம்
வெட்டிவெட்டி அடுக்கினார்கள்

கட்டை வண்டியில் ஏற்றிப்
புறப்பட்டார்கள்

இலை தழைகளுக்கிடையே
ஒரு புளியஞ்செடி
தன்னைப் பார்த்துக்கொண்டது.

-o00o-

2083 ஆகஸ்ட் 11

என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
கவிதை ஆரம்பம்
ஆச்சர்யத்துடன்
ஞானக்கூத்தனைக் கேட்டேன்
இன்னும் இங்கேவா இருக்கிறோம்
அவர்
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது
என்றார்
என்ன இது வினோதம்
இருந்த இடத்திலேயே இருப்பது
என்றேன்
இருப்பதை உணர்வதே வாழ்க்கை
என்றார்
நகுலன் எங்கே என்றேன்
நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார்
என்றார்
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள
என்றார்
நன்றி என்றேன்
அப்பொழுதுதான்
ஒரு அணுகுண்டு வெடித்த
சப்தம் கேட்டது
இருவரும்
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம்.

 

புத்தக விவரங்கள்:

ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
டிசம்பர் 2008, காலச்சுவடு பதிப்பகம்.

நன்றி:சொல்வனம்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்