Jun 30, 2010

பிரிவு- சம்பத்

சரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் 'ராஜதானி' எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. 'இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை விட்டுவிட்டு கன வேகத்தில் 'ஹவ்ரா' பக்கம் போய்க்கொண்டிருப்பாள்,' என்று நினைத்தார் தினகரன். தன்னில் ஏதோ செத்துக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. பத்மாவைப் பற்றி இவ்வளவு தீவிரமாக எப்போதாவது நினைத்திருப்போமா? என்று பட்டது. "தீவிரங்களெல்லாம் சொல்லிக்கொண்டா வருகிறது?' என்று சொல்லி எதையெல்லாமோ சபித்தார்.

sambath அவரும் நினைத்து நினைத்துப் பார்த்தார். 'எது என்னை கல்பனாவிடம் இவ்வளவு தீவிரமடையச் செய்தது?' அவள் முதன் முதலில் எல்லோருக்கும் நடுவே உட்கார்ந்து, நாலுமணி மாலை இருக்கும், பாட ஆரம்பித்தாள். அவள் உட்கார்ந்த விதம், அவளுடைய சிரிப்பு, அவளுடைய நாசியும், கண்களில் மிளிர்ந்த அகலமும்! இதுதான் அவரை முதன்முதலில் அவளிடம் ஈர்ப்பித்தது. இருந்தும் இதெல்லாம் தப்பு என்று அவர் அவள் பக்கம் கூட போகாமல் தலைதெறிக்க எதிர்புறமாக ஓடத்தான் செய்தார் - மானசீகமாகத்தான் - அவள் யாரோ நான் யாரோ என்று பல தடவைகள் சொல்லிக்கொண்டார் - இருந்தும் பாழும் மனமும் உடம்பும் பரிதவிக்கத்தான் செய்தது.

ஒருநாள் கிட்டத்தட்ட லன்ச் டயத்தில் அவர் லைப்ரரியில், கோதாவரி டெல்டாவில் புகையிலை வளர்ப்பைப் பற்றி விபரம் சேமிக்கச் சென்றபோது அவளைத் தவிர லைப்ரரியில் வேறு யாரும் இல்லை. பொதுவாகவே அவள் ஆண்களைக் கண்டால் பயப்படுவதுபோல் காணப்படுவாள். ஒரு அஸிஸ்டென்ட் லைப்ரேரியனாகவிருந்தும், அவளுக்கு அந்த பொருளாதார புத்தகப் பட்டியல் விபரம் இன்னமும் அத்துப்படி ஆகியிருக்கவில்லை.

"மிஸ் கல்பனா!"

"எஸ். மிஸ்டர் தினகரன்!"

"வேர் கன் ஐ ஃபைன்ட் தீஸ் ஜெர்னல்ஸ்?"

"விச் ஜர்னல்ஸ் ப்ளீஸ்?"

அவர் பட்டியலை எடுத்துக்கொண்டு அவள் பக்கமாக நெருங்கியபோது, அவளுடைய உடம்பின் வாசனையை அவர் நுகர்ந்தார். ஏதோ யுகம் யுகமாகப் பழக்கப்பட்டதுபோல் அவள் அவரைப் பார்த்தாள்.

அவளிடம் அதிகமாக லக்கேஜ் இல்லை. பின் ஏன் இவ்வளவு நேரம்? ஒருக்கால் டாலியை பார்க்கப் போயிருக்கிறாளோ என்னவோ? டாலியும் தான் பாடுகிறாள்; லதா மங்கேஷ்கரும்தான்; கீதா டட்டும்தான்; பர்வீன் சுல்தானாவும் கூடத்தான்! இவ்வளவு பேர்களையும் பாடக் கேட்ட பின்னும் என் பாட்டுத்தான் உனக்குப் பிடித்திருக்கிறது என்றால், "யூ ஆர் எய்தர் ப்ளஃபிங் ஆர் யூ ஆர் இர்ரவோக்கபிலி மாட்," அவளுடைய சிரிப்பு !!!

"கல்பனா, ப்ளீஸ்..."

"அக்ஹான் ....அக்ஹான்..அக்ஹான்.."

"வொய்? யூ லாஃப் லைக் எ கோஸ்ட்..." என்பார் அவர்.

அவருடைய கழுத்தை வளைத்துக்கொண்டு அவரும், அவளும் ஈடுபடுமுன், ஊஞ்சலாடிய விகிதத்தில் அவளுடைய அறையே நிழலாகி மடிக்கப்படுவதுபோல் அவர் உணர்வார்! ஏதோ இனம் புரியாத சோகமும், இதுவும் ஓய்ந்து விடுமோ என்கிற பயமும், பீதியும் அவரைத் தொற்றும். புத்தரைப்போன்று அவரும் வால்யூஸ் டெவலப் செய்யப் பார்த்தவர்தான். புத்தருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இவருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இரண்டுமில்லை. எந்தக் கோணத்திலிருந்து அணுகினாலும் வாழ்க்கை சோகமயமானது என்பதை இருவருமே துல்லியமாக உணர்ந்தனர். ஆனாலும் அவள், அவளுடைய இனத்துக்குரிய விகிதத்தில், சோகத்தை அடித்துப் போட்டு சந்தோஷமாகவேயிருந்தாள். அவரால்தான் முடியவில்லை.

அவர்கள் இருவரும் சினிமா போகவில்லை. பார்க்குகளுக்குப் போகவில்லை. அவர் அவளை மோட்டார் சைக்கிளில் பின்னால் வைத்து, கனவேகமாக ஓட்டிச் சென்று தன்னை பெரிய ஆம்பிள்ளை என்று பறைசாற்றிக்கொள்ளவில்லை. அவளும் அதை விரும்பவில்லை. இருவருமே அந்த நிலைகளை எல்லாம் எப்போதோ கடந்து விட்டிருந்தனர். இருந்தும் ஒரு பத்து வருடம் அதையெல்லாம் பின்தள்ளி போட்டிருந்தாலும் அவர்கள் அப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

கல்பனாவின் உடம்பை பிரித்துப் பிரித்து அறிய முடியாது என்பதை அவர் கூடிய சீக்கிரமே இனம் கண்டார். இருந்தும் அவளுடைய மார்பகத்திலிருந்து யோனி வரையிலான பாகத்தில் விரவியிருந்த நல்ல ஹெல்த்தை அவர் கூடிய சீக்கிரமே இனங் கண்டார். அங்கு அவருடைய விரல்கள் விளையாடிய விதத்தில் அவள் டிரான்ஸ÷க்கு உட்படுவாள். 'மை மை திஸ் டிரான்ஸ் நோபடி குட் கிவ் மி..கம் கம்," என்பாள். இருந்தும் இரண்டே மாதங்களில் வைகறை போன்ற அதிலும், அந்த துல்லியம் ஏற்படுமோ என்கிற நிலையிலும், எதிர்பார்ப்பிலும் விரிசல் விழுந்தது. அதை அவர் விரிசல் என்று கணிக்காமலே, கணிக்கக்கூடாது என்று இருந்த விகிதத்தில் இன்னமும் நான்குமாதம் ஓடியது. அதுவும் இப்போது ஸ்டேஷனில் வந்து நிற்கிறது.

அவருடைய லவ் வருவதைப் பார்த்து ஓடிச் சென்று அவளிடமிருந்து ஸூட்கேஸையும், ஃப்ளாஸ்கையும் வாங்கிக் கொண்டார்அவர் உள்ளம் துள்ளியது.

ரிபப்ளிக் டேக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன.

"டிக்கட் கிடைத்ததா?" என்றாள் கல்பனா.

இவர் பதில் சொல்லாமல், அவளுடைய பச்சைப்புடவையிலும், அவர் வாங்கிக்கொடுத்திருந்த பச்சை ஸ்வெட்டரிலும் ஆழ்ந்தே போனார். அவளுடைய தலையில் ஒரு சிவப்பு ரோஜா ரொம்பவும் அழகாக இருந்தது.

"இது ஸ்டேஷன்," என்றாள் கல்பனா.

அவர் விழித்துக்கொண்டார். அவளை நேரே அவளுடைய ஸீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்து, அவளுடைய ஸூட்கேஸை கொடுக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்தார். உள்ளே கதகதப்பாக நன்றாக இருந்தது. "இந்த ரயில் நாம் இருவருமே செத்து விழும் அளவுக்கு போய்க்கொண்டேயிருந்தால் என்ன," என்று நினைத்தார். ஆனால் சொல்லவில்லை.

"கிவ் மி எ லிட்டில் வாட்டர்," என்றாள் கல்பனா.

தொங்கிக்கொண்டிருந்த வாட்டர் பாட்டிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுத்தார். குடித்துவிட்டுப் பிளாஸ்டிக் டம்பளரை கொடுத்துவிட்டு அவள் தன்னிடத்திலிருந்து எழுந்தபோது அவளுடைய வயிறு இடத்தில் பெரிய குழியை தரிசித்து அந்தத் திண்மையில் ஆழ்ந்து ஆழ்ந்துவென இருக்க, மீண்டும் விரவியிருக்க விழைந்தார்.

அவர்கள் இருவருமே கூட்டத்தைக் கொஞ்சம் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்கள். தினகரன் இறங்கி அவளுக்குகைலாகு கொடுத்தார். எண்ணற்ற டைம்கள் படுக்கையிலிருந்து அவளுக்கு எழ கை கொடுத்தது ஞாபகம் வந்தது. அவர் அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு இப்போதும் குதித்த விகிதத்தில் அவர் அவளை ஒரு கணத்திற்கு நிர்வாணமாகக் கண்டார்! சொரேல்னு அவரில் ஒரு வெட்கம் எழும்பியது. அவளைக் காப்பாற்றுவது போன்று அணைத்துக்கொண்டே நடந்தார்.

அவளுடைய இரண்டு லெட்டர்கள் போஸ்ட் செய்ய வேண்டியிருந்தது. வாங்கிக்கொண்டு போய் ஸ்டாம்ப் ஒட்டிப்போட்டு விட்டு ஒரு ஆறு ஆப்பிள், அவளுக்குப் பிடித்த கொட்டை எடுத்த பேரிச்சம்பழம் மூன்று பாக்கெட், எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது அவர் கண்களில் கண்ணீர் துளித்தது. அவளிடம் போனபோது 'டிட் யூ வீப்,' என்றாள் அவள். "நோ நாட் எக்ஸ்ôட்லி," என்றார் அவர்.

தயங்கியவாறே, "எப்போது திரும்பி வருவே," என்றார்.

"ஒரு மாதம் லீவு கேட்டிருக்கிறேன்," என்றாள் அவள்.

"எனக்குத் தெரியும்," என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

"எக்ஸ்டென்ஷன் பண்றதாய் இல்லை,"என்றாள் அவள்.

கொஞ்சநேரம் கழித்து, 'டூ யூ ஃபீல் ஸôட்?" என்றாள் அவள்.

அவர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அடி வயிற்றில் ஒரு gap ஏற்படுவதுபோன்று உணர்ந்தார். பீதியை தாங்க முடியாது போலிருந்தது.

பையிலிருந்து அவர் ஒரு ஸிகாட்டை எடுத்ததும், அவள் எம்பி, அவர் கழுத்தை வளைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். திடீரென்று ஒரு சலனமும் அற்று அதை அவர் ஏற்றுக்கொண்டார். கணங்கள் ஒழுகிப்போவதை கேவலம் தினகரனாலா நிறுத்த முடியப்போகிறது?

ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது பிரபஞ்ச ரீதியில் தன்னை ஏதோ ஒரு தனிமை சூழ்வதை அவர் உணர்ந்தார். பிளாசா வரையிலும் போகும், அவ்வளவு மரங்களையும் ரயில்வே க்வார்டர்ûஸயும் பட்படிகளையும் எல்லாவற்றையுமே, கடைசிப் பட்சமாக ஓர் தனிமை, நிராதரவாக்கிவிடுவதைப் பார்த்தார். எங்கேயாவது தனியாகப் போய் ஒரு காப்பி சாப்பிட்டால் தேவலை போலிருந்தது. வயது முப்பத்தி இரண்டு. விஷயம் இவ்வளவுதான்.பத்மாவிடம் அவருக்கு ஒரு முழுமை ஏற்படவில்லை. இங்கு இதிலும் கிட்டாது என்கிற பயங்கரத்தை ஜெரிக்க மீண்டும் காஃபியை தனிமையில் நாட வேண்டியிருக்கிறது. அட ஹவ்ரா என்ன ஹவ்ரா!அவள் மூனுக்குத்தான் போகட்டுமே! அவர்களிடையே ஊர்ஜிதமாகின ஒரு உறவு உண்டு என்ற பின்பு எதுதான் முக்கியம்! எது முக்கியமாக இருந்தாலும் இந்த இடைக்கால பிரிவு நிச்சயமாக முக்கியமாக இருந்தது. அதைப் பெரிது படுத்தவும் வேண்டியதில்லை. ஆனால் அந்த உறவுதான் எங்கே சம்பவிக்கிறது? எது எப்படிப் போனாலும் கடைசிப் பட்சமாக இதில் கிட்டும் ஒரு இன்பம், சந்தோஷத்திற்கு, உலக அளவில் ஈடேது?

ரொம்பவும் ஜாக்கிரதையாக ஒரு வாரம் கழித்து அவளுக்கு லெட்டர் எழுதினார். (லெட்டர் என்றாலே அவளுக்குப் பிடிக்காது. லெட்டர் போஸ்ட் பண்ண பிடிக்காது. நிர்பந்தம் ஏற்பட்டால் கூட ஸ்டாம்பு வாங்க மாட்டாள். அதுவும் வாங்கினால், அவளுடைய போஸ்ட்மேன் தான் அவர் இருக்கவே இருக்கிறாரே!)
'மை லவ்'

வெண்ணை திரண்டு வர தாழி உடைந்தது கணக்காக திடீர்னு ஏன் இப்படி ஒதுங்குகிறாய்? உன்னால் என் மீது அன்பு செலுத்த முடியவில்லை. மணமானவன். இரண்டு குழந்தைகள் வேறு; இவனோடு நமக்கென்ன என்றெல்லாம் சாதாரணத்தில் நீ நினைக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இட்ஸ் ஸம்திங் எல்ஸ்! ஆனால் என்னால் கணிக்க முடியவில்லை. என்னவாக இருக்க முடியும்? ரயில் கிளம்பிய பிறகு நீ நிஜமாகவே என்னை மறந்து விட்டாயா? ஜென்மம் பூராவும் உன்னுடைய அந்த நல்ல ஹெல்த்தில் விழுந்து புரண்டால்கூட நான் இன்னமும் உன்னிடம் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அப்படியிருக்க உன்னால் எப்படி என்னை விட்டு ஹவுரா போய்விட முடிகிறது? தஃபாக்ட் ஆஃப் த மாட்டார் இஸ் யூ டோன்ட் லவ் மி. எங்கோ, வைகறை, போன்று, போனால் போகட்டும், எதுதான் சாசுவதம், போன்ற தத்வங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். ஆனால் எனக்குத் தெரியாதா? இதெல்லாம், 'அன் அடல்டரேடட் பக்வாஸ்,' என்று. ஷேவ் செய்துகொள்ளும்போது அறுபட்ட துளிகளுக்காக லோஷனை எடுக்க உள்ளே செல்லும்போது, எப்போதும்போல் தேடும்போது ஓரிருதரமே உபயோகித்த உன்னுடைய ஸôக்ஸ் அகப்படுகிறது. அதை வைத்துக்கொண்டு, உன்னுடைய உடம்பின் அவ்வளவு வாசனைகளை யும் என் நாசி எதிரே, என்னுடையவயிற்றில், என்னுடைய உதடுகளில் என்னுடைய காதுகளில் கூட - உன் இழை சங்கீதமாக சம்பவிக்க வைக்க முடிகிறது. டோன்ட்யூ நோ இட் டியர்? இன் யுவர் ஹார்ட், இன் யுவர் ஆர்ம்பிட், இன் யுவர் ஸ்டமக், தட் யூ ஆர் டியூபிங் யுவர் ùஸல்ஃப் பை திஸ் ட்ரிப்..?'

மூன்று வாரம் கழித்து அவருக்கு கல்பனாவிடமிருந்து பதில் லெட்டர் வந்தது.

'மை லவ்,

உன்னை கொஞ்ச நாட்கள் பிரிந்து இருந்தால் தேவலை என்று பட்டது. அது உனக்கும் எனக்கும் நன்மை பயக்கும் என்று நம்பியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். பட் இப்போதுதான் எனக்குத் திட்டவட்டமாகப் புரிகிறது. நானும் உன்னை நேசிக்கவில்லை. நீயும் என்னை நேசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நீ என் உடம்புள் திடும் திடும்மென்று பிரவேசிப்பது என் மேல் அன்பு செலுத்த என்று என்னால் நம்ப முடியவில்லை. உன்னுடைய தனிமையை விரட்ட பிரபஞ்ச அளவில் உன்னுடைய தேடலின் (அது எதைப் பற்றியோ நான் அறியேன்). தனிமையை மறக்க நீ என்னை ஒரு சாதனை கருவி ஆக்கியிருக்கிறாய். பத்மாவிடமும் நீ இப்படித்தான் நடந்து கொண்டிருக்க வேண்டும். நான் உன்னை இப்படி சொல்லும்போது நீ மிருகம் அது இது என்று திட்ட வரவில்லை. எந்தப் பெண்தான் உள்ளத்துக் கோடியில் ஆண் மிருகத்தை வெறுக்கிறாள்! உன்னுடைய தேடல் மிக்க, என் வயிற்றுள் விரவிய, இடிபாடுகளை நான் நேசிக்கிறேன். எப்போதாவது தூங்கி விழிக்கும்போது, 'அனுபவப்பட்ட அந்த இடங்கள் தனித்து நின்று, என்னை, உனக்காக, கொஞ்சுவதை நான் உணர்கிறேன். இது என் வரையில் மறக்க முடியாத அனுபவங்களே. அதற்காக உனக்கு ரொம்ப தாங்ஸ்..ஆனால் உன்னால் ஓரிரு கதிகளில் நிலைத்து நிற்க முடியுமா? இந்த யோசனையே பிணைப்பில் பிரிவையும் விரிசலையும் தோன்ற வைத்துவிட்டதே?
லவ் கல்பனாô..'

('ஏப்ரல் 1974' - சதங்கை இதழில் வெளிவந்தது)

**********

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Guru.Radhakrishnan on July 10, 2010 at 5:02 PM said...

sirukathai kattamaippil ku.paa.raa vai ninaikkath thondrukirat5hu/muppathi aaru fvaradakkathai ya irunthaalum mika mika nandraka irukkirathu.Manithamanangalin salanangalai ithaivida eppadi solla iyalum.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்