Sep 29, 2010

''இன்றைய கவிதையை விளக்க இன்னொருவர் தேவை''-நீல. பத்மநாபன்


எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1938-ம் ஆண்டு பிறந்தவர். கேரள மாநில மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவரது படைப்புகளில் மண்ணின் தன்மையும், மக்களின் யதார்த்த வாழ்வையும் காணலாம். ''உதயதாரகை'' இவர் எழுதிய முதல் நாவல். ஆனால் இவர் பேசப்பட்டது இவரின் நான்காவது நாவலான 'தலைமுறைகள்' மூலம்தான். அடுத்தது 'தேரோடும் வீதி'. இது அவரின் சுயசரிதை என பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர் இதனை மறுத்து வருகிறார். அண்மையில் தி.ஜானகிராமனின் இலக்கியப் படைப்புகள் பற்றிய விவாதத்திற்காக சென்னை வந்திருந்தபோது, அம்பலம் வாசகர்களுக்காக அவர் அளித்த விசேஷ பேட்டியிலிருந்து...

neelapadmanaban_2
இலக்கியம் எப்படி உங்களை வரித்துக் கொண்டது?

என் சின்ன வயதிலேயே பாட்டி, அப்பா, அம்மா இவர்களிடமிருந்த வாசிப்பு அனுபவம் என்னையும்  தொடர்ந்தது. அதிலிருந்து கையெழுத்துப் பிரதியாக இலக்கியங்களை உருவாக்கினேன். அப்போது எங்கள் வீட்டுப் பக்கத்தில் டி.ஆர்.ராஜமாணிக்கம் கம்பெனி நாடகம் நடந்து வந்தது. அதில் வரும் பாட்டின் ராகங்களுக்கு ஏற்ப நான் பாட்டு எழுதுவேன். இப்படியே என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. என் 10, 12 வயதிலேயே நிறையப் படித்தேன். பின்னர் college magazine-ல் நிறைய எழுதினேன். இவையெல்லாம்தான் என்னை நிறைய எழுத வைத்தது. இதைத் தொடர்ந்து நான் நேரடியாக எழுத்துத் துறைக்கு வந்துவிட்டேன்.


உங்கள் நாவலில் இன்றும் பேசப்படுகிற, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 'தலைமுறை' நாவல் குறித்து...?

நீங்கள் நேரடியாக தலைமுறைக்கு வந்ததினால் அதற்கு முன்னால் நான் எழுதிய நாவல்கள் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. தலைமுறை எனது நாலாவது நாவல். முதலில் 'உதய தாரகை' என்ற நாவல், வாஞ்சிநாடு இதழில் வந்தது. 'தலைமுறை' நாவலின் உண்ணாமலை ஆச்சி, கூனாங்காணி பாட்டா போன்றவர்கள் என் சமூகத்தைச் சார்ந்தவர்கள். என் செட்டியார் சமூகத்தில் பின்பற்றப்பட்ட ஆசார அனுஷ்டானங்கள், என் பக்கத்து வீட்டில் திருமணமாகிச் சென்ற பெண்ணை திரும்பப் கொண்டு வந்துவிட்டது. இவையெல்லாம் என்னை பாதித்ததால்தான் 'தலைமுறைகள்' பிறந்தது. நீங்கள் சொல்வதுபோல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் நாவல் இதுதான் என்பதில் சந்தோஷமடைகிறேன்.

'யாத்திரை' என்ற கதை மரணத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்த கதை வந்த காலம் romantic கதைகள் பிரபலமாக இருந்தது. எப்படி இந்த ஐடியா வந்தது?

திருவனந்தபுரத்தில் எனக்கு திருமணமாகி மனைவியுடன் மாடி வீட்டில் தனியாக இருந்தோம். அந்த வீட்டிலிருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் மாடியில் இருந்ததினால் கீழே நடப்பவைகள் காட்சிகளாகத்தான் தெரியும். அப்படித்தான் ஒரு பிணத்தை எடுத்துச் சென்றார்கள். அது என்னுள் கேள்வி கேட்கச் செய்தது. அதுதான் 'யாத்திரை'. இறந்தவனைப் பற்றி... தூக்கிச் செல்லும் நாலு பேரும் நினைத்துக் கொள்வதுதான் கதை. அதை எழுதி முடித்தபோது எனக்கும் வித்தியாசமாகத் தோன்றியது.

'தலைமுறை' நாவலிலிருந்து முற்றிலும் மாறானது 'பள்ளி கொண்டபுரம்'. திருவனந்தபுரம் பற்றிய புரிதல் இல்லாமலும்-நாயர் சமுதாயம் பற்றி தெளிவு இல்லாமல் அந்த நாவல் படைக்க முடியாது. அதைப் பற்றி...?

ஏற்கெனவே சொன்னதுபோல் என் சமூகம் எதுவென்று சொல்லிவிட்டேன். இப்போது திருவனந்தபுரம் என்று சொல்லப்படும் இடம் திருவாங்கூர் என்று சொல்லப்பட்ட காலத்தில் கன்னியாகுமரி, நாகர்கோயில், பத்மநாபபுரம், இவையெல்லாம் அதனுள் வந்தவைதான். ஆனால், நீங்கள் சொன்ன மாதிரி 'பள்ளி கொண்டபுரம்' நாவலை நகரம் சார்ந்து எழுதுவதாகத்தான் தீர்மானித்தேன். அதுவும் நாயர் சமூகத்தில் உள்ள சிக்கல் நானறிந்தது. அதை தமிழர் பார்வையில் பதிவு செய்வதை மட்டுமே நான் செய்தேன். இன்னொன்று நாவலில் கதாபாத்திரங்கள் எதார்த்தமாக இருப்பதை வைத்து எழுத்தாளரை மதிப்பிடக்கூடாது. நான் காட்டியது நகரத்தின் ஒரு பகுதியை மட்டுமே.

எழுத்தாளனுக்கு சமூகப் பற்று அவசியமா?

நான் கலந்துகொண்ட தி.ஜானகிராமனின் எழுத்துத் தொடர்பான கூட்டத்தில் அவர் அறியாமலே அவரின் படைப்புகளில் சமூக அக்கறை வந்ததாக சொல்கிறார்கள். அப்படி இல்லை. சமூக அக்கறை இல்லாமல் எந்த எழுத்தாளனும் இலக்கியம் பண்ண முடியாது. ஆனால் அந்த வழி ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். அதனால் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வழியில் கலகக்காரனாக இருக்கிறான். ஏனென்றால் அந்த எழுத்தாளனும் சமூகத்திலிருந்துதானே வந்தவன். ஆகவே எல்லா எழுத்தாளர்களும் சமூக உணர்வுள்ள கலகக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதே நிஜமானதும், உண்மையானதும்.

ஒரு மனிதனுக்கு அறிவுசார்ந்த செயல்பாட்டைவிட உணர்ச்சி செறிவுதான் கலைப்படைப்பிற்கு முக்கியமானது என்கிறீர்கள், படைப்பை அறிவு ரீதியாக அணுகுவது தப்பு என்கிறீர்களா?

எல்லா செயல்பாட்டையும் அறிவுரீதியாகப் பார்த்தால் அது முடிந்த முடிவாகும். அதன் தாக்கமோ, எதிர்ப்போ நமக்கு தெரியாமல் போகும். அறிவு ரீதியாகப் பார்க்கும் பார்வைக்கு அடுநிலை என்று எதுவும் இல்லை. உணர்ச்சி ரீதியாகப் பார்க்கும்போது அதன் அடுத்த கட்டம் நமக்கு கிடைக்கிறது. நடந்த செயற்பாட்டிற்கு புதுவகையான முடிவும் கிடைக்கிறது. அது கற்பனைகளுக்கும், தளங்களை விரிவுபடுத்தவும் ரொம்ப உதவியாக இருக்கிறது. அதன்பின்னர் கலைப்படைப்புக்கு ஏற்றவாறும், கலைத்தன்மையுடனும் உருமாற்றம் பெறும். அதற்கு உணர்ச்சி இருந்தால்தான் அங்கு கலைத்தன்மை வரும். இல்லையென்றால் போட்டோ போல் இருக்கும்.

எஸ்.குப்தன் நாயர் எழுதிய விமர்சனத்தில் ''நீலபத்மநாபனின் கதைகளில் கதை அம்சம் மிகுதியாக இல்லை என்கிறாரே'' இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

கதை அம்சம் என்பது, நவீனத்துவச் சிந்தனையில் வந்ததுதான். நிகழ்ச்சிக்கு முக்கியமில்லாத விஷயத்தை கதையாகச் சொல்லி நிரூபிப்பதுதான் எழுத்தாளனின் வேலை என்று நினைக்கிறேன். ஆனால் கதை சொல்வது என்பது சங்க காலம் தொட்டே மாறிவரும் சமாச்சாரமாகும். இப்போது பல இஸங்களும், பல பாணிகளும் வந்தபின்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கதை சொல்கிறார்கள். எதை சொன்னாலும் அங்கு சொல்லப்படும் நிகழ்ச்சிதான் முக்கியம். நவீன கதையில் கதை இல்லாத கதையை சொல்வதுதான் வடிவமாகும். குப்தன் நாயர் அப்படிச் சொன்னதில் எனக்கு சந்தோஷம்தான்.

சிறு பத்திரிகைகள்-வணிகப் பத்திரிகைகள் இரண்டிலும் எழுதுகிறீர்களே! இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

தமிழில் சிறு பத்திரிகைகள் ஒரு கௌரமான விஷயமாக இருக்கிறது. சோதனைப்படைப்புகள் முதலில் சிறுவட்டத்தில்தான் வரும். நானே அறிமுகமானது சிறுபத்திரிகை மூலம்தான். ''சாந்தி'', ''இலக்கிய வட்டம்'' போன்ற பத்திரிகைகள்தான் என்னைத் தெரியப்படுத்தியது. நாங்கள் சிறுபத்திரிகை மூலமாக பல இலக்கியம் தொடர்பான விஷயங்களை செய்துவருகிறோம். வணிகப் பத்திரிகைகளும் அவ்வப்போது நல்ல படைப்புகளை வெளியிடுகிறார்கள். நாங்கள் விழா நடத்தி புத்தகம் வெளியிட்டபோது அந்த விழாவில் நடந்த ஒரு நல்ல விஷயம் ''குருஷேத்திரம்'' புத்தகம் வெளியானதுதான் என்று சொன்னவர்கள், இன்று தமிழ் இனி விழா நடத்தியிருக்கிறார்கள். இது சிறு பத்திரிகைகள் ஆரோக்கியமானதாக இருந்ததினால் நடந்ததுதான்.

உங்கள் நாவல்கள் யதார்த்த வகையைச் சார்ந்தது என்று சொல்லலாமா?

என் நாவல்களைப் பற்றி நான் சொல்லக் கூடாது. ஆனால் பலர் என் நாவல்களை யதார்த்த வகை என்று சொல்லுகிறார்கள். நானும் பல எழுத்தாளர்களின் படைப்புகள் படித்துவருகிறேன். எனக்கு எழுத்துக்கு வைக்கும் பெயர்கள், இஸங்கள் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் மனதில் தோன்றுவதைதான் நான் எழுதுகிறேன், அதை கற்பனையுடன் இணைத்து எழுதுகிறேன். இது யதார்த்தம் என்றால் இது என் பாணி. அதை விட்டு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையாக பிரிக்கக் கூடாது. சில இடங்களில் யதார்த்தத்தை மீறவும் நான் முயற்சி செய்ததுபோல் தெரியும். ஆனால் அப்படியல்ல. அவையும் யதார்த்த வகை நாவல்கள்தான்.

உங்கள் கவிதைகள் பாட்டுப் போல் இருக்கும்-இப்போதைய கவிதைகள் குறித்து?

நீங்கள் என் கவிதையைப் பாட்டுப் போல் என்கிறீர்கள். என் கவிதைகளை அதாவது, பாடல்களை நான் நாடகக் கொட்டகையிலிருந்துதான் எழுதக் கற்றுக் கொண்டேன், அதனால் இருக்கலாம். என் 16 வயதில் எழுதிய கவிதைகளை பிற்பாடு வெளியிடும்போது அவைகள் பாடல்கள் போல் இருக்கின்றன. இப்போது வரும் கவிதைகளை நான் படித்து வருகிறேன். சிலதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கவிதை என்பது மனசில தைக்கிற மாதிரியும், தீயை உண்டாக்குவதாகவும் இருக்கவேண்டும். தமிழில் அப்படி கவிதைகள் இப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்தக் கவிதைகளை விளக்கிச் சொல்வதற்கு இன்னொருவர் தேவைப்படுகிறார்.

உங்கள் சிறுகதைகளிலிருந்து நாவல் மிகவும் வேறான ஒன்றாக இருக்கிறதே?

நீங்கள் சொல்லும் சிறுகதை, நாவல் இரண்டும் இருவேறு ஊடகங்கள். அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சிலர் சொல்வதைப்போல் சிறுகதையின் நீட்சியல்ல நாவல். கதாசிரியன் என்பவன் விரிவான விளக்கம் தர வேண்டியவன். சிறுகதை, கவிதை எல்லாம் தளத்திற்குள்ளேயே நின்று கதை சொல்லவேண்டும். அதனால் என் கதைகளும் அதுபோலவேதான். நான் முதல் சொன்னதுபோல் சம்பவங்களின் தொகுப்புத்தானே நாவல். எனக்கு மட்டுமல்ல, எந்த எழுத்தாளர்களுக்கும் வேறு வேறாகத்தான் இருக்கும்.

உங்கள் எழுத்துகளில் தத்துவார்த்த தேடல்கள் அதிகமாக இருக்கிறதே?

தத்துவம் என்பது சாமியார்களுக்கு மட்டுமே கை வருவதல்ல. நல்ல முறையில் குடும்பம் அமைந்துள்ளவர்களுக்கும் கைவருவதுதான். வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொண்டால், அதுவே நம் ஆன்மாவை நாம் உணர்வதற்கான வழிகாட்டியாக இருக்கும். நான் யார் என்பதை எனக்கு உணர்த்துவதற்கும் என்னை 'நான்' யார் என்று கேள்வி கேட்கவும் ஆரம்பித்தபோது உருவான நாவல்தான் 'கூண்டினுள் பட்சி' நாவல்.

இன்னொரு நாவலான 1215 பக்கங்கள் கொண்ட 'தேரோடும் வீதி'யில் சொல்ல வந்தது என்ன? அது உங்கள் சுயசரிதையா?

'தேரோடும் வீதி' என் சுயசரிதை என்றால் 'பைல்கள்', 'தலைமுறை', இவையெல்லாம் எந்த வகையில் வரும். எழுத்தாளன் எழுதினால் அதை மட்டுமே பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு சுயசரிதையா என்பதெல்லாம் அபத்தமானது. அந்த நாவலில் எழுத்தாளன் சிவ கதிரேசன் முன்னுக்கு வரத்துடிக்கும் ஆர்வம்தான் கதையாகும். அறிவியல்வாதி தற்கொலை பண்ணிக் கொள்வதில்லை. அடுத்த கட்டம் தன்னை நிலைநாட்டுவதற்குத்தான். எந்த எழுத்தாளனையும் குறிவைத்து அதை எழுதவில்லை. அது எழுத்தாளனைப் பற்றிய கதை அவ்வளவே!

விமர்சகர் எம்.ஏ. நுஃமான் 'தேரோடும் வீதி' நாவலில் வரும் சிவ.கதிரேசனின் தோல்வி எழுத்தாளர் நீல.பத்மநாபனின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ளாரே?

நுஃமான் அவர் சார்ந்திருக்கும் குழுவை சந்தோஷப்படுத்தச் சொன்ன விமர்சனம் அது. அப்படிப் பார்த்தால் ஜே.ஜே. சில குறிப்புகள் எழுதிய சுந்தர ராமசாமியைச் சொல்லவேண்டும். திரவியத்தை எப்படி எடுத்துக் கொண்டார். இதுதான் தமிழர்களிடம் உள்ள குழுச்சண்டை மனப்பான்மை. எழுதுவதற்கு ஒரு பத்திரிகை அனுமதிப்பதால் வேண்டாதவர்களையெல்லாம் திட்டிக்கொண்டேயிருப்பார். இது ஆரோக்கியமான இலக்கியத்தின் வளர்ச்சியாக இருக்க முடியாது.

கடைசியாக நீங்கள் படித்த எழுத்தாளர்கள் யார்?

இளம் வயதிலேயே கையில் கிடைத்த எல்லாப் புத்தகங்களையும் படித்து வந்துள்ளேன். புதுமைப்பித்தன் கதைகள், க.நா.சு.வின் 'பொய்த்தேவு' போன்றவைகளும், ஷேக்ஸ்பியரின் படைப்புகள், நகுலன், டால்ஸ்டாய், தாஸ்தவ்யேஸ்க்கி, மலையாளத்தில் என்.வி.கிருஷ்ணவாரியாரின் படைப்புகள் என நான் தேடிப்பிடித்த படைப்புகள் அதிகம். இன்றுவரை வாசகனாக இருக்கிறேன்.

நன்றி: அம்பலம் இணைய இதழ்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) on March 10, 2011 at 4:09 AM said...

//ஆனால் அந்தக் கவிதைகளை விளக்கிச் சொல்வதற்கு இன்னொருவர் தேவைப்படுகிறார். //
மிகச் சரியான கணிப்பு!, சாதாரண வாசகனுக்கு உயிர் போகும் விடயமும் அதே

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்