Nov 1, 2010

எதுக்குச் சொல்றேன்னா…-சார்வாகன்

அவன் பேசிக்கொண்டே போனான்: ” என்ன செய்கிறது சொல்லுங்கள். நாம் என்ன, கேட்டுக்கொண்டா பிறந்தோம். இல்லை, நம்முடைய அப்பா அம்மாவை நாமே தேடிக்கொண்டோமோ. யாரோ ரெண்டு பேர் என்னமாவோ முடிச்சுப் போட்டுக்கொண்டாங்க, நாம வந்து விழுந்தோம். பாலும் சக்கரையும் கலந்து வெக்கறப்போ ஈ வந்து விழுந்த மாதிரி. இது பொருத்தமில்லையோ? அப்போ சிரங்கிலே புsarvakanழுவந்து தோணின மாதிரின்னு வெச்சுக்குங்களேன். எதுக்குச் சொல்றேன்னா , நாம வந்ததுக்கு நாம பொறுப்பாளியில்லே. ஆனாலும் வந்துட்டோம். வந்த பிறகு போகிறதுக்குள்ளே இருக்க வேண்டிய பொறுப்பு மாத்திரம் நம்மதாயிட்டுது. ஏன், நமக்குக்கூட சில சமயம் தோணுறதில்லையா, எல்லாத்தையும் ஒழிச்சிட்டு ஒரேயடியாப் போயிட்டா என்னன்னு? ஆனா எவ்வளவு பேர் அப்படித்  துணிஞ்சு செய்யறோம். இயற்கையோட விதி நாம் இருக்கிறதுக்காகத்தான் வழி செய்துகொள்ளச் செய்யுதே தவிர இறக்கிறதுக்கு வகை செய்யறதில்லை. ஆனாலும் அதிசயம் பாருங்க, நாம் இருக்கிற ஒவ்வொரு நாளும் சாவை நோக்கியே ஒரு படி. எதுக்குச் சொல்றேன்னா, வாழ்வு என்கிறது பொறுப்பத்த வழியிலே ஆரம்பிச்சு, ஒரு நாள் நிச்சயமாப் பொக்குன்னு போகிற போக்கத்த வியாபாரம். இதிலே எதுக்கய்யா நாம அனாவசியமா நம்மைக் கஷ்டப்பட்டு வறுத்துஎடுக்கனும். என்ன வேதாந்தம் பேசறேன்னு பாக்கறீங்களா, வேதாந்தமும் இல்லை வெண்டைக்காயுமில்லை. அப்பட்டமான உண்மையைத்தான் சொல்றேன். உண்மைக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க. உண்மை மாதிரி இருக்கும், ஆனால் அது உண்மையில்லை, அதுதானே பொய்? வேதாந்தமும் அந்தமாதிரி பொய். நீங்களே சொல்லுங்க நம்ம வாழ்விலே எது நிஜம்? நேத்து நடந்ததெல்லாம் போயிட்டுது. செத்துப்போனது. நாளைக்கு வரப்போகிறது வந்த பின்னாலேதான் நிச்சயம். அதுவரைக்கிம் அதுவும் நிஜமில்லைதான். நாளைக்கு குத்தப்போகிற முள் இன்னிக்கு வலிக்குதா? இல்லை, முந்தாநாள் தின்ன பாகற்காய் இன்னிக்குக் கசக்குதா? சும்மா பிணத்திலே ஊறுகிற புழு மாதிரி முந்தாநாள் நடந்ததிலேயே மனசை நெளிச்சுக்கிண்டிருந்தா எப்பிடி சுகம் வரும். நாளன்னிக்கி வரப்போகிற ஜிலேபியை நெனைச்சு நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்தால் இன்னிக்கு வயறு நெறைஞ்சுடுமா?

தொடை மாமிசத்தைக் கடித்து இழுப்பதற்காகச் சில வினாடிகள் பேச்சை நிறுத்தின அவன் மீண்டும் தொடர்ந்தான். “எதுக்குச் சொல்றேன்னா, இப்போ, இந்த நிமிஷம், இந்த க்ஷணம்தான் நெஜம். அதுதான் உண்மை. அதுதான் எனக்குத் தெரியும். அதால்தான் என்னை உறைக்க முடியும். அதைத்தான் என்னால் உணர முடியும். மீதியெல்லாம் செத்ததோ, இல்லை இன்னம் பிறக்காத வெறும் கனவோதானே. ஆனாலும் பாருங்க, விஷயம் சுளுவாயில்லை. ஆழ்ந்து பார்த்தா இந்த நிமிஷம், க்ஷணம்கூட கொஞ்சம் வலுவில்லாததுதான். நிமிஷமோ வினாடியோ நின்னாத்தானே, அதுதான் ஓடிக்கொண்டேயிருக்கே, இதுதான் இந்த வினாடின்னு நான் எதைச் சொல்லுறது? சொல்லுகிறப்பவே ஓடிப் போச்சே, வேறே வினாடி வந்துட்டுதே. இந்த வயத்தெரிச்சலுக்கு என்ன செய்கிறது. அப்போ நிஜம்னு ஒண்ணும் கிடையாதா? எல்லாம் பொய்யின்னா அதிலேயும் ஒரு சங்கடம் இருக்கு.”

பேச்சை நிறுத்தி, எலும்பைக் கடித்து, உள்ளே இருந்த மஜ்ஜையை சத்தத்தோடு உறிஞ்சிக்கொண்டே பேச்சை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்:

“எதுக்குச் சொல்றேன்னா, ‘நான்’ என்று சொல்லிக்கொள்கிற ஒண்ணாவது நிஜமா இருக்கணும். இல்லாதபோனா நானே, என் பேச்சும் எண்ணமும் உள்பட பொய்யாய்ப்போகிறேன். அதேமாதிரி இந்த வினாடி, இருக்கிறவரையில், நிஜமாக இருக்கணும், அது நிகழ்காலமாயிருக்கிறதனாலேயே. ஆனா, ‘நான்’ என்கிறதே கடந்த கால அனுபவமும் எதிர்காலக் கனவுகளும் பிண்டமான ஒண்ணுதானே. எல்லாம் பொய்யால் ஆன ‘நான்’ மட்டும் எப்படி நிஜமாயிருக்க முடியும்? இப்படியெல்லாம் சந்தேகத்திலே கடைக்காலெடுத்து, காலத்தையும் கனவையும் செங்கல்லாக்கி எழுப்பின கட்டிடம் நம்ம வாழ்க்கை. இதுலே நகாசு வேலை – நல்லது கெட்டது, புண்ணியம் பாவம், ஒன்னது என்னது, ஒசந்தது தாழ்ந்தது, நாகரிகம் அநாகரிகம், கவுரம் அகவுரம், வேண்டியது வேண்டாதது, பிடிச்சது பிடிக்காதது – எத்தனை போங்கள், இதெல்லாம் யாரை யார் ஏய்க்கிறதுக்குன்னு எனக்கே வெளங்கலை. எதுக்குச் சொல்றேன்னா, என்னைப் பொறுத்த மட்டிலே இதுலேயெல்லாம் அர்த்தமிருக்கிறதாகப் படவில்லை எனக்கு. நாம நல்லதென்னு நெனைச்சா நல்லது, இல்லையின்னா கெட்டது. நியூகினீக்காரன் நல்லதுன்னா தலையை வெட்டலையா, வெள்ளைக்காரன் நல்லதுன்னா வேண்டாதவங்களைச் சுட்டுப் பொசுக்கலையா, துரோணன்கூட ஏகலைவன் கட்டை விரலைக் கடிச்சுக்கலையா, எல்லாம் மனசுலேதான் இருக்குங்குறேன். எதுக்குச் சொல்றேன்னா, இதோ பாருங்க.. நீங்களும் நானும் இப்போ ரசிச்சுக்கிட்டு சாப்பிடுறோம், கறி எவ்வளவு ருசியாயும் மெதுவாயும் இருக்கு, இந்தக் கறி நடமாடிக்கிட்டிருந்ததைப் பற்றி யோசிக்கிறாமா. ரொம்பப் பேருக்கு யோசிக்கவே பிடிக்கிறதில்லை. ஏன் அப்பிடித் தெரியுமா? நடமாடறப்போ அங்கே இருந்த உண்மை வேறே. அது அப்போ சாப்பிடுற வஸ்துவில்லை. இப்போ அந்த உண்மை இறந்தகாலமாய்ப்போச்சு. இது வேறே உண்மை. சாப்பிடுற உண்மை. இதுதான் இப்போ உண்மை. இதைச் செத்துப்போன பழைய உண்மையோடே எப்படிச் சேர்த்துப்பாக்குறது? எதுக்குச் சொல்றேன்னா, நமக்கு புத்தி இருக்கு. விருப்பு வெறுப்பில்லாமல் கொஞ்சம் யோசனை பண்ணலாம். பண்ணனும். வார்த்தைகளைக் கண்டு மலைச்சுப்போகக் கூடாது. வார்த்தைகளோடே சண்டை போடக்கூடாது, வார்த்தைதான் வாயிலேயிருந்து வந்தா காத்தாப்போச்சே! இதைப் பாருங்க, இந்தக் கறி இன்னைக் காலலயிலேகூட ஓடியாடிக்கிட்டிருந்தது. அப்போ அதுக்குத் தெரியாது, இப்போ நம்ம வயித்துக்குள்ளே போகப்போகிறோம்னு. கொஞ்சிற்று. பாட்டுப் பாடிற்று. ஒரு க்ஷணம் அது இருந்தது. ஒரு வெட்டு. மறு க்ஷணம் அது இல்லை. நமக்குச் சாப்பாடு. இதுதான் உலகம். இது என்ன மிருகம்னு கேட்கிறீங்களா, இதைப் பாருங்கள்.”

அவன் தன் ஜோல்னாப் பையிலிருந்து ஒரு சிறு குழந்தையின் தலையொன்றை எடுத்து வெற்றிப் புன்னகையோடு காண்பித்தான். நான் எச்சில் கையோடு அங்கேயிருந்து ஓடிவிட்டேன்.

நன்றி:     ‘க்ரியா‘ பதிப்பகம், ஆப்தீன் பக்கங்கள்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on November 1, 2010 at 8:31 AM said...
This comment has been removed by a blog administrator.
suneel krishnan on November 14, 2010 at 6:53 PM said...

வாதங்கள் அனாயசமாக ஆழத்திற்கு கொண்டு செல்ல பட்டுள்ளது .வாசிக்கும் போது நம்பிக்கை இன்மை ஏற்படுத்துகிறது ,அதுவே இந்த படைப்பின் சிறப்பம்சம் .

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்