Nov 27, 2010

மிருகம் - வண்ணநிலவன்

நார்ப் பெட்டியில் கொஞ்சம் சுள்ளி விறகுகளைத் தவிர வேறே ஒன்றுமில்லை. ஆனாலும் கூட பெட்டி கனமாக இருந்தது. பெட்டியை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, ஓரமாக நின்றிருந்த குத்துக்கல்லின் மேல் உட்கார்ந்தார் சிவனு நாடார். அவர் உடம்பிலிருந்து அடித்த நாற்றம் அவருக்கே குமட்டியது. பீடி குடித்தே ஏழெட்டு நாளாகி விட்டது. இன்னமும் பீடி வாடை முகத்துக்குள் வீசியது. vnilavan4

வரிசையாக எல்லா வீட்டுப் புறவாசல்களும் சத்தமே இல்லாமல் கிடந்தன. நாலைந்து வீடுகள்   தள்ளி ஒரே ஒரு காக்கை மட்டும் ஒரு மண்சுவர் மீது உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நேற்று காலையில் வண்டி மலைச்சி அம்மன் கோவில் பக்கம் போகும்போது ஒரு காக்கை தலைக்கு மேலே பறந்து போயிற்று. அதுக்கு முன்னால் காக்கையைப் பார்த்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். மண் சுவரில் உட்கார்ந்திருக்கிறது அதே காக்கை தானோ என்று நினைத்துக் கொண்டே எதிர்த்த வீட்டைப் பார்க்கத் திரும்பினார்.

ஒரு வெள்ளை நாய் அந்த வீட்டுப் புறவாசல் கதவு இடைவெளிக்குள் முகத்தைச் சொருகித் திறக்கப் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தது. கதவு கொஞ்சங்கொஞ்சம் திறந்து திரும்பவும் மூடிக்கொண்டது. சிவனு நாடாருக்கு சந்தோஷமும் ஆச்சரியமும் தாங்க முடியவில்லை. வேகமாக எழுந்து வீட்டைப் பார்க்க நடந்தார். இவர் வருகிற சத்தம் கேட்டு நாய் இவரைப் பார்த்துவிட்டு திரும்பவும் கதவைத் திறக்கப் பிரயாசைப்பட்டது. குனிந்து கல்லைத் தேடினார். எங்கேயுமே கல்லைக் காணவில்லை. மழையில் கரைந்து போய் நின்றிருந்த மண் சுவரிலிருந்து துண்டுச் செங்கல், ஓட்டாஞ்சல்லி, ஜல்லிக் கற்களைப் பெயர்த்து எடுத்து நாயைப் பார்த்து எறிந்தார். நாய் தூர ஓடிப்போய் நின்றுகொண்டது. அது பக்கத்தில் வருவதற்குள் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு வீட்டுக்குள்ளே நுழைந்துவிட்டார். கதவைச் சாத்தினதும் நாய் ஓடிவந்து கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்றது கேட்டது. வீட்டுக்குள்ளே நுழைந்ததும் அவருக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.

அந்த வீட்டுக்கு இதுக்கு முன்னால் எத்தனையோ தடவை வந்திருக்கிறார். அந்த வீட்டில் நடந்த கல்யாணத்துக்கெல்லாம் இவரே வேலை செய்திருக்கிறார். இரண்டே கட்டுள்ள வீடு அது. அந்த அடுப்படிக்கு அப்புறம் ஒரு பட்டக சாலை இருந்தது. பட்டக சாலைக்கு வெளியே அழி பாய்ச்சின ஒரு திண்ணை மட்டுமே உண்டு.

அடுப்படிக்குள் தெரிய அவருக்குக் கொஞ்சம் நேரமாயிற்று. இருட்டோடு அடுப்புச் சாம்பல் கலந்த வாடை வீசியது. கொஞ்ச நேரம் கழித்து பார்வை தெரிய ஆரம்பித்தது. அடுப்புக்கு மேலே இருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டார். அடுப்பில் அள்ளாமல் போட்டிருந்த சாம்பலையும், புடை மேல் இருந்த சின்னதான சட்டியையும் தவிர வேறே அந்த அடுப்படியில் ஒன்றுமே இல்லை.

பட்டகசாலைக் கதவு சாத்தாமலே திறந்து கிடந்தது. கதவுக்குப் பின்னால் நின்றிருந்த நெல்குதிரின் வாய்க்குக் கீழே அதை அடைத்துச் சொருகியிருந்த துணி விழுந்து கிடந்தது. குனிந்து குதிருக்குள் பார்த்தார். லேசாகப் படிந்திருந்த புழுதிக்கு மேல் சில நெல்மணிகள் கிடந்தன. குதிருக்குப் பக்கத்தில் பூட்டிக்கிடந்த பெரிய மரப்பெட்டியைக் கஷ்டப்பட்டு அசைத்துப் பார்த்தார். சில பாத்திரங்கள் உருண்டன. முன் வாசல் நிலைக்கு மேலே ஒரே ஒரு போட்டோ படம் மட்டும் நூலாம்படையுடன் தொங்கிக்கொண்டிருந்தது. அந்தப் போட்டோவிலிருந்த ஒவ்வொரு ஆளாகக் கவனித்துப் பார்த்தார். எல்லோரும் அவருக்கு ரொம்பவும் தெரிந்தவர்கள். அதற்கப்புறம் அந்த அறையில் நிற்கவே அவருக்குச் சங்கடமாக இருந்தது.

வெளியே போகப் புறப்பட்ட போது நெல் குதிர் இருந்த எதிர்த்த பக்கத்துக் கதவுக்குப் பின்னால் ஒரு பழைய ஓவல் டின் டப்பா உட்கார்ந்திருந்தது. ஆசையோடு அதைப் பார்க்க நடந்தார். அருகே போனதும் அதிலிருந்து எறும்புகள் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது. டப்பாவைத் தூக்கி மூடியைத் திறந்து பார்த்தார். அடியில் கொஞ்சம் கருப்புக்கட்டித் தூள் கிடந்தது. அந்தத் தூளை வைத்து இரண்டு வேளை காப்பி போடலாம். டப்பாவைத் தரையில் வைத்து கதவுக்கு முன்னால் உட்கார்ந்து தட்டினார். எறும்புகள் சிதறி ஓடின. அடுப்படிக் கதவு அவ்வப்போது கொஞ்சம் திறந்து மூடுவதும், திறந்த சமயங்களில் நாயின் கறுப்பு மூக்கு மட்டுமாகத் தெரிந்தது.

சிறிது நேரத்தில் எறும்பெல்லாம் போய் விட்டது. டப்பாவைத் தூக்கிக்கொண்டு அடுப்படிக் கதவருகே வந்து பதுங்கி நின்றார். இந்தத் தடவை நாய் முகத்தை கதவுக்குள்ளே நுழைத்த போது கதவோடு சாய்ந்து தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அழுத்தினார். நாய் இதுவரை அவர் கேட்டிராதபடி புது மாதிரியான குரலில் ஊளையும், சத்தமும் கலந்து போட்டது. அந்தச் சத்ததைக் கேட்டு கதவின் இறுக்கத்தைத் தளர விட்டுவிடுவோமோ என்று அவருக்குப் பயமாக இருந்தது. ஏதோவொரு உலுக்கலுக்குப் பிறகு கதவு நன்றாகப் பொருந்தி நிலைச்சட்டத்துடன் மூடிக்கொண்டது. பயத்துடன் திரும்பி கதவைப் பார்த்து நின்றார். வெளியே அந்த வினோதமான சத்தமும், ஊளையும் கலந்து கேட்டுக்கொண்டே போய் சிறிது நேரத்தில் தேய்ந்து விட்டது. நாய் முகத்தைக் கொடுத்து கதவைத் தள்ளின இடத்தில் சில ரத்தத்துளிகள் சிதறிக் கிடந்தன. இன்னும் பயம் தீராமல் டப்பாவை இறுகப் பிடித்தபடியே உள்ளேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தார்.

வெளியே கதவடியில், நாய் முகத்தை இழுக்கப் போராடிய போது ஏற்பட்ட நகப்பிராண்டல்கள் தரையிலும் அடிக்கதவிலும் தாறுமாறாகக் கிடந்தன. விட்டு விட்டு ரத்தத்துளிகள் சிந்திக் கொண்டே போயிருந்தது. அந்த ரத்தத்தின் நிறம் மனித ரத்தம் போல் இல்லை. இன்னும் கொஞ்சம் கொழுகொழுப்பாகவும் ஆரஞ்சு வர்ணத்திலும் இருந்தது. நிமிர்ந்து எதிரே பார்த்த போது, மண்சுவர் மீது, நாலைந்து வீடுகள் தள்ளி முதலில் பார்த்த காக்கை இந்த வீட்டில் வந்து உட்கார்ந்து இவரையே பார்த்துக் கொண்டிருந்தது. டப்பா வைத்திருந்த கையோடு வீசிக் ஆட்டி விரட்டினார். வாயிலிருந்து சத்தமே வரவில்லை. காக்கை அசையாமல் உட்கார்ந்திருந்தது. குனிந்து நாயை விரட்ட முதலில் எறிந்த செங்கல் துண்டை எடுத்து வீசினார். காக்கை வேறு எங்காவது பறந்து விடும் என்று எதிர்பார்த்தார். இரண்டு வீடுகள் தள்ளி இதே போல இருந்த மண் சுவரின் மேல் போய் உட்கார்ந்து கொண்டு இவரையே பார்த்துக்கொண்டிருந்தது.

நாய் ஒளிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டு, ரொம்பவும் ஜாக்கிரதையாக, தன் கண்ணுக்கு எட்டின தூரம் வரை எல்லாப் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டே தன் வீட்டுக்குப் போனார். தெருவில் எல்லா வீடுகளும் பூட்டிக் கிடந்தது அந்தப் பகலிலும் பயத்தைக் கொடுத்தது. அந்த நாய் எங்கேயாவது ஒளிந்து கிடந்து தன்னைத் தாக்கும் என எண்ணினார். நாய் வந்தால் ஏதாவது ஒரு பக்கம் ஓடித் தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக நடுத்தெருவில் நடந்து போனார். வீட்டுக்குப் பக்கத்தில் வரும்போது நார்ப்பெட்டியின் ஞாபகம் வந்தது.

வீட்டுக்குள் நுழைந்து கதவை அவசரமாகச் சாத்தினதும் இவ்வளவு நாளும் உணர்ந்திராத நிம்மதியை உணர்ந்தார். தீப்பெட்டியில் மூன்று குச்சிகளே இருந்தன. ஒரே குச்சியில் நெருப்பு நிச்சயமாகப் பற்றிக்கொள்ளும் என்று திருப்தியாகும் வரை தீயைப் பற்ற வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

அன்று மாலையும் இரவிலும் அவர் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. காலையில் தூங்கி விழித்ததும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். நாய் வாசலில் உட்கார்ந்திருந்தது

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

6 கருத்துகள்:

மாரிமுத்து on December 1, 2010 at 10:59 AM said...

உள்ளும் புறமும் மிருகம்!, அருமை!

சித்திரவீதிக்காரன் on July 16, 2012 at 6:31 AM said...

வறுமை, பசி இவை சிலநேரம் மனிதர்களை மிருகமாக்கி விடுகிறது. அருமையான சிறுகதை.

Unknown on February 20, 2016 at 9:51 AM said...

புனைவு என்னும் புதிர்: மனதைத் திறக்கும் கலை

விமலாதித்த மாமல்லன்

சமீபத்திய பயணம் ஒன்றில் பக்கத்து இருக்கைக் குறுந்தாடி இளைஞர் கைபேசியில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார். அதில், பிரச்சாரகர் ஒருவர் உக்கிரமாகப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த இளைஞர் ஒலியைக் காதுக்குள் விட்டுக்கொண்டிருந்தார்.

இந்தக் காலத்து இளைஞருக்கு இவ்வளவு பக்தியா என்று வியப்பாக இருந்தது. கொஞ்ச நேரம் கண் மூடிப் பிரார்த்தித்தவர், மொபைலை அணைத்துவிட்டுத் தூங்கத் தலைப்பட்டார். இளைஞரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, என்னுடைய ஐபேடை எடுத்து, சேமித்திருந்த ஒரு கதையை மிக நிதானமாகப் படிக்கத் தொடங்கினேன். ஓரப் பார்வையில் இளைஞரும் படிப்பதை உணர முடிந்தது. ‘இந்தாருங்கள்’ என்று ஐபேடை நீட்டினேன். ‘வேண்டாம்’ என்று மறுத்தார். ‘பரவாயில்லை’ என்று, தலைப்பிலிருந்து படிக்க வசதியாக முதல் பக்கத்துக்கு நகர்த்திக் கொடுத்தேன். குறுந்தாடி மேலே நகர்த்திவிட்டு இரண்டாம் பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினார்.

படித்து முடித்துவிட்டு என்னிடம் கொடுத்தார். உள்ளூரப் பரபரப்புடன் அவர் முகத்தைப் பார்த்தேன்.

“புரியவில்லை”.

“இதில் என்ன புரியவில்லை?”

“ஒரு ஆள் வீட்டுக்குள் போகிறான். நாய் வருகிறது.”

“பஞ்சம்” என்கிற ஒரே ஒரு வார்த்தையைக் கூறினேன். அவருக்கு முழுக் கதையும் புரிந்துவிட்டது.

புதிய களம், புதிய அனுபவம்

வீடியோவின் பிரச்சாரகர், குறிப்பிட்ட சில வார்த்தைகளை மந்திர உச்சாடனம் போலத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதால் அடுத்து அவர் சொல்லவருவது என்ன என்பது அந்த இளைஞருக்கு, அவர் சொல்லும் முன்பே எளிதாகப் புரிந்துவிடுகிறது.

அவர் படித்தது வண்ணநிலவனின் ‘மிருகம்’ கதை. வண்ணநிலவன் காட்டுவது புதிய களம். 80களில் பிறந்திருக்கக்கூடிய அந்த இளைஞரின் அனுபவ உலகத்தில் இல்லாதது. கற்பனை செய்து பார்ப்பதுகூட அவருக்குக் கடினம். பஞ்சம் காரணமாய், ஓர் ஊரில் ஒரு மனிதனைத் தவிர ஒட்டுமொத்த மனிதர்களும் ஓடிப்போவதை அவரால் உணர முடிவது சிரமமே. எனவே அவருக்குக் கதை புரியாமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம். அது மட்டுமின்றி, ஊன்றிப் படிக்காததும் மற்றொரு காரணம். விவரணைகளை விட்டுவிட்டு வெறும் சம்பவத்தை மட்டும் தொடர்வது.

எழுத்தாளனால் அவன் காணாத உலகத்தின் பாத்திரமாய் எப்படி ஆக முடிகிறதோ அதே போல, தேர்ந்த வாசகன் அவனுக்குக் காட்டப்படும் உலகை, அதுவரை பார்த்திராத போதிலும் சட்டெனப் பிடித்துக்கொள்கிறான்.

ரசனைகூட ஒரு விதப் பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன் உடலையும் மனதையும் தயார் செய்துகொள்வதைப் போல இலக்கியத்துக்கும் சிறு முயற்சி, கொஞ்சமான யத்தனம் சிறிய மெனக்கெடல் தேவைப்படுகிறது. கதையின் சம்பவங்களைத் தவிரவும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் உணர்வுகளை, எழுத்தாளன் கோத்துச் செல்லும் விவரணைகளை, அவற்றின் நுட்பங்களை, அதன் மூலமாகக் கதையை, மனதில் உணரும் பயிற்சி. எழுதப்பட்டிருப்பதை வைத்து எழுதப்படாததை உணரும் ரசனை.

கலையும் பிரச்சாரமும்

வண்ணநிலவன் ஒரு காக்கை, குட்டிச் சுவரில் உட்கார்ந்திருப்பதை எழுதுகிறார். கதையில் கொஞ்ச நேரம் கழித்து, விரட்டினாலும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை எழுதுகிறார். அவரது பாத்திரம் நான்கு நாள் முன் பார்த்த அதே காக்கையாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறது. தேர்ந்த வாசகன், அதே காகத்தை நாயின் இன்னொரு வடிவமாக, காய்ந்த வயிறாக, பசி இயலாமை காரணமாய் மற்றவர்களைப் போல் தொலைதூரம் பறந்துவிட முடியாத கதை நாயகனின் பிரதிபலிப்பாக உணரக்கூடும். இந்தக் கதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் பஞ்சம் மவுனமாய் எதிரொலித்துக்கொண்டிருப்பதைக் கேட்க மனதின் காதுகள் திறந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

கதையின் தொடக்கத்தைக் கவனியுங்கள். கதையின் முதல் வரியிலேயே கதையின் மையம் இருக்கிறது.

“நார்ப் பெட்டியில் கொஞ்சம் சுள்ளி விறகுகளைத் தவிர வேறே ஒன்றுமில்லை.”

ஒரு மனிதன், ஒரு காகம், ஒரு நாய். இவைதாம் கதாபாத்திரங்கள். இரண்டு வீடுகள்தாம் களம். இவற்றை வைத்துக்கொண்டு எழுத்தில் ஒரு தேர்ந்த கலைப் படத்தைக் கொடுத்துவிடுகிறார் எழுத்தாளர்.

கலைஞர்களும் பிரச்சாரகர்கள்தாம். மனிதத்தின் உன்னதத்தை, கீழ்மையை, அவலத்தை, கையறு நிலையைக் காட்டி நம்மை விழிப்படையச் செய்பவர்கள்.

மதம் மற்றும் கட்சி கொள்கைப் பிரச்சாரகர்களின் இலக்கு கடவுளை அல்லது கொள்கையை நோக்கி வாசகன் மனதைக் குவிப்பது. கலைஞனின் வேலை, தன் இலக்கைத் தானே கண்டடையும்படி மனித மனத்தை விசாலமாய்த் திறந்துவிடுவது. விமானத்தில் பயணித்த இளைஞரால், மதப் பிரச்சாரத்தைக் கேட்டுவிட்டு நிம்மதியாய்க் கண் மூடித் தூங்க முடிந்தது. சமூகத்தின் துக்கத்தைக் காட்டி நம் தூக்கத்தைப் பிடுங்குவதுதான் கலைஞனின் தலையாய காரியம்.

இணையத்திலேயே கிடைக்கிறது இந்தக் கதை. படித்துப் பாருங்கள்.

இணைப்பு: http://azhiyasudargal.blogspot.in/2010/11/blog-post_27.html

எழுத்தாளர். தொடர்புக்கு: madrasdada@gmail.com

Ramprasath on February 20, 2016 at 10:06 AM said...

புனைவு என்னும் புதிர்: மனதைத் திறக்கும் கலை

விமலாதித்த மாமல்லன்

சமீபத்திய பயணம் ஒன்றில் பக்கத்து இருக்கைக் குறுந்தாடி இளைஞர் கைபேசியில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார். அதில், பிரச்சாரகர் ஒருவர் உக்கிரமாகப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த இளைஞர் ஒலியைக் காதுக்குள் விட்டுக்கொண்டிருந்தார்.

இந்தக் காலத்து இளைஞருக்கு இவ்வளவு பக்தியா என்று வியப்பாக இருந்தது. கொஞ்ச நேரம் கண் மூடிப் பிரார்த்தித்தவர், மொபைலை அணைத்துவிட்டுத் தூங்கத் தலைப்பட்டார். இளைஞரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, என்னுடைய ஐபேடை எடுத்து, சேமித்திருந்த ஒரு கதையை மிக நிதானமாகப் படிக்கத் தொடங்கினேன். ஓரப் பார்வையில் இளைஞரும் படிப்பதை உணர முடிந்தது. ‘இந்தாருங்கள்’ என்று ஐபேடை நீட்டினேன். ‘வேண்டாம்’ என்று மறுத்தார். ‘பரவாயில்லை’ என்று, தலைப்பிலிருந்து படிக்க வசதியாக முதல் பக்கத்துக்கு நகர்த்திக் கொடுத்தேன். குறுந்தாடி மேலே நகர்த்திவிட்டு இரண்டாம் பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினார்.

படித்து முடித்துவிட்டு என்னிடம் கொடுத்தார். உள்ளூரப் பரபரப்புடன் அவர் முகத்தைப் பார்த்தேன்.

“புரியவில்லை”.

“இதில் என்ன புரியவில்லை?”

“ஒரு ஆள் வீட்டுக்குள் போகிறான். நாய் வருகிறது.”

“பஞ்சம்” என்கிற ஒரே ஒரு வார்த்தையைக் கூறினேன். அவருக்கு முழுக் கதையும் புரிந்துவிட்டது.

புதிய களம், புதிய அனுபவம்

வீடியோவின் பிரச்சாரகர், குறிப்பிட்ட சில வார்த்தைகளை மந்திர உச்சாடனம் போலத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதால் அடுத்து அவர் சொல்லவருவது என்ன என்பது அந்த இளைஞருக்கு, அவர் சொல்லும் முன்பே எளிதாகப் புரிந்துவிடுகிறது.

அவர் படித்தது வண்ணநிலவனின் ‘மிருகம்’ கதை. வண்ணநிலவன் காட்டுவது புதிய களம். 80களில் பிறந்திருக்கக்கூடிய அந்த இளைஞரின் அனுபவ உலகத்தில் இல்லாதது. கற்பனை செய்து பார்ப்பதுகூட அவருக்குக் கடினம். பஞ்சம் காரணமாய், ஓர் ஊரில் ஒரு மனிதனைத் தவிர ஒட்டுமொத்த மனிதர்களும் ஓடிப்போவதை அவரால் உணர முடிவது சிரமமே. எனவே அவருக்குக் கதை புரியாமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம். அது மட்டுமின்றி, ஊன்றிப் படிக்காததும் மற்றொரு காரணம். விவரணைகளை விட்டுவிட்டு வெறும் சம்பவத்தை மட்டும் தொடர்வது.

எழுத்தாளனால் அவன் காணாத உலகத்தின் பாத்திரமாய் எப்படி ஆக முடிகிறதோ அதே போல, தேர்ந்த வாசகன் அவனுக்குக் காட்டப்படும் உலகை, அதுவரை பார்த்திராத போதிலும் சட்டெனப் பிடித்துக்கொள்கிறான்.

ரசனைகூட ஒரு விதப் பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன் உடலையும் மனதையும் தயார் செய்துகொள்வதைப் போல இலக்கியத்துக்கும் சிறு முயற்சி, கொஞ்சமான யத்தனம் சிறிய மெனக்கெடல் தேவைப்படுகிறது. கதையின் சம்பவங்களைத் தவிரவும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் உணர்வுகளை, எழுத்தாளன் கோத்துச் செல்லும் விவரணைகளை, அவற்றின் நுட்பங்களை, அதன் மூலமாகக் கதையை, மனதில் உணரும் பயிற்சி. எழுதப்பட்டிருப்பதை வைத்து எழுதப்படாததை உணரும் ரசனை.

கலையும் பிரச்சாரமும்

வண்ணநிலவன் ஒரு காக்கை, குட்டிச் சுவரில் உட்கார்ந்திருப்பதை எழுதுகிறார். கதையில் கொஞ்ச நேரம் கழித்து, விரட்டினாலும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை எழுதுகிறார். அவரது பாத்திரம் நான்கு நாள் முன் பார்த்த அதே காக்கையாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறது. தேர்ந்த வாசகன், அதே காகத்தை நாயின் இன்னொரு வடிவமாக, காய்ந்த வயிறாக, பசி இயலாமை காரணமாய் மற்றவர்களைப் போல் தொலைதூரம் பறந்துவிட முடியாத கதை நாயகனின் பிரதிபலிப்பாக உணரக்கூடும். இந்தக் கதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் பஞ்சம் மவுனமாய் எதிரொலித்துக்கொண்டிருப்பதைக் கேட்க மனதின் காதுகள் திறந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

கதையின் தொடக்கத்தைக் கவனியுங்கள். கதையின் முதல் வரியிலேயே கதையின் மையம் இருக்கிறது.

“நார்ப் பெட்டியில் கொஞ்சம் சுள்ளி விறகுகளைத் தவிர வேறே ஒன்றுமில்லை.”

ஒரு மனிதன், ஒரு காகம், ஒரு நாய். இவைதாம் கதாபாத்திரங்கள். இரண்டு வீடுகள்தாம் களம். இவற்றை வைத்துக்கொண்டு எழுத்தில் ஒரு தேர்ந்த கலைப் படத்தைக் கொடுத்துவிடுகிறார் எழுத்தாளர்.

கலைஞர்களும் பிரச்சாரகர்கள்தாம். மனிதத்தின் உன்னதத்தை, கீழ்மையை, அவலத்தை, கையறு நிலையைக் காட்டி நம்மை விழிப்படையச் செய்பவர்கள்.

மதம் மற்றும் கட்சி கொள்கைப் பிரச்சாரகர்களின் இலக்கு கடவுளை அல்லது கொள்கையை நோக்கி வாசகன் மனதைக் குவிப்பது. கலைஞனின் வேலை, தன் இலக்கைத் தானே கண்டடையும்படி மனித மனத்தை விசாலமாய்த் திறந்துவிடுவது. விமானத்தில் பயணித்த இளைஞரால், மதப் பிரச்சாரத்தைக் கேட்டுவிட்டு நிம்மதியாய்க் கண் மூடித் தூங்க முடிந்தது. சமூகத்தின் துக்கத்தைக் காட்டி நம் தூக்கத்தைப் பிடுங்குவதுதான் கலைஞனின் தலையாய காரியம்.

இணையத்திலேயே கிடைக்கிறது இந்தக் கதை. படித்துப் பாருங்கள்.

இணைப்பு: http://azhiyasudargal.blogspot.in/2010/11/blog-post_27.html

எழுத்தாளர். தொடர்புக்கு: madrasdada@gmail.com

Know Tamil Nadu on January 28, 2018 at 5:31 PM said...

Arumai bro

Padmanabhapuram Aravindhan on May 1, 2023 at 8:15 AM said...

பஞ்சமும் வறுமையும் மனிதனை மிருகமாக்கி விடுகிறது.. நல்ல சிறுகதை

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்