Sep 29, 2011

கருப்பு ரயில் - கோணங்கி

முனியம்மா மகன் சிவகாசிக்குப் போய்விட்டான். முனியம்மாளின் கட்டாயத்தினால் குடும்பமே போக வேண்டியதாயிற்று. அவன் போகும்போது ரயில் தாத்தா பட்டத்தையும் சேர்த்து கொண்டு போய் விடவில்லை. அதையெல்லாம் கந்தனிடம் ஒப்படைத்து விட்டுத்தான் போனான். முனியம்மா மகன் போனாலும் கந்தனே போய்விட்டாலும் ரயில் தாத்தா இருப்பார். நிஜத்து ரயிலே போய்விட்டாலும் ரயில்தாத்தா சாகாவரம் பெற்று விடுவார். konangi-ajayan13

எல்லாச் சின்னபிள்ளைகளுக்கும் ரயில்தாத்தா வேண்டும். மேலத்தெரு வேப்பமர ஸ்டேஷனிலிருந்து துவங்குகிற ரயில் பிரயாணத்தை யாராலும் நிறுத்த முடியாது. கந்தனின் கரண்டு மேன் அய்யாவுடைய சிகப்பு ரப்பர் கையை மாட்டிக்கொண்டு வந்தாலே ரயில் நிற்கும்.

ஆனால் சின்னப்பாப்பாவின் குட்டி ரயிலை ரப்பர் கை காட்டியாலும் நிறுத்த முடியாது. அந்தக் குட்டிரயில் எப்போதும் பொன்வண்டுகளைத்தான் ஏற்றிக்கொண்டு வரும். பொன்வண்டு ரயிலைச் செய்வதற்கு காலித் தீப்பெட்டிகள் வேண்டும். காலித் தீப்பெட்டிகளுக்காக கடை கடையாய் அலைந்தான். ரோடுகளை அளந்தான். கந்தனின் பகீரத முயற்சிகளால் காலித் தீப்பெட்டிகள் சேர்ந்துவிட்டது. இனி ஒவ்வொரு தீப்பெட்டிக்கும் பொன்வண்டு பிடிக்க வேண்டுமே. பொன்வண்டுகள் எப்போதும் காட்டிலும் காட்டுக்குப் போகிற தான் தோன்றிப் பாதைகளிலும் கிடைக்கும். அவற்றைப் பிடிப்பதே கஷ்டமானது.

இன்னும் பட்டு மெத்தைக்கு டெயிலர் அண்ணாச்சி வீட்டு குப்பைக்குழிக்குப் போக வேண்டும். அங்கு பட்டுத்துணி பதுங்கிக்கொண்டிருக்கும். குப்பையிலிருப்பதெல்லாம் குண்டு மணிதான். குப்பையைத் தோண்டத் தோண்ட பட்டு கிடைத்துவிடும். ஒவ்வொரு தீப்பெட்டிக்கும் பட்டு விரித்து, ஒரு ஜோடிப் பொன்வண்டுகளை பொண்ணு மாப்பிள்ளையாக உட்கார வைத்து தீப்பெட்டியை மூடினான். நூல் சம்பாதிக்க வேண்டுமே. அதற்கு டெயிலர் அண்ணாச்சியைத்தான் பிடிக்கணும். ஊதாக் கலர் - பச்சைக் கலர் - மஞ்சக் கலர் - வாடா மல்லிக் கலர் நூலை எல்லாம் மிஷினுக்குள்ளிருந்து எடுத்துத் தருவார். கலர்க் கலர் நூலையெல்லாம் ஒன்றாக்கி தீப்பெட்டிக்கு தீப்பெட்டி இடைவெளி விட்டு ரயில் பெட்டிகளை இணைத்தான்.

கந்தனுக்குத்தான் இப்படியெல்லாம் பொன் வண்டு ரயில் செய்ய வரும். சின்னப் பாப்பாவுக்கு வரவே வராது. அவள் பார்த்துக் கொண்டே சும்மா இருந்தாள். அண்ணனின் ஒவ்வொரு காரியத்தையும் உற்றுப் பார்த்தபடியே தலையைத் தலையை அசைத்து ஆமோதித்தாள். குட்டி ரயிலை நுனிவிரலால் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அது சின்னப்பாப்பாவின் குட்டி ரயில். ‘குப்...க்குப்....’ பென்ற ஊதலோடு கிளம்பி விட்டது. சிமெண்டுத் தரையில் சின்னப்பாப்பாவைச் சுற்றிச் சுற்றி வருகிறது. பொன்வண்டு ரயில் போவதைப் பார்த்து ‘க்கூ... க்கூ’ வென்று ஊதுகிறாள், சின்னப்பாப்பா.

இப்போது கந்தனின் கனவு ரயிலும் கிளம்பி விடும். ஊருக்குத் தெற்கு தூரத்தில் ஓடும் நிஜத்து ரயிலின் ஊதல் கேட்கும். இந்த ஊதலே அவனை எங்கெங்கோ அழைத்துப்போய் தொலைதூர அதிசயங்களைக் காட்டி அவனை ஆச்சரியப்படுத்தும். சினேகிதக் குருவிகளோடு பறந்து செல்வதாய் தானும் சிறகுகளை அசைத்துக் கொள்வான். காற்றோடு பறந்து போகும் வழிகளில் எங்கும் ஊருக்கு ஊர் ரயில் தாத்தாக்கள் இருப்பதைக் கண்டான். அவனுக்காகவே காத்திருக்கிற ரயில் தாத்தாவின் குறும்புத் தாடியைக் கண்டதும் ‘க்களுக்’கென்று சிரிப்பு உண்டாகி விட்டது. வாய் விட்டுச் சிரித்தான். அவனுக்குப் பின்னாலிருந்து யாரோ செல்லமாய் சிணுங்கியது கேட்கவும் திரும்பினான். அங்கும் சின்னப்பாப்பா நின்றிருந்தாள். அவனை விடாமல் தொடர்ந்து வரும் சின்னப்பாப்பாவின் சின்ன பூங்கையைப் பிடித்துக் கொண்டான். அவளை இழுத்துக் கொண்டு ரயில் தாத்தாவை நோக்கி ஓடினான். ஓட ஓட ரயில் தாத்தாவும் எட்டாத உயரத்தில் பறந்து கொண்டிருந்தார். கம்பூணித் தாத்தாவை எட்டிப் பிடிக்கவே முடியாது. அவர் மறைந்தே போய் விட்டார்.

கந்தனின் ரயில் கனவை ஊடுருவிப் பார்ப்பதுபோல் சின்னப்பாப்பா அவனைப் பார்த்தாள், ஈரம் சொட்டும் மூக்கைச் சுழித்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரித்தாள்.

சிமெண்டுத் தரையில் ஓடும் பொன்வண்டு ரயிலுக்குள் பொண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சிச் சிரிப்பதை எல்லாம் சின்னப்பாப்பா கேட்டிருப்பாள். எங்கெங்கோ ஒளிந்திருக்கும் ஊருக்கெல்லாம் பொன்வண்டு போகிறதே. சின்னப்பாப்பா “தாட்டா, த்தாட்டா...” என்றாள். ஊருக்குப் போகிற பொன்வண்டிடம் “நானுக்கு ரயிலு.. நானுக்கு ரயிலு..” என்று தன்னைத் தானே காட்டிக் கொண்டாள்.

சின்னப் பாப்பாவின் ‘நானுக்கு ரயில்’ கிடைக்கா விட்டாலும் அவளது பள்ளிக்கூட நாட்களில் நானுக்கு ரயிலுக்கான தண்டவாளத்தை வரைந்தாள்.

பள்ளிக்கூடம் போகும் போதும் ரயில்தாத்தா கந்தனின் வாலைப்பிடித்துக் கொண்டுதான் போனாள். அவர்களின் பள்ளிக்கூடத் தெருவே பழையது. ‘கரேர்....’ ரென்ற கருப்பு ஒட்டிக்கொள்ளும் கோட்டைச்சுவரும் காரை பிளந்த வீடுகளுமே இருந்தது. சுவருக்கு கீழே நீளமாய் ஓடும் சாக்கடைத் திண்டின் மேல் கால் வைத்து நடந்தாலே இந்த கெசவால் குரங்குகளுக்கு நடக்கவரும். நீளமாய் நடந்துகொண்டே சிலேட்டுக் குச்சியால் கோட்டைச் சுவரில் கோடு கீச்சினாள். கோடுகள் தெருவோடு தெருவாய் சேர்ந்துகொண்டு நீளும். முக்கு திரும்பி வளையும் நெளியும். அடுத்து வீட்டு சுவருக்கு தாவும். இந்தக் கோடுதான் சின்னப்பாப்பாவின் குட்டிரயிலுக்குத் தண்டவாளமாம். இதைக் கண்டதுமே ரயில் தாத்தாவுக்கு கொண்டாட்டம் வந்துவிட்டது. அவனும் கோடு போட்டான். துருப்பிடித்த ஆணியால் கோடு இழுத்துக்கொண்டே அழியாத தண்டவாளத்தை எழுதினான். அவனது கனவு ரயிலின் தண்டவாளமே பெரியது. அதற்காகவும் இனி வருபவர்களுக்காகவும் தண்டவாளம் இருக்கும். யாரும் இதை அழிக்கவே கூடாது. தினந்தினம் பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் சுவரிலிருக்கும் தண்டவாளங்களாய் வளைந்து நெளிந்து கொண்டே போனார்கள்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமைக்கென்று பெரியரயில் இருக்கிறது. இந்த ரயிலே சாகவே சாகாதது. ஞாயிறு ரயிலுக்கு குட்டி ரயில்களெல்லாம் ஒன்று சேரும். வைக்கோலைத் திரித்துத் திரித்து கயறாக்கி, கயறுக்குள் ஒன்று சேரும் ரயில். ஒருவர் பின்னால் ஒருவராய் இணைந்து சட்டையையோ அரைஞான் கயித்தையோ பிடித்துக்கொள்ளணும். சடையைப் பிடித்துக்கொண்டும் ரயில் புறப்பட்டு வரும். எப்பொழுதோ புறப்பட்டு, எங்கெங்கோ இருக்கும் ஸ்டேஷனை நோக்கி ரயில்தாத்தா புறப்படுகிறார். பின்னால் இவர்களுக்கெல்லாம் ரயிலே கிடைக்காது. ரயிலே மறந்துவிடும். ரயிலுக்காக காத்திருப்பது கூட பெரும் ஏக்கமாகி பெருமூச்சு விடுவார்கள். இன்னொரு கூட்டம் ரயிலைத் தேடும். அவர்களுக்கு மத்தியில் ரயில்தாத்தா தோன்றிவிடுவார் தாடியுடன். புதுரயிலைச் செய்து கொண்டு பிரயாணம் துவங்கிவிடும்.

ரயில் போவதற்கு கந்தன் சட்டையை அசைத்து ‘செண்டா’ காட்டி விட்டான். அதற்குள் சின்னப்பாப்பா பிரயாணிகளுக்கெல்லாம் திக்கட்டு கொடுத்து முடித்திருந்தாள். கரண்டுமேன் அய்யாவின் ரப்பர் கையை தூக்கிக்கொண்டு ஓடியவன் கரையில் நின்று கைகாட்டியாகி,  கையைத் தூக்கவும் ‘ஹ்கூ...’ வென்ற ஊதலோடு வானமெல்லாம் புகையைக் கக்கிக்கொண்டு ரயில் புறப்பட்டது. புழுதியைக் கிளப்பிக்கொண்டு ரயில் தாத்தா வருகிறார். வேம்படி ஸ்டேஷனிலிருந்து தெருவைத் தாண்டி காளியங்கோயிலுக்குப் பின்புறமாக போய் வளைந்து திரும்பி கம்மாயை நோக்கி ரயில் போகிறது. திக்கெட்டு வாங்கிக்கொள்ளாத முனியம்மா மகனும் வரிசையில் வந்து கொண்டிருந்தான். அவனுக்குத்தான் கள்ள ரயில் விளையாட்டெல்லாம் தெரியும். ரயில்கார வாத்தியாராகையால் அவனுக்கு ரயிலை மீறிச் செல்ல சலுகையுண்டு. முனியம்மா மகனுக்கு அடிக்கடி ரயில் பதவிகள் மாறும். எஞ்சின் டிரைவராகவும் எஞ்சினாகவும் கடைசி பெட்டியில் வரும் குழாய்ச் சட்டைக்காரனாகவும் மாறி மாறி வருவான்.

கந்தன் திடீரென்று ‘நாந்தான் டீட்டியாரு...’ என்று காதில் குச்சியை சொருகிக்கொண்டு வந்தான். வரிசையை விட்டு விலகி நின்றபடி திக்கட்டு பரிசோதித்துவிட்டு மீண்டும் ரயிலோடு சேர்ந்து கொண்டான். கம்மாய்க் கரைமேல் ஏறப்போகிறது. கரைமேல் ஏறமுடியாமல் ஏறத்திணறிக் கொண்டிருந்தது. வைக்கோல் கயறு அந்து விடாமல் ட்ரைவர் காப்பாற்றி விட்டான்.

இப்போது ரயில் கம்மாய் கரைப் புள்ளையாரை அடைந்து தைப்பாறி மூச்சு வாங்கியது. அந்த இடத்தில் முனியம்மா மகன் ரப்பர் கையை மாட்டிக்கொண்டு குறுக்கே நின்றான். அசையாமல் கைகாட்டி மாதிரியே நின்றுவிட்டான். கந்தன் குதித்துக் குதித்து கோயில் மணியடிக்கவும் ரயிலில் வந்த மாரிமுத்துப் பண்டாரம் ஓடிப்போய் செடி செத்தைகளை அள்ளிக் கொண்டு வந்தான். புள்ளையாருக்கு பூசை வைக்கவேண்டுமே. புள்ளையார் ஸ்டேஷனில் வண்டி வெகுநேரம் வரை நிற்கும். பூசை முடிந்துதான் கிளம்ப வேண்டும். புள்ளையாரைக் கும்பிட்டக் கையோடு ‘சாமி காப்பாத்து... ஆத்தா காப்பாத்து... அய்யா காப்பாத்து... பாப்பா காப்பாத்து...’ என்ற முணுமுணுப்புகளோடு புள்ளையாரைச் சுற்றி வரும் ரயில். மூன்றாவது சுற்றில் பூசை முடிந்துவிடும். பூசையின் போது வேண்டிக் கொள்ளணுமே. அன்றொரு நாள் காளியங் கோயிலுக்குப் பின்னால் நடந்த அப்பாம்மா விளையாட்டில் முனியம்மா மகனுக்கும் மொதலாளி மகள் வெங்கட்டம்மாளுக்கும் பிறந்த கல்லுப்பிள்ளைக்கு பேர் வைக்கும்படி புள்ளையாரைக் கேட்டார்கள். இப்போது பேர் விட்டு முடியவும் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். வெறும் சிரட்டையை உடைக்கவும் சில்லுசில்லாய் சிதறும். அப்போது ரயிலும் சிதறிப் போகும். அவரவருக்கு கிடைத்த சிரட்டைத் துண்டை நாக்கால் நக்கிக் கொண்டு ருசிப்பார்கள்.

கடைசி மணியடித்து ரயில் ஒன்று சேரும். கந்தன் செண்டா காட்டவும் ரயில் புறப்படும். அடுத்த ஸ்டேஷன் உண்டு. வீரம்மா சின்னாத்தா ஊருக்கும் ஸ்டேஷன் இருக்கும். முள்ளுச்செடி ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது.

தெருவிலிருந்து பார்த்தால் தெரியும். கம்மாய்க்கரை மரங்களுக்கு ஊடே மறைந்து மறைந்து போகும் ரயில். நிழல் மூடிக் கருத்திருக்கும். நிற்கிற ஸ்டேஷனில் ஆள் இறங்கும். நிற்காத ஸ்டேஷனில் மரங்கள் அசைந்து பின் வாங்கும். அடுத்த ஸ்டேஷன் நோக்கி நகர்ந்து நகர்ந்து கடைசி ஸ்டேஷனை நெருங்கிவிடும். கம்மாய்க்கரை இறக்கத்தில் இறங்கும்போது ரயில் தள்ளாடித் தள்ளாடி நகரும். கம்மாய்க்குள் ஏமகாய் விரிந்து கிடக்கும் நீர்ப்பரப்பில் மிதந்து வரும் அலைகளைப் பூராவூம் பார்த்ததுமே சின்னவர்களின் டவுசர் அவிழ்ந்து கொள்ளும். ஒருகையில் டவுசரைப் பிடித்தபடி நீர் விளிம்பு வரைக்கும் வந்து, எல்லாம் களைந்து நிற்கிற அம்மணத்தோடு கடைசி ஸ்டேஷனில் நிற்கும் ரயில் திடீரென்று ‘ஹைய்ய்ய்...’ யென்ற பெருங்கூச்சலில் சிதறிச் சின்னா பின்னமாகி விடும். அப்போது ரயில் இருக்காது. ரயில்தாத்தா இருக்கமாட்டார். காணாமல் போன ரயில் கம்மாய் தண்ணிக்குள் அம்மணக் கும்மாளமடித்து மறையும்.

ஏனோ, இப்போதெல்லாம் கம்மாய் பாதைக்கு ரயில் வராமல் ஸ்டேஷனெல்லாம் மூடிவிட்டது. கம்மாய்க்குள் அலையடித்து மின்னிய நீர்ப்பரப்பே காணாமல் எங்கோ தொலைந்து போனது.

சிவகாசிக்குத் தொலைந்துபோன முனியம்மா மகனை திரும்பவும் சந்திக்கும்போது எல்லாப் பிள்ளைகளுக்கும் சின்னப் பொன்வண்டுக்கும் சந்தோஷம் வரும். சிரிப்பு வரும். எல்லாப் பொன்வண்டுகளும் சிவகாசிக்குப் போகும். இனிவரும் ரயில் விளையாட்டையெல்லாம் அங்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஊரிலிருந்து புறப்பட்டுப் போகும் சிவகாசி ரயிலுக்கு சின்னப் பாப்பா வரைந்த தண்டவாளம் இல்லை. முள்ளுக்காட்டுத் தடத்து வழியில் பொன்வண்டு ரயில் போகிறது. சின்னச்சின்ன தீப்பெட்டிக்குள் சின்னப்பாப்பாவும் சிவகாசிக்குப் போகிறாள்.

கருக்கிருட்டில் தூங்கும் பொன்வண்டுகளுக்குப் பிடித்தமான ரயில் சத்தம் கேட்கும். அப்போது தெருவில் ஒரு கருப்பு ரயில் வந்து நிற்கும். வீடு வீடாய் கருப்பு ரயில் நின்று நின்று நகரும். சின்னப் பொன்வண்டுகளை கூவி அழைக்கும். இப்பவெல்லாம் கருப்பு ரயிலுக்கு புது ட்ரைவர்தான். அவன் கருப்பு மனுசன். ‘க்ரேர்..’ரென்று ரயிலின் நிறத்தில் இருந்தான். அவன் ரயில் தாத்தா மாதிரியே தாடி வைத்திருந்தான். துருப்பிடித்த தாடி குறும்பாய்ச் சிரித்தபடி பொன்வண்டுகளுக்கு தலையசைத்து வணக்கம் கூறினான். பொன்வண்டுகளை ஏமாற்றுவதே சுலபமானது. அவன் அழைக்கவும் பொன் வண்டுகள் தூங்கியபடியே எழுந்துவிடும். கருப்பு ரயிலில் ஏறிக்கொண்டு பிரயாணம் துவங்கி விடும். ரயிலுக்கு வெளியில் கிடப்பதெல்லாம் ரயிலோடு ஓடி வராது. ஆனால் அவர்களின் ஆதி நிலா மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்து முள்ளுப் பாதையில் அழுது கொண்டே ஓடிவரும். ரயிலில் போகும் பொன்வண்டுகளைப் பிடிக்க முடியாமல் பாதி வழியில் முள்ளுக்காட்டில் சிக்கிச் சிதறி விடும்.

அங்கு போனால் நடுக்காட்டு இருட்டுச் சுரங்கத்தில் தீப்பெட்டிகள் குவிந்திருக்கும். தீப்பெட்டிக்குள் பொன் வண்டு இருக்கும். அந்த கருப்பு மனுசன் பொன் வண்டின் உடம்பிலிருந்து தீக்குச்சிகளை உருவி எடுப்பான். எடுக்க எடுக்க பொன்வண்டின் உடம்பெல்லாம் தீக்குச்சியாய் வரும். தீரவே தீராமல் தீக்குச்சி வந்து கொண்டிருக்கும். பிறகு பொன்வண்டுகளைத் தீப்பெட்டிக்குள் அடைத்து விடுவான். திரும்பவும் தீப்பெட்டியைத் திறப்பான். மூடுவான். தேவையான போதெல்லாம் தீப்பெட்டியைத் திறந்து பொன் வண்டிலிருந்து தீக்குச்சி எடுப்பான்.

பொன்வண்டுக்கே தெரியாமல் அதன் உடம்பிலிருக்கும் வண்ணமெல்லாம் உதிர்ந்து மறைந்து விடுகிறது. பறப்பதற்கு ரெக்கை வைத்திருக்குமே அதில் பொட்டுப் பொட்டாய் மின்னும் பாசிக்கலர் இருக்குமே. அதெல்லாம் மறைந்து ரெக்கை ரெண்டும் கருகிச் சுருண்டு பொன்வண்டே கருத்து வருகிறது.

******

தட்டச்சு:  சென்ஷி ,    பிரதி உதவி : கார்த்திகைப் பாண்டியன்

Sep 19, 2011

சுளிப்பு - தி.ஜானகிராமன்

அந்தப் பையனை ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்தார் திருமலை. சர்க்கரைக் குட்டி, பட்டுக் குஞ்சு என்றெல்லாம் கொஞ்ச வேண்டும் போலிருக்கும். அத்தனை லட்சணம். அப்படி முகக் களை. புருபுருவென்று கண். சுருள் சுருளாகத் தலையில் மயிர். ஏழு வயதுக்கான வளர்த்தி இல்லை. உடம்பு மெல்லிசுவாகு. அதனாலேயே ஒரு கவர்ச்சி.. ஐயோ! இவ்வளவு பூஞ்சையாக இருக்கிறதே என்று ஒரு பரிவுக் கவர்ச்சி.

ஆனால் மண்டையில் இத்தனை களிமண்ணா! t-janakiraman1-905x1024திருமலைக்கு அதுதான் ஆச்சரியம். அரை மணி நேரமாக அந்த மண்டையில் ஒரு கணக்கை ஏற்ற, சாகசம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு  சாகசமும் பலிக்கவில்லை. அந்தச் சின்ன மண்டை ஒரு அறை போலவும், அதற்குப் பல கதவுகள் இருப்பது போலவும், ஆனால், உள் முழுவதும் ஒரே ஈரக் களிமண்ணாக இருந்ததால் கதவுக் கீலில் அந்த மண்ணெல்லாம் சிக்கித் திறக்க முடியாமல் அடைத்துக் கொண்டிருப்பது போலவும் உவமானப் படம் தோன்றிற்று. இன்னொரு தடவை அந்த மண்டையை வெண்ணைய் என்று நினைத்து அவர் ஊசி முனையால் குத்தப் போனது போலவும், ஆனால் ஊசி முனை உடைந்ததும், அது வெண்ணெய் இல்லை, வெள்ளைக் கருங்கல் என்றும் அவருக்குப் புரிந்ததாக ஒரு தோற்றம். இப்படி ஒவ்வொரு தோல்விக்கும் ஓர் உவமானப் படம் தோன்றிக் கொண்டிருந்தது.

அவர் கையில் ஒரு கட்டு மரக் குச்சி. சுளுந்துக் குச்சி. உள்ளங்கை வேர்த்து சுளுந்து கட்டும் கசகசவென்று நனைந்திருக்கிறது.

“இத பாரு மூணும் மூணும் என்ன?”

விரல் விட்டு எண்ணி “ஆறு” என்றான் பையன்.

“உங்கிட்ட மூணு குச்சி இருக்கு. உங்க அண்ணா கிட்ட மூணு குச்சி இருக்கு–”

“எனக்கு அண்ணா இல்லியே.”

“சரி, உங்க அக்கா கிட்ட இருக்கு.”

“அக்காவும் இல்லே.”

“நீ ஒரே குழந்தையா?”

“ஆமாம்.”

“சரி. உங்கிட்ட மூணு குச்சி இருக்கு. எங்கிட்ட மூணு குச்சி இருக்கு. மொத்தம் எத்தனை? இரண்டு கையையும் சேர்த்து?”

“இரண்டு கையும் சேரவில்லையே என்று விழித்தான் பையன். கடைசியில் அவனுடைய இடது கையில் மூன்றும், வலது கையில் மூன்று குச்சியுமாக வைத்து, சேர்த்து எண்ணி ஆறு என்று ஏற்றிவிட்டார்.

அடுத்த கணக்குதான் அவருடைய மூளையின் பலங்களைத் தகர்த்துக் கொண்டிருந்தது.

“என் கிட்ட மூணு குச்சி இருக்கு. உங்கிட்ட எங்கிட்ட இருக்கிறதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கு. இப்ப ரெண்டு பேர் கிட்டவும் சேர்ந்து எத்தனை குச்சி இருக்கு?”

“ஆறு.”

“இல்லெ, என்கிட்ட மூணு குச்சி ஈ ஈ ஈ ஈ, உங்கிட்ட அதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கு ஊ ஊ ஊ. புரியறதோ. நான் சொன்னதைச் சொல்லு பார்ப்பம்.”

“என்கிட்ட மூணு குச்சி ஈ ஈ, உங்கிட்ட அதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கூ ஊ ஊ ஊ…”

“அவ்வளவுதான் இப்ப மொத்தம் எத்தனை?”

“ஆறு.”

அவருடைய மேஜை மேல் சுளுந்துக் குச்சிகள் இறைந்து கிடந்தன.

கால் மணி போராடிவிட்டு, குச்சி வாண்டாம்; மூணு மாம்பழம்னு வச்சுக்கோயேன். எங்கிட்ட மூணு மாம்பழம் இருக்கு. உங்கிட்ட அதைவிட மூணு மாம்பழம் அதிகமா இருக்கு.”

பையன் தன் கையைப் பார்த்துக் கொண்டான்.

“அப்ப மொத்தம் எத்தனை மாம்பழம் இருக்கும்?”

அவன் இப்போது ஆறு கூடச் சொல்லவில்லை. நேராக இருக்கிற சுளுந்துக் குச்சியே பலிக்கவில்லை. இல்லாத மாம்பழமா பலிக்கப் போகிறது?

“உனக்கு மாம்பழம் பிடிக்குமா?”

“பிடிக்காது?”

“ஓகே. அப்படியா? ஏன் பிடிக்காது?”

“சிரங்கு வரும்.”

“உனக்கு எந்தப் பழம் ரொம்பப் பிடிக்கும்?”

“நாகப்பழம்.”

“நாகப்பழம்.”

“சரி. நாகப்பழம். உன் இந்தக் கையிலே மூணு நாகப்பழம் இருக்கு — அந்தக் கையிலே அதைவிட மூணு நாகப்பழம் அதிகமா இருக்கு…. கேட்டியா, இந்தக் கையிலே மூணு — அந்தக் கையிலே? அதைவிட மூணு நாகப்பழம் அதிகமா இருக்கு. இப்ப ரண்டு கையையும் சேர்த்து எத்தனை பழம் இருக்கும்?”

“ஆறு.”

“ராமா.”

அரை மணி ஆகிவிட்டது.

மற்ற குழந்தைகள் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தன. ஓரிண்டு குழந்தைகள்தான் அலுத்துப்போய் ஒன்றை ஒன்று கிள்ளத் தொடங்கின.

இந்தப் பையனை அரை மணியாக நிறுத்தி வைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார் திருமலை. பையன் இரண்டு கையையும் தொங்கவிட்டவாறே பிசையத் தொடங்கினான். கால் நொந்ததோ என்னவோ நகர்ந்து நின்றான். கொஞ்சம் அசைந்து அசைந்து சிரமம் தீர்த்துக் கொள்வது போலிருந்தது. கால் மாற்றிக் கொண்டான்.

திருமலை நன்றாகப் பார்த்தார். வரவர பையனின் கண்கள் புருபுருவென இருந்தவை, மந்தமாகத் தூங்குவது போல வெளிச்சம் மங்கிவிட்டிருந்தது. அவரும் விடவில்லை. எப்படியாவது இந்த “அதிகத்தை” மண்டையில் ஏற்றாமல் விடுவதில்லை என்று வீம்பு பிடித்துக் கொண்டது.

“நன்னா கவனிச்சுக் கேக்கணும்… என் கையிலே… இல்லெ. உன்னோட இடது கையிலே — மூணு நாகப்பழம்…”

பையனின் முகம் இடுங்கிற்று. புருவம் சுருங்கிற்று. திருமலைக்குச் சட்டென்று வாய் மூடிக் கொண்டது. இந்த புருவச் சுருக்கம்…. பத்மாவின் முகம் மாதிரி. இந்தப் புருவச் சிணுக்கம் இப்போது அவர் கண்ணை வந்து குத்திற்று.

கல்யாணப் பந்தல். திருமலை மாப்பிள்ளை. சம்பந்திகளை இறக்கியிருக்கிற வீட்டிலிருந்து மேளதாளத்துடன் அவர் பரதேசக் கோலம் கிளம்புகிறார். இடுப்பில் முடமுட வென்று பஞ்சக் கச்சம். மயில்கண். மேலுக்கு ஒரு மயில் கண் ஐந்து முழம். கையில் விசிறி. காலில் செருப்பு. அவர் தம்பியோ யாரோ குடையைப் பிரித்து திருமலையின் மீது வெயில் படுவதும் படாததுமாகப் பிடித்துக் கொண்டு வந்தான். இடையில் பஞ்சக் கச்சம் அவிழாமல் பெல்ட்டு.

காலையில் அந்த கிராமத்துப் பரியாரி வந்து அவனுக்குச் சர்வாங்க க்ஷவரம் செய்து வைத்திருந்தான். திருமலைக்கு ஒரே கூச்சம். தலைமயிரை மட்டும் விட்டுவிட்டு மார்பு கை கால் என்று ஒரு இடம் விடாமல் மழித்து விட்டான். திருமலைக்குக் கொஞ்சம் சிரமம். மயிரெல்லாம் போனதும் கறுப்புத் தோலில் கொஞ்சம் கறுப்பு உதிர்ந்தாற் போல ஒரு திருப்தி. ஆனால் உடம்பு முகமெல்லாம்,நெற்றி முதல் பாதம் வரையில் அம்மி – கல்லுரலைப் புளிந்தாற் போல அம்மை வடு. சிறுசிறு குழிகளாக பெரிய அம்மை வடு. அதனால் பரியாரியின் கத்தியும் வழவழவென்று மழித்து விடவில்லை. கர் கர் என்ற ஓசையுடன் அம்மைத் தழும்புகளையும், பள்ளங்களையும், வரம்புகளையும் நரநரத்துக் கொண்டிருந்தது. மலர் எல்லாம் போனதும் ஒரு அரிப்பு வேறு.

கல்யாணப் பந்தலில் புகுந்ததும் கிழக்கே பார்த்து நிற்க வைத்தார்கள் திருமலையை. கலியாணப் பெண் உள்ளேயிருந்து வந்து அவனுக்கு மாலையிட்டு ஊஞ்சலில் ஆட்டிய பிறகு, உள்ளே அழைத்துப் போக வேண்டும். தாயாரும் தங்கைகளும் கிழவிகளும் நடு வயதுகளும் புடைசூழ மொட மொடவென்று பட்டு மடிசாரும் தலையில் சூரியப் பிரபை, சந்திர பிரபையும் பூப்பின்னலுமக மெதுவாக வந்தாள்.

“பார்றீ பத்மா, பாரு. நன்னாப் பார்த்துக்கோ ஆம்படையானை” என்று மேளச் சத்தத்துக்கு நடுவில் ஒரு பெண் குறும்பாகக் கத்திற்று.

பதமா நிமிர்ந்து பார்த்தாள் ஒரு புன்னகையுடன். அதே கணம் முகத்தில் ஒரு சுளிப்பு. என்னமோ குத்தினது போல ஒரு வலி, ஒரு பயம்… சிறிது நேரம் அவள் மார்பு, கை, பாதம் எல்லாம் சிலுசிலுப்பது போல ஒரு சிறு அதிர்வு. அதே சுளிப்போடு ஒரு பார்வை. மீண்டும் தலை குனிந்தது.

புன்னகையைக் காணவில்லை. அப்போது, தாலிகட்டும் போது, நலங்கின்போது-ம், ஹும், அந்தப் புன்னகை மறைந்தது மறைந்ததுதான்.

கலியாணப் பந்தலில் கண்ட அந்த முதல் சுளிப்பு! திருமலைக்குப் புரிந்துவிட்டது. அவன் நல்ல அட்டைக் கறுப்பு. அம்மை வடு. அகல மூக்கு. பல் சோழிப் பல். அவனுக்கே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள பல சமயம் வேதனையாயிருக்கும்.

முன்னால், பெண் பாக்கவில்லை. அம்மாக்களும் அப்பாக்களும் பார்த்து நிச்சயம் பண்ணிவிட்ட கலியாணம். கண்ணாடியைப் பார்க்கத் தயங்குகிற திருமலைக்கு எந்தப் பெண்ணையும் போய்ப் பார்த்து வேணும் வேண்டாம் என்று சொல்லத் தயக்கம்.

பத்மாவைப் பார்த்ததும் அவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் என்மாதிரி இருக்கக் கூடாதோ? கொஞ்சம் பங்கரையாக, கட்டை குட்டையாக – இல்லை, ஒரு கால் விந்தலாக, இல்லை, ஒரு கண் பூ விழுந்து… இப்படி ஏன் மூக்கும் முழியுமா, மாநிறமா பளிச்சென்று ஒல்லியாக, பச்சை நரம்பு ஓட…

இந்தப் பையனுக்கும் அப்படி பச்சை நரம்பு-ஒல்லி. முகத்தை ஏன் இப்படி சுளுக்கினாள்? என் முகத்தைப் பார்த்தா? பத்மா முகத்தைச் சுளுக்கினது போலவே இருந்தது. திருமலைக்கு மனசு மறுபடியும் பத்மாவுடன் ஓடிற்று. பத்மா நாளைந்து நாள் அப்படியிருந்தாள், இப்படி வந்து சேர்ந்து விட்டதே என்கிறது போல.

பிறகு படுக்கை அறையில்……….!

“அப்பா! உடம்பைப் பாரு, சமையக்காரன் மாதிரி கண்டு கண்டா, ம்க்கும்” என்று அவனுடைய இரண்டு கன்னங்களையும் ஒவ்வொரு கையின் ஐந்து விரலாலும் உள்ளங்களை அழுத்திக் கவ்வி மயக்கமும் சிரிப்பும் – அவள் கை வேர்வையும் அவன் முதுகின் வேர்வையும் சேர்ந்து கசங்கி நசுங்கி……

சுளிப்பு மறைந்து விட்டது.

இந்தப் பையன் அப்படித்தான் முகம் சுளுக்கினான் இப்போது. பத்மாவை ஜெயித்தாற்போல் இவனை எப்படி ஜெயிக்க முடியும்?

படிக்கிற குழந்தை – ஏழு வயது….

திருமலை வெறித்துப் பார்த்தார் அவனை.

“உங்கப்பா என்ன பண்றார்?”

“செத்துப் போய்ட்டார்” என்றான் பையன். கண்ணில் அழுகை இல்லை.

“அம்மா?”

“அம்மாவும் செத்துப் போயிட்டா!”

“ஆ! எப்ப?”

“போன வருஷம்!”

“அண்ணா, தம்பியாவது இருக்காளா?”

“ஒருத்தருமில்லை.”

“நீ யார் கிட்ட இருக்கே?”

“மாமா கிட்ட.”

“மாமா என்ன பண்றார்?”

“பக்கோடா, காராபூந்தி எல்லாம் பண்ணி தெருவோட வித்துண்டு போவார்! தலையிலே ஒரு பெரிய தட்டுலெ வச்சுண்டு.”

“அப்படின்னா உனக்குக் கணக்கு நன்றாத் தெரிய வேண்டாமா?”

“ஆமா.”

“ஆமா?”

பையனின் முகம் மறுபடியும் சுளித்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.

“என்ன பண்றது?”

“வயத்தை வலிக்கிறது. போகணும், போகணும், போகணும்” என்று வலது கையின் ஆள் காட்டி – பாம்பு விரல்களை நீட்டினான் பையன்.

“சரி, சரி போ… ஓடு” என்றார் திருமலை.

பையன் ஓடினான். கால் சட்டையிலேயே போய்விடப் போகிறானே என்று கவலை. நல்ல வேளையா ஓடிவிட்டான்.

மற்ற பையன்கள் சிரித்தார்கள்.

“பொய் சார்” என்றான் ஒரு பையன் எழுந்து.

“என்னடா பொய்!”

“அவனுக்கு அப்பா அம்மா எல்லாம் இருக்கா சார்.”

“ரண்டு அண்ணா இருக்கான் சார்.”

“ஒரு தங்கச்சி கூட இருக்கா சார்.”

“அவன் – அப்பா , பக்கோடா விக்கலெ சார். பாட்டு வாத்தியார் சார். எங்க அக்காவுக்குக் கூடச் சொல்லிக் கொடுத்தார் சார்.”

“அட!”

“அவனும் நல்லாப் பாடுவான் சார்.”

“அட.”

“அப்பா அம்மா, யாருமே இல்லென்னானே?”

“சும்மனாச்சிம் சார்.”

“ஏன் சொன்னான்?”

குழந்தைகள் பதில் சொல்லவில்லை.

“வரட்டும்” என்றார்.

திருமலைக்கு குழப்பம். முதலில் கோபம். பிறகு தன் முகம் தெரிந்தது.

குழப்பம்.

“வரட்டும்.”

எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள். பையன் வரவில்லை. கால்மணி, அரைமணி, பகல் இடை வேளை ஆயிற்று. வரவில்லை. பிற்பகல் ஆயிற்று. வரவில்லை. மாலையில் கடைசி மணியும் அடித்தது. பையன் வரவில்லை. திருமலைக்கு வயிற்றில் புளி.

“புஸ்தக மூட்டையை வச்சுட்டுப் போயிட்டானே. அவன் வீடு தெரியுமா உங்களுக்கு?”

“நான் கொடுக்கிறேன் சார். எங்க தெருதான் சார்.” என்று ஒரு பையன் அந்தப் பையை எடுத்துக் கொண்டான். திருமலை சிறிது நின்றார்.

“நானும் வரேன். வீட்டைக் காமிக்கிறீயா?” என்றார்.

“வாங்க சார், காமிக்கிறேன்” என்று பெருமையாக அவருக்கு முன் நடந்தான்.

இரண்டு மூன்று தெரு கடந்ததும், “அதோ அந்த சந்துதான் சார்” என்றான்.

“அடி வாங்கி வைப்பீங்களா சார் அவனுக்கு?” என்றான் மறுபடியும். எத்தனை ஆசை அவனுக்கு!

திருமலை பேசவில்லை.

“இவங்கத்தான் சார் அவன் அம்மா” என்று எதிரே வந்த ஒரு அம்மாவைக் காட்டினான்.

“ஏண்டா குழந்தே! பள்ளிக்கூடம் விட்டாச்சா?”

“விட்டாச்சே, இதோ நட்டுவோட பையி புஸ்தகமெல்லாம்” என்று அவளிடம் கொடுத்தான்.

“இவங்கத்தான் எங்க சார். மூணாவது சார்” என்று அறிமுகப்படுத்தினான்.

திருமலை கும்பிட்டார்.

“வயித்து வலின்னு ஓடி வந்தான் குழந்தை, புஸ்தகப் பையைக் கூட வச்சுட்டு வந்துட்டேன்னு அழுதான். அதான் எடுத்துண்டு வரலாம்னு கிளம்பினேன்” என்றாள் அம்மா.

“இப்ப தேவலையா?”

“தேவலை. தூங்கறான்.”

திருமலை திரும்பி விட்டார்.

வழி காட்டின பையன், “ஏன் சார், நீங்க ஒண்ணும் சொல்லலே நட்டு அம்மா கிட்டே” என்று நமூட்டுச் சிரிப்பு சிரித்தான். அவனுக்கு ரொம்ப ஏமாற்றம்.

“சொன்னா அடிக்க மாட்டாங்களா”

“அடிச்சாத்தான், நாளைக்கு பொய் சொல்லாமல் இருப்பான்.”

“நாளைக்கு அடிச்சுக்கலாம் போ. நீ போ வீட்டுக்கு” என்று அனுப்பி விட்டு விடு விடு என்று நடந்தார்.

பையன் முகம் இன்னும் அவர் கண்களில் சுளித்தது. பத்மாவின் பத்து விரல்களும் அழுத்திப் பிழிந்து நசுக்க வேண்டும் என்று அவர் கன்னங்கள் புருபுருவென்று பரந்தன. பயமும் தினவுமாக வேகமாக நடந்தார்.

***

நன்றி:  ஐந்திணைப் பதிப்பகம் (‘மனிதாபிமானம்’ தொகுப்பு), தாஜ்
தேர்வும் தட்டச்சும்:
தாஜ் | satajdeen@gmail.com

Sep 18, 2011

போய்க் கொண்டிருப்பவள்-வண்ணதாசன்

கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜூடி வீடு வந்து விடும்.

மூன்றாவது தடவையோ, நான்காவது தடவையோ இந்த ஊருக்கு வருகிற சமயம் வந்து எட்டிப் பார்க்கிற எனக்கே எப்படியோ அருவருப்பாக இருக்க, அதென்னவோ ஒரு காம்பவுண்ட் சுவர் மாதிரி நொதித்துக் கிடக்கிற சாக்கடை பற்றிக் கவலையற்று இந்த வீட்டுக்காரர்கள் நvannskalyanji (2)டமாடுகிறார்கள். இரண்டு மூன்று முட்டைத் தோடு, இப்போதுதான் எறியப்பட்ட பளீர் வெள்ளையுடன் அந்தச் சாக்கடைக் கருப்பில் வினோதமாகக் கவனம் பெறுகிறது. ஒரு வதங்கிய பூச்சரம் வேறு. இப்படி அற்பமாகக் கவனம் சிதைக்கிற சிலவற்றைத் தாண்டித்தான் அன்னம் ஜூடி வீட்டிற்குப் போக வேண்டியதிருக்கிறது.

ஜூடியைப் பார்க்க முதலில் விருத்தா கூடத்தான் வந்தேன். விருத்தா அல்லாமல் இந்த அன்னம் ஜூடியை அறிந்திருக்க எனக்கு எந்த முகாந்திரமுண்டு. இன்னொரு ஸ்டூடியோவில் வேலை பார்த்துக் கொண்டு கல்யாண வீட்டுப் புகைப்படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்த விருத்தாவும் நானும் சிநேகிதர்களாகி விட்டது இந்த வாழ்க்கையின் எத்தனையோ விசித்திரமான உண்மைகளில் ஒன்று.

என் அலுவலக சகா ஒருவனின் கல்யாணத்திற்குப் புகைப்படம் எடுத்த இவன். ஏதோ ஓர் கோளாறால் வரவேற்புப் புகைப்படம் ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்ற சங்கடமான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்த தினத்தில்தான் அறிமுகமானேன். என் அந்த சகாவே அதிகம் கவலைப்படாதிருந்த போது, இனிமேல் மறுபடியும் திரும்ப வர முடியாத அந்த வரவேற்பு வேளைக்காக விருத்தாசலம்தான் திரும்பத் திரும்ப அதிகம் வருந்தினான்.

'இது மாதிரி நூறு சாயங்காலம் வரும்ங்க சார். ஆனால் கல்யாணம் ஆகிற சாரோட முகத்திலிருக்கிற, முழுப் பகலோட சந்தோஷம், களைச்சுப் போனாலும் துடைச்சுத் துடைச்சு மேலே வருகிற ஒரு குதூகலம், என்னண்ணு தெரியாத ஒரு பதட்டம், சில செயற்கையான அசைவு, கையை இப்படித் தூக்கறத்துக்குப் பதிலா கொஞ்சம் வீசி மடக்கித் தூக்குவீங்க. கடியாரத்திலே மணி பார்க்கிறதுகூட ஸ்டைலா இருக்கும். வழக்கமாச் சிரிக்கிறபோது கவுந்து சிரிச்சா, இன்றைக்குத் தலையைத் தூக்கி கனம்மாச் சிரிக்கிறது. பக்கத்திலே எட்டிப் பாக்கிற குட்டிப் பிள்ளைகளை வளைச்சு செல்லங் கொஞ்சுகிறது. இப்படியாப் பட்ட முகம் மறுநாள் வருமா. ரெண்டு நாள் கழிச்சா வருமா, வராதே. போச்சுங்களே ஸார். தப்பா போச்சே '--இப்படித்தான் பேச்சை என்னிடம் ஆரம்பித்தான். அவனுடைய தவிப்பும், அதை முழு ஈடுபாட்டோடு சொன்ன விதமும் எனக்குப் பிடித்துப் போயிற்று.

இதைத் தவிர அவனுக்குப் புத்தகங்கள் பற்றியோ, எனக்குக் காமெராக்களின் நுணுக்கம் பற்றியோ ஒருவர்க்கொருவர் பற்றிக் கொள்ளும் படியாக எந்தத் தூண்டுதலும் மத்தியில் இல்லை. அவரவர் விஷயங்களின் உன்னதமான சிகரங்களை நோக்கியே கவலையாவது எங்கள் இரண்டு பேருக்கும் அவரவர் இடமாவது தங்கியிருந்ததா என்று கேட்டால் கூடச் சொல்ல முடியாததுதான்.

விருத்தா ஒரு அற்புதமான கலைஞன் என்று எனக்குத் தோன்றச் செய்தது. அந்தப் புகைப்படம் ஒன்றைப் பார்த்ததும்தான், வில் வண்டிக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறது போன்ற அற்புதமான படம். பாதையோ, முன்புறம் பூட்டியிருக்கிற காளைகளோ, வண்டிக்காரனோ, விழுந்து தொலைவுக்கு இட்டுச் செல்கிற தெருவோ எதுவும் தெரியவில்லை. வில்வண்டி உட்பகுதியின் வளைந்த பிரம்பு வரிசைகள் கொஞ்சம் தெரிகிறது. அந்தப் பெண் வண்டிக்குள் இருக்கிறாள். இவ்வளவுதான். இதை அவன் எடுத்திருந்த விதத்தில் ஏதோ ஓர் மாயமிருந்தது. அந்த வண்டி நகர்வது தெரிந்தது. பாதையில் இருக்கிற சிறிய நொடியொன்றில் கடக் என்று சக்கரம் இறங்கி ஏறுகையில் வண்டியின் விட்டத்திலிருந்து தொங்குகிற கைபிடிக் குஞ்சலம் ஆடி மோதுவது தெரிகிறது. அந்தப் பெண், பார்க்கிற ஒவ்வொருவரிடமிருந்து விடைபெற்றுத் தவித்துக் கொண்டு செல்வது தெரிந்தது. தனிமையின் அடர்வுக்குள் இருந்தும், அவள் நம்பிக்கையுடன் இந்த வாழ்க்கையை நேசிக்கிறதே உகந்தது எனத் தீர்மானித்துக் கொண்டுவிட்ட பாவனை தெரிந்தது. இளகிப் பரவிக் கொண்டிருக்கிற பார்வையில் வண்டியிலிருந்து அப்படியே அவளைக் காப்பாற்றி அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டுவிடச் சொல்லும் ஒரு அபூர்வமிருந்தது. எப்படியெல்லாமோ கிளர்ச்சியூட்டிக் கடைசியில் அணைத்துக்கொள்ள வேண்டும் எனக்குப் பட்டதை வெளிக்காட்ட முடியாத ஒரு தனித்த பரவசத்தில் நான் அமைதியாக இருந்தேன்.

அவள்தான் அன்னம் ஜூடி. இந்தப் பெயரை வெகுகாலத்திற்குப் பின்தான் விருத்தா எனக்குச் சொன்னான் அவளுக்கும் மாடியில் இருந்த அவனுக்கும் இருந்திருந்த புரிபடாத உணர்வுகள் காதல்தான் என்பதை நான்தான் ஒரு நேரத்தில் உடைத்துச் சொன்னேன். நிறையப் புத்தகம் படித்த பாவத்தில், நான் அறிந்துவைத்திருந்த கதைக்கான சூத்திரங்களையும் வாய்ப்பாடுகளையும் போட்டு பார்க்கையில் எனக்கு வந்த விடை அதுவாக இருந்ததால் அப்போது அப்படிச் சொல்லிட, சொன்ன நேரத்திலிருந்து, ஆமாம் அப்படித்தான் என்று அவர்களும் ஒப்புக் கொண்டுவிடப் பெரிய சிக்கலாகி விட்டது எல்லாம்.

அன்னம் ஜூடிக்கும் விருத்தாவுக்கும் இடையில் நானும் இது பற்றிப் பேச நேர்கிற சந்தர்ப்பங்களை விருத்தாவே உண்டாக்கித்தர, அவளைப் பார்த்து விட்டுப் போன பையனை நிராகரித்து அனுப்பி வைக்கத் தோதுவான கற்பனை வாசல்களை நாங்கள் மூன்றுபேரும் ஒவ்வொரு பக்கமும் திறந்து திறந்துவைத்துப் பார்த்தோம். நடப்பில் ஒன்றும் பிரயோஜனமில்லை. அறிக்கை வாசித்ததின்படி, அந்தக் குருடர் பள்ளிக்கூடச் சர்ச்சில், முற்றின சோளக் கதிர்கள் குளிர்ந்த காற்றில் அசைந்து ஆட, இதமான வெயிலில், புழக்கத்தில் மேன்மேலும் வழவழப்பான மரப்பெஞ்சு ஒன்றில் நானும் விருத்தாவும் அமர்ந்து, கையில் கொடுக்கப்பட்ட அச்சடித்த சிறுபுத்தகங்களுடன் பாட்டுப்பாடிச் சேர்ந்து கொள்ள, அன்னம் ஏதுமறியாத ஒரு வெள்ளை இறகுபோலக் கனமற்று திருமணச் சடங்குகளில் மிதந்திருந்தாள்.

முற்றிலுமாகவே அவள் அந்த தினத்துக்குள் பணிவன்புடைய ஒரு மனைவியாக மாறி எங்களையெல்லாம்கூட அறிமுகப்படுத்தி வைத்தாள். கனவான்களுக்கு மத்தியில் கனவான்களாக நடக்கிற மரபை ஒட்டி, நான் அன்னம் ஜூடி என்றுகூட எழுதாமல் திருமதி, சந்திரன் தேவநேசன் என்று ஜாக்கிரதையாகப் புத்தகத்தில் எழுதிக் கொடுத்தேன். விருத்தா புகைப்படக்காரன் என்பதால் என்னைவிடப் பிரகாசிக்க முடிந்தது. அவர்களை வெவ்வேறு தோற்றங்களில் மிகச் சலுகையான நெருக்கத்தில் எடுத்துக் கொண்டிருந்தான்.

புகைப்படம் எடுக்கும்போது ஒவ்வொரு தடவையும் அவன் வேறு மனிதனாகி விடுகிறான். நான் ஒருவன் நிற்கிறேன் என்றோ அவள் அன்னம் என்றோ, அவர் இன்னார் என்றோ நினைக்கிறதை ஒழித்து வெவ்வேறு பரிமாணங்களுக்கு அந்த புகைப்படத்தை இட்டுச் செல்கிற முழுக் கவனத்துடன் இயங்குவான். புன்னகைக்க வைக்கிற கோணங்கித் தனங்களைப் பிறர்போல பிரயோகிக்காமல் நெற்றி இறுகி இறுகி புருவமத்தியில் ஒரு பள்ளம் விழுந்து கொண்டே போக, எதிரிலிருப்பவர்களை அவர்களின் பாவனைகளிலிருந்து உதறி எடுத்த ஒரு சட்டென்ற நொடியில் பிடிப்பான். சேலை மடிப்புகளை நீவிவிடுவது, காலணி மேல் மடங்குகிற கால்சட்டைகளை ஒழுங்கு செய்வது போன்ற எதுவுமின்றி ஆடைகள் எல்லாம் இடையூரு அல்ல ஒரு நல்ல புகைப்படத்திற்கு என்ற வகையில் இயல்பின் சுபாவமான அவிழலில் எல்லாம் அதனதன் இடத்திலிருக்க, ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு ஜீவனை வருத்தியிருப்பான்.

ஆல்பத்திற்கு அல்லாமல் அவனுடைய சொந்தத் தேர்விற்கென்று வைத்திருக்கும் புகைப்படங்களில் ஜூடியின் அந்தக் குருடர் பள்ளி சோளக்கதிர் பக்கம் நின்று காகித மாலையணிந்த வாடகைக் காரை ஒட்டிய புகைப்படமும் இருந்தது.

அது அவள் நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை முழுவதுமாக அள்ளி மறுபடி மேலே வீசிக்கொள்கிற நேரத்தின் படம். ஒரு கை தோளுக்குச் சென்று கொண்டிருக்க, ரவிக்கைக்கு முழுக் கனத்தைக் கொடுத்திருந்த மார்பும், தோளின் செழுமையும் பக்கவாட்டில் தெரிய, புடவை ஒரு சந்தோஷமான பாய்மரம் போலப் பின்பக்கம் விசிறி அந்தரத்தில் இருக்க, அவள் கண்கள் மூடியிருக்கும். வாய்கொள்ளாத சிரிப்பில் கன்னத்து ரோஸ் பவுடர் பூச்சுத் திரண்டு மேடிட்டு ஓரிரண்டு ஜிகினா மினுங்கும்.

விருத்தா அதைக் காட்டுகையில் சொன்னான். 'கண்ணை மூடியிருக்கிறது எவ்வளவு வாய்ப்பா இருக்கு பாரு '. 'வாய்ப்பாக ' என்கிற அந்த வார்த்தையின் சுகத்தில் அமிழ்ந்திருக்கையில், மூடின கண்களை எல்லாம் தாண்டி, மறுபடியும் அந்தப் புகைப்படம் எனக்கு அணைத்துக் கொள்வதையே யோசிக்க வைத்தது. இப்படித் தோன்றுவதும். அப்புறம் அவரவர் பாடுகளைப் பார்க்கத் தீராது அலைவதில் எல்லாம் சரியாகப் போவதும் நியமமாகிப் போயிற்று.

ஆபீஸ் வேலையாக நாடாக்கட்டின தாட்களையும் அட்டையையும் இந்தப் பட்டணத்து மேஜைகளில் நகர்த்தி, இரண்டு மூன்று பச்சைக் கையெழுத்தை வாங்கி முத்திரை குத்தி மறுபடி கட்டிவைத்து இன்னொரு அலுவலக ஊழியரின் சொசைட்டி லோனுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, எலெக்ட்ரிக் ட்ரெய்னில் தொங்கின தொங்கலுக்கு எளிமையான ஆசுவாசமாகப் பன்னீர் சோடா குடித்துக் கொண்டிருக்கிறவரை இன்றைக்கு அன்னம் ஜூடி பற்றி எந்த நினைப்புமில்லாமலே இருந்தது.

அப்படிக் குடித்துக் கொண்டிருந்தபோது தான் 'ஹலோ... ' என்று நான் கல்யாணத்துக்குப் பரிசளித்த புத்தகத்துப் பெயரையும் என்பெயரே போலச் சொல்லிக் கூப்பிடுகிற தேவநேசனின் குரல் கேட்டது. லட்சியங்களின் உன்னத விளிம்புகளை ஒரு எவ்வு எவ்விப் பிடிக்கச் சொல்கிறதுபோல ஒரு புத்தகத்துக்கு மிகப் பொருத்தமாக இருந்த அந்தப் பெயரை, என் பெயராகச் சொல்லி கூப்பிடும் பொழுது ஒரு கிண்டல் தானாகவே கிடைத்தது. இப்படி என் பெயரை விட்டுவிட்டு நான் பரிசளித்த புத்தகத்தின் பெயரையே சொல்லிக் கூப்பிடுகிற இவருடைய வழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்ள ?

இந்தக் கிண்டல் போதாமல் ஏற்கனவே இவரைப் பற்றி, விருத்தா கூறியிருக்கிற விஷயங்களாலும் இவர் மீது கோபம் அடைந்திருக்கிற நான் 'அடடே, வாங்க ' என்று அகலமாகச் சிரித்ததுதான் கொடுமையான விஷயம். அலுவலகத்தில் வேலை பார்க்க எவ்வளவு கேவலமான சாயல் எல்லாம் வந்து சேர்ந்து விடுகிறது.

பின்னே இவன் என்ன மனுஷன் ?

அன்னம் ஜூடிமாதிரி ஒரு பெண் கிடைத்திருக்க, இவனோ எனில் வெவ்வேறு வக்கிரங்களுடன் திரிகிறானாம். கல்யாணம் ஆன ஆரம்ப தினங்கள் என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டிருந்த அன்னத்துக்கு, அவனுடைய ஒவ்வொரு காரியமும் தாங்க முடியாத இம்சையாகி விட்டதாம். வேளை பாராமல், நாள் பாராமல் இவளைத் தின்று தீர்ப்பது போக, இரண்டொரு சிறுபையன்களுடனேயே திரிவதன் அசிங்கம்தான் அன்னத்துக்கே தாங்க முடியாதிருக்கிறதாம்.

'மடியிலே கிடந்துக் கிட்டு அப்படியே பச்சைப் பிள்ளை மாதிரி அழுதா. சும்மா தட்டிக் கொடுத்துச் சின்னப் பிள்ளையக் கண்ணைத் துடைச்சு விடுகிறது மாதிரித்தான் இருந்தது முதல்லே '-விருத்தா அன்றைக்கு அதற்கு பிறகு சொல்லுவதை இப்படித்தான் ஆரம்பித்தான். கலர் பிரிண்ட் போட என்று வருகிற போதெல்லாம் விருத்தா அன்னத்தைப் பார்ப்பது என்றாயிற்று. மாற்றியும் சொல்கிற அளவுக்கு இருக்கும் என்றே எனக்குப் பட்டது. என் இஷ்டத்திற்குப் பூர்த்தி செய்து கொள்ளும்படியாக அவன் இடையிடையில் காலியிடங்களைத் தந்தே வந்தான்.

'அந்த ஆளை, அவனோட தீராத இம்சையைப் பொறுக்காமல் கூனிக் குறுகிக் கட்டையாய்க் கிடந்து கிடந்தே இந்த ரெண்டு மூணு வருஷமும் கழிஞ்சு போச்சு. கல்லைப் புரட்டிப் போட்டு வாசலை அடைச்சது மாதிரித்தான் 'னு கூட வச்சுக்கலாம். நிச்சயமாச் சொல்வேன். நாளைக்கு ஒண்ணு பொறந்துச்சுன்னா, அதுக்கும் உனக்கும்தான் பேச்சு. '--அன்னம் தன் அடிவயிற்றில் கையை வைத்துக் கொண்டு விருத்தாவிடம் சொன்னதெல்லாம், விருத்தா திருப்பி என்னிடம் சொன்னான்.

அங்கங்கே நட்டுச் செல்வதற்கு வசதியாகப் புத்தகம் படிக்கிறவன் கணிசமாகத் தன் கையில் திசைகாட்டிகள் வைத்திருப்பான் என்று விருத்தாவிடம் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஒழுங்காகத் தாலிகட்டிக் குடித்தனம் நடத்தி நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருக்கிறவனான எனக்கு விருத்தாவிற்குச் சொல்லப் புதிய புதிய யோசனைகள் தோன்றிற்று.

'நான் ஏன் அன்னத்தைக் கட்டிக் கொள்ளக்கூடாது ? ' என்று லேசாகக் கேட்பான் எனில், விருத்தாவிடம் அழுத்தம் திருத்தமாக இவ்வளவு நடந்ததற்கும் பிறகு, இப்படி நடந்ததற்கான பொறுப்பேற்காவிடில் உனக்கும் அந்தத் தேவநேசனுக்கும் வித்தியாசம் இருக்காது என்றே சொல்ல முற்பட்டேன். குழந்தை பெறுவதற்கு முன்பு அப்படிச் செய்வதா, அல்லது பெற்ற பின்பா என்று அதிலுள்ள சட்டப் பிரச்சனைகள் பற்றி விருத்தா கேட்டதும், இதை ஏன் அவளிடமே கேட்கக்கூடாது என இரண்டு பேருமாக நேரே புறப்பட்டோம்.

அப்போது தான் அன்னம் ஜூடி வீடிருக்கிற இந்த இடத்திற்கு வந்தது. சாக்கடையைத் தாண்டி உள்ளே போனதும் அப்போது தான்.

விருத்தாவுடன் இந்த வீட்டுக்குள் நுழைந்த போது அன்னம் கிணற்றிலிருந்து இன்னோர் பெண்ணுடன் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாள். சாக்கடையா, உறை இறக்கிய கிணற்றிலிருந்து வாரிக் கொட்டியிருந்த சேற்று வாடையா என்றில்லாத ஒரு தண்ணீர்க் கரை வாடை அடித்தது. பிளாஸ்டிக் குடம் ஒன்றை இறக்கி வைத்துவிட்டு எங்களை வரவேற்றாள்.

இது ஜூடியல்ல. வேறு யாரோ என்றிருந்தது எனக்கு; நாலு பிள்ளை பெற்றவள் போலிருந்தாள். மினுமினுப்பனைத்தும் உதிர்ந்து ரசமற்று உலர்ந்திருந்தது உடம்பு. மிகவும் அசிரத்தையாகச் சுற்றப்பட்டிருந்த சேலையுடன் குனிந்து இரண்டு மோடாக்களை அவள் இட்டபோது புறங்கழுத்திலும் மேல் முதுகிலும் பொரிப் பொரியாக வெடித்திருந்தது. ஒரு உயரமான இரும்பு ட்ரங்குப் பெட்டியில் அவள் எப்படியோ ஒரு வசத்தில் உட்கார முற்பட்டபோது வயிற்றின் பூச்சு மேடிட்டது.

விருத்தாவும் அவளும் பேசினார்கள். இவன் என்னைப் பற்றி அவள் எதுவும் கேளாமலே, தற்செயலாக நான் வந்ததாகச் சொல்ல, பதிலுக்கு அவள் அதைவிட முக்கியமற்றதாக இன்னொன்று சொல்ல, எனக்கு மட்டும் இவளா, இவளையா என்று வட்டம் சுழன்று சுழன்று நின்றது. கொடிகள் முழுவதும் துணிகளும் சட்டைகளுமாய் அடைந்து தொங்க, இந்தப் புழுங்கிய இரண்டு அறைகளே உள்ள வீட்டில் அன்னத்தைக் கொண்டு வந்து ஆகாதது போகாததை எடுத்துப் பரண்மேல் வீசுகிறது மாதிரி வாழ்க்கை வீசியிருப்பதிப் பார்க்கத் துயரமாயிற்று.

நானும் பேசினேன். அவள் எதையோ குடிக்கக் கொடுத்து உபசரித்தாள். குடித்தோம். எது பற்றியும் பேச ஒன்றுமில்லை என்பது போலவும், அந்தச் சாக்கடையை இரண்டு தடவை தாண்டுவதற்காக மட்டும் ஊரிலிருந்து புறப்பட்டு வந்தது போலவும், ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டோம்.

இரண்டு பையன்கள் பாடப் புஸ்தகங்களுடன் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் 'அக்கா, யாரோ வந்திருக்காங்க ' என்றான்.

கலர் தாள்களில் ஏதேதோ வெட்டி ஒட்டிக் கொண்டிருந்த கையுடன் ஜூடி நிமிர்ந்தாள். 'வாங்கண்ணா ' என்றாள். இப்போது இரண்டு முறையாகத்தான் இப்படிக் கூப்பிடுகிறாள். கண்களின் புரண்டு திரும்பிய விரியலில் சிறு பிரகாசம் ஏறியது. உட்கார்ந்திருந்த இடத்தின் ஜன்னல்கள் இரண்டும் மூடியிருக்க, சமையலறைப் பக்கத்திலிருந்து வந்த வெளுச்சம் மட்டுமிருந்து, எங்கே உட்கார்வது என யோசித்துக் கொண்டும், ஜூடியைப் பார்த்துக் கொண்டுமிருந்தேன்.

பவுடர் டப்பாக்களைப் பிரித்து அடித்த தகர முற்றத்தில் கீரையும், பாதி அளவு பின்னி வரி வரியாக நைலான் ஒயர்கள் முடியக் காத்திருக்கிற நிலையில் ஒரு மஞ்சட் பையும் இருந்தன. அதை இடம் மாற்றிக் காலியாக்கினதும் என்பக்கம் உட்கார நகர்த்தினாள்.

'அப்புறம் சொல்லித் தாரேன் ' என்று சொன்னதும் பையன்கள் சரி சொல்லிக் கொண்டு புத்தகங்களை ஒழுங்கு செய்தார்கள். கீழ்த்தாடையும் கழுத்தும் தீக்காயம் ஏற்பட்டது போல வழுவழுவென்று கையகலம் சுருங்கி ஒட்டியிருக்கிற பையன் என்னைப் பார்த்த படியே போனான்.

'ட்யூஷனா ' என்றபடி இன்னும் உட்காராமலே நான் ஜூடியைப் பார்த்தேன். அவள் ஒரு மூலையிலிருந்த டேபிள் ஃபேனைச் சிரத்தையுடன் தூக்கி வைத்து இணைப்புக் கொடுத்துக் கொண்டே 'பொழுது போகணுமல்லவா ' என்றாள். எந்த அதிகப்படியான கனமுமல்லாத இந்த சாதாரண பதிலைத் தொடர்ந்து அவள் அழுவாள் என எதிர்பார்க்கவில்லை. மிக மெல்லிய ஒரு இழையில் அவளின் கஷ்டம் முழுவதும் முட்டிக் கொண்டு நின்றது போலவும், அந்தப் பதிலின் சிறு அதிர்வே, அது உடைந்து பெருகப் போதுமானதென்றும் தோற்றம் தர அப்படியே மடங்கி உட்கார்ந்து அழுதாள்.

இந்த சூழ்நிலைக்கெல்லாம் நான் தயாராகவே வரவில்லை. காலையில் பன்னீர் சோடாக் குடிக்கும் நேரத்தில் தேவநேசன் என்னைப் பார்க்கும் பொழுது, 'அதே வீட்டிலதான் இருக்கோம். இங்கேயிருந்து தான் பாசஞ்சர்ல போயிட்டு வந்திட்டு இருக்கேன். மட்டன் எடுத்து வைக்கிறேன். காலையிலே வீட்டுக்கு வாங்க... ' என்று எலெக்ட்ரிக் ட்ரெயினைப் பிடிக்கப் போகிற அந்த அவசரத்திலும் நான் பரிசளித்த அந்தப் புத்தகப் பெயரையே என்னுடையதாகச் சொல்லிக்கொண்டு, முகத்தைப் பின்பக்கமாகப் பொருத்திக் கொண்ட ஒரு உருவத்துடன் நகர்ந்தார். 'நாளைக்குக் காலையில் இல்லை உடனடியாக அப்போதே ' என்று தீர்மானித்துக் கொண்டு, ஒரு மிகத் தனிமையான ஜூடியுடன் சற்று நேரம் பேசுகிற திருப்திக்காக வந்த இடத்தில் இந்த அழுகை ஒரு வினோதமான இக்கட்டில் நிறுத்தியது.

'ரெண்டு வருஷமா எல்லாத்தையும் மறந்துட்டு அவங்க அவங்கபாடு அவங்களுக்குண்ணு இருந்தோமில்லையா. இப்போ எதுக்கு இந்தமாதிரி ஒரு போட்டோவைப் பத்திரிகைக்கு அனுப்பி எல்லாரு முன்னாலியும் என் மானத்தை வாங்கணும். '

ஜூடி காலை மடக்கிய நிலையில், கழுத்தை திருப்பி இடது தோளில் அடிக்கடி கண்ணீரைத் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்டு குழறிக் குழறிச் சொல்கிற எதுவும் எனக்குப் புரியவில்லை.

'அவங்க ஸ்டுடியோ வைக்கிறது, முன்னுக்கு வர்றது, கல்யாணம் கட்டுறது, புள்ளையப் பெத்துக்கறது. இதெல்லாம் சந்தோஷம்தான். அதுக்காக இப்படி ஒரு போட்டோவைத் தேடிப் புடுச்சுப் பத்திரிகையிலே போட்டுக் கேவலப்படுத்த வேண்டாம். நான் கட்டின மனுஷன்கிட்டப் படுகிற அசிங்கம் பத்தாதுண்ணு, இப்ப ஊர் உலகம் முழுதும் படும்படி ஆயிட்டுது. '

இவளுடைய சத்தமான அழுகையைக் கேட்டு, வெளியிலிருந்து யாரோ வாசல் பக்கம் நிழலாக உள்ளே நகர்ந்து வருவது மாதிரிப் பட்டது. கழுத்தில் தீக்காயம் பட்ட பையன் மிகத் தயங்கி வந்து அழுதுகொண்டிருக்கிற ஜூடியைத் திகைத்தபடி பார்த்துக் கொண்டே அவன் விட்டுச் சென்றிருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு போனான்.

மோசமாக ஒத்துழைக்கிற, அந்த டேபிள் ஃபேனின் இரைச்சலும் அவள் அழுகையின் காரணம் புரியாமையுமாக நான் அந்த இடத்தில் அசைவற்ற ஒரு சிக்கலாகக் கிடந்தேன்.

'இவ்வளவுதானா இதுக்கு மேற்கொண்டு இன்னும் ஏதாவது எடுத்திருக்கானா அவன் 'னு கேட்டுக்கிட்டு ஒரு மிதி. அன்னிக்கு நான் பட்டிருக்கிற அடிக்கும் உதைக்கும் கூட நான் போய்ச் சேரலைண்ணா அது இந்தப் பயல் ஜீவா மேலே இருக்கிற அக்கறையால் தான். வேற எதுக்காக இல்லாட்டியும் ஜீவாவுக்காகச் சுட்டியாவது நான் இருக்கணும் '

அன்னம் உட்கார்ந்தபடியே சற்றுச் சாய்ந்து கையால் தையல் மெஷினுக்கும் அதற்கடுத்த தோல்பெட்டி ஒன்றின் சந்திற்கும் இடையில் மடித்துச் செருகியிருந்த அந்தப் பத்திரிகையை உருவிப் போட்டாள். அழுகையும் அழுகைக்கு அனுசரணையுமான அசைவுகளுமாகவே இயங்குகிற அவளுடைய இறுகின மொத்த உருவத்திலும் கங்குபோல் ஒரு மினுக்கம் கனிந்து விசிறியது.

'என் படத்தைப் போடணும்னு தோணினா இதையா போடணும் '--அன்னம் அந்த ஆங்கிலப் பத்திரிகையை என் முன்னால் போட்டாள்.

மிகப் பிரபலமான வாரப் பத்திரிகையான அதுவும் ஒரு புகைப்பட சுருள் தயாரிக்கிற நிறுவனமும் இணைந்து நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறதாக வெளியாகியிருக்கிற இந்தப் படம் பற்றிய விபரம் இப்போதுதான் முதன்முதலாக எனக்குத் தெரிகிறது. வாரப் பத்திரிகைகளில் அடைந்து கிடக்கிற நூலாம் படைகளில் என்னுடைய தேர்ந்த வாசகச் சிறகுகள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று விலகி லைப்ரரியின் அச்சாணித் தட்டுகளின் தூசியில் மூச்சு முட்டிக் கொண்டிருக்கிற எனக்கு இப்படி நேர்ந்ததில் ஆச்சர்யமில்லை.

பெரிதுபடுத்தப்பட்ட புகைப்பட அளவாலும், அற்புதமான அச்சாலும் அருமையாக இருந்தது புகைப்படம்.

அன்னம் ஜூடி நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை அள்ளி வீசுகிற படம். ரவிக்கைக்கு அழுத்தமாகக் கனமூட்டியிருக்கிற மார்பு. தோளின் பக்கவாட்டுச்செழுமை, வாய்க்கொள்ளாத சிரிப்பு, மூடிய அந்தக் கண்கள்.

'பழகின பழக்கம். குத்திக் குத்தி எடுத்தாலும் உசிரைப் பிடிச்சுக்கிட்டு இந்த ஜீவாப் பயலுக்காக நான் இருக்கிற இருப்பு. இதெல்லாம் ஞாபகமில்லை. இந்த உடம்பு ஒண்ணுதான் ஞாபகம் இருக்கு போல '--கிட்டதட்ட விருத்தா என்பக்கத்தில் தலை கவிழ்ந்து இந்நேரம் நிற்பதான பாவனையுடனேயே ஜூடி பேசினாள்.

நான் இதையெல்லாம் அவனிடம் சொல்வேன்; சொல்ல வேண்டும் என்ற குரலில் கொஞ்சம் கொஞ்சமாக இதைப் பகிர்ந்து கொண்டே வந்தாள். என்னிடம் தேறுதலை எதிர்பார்க்கிறதான அடையாளமில்லை. அவளுடைய கணவனைப் பற்றிய மிகையான அவதூறுகளை எடுத்து என் முன்னே விசிறி. 'பார், நான் எவ்வளவுக்கு மத்தியில் இருக்கிறேன் ' என்ற இரக்கம் சம்பாதிக்கவுமில்லை. விருத்தாவுக்கும் அவளுக்கும் ஜீவாவுக்கும் என்று நேர்ந்திருக்கிற ஒரு துல்லிய உறவின் மீது, பின்னப்படுத்துவது போலப் பதிகிற வேற்று ரேகைகளைத் துடைத்துத் துடைத்து அப்புறப்படுத்துகிற ஒரு காரியமாகவே இருந்தது.

இத்தனைக்கிடையிலும், ஒரே ஒரு மிகச் சிறு கணம், ரொம்பவும் குலைந்துகிடக்கிற அவளைப் பார்க்கும் போது அவளை அப்படியே சற்று ஆறுதலாக அணைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது எனக்கு. அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் பட்டது. உடனேயே கேட்டேன்

'ஜீவா எங்கே, ஸ்கூலுக்கா ? '

அன்னம் சட்டென்று எழுந்தாள். சேலையால் முகத்தை மிக அழுத்தி துடைத்துக் கொண்டாள். தலையை அவசரமாக ஒழுங்கு செய்தாள்.

'அவனுக்குத்தான் சாப்பாடு கொண்டு போகணும். பேசிக்கிட்டே இருந்ததில் நேரமாயிட்டுது. பெல் அடிச்சிருவாங்க '--போய் அடுக்களையிலிருந்து சின்னப் பாத்திரத்தில் எதையோ மாற்றினாள். ஒரு ப்ளாஸ்டிக் குடுவையில் தண்ணீர் ஊற்றித் திருகினாள். இரண்டு பிஸ்கட்டுகளை ஒரு பாலிதீன் பையில் மடித்து எல்லாவற்றையும் ஒரு வயர் பையில் வைத்துவிட்டு குடையையும் எடுத்துக் கொண்டு 'போவோமா ' என்றாள்.

முழுமையான இன்னொரு பாத்திரமாகத் தன்னை ஒன்றிணைத்துக் கொண்டு அவள், ஃபேனை நிறுத்தி, 'பூனைச் சனியன் எல்லாவற்றையும் இழுத்து இழுத்து வாயை வைக்கும் ' என்று சொன்னபடி ஜன்னல் கதவு அடைத்து செருப்புப் போட்டு கதவை சாத்திப் பூட்டிக் கையால் இழுத்துக் கொண்டு வேகமாக முன்னால் சாக்கடைப் பக்கம் நின்றுகொண்டிருந்த என்னிடம் வந்து மறுபடியும் சிறு தெளிவுடன் 'போகலாமா ' என்று கேட்டாள்.

போகலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க் கொண்டே இருப்பவள் என்று அவளைப்பற்றி எனக்குத் தோன்றிற்று.

*******

நன்றி: திண்ணை

Sep 15, 2011

எதிரி – அ. முத்துலிங்கம்

கனகாலமாக தனக்கு ஓர் எதிரி இருப்பது அவருக்குத் தெரியாது. இவ்வளவு கால முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் ஒரு நம்பகமான எதிரி வாய்த்திருந்தது. அந்த எதிரியும் ஒரு பாம்பாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஆறுமாத காலமாக இது நடந்து வந்திருக்கிறது. அவருக்குத் தெரியாமல். ஒருamuthu நாள் மாலை கோழிகளை எல்லாம் அடைத்து மூடும் சமயத்தில் தற்செயலாகப் பார்த்தார். இரண்டு முட்டைகள் கேட்பாரற்றுக்கிடந்தன. நாளை காலை பார்க்கலாம் என்று கூட்டை அடைத்து மூடிவிட்டார் ம்வாங்கி.

மறுநாள் பார்த்தால் முட்டைகளைக் காணவில்லை. எமிலியிடம் கேட்டுப்பார்த்தார். அவள் அந்தப் பக்கமே போகவில்லை என்று சொல்லிவிட்டாள். பக்கத்து குடிசைகளில் விசாரித்தார். அவர்களுக்கும் தெரியவில்லை.

நாலு சந்தைநாட்களுக்குப் பிறகு இன்னொருமுறை இது நடந்தது. அப்போது சாடையாக மழைபெய்து தரை ஈரமாகியிருந்தது. பாம்பு தரையில் ஊர்ந்துபோன தடம் அப்படியே தெரிந்தது. அந்தக் கணமே இது பாம்பின் வேலையென ம்வாங்கி கண்டுகொண்டார். அதை எப்பிடியாவது கொன்றுவிடவேண்டும் என்று தீர்மானித்தார்.

பாம்பைப் பிடிப்பதோ அடிப்பதோ அவருக்கு உகந்த காரியமல்ல. கோழி வளர்ப்பதுகூட அவர் தொழில் அல்ல. எல்லாம் தற்செயலாக நடந்ததுதான்.

அவர் மெத்தப் படித்த படிப்பாளி. நைரோபியிலிருந்து முப்பது மைல் தூரத்தில் இருக்கும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தவர். அந்த கர்வம் அவருக்கு இருந்தது. சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷன். அவருடைய படிப்புக்கும் அறிவுக்கும் இது ஏற்ற தொழில் அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

அந்த சேர்டிபிக்கட்டைத் தூக்கிக்கொண்டு அவர் எத்தனையோ கம்பனிகள் ஏறி இறங்கினார். தன் தகுதிகளை கொஞ்சம் மிகைப்படவே கூறினார். இருந்தாலும் குதிரை பாயவில்லை. அவருடைய பெருமையை யாரும் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. கடைசியில் அவருக்குக் கிடைத்தது என்னவோ பால் டிப்போவில் படியளக்கும் வேலைதான்.

சிலகாலம் இந்த வேலை சிரமமில்லாமல் போய்க்கொண்டிருந்தது. அதிகாலையிலிருந்தே வேலை தொடங்கிவிடும். ஒரு திறப்பு திருப்பும் நேரம்கூட உட்காரமுடியாது. நின்றுகொண்டே வேலை செய்யவேண்டும்.

ஆறுமணியிலிருந்து வருகின்ற பாலையெல்லாம் நிறுத்து நிறுத்து பெரும் அண்டாக்களில் ஊற்றுவார். கிழவர்கள், குமரிகள், சிறுவர்கள் என்று வரிசை நீண்டுபோய் இருக்கும். அதுபோதாதென்று மறுபக்கத்தில் பால் வாங்குவதற்காக இன்னொரு வரிசை நிற்கும். இரண்டு வரிசைகளையும் ஒரே சமயத்தில் சமாளிக்க வேண்டும்.

இந்த சமயத்தில்தான் சீனியர் சேர்டிபிக்கர் செகண்ட் டிவிஷன் மூளையைப் பாவிக்கும் சந்தர்ப்பம் ம்வாங்கிக்குக் கிடைத்தது.

அதற்கு காரணம் எமிலி ஒகினாவாதான். அதிகாலையில் அவள் வந்துவிடுவாள். பால் வாங்குவதற்காக கையிலே ஒரு கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு, உயரமாகவும் அடர்த்தியாகவும் இருப்பாள். அவள் அசைந்துவரும் காட்சி இவர் மனசை என்னவோ செய்யும்.

அவள் தலைமயிரை எப்பிடிப் போட்டாலும் ஒரு கவர்ச்சிதான். கலைத்துவிட்டாலும், விரித்துவிட்டாலும், பின்னிவிட்டாலும், முன்னேவிட்டாலும், கோபுரம் செய்தாலும், கோத்துக்கட்டினாலும் எல்லாவற்றிலும் ஓர் அழகு இருக்கும்.

களவு செய்யத் தூண்டியதும் அந்த அழகுதான்.

ம்வாங்கியை நேர்மையானவர் என்று யாரும் புகழ முடியாது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே கால்பந்து விளையாடி உடம்பை வாட்டசாட்டமாக வைத்திருந்தார். கோல் போடுவதில் மன்னர். கால்களால் போட்ட கோலுக்கு சமமாக கைகளாலும் போட்டிருக்கிறார்.

எமிலி வந்த நேரங்களில் ஒரு லிட்டருக்கு இரண்டு லிட்டர் பால் தாராளமாக வழங்கினார். ஊரார் வீட்டுப் பாலை இப்படி வாரிவாரி வழங்கி ஒருநாள் பிடிபட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார். அப்போதுதான் அவருக்குக் கோழிப்பண்ணை வைக்கும் எண்ணம் உதித்தது.

கோழிகளைப் பற்றி அவருக்கு முந்திபிந்தித் தெரியாது. கோழிகளும் அவர் பெருமையில் மெய்சிலிர்த்துப்போய் இருக்கவில்லை. சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷனுக்கு ஏற்ற தொழில் இல்லை என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. பிறரிடம் கைகட்டி நிற்காமல் சுதந்திரமாக இருக்கலாம். சொந்த சம்பாத்தியத்தில் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதெல்லாம் காரணங்கள்.

ஆனால் உண்மையான காரணம் வேறு. இவர் கோழிப்பண்ணை வைத்து கிராமத்திலேயே தங்கிவிட்டால் எமிலியும் கூடவே வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தாள். அந்த உற்சாகத்தில் அவர் கண்கள் கொஞ்சம் மூடிவிட்டது என்னவோ உண்மைதான்.

அவரிடம் வேலை பார்த்த கிழவன் இஞ்சரேகோவுக்கு கோழி வளர்ப்புப் பற்றி கொஞ்சம் தெரியும். இவரும் கூடமாட வேலை செய்தார். தீனி வைத்தார். தண்ணி காட்டினார். மரத்தூளை சுமந்து வந்து பரப்பினார். பெருக்கினார். உடல் முறியப் பாடுபட்டார். ஆற்றுக்கு அந்தக்கரை கள்ளத் தொடர்பு வைத்தவன் நீச்சல் பழகித்தானே ஆகவேண்டும்.

கடந்த ஆறு மாத காலமாக எல்லாம் சுமூகமாகவே போய்க்கொண்டிருந்தது, அந்தப் பாம்பு வரும்வரை.

அது மிகவும் தந்திரம் வாய்ந்த பாம்பு. எவ்வளவுதான் கம்பிவலை ஓட்டைகளைச் சரிபண்ணி வைத்தாலும் சுலபமாக உள்ளே புகுந்துவிடுகிறது. எப்படி வருகிறது எப்படிப் போகிறது என்பது மர்மமாகவே இருந்தது.

ம்வாங்கியும் கிழவனும் விழுந்துவிழுந்து உழைத்தார்கள். பாம்புக்குத் தீனி போடுவதற்காக. அந்தப் பாம்பும் மினுமினுவென்று ஒருவர் பொறாமைப்படும் வழவழப்போடு வளர்ந்துகொண்டு வந்தது. அடிக்கடி முட்டைகளையும், அவ்வப்போது உடம்பில் புரதச் சத்து குறைவது போன்று தோன்றும் சமயங்களில், பதமான கோழிக்குஞ்சுகளையும் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொண்டிருந்தது.

தண்ணீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பீவர் (Fever) மரம் மஞ்சளாக, வழவழப்பாக, பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும். அதன் வலுவான கொம்புகளில் ஒன்றை ம்வாங்கி வெட்டி வைத்துக்கொண்டார். அது கெட்டியாகவும், கைக்கு லாகவமாகவும், வீசுவதற்கு ஏதுவாகவும், வளைந்துகொடுக்கும் தன்மையுடையதாகவும் இருந்தது. பாம்பை வெல்லுவதற்கு இதைவிடத் தகுந்த ஆயுதம் இல்லையென்பது அவருக்குத் தெரியும்.

இந்த ஆயுதம் எப்பவும் அவர் படுக்கையின் அருகிலேயே இருந்தது. அடிக்கடி அதை எடுத்து, காற்றிலே வீசிப் பயிற்சி பண்ணிக் கொள்வார். அதைத் தடவுவார். அதற்கு ஆறுதல் சொல்வார். இப்படியாகச் சமர் புரிவதற்கு எப்பவும் ஒரு தயார் நிலையில் இருந்தார்.

அந்த வழவழப்பான தடியை அவர் இப்படி வெறும் ஆராதனை செய்ததில் எமிலிக்கு உடன்பாடு இருந்ததாகச் சொல்லமுடியாது. அவளுடைய இரண்டு வயசுக் குழந்தை அடிக்கடி அவள் கண்ணிலே படாமல் வெளியே போய் விளையாடத் தொடங்கியிருந்தது. எங்கே அந்தப் பாம்பு கடித்துவிடுமோ என்று பயந்தபடியே இருந்தாள்.

ஆனால் நடுஇரவு நேரம்ங்களில் ம்வாங்கி ஒரு கையில் ரோர்ச்சுடனும், மறுகையில் பீவர் மரத்துக் கம்புடனும் மூங்கில் கட்டிலைவிட்டு மெதுவாக இறங்கிக் கள்ளன்போல் அடிமேல் அடிவைத்துப் போய் பாம்பை யுத்தத்திற்கு அழைப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. இருட்டிலே தவறிப்போய் பாம்பின் மேல் காலை வைத்துவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் அவளைப் பிடித்து வதைத்தது.

ம்வாங்கி அவள் சொல்லைக் கேட்கப்போவதில்லை. இப்பவெல்லாம் அவருக்கு கோழியில் மேல் உள்ள கவனம் போய்விட்டது. பாம்பைப் பற்றிய நினைப்பாகவே இருந்தார். அதை எப்படியும் கொன்றுவிட வேண்டும் என்ற ஆவேசன் அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இவ்வளவுக்கும் அவர் தன் பரம விரோதியான பாம்பை ஒருமுறை கூடப் பார்த்ததில்லை. அந்தப் பாம்புக்குக்கூட தன் புரவலரை ஒருநாளாவது பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ம்வாங்கிக்குத் தெரிந்ததெல்லாம் அது வந்துபோகும் தடங்கள் தான். அத்துடன் முட்டைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துகொண்டே வந்தது.

ஒருநாள் இந்த எதிரிகள் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டார்கள். எதிர்பாராமல்தான் இது நடந்தது.

முதலில் கண்டது பக்கத்து வீட்டு யோசப்தான். அவன் தான் ம்வாங்கியைச் சத்தம்போட்டு அழைத்தான். இப்படி ஒரு வேலையும் செய்யாமல், அன்றாடம் வேட்டைக்குப் போகாமல், தினம்தினம் கிடைக்கும் முட்டை வருவாயில் அந்தப் பாம்புக்கு அலுப்பு ஏற்பட்டிருக்கலாம். மெதுவாக வெளியில் வந்து அந்த இளம் வெயிலில் ஆறிக்கொண்டிருந்தது. இலவசமென்றாலும் உண்ட களைப்பு அதற்கும் இருக்கத்தானே செய்யும்.

அதைக் கண்டதும் ம்வாங்கி சிறிது நேரம் மெய்சிலிர்த்துப்போய் நின்றார். என்ன அழகான காட்சி. என்ன அலட்சியமான பார்வை. நாளைக்குப் பேசிக்கொள்ளலாம் என்பது போல. விர்ரென்று வீட்டினுள்ளே புகுந்து பீவர் மரத்துக் கம்பைத் தூக்கி மஸாய் வீரன்போல் தலைக்குமேல் பிடித்தபடி பாய்ந்து வந்தார்.

பாம்பு பார்த்துவிட்டது. இவருடைய எண்ணம் ஆரோக்கியமானதல்ல என்பது அதற்கு எப்படியோ தெரிந்துவிட்டது.

உஸ்ஸென்று நிமிர்ந்தது. அதனுடைய மணிக் கண்கள் பளபளத்தன. சிறிய தலையில் அவை பெரிதாகத் தெரிந்தன. செக்கச் சிவந்த பிளவு நாக்கை வெளியே விட்டு காற்றைச் சோதித்தது. படத்தை விரித்து தன் சுயரூபத்தைக் காட்டியது. பிறகு என்ன நினைத்ததோ, உடலைச் சுருக்கி செங்கல் குவியலுக்குள் புகுந்துகொண்டது. ஒரு சமமான எதிரிக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை அது செய்யத் தவறியது.

ம்வாங்கியும் பெரிய தவறு செய்தார். அந்தப் பாம்பிடம் மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டார். அது நிராயுதபாணியாக நின்றது. இவர் தடியை சுழற்றியபடி வெறிகொண்டவரைப்போல் செங்கல் குவியலைச் சுற்றி நாலுதரம் ஓடினார். பாம்பு அவசரமில்லாமல் ஒரு பக்கத்தால் வழிந்து கத்தாளைப் புதர்களுக்குள் போய் மறுகணம் மறைந்துவிட்டது.

ம்வாங்கி இப்படி ஓடியதற்குக் காரணம் அந்தப் பிராந்தியத்தில் மலிந்திருக்கும் துப்பும் பாம்பாக அது இருக்குமோ என்று நினைத்தது தான். துப்பும் பாம்பை அடிப்பதற்கு சாமர்த்தியம் வேண்டும். அது பத்தடி தூரம் வரைக்கும் கண்ணைக் குறிவைத்துத் துப்பும். விஷம் பட்டால் கண்பார்வை போய்விடும். அதுதான் வால்பக்கம் இருந்து அடிப்பதற்காக வசதி பார்த்தார். ஆனால் பிறகுதான் இது துப்பும் பாம்பு அல்ல என்று அவருக்குத் தெரிந்தது.

இப்படியாக முதல்நாள் போர் ம்வாங்கிக்கு முற்றிலும் தோல்வியில் முடிந்தது.

பாம்புக்கு இந்தச்சம்பவம் பிடிக்கவில்லை. அது தானும் தன்பாடுமாக இருந்த பாம்பு. தனக்கும் கோழிகளுக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்தத்தில் இன்னொருவர் அத்துமீறிப் புகுந்துவிட்டதாக அது நினைத்தது. அதைச்செய்கையில் காட்டுவதற்குத் தருணம் பார்த்திருந்தது.

அடுத்த நாள் காலையில் ம்வாங்கி வெளியே வந்து பார்த்தபோது முட்டையைக் குடித்துவிட்டு சக்கையை வாசலிலே உமிழ்ந்து விட்டிருந்தது. எத்தனை முட்டை களவு போனது என்று அவர் இனிமேல் தன்னுடைய சுருட்டை மயிரைப் பிடித்து இழுத்து குழம்பத் தேவையில்லை. அவ்வப்போது அதிகாலையில் வந்து attendance கொடுப்பது போல முட்டைக் கோதைத் துப்பி கணக்குக் கொடுத்துவிட்டுப் போனது.

ம்வாங்கி தன் முயற்சியில் இன்னும் தீவிரமானார்.

அன்று அவருக்கு வெகு நேரமாகத் தூக்கம் வரவில்லை. பாம்பைப் பற்றிய சிந்தனையாகவே இருந்தது. காற்றுப் புக முடியாத அந்தச் சிறு அறையில் மாட்டுத் தோல் போர்த்திய கட்டிலில் அவர் படுத்துக்கிடந்தார்.

பக்கத்திலே எமிலி. அந்த இருட்டிலும் அவள் மார்புகள் சீராக ஏறி இறங்குவது தெரிந்தது. அவள் பக்கமிருந்து மெல்லியதாக வெப்பவாடை வீசியது.

ஒரு நாளைப்போல ‘சுக்குமாவிக்கி’ சாப்பிடுவோரிடம் வெளிப்படும் அந்த வாசனை வீச்சம் அவளிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அது அவரை என்னவோ செய்தது. இருட்டிலே துளாவினார். அவளுடைய லாஸாவின் நுனியை கைகளினால் தடவிக் கண்டுபிடித்து சுருக்கை இழுப்பதற்கு கொஞ்ச நேரம் ஆனது.

‘வாச்சா, வாச்சா’ என்று முனகியபடி திரும்பி அவருக்கு வசதியான நிலையில் படுத்துக்கொண்டாள். அவளுடைய கை யதேச்சையாக அவர் தொடையின் மேல் வந்து விழுந்தது.

அவருக்குப் பிடித்தது இதுதான். மறுப்பு சொல்லமாட்டாள். அடிக்கடி ’தாராள மனசுப் பொம்பிளை எப்பவும் பிள்ளத்தாய்ச்சி’ என்று சொல்லிச் செல்லமாக அவரைக் கடிந்துகொள்வாள். ஆனால் மறுக்கமாட்டாள்.

எமிலியின் மகனுக்கு இப்போது இரண்டு வயதாகிறது. அவனுக்கு நாலு வயதாகும்போது தங்கள் திருமணத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். எமிலிக்கு ஆடம்பரமாக மணச்சடங்கு நடத்த வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தேவதைபோல வெள்ளை ஆடை உடுத்தி, முகத்திரையிட்டு, நீண்ட சில்க் கையுறை அணிந்து இசைக்கேற்ப நடந்துவர வேண்டுமென்பது அவள் ஆசை. அவளுடைய மகன் மலர்ச்செண்டு ஏந்தி ஊர்வலத்தின் முன் நடப்பதை அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பாள்.

ஒரு கணிசமான அளவு சேமிப்பு எமிலியிடம் இருந்தது. ம்வாங்கியும் கொஞ்சம் சேமித்தால் விரைவில் திருமணத்தை நடத்திவிடலாம். ஆனால் இந்தப் பாம்பு அதற்குத் துணை புரிவதாகத் தெரியவில்லை.

அப்பொழுதுதான் ம்வாங்கியின் மூளையில் ஒரு மின்னலடித்தது. அந்தப் பாம்பு பதினாலு அடி நீளம் இருந்தது. என்ன வேகமாக மறைந்தது. கண்மணிகள் எவ்வளவு பெரிது. வழவழப்பான கறுப்பு. ஆப்பிரிக்காவின் கறுப்பு மம்பா அல்லவா அது?

இந்தப் பாம்பு மரம் ஏறக்கூடியது. மரத்தின் வழியாக ஏறி கூரை வழியாக அல்லவா இது உள்ளே வருகிறது. கதவு ஓட்டைகளையும், வலைப் பின்னல்களையும் மாய்ந்து மாய்ந்து அடைத்து என்ன பிரயோசனம்!

மறுபடியும் ரோர்ச்சை எடுத்துக்கொண்டு போர் ஆயுதங்களோடு நடு இரவில் புறப்பட்டார். அந்தப் பாம்பு அவருக்குப் பெரும் சவாலாகத்தான் இருந்தது.

தனக்குத் தெரிந்த பலவித சிகிச்சைகளையும் அவர் செய்து பார்த்துவிட்டார். வளைந்த மரக் கிளைகளையெல்லாம் வெட்டிச் சாய்த்தார். சுற்றிவர மண்ணெண்ணெய் ஊற்றி வைத்தார். தார் பூசினார். தகரத்தை அடித்தார். இரவிரவாக விளக்குகளை எரியவிட்டார். அவருடைய சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷன் மூளைக்கு எட்டிய அற்புதமான யோசனைகள் எல்லாவற்றையும் செயல்படுத்தினார்.

பாம்பு மசியவில்லை. எல்லாவிதத் தந்திரோபாயங்களையும் அது கற்றுத் தேர்ந்திருந்தது. குதிரையைத் தொலைத்தவன் குட்டையிலும் தேடுவான், கூரை முகட்டிலும் தேடுவான். அவனுக்குத் தெரியும் அவன் கஷ்டம். ம்வாங்கி எல்லா வித்தைகளையும் செய்து களைத்துவிட்டார்.

முள்ளம்பன்றியை மடியிலே கட்டிக்கொண்டு முதுகு சொறியப் பயணம் போன கதையாக யோசப்பை மறந்துவிட்டார் ம்வாங்கி. பக்கத்து வீட்டுக்காரர். பாம்புகளின் பூர்வீகம் அறிந்தவர். கடைசி முயற்சியாக யோசப் சொன்ன யோசனையை செய்துபார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

எமிலியிடம் அவருக்கு ஒரு வருடத்திற்குப் போதிய காதல் இருந்தது. ஆனால் அவருக்குப் பிடிக்காதது அவளுடைய பிடிவாதம்தான். சிறு குழந்தையைப்போல எவ்வளவு முரண்டு பிடிக்கிறாள்!

வீட்டிலே பிறந்த மேனியாகத் திரியக்கூடாது என்று வந்த நாளிலிருந்தே ஒரு சட்டம் போட்டுவிட்டாள். அதிலே அவருக்கு பெரிய சங்கடம்தான். ஆனாலும் அவள் வீட்டிலே இருக்கும் நேரங்களில் எவ்வளவு கஷ்டத்திலும் அதைக் கடைபிடித்து வந்தார்.

மற்றது இன்னும் கொடூரமானது. அவர்கள் சமையலறையில் ஒரு சிறுமேடை இருக்கும். வசதியானது. இவர்களுக்காகவே கட்டியது போலிருந்தது. எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும் அவளை அந்த மேடையிலே கூப்பிட்டால் வரவே மாட்டாள். அப்படி ஒரு பிடிவாதம். போகிறது.

திடீரென்று அவள் அந்த வீட்டிலிருக்கப் பயந்தாள். அவள் மிகவும் பயப்படுவது மகனைப் பற்றித்தான். கறுப்பு மம்பாவின் விஷம் பொல்லாதது. கடித்த சில வினாடிகளில் உயிர் பிரிந்துவிடும். ம்வாங்கி இந்தப் பாம்பு விஷயத்தில் மிகவும் மெத்தனமாக நடப்பதுபோல் அவளுக்குப் பட்டது.

எமிலியின் அவசரத்திற்கு ஏற்றபடி ம்வாங்கி வேகமாகச் செயல்படவில்லை. அதுதான் அவளுக்குக் கோபம். சமையலறையில் நிலம் அதிர்ந்தது. துக்கம் அனுட்டிக்கும் அரைக் கம்பத்து கொடிபோல அவள் கண்கள் பாதி மூடியிருந்தன. உதடுகள் துடித்தன. கால்களைக் கத்தரிக்கோல் போல விரித்துப் போட்டிருந்தாள். அவள் கைகள் மரெண்டாக் கீரையை மளமளவென்று நறுக்கியபடி இருந்தன.

ம்வாங்கி அவசரத்தில் அவளுடைய மரிந்தா அங்கியை அணிந்திருந்தார். அதிலே பெரிய பூக்கள் போட்டிருந்தன. நுனிக்காலில் நடந்துவந்து மெதுவாக அவள் பக்கத்தில் உட்கார்ந்தார். அவள் கையைப் பற்றினார். அவள் திமிறினாள்.

”விலைபோகாத பெண்ணே! என் வாசனைத் திரவியமே! உன் கண்களை என்மேல் திருப்பு. சூடாய் இருக்கும் தண்ணீர் ஆறித்தானே ஆகவேண்டும். ஒருநாள் இந்தப் பாம்பை நான் கொன்று விடுவேன். கொஞ்சம் பொறுமையாக இரு” என்றார் ம்வாங்கி, மன்றாடும் குரலில்.

”என் மகன் தங்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவன் இரவு படுக்கப்போகும்போது நான் பார்க்கிறேன். அடுத்தநாள் காலை அவன் கண் விழிப்பதை நான் காணவேண்டுமே என்று என் மனம் பயந்து நடுங்குகிறது. வெள்ளம் கணுக்கால்வரை வந்ததும் வாரி இறைக்க வேண்டாமா? ஒரு பாம்பை அடிக்க இவ்வளவு நாடகமா? உலகத்து உடைமைக்காரரிடம் என் மகனை ஒப்படைத்துவிட்டேன். என் சொற்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. கபிஸா. என் வந்தனங்கள்.”

அவளுடைய வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தன. நீதிபதியின் சுத்தியலைப்போல. ம்வாங்கி அவள் காதுகளை வருடினார். அவள் முனகும் சமயமாகப் பார்த்து பலவந்தமாக இழுத்து அணைத்தார். அவள் தோள்கள் விறைப்புடன் அடிபணிய மறுத்தன. அவள் மேல் உதடு தடிமனாகவும், யாமசோமா இறைச்சி போல சுவையாகவும் இருந்தது.

தலையை ஒரு பக்கம் சாய்த்து அவரைப் பார்த்தாள். மூக்கைச் சுருக்கி பிகு செய்தாள். திரும்பமுடியாத ஒரு எல்லைக்கு தான் தள்ளப்பட்டதை உணர்ந்தாள். சாப்பாட்டின் கடைசி வாய்போல ம்வாங்கி அவளை ருசித்தார்.

யோசப் சொன்ன யோசனை சிக்கனமானது. இலகுவானது. நாலு ’பிங்பாங்’ பந்துகள் வாங்கி முட்டைகளுடன் கலந்து வைத்து விடுவது. பிளாஸ்டிக்கில் செய்த அந்த பந்துகள் முட்டை போலவே இருக்கும். பாம்பு பந்தை விழுங்கிவிடும். இது உத்திரவாதமானது. கிராமங்களில் இதுதான் பாம்பு பிடிக்கும் முறை என்றெல்லாம் யோசப் அளந்தான். பாம்பு ஏமாந்துவிடும் என்று அடித்துக் கூறினான்.

அன்று இரவு ம்வாங்கி மூன்று தடவை எழும்பி பாம்பு வேட்டைக்குப் போய் வந்திருந்தார். அதனால் நேரம் போனது அவருக்குத் தெரியவில்லை. பலபலவென்று விடிந்த பிறகே எழும்பினார். எமிலி மகனையும் தூக்கிக்கொண்டு வேலைக்குப் போயிருந்தாள்.

கூதல் காற்று அடித்தது. ஜகரண்டா மரம் நிலம் தெரியாமல் பூக்களைச் சொரிந்திருந்தது. எங்கும் ஊதா மயம். வழக்கம்போல கோழிப்பண்ணயைச் சுற்றி வந்தார். ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது. உள்ளே போய்ப் பார்த்தார். இரண்டு பந்துகள் குறைந்துபோய் காணப்பட்டன. அவருடைய நெஞ்சு வேகமாக அடிக்கத் தொடங்கியது.

பரபரப்புடன் வெளியே வந்து மண்ணிலே தேடினார். பாம்பின் தடம் என்று தான் ஊகித்த இடமெல்லாம் தொடர்ந்துபோய்ப் பார்த்தார். அந்த பாம்பு அவ்வளவு சுலபமாக ஏமாந்திருக்கும் என்று அவருக்குத் தோன்றவில்லை.

பீவர் மரத்தைத் தாண்டி யானைப்புற்கள் தொடங்கும் இடத்தில் அதைக் கண்டார். அந்தப் பாம்பு செத்துப்போய் கிடந்தது. மிகவும் செத்துப்போனது. கறுப்பாக நீண்டுபோய் மினுமினுத்தது. அதன் மிகச்சிறிய வாய் பிரிந்துபோய் கிடந்தது. தலையை நிலத்தில் அடித்து அடித்து ரத்தம் கசிந்திருந்தது. எறும்புகள் மொய்த்திருந்தன. அதனுடைய தொண்டைக்குக் கீழ் இரண்டு பந்துகள் மாட்டிப்போய் பம்மிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

எவ்வளவு நீளம்! உடம்பில் ஒரு காயமும் இல்லை. தலை மாத்திரம் சிதைந்துபோய் கிடந்தது. வால் கொஞ்சமாக அசைந்து கொடுத்தது.

பாம்பைப் பார்க்க பக்கத்து குடிசைகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்துவிட்டார்கள். பாம்பின் வால் அசைந்ததைப் பார்த்து ஆளுக்கொரு போடு போட்டார்கள்.

சிறுவர்கள் பாடு கொண்டாட்டம் தான். ம்வாங்கியை மலரமலரப் பார்த்தார்கள். பிறகு பாடத்தொடங்கினார்கள்.

ம்வாங்கி அனயூவா நியோகா

சீயோ சீயோ முவாகா

ம்வாங்கி பெரிய வீரர்தான்

பாம்பை அடித்த சூரர்தான்

இதற்கிடையில் ஒக்கிலா எங்கிருந்தோ ஓடிவந்து சேர்ந்தான். மரண ஊர்வலங்கள் அவன் இல்லாமல் நடைபெறுவதில்லை. பாம்பைத் தூக்கி மாலையாகக் கழுத்திலே போட்டுக்கொண்டான். அப்படிப் போட்டும் பாம்பினுடைய தலையும் வாலும் நிலத்திலே அரைபட்டது. ஒக்கிலா கைகளை விரித்து முழங்கால்களை மடித்து மரண நடனம் ஆடியபடியே புறப்பட்டான். சிறுவர்கள் பின்தொடர்ந்தார்கள். பழைய பெட்டிகளிலும் டின்களிலும் மேளம் அடித்தபடியே அந்த ஊர்வலம் குடிசைகளை சுற்றிச்சுற்றி வந்தது.

பெரியவர்கள் ம்வாங்கியைப் பாராட்டிவிட்டு சென்றார்கள். சிலர் அவருடைய சாமர்த்தியத்தை அளவுக்கு மீறி மெச்சினார்கள். தன் இயல்புப்படி முட்டை குடிக்கவந்த பாம்பு சூழ்ச்சியில் அகப்பட்டு ஒக்கிலாவின் கழுத்தில் அப்படியும் இப்படியும் அசைந்து நிலத்தில் அசிங்கமாக இழுபட்டுக்கொண்டு போனது.

அந்தப் பாம்பின் நீள உடம்பு திரும்பத்திரும்ப நினைவில் வந்தது. இரு சமமான எதிரிகளுக்கிடையில் நடந்த இந்த தர்மயுத்தத்தில் கபடமும் நயவஞ்சகமும் எப்படியோ புகுந்துவிட்டது. இந்த வெற்றியில் என்ன பெருமிதம்? தோல்வியில் கிடைக்கும் அமைதிகூட இல்லையே என்று பட்டது.

ம்வாங்கி வெளிவாசலில் அப்படியே குந்திப்போய் இருந்தார். வெகுநேரம் இருந்தார். எமிலியும் மகனும் திரும்பியபோதுகூட அப்படியேதான் இருந்தார். எமிலி தன் மகனை தொப்பென்று கீழே போட்டுவிட்டு வேகமாக அவரிடம் வந்தாள். சம வயதுடைய இரண்டு பப்பாளிப் பழங்கள் போல அவள் மார்புகள் குலுங்கின.

அவளுடைய முகத்தை அவரால் நேராகப் பார்க்க முடியவில்லை. அவசரமாக எழுந்து நின்றார். வலுவானதும் வளைந்து கொடுக்கக் கூடியதுமான பீவர் மரத்துக் கம்பைத் தூக்கி தூர வீசி எறிந்தார். எறிந்துவிட்டு வீட்டுக்குள் போவதற்குத் தலையைக் குனிந்தார் ம்வாங்கி, சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் கிளாஸ்.

*****

மகாராஜாவில் ரயில்வண்டி - (சிறுகதைகள் தொகுப்பு)  - காலச்சுவடு பதிப்பகம்

தட்டச்சு : செ. சரவணகுமார்

Sep 14, 2011

ஜே.ஜே. – இருபத்தைந்து - சுகுமாரன்

காலச்சுவடு பதிப்பகத்தின் நவீன கிளாசிக் வரிசையின் சிறப்புப் பதிப்பான ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலின் பின்னுரை

கோட்டயம் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜே.ஜே.யைப் பார்க்கச் சென்ற பாலு மற்றொரு எழுத்தாளரான திருச்சூர் கோபாலன் நாயரிடம் ஜே.ஜே.யின் எழுத்தை தான் எதிர் கொண்ட விதத்தைச் சொல்லும் பகுதி இவ்வாறு அமைகிறது:

"சார், புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜே.ஜே. இரண்டாவது வகையைச் சார்ந்தவன் என்பது என்sugumaran_1 அபிப்பிராயம்."1

இருபத்து நான்காம் வயதில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை முழுமையாக வாசித்து முடித்ததும் தோன்றிய மனநிலை ஏறத்தாழ இதுவாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் தமிழில் அன்றுவரை வெளியாகியிருந்த பெரும்பாலான நவீனப் படைப்புகளோடு அறிமுகம் கொண்டிருக்கிறேன் என்ற இறுமாப்பும் இதே எழுத்தாளர் அதுவரை எழுதி வெளியான எல்லாவற்றையும் படித்திருக்கிறேன் என்ற தற்பெருமையும் அந்த மனநிலையில் ஆடிச் சரிந்தன. மிகவும் பழக்கப்பட்ட நிலப் பகுதியில் மூடுபனி கவிந்த பொழுதில் நிற்க நேர்ந்தது போன்ற துலக்கமின்மையை உணர்ந்தேன். நூல்  வடிவத்தில் வெளிவருவதற்கு முன்பே சில பகுதிகள் வாசிக்கக் கிடைத்ததன் காரணமாகப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நாவலும் அதுவாகவே இருந்தது. மலர்மன்னன் வெளியீடாக வந்த '¼' காலாண்டு இதழில் ஜே.ஜே: சில குறிப்புகளின் ஆரம்ப அத்தியாயங்கள் அச்சேறியிருந்தன. அதை வாசித்துப் பெற்ற குதூகலப் பதற்றம் நாவலை மிக நேர்த்தியான புத்தகமாகக் கைவசப்படுத்தும்வரை தொடர்ந்திருந்தது. முதல் வாசிப்பில் ஈர்க்கக்கூடிய பிரமிப்பையும் புரிபடாத் தன்மையையும் அனுபவித்ததற்கான காரணங்களைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இடைவெளிவிட்டுப் பல முறை நாவலை வாசித்த பக்குவத்தில் வகைப்படுத்தினால் அவை பின்வரும் அம்சங்களைச் சார்ந்தவையாக இருக்கும்.

நாவல் என்பது கதையை முன்னிறுத்தி விரிவடையும் வடிவம் என்ற சம்பிரதாயமான பார்வைக்கு எதிரானதாக இருந்தது ஜே.ஜே: சில குறிப்புகள். இந்த வடிவ மீறல்தான் ஆரம்பப் பிரமிப்பை ஏற்படுத்தியது.

புனைகதை ஓர் உணர்ச்சிகரமான வடிவம் என்ற நடைமுறையை மறுக்கும் வகையில் அறிவார்ந்த விவாதத்துக்கான களமாக நாவல் திறந்து விடப்பட்டிருந்தது. அப்படித் திறந்துவிடப்பட்டிருந்த வெளியும்கூட ஒற்றைத் தளமுள்ளதாக இருக்கவில்லை; வெவ்வேறு தளங்களில் 100-00-0000-053-3_b நடமாடுவதற்கான பரப்பைக் கொண்டிருந்தது. அவ்வாறு நடமாடும்போதே ஒரு தளம் சட்டென்று இன்னொரு தளமாக மாறிவிடும் 'திட்டமிட்ட சதி'யும் அதில் இருந்தது. ஒரே சமயம் வசீகரமும் புதிருமான இந்தப் புனைவு முறை மிகப் புதிதாக உருவாகியிருந்தது. இந்த நோக்கில் தமிழில் வெளியான முதல் நவீனத்துவ முயற்சி ஜே.ஜே: சில குறிப்புகள்.

சமகாலத் தமிழ் வாசகனை நாவலின் நடையே ஈர்த்தது; வெருட்டியது. மொழி ஒரு தொடர்புக் கருவியாகக் கையாளப்பட்டுவந்த புனைகதைத் துறையில் அதன் பன்முகச் சாத்தியங்களைப் பரிசோதனை செய்த நாவல் இது. ஆவணங்களுக்கான தெளிவு, புனைகதைக்கான ஜாலம், கவிதையின் வேகம், தொனி மாற்றங்களின் நுட்பம் ஆகிய எல்லாமும் இழைந்த மொழியில் அமைந்த நாவல். 'புறங்கழுத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அடிகள் விழுவதுபோல' வீச்சுக் கொண்டிருந்த நடை, நாவலை நகர்த்திச் செல்வதற்கான காரணி என்பதைவிட நாவலின் ஆதாரப் புள்ளியாகவே உருவங்கொண்டிருந்தது. அறிவார்ந்த தளத்தில் முன் நகரும் படைப்பு என்பதால் இந்த இயைபு வலுவானதாகவும் இருந்தது. புனைவு மொழி சார்ந்து வழக்கத்திலிருந்த இலக்கணம் இந்த நாவலில் தகர்ந்தது. நடை காரணமாகவே கவனம் பெற்று வாழ்வனுபவங்களைப் பரிசீலனை செய்யத் தூண்டிவிட்ட முதல் படைப்பாக ஜே.ஜே: சில குறிப்புகள் இருந்தது.

வாசக ஈர்ப்புக்கு ஆரம்பமாக இருந்தன இந்தக் கூறுகள், எனினும் நாவலை அந்தரங்கமானதாக ஏற்றுக்கொள்ளத் தனிப்பட்ட நியாயங்களும் எனக்கிருந்தன. அந்தக் காலப் பகுதியில் எனது வாசிப்புக்கும் மனச் சாய்வுக்கும் இணக்கமாக இருந்த பலவற்றோடும் தொடர்பு கொண்டனவாகவும் அந்த நியாயங்கள் இருந்தன.

ஆல்பெர் காம்யுவின் எழுத்துக்கள் அன்று பெரும் அலையாக என் கருத்திலும் கவனத்திலும் மோதிக்கொண்டிருந்தன. ஜே.ஜே: சில குறிப்புகளின் முதல் வரியே காம்யுவை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது, நாவலுடனான வாசக உறவை வலுப்படுத்திக்கொள்ளும் முனைப்பைக் கூடுதலாக்கியது. ஜோசப் ஜேம்ஸ் என்ற கற்பனைப் பாத்திரத்தின் உயிர்ச் சாயல் சி.ஜே. ஜோசப் என்ற மலையாள எழுத்தாளனின் அடையாளங்களைக் கொண்டிருந்ததைவிடக் காம்யுவின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாக நம்புவது அன்றைய மனநிலைக்கு உவப்பாக இருந்தது. ஜோசப் ஜேம்ஸ் - ஆல்பெர் காம்யு என்ற பெயர்களின் உச்சரிப்பு ஒற்றுமையில் மனம் மயக்கம் கொண்டது. காம்யுவின் பிரச்சினை மனிதச் சூழலின் நெருக்கடியை ஆராய்வது, அந்த ஆய்வுக்குச் சுதந்திரமான சிந்தனையைச் சார்ந்திருப்பது என்பதாகக் கருத்துக் கொண்டிருந்தேன். அந்தக் கருத்தின் தமிழ் வடிவம் அல்லது திராவிட வடிவமே ஜே.ஜே. என்ற நம்பிக்கையும் கவனத்தில் வேரோடியிருந்தது.

அதே கால அளவில் வாசித்து ஆவேசம் கொண்டிருந்த இன்னொரு எழுத்தாளர் அருண் ஜோஷி. குறிப்பாக அவர் எழுதிய பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு என்ற நாவல்2. வாசிப்பின் பல கட்டங்களில் ஜோசப் ஜேம்ஸும் பில்லி பிஸ்வாஸும் பரஸ்பரம் சந்தித்துக்கொண்டார்கள். பில்லி என்கிற பிமல் பிஸ்வாஸுக்கும் ஜோசப் ஜேம்ஸுக்கும் புனைகதைப் பாத்திரங்கள் என்ற வகையில் எந்தப் பந்தமும் கிடையாது. ஜே.ஜே. ஓர் எழுத்தாளன்; பில்லி அமெரிக்க வாழ் இந்தியன். அமெரிக்க வாsura ழ்க்கையின் பகட்டு அவனை விரட்டுகிறது. அங்கிருந்து தலைமறைவாகி இந்தியாவுக்கு வந்து கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுகிறான். குடும்பம், காதல், சமூகத்தின் கோளாறுகள் எல்லாம் அவனைக் கொந்தளிப்புக்குள்ளாக்குகின்றன. அமைப்புக்கும் சமூக நிறுவனங்களுக்கும் தனக்குமான உறவு பற்றி ஓயாத கேள்விகளுடன் உழலும் பில்லி கடைசியில் காணாமற்போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துகொள்ள முடியாமல் காவல் துறை வழக்கை மூடுகிறது. இந்த நாவலுடன் ஜே.ஜே: சில குறிப்புகளை ஒப்பிட முடியாது. ஆனால் பில்லி பிஸ்வாஸ் தனது கேள்விகளாக ஏற்றுத் துன்புறும் அனைத்தையும் ஜே.ஜே.யும் கொண்டிருந்தான் என்று தோன்றியது. என்னுடைய ஒப்பீடு பொருத்தமற்றது. எனினும் தனது படைப்பின் நோக்கமாக அருண் ஜோஷி3 சுட்டிக்காட்டிய வாசகம் ஜோசப் ஜேம்ஸ் என்ற எழுத்தாளனுக்குப் பொருந்தக் கூடியதாகவேபட்டது. 'மனித மனம் என்ற புதிரான கீழுலகை ஆராய்வதே என் விருப்பம்' என்ற அருண் ஜோஷியின் வாக்குமூலம் ஜே.ஜே.வுக்கும் இணக்கமானது என்பதே என் வாசிப்பின் நியாயம்.

ஜே.ஜே: சில குறிப்புகள் வெளிவந்த வேளையில் அந்த நாவல் இலக்கிய வாசிப்புக்கான பிரதி என்பதுபோலவே இலக்கிய அங்கீகாரத்துக்கான கையேடாகவும் இருந்தது. அதன் கணிசமான பகுதிகளை மனப்பாடமாகச் சொல்ல முடிந்திருந்தது. அதை ஓர் அங்கீகாரமாகவும் மனம் கொண்டாடியது. அன்று சீரிய இலக்கியச் சூழலில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்த பலரும் இந்தப் பயிற்சியை விளையாட்டாகவோ தீவிரமாகவோ மேற்கொண்டிருந்தார்கள் என்பது இன்று பெரும்பாலோர் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை.

சுந்தர ராமசாமியை முன்பே அறிவேன். ஆனாலும் அவருக்கு எழுதிய முதல் கடிதம் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலில் கண்ட ஒரு பிழையைக் குறிப்பிட்டு எழுதிய அஞ்சலட்டையாக இருந்தது. நாவல் பாத்திரமான பாலு தனது நோய்ப் படுக்கையில் கிடந்து வீணையின் மீட்டலாக வரும் இசையைப் பற்றிச் சொல்லும் பகுதியில் 'லம்போதர'4 என்ற சங்கீத உருப்படியை 'வர்ணம்' என்று நாவலாசிரியர் எழுதியிருப்பார். அப்போது இசைப் பித்தம் முற்றியிருந்ததால் கீதத்தை வர்ணம் என்று எழுதிவிட்டீர்களே என்று சிணுங்கிக்கொண்டு கடிதம் எழுதியிருந்தேன். என்னைப் போலவே வேறு சிலரும் அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்றும் அடுத்த பதிப்பில் திருத்தப்படுமென்றும் தெரிவித்திருந்தார். அன்று பதிப்புத்துறை இருந்த நம்பகமற்ற சூழலில் அவருடைய வாக்குறுதி அடுத்த பிறவியில் நிறைவேறக்கூடும் என்றே எண்ணத் தோன்றியது. சீரிய இலக்கிய நூல்களின் விதியும் அவ்வாறாகத்தான் இருந்தது. ஆனால் ஜே.ஜே: சில குறிப்புகளின் காரியத்தில் விதிவிலக்காக நிகழ்ந்தது ஓர் அற்புதம். ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக நாவல் இரண்டாம் பதிப்புக் கண்டது. 'லம்போதர' கீதம் என்று திருத்தமும் பெற்றிருந்தது. நான் சொல்லித் திருத்தம் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லை. பலரும் அதைச் சுட்டிக்காட்டியிருந்திருக்கலாம். ஆனால் என் பொருட்டுத்தான் நாவலாசிரியர் அதை மேற் கொண்டார் என்ற அசட்டு மகிழ்ச்சி நாவலைப் படிக்கிற ஒவ்வொரு முறையும் மேலெழும். இன்றும்.

n

ஜே.ஜே: சில குறிப்புகள் நாவல் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான காலப் பகுதி புதிய சோதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பக்குவப்பட்டிருந்தது. இருத்தலியல், நவ மார்க்சியம், அமைப்பியல்வாதம் முதலான பல சிந்தனைப் போக்குகளும் அலையெழுப்பிக்கொண்டிருந்தன. இந்த அலைகளின் வீச்சுக்கு ஈடு நிற்கும் திராணியுடன் உருவான நாவல் ஜே.ஜே:சில குறிப்புகள். அதன் உருவமும் செய்நேர்த்தியும் முன்னுதாரணமற்ற புதுமையைச் சார்ந்திருந்தன. ஒரு தனி மனிதனை முன்னிறுத்திக் காலத்தின் சிக்கல்களைப் பகுத்தறிய அந்நாவல் முற்பட்டது. இவ்விரு காரணங்களாலேயே முன்சொன்ன எல்லாவிதச் சிந்தனைப் போக்கிலிருந்தும் இந்த நாவல் அணுகப்பட்டிருந்தது.

சிற்றிதழ் சார்ந்த கலாச்சாரச் செயல்பாடுகள், ஆர்வலரின் நடவடிக்கை என்னும் நிலையையும் வாழ்வின் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் உளவியல் வினை என்ற நிலையையும் கடந்து கருத்துருவாக்கம் என்னும் அமைப்புப் பணியாக மாறியது எண்பதுகளில் எனக் கருதுகிறேன். அந்த மாற்றத்தின் எதிர் அதிர்வுகள் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை உருவாக்கியிருக்கின்றன. நாவலில் புலனாகும் அறிவார்ந்த தளத்துக்கான முகாந்திரம் இதுதான். எழுத்து, கலை, இசை, ஓவியம் என்று பண்பாட்டுச் செயல்பாடுகளில் எதார்த்த வாழ்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதன்மை கொண்ட கருத்தாடல்தான் நாவல் எதிர்கொள்ளும் சவால். கருத்துகளை உருவாக்குபவர்களும் நடைமுறைப்படுத்துபவர்களுமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் நாவலின் மையப் பாத்திரங்களாவதற்கான காரணமும் இதுதான். துரதிருஷ்டவசமாக அந்தக் காலப் பகுதியில் இயங்கிய தமிழ் எழுத்தாளர்களோ கலைஞர்களோ பண்பாட்டுக் காவலர்களாக நட்சத்திர மதிப்புப் பெற்றிருக்கவில்லை. ஆனால் நாவலின் பின்புலமாகக் காட்டப்படும் மலையாள இலக்கிய உலகில் கருத்தை உருவாக்குபவர்களாக எழுத்தாளர்கள் உண்மையாகவே போற்றப்பட்டனர். ஆக, நம்பகமான பின்னணியில் சமகாலத்தின் கோலங்களை நாவலாசிரியரால் பயமில்லாமல் விவாதிக்க முடிந்தது. இந்த அச்சமின்மைதான் அதன் வாசகரிடையே மாபெரும் வியப்பைப் படரவிட்டிருக்கிறது.

வெளிவந்து இரண்டரைப் பதிற்றாண்டுகளைக் கடந்திருக்கும் ஜே.ஜே: சில குறிப்புகள்தான் சமகால நாவல்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது என்று கருதுகிறேன். நாவலாசிரியரின் கூற்றுப்படியே ஐம்பதுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்றும் எழுதப்படுகின்றன. இனியும் எழுதப்படலாம். ஏறத்தாழ இவை அனைத்தும் ஒரே தொனியில் அமைந்தவை. பார்வையில் வேறுபாடுகள் கொண்டவையாகத் தோன்றினாலும் நோக்கத்தில் ஒரே தன்மை கொண்டவை. தாம் வரித்திருக்கும் கருத்து நிலையையொட்டி நாவலைப் பற்றிய முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்ட பிறகு, அதற்கு ஏற்ப நாவல் இல்லை என்ற விமர்சன மதிப்பீட்டுக்கு அவற்றை எழுதியவர்கள் வந்து சேருகிறார்கள். தீர்ப்பை நிர்ணயித்த பின் நடத்தப்படும் விசாரணையின் தந்திரத்தை ஒத்திருக்கிறது இது.

நாவலின் கட்டமைப்பு பல இழைகளால் பின்னப்பட்டது. சமகாலத் தமிழ் வாழ்வின் மீது செல்வாக்குச் செலுத்தும் எல்லாக் கருத்தாக்கங்களிலிருந்தும் பகுக்கப்பட்ட இழைகள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன. முற்போக்குவாதத்தின் ஓர் இழை. நவீனத்துவத்தின் ஓர் இழை. தனித்தமிழ்ப் போக்கின் ஓர் இழை. பண்டித மனப்பாங்கின் ஓர் இழை. தனிமனிதவாதத்துக்கும் சமூக வாதத்துக்குமான ஒவ்வோர் இழைகள். இந்த ஒவ்வோர் இழையும் மற்றோர் இழையுடன் பின்னி முடிச்சிட்ட அமைப்பிலுள்ளது. எனக்குத் தோதான ஓர் இழையை அவிழ்த்தெடுக்கும்போது வலையின் இயல்பும் பயன்பாடும் எளிதில் குலைந்துபோகின்றன. ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை அணுகுவதிலுள்ள முதன்மையான சிக்கல் இதுவாகத் தோன்றுகிறது. பெரும் படைப்புகளின் இயல்பான இந்தத் துலக்கமின்மைதான் வாசகனைத் தொடர்ந்து வசீகரிக்கிறது. விமர்சகனைத் திணறச் செய்கிறது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை வாசித்திருக்கிறேன். அதன் நடை பற்றிய எண்ணங்களே தொடர்ந்து என்னை ஆக்கிரமித்து வந்திருக்கின்றன. தமிழ்ப் புனைவெழுத்தில் நிகழ்ந்த உச்ச நடைகளில் (grand style என்பதற்குச் சமமாக இந்தச் சொற்சேர்க்கையைப் பயன்படுத்துகிறேன்) ஒன்றாக நாவலின் நடையை வகைப்படுத்தலாம். இது மொழிசார்ந்த உத்தியல்ல. எழுதியவனின் கண்ணோட்டத்தையும் பரிவையும் சார்பையும் விலகலையும் உள்ளடக்கிய ஒன்றாக அமைவது. பல தள இயக்கம் கொண்டது. பாதிப்புகளை உருவாக்கக்கூடியது. சிறுகதையில் இதன் துல்லியமான எடுத்துக்காட்டு புதுமைப்பித்தன் கதைகள். நாவலில் சமகால உதாரணம் ஜே.ஜே: சில குறிப்புகள். தொடர்ந்து வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவுமான படைப்பாகப் புதிய தலைமுறை வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்நாவல் நிலைத்திருப்பதும் இந்தக் காரணத்தாலேயே என்பது என் எண்ணம்.

n

"ஜே.ஜே: சில குறிப்புகள் மலையாளக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டதுதான். ஆனால் உண்மையில் அது தமிழ் கலாச்சாரம் சார்ந்து முன்வைக்கப்பட்ட விமர்சனம். தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த ஒரு விமர்சனம்"5 என்று பிற்காலக் கட்டுரையொன்றில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.
ஆரம்ப வாசிப்பில் ஜோசப் ஜேம்ஸ் என்ற பாத்திரம் மலையாள எழுத்தாளரான சி.ஜே. தாமஸை நினைவூட்டுவதாக நம்பியிருக்கிறேன். நாடக ஆசிரியரும் ஓவியரும் விமர்சகரும் சிந்தனையாளருமாக வாழ்ந்து மறைந்தவர் சி.ஜே. மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையை முதன்மைப்படுத்தியவர்; நிறுவப்பட்ட கருத்துக்களுக்கு எதிரான கலகத்தையும் உருவாக்கியவர். அவரது மொழி மலையாள இலக்கியத்தில் புதிய தடங்களை ஏற்படுத்தியது. மறைக்கல்வி பயிலக் குடும்பத்தினரால் தூண்டப்பட்டவர். மடாலயப் படிப்பை உதறி வெளியில் இறங்கியவர். சி.ஜே.யும் அற்ப ஆயுளில் மறைந்தவர். நாற்பத்திரண்டாம் வயதில். சி.ஜே.யின் மரணத்துக்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி ரோசி தாமஸ் ஒரு நினைவுக் குறிப்பை எழுதியிருந்தார். 'இவன் என் பிரியமான சி.ஜே.'6 என்ற அந்தச் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பத்திலும் சி.ஜே.தான் ஜே.ஜே.யா என்று மயங்கியதுண்டு. அந்த அளவுக்கு நம்பகமான தகவல்களுடன் பின்புலத்தை நிறுவ நாவலாசிரியர் அக்கறை கொண்டிருந்திருக்கிறார். சி.ஜே. தாமஸ் வாழ்க்கையின் நிஜம். ஜோசப் ஜேம்ஸ் புனைவின் உண்மை.

மலையாள இலக்கிய உலகில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் தமிழ் வாசகனான என்னை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. சி.ஜே. தாமஸ்தான் ஜே.ஜே. என்ற உரிமை பாராட்டலை அடக்கிய சிரிப்புடன் அவதானித்திருக்கிறேன். சி.ஜே. தாமஸின் தொகுக்கப்படாத கட்டுரைகள் அடங்கிய நூலின் பின்னுரையில் அதன் தொகுப்பாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'சி.ஜே. தாமஸைப் பற்றி ஒரு புத்தகம் எழுத மலையாளியால் முடியவில்லை. அதற்கு ஒரு தமிழர் வேண்டியிருந்தார்.'7 இதை ஓரளவுக்கு உண்மை என்றும் பெருமளவுக்குப் புனைவின் வெற்றி என்றும் காண்கிறேன்.

நவீன மலையாளக் கவிஞர்களில் ஒருவரான ஆற்றூர் ரவிவர்மா ஜே.ஜே: சில குறிப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிமாற்றம் செய்த முதல் நாவலும் இதுதான். அளவுக்கு மிஞ்சிய வடமொழிச் சொற்களால் பின்னப்படும் மலையாள நடையே இலக்கியத் தன்மை கொண்டது என்ற கருத்துக்குச் சவாலாக இருந்தது ஆற்றூரின் மொழிபெயர்ப்பு. தமிழுக்கும் மலையாளத்துக்கும் பொதுவான சொற்களையும் தமிழ் வாக்கிய அமைப்புகளையும் அப்படியே கையாண்டிருந்தார் ஆற்றூர். சுத்தமான மலையாள நடையல்ல; என்றாலும் புதிய ஒரு திராவிட நடை மலையாள இலக்கியத்துக்கு வாய்த்தது. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரிடம் இந்த நடையின் பாதிப்பைக் காணவும் முடிந்தது. நவீன கவிஞரும் விமர்சகருமான கல்பற்றா நாராயணன் சுந்தர ராமசாமி மறைவையொட்டி எழுதிய அஞ்சலிக் குறிப்பில் இந்தப் பாதிப்பைப் பற்றிச் சுட்டிக்காட்டியிருந்தார். ஓர் அர்த்தத்தில் ஜே.ஜே: சில குறிப்புகளின் அறிமுகத்துக்குப் பின்னரே தமிழ் மொழியிலும் நவீனப் போக்குகள் உருவாகி வளர்ந்திருக்கின்றன என்று மலையாள இலக்கியவாதிகளும் வாசகர்களும் நம்ப முன்வந்தார்கள். அதுவரை அவர்களும் 'என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?' என்ற குதர்க்கமான கேள்வியால் தமிழிலக்கியத்தைச் சீண்டிவிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜோசப் ஜேம்ஸை வரவேற்பதற்காக ஆற்றூர் ரவிவர்மா திறந்துவைத்த கதவுதான் இன்று புதிய தலை முறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் மலையாள இலக்கிய உலகில் பிரவேசிக்கவும் உதவுகிறது.

n

ஜோசப் ஜேம்ஸின் பிரச்சினைகள் சமகால வாழ்வில் கருத்துலகம் வகிக்கும் பங்கைப் பற்றிய நெருக்கடிகளைச் சார்ந்தவை. ஜே.ஜே.யே கருத்துக்களின் நடைமுறையாளனாகத்தான் அறிமுகமாகிறான். மனித வாழ்க்கையின் ஆதாரமான தேவைகளுக்கும் கருத்துக்களுக்குமான மோதலையே அவன் சந்திக்கிறான். வாழ்வு, சமூகம் ஆகியவை பற்றிய கருத்துக்களுடன் நெருங்கும் போது இந்தக் கருத்தாக்கங்களைப் பின்னொதுக்கிவிட்டு வாழ்வும் சமூகமும் பிறவும் அவற்றின் எதார்த்தச் சிக்கல்களுடன் பூதாகரமாக முன் நிற்கின்றன. அப்படியானால் மனித குலம் தோன்றிய நாள் முதல் எனது காலம் வரையில் சிந்தனைப் போக்குகள் பேணிக் கடைப்பிடித்துவந்த கருத்துக்களின் தேவையும் பங்கும் என்ன? சமூகத்துக்கான கருத்துருவாக்கத்தை ஓர் அமைப்பு ஏற்றுக்கொள்ள முடிகிறதா? தனிமனிதனால் சகஜீவிக்குக் கருத்தியல் ரீதியில் உத்தரவாதமளிக்க இயலுமா? அப்படி அளிக்கப்படும் உத்தரவாதத்தை அவன் ஏற்க மறுத்தால் என்ன செய்வது? திணிப்பதா? அந்தத் திணிப்பு அமைப்பின் அதிகாரத்தை அமல்படுத்துவது ஆகாதா? 'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு காரியத்தை மன ஒப்புதலோடு ஆற்ற வேண்டும். அல்லது இறந்து போய்விட வேண்டும். இரண்டும் எனக்குச் சாத்தியமில்லை. இதுதான் என் பிரச்சினை' என்கிறான் ஜே.ஜே.

இருப்பு, நிகழ்வு, செயல்பாடு ஆகிய மூன்று நிலைகளில் ஏற்படும் முரண் குறித்த பதற்றமே ஜே.ஜே.யை உலுக்குவது. உலுக்கலிலிருந்து விடுபட அவன் காணும் வழி இவற்றின் மீது போர்த்தப்படும் திரைகளைக் களைவது. முன்வைக்கப்படும் ஆயத்தத் தீர்வுகளை மறுப்பது. அடிப்படை சார்ந்த கேள்விகளை எழுப்புவது. இந்தக் கேள்விகள் நிரந்தரமானவை. பதில்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை. இந்தப் பொருளில்தான் ஜே.ஜே.வும் அவனை மையமாகக் கொண்ட நாவலும் நிகழ்காலத் தன்மை கொண்டவையாக நிலைபெறுகின்றன. அதுதான் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் புதிய வாசகர்களை ஈர்க்கவும் புதிய வாசிப்புகளுக்குத் தூண்டவும் இந்த நாவலைத் தகுதியுள்ளதாக்குகிறது என்று கருதுகிறேன்.

திருவனந்தபுரம்

சுகுமாரன்

31 மே 2006

குறிப்புகள்

1 ஜே.ஜே: சில குறிப்புகள் (ஆறாம் பதிப்பு / காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோயில் / 2004) பக்: 29

2 'The Strange Case of Billy Biswas' (Orient Paperbacks, New Delhi / 1971)

3 அருண் ஜோஷி: 1939 - 93. ஆங்கிலத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர். ஐந்து நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. அதிகம் கவனிக்கப்படாமல் போன எழுத்து இவருடையது. சாகித்ய அக்காதெமி பரிசு பெற்றவர்.

4 ஜே.ஜே: சில குறிப்புகள் (முதல் பதிப்பு / க்ரியா / சென்னை - 1981) பக்: 7

5 ஆளுமைகள் மதிப்பீடுகள் - சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோவில் - டிசம்பர் 2004) பக்: 356

6 இவன் என்டெ ப்ரிய சி.ஜெ - ரோஸி தாமஸ் (டிசி புக்ஸ், கோட்டயம் / 2005)

7 அன்வேஷணங்கள் - சி.ஜெ. தாமஸ் - தொகுப்பாளர்: கே.என். ஷாஜி. (நியோகம் புக்ஸ், கொச்சி / மே 2004) பக்: 109.

சித்திரங்கள்: பாஸ்கரன்

நன்றி: காலச்சுவடு ( இதழ் 79, ஜூலை 2006)

Sep 13, 2011

துக்கம் – வண்ணநிலவன்

எல்லாம்  முடிந்து விட்டது. இனிமேல் மதுரைக்கும் உடன்குடி ஜமால்மைதீன் குடும்பத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. பஸ்ஸில் சுபைதாளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த மெஹ்ருன்னிஸாவுக்கு சுபைதாளைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாகத்தான் இருந்தது. எவ்வளவு தங்கமான பையன் சுலைமான். ஒரு கெட்ட பழக்கம் உண்டுமா? மவுத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் இந்தப் imagesபையனுக்கு இப்படி ஆகியிருக்கவேண்டாமே என்று வருத்தப் பட்டார்கள். வருத்தப்படாதவர்கள் பாக்கியில்லை. மில்லில் டூட்டு முடிந்த பத்தாவது நிமிஷம் சுலைமானை வீட்டில்தான் பார்க்கலாம்.

பெட்டியைத் தூக்கிப் போகிற நேரத்துக்கு அந்தச் சின்ன முதலாளியே காரில் வந்துவிட்டார். வீடு ரொம்பச் சின்ன வீடு. ஒரே ஒரு பெஞ்ச் மட்டும்தான் வாசலில் போடப்பட்டிருந்தது. மில்லிலிருந்து வந்த ஜனம் பூராவும் சந்தில்தான் நின்றது. முதலாளி வந்துவிடுவார் என்று சொல்லித்தான் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தீபம் வைக்கிற நேரமாகிறது என்றுதான் அந்தச் சங்கத் தலைவரே – அவனும் இந்தச் சுலைமான¨ப் போல எவ்வளவு அருமையான புள்ளை – தூக்குகிறதுக்கு ஏற்பாடு செய்தான்.

சொல்லி வைத்தது மாதிரி நேரத்துக்கு முதலாளி வந்துவிட்டார். ‘சின்ன முதலாளி, சின்ன முதலாளி வந்தாச்சு..’ என்று ஒரே பேச்சாகக் கிடந்தது. அடக்கம் செய்கிற வரைக்கும் அவர் கூடவே இருந்தாராம். எவ்வளவு பெரிய கோடீஸ்வரன். அந்தப் புள்ளையாண்டான் காரை வீட்டுக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஜனத்தோடு ஜனமாய் அதுவும் அடக்க ஸ்தலத்துக்கு நடந்தே போயிருக்கிறதே. நல்ல மனுஷர்கள் எங்கேயும் இருக்கிறார்கள் என்று சொல்வதுதான் எவ்வளவு சரியானது.

இந்தப் புள்ளைக்குத்தான் எல்லாம் கொடுத்து வைக்காமல் போய்விட்டது. அவனும் வாப்பா, உம்மாவை அறியாத பையன். இதுவும் வாப்பாவைத் தின்ன பிள்ளை என்று பார்த்துத்தான், பட்டணத்து தாவுது சாச்சா சொல்லித்தான் எல்லாம் நடந்தது…என்னமோ ஆண்டவருக்கு இப்படித் தோணியிருக்குது, மூன்றாவது வருஷமே அறுத்துக்கிடனும் என்று.

மெஞ்ஞானபுரமே வந்துவிட்டது. ஒரு அஞ்சலில் உடன்குடி பஸ் ஸ்டாண்டில் போய் நின்றுவிடுவான். இந்தப் பிள்ளைகள் இரண்டும் என்ன செஞ்சிக்கிட்டிருக்குதுகளோ தெரியவில்லை. எல்லாம் ஹாஜியார் வீட்டில் பார்த்துக்கொள்வார்கள் என்றாலும், கிலேசப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த் மில்லுப் பணம் ஒரு வாரத்திற்குள் வந்துவிடுமாம். எட்டாயிரம் ரூபாய் வருமாம். அது வந்தால் நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டு விடலாம். ஆத்தாங்கரைப் பள்ளியில் ஆயிஷாவோட பையன் காப்ப்பிக் கடை வைத்து நடத்துகிறானாம். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கும். இங்கே பிறந்த வீட்டில்தான் கோரையை முடைந்து முடைந்து கை வாரியல் குச்சி மாதிரி ஆகிவிட்டது. அங்கேயாவது கொஞ்சம் உட்கார்ந்து சாப்பிடட்டும். ஆயிஷா பெற்றவளைப் பார்த்துக்கொள்ளுவாள். அதைத் தள்ளிவிட்டாயிற்று என்றால் அடுத்தது இந்த நொண்டிக் கழுத ஒண்ணுதான். இதுக்கும் ஒரு நொண்டியத் தேட வேண்டியதுதான். பாவி, பெத்ததுதான் பெத்தேன், ஒண்ணாவது ஆம்பளப் பிள்ளையாப் பெத்திருக்கக் கூடாதா?

பெரிய வீடுகளா இருந்தால், முதல் மாப்பிள்ளை போனால் அடுத்த மாப்பிள்ளையைப் பிடித்து விடுவார்கள். ஜமால் மைதீன் வாப்பா சாகும்போது ஒரு கட்டு கோரை புல்லைத்தானே விட்டுட்டுப் போயிருக்காரு.

சீக்கிரமே உடன்குடி வந்துவிட்டது. சுபைதாளை பஸ்ஸ்டாண்டிலேயே சாமான்களுக்குப் பக்கத்தில் காவலுக்கு வைத்துவிட்டு, பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் பக்கம் போய் முத்தையா கோனார் வண்டியை அழைத்துக்கொண்டு வந்தாள்.

வீட்டுக்குப் போனதுமே எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். துஷ்டி கேட்க வேண்டாமா? ஜமால் மைதீன் என்னதான் தாழ்ந்து போய்விட்டாலும் ஊர் வளமை என்று ஒன்று இருக்கிறதே? அதை விட்டுக் கொடுத்து விடுகிறது என்பதுதான் அவ்வளவு லேசானதா என்ன?

சுபைதா அழுதுகொண்டே இருந்தாள். என்ன இருந்தாலும் சுலைமான் அவளுக்கு மற்ற மனிதர்களைப் போன்றவன் இல்லையே. மூன்று வருடங்கள் அவனோடு உடனிருந்து வாழ்ந்தவள் இல்லையா? வந்து விசாரித்தவர்கள் எல்லோரும் சுலைமானுடைய மவுத்துக்கு ஆற்றாமைப்பட்டு விட்டுத்தான் போனார்கள். சில பெண்கள், குறிப்பாக கொருக்கு முதலாளியின் சம்சாரம்கூட அழுவது என்பது லேசானதல்ல.

மெஹ்ருனிசாவுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் ஆச்சரியாயிருந்தது. துஷ்டி கேட்க வந்தவர்கள் எல்லோருமே அவளைப் போலவே, மில்லில் இருந்து வருகிற பணத்தை வைத்து நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டுவிட வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லும்போதெல்லாம் மெஹ்ருன்னிஸா அதைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லாதவளைப் போல கண்களை இடுக்கிக்கொண்டு மெதுவான குரலில், “ஆமாம்ளா நானும் அப்படித்தான் நெனச்சிருக்கேன். ஆனா நாகூராரு என்ன நெனைச்சிருக்காரோ தெரிய இல்ல..இந்தப் புள்ள சுபைதாள நெனைச்சாதான் தாங்க முடியல. இத்தன வயசுல போயி இது இப்படி வந்து உக்காந்துட்டுதேங்கிறதை நெனச்சால் ஈரக்கொலையே அந்து விளுதாப்பல் இருக்கு’ என்று கண் கலங்க அழ ஆரம்பித்து விடுவாள்.

“பின்ன? பைத்தியக்காரி.. நீ பெத்தவளாச்சே கஷ்டமா இராதா?’” என்பார்கள்.

ஆனால், இதையும் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் சொன்னார்கள்.

***

 
தினமணிசுடர், டிசம்பர் 24,1994
நன்றி : தாஜ் ஆபிதீன் பக்கங்கள்
***

Sep 12, 2011

வீடும் வெளியும் – தி. ஜானகிராமன்

வெகு காலமாக ஓர் ஆசை; சின்னப் பையனாக இருந்த போதே முளைத்த ஆசை – யாரும் இல்லாத ஒரு காடு; பரந்த காடு; புலி, கரடி இல்லாத காடு. அங்கே, நாணலும் புல்லும் வேய்ந்த குடிசை. அதன் வாசலில் ஓர் ஆறு – ஆற்றின் இரு பக்கமும் ஆலும் அரசும் நாவலும் வாகையும் நெடியனவாக நிற்கின்றன. ஆற்று நீர் மந்தமாக நகர்கிறது. சூரியன் மரங்களின் இடுக்கு வழியே தங்க ஊசிகளைத் தோகையாய் விரித்துக் கொண்டிருக்கிறான். ஆற்று நீரில் கணுக்காலளவில் நின்று இரண்டு கைகளையும் சேர்த்து, நீரை அள்ளி அர்க்கியமாக விழவிடுகிறேன். ஐயோ! ஐயோ! என்ன சாந்தி! என்ன சாந்தி என்னுள்ளே நிரம்பி வழிகிறது! பெரிய இன்பம் வேண்டும் என்று ஆசைப்படும் thija-logo போதெல்லாம இந்தக் காட்சி தான் என்முன் நிற்கிற வழக்கம். ஆனந்தத்தின் எல்லையாக இது என் உள்ளே பொருள் கொண்டு நிற்கும். என்றோ ஒரு நாள் நான் இப்படி நிற்கப்போகிறேன். சாசுவதமாக நிற்கப் போகிறேன் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு. பள்ளிக்கூடம் இராது, வீடு இராது, வேலை இராது, அப்போது.

இப்போது அந்த ஆனந்தமே கைக்கு எட்டிவிட்டாற்போல் இருந்தது. அந்தக் காலத்திலிருந்து நிலைத்துவிட்ட கனவுதான் நனவாகிவிட்டதா? அதே காட்சியின் நடுவே நின்று கொண்டிருக்கிறேன். காவிரி அரை மைல் அகலத்துக்குப் பரந்து நகர்கிறது. முக்கால் ஆற்றின் வெள்ளம். நான் இந்த ஓரத்தில், மணலாக இருந்த பகுதியில் நிற்கிறேன். இக்கரையிலும் அக்கரையிலும் வாழைத் தோப்புகள். அப்பால் வானையளக்கும் சவுக்கைக் காடு. குடிசைக்குப் பதில் ஒரு சின்னக் கோயில். இக்கரையில் எனக்குப் பின்னால் நிற்கிறது. கண்ணுக்கு எட்டிய வரையில் ஜன நடமாட்டமே இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே மௌனம். நீர் தனக்குத்தானே மோதி ஓடுகிற சலசலப்பைத் தவிர, ஓர் ஓசை இல்லை. அக்கரை அரை மைல் தூரம். அங்கே தோப்பில் பாடும் பறவை ஒலிகூடக் காதில் விழாமல் அந்த மோனத்தில் அடங்கி விடுகிறது.

நான் தன்னந் தனியாக நிற்கிறேன். குளிக்கக்கூட மனம் இல்லை. சட்டையைக் கழற்றிப் பக்கத்தில் வைத்து மணல்மீது உட்கார்ந்தேன். இரண்டு மூன்று நாளாகவே மழை பெய்து காற்று குளிர்ந்து விட்டிருந்தது. இன்று இரவுகூடப் பெய்யப் போகிறோம் என்று சொல்வதுபோல் வான் நீலத்தில் பொதி பொதியாக அங்கும் இங்கும் திரண்டு நின்ற மேகங்களுக்குள் சூரியன் மறைந்தான். வெயில் மேலே பட்டதும் படாததுமாக விழுகிறது. சூடு இல்லாத வெயில். காலேஜிலிருந்து வெளியே வந்தபிறகு இப்படி உட்காரும் அநுபவமே அற்றுப்போய்விட்டது. அதனால்தான் குளிக்ககூட மனம் இல்லாமல் ஓடும் நீரில் ஆவியைக் கொடுத்து உட்கார்ந்து கிடக்கிறேன். ஒரு நிறைந்த சூனியம். நடு நடுவே தனிமையின் நினைவும் வருகிறது.

மணி ஒன்பதுக்குமேல் இருக்கும். ஊர்க்காரர்கள் விடிய விடிய வந்து குளித்துவிட்டுப் போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படியா நிர்ஜனமாக இருக்கும்? பட்டணத்தில் வெறும் கடலைத்தான் பார்க்கலாம். நீரின் சீற்றத்தைத்தான் பார்க்கலாம். இங்கே பரந்த நீர், பசுமை, சோலை, நிசப்தம் எல்லாவற்றிலும் தோய்ந்து கிடக்கமுடிகிறது. இருபது வருஷம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? என் நண்பனை இந்த மோனக் கடவுள்தான் தூண்டியிருக்க வேண்டும்.

ஏதோ முனகல். யாரோ பேசுகிறார்கள். இல்லை, பாடுகிறார்கள். ‘தன்மாதச்வா அஜாயந்த, ஏகேசோபயாதத;’ திரும்பிப் பார்த்தேன் இவர்தாம் முனகிக்கொண்டு வருகிறார். கிழவர்-கையில் ஒரு குடம், ஒரு செம்பு, கழுத்தில் சின்ன ருத்திராட்ச மாலை. இடையில் தூக்கிச் சொருகிய பஞ்ச கச்சம். என்னைப் பார்க்கிறாரா? இல்லை. பார்வை சுமார் போலிருக்கிறது. கிட்ட வந்த பிறகுதான் என்னைப் பார்க்க முயலுகிறார். கண்ணை இடுக்கிக் கொண்டு. ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. வாய்சொல்லும் ஸூக்தம் முடியவில்லை. ‘தேவா யத் யஜ்ஞம் தந்வாநா;, அபத்நந் புருஷம் பசும்…’ புருவத்தைச் சுளித்து என்னைப் பார்த்துக் கொண்டே வாய் முணுமுணுக்கிறது. செம்பைக் கீழே வைக்கிறார். குடத்தை வைக்கிறார். ரசவாதம் போலச் செம்பின்மீது தங்கமெருகு ஏறுகிறது. ‘ஸ்ர்வம் ம நிஷாண.’

“யாரு? வாசுவா?” என்று கண்ணை இடுக்கிக் கொண்டே கேட்டார் அவர். ‘ஸூக்தம்’ முடிந்ததும்.

“இல்லை.”

“பின்னே யாரு?”

“அசலூர்.”

“அசலூரா? எந்த ஊரு?”

“பட்ணம்.”

“இங்கே யாரையாவது பார்க்க வந்துதாக்கும்?”

“ஆமாம், ரத்னாசலத்தைப் பார்க்க வந்திருக்கேன்.”

“ரத்னாசலத்தையா? அவருக்குப் பந்துவோ??”

“இல்லை.”

“சிநேகமோ?”

“இன்னிக்குத்தான் சினேகமானார். என் சிகேகிதர் ஒருத்தர் கல்கத்தாவிலிருந்து எழுதியிருந்தார். ரத்னாசலத்தின் பிள்ளை ஜாதகத்தை வாங்கியனுப்புன்னு. அதுக்குத்தான் வந்தேன். ஊர் அழகைப் பார்க்கப் பார்க்கத் தாங்கவில்லை. அவரும் குளிச்சுச் சாப்பிட்டுவிட்டு ஜாதகத்தை வாங்கிண்டு போகலாமேன்னார், தங்கிவிட்டேன்.”

“நீங்க சொல்லணுமா? இதோ நான் இருக்கேனே, நான் இந்த ஊரே இல்லை. இந்த ஜில்லாவே இல்லை. தென்னார்காடு ஜில்லா. முப்பது வருஷத்துக்கு முன்னாலே ஒரு நாள் இங்கே உத்யோக காரியமாப் ’காம்ப்’ போட்டேன். வந்து காலடி வச்ச க்ஷணமே தீர்மானம் பண்ணினேன். ரிடையரானப்புறம் இங்கேதான் நிரந்தரமாத் தங்கறதுன்னு. அதுக்கப்றம் அஞ்சு வருஷம் உத்யோகம் பார்த்துட்டு ரிடையரனேன். மறுமாசமே இங்கு வந்து பத்துக் காணி நிலத்தை வாங்கினேன். ஒரு வீட்டையும் வாங்கினேன். செட்டில் பண்ணிப்பட்டேன். இருபத்தஞ்சு வருஷம் ஆயாச்சு, இது ஊரா? கிராமமா? த்போவனம் இல்லையோ!” என்று பரவசமாகப் பேசிக்க்கொண்டிருந்த கிழவர், குடத்தை மணல் போட்டுத் தேய்க்கத் தொடங்கினார். “ஸ்நானத்தைப் பண்ணிட்டு இங்கே இப்படியே மணலில் கால் மணி உட்காருங்களேன். பிரம்ம சாட்சாத்காரம் வறதா இல்லையா, பாருங்கள். மோனநிலை, சமாதி எல்லாம் உட்கார்ந்து கண்ணை மூடின மாத்திரத்திலே லபித்து விடும். அப்பேர்ப்பட்ட இடம்” என்று குடத்தை அழுத்தித் தேய்த்தார்.

அவர் மிகைப்படுத்தவில்லை. குளித்துவிட்டு உடனே உட்கார்ந்து கண்ணைமூடி அந்த மோனத்தை எட்ட வேண்டும் போல் இருந்தது. அப்படி உட்காரக்கூட அவசியம் இல்லை. கண்ணைத் திறந்த நிலையிலேயே பேசும் போதே அப்படித்தான் இருந்தது. ஆற்று வெளியில் அகண்ட மோனத்தில் எங்கள் பேச்சு, பெரு வெள்ளத்தில் பிடிமணலைத் தூவியது போல் அமுங்கிக் கிடந்தது.

“ஜாதகம் வாங்கியாச்சோ?” என்று கேட்டார் கிழவர்.

“இனிமேல்தான்.” 
“பையன் நல்ல பையன். டாட்டா நகர். ஆயிரத்துக்கும் மேலே சம்பாதிக்கிறான். கண்ணுக்கும் நன்னா இருப்பன். பையன் நல்ல பையந்தான்” என்று அடுத்த கேள்வியைக் கேளேன் என்கிறாற்போல் சொன்னார். நான் எப்படிச் சும்மா இருப்பது? “பையன் நல்ல பையன் தான்னா?” என்று கேட்டு விட்டேன்.

“நமக்குப் பையன்தானே ஸ்வாமி முக்கியம்? அதுக்காகச் சொன்னேன். தறைமுறை தலைமுறையா விசாரிச்சுண்டு போனா, சாத்தியப்படுமோ?” என்றார் அவர்.

“விசாரிக்கத்தானே வேணும்? ஏன், ரத்னாசலத்தின் குடும்பம் குலம் கோத்ரம் நல்லதுதானே?”

“ஏ ஒன் குடும்பம், சந்தேகமே வேண்டாம். ரத்னாசலந்தான் சரியா இல்லை. நல்லவர்தான். ஆனா சகவாசம் பொல்லாதோல்லியோ? முப்பது வயசிலே யாரோ அவரை ரேஸு, ரங்காட்டம்னு ஆசை காட்டி இழுத்து விட்டுட்டான். வேலையில் சூரன். அதனாலெதான் பல சீனியரை எல்லாம் பார்க்காம, சின்ன வயசாயிருந்தாலும் பாதகமில்லேன்னு டிப்டி கலெக்டராப் போட்டா அவரை. நன்னந்தான் நிர்வாகம் பண்ணினார். முக்காங்குடிப் பண்ணையோட ரொம்ப சிநேகமாயிருக்க ஆரம்பித்தார். அவனுக்கும் சின்ன வயது. பரம்பரைச் சொத்து. ஆத்திலே தண்ணி அமோகமாகப் போறது. காரியஸ்தன், ஆட்கள் எல்லாம் வெள்ளாமையைப் பண்ணி நெல்லும் பணமுமாகக் கொண்டு குடுத்துடறான். இந்தப் பிரபுகளுக்கு வேலை ஏது? வர்ற பணத்தை, பாங்கிலே போட வேண்டியது, சாப்பிட வேண்டியது, செலவழிக்க வேண்டியது. படிப்பு இருந்தா ஒரு பிஸ்னஸ் பண்ணுவோம், தொழில் பண்ணுவோம், பெருக்குவோம்னு மனசு பாயும். முக்காங்குடிப் பையனுக்கு மெட்ரிகுலேஷனே தேறலே. குதிரைப் பந்தயத்துக்குப் போவன். ஜமாவா ஹோட்டலுக்குப் போவான். அவனோட போய் டிப்டி கலெக்டர் சேரலாமோ? சேர்ந்தாலும் அவன் பழக்கத்தையெல்லாம் கத்துக்கலாமோ? என்னமோ கஷ்டக்காலம்! கத்துனூட்டார். கெட்டதுதானே சீக்கிரமாக் கத்துக்க முடிறது? ரத்னாசலத்துக்கு ஆயிரம் ஆயிரமாக் குதிரைப் பந்தயத்திலே போக ஆரம்பிச்சுட்டுது. சொத்தை அடகு வச்சு ஆடினார். ஆபீஸார்ஸ் கிளப்பிலே வேற ரங்காட்டம். கடனுக்குப் பூர்வீகம் எல்லாம் போச்சு. மாமனார் வந்தார். நாலுநாள் உட்கார்ந்து மிஞ்சியிருக்கிற நாலு காணியைப் பொண்ணு பேருக்கு எழுதி வைக்கச் சொல்லிட்டுப் போனார். அதை எடுக்க முடியலியா? வெளியிலே கடன் வாங்கினார் ரத்னாசலம். கடன்காரர்கள் சர்க்காருக்கு எழுதிப்டான்கள். சம்பளத்தை ஈடுகட்டிப்ட்டான் சர்க்காரிலே. கடைசியிலே இந்தச் சள்ளை தாங்காம, கட்டாயமா ரிடயர் பண்ணிவிட்டான். நாப்பத்தஞ்சு வயசிலே ரிடயராகிப் பத்து வருஷமா ஊரோட உட்கார்ந்திருக்கார். அவரோட தாத்தா நாள்ள நாப்பது காணி சொத்தாம். எப்படி இருந்தது குடும்பம். எப்படியாயிடுத்து! நினைச்சா வருத்தமாத்தானே இருக்கு? சொல்லிப்டேன். ஆனா வீணாச் சொல்லப்படாது, பையன்கள் தங்கமும் வெள்ளியுமாத்தான் பொறந்திருக்கு. இப்ப மூத்த பையனுக்குத்தானே ஜாதகம் வாங்க வந்திருக்கேள்?”

“ஆமாம்.”

“தங்கமான பையன். ரெண்டாவது பையன் அதுக்கு மேலே. அவன் கணக்குப் படிச்சுட்டுப் பாரிஸுக்கு மேல் படிப்புக்கு போயிருக்கான். மூணாவது பையன் காலேஜிலே படிக்கிறான். வீணாச் சொல்லப்படாது, தங்கமான பையன்கள். அவருக்கு என்னமோ கஷ்டகாலம், புத்தி இப்படிப் போச்சு; தலையைக் குனிஞ்சுக்கும்படியா ஆயிடுத்து.”

“வேறே ஒண்ணும் பழுது இல்லையே?”

“பழுதே கிடையாது ஸ்வாமி. இந்த இடம் கிடைச்சுதுன்னா அதிஷ்டம். உங்க சிநேகிதர் என்ன பண்ணிண்டிருக்கார்?”

“அவரும் பெரிய  உத்தியோகந்தான். ஒரு பெரிய கம்பெனியிலே விற்பனைப் பிரிவுக்குத் தலைவரா இருக்கார்.”

“பிசினெஸ் நெளு தெரிஞ்சவர். லோகம் தெரிஞ்சவர். இல்லாட்டா ஜாதகம் வாங்கறதுக்கே நேரே உங்களை வரச் சொல்லி எழுதுவாரா? முடிச்சு விடுங்கோ” என்றார்; “அது சரி நீங்க என்ன பண்றேள் பட்டணத்துலே?”

வேலையைச் சொன்னேன்.

“சொந்த ஊர்?”

அதையும் சொன்னேன்.

“அதுவும் செழிப்பான ஜில்லா தான். ஆனா அதுக்கும் இதுக்கும் ஒறை போடக் காணாது. உங்க ஊர்லெ நூறு ஏக்கரும் சரி; இந்த ஊர்லே பத்து ஏக்கரும் சரி. வருஷம் முழுக்க ஆத்திலே பிரவாகம் போயிண்டே இருக்கும். கழனியும் காடும் விளைஞ்சிண்டே இருக்கும். இல்லாட்டா எங்கேயோ திருக்கோவிலூர் கிட்டப் பிறந்துவிட்டு இங்கே வந்து பணத்தைக் கொட்டி வாங்குவேனா? பத்துக்காணிதான், உங்க ஊர்லெ ஒண்ணரை வேலின்னு சொல்லுவா. ஆனா இந்தப் பத்துக் காணியும் உங்க ஊர்லெ ஏழெட்டு வேலி வாங்கறத்துக்கு சமம்னேன். என்னமோ பகவான் மனசிலே பூந்து வாங்குன்னு நல்ல புத்தியைக் கொடுத்தார். வாங்கினேன். சௌக்யமா இருக்கேன். சௌக்கியமா சாப்பிடறது இருக்கட்டும்; இந்த எடத்தைச் சொல்லுங்கோ, ஒரு நாளைக்கு இப்படிக் குளிக்கக் கெடைக்குமா உங்க ஊர்லியும் எங்க ஊர்லியும்? பாருங்கோ, அகண்ட சச்சிதானந்தமே முன்னாலெ நிக்கறாப்பலவே இருக்கா இல்லையா? இருபத்தஞ்சு வருஷமா ஒரு நாள் பெசகலெ. இங்கே வந்து குளிக்கிறேன். கோயில் திண்ணையிலே உட்கார்ந்து கண்ணை மூடிக்கிறேன். கால தேசம் எல்லாம் அழிஞ்சு போறது. எத்தனை நேரம் உட்கார்ந்திருக்கேன்னு எனக்கே தெரியலை. ஒரு மணியோ, ரெண்டு மணியோ, இப்ப வயசு எண்பது முடிஞ்சு போயிடுத்து. தள்ளலை. இல்லாட்டா இப்படியா ஒன்பது மணிக்கு வருவேன் ஸ்நானத்துக்கு? பாஷண்டன் மாதிரி? நான் வந்து குளிச்சு, ஜபத்தை முடிச்சிண்டு எழுந்துக்கறபோதுதான் சூரியோதயம் ஆகும். ரெண்டு வருஷம் ஆச்சு. முடியலை.”

கிழவர் ஒல்லி அல்ல; நடுத்தரப் பருமன். நல்ல சதைப்பற்று. ஆனால் எண்பது வயசு என்று சொல்லமுடியவில்லை.

குளிக்கத் தொடங்கினார் அவர். நானும் குளிக்கத் தொடங்கினேன். மீண்டும் மீண்டும் அவர் ஊரின் வளத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். என் ஜில்லா டெல்டாவானாலும் இந்த ஊருக்குக் கால்தூசு பெறாது என்று என் மண்டையில் ஏற்றிக் கொண்டேயிருந்தார்.

“ஒங்க ஊர்லே ஒரு ஏக்கர் என்ன விலையாறது இப்ப?”

“சுமாரா இருந்தா மூவாயிரம் ஆகும். நல்லதாயிருந்துதுன்னா ஐயாயிரம்.”

“ரொம்ப நல்லதாயிருந்தா?”

“ஏழாயிரம் ஆகலாம்.”

“இந்த ஊர்லெ படுமோசமான பூமியாயிருந்தா ஏக்கர் பன்னண்டாயிரம், ஒண்ணா நம்பர் நிலமாயிருந்தா இருபதாயிரம் முப்பதாயிரம் ஆகும். இருந்தாலும் குடுக்க மாட்டான். லட்ச ரூபா குடுத்தாலும் கெடைக்காதுன்னேன். நானே அந்தக் காலத்திலே, நெல்லு கலம் ஒண்ணே கால் ரூபா வித்த காலத்திலே, காணிக்கு எட்டாயிரம் குடுத்து வாங்கினேன்னா, இப்ப கேப்பானேன்? இப்ப ரூபா மதிப்புத்தான் ஆறிலே ஒண்ணுகூட இல்லையே. அப்ப படி மூணு அணா அரிசி. இப்ப ஒண்ணரை ரூபாய்க்குக் கெடைக்கலே. பாத்துக்குங்கோ!”

“நீங்க ரொம்ப தீர்க்க தரிசனத்தோடதான் வாங்கியிருக்கேள்.”

“தீர்க்கமாவது தரிசனமாவது! ஏதோ வாச்சுது. எங்க தகப்பனார் இருந்து, அவருக்கும் நிலபுலன்னு இருந்தா இப்படி வாங்க விட்டிருப்பாரா? அவரும் இல்லை. ஒரு குழி நிலமும் அவருக்கு இல்லை. ஊரிலே அவருக்கு நிலம் இருந்திருந்தா, மேலே வாங்கிறதை அங்கன்னா வாங்கச் சொல்லியிருப்பார்? எனக்கும் சுயார்ஜிதம், நானாக் கஷ்டப்பட்டேன்? சம்பாதிச்சேன். அஞ்சு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணினேன். மிச்சம் இருக்கிறதை, பகவானேன்னு இங்கே கொண்டு போட்டேன். போட்டேனோ பிழைச்சேனோ! ஒண்ணும் குறைச்சல் இல்லாம ஏதோ நடந்துண்டு வரது! காவேரி ஸ்நானம்.”

“நிஷ்டை!”

“நிஷ்டை, சமாதி, அகண்ட சச்சிதானந்தத்தை இந்த இடத்திலேன்னா பார்க்கணும்? வானாகி, வெளியாகி, எங்கும் பிரகாசமாகி, நின்ற பரிபூரண நந்த பரமே என்பாளே, அதை இங்கேன்னா பார்க்கணும்! இந்த ஊர்லே இருக்கிறவாளுக்கு அது தெரியலே. நிலம்புலம், சாகுபடி, மாடுகன்னுன்னு காசே தியானமா, பரம வ்ராத்யன்கனா இருக்கான்கள். போகட்டும் போகட்டும். ‘அத்வைதம் கோடிஜன்மஸு’ ங்கறாப்பல கோடி ஜன்மம் எடுத்தால்தானே அத்வைத ஆசை வரும்?”

இருபத்தைந்து வருஷமா ஒரு நாள்கூட விடாமல் இங்கே குளித்து, தினமும் அகண்ட மோன வெளியில் ஆழ்ந்துவிடும் கிழவரைக் கண்டு அசூசையாகத்தான் இருந்தது. அவர் மணலையடைந்து தலையைத் துவட்டிக் கொண்டார்.

“சர்க்கார் உத்யோகத்திலேருந்துதான் ரிடையரானாப்பலையாக்கும்?” என்று கேட்டேன்.

“ஆமாம் ஸ்வாமி, தாசில்தாரா இருந்தேன். கௌரமா இருந்தேன். நல்ல வேளையா அப்பவே ரிடயராயிட்டேன். இப்பத்தான் ஜாதி வாண்டாம், மதம் வாண்டாம், எல்லோரும் ஒண்ணாயிடுங்கோங்கறாளே. இதுக்கெல்லாம் முன்னாலேயே நான் ஒதுங்கிட்டேன்.”

என்னுடைய மோனங்கூடச் சற்றுக் கலைந்தது. தாசில்தாருக்கு அந்தக் காலத்தில் இருநூறு ரூபாய்தான் சம்பளம். அந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு ஐந்து பெண்களுக்குச் கல்யாணம் செய்து, எண்பதாயிரம் ரூபாய்க்குப் பத்துக்காணி நிலம் வாங்கி, ஒரு வீடும் வாங்கி… முப்பது வருஷம் இரு நூறு ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அதச் செலவழிக்ககாமல் சாப்பிடாமல் இருந்தால்தானே எண்பதாயிரம் சேர்த்திருக்க முடியும்?

சிறிது நேரம் இந்தப் பிரமாண்ட சாதனையை நினைத்து மலைத்துப்போய் நின்றவன், “எப்படி இவ்வளவு வாங்க முடிஞ்சுது?” என்று என்னை அறியாமல் கேட்டுவிட்டேன்.

“முடியும். அது இந்தக் காலம் இல்லை. தாசில்தார்னா கலெக்டர், கவர்னருக்கு இருக்கிற மரியாதை இருந்தது அப்பல்லாம். ’காம்ப்’புன்னு போனா, ஒரு ஒரு இடத்திலேயும் உள்ளங்கையிலே வச்சுன்னா ரச்சிப்பா. என்ன மரியாதை! என்ன உபசாரம்! அந்த பயம் பக்தி எல்லாமே போயிடுத்தே இப்ப. இருந்த இடம் தெரியலையே!”

கிழவரை இதே காவேரியில் தலையைப் பிடித்து நீரில் அமுக்கி, ஐந்து நிமிஷம் அப்படியே வைத்திருந்தால்…?

சீ! என்ன பாபசிந்தை!

ஒரு நாள் நிஷ்டையில் எல்லாப் பாவங்களும் சாம்பலாகி விடும். இருபத்தைந்து வருஷம் தினந்தோறும் காலதேசம் அறியாத நிஷ்டை என்றால் அவருக்கு முன்னும் பின்னுமான பத்துத் தலைமுறைகளின் பாவம் எரிந்து சாம்பலாகியிருக்கும்!

என்ன பாபசிந்தை!

கிழவர் பளபளவென்று தங்கமாகத் தேய்த்த குடத்திலும் செம்பிலும் காவிரி நீரை மொண்டு கையில் எடுத்துக் கொண்டே, “நீங்க வரதுக்கு நாழியாகும் போலிருக்கே?” என்று விடை பெறுகிற மாதிரி கேட்டார்.

“நீங்க போங்கோ, நான் வரதுக்கு இன்னும் ரொம்ப காலமாகும்” என்றேன்.

நேரம் என்று சொல்ல நினைத்துக் காலம் என்று வாய் தவறி வந்து விட்டது.

***

நன்றி: ஐந்திணைப் பதிப்பகம் / ‘அமரர்’ தி.ஜானகிராமனின் ‘மனிதாபிமானம்’-தொகுப்பு
தட்டச்சு:
தாஜ் | satajdeen@gmail.com ஆபிதீன் பக்கங்கள்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்