Sep 3, 2011

செவ்வாய் தோஷம் - புதுமைப்பித்தன்

1
 

     முருக்கம்பட்டிக்கு லோகல் பண்டு ஆஸ்பத்திரிதான் உண்டு. அதாவது சின்னக் காய்ச்சல், தலைவலி, கைகால் உளைச்சல், வெட்டுக்காயம் அல்லது வேனல்கட்டி - இவைகளை மட்டிலுமே குணப்படுத்துவதற்கான வசதி அமைந்தது. கிராமவாசிகள் திடமான தேகமுள்ளவர்களானதால் பட்டணத்துக்காரர்களைப் போல் நாகரிகமான வியாதிகளைப் பெறுவதில்லை. கொய்னாpudu4 மாத்திரம் மத்ய சர்க்காரின் மலேரியா எதிர்ப்பு முயற்சியால் கிராமவாசிகளிடையே இலவச விநியோகத்திற்காக வேண்டிய மட்டிலும் உண்டு.

     டாக்டர் வீரபத்திர பிள்ளை எல்.எம்.பி. அந்தப் பிரதேசத்தின் தேக சௌக்கியத்திற்குப் பொறுப்பாளியல்லரானாலும், கிராமவாசிகள் வருவித்துக்கொள்ளக்கூடிய வியாதிகளைத் தடுக்க முயற்சி செய்யும் பாத்தியதை அவருக்கு உண்டு. 'கைராசிக்காரர்' என்ற அக்கிராமவாசிகளின் பட்டம் அவருடைய வைத்திய கௌரவத்திற்குப் பின்னொளியாக இருந்துவந்தது.

      அவருடைய வைத்தியம் தெரிந்த வியாதிகளுக்கு ராஜ பாதை; அவருக்குச் சிறிது சந்தேகம் தோன்றிவிட்டால் போதும், சாதாரணமானதானாலும் வியாதியஸ்தனை நூறு சதவிகிதம் பயமூட்டையுடன், வண்டி கட்டி, ஜில்லா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவார்.

     கம்பௌண்டர் வெங்கிடசாமி நாயுடு அப்படியில்லை. அவருடைய ஞானம் இரண்டு களஞ்சியங்களில் இருந்தது; ஒன்று, யூனியன் ஜாக் கொடி போட்ட - டாக்டர் பிள்ளையவர்களின் கைக்குள் அடங்கிய - சீமைச் சிகிச்சை; இன்னொன்று, எண்ணற்ற ஓலைச் சுவடிகளிலிருந்து திரட்டப்பட்ட மூலிகை சாஸ்திரம். வியாதியஸ்தனைக் குணப்படுத்துவதைவிட, குறிப்பிட்ட முறையின் தன்மையைப் பரிசீலனை செய்வதில் நெஞ்சழுத்தமுடையவர். ஆயுர்வேத சாஸ்திரத்தில் ஏற்பட்ட அபாரப் பிரேமையின் விளைவே அவருடைய இந்த நெஞ்சழுத்தத்திற்குக் காரணம் என்று சொல்லவேண்டும்.

     முருக்கம்பட்டி ஆஸ்பத்திரியில் பெரும்பான்மையான நாட்களில் குழந்தைகளுக்குப் பேதி மருந்து அல்லது மலச்சிக்கலால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து, இவை தயாரிப்பதிலேயே காலம் கழிந்துவிடும். அதனால் பிணமறுக்கும் கிடங்கின் பூட்டு துருப்பிடித்துச் சிக்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை.

     கிடங்கு, ஆஸ்பத்திரிக் காம்பவுண்டின் கீழ்க்கோடி மூலையில் இருக்கிறது. அன்று ராத்திரி பத்து மணி சுமாருக்கு ஆஸ்பத்திரித் தோட்டியான ராக்கன் வந்து எசமானிடம் கோயிலூரிலிருந்து பிணம் ஒன்று வந்திருப்பதாகச் செய்தி அறிவித்து, சாவியை வாங்கிக் கொண்டு போய்த் திறக்கக் கஷ்டப்பட்டான். முடியாமற்போகவே பூட்டுச்சிக்கெடுக்க டாக்டர் அம்மாளிடம் எண்ணெய் வேறு வாங்கிச் செல்ல வேண்டியதாக இருந்தது.

     கோயிலூர் கி.மு., அந்த வட்டாரத்தில் 'ரவுண்டு வரும்' ஏட்டு கந்தசாமி பிள்ளை - எல்லாரும் அந்தக் கேஸை எடுத்து வந்திருந்தார்கள். கேஸ், கோயிலூர்ப் பள்ளனுடைய பிரேதம். அவர்கள் சொன்ன விபரந்தான் விசித்திரமாக இருந்தது; அது வைத்திய சாஸ்திரத்துக்கு அதீதமானது.

     ரத்தக் காட்டேரி அடித்துவிட்டதால், அந்தப் பள்ளன் மாண்டு போனதாகக் கூறப்படுகிறது.

     இ.பி.கோ.வில் பேயடிப்பதற்குத் தனிப் பிரிவு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டிருந்தும், ஏட்டுப்பிள்ளை கூட வெட்டியான் கூற்றை நம்பி ஆமோதிக்கிறார்.

     டாக்டர் வீரபத்திர பிள்ளைக்குப் பிரேத பரிசோதனையெல்லாம் வைத்தியக் கலாசாலையில் முதல் இரண்டு வருஷங்களில் கற்றுக் கொள்வதற்காக அநாதைப் பிரேதங்களை அறுத்துப் பார்த்ததோடு முடிவடைந்துவிட்டது. பட்டிக்குள் சரணாகதியடைந்த பிறகு அவருக்கு இதுவரை பிரேத பரிசோதனை உத்தியோகம் ஏற்பட்டது கிடையாது. அப்படிப்பட்டவருக்கு இதுமாதிரி விதிவிலக்கான ஒரு கேஸ் சம்பவித்தது ஊர்க்காரர்கள் பொதுப்பகையில் செய்த குற்றத்தை மறைப்பதற்குச் செய்யப்படும் ஒரு முட்டாள்தனமான முயற்சியோ என்று நினைத்தார்.

     கம்பௌண்டர் நாயுடுவுக்கு ஆள் அனுப்பிவிட்டு, "யாருடா அது?" என்ற அதட்டலுடன், பாதக்குறடு சரல்கற்களில் கிரீச்சிட அவர் பிரேதக் கிடங்குக்குச் சென்றார்.

     இவரைக் கண்டதும் ஏட்டு கந்தசாமி பிள்ளை போலீஸ் ஸலாம் செய்து, தமது கேஸ் புஸ்தகத்தை நீட்டிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு, விலகி நின்றார். "என்ன கந்தசாமி பிள்ளை, பய கதை விடரானே!" என்று சிரித்தார் டாக்டர்.

     "பேய் பிசாசு இல்லை என்று சொல்ல முடியுமா?" என்றார் கந்தசாமிபிள்ளை.

     "பயந்தான் பேய். ரிப்போர்ட்லெ பேயடிச்சதுன்னு எழுதி வையாதியும், சிரிச்சுத் துப்பப்போறான்!" என்றார் டாக்டர்.

     "நீங்கள்தான் முகத்தைப் பாருங்களேன்! அப்பந் தெரியும் - ஏலே வெட்டியான், அந்தச் சாக்கெ விலக்கடா!" என்று உத்தரவு போட்டார் கந்தசாமி பிள்ளை.

     டாக்டர், கையில் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, குனிந்து பிரேதத்தைப் பார்த்தார்.

      கண் பிதுங்கி வெளியே தள்ளிக்கொண்டிருந்தது. சொல்ல முடியாத பயத்தில் முகத்தை வார்ப்பு எடுத்த மாதிரி அவ்வளவு கோரம்! கிட்டிப்போன பற்களுக்கிடையில் நாக்கு வெளியே தள்ளிக் கிடந்தது. பல் நாக்கில் பதிந்து விறைத்துக் கொண்டதால் வாயை அகற்றிக்கூட நாக்கை உள்ளே தள்ள முடியாது.

     "சாக்கை அப்புறம் எடுத்தெறி!" என்றார் டாக்டர்.

     பிரேதம் ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்தது. முதுகில் பலத்த அறை விழுந்ததால் அதைத் தேக்குவதற்காக உடம்பை வளைத்த பாவனையில் வளைந்துவிறைப்பேறிக் கிடந்தது. கை விரல்களும் வக்கிரமாக முறுக்கிக் கிடந்தன.

     "சரி, உள்ளே எடுத்துக்கொண்டு போய் மேஜையிலே கெடத்துங்கடா!" என்று சொல்லி நிமிர்ந்தார் வைத்தியர்.

     "உடம்பில் கோறை ஒன்றையும் காணவில்லை. ஆனால் அடிக்குக் குனிந்த மாதிரிக் கிடக்கிறது" என்று ஏட்டைப் பார்த்தபடியே கூறினார்.

     அச்சமயம் இருட்டில் ஓர் உருவம் தெரிந்தது. "அதாரது?" என்ற குரலுக்கு, "நான் தான் நாயுடு!" என்று சொல்லிக்கொண்டே கம்பௌண்டர் அருகில் வந்தார்.

     "பேயடிச்ச கேஸ்கூட நம்ம ஆஸ்பத்திரிக்கு வருதுவே!" என்று சிரித்தார் டாக்டர் வீரபத்திர பிள்ளை.

     "பேயா, அடிச்சா சாகத்தான்! இரண்டு மூன்று நாளாக இந்தப் பக்கம் ஒரு ரத்தக் காட்டேரி தெரிகெட்டுப்போய் அலையிது. அதாத்தானிருக்கும்!" என்றார் நாயுடு.

     "நீரும் பேயை நம்புறீரா - உருப்பட்டாப்லேதான்!" என்று சொல்லி, டாக்டர், "ஏலே இன்னுமா - எத்தினி நேரம், சவத்தெ இளுத்துக் கெடத்த?" என்று அதட்டினார்.

     "வே, கந்தசாமி பிள்ளை, நம்ம தோட்டி பாத்துக்கிடுவான் - நீங்க வேணும்னா ஆஸ்பத்திரி வெராண்டாவுலே படுத்துக்கிடுங்க - காலையிலே வேலையைச் சுருக்கா முடிச்சுடுவோம்!" என்று சொல்லிக் கொண்டே ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்கு எதிரில் உள்ள தமது வீட்டிற்குப் புறப்பட்டார்.

     "ஸார், ஒரு நிமிசம், நான் ஒரு பார்வை பார்த்துப்புட்டு வந்திருதேன்!" என்றுகொண்டே உள்ளே நுழைந்தார் கம்பௌண்டர் நாயுடு.

     டாக்டர் சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றார்.

     உள்ளே சென்ற கம்பௌண்டர் நாயுடு சிறிது நேரத்தில் விறைக்க விறைக்க ஓடிவந்தார்.

     "வெட்டியான் சொல்லுறதில் அணுவளவு சந்தேகமில்லெ; ரத்தக் காட்டேரிதான்!" என்றார் நாயுடு.

     "உமக்கும் என்ன பைத்தியமா? வேறெ வேலெ இருந்தாப் போய்ப் பாரும்!" என்று அதட்டினார் டாக்டர்.

     "இப்பவே வேணும்னா அறுத்துப் பாருங்க! நான் சொல்லுறது சரியா தப்பா என்று தெரியும்" என்றார் நாயுடு.

     "பார்க்க வேண்டியது உமது மூளைக்குத்தான் வைத்தியம்!" என்று சொல்லிக்கொண்டே மேல் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, கைகளைத் தோளுக்கு மேல் உயர்த்தி சுடக்கு முறித்துக் கொட்டாவி விட்டார் டாக்டர். 

       "நீங்க எங்கூட ஷெட்டுக்குள் வாருங்க, காண்பிக்கிறேன்!" என்று தமது கட்சியை நிரூபிக்க அவசரப்பட்டார் கம்பௌண்டர்.

     "என்னதான் சொல்லுமே!"

     "நீங்க வாருங்க, ஸார்!" என்று ஷெட்டுக்குள் நுழைந்து, பிணத்தின் மீது கிடந்த சாக்கை அகற்றினார் கம்பௌண்டர்.

     "டேய் தோட்டி! விளக்கைக் கொஞ்சம் ஒசத்திப் பிடி!" என்று சொல்லி, மடியிலிருந்து சூரிக்கத்தி ஒன்றை எடுத்தார்.

     அவர் என்னதான் காட்டப் போகிறார் என்பதைப் பார்க்க ஷெட் வாசலில் நின்றுகொண்டிருந்த டாக்டர், "என்னவே வேலை!" என்று சொல்லுமுன், பிணத்தின் கையில் கத்தியைக் குத்திக் கிழித்து, மாங்காயைப் பிளந்து காட்டுவதைப்போல், காயத்தை விரித்துப் பிடித்துக் காண்பித்து, "இதில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கிறதா பாருங்கள்!" என்றார்.

      "ரத்தம் இருந்தாலும் பிணமான பின் வடிவதை எங்கே கண்டீர்?" என்றுகொண்டே நெருங்கினார் டாக்டர்.

     "ரத்தம் வடியாது, உறைந்தாவது இருக்க வேண்டுமே! எங்கே பாருங்கள்?" என்றார் நாயுடு.

     டாக்டர் குனிந்து பரிசோதித்துப் பார்த்தார். ரத்தத்தை வடிகட்டிப் பிழிந்தெடுத்த சதைபோலக் கிடந்தது பிணம்.

     டாக்டர் வேறு ஓர் இடத்தில் பரிசோதிக்கும்படி கூறினார். அங்கும் அப்படியே இருந்தது. டாக்டருக்குப் புல்லரித்தது.

     "அப்புறம்!" என்றார். அவருடைய நாக்கு மேல்வாயில் ஒட்டிக்கொண்டது.

     "வாருங்க, போவோம்!" என்று வெளியே வந்த கம்பௌண்டர், "இவன் ரத்தம் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டுமா?" என்றார். "கோயிலூர்க் கணியான் செத்துப் போனானே அவனைப் பொதைக்கத்தானே செய்தார்கள்?" என்று கேட்டார் தோட்டியிடம்.

     "ஆமாஞ் சாமி! அங்கனெதான் இவனும் மாட்டிக்கிட்டான்!" என்றான் தோட்டி ராக்கன்.

     "எப்படா நடந்தது?"

     "சாயங்காலம் சாமி!"

     "வருகிறீர்களா, போவோம்?" என்றார் கம்பௌண்டர்.

     "அவ்வளவு நிச்சயமா உமக்கு? அப்படியானாப் போவோம்!" என்றார் டாக்டர்.

     "ஏட்டுப்பிள்ளையையும் கூட்டிக்கொள்ளுவோம், ஏலே ராக்கா, மம்பட்டியை எடுத்துக்கிட்டு கூட வா!" என்றார் நாயுடு.

     "நான் வரமாட்டேன் சாமி, எனக்குப் புள்ளை குட்டியில்லே!" என்றான் ராக்கன்.

     "நாங்க இருக்கறப்ப என்னடா பயம்? சும்மா வா, ஒண்ணும் நடக்காது!" என்று தேற்றினார் கம்பௌண்டர்.



   2

     இந்தப் பரிசோதனைக் கோஷ்டி கோயிலூர் பள்ளர் சுடுகாட்டை அடையும்போது மணி பன்னிரண்டு.

     வானத்திலே துளி மேகங்கூடக் கிடையாது. நிலவொளியும் இல்லை, வெறும் நட்சத்திரப் பிரகாசம்தான்.

     சுடுகாடு ஆற்றங்கரையிலிருந்தது. அது ஒரு வெட்டவெளி. நாலைந்து பர்லாங்குக்கப்புறந்தான் அந்தப் பகுதியில் மரம் என்ற பேருக்கு ஒன்றிரண்டு பனை முளைத்துக் கிடந்தது.

     "எங்கடா அவனைப் பொதெச்சாங்க?" என்று அதட்டினார் டாக்டர். தம்மை இழுத்தடிக்கிறானே அந்தக் கம்பௌண்டர் என்று அவருக்கு நினைப்பு.

     "அதோ, அந்தக் குத்துக்கல் தெரியுதே அதுதான் சாமி!" என்றான் ராக்கன். அவன் சொல்லி வாய் மூடவில்லை...

     நாயின் ஊளை போல ஆரம்பித்த ஒரு சப்தம் கணநேரத்துக்கு நேரம் சுருதி கூடி, ஆந்தையின் அலறலாக மாறி, வெறும் பேய்ச் சிரிப்பாக வானமுகட்டைக் கிழித்தது.

     கடகடவென்று விக்கி விக்கிச் சிரிப்பது போன்ற அலறல் ஒரு கணம் வானத்தையே நிறைத்தது.

     அடுத்த கணம் அமைதி.

     அதே பேய் அமைதி!

     நடந்து கொண்டிருந்தவர்கள் யாவரும் தரையுடன் தரையிட்டது மாதிரி கல்லாய் உறைந்துநின்றனர்.

     "சாமி, நான் வரமாட்டேன், பேய்!" என்று ஓட்டம் பிடித்தான் ராக்கன்.

     மண்வெட்டி, ஓடிய வேகத்தில் அவன் கைவிட்டு நழுவியது. அதை எடுத்துக்கொள்ள அவன் தாமதிக்கவில்லை.

     "நாய் ஊளையிட்ட மாதிரி இருந்துதல்ல!" என்றார் ஏட்டுப்பிள்ளை.

     "சுடுகாட்டில் நாய்க்கா பஞ்சம், அது நாயில்லை!" என்றார் கம்பௌண்டர்.

     மூவரும் அந்தக் கணியானைப் புதைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

     கம்பௌண்டர் நாயுடு விளக்கை உயர்த்திப் பிடித்துக் கொள்ள, ஏட்டுப்பிள்ளை தைரியமாக வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார்.

     ஆற்றருகில் உள்ள இடந்தானே, வேலை சுளுவாக நடந்தது.

     "அதோ வெள்ளையா என்னமோ தெரிகிறது!" என்றார் கம்பௌணடருடன் ஒண்டிக்கொண்டிருந்த டாக்டர்.

     ஏட்டுப்பிள்ளை மண்வெட்டியைக் குழிக்கு வெளியில் எறிந்துவிட்டு, கைகளால் மண்ணைப் பரசி எடுக்க ஆரம்பித்தார். கம்பௌண்டரும் கையிலிருந்த விளக்கை டாக்டரிடம் கொடுத்துவிட்டு, உள்ளே இறங்கி, துணியின் முனையைப் பிடித்து இழுத்துத் தூக்கவே பிரேதம் தென்பட்டது.

     டாக்டர் குழிக்குள் விளக்கைப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்த்தார்.


     பிரேதம், கைக் கட்டு, கால்விரல் கட்டு, வாய்க் கட்டுகளுடன் மலத்திக் கிடத்தப்பட்டிருந்தது.

     புதைத்து நான்கு நாட்களாகியும் நெற்றியிலிருந்த சந்தனமும் குங்குமமும் அழியவில்லை. கழுத்தில் கிடந்த மாலை வாடவில்லை. பிரேதம்போல் கட்டப்பட்டு ஒருவன் படுத்துத் தூங்குவது போலவே தென்பட்டது.

     "அவன் எமை ஆடுது!" என்று அலறிக் கொண்டே விளக்கை நழுவவிட்டார் டாக்டர்.

     நல்ல காலம், கம்பௌண்டர் அதை ஏந்திக் கொண்டார்.

     பிரேதத்தின் வலது இமை ஆடியது. யாவரும் அதையே பார்த்து நின்றார்கள்.

       பிணம் எழுந்து உட்கார்ந்து பேசும் என்று எதிர்பார்ப்பது போலிருந்தது அவர்கள் பார்வை.

     வலது கண் இமைகள் மெதுவாக அசைந்தன. உள்ளிருந்து சிரமப்பட்டு ஒரு கருவண்டு வெளியே வந்தது. வெளிச்சத்தைக் கண்டு திகைத்தது போலத் தள்ளாடியது. பிறகு சிறகை விரித்து உயரப் பறந்து சென்றது.

     "வண்டுகளைப் போல அது ரீங்காரமிடவில்லை, பார்த்தீரா?" என்றார் நாயுடு.

     வண்டு போனதையே பின்பற்றிய கண்கள் அதை இருளில் இழந்தன.

     "இதோ பாருங்கள்!" என்று பிரேதத்தின் வலது கரத்தைக் கத்தியால் கிழித்துக் காயத்தை விரித்துப் பிடித்தார் நாயுடு.

     புது ரத்தம் குபுகுபு என்று பொங்கி அவர் விரல்களை நனைத்தது!

    *****


     மூவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

     "ரிப்போர்ட் எப்படி எழுத?" என்று கைகளை மணலால் தேய்த்துக்கொண்டே கேட்டார் ஏட்டுப்பிள்ளை. தன் கையில் ரத்தம் பட்டதுபோல அவ்வளவு பிரமை.

     "பயத்தால் மரணம் என்று எளுதிப்புடும்!" என்றார் கம்பௌண்டர்.

     "நாயுடு, இது எப்படித் தெரிந்தது?" என்றார் டாக்டர்.

     "அவன் ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குச் செவ்வாய் தோஷம்; அந்த ஜாதகமெல்லாம் ரத்தக் காட்டேரிதான்!" என்றார் கம்பௌண்டர்.

********
சூறாவளி - 09-07-1939
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

rajamelaiyur on September 3, 2011 at 9:05 AM said...

super post

Rathnavel Natarajan on September 4, 2011 at 4:17 PM said...

அருமையான கதை.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்