Jan 27, 2010

கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்

கி. ராஜநாராயணன்

கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் வரவேற்பையும் சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்ற நாவலிலிருந்து சில பகுதிகள்...

modern-art-17 

முதல் முதலில் அந்தக் கிராமத்தில் ஒரு அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது. பெரிய பெரிய காங்கிரஸ் பேச்சாளர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

கூட்டம் ஆரம்பிக்கும் முன்னால் அவர்களில் சிலர் உணர்ச்சி ததும்பப் பாடல்கள் பாடினார்கள். அதைப்போலப் பாடல்கள் கிராமத்துக்குப் புதுசு. ஆவலோடு அவைகளைக் காது கொடுத்துக் கேட்டார்கள். தாளக் கட்டோடும் ராக அடக்கத்தோடும் ஒருத்தர் இப்படிப் பாடினார்

"ஆட்டித் தோலுக் கிடங்கொடுத்த
தாலே வந்த மோசம் - அத
னாலே வந்த மோசம்......"

எப்படி வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு முதல் முதலில் ஆட்டுத் தோல் வாங்க என்று இங்கே ஒரு வியாபாரியாக வந்து நம்மை ஏமாற்றி, நம்மவர்களைப் பிரித்து நமக்குள் சண்டை மூட்டிவிட்டு வஞ்சகமாக நம்மை அடிமைப் படுத்தி ஆண்டுகொண்டிருக்கிறான் என்று அழகாக விவரித்தது பாடல்

ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் பஜனையில் "கோவிந்த நாம சங்கீர்த்தனம்..." சொல்லு வதுபோல அவர்கள் "வந்தே மாதரம்" என்று சொல், அதை ஜனங்கள் எப்படி வாங்கித் திரும்ச் சொல்லணும் என்று சொல்லித் தந்தார்கள். இதனால் அந்த கோஷங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல நேர்ந்தது. இது குழந்தைகளை ரொம்பத்தான் உத்ஸாகப் படுத்தியது! அவர்கள் ரொம்ப ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள் இதில். "வந்தே... மா...தரம்" என்று சொல்லி, தே என்பதைக் கொஞ்சம் நீட்டி, மா என்பதைக் கூடக் கொஞ்சம் நீட்டி ஒரு நாமசங்கீர்த்தனம் போல - ஒரு சுருதியோடு சேர்த்துச் சொல்லுவது போல - சொல்ல வேண்டும் என்று சொல்லிக் காட்டினார் அந்த சிந்து பூந்துறைக்காரர்

"வந்தே..மா..தரம்"
"அல்லா...ஹூ......அக்குபர்"
"நமதே.....ராஜ்யம்;அடைந்தே...தீருவோம்"
"போலோ;மஹான் மகாத்மா காந்தீக்கி;ஜே"

பிரசங்கிகள் ஒவ்வொருவராகப் பேசினார்கள். மக்களுக்குத் தெரிய வேண்டுமே என்று எளிய தமிழில் பேச்சு நடையில் கதை காரணங் களோடு ஜனரஞ்சிதமாகப் பேசினார்கள்

குடியின் கேட்டைப் பற்றி ஒருவர் பேசினார். "முந்தியெல்லாம் இப்படிக் கடையை ஏலத்துக்கு விட்டு ஊரு தவறாமல் கள்ளுக் கடையை நிலையாக இருக்கும் படி யாரும் பண்ணியதில்லை. இது இந்த வெள்ளைக் காரன் வந்த பிற்பாடுதான். கள்ளை வியாபாரப் போட்டிக்கு உட்படுத்தியதால், போதை அதிகம் இருக்க வேண்டும் kira2 என்பதற்காக செயற்கையாக அதில் உடம்புக்குக் கேடு  விளைவிக்கும் பொருள்களை சேர்த்து விற்கும்படி ஆகிறது. இந்த அதிபோதையால் அரசுக்கு அதை விற்பவர்களுக்கும் நல்ல காசு என்பதோடு, போதையில் கிடக்ககும் மக்களின் தொகை அதிகமாக, ஆக ஆக அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் திசை திருப்பப்பட்டு பலவீனப்பட்டுப் போகும். மக்கள் போதையில் கிடப்பது கொள்ளைக்காரர் களான வெள்ளைக் காரர்களுக்கு நல்லது. அதனால் நாம் முதலில் நமது மக்களைப் போதையிலிருந்து மீட்க வேண்டும். அதோடு நமது குடும்பப் ¦¡ருளா தாரத்துக்கு இந்தக் குடி உதவவே உதவாது. ஆகையால்த்தான் மகாத்மா காந்தி அவர்கள் கள்ளுக்கடை மறியலையும் தனது நிர்மாண திட்டத்தில் பெண்கள் பகுதியைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே 'தாய்மார்களே உங்கள் வீட்டுக்காரர் களை, சகோதர்களை குடிக்கவிடாமல் எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்' என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

அடுத்தபடியாகப் பேசியவர் "பஞ்சாப் படுகொலை சொக்கலிங்கம்பிள்ளை" என்பவர். இவர் பெயரைக் கேட்டதுமே ஊர்க்காரர்கள் முதலில் நினைத்தது, பஞ்சாப் படுகொலைகளில் இவரும் சம்பந்தப்பட்ட ஆளாக இருப்பார் போலிருக்கு (!) என்று.

பேசியபிறகு தான் தெரிந்தது அவருக்கு அந்தப்பேர் வந்ததுக்கான காரணம். ஜாலியன் வாலாபாக்கில் நடந்த அந்தப் படுகொலையை அந்தப் பாஞ்சால நாட்டுமக்கள் பட்ட இன்னலை, அப்படியே இந்த மக்களின் கண்ணெதிரே, நடந்தது நடந்தது போலக் கொண்டுவந்து காட்டினார்.

பேசிக்கொண்டு வரும்போது அவருடைய முகம் அழுகையினால் கோணியது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ள மூக்குக் கண்ணாடியை பலதடவை கழற்றினார். அங்கிருந்த பெண்களை யெல்லாம் ஒரு நொடியில் அழவைத்து விட்டார். ஒரு அப்பாவின் தோளில் உட்கார்ந்து கொண்டிருந்த சிறுவன் ''வீட்டுக்குப் போகலாம் ப்பா'' என்று சொல்லும்போதும் அவனுக்கு நாக்குக் குழறியது.

ஒரு பாவமும் அறியாத மக்களை, பெண்களை மண்டி போட்டு நடக்கும் படியாக நிர்ப்பந்தித்து, வெள்ளை அதிகாரி அவர்களை சவுக்கால் அடித்ததாக அவர் சொன்னபோது இவர்கள் நெஞ்சிலே அந்த அடி விழுந்தது போலிருந்தது.

வெள்ளையர்கள் இவ்வளவு கொடூர மானவர்களா என்று தோன்ற ஆரம்பித்தது. இந்தக் கொடூரம் நாளைக்கு இங்கேயும் தோன்றாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

அவருக்குப் பிறகு பேசிய பிரசங்கி, பம்பாயில் நடந்த அந்நியத்துணி பகிஷ்கரிப்பு (புறக் கணிப்பு) போரட்டாத்தில் ஒரு சத்யாகிரகி மீது வேண்டுமென்றே லாரியை ஏற்றிக் கொன்றதைப் பற்றிச் சொன்னார்.

ஜெயிலுக்குப் போன இளைஞன் எதீந்தி நாத்தாஸ் என்பவர், ஜெயிலில் ஒருவாய் மோருக்காக - சாப்பாட்டில் ஒரு வேளைக் காவது கொஞ்சம் மோர் தரவேண்டும் அனைத் துக் கைதிகளுக்கும் என்று- 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 64வது நாளில் உயிர் நீத்ததைப் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்கும் போதே அங்குள்ள மக்களின் மனசைப் பிசைந்தது அந்தச் செய்தி.

''எதீந்திரநாத் மரணம் பம்பாயை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. பம்பாயை மட்டுமா, இந்தியா பூராத்தையும்தான். பத்திரிகைக ளெல்லாம் அதைப்பற்றித் தலையங்கங்கள் எழுதின. டெல்லி சட்டசபையில் அதைப்பற்றிக் கேள்விகள் கேட்டார்கள்.

''இந்தியா உஷ்ணமான நாடு. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உணவில் ஒரு வேளைக்காவது 'ஒரு வாய்' மோர் தர வேண்டாமா?'' என்று கேட்டார்கள்.

'' ஒ பொன்னான உயிரைப் பலிகொடுத்து, பத்திரிகைகளும் சட்டசபைக்குள்ளும் கேள்விக் கணைகள் தொடுத்து, மக்களும் கிளர்ந்தெழுந்த பிறகே இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், ஜெயில் கைதிகளுக்குச் சிறிது மோர் தர ஒப்புக் கொண்டது.

''அப்பேர்ப்பட்ட கெடுங்கோலான அரசாங்கம் இது'' என்றார் பிரசங்கி.

கூட்டத்தின் கடைசியில் பேசியது ஒரு சிறிய பையன் ! இளங்கோ என்று பேர் சொனனார்கள். பத்து வயசுக்குள்ள தானிருக்கும். மேஜை மீது அவனைத் தூக்கி விட்டார்கள். எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

கால்களையும் கைகளையும் ஆட்டி உடம்பை நிமிர்த்தி அழகான தமிழில் அவன் அமளப்பொரி பொரிந்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தையே, 'என்னோட சண்டைக்கு வாராயா?'' என்று கேட்பது போலிருந்தது! கைதட்டி அவனை உத்ஸாகப்படுத்தினார்கள் வந்திருந்த பிரசங் கிகள்; அதைப் பார்த்த ஊர்க்காரர்களும் கை தட்டினார்கள்.

கூட்டத்தின் முடிவில் ஜே கோஷம் வானைப் பிளந்தது. இப்படியாக இந்திய நாட்டு சுதந்திரப் போரின் சங்கநாதம் அந்த கிராமத்தினுள்ளும் வந்து ஒலிக்கத் தொடங்கியது. அந்த கிராமத்தின் குழந்தைகள், அந்த அரசியல் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு தங்கள் விளையாட்டில் ஒரு புதுவிளையாட்டைச் சேர்த்துக்கொண்டார்கள். சோளத் தட்டையின் நுனியில் சிறிய துண்டுத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஊர்வலம் வந்தார்கள். ''நமதே ராஜ்யம்: அடைந்தே தீர்வோம்'' என்று கத்தினார்கள்.

இப்படிப் பல ஊர்வலங்களை தினமும் குழந்தைகள் தவறாமல் நடத்தி விளையாண் டார்கள். ''பாரதமாதாக்கி ஜே'' ''மகாத்மா காந்திக்கி ஜே'' ''வந்தே...மா..தரம்''.

காலையில் எழுந்திருந்த கிராம முன்சீப் அய்யர் கச்சேரிக்கு (கிராமச்சாவடி) முன்னால் நின்று கொண்டு 'காச்மூச்' என்று கத்திக் கொண் டிருந்தார். என்னமோ ஏதோ என்று தலையாரித் தேவர் ஓடோடி வந்தார்.

''என்னடா இது: ஊருக்கு விநாசகாலமா? பாரு மரத்துக்கு மேலே. இப்படிப் பண்ணியிருக் கானே! மேலாவிலிருந்து வந்தா நா என்னடா பதில் சொல்றது? யாரு பண்ணுன காரியம்டா இது. குடியெக் கெடுத்தானே பாவி...''

மூச்சு இறைக்க அய்யர் கூவிக் கொண் டேயிருந்தார்.

தலையாரிக்கு முதலில் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது ராவோடு ராவாய் யாரே ஒரு பாவி மூவர்ணக்கதர்- கொடியை பிள்ளையார் மேடை அரசமரத்தின் உச்சியில் கொண்டுபோய் உயரமான வருச்சியில் கட்டி அதை ''ஊரு உலகத்துக்கெல்லாம்'' தெரியும்படியாகப் பண்ணியிருந்தான்.

வெகுதூரத்திலிருந்து பார்த்தாலே தெரியும் படியாக இருந்தது கொடி. மங்கம்மாசாலை வழியே போகிறவர்களுக்குக் கட்டாயம் தெரியும். வேணுமென்றே அக்கிரமத்துக்காக - செய்த காரியமாப்பட்டது அய்யருக்கு. ''கூட்டம் போட்டுப் பேசினார்கள். சரி. பேசிட்டுத் தொலை. பொ. காத்தொடபோறதுன்னு இருந்தேன். இப்பொ 'அடி மடியிலே' கையைக் கொண்டாந்துட்டானெ? நா ஒர்த்தன் பிராமணன் இங்கெ உத்யோகம் பாக்றது யாருகண்ணெ உறுத்தறதுன்னு தெரியவில்லை.'' கொஞ்ச நேரத்துக்குள் ஒரு கூட்டத்தையே கூட்டிவிட்டார் தனது கூப்பாட்டின் மூலம்.

அதிகாலை மம்மல் நேரத்திலேயே சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு தோட்டத்துக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த நுன்ன கொண்ட நாயக்கரைப் பார்த்ததும் அய்யர் குரலை உயர்த்தினார். ''பாத்தியளா மொதலாளி, பயல்களோட காரியத்த!'' என்று அரச மரத்தின் உச்சியைக் காண்பித்தார்.

புகையும் சுருட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு இடது கைவிரல்களைப் புருவக்கட்டில் வைத்து 'கண்ணாடி போட்டு' அண்ணாந்து பார்த்தார் நுன்னகொண்ட.

பகீரென்றது வயிற்றில் அவருக்கு.

ம்செரி' என்று எண்ணிக்கொண்டு அங்கே கூடியிருந்த இளவட்டங்களின் முகங்களை ஒருபார்வையால் ஆராய்ந்தார். ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது அவரால்.

அய்யரைப் பார்த்துச் சொன்னார் கையில் சுருட்டை எடுத்துக் கொண்டு. ''கட்டுச்சோறு கட்டிக்கிட்டா வரப்போறான் அசலூரிலிருந்து இதுக்கு. சவத்துப் பயல்க.'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவர் போனதுக்குப் பிறகும் கொஞ்ச நேரம் சுருட்டின் வீச்சம் அங்கே மணத்துக் கொண்டிருந்தது.

அய்யர் இந்த மாதிரி 'பேசக்கூப்பாடு' போடுவாரே தவிர தன்னுடைய கிராம மக்கள் பேரில் எப்பவும் எந்த விஷயத்துக்காகவும் மேலாவுக்கு எழுதி அனுப்பியதில்லை. இந்த விஷயங்களில் அவர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருந்தார்.

பிரிட்டிஷ் அரசு மூவர்ணக் கொடியைத் தடைசெய்திருந்தது. அதனால் எல்லா இடங்களிலும் இப்படி ராவோடு ராவாக கொடி ஏத்தங்கள் நடைபெற்றுவந்தன.

இதே கொடியைப் பிடித்துக் கொண்டு பகிரங்கமாக ரோட்டில் நடந்து கைதியானவர் களும் உண்டு. அப்படிப் கொடியைக் கையில் பிடித்துக்கொண்டு போகும்போது, 'போடு கீழே' என்று சொல்லி போலீஸார் லத்தி' யால் அறைவதும் உண்டு. உடம்பில் அடிமேல் அடி தொடர்ந்து விழும்போது, வலி பொறுக்க முடியாமல், தன்னையறியாமல் அய்யோ அம்மா என்று அலறுவதற்குப் பதில் ''வந்தேமாதரம் வந்தேமாதரம்'' என்று மாறிமாறிச் சொல்லு வார்கள். திருப்பூர் என்கிற ஊரில் குமரன் என்ற பேருடைய பிள்ளையாண்டான் ஒருத்தனை இப்படி அடித்தே கொன்று விட்டார்களாம் பாவிகள் என்று பேசிக்கொண்டார்கள். தலையாரியை மரத்தின் மேலே ஏறி அந்தக் கொடியை அவிழ்க்கும்படிச் சொன்னார் கிராம முன்சீப் அய்யர். வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு தலையாரி கிட்ணத் தேவர் மேலே ஏறினார். வளர்ப்பு ஆட்டுக்குக் குழைஓடிக்க மரம் ஏறிப் பழக்கந்தான் அவருக்கு. மேலே ஏறிப்போன கிட்ணத்தேவருக்கு மலைப்பு ஏற்பட்டது. ஒருப்பூட்டாக எழுந்துநின்று உச்சிக் கொம்பில் கொண்டுபோய் அதிலும் இருட்டு வேளையில் எப்படிக் கட்டினான் இந்தக் கொடியை என்று யோசித்தார். கொம்பைப் பிடித்து தொத்தி எப்படியாவது மேலே போய் விடலாம். கட்டுவதோ, அவிழ்ப்பதோ என்பது சாத்தியமே இல்லை என்று தோன்றியது. சாமி வந்து ஆவேசத்தோடு ரவ்வாளி போடுகிறவனை பத்துப்பேர் சேர்ந்து பிடித்தாலும் அமைக்க முடிவதில்லை. இதெல்லாம் ஒரு வெறிச்சியில் செய்கிற காரியம் என்று நினைத்தார்.

மேலே ஏறி எந்த ஆசில் இருந்து கொண்டு கட்டிய கொடிக்கம்பத்தை அவிழ்ப்பது என்று பார்த்தார். நினைக்க நினைக்க உடம்பு புல்லரித்தது. தவறிக் கீழேவிழுந்தால் அவ்வளவு தான். நச்சத்திரம் கழண்டுறும் என்பதோடு கழைக்கூத்தாடிக்காரன் சொல்லுவது போல எண்ணுவதற்கு ஒரு எலும்புக்கூடக் கிடைக் காது !

இறங்கிக் கீழே வந்த விஷயத்தைச் சொன்ன கிராம முன்சீப்பிடம் அதைக் கேட்டவர்களுக்கு மகிழ்ச்சியும் குஷியும் ஏற்பட்டது.

ஒருத்தருக்கொருத்தர் கலந்து யோசித் தார்கள். இது யார் செய்த காரியமாக இருக்கும் என்று. கொத்தனார் சாமிநாயக்கரும் அங்கே இருந்தார். துண்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு, குளத்தின் கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்து முழங்கால்களை ஆட்டிக் கொண்டு, இந்தத் தலையாரி எப்படித்தான் அந்தக் கொடியை அவிழ்க்கிறான் பார்ப்போம் என்று. அவருக்குப் பக்கத்தில் வந்து செவிட்டு குருசாமி நாயக்கர் உட்கார்ந்து கொண்டு சந்தோஷத் துடன் கேட்டார் ''இத எப்பிடி அங்கன போயி கட்டியிருக்கான்!'' சாமிநாயக்கர் பதில் சொல்லாமல் வேகமாகக் காலை ஆட்டினார். மனசுக்குள் 'எங்கலெ வந்து மெல்ல விளாறு ஒட்டுதெ' என்று நினைத்துக் கொண்டார்.

பேருதான் செவிட்டு குருசாமி நாயக்கர். யாருடைய ரகசியங்களும் அவர் காதுக்குள் நுழைந்துவிடும். நுழைத் வேகத்தில் பத்து ஜோடி காதுகளில் போய் எதிரொலிக்கும். யார் என்ன பேசிக் கொண்டிருந்தாலும், செவிட்டு குருசாமி நாயக்கர் வாரார் என்றால் பேச்சை நிப்பாட்டி விட்டுப் பாட ஆரம்பிப்பார்கள் !

கிராமத்தில் எப்பவாவது சில காரியங்கள் நடக்கும். யார் இதைச் செய்திருப்பார்கள் என்று யூகிக்கவே முடியாதபடி இருக்கும். அப்போது செவிட்டு குருசாமி நாயக்கர் எங்கே என்ற எல்லோரும் தேடுவார்கள். அவரும் ஓடியாடி, விஷயத்தின் நுனி நூலைப் பிடித்துக் கொண்டு வந்து தந்துவிடுவார்.

இளவட்டங்களின் ஒருமித்த ஏளனப்பார்வை தலையாரியை உசுப்பிவிட்டு விட்டது. குழை அறுக்கும் கத்தி கட்டிய தொறட்டிக் கம்பை எடுத்துக்கொண்டு வந்தார் வேகமாக. மரத்தில் ஏறி, அதைக் கொடுக்கச் சொல்லி வாங்கி, ஒவ்வொரு கொம்பிலும் அதைத் தொங்கவிட்டுக் கொண்டே மேலே ஏறிப்போனார். வசமான ஒரு கிளையில் இருந்து கொண்டு உச்சிக்கொம்பில் கட்டிய கயிற்றைக் கொஞ்சங்கொஞ்சமாக அறுத்துக் கொடியோடு கம்பைக் கீழே விழச்செய்தார்.

கீழே விழுந்த கொடியை கிராம முன்சீப் அதைக் கம்பிலிருந்து பிரித்து எடுத்தார். அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை ! வீட்டுக்கும் கொண்டு போக முடியாது கச்சேரியில் வைத்துக் கொண்டிருக்கமுடியாது. பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் களிமண் பிள்ளையாரை குளத்து தண்ணீரில் கொண்டு போய் போடுவதுபோல, அவர் அதில் நாலைந்து கற்களை எடுத்து வைத்து மூட்டைபோல் கட்டினார். குளத்தில் கொண்டு போய் வீசி எறிந்துவிட்டு, விசுக்விசுக்கென்று வேகமாக வீட்டைப் பார்க்க நடந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கைதட்டிப் பலமாகச் சிரித்தார்கள்.

இது நடந்து கொஞ்சநேரத்துக்கெல்லாம், பார்வதியம்மன் கோவிலுக்கு பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய மாட்டு வண்டிக்கு அருகே நின்றுகொண்டு ''ஊர்பய பிள்ளைகளை'' வாய்க்கு வந்தப்படி திட்டி நொறுக்கிக் கொண்டிருந்தார் வெல்லம் ரங்கசாமி நாயக்கர்.
அருடைய வண்டிப் பைதாவில் யாரோ சாக்பீஸால் வந்தேமாதரம் என்று எழுதிவைத்து விட்டார்களாம். ''நா ஒரு வண்டி வச்சிப் பெளைக்கிறது இந்தப் பயபிள்ளெகளுக்குப் பிடிக்கலெ'' என்று சொல்லிக் கொண்டே அதை அழித்தார். அழித்ததில் எழுத்துக்கள் கலைந்த தே தவிர மறையவில்லை. வாளியில் தண்ணீர் கொண்டு வந்து துணியை மூக்கித் துடைத்துக் கொண்டிருந்தபோது செவிட்டு குருசாமி நாயக்கர் வந்து ''என்ன மாமா இது?'' என்று விசாரித்தார். ''பாத்தியாடா இந்த கொடுமயெ; எந்த நாறப்பய புள்ளையோ வந்து ஏம் வண்டியில் 'வந்தேமாதம்' எழுதித் தொலைச்சிருக்கான் பாத்துக்கொ.''

''அதானெ மாமா, சர்க்காருக்கு தெரிஞ்சா அம்புட்டுதான். வண்டியும் பொயிரும், நீங்களம் கம்பியெ எண்ணணும். செருக்கிபிள்ளையளுக்கு வந்தே மாதரம் எழுத வேற எடமே கெடைக் கலை பாத்தியளா !''

வேகம் வந்துவிட்டது வெல்லம் ரங்கசாமி நாயக்கருக்கு. தனக்கு எத்தனை வசவுகள் தெரியுமோ அத்தனையும் மனப்பாடமாக ஒப்பிப்பதுபோல மள மளவென்று சொல்லிக் கொண்டே போனார்.

ஊர்ப்பிள்ளைகளெல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது வேறு அவருக்கு எரிச்சலாக இருந்தது. அவர்களைப் பார்த்து எரிந்த விழுந்தார். அவர்கள் நகருவது போல பாவலாக் காட்டினார்களே தவிர நகரவில்லை. ஆகவே அவர்களையும் ஒரு பாட்டம் வசவுகளால் 'அர்ச்சனை' செய்துக் கொண்டே வாளியையும் துணியையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் கிளம்பினார். நாலு எட்டுகள்தான் எடுத்து வைத்து நகர்ந்திருப்பார். யாரோ ஒரு பையன் அவரைப் பார்த்து வந்தே மாதரம் என்று கத்தினான். மற்ற பிள்ளைகள் அதை வாங்கிச் சொன்னார்கள் !

நாயக்கருக்கு ஆங்காரம் வந்துவிட்டது. ''எவண்டா அவன் வந்தே மாதரம் சொன்னது'' என்று கேட்டார்.

''பொடிப்பய புள்ளக. நீங்க போங்க மாமா'' என்று சமாதானப்படுத்தினார் செவிட்டுக் குருசாமி நாயக்கர்.

சமாதானம் பண்ணவும் சேர்த்துப் பிடித்துத் தடுக்கவும் ஒரு ஆள் கிடைத்துவிட்டால் அதுக்கென்று ஒருவேகம் வருமே; அந்த 'வேகம்' வந்தது வெல்லம் ரங்கசாமி நாயக் கருக்கு. அதன் பலனை அவர் ஆயுள் பூராவும் அனுபவித்தார் ! தினமும் காலையில் வந்து பார்க்கும் போதெல்லாம் அவருடைய வண்டிப் பைதாவின் அலகில் வந்தே மாதரம் எழுதியிருப்பதும், அதை அவர் வாளியும் தண்ணீரும் கொண்டு வந்து துடைத்துக் கொண்டே வைது விட்டுப் போவதும் கொஞ்ச நாள் இருந்தது. ஒருநாள் காலையில் வாளியும் தண்ணீரோடும் வந்து பார்த்தபோது, சாக்பீஸ¤க்கு பதில் கீல் எண்ணெய் கொண்டு எழுதப்பட்டிருந்தது! ரொம்ப நேரம் அதைச் சொரண்டி எடுத்துக் கொண்டிருந்தார். அன் றைக்கு அவர் வேலைக்குப் போக முடியவில்லை. இனி வண்டியை வெளியே வைத்தால் சரிப்பட்டு வராது என்று பைதாக்களை அச்சிலிருந்து உருவி எடுத்து, சட்டத்தையும் வீட்டுத் தொழுவுக்குள் கொண்டுபோய் வைத்துக் கொண்டுவிட்டார். பிரச்சனை அதோடு முடியவில்லை. எந்நேரமும் நாலு பையன்கள் அவருடைய வீட்டு வாசலைப் பார்த்துக் கொண்டே கொஞ்சதூரத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள். வெளியில் அவருடைய தலை தெரிய வேண்டியதுதான் தாமதம், வந்தே மாதரம் என்று கத்துவார்கள். திட்டிக் கொண்டே அவர்களைக் கொஞ்ச தூரம் விரட்டுவார். தெருவிலோ காட்டிலோ எங்கே அவரைக் கண்டாலும் பிள்ளைகள் வந்தே மாதரம் என்று தூரத்தில் இருந்து கொண்ட கூப்பாடு போட்டுச் சொல்லுவார்கள்.

ஊர்மடத்துக்கு முன்னால் பிள்ளைகள் தெல்லு விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெளியூர்க்காரர்கள் யாரோ ரண்டுபேர் வந்து வெல்லம் ரங்கசாமி நாயக்கர் வீடு எது என்று பையனிடம் விசாரித்தார்கள்.

''என்னது, வெல்லம் ரங்கசாமி நாயக்கரா'' என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டான் அதில் ஒரு பையன் ஒன்றுமே தெரியாதது போல.

''அதாண்டா நம்ப வந்தேமாதர நாயக்கர் வீட்டைக் கேக்கறாங்க'' என்றான் மற்ற ஒருவன்.

''வந்தே மாதர நாயக்கரா!'' என்று கேட்டார் வந்தவர்களில் ஒருத்தர்.

''ஆமாம். அது தெரியாதா ஒங்களுக்கு? அவரு இப்ப வந்தேமாதரம் கட்சியிலெ சேந்துட்ட ரில்லெ'' என்றான் பையன். இவர்கள் சிரித்த விதம் வந்தவர்களுக்கு, இது தெரியாதா உங்களுக்கு என்பது போல் பட்டது.

''ஏங்கூட வாங்க நாங் காட்டுரென்'' என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய், ''அந்தோ தெரியிதில்லெ, அந்தக் கல்லு வீடுதான்'' என்று காட்டிவிட்டு வந்தான்.

''என்னடே ''வந்தே மாதரம்'' இருந்தாரா? என்று மடத்தில் பதினைஞ்சாம்பிள்ளை விளையாட்டில் உட்கார்ந்து ஆடிக்கொண்டி ருந்த கொண்டுசாமி கேட்டார் குறும்பாகச் சிரித்து.

''இருக்காரு, தொளுவுக்குள்ளெ சத்தம் கேட்டது'' என்றான்.

''என்ன விசயமாத் தேடி வந்திருக்காகளாம்?''

''பசுமாடு ஒண்ணு வெலைக்கி நிக்கில்லா அவரு தொளுவுல; அதெ வாங்கீட்டுப்போக''

''அத அவரு யான வெலெ குருதெ வெலெ சொல்லுவா ரெ''

''சொன்னா என்ன வந்தேமாதரம்னு மாத்திரம் சொல்லுங்க; செ, நம்ம கச்சி ஆளுகள்ளெ வந்திருக்காக போலுக்குன்னு நெனச் கொஞ்சம் கொறைச்சிக் கொடுத்துருவாருன்னு சொல்லிக் கொடுத்துட்டுத்தாம் வந்திருக்கென்'' என்று அந்த வினாடியில் அவனுக்குத் தோன்றியதைச் சொன்னான். அவனுடைய கற்பனையை மடத்தில் இருந்தவர்கள் பாராட்டிச் சிரித்தார்கள்.

நுன்னகொண்டநாயக்கர் ஒருநாள் வெல்லத் தைக் கூப்பிட்டு ''ஏண்டா யாரு என்ன சொன்னா ஒனக்கென்ன. எதுக்காக அப்படிக் கோவப் படணும். நீ அப்படிக் கோவப்படப்படத்தான் அதும் அதிகமாகும்'' என்று சண்டை பிடித்தார். ''நா யாருக்கு என்ன செஞ்சென் பெரியப்பா. என்ன இப்படிக் கண்ணுலெ காங்காம வையிராங்களெ'' என்று சொல்லும்போது அவருக்குத் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.

வெல்லம் ரங்கசாமி என்று துலங்கி வந்த அவருடைய பெயர் அதன்பிறகு ''வந்தேமாதர நாயக்கர்'' என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு வந்துவிட்டது. அவர் விரும்பினாலும் - விரும்பாவிட்டாலும் அதுவே அவருடைய பட்டப்பெயராக நிலைத்து நின்றது அவருடைய வாழ்நாள் பூராவும் ! அதுக்குப் பிறகும்கூட.

கையில் கரித்துண்டோ சாக்பீஸோ எது கிடைத்தாலும், சுவர் என்று ஒன்று கிடைத்து விட்டால் அந்தவூர் குழந்தைகள் தப்பும் தவறுமாக வந்தேமாதரம் என்று எழுதியும் கை ராட்டையில் படத்துடன் மூவர்ணக் கொடி யையும் வரையாமல் விடமாட்டார்கள்.

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

கிருஷ்ணன் சங்கரன் on February 7, 2015 at 9:11 PM said...

ki ra enroru azhiyasudar...

kk kannan on December 5, 2020 at 4:24 PM said...

என் சிறு வயதில் விகடனில் தொடராக வெளிவந்து படித்தது எல்லாம் என் நினைவில் வருகிறது. முதன் முதலில் தேயிலை அறிமுகம் செய்யப்பட்டு கோபல்ல கிராமத்து மக்கள் விடிய விடிய பேசியதும் ஆஹா

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்