Jan 31, 2011

“நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்" – லா.ச.ரா- நேர்காணல்

'லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்

“நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்"

 

சந்திப்பு: தளவாய் சுந்தரம் படங்கள்: புதூர் சரவணன்

2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்டிருந்த ஒரு பிற்பகலில், அம்பத்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் லா.ச.ராமாமிருதத்தின் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டதும், சாலைLAA-SA-RAA-18யைப் பார்த்து திறந்திருந்த அவருடைய அறைக்கு அழைத்து சென்றார். பார்ப்பதற்கு குழந்தைமைக்குத் திரும்பிவிட்ட வயதானவர்களைப் போல் இருந்தார் லா.ச.ரா. கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போது, ஞாபக  அடுக்கிலிருந்து மேலெலும்பி வரும் நினைவுகள், ஒன்றையொன்று முட்டி மோத, உணர்ச்சி தழும்பலில் திளைத்து, குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டே, தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் போல் புன்முறுவல் செய்கிறார். சில நேரங்களில் அழுதுவிடுகிறார். குரல் உடைகிறது. ஆனால் உற்சாகமாக இருக்கிறார். ''எழுதவேண்டும் என்னும் ஆர்வம் தனியாமல் இருக்கிறது. உடல்தான் ஒத்துழைப்பதில்லை'' என்றார் எங்களிடம். எனவே, அவர் சொல்லச்சொல்ல மகன் சப்தரிஷி எழுதிக் கொடுக்கிறார். லா.ச.ராமாமிருதத்துக்கு வாழ்க்கை இன்னும் கசக்கவில்லை என்பதுதான் விஷேசம். எவர் பேரிலும், எதன் பேரிலும் வருத்தங்களும் குற்றச்சாட்டுகளும் அவருக்கு இல்லை. லா.ச.ரா.வின் மருமகள் தந்த காப்பியை ''முதலில் குடியுங்கள்" என்றுவிட்டு அவருக்குள் ஆழ்ந்தார்.

'புதர்', 'அபிதா', 'கல் சிரிக்கிறது', 'பிராயச்சித்தம்', 'கழுகு' ஆகியவை லா.ச.ரா.வின் முக்கியமான நாவல்கள். 'பாற்கடல்', 'சிந்தாநதி' ஆகிய இரண்டு வாழ்க்கை வரலாற்று நூலையும், 'முற்றுப்பெறாத தேடல்', 'உண்மையான தரிசனம்' ஆகிய இரண்டு கட்டுரைத் தொகுதிகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் லா.ச.ராமாமிருதம் எழுதியுள்ளார்.

காப்பி குடித்து முடிந்தும், ''டேப் ரிக்கார்டரை ஆன் செய்யுங்கள்'' என்றுவிட்டு, அறைக்கு வெளியேப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினார்.

''முதலில் இந்த 'டேப் ரிக்கார்டரு'க்காக, நான், உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு, பேட்டி என்றாலும் என் பாஷையிலேயே வரவேண்டும். குறித்துக் கொண்டு போய், நான் சொல்லாதவற்றை எல்லாம் எழுதி, நான் சொன்ன சிலவற்றை விடவும் வேறு செய்துவிட்டு, அது ரொம்ப ஆபத்தான சமாச்சாரம். அது மாதிரி அனேக நேரங்களில் நேர்ந்துவிடுகிறது. நாசம் செய்து விடுகிறார்கள். அதன்பிறகு பேட்டிகளே கொடுக்கக்கூடாது என்றிருப்பேன். அப்படி எல்லோரிடமும் நான் சொல்லிவிட முடியுமா? நான் சாதாரண ஆள்; பெரிய இடங்களை எல்லாம் பகைத்துக் கொள்ள முடியாதய்யா!

"அப்புறம் முன்னெச்சரிக்கையாக நான் சில விசயங்களை சொல்லி விடுகிறேன். எப்போதும், இது போன்ற பேட்டிகளின் போது, வழக்கமாக கேட்கிற கேள்விகளை, நீங்கள் என்னிடமும் கேட்பதில் பிரயோசனம் இல்லை. எனக்கு இப்போது என்பத்தாறு வயதாகிறது. கடந்த என்பத்தைந்து வருடங்களில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். எனவே, என் வயதுக்கான முதிர்ச்சியில், இப்போது என் மனதில் இருக்கிற விஷயங்களைப் பற்றிதான், நான் பேசவேண்டும் என்று விரும்புகிறேன். கொஞ்சம் அரூபமான சிந்தனைகளாக அவை இருக்கலாம்; நம்பிக்கைகள் சிதறிப் போய் இருக்கலாம். மேலும், சில புதியதாக வந்த நம்பிக்கைகள். நான் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது உங்கள் பத்திரிகை இவற்றைத் தாங்குமா?"

''தாங்கும்."

''வெரிகுட். எனக்கு இந்த பேட்டிகளில் எல்லாம் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. எனக்கு எல்லாம் ஆகிவிட்டது. கிடைக்க வேண்டிய பாராட்டுகள், அங்கீகாரம், பரிசுகள் எல்லாம் கிடைத்து விட்டன. இனிமேலும் எனக்கு என்ன ஆகவேண்டும்? அதற்காக நான் உங்களை மதிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் உங்கள் காரியமாக என்னிடம் வருகிறீர்கள்; நான் என் காரியமாக உங்களிடம் பேசுகிறேன்; அவ்வளவுதான். இனி நீங்கள் கேட்க வேண்டியவற்றைக் கேளுங்கள்."

"முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள். எப்படி இருக்கிறீர்கள்?"

"எனக்கு இப்போது என்பத்தாறாவது வயது நடக்கிறது. இந்த வயதுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். புத்தி இன்னும் ஸ்தம்பித்துப் போய் விடவில்லை. நன்றாகத்தான் இருக்கிறது. நான் மொத்தமாக முப்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இப்போதும்கூட தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன். எனது பதிப்பாளர், வானதி திருநாவுக்கரசு, ரொம்ப ஆச்சர்யப்பட்டு போய்விட்டார். இந்த வருடம் என்னுடைய மூன்று புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.

"என் ஊர் லால்குடி. ராமேஸ்வரம் போய் தவம் இருந்து பிறந்தவன் நான். என் அம்மா, எனக்காக, இடது கையால் சாப்பிட்டிருக்கிறாள். நான், எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும்தான் படித்திருக்கிறேன். மெட்ராஸில்தான் படித்தேன். 1937-ம் ஆண்டு நான் எழுத ஆரம்பித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வசதிக்காகத்தான் இந்த வருடத்தைச் சொல்லுகிறேன். மற்றபடி நான் இருபது வயதிலிருந்து எழுதி வருகிறேன் என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், அதற்கு முன்பே எழுத ஆரம்பித்தாகி விட்டது. பதினாறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டேன் என்று ஞாபகம். அதற்காக ஒவ்வொரு சமயத்திலும், அப்போதைக்கு ஞாபகத்திலிருக்கும் படி, ஒவ்வொரு வருடத்தையும் சொல்லிக்கொண்டு இருக்க முடியாதில்லையா? உண்மையில் பார்க்கப் போனால், இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் தள்ளிப் போய்தான் பார்க்க வேண்டும். அவ்வளவு தூரத்து சமாசாரம் அவைகள். இந்த அறுபத்தைந்து வருடத்தில் இருநூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாறுகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இவைகள்தான் என் மொத்தப் படைப்புகள். என் புத்தகங்கள் நன்றாக விற்கின்றனவா, இல்லையா என்பது பற்றிக்கூட எனக்கு அக்கறை கிடையாது.

"என்னுடைய படைப்புகளில் அனேகம், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பாகிச் சென்றிருக்கின்றன. பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் மொழிகளிலும் மொழிபெயர்ப்பாகி இருக்கின்றன. 'புற்று' கதையைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்த போது, எனக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இப்போது, 'கதா' நிறுவனத்தார் என்னுடைய நாவல் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தேர்வு செய்துள்ளார்கள். அந்த அம்மா (கீதா, கதா நிறுவனர்) போன் பண்ணினாங்க; அப்புறம் மொழிபெயர்ப்பை அனுப்பினாங்க. அது எப்போது வருமோ, அல்லது வராதோ! எனக்கு அது பற்றியும் ஒன்றும் தெரியாது. ஏதோ 'அக்ரீமெண்ட்' வந்தது. நான் கையெழுத்துப் போட்டு அனுப்பியிருக்கிறேன். அவ்வளவுதான்.

"நான் 'இங்கிலீஷில்' நன்றாக எழுதுவேன். மொழிபெயர்ப்பேன். ஆனால் இப்போது எனக்கு உடம்பில் அதற்கான தெம்பு இல்லை. அந்த நேரத்துக்கு 'ஒரிஜினலாக' எழுதலாமே என்று எனக்கு எண்ணம். என்னைப் பற்றி இரண்டு பேர் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். காப்ரில்லா ஜெய்சிங்கர் பராலுதின் என்று ஒரு ஜெர்மன் 'லேடி'. அவள் இத்தாலியில் பேராசிரியராக இருக்கிறாள். மூன்று டாக்டர் பட்டங்கள் பெற்றிருக்கிறாள். அவள், என்னைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாள். '‘The Incomparable Writer Ramamirtham’ என்பது புத்தகத்தின் தலைப்பு. விலை ஆயிரத்து முந்நூறு ரூபாயோ, என்னமோ. எனக்கு ஒரு பிரதி கொடுத்திருக்கிறாள். அவள் என்கிட்ட சொன்னாள், ''இப்போது நான், எங்கேப் போனாலும், உங்களைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறேன்'' என்று. நிறைய பேசுகிறாள் அவள். ஆங்காங்கே, அவள் பேசியவற்றை எல்லாம், எனக்கு அனுப்பித் தந்திருக்கிறாள். ''இப்போது உங்களைப் பற்றி அந்தப் பக்கத்தில் எல்லோரும் முழித்துக் கொண்டிருக்காங்க. ரொம்ப பிரமாதம் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கு உங்கள் எழுத்துக்களில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது'' என்று சொன்னாள். இது காரணமாகத்தான் எனக்கு இந்த வருடம் நிறைய விருதுகள் வருகின்றன என்று நினைக்கிறேன்.

"எனக்கு வராத நோயே இல்லை. இப்போது கால் போய் விட்டது. எனவே, ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். பழைய வேகத்துடன் செயல்பட முடியவில்லை. முன்பு வருடத்துக்கு ஒரு முறை, அல்லது இரண்டு முறை வெளியே கிளம்பி விடுவேன். எங்காவது போய் பதினைந்து, இருபது நாட்கள் இருந்துவிட்டு வருவேன். அதிகமும் குற்றாலம், தென்காசி, மதுரை தான் போவேன். அங்கெல்லாம் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருக்கிறார்கள். நல்ல சாப்பாடு கிடைக்கும்; நல்ல பேச்சுகள் இருக்கும்."

"உங்கள் குடும்பம் பற்றி சொல்ல முடியுமா? அப்பா, அம்மா, மனைவி, மகள், மகன்கள், மருமகள்கள் எல்லோரையும் பற்றி. . . குறிப்பாக இவர்களில், உங்கள் மேல் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியர் யார் என்றும்..."

''அம்மாதான் என் மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவள். வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதை எனக்கு அவள்தான் கற்றுக் கொடுத்தாள். அம்மாவுக்கு வாழ்க்கையில் கசப்பே கிடையாது. ஆனால், மிகவும் கசந்த வாழ்க்கை அவளுடையது. ஆனால், கசக்கவில்லை அவள். நான், பக்கத்திலிருந்து கண்ணால் பார்த்தவன்தானே. அவள் மாதிரிதான் நானும் இருக்கிறேன். எவ்வளவோ ஏமாற்றங்கள், அவளுக்கு நேர்ந்தது போலவே எனக்கும் நேர்ந்திருக்கிறது. அதற்காக நான் ஒன்றும் பயப்படவில்லை.

"அம்மாவுக்கு நாற்பத்தைந்து வயது... அப்பா, ஐம்பது வயதுகூட ஆகவில்லை. டக்கென்று போய்விட்டார். 'ஹார்ட் அட்டாக்'. அப்பா, பள்ளிக்கூட வாத்தியார். அப்போது முப்பாத்தாறு, முப்பத்தேழு ரூபாய் சம்பளம். ''என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது'' என்று அம்மா கையில் மொத்தத்தையும் கொடுத்து விடுவார். அவள் கை நல்ல கை. பசு மாடு வளர்த்தாள், தோட்டம் போட்டாள்; எல்லா நன்றாக வந்தது. சீக்காளி ஆம்படையான். அவள் ஒழுங்காக அவரைப் பார்த்துக் கொண்டாள். காதலினால் பார்த்தாள் என்று இதனை நான் சொல்ல வரவில்லை. கடமைதான் இது. அவளே சொன்னாள்: ''வேண்டியது பண்ணியாகிவிட்டது, உங்க அப்பாவுக்கு. அப்புறம் எனக்கு ஒன்றும் கடன் இல்லைப்பா. எனக்கு இதைப் பண்ணலையே என்று எந்த குற்றமும் கிடையாது.'' கொஞ்ச நேரம்தான் அழுதாள்.

"அப்பா, என் மேல் மிகவும் பிரியமாக இருந்தார். தினமும் இரவு ஏழு மணிக்கு சாப்பாட்டை முடித்துவிட்டு, முற்றத்தில் வந்து உட்கார்ந்திருப்போம். நிறைய கதைகள் சொல்வார். நான் தப்பும் தவறுமாக சொல்லும் எல்லாவற்றையும், சரிதான் என்பது போல் கேட்டுக் கொண்டிருப்பார். அம்மா, ''நீங்கள் அவனை கெடுத்துவிடுவீர்கள்'' என்பாள். ஆனாலும் அவர், என்னிடம் என்றும் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை. ஒருமுறை அவரிடம் அடி வாங்கி இருக்கிறேன். அன்று இரவு படுக்கையில், ''ஏண்டா ராமாமிருதம், உன்னை அடிக்க வேண்டுமென்று எனக்கு விருப்பமா என்ன. இரத்தம் கொட்டுகிறதடா உள்ளே'' என்று சொன்னார். தினமும் சேர்ந்துதான் படுத்திருப்போம்.

"நான், என் தாய், தந்தையரைத் தவிர வேறு எவரையும் வணங்க வேண்டியது இல்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். ''பொம்மனாட்டிகள் பற்றி உன்னுடன் பேச வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நீயே அதனையெல்லாம் தெரிந்து கொள்வாய். என்னைப் போல், ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இரு, போதும்'' என்று சொன்னார் அப்பா. நான் அவரைப் போல் இருந்தேனா, இல்லையா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், எந்தக் கெட்ட பழக்கமும் எனக்குக் கிடையாது.

"எனக்கும், என் மனைவிக்கும் இடையில் பன்னிரெண்டு வயது வித்தியாசம். கல்யாணம் நடந்த போது எனக்கு முப்பது, அவளுக்குப் பதினெட்டு. கல்யாணம் முடிந்து ஐம்பத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது, அவள் ஆரோக்கியமாக இருக்கிறாள். நான் கிழவனாகி விட்டேன். ஆனால், அன்று பார்த்த போது, எவ்வளவு அழகாக என் மனதில் பட்டாளோ, அவ்வளவு அழகாகத்தான் இப்போதும் எனக்கு அவள் இருக்கிறாள். கன்னாபின்னாவென்று நான்கு இடங்களில் சலனப்படுகிறவர்கள், இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அவர்களைச் சேர்ந்தவன் இல்லை. அவர்களை எல்லாம் பார்த்துவிட்டு, ஏதோ என்னை அண்டி வந்துவிட்டாள் என்று நான் இவளைப் பற்றி நினைக்கிறேன். ஐயோ, நான் இப்படி பேசுகிறேனே என்று நினைக்காதீர்கள். இந்தம்மா பெரிய பண்ணையாருடைய பேத்தி; நான் சாதாரண வாத்தியார் வீட்டுப் பிள்ளை. எப்படியோ கல்யாணம் நடந்துவிட்டது. என்னை நம்பி அவளுடைய மனுஷாளையெல்லாம் விட்டுவிட்டு வந்துவிட்டாள். இவ்வளவு காலமும் எங்களுக்குள் இருந்த எவ்வளவோ பிரச்னைகளையும் கடந்து வந்துவிட்டோம். அவளுடைய அண்ணன் வீடு, இங்கே பக்கத்தில்தான் இருக்கிறது. அங்கு போகமாட்டேன் என்கிறாள். ''போய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வாடி'' என்றாள், கேட்கமாட்டேன் என்கிறாள். இது பொம்மனாட்டிகளுக்கே உரிய தனிப்பட்ட ஒரு அம்சம்! அந்த மாதிரி அவர்களால் உடனே 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டு போய்விட முடிகிறது. ஆண்களால் இது முடியாது. எதையாவது பொறுக்கிக் கொண்டே இருப்பான். அழகாகட்டும், விசுவாசங்களாகட்டும் பெண்கள் தனிதான். விசுவாசங்கள் மாறும். பிள்ளைகள் பிறந்து விட்டால் அங்கேப் போய்விடுகிறது. ''என்னதான் சொன்னாலும், உங்களை அனுப்பிவிட்டுதான் போவேன்'' என்று ஒரு நாள் சொன்னாள். ''பிள்ளைகளிடம் உங்களை நான் ஏன் விடவேண்டும்.'' இப்படி ஒரு 'சென்டிமெண்ட்'. நமக்கு ஒரு தோழி இருக்கிறாள். நம் பக்கத்திலேயே இருக்கிறாள் என்ற தைரியத்தை இது எனக்கு ஏற்படுத்துகிறது. என் மனைவியிடம் மூட்டை, மூட்டையாகப் புடவைகள் இருக்கின்றன. அவ்வப்போது பீரோவைத் திறந்து, அவற்றை எண்ணி, எண்ணிப் பார்த்துக் கொள்கிறாள். எடுத்துப் பார்க்கிறாள்; பிறகு உள்ளே வைக்கிறாள்; மறுபடியும் எடுக்கிறாள்; மறுபடியும் உள்ளே வைக்கிறாள். என்ன, என்னல்லாமோ செய்து கொண்டிருக்கிறாள். அவ்வளவு புடவைகள் அவளிடம் இருக்கின்றன. அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், அந்தக் காசு எல்லாம் என்னுடையதுதான். அது, வேறு சமாச்சாரம். என் தாய்க்கு இந்தக் கஷ்டம் எதுவுமே இருந்ததில்லை. அவள் ஒரு வார்த்தை சொல்வாள்: ''எனக்கு இந்த வயதில் என்னடா வேண்டும்.''

"எனக்கு இரண்டு பையன்கள். ஒருவன் சிங்கப்பூரில் இருக்கிறான். இன்னொருவன், சப்தரிசி. இங்கேதான் இருக்கிறான். இப்போது வந்திருக்கிறான். இரண்டு நாட்கள் இருப்பான், போய் விடுவான். அவர்கள், அவர்கள் காரியத்தை அவரவர்கள் தான் செய்யவேண்டும். சப்தரிசிக்கு எப்போதும் பசித்துக் கொண்டே இருக்கும். கொடுத்து வைத்தவன். இவன்தான் என்னுடைய அம்பிகாபதி. என் எழுத்தில் என்னை விட அதிகம் துவைந்திருக்கிறான். அனேக நேரங்களில் இவன் சொன்னால், நான் சொன்ன மாதிரி.

"ஏதோ என் வரையில் எல்லாம் ஆகிவிட்டது. என் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டேன். மனைவிக்கு மூன்று தாலி கட்டிவிட்டேன். இது ரொம்ப அபூர்வமாகத்தான் நடக்கக் கூடியது. இப்போது இவர்கள், நினைத்த நேரத்துக்கு அவர்கள் எதிர்பார்க்கிற நிகழ்ச்சி 'டிவி'யில் வரவில்லை என்றால், ஒடிந்துபோய் விடுகிறார்கள். அந்த மாதிரியெல்லாம் எனக்கு ஒன்றுமே கிடையாது. 'டிவி'யாவது, மண்ணாங்கட்டியாவது. எவன் கண்டான் அதை. ''ஏண்டா, எனக்கு என்ன வேண்டும். உடுக்க இரண்டு புடவை, சாப்பாடு. அது எனக்குக் கிடைக்கிறதே'' என்பாள் என் தாய். அதற்கே கஷ்டப்பட்டவள். எல்லோரும் கொஞ்சம் கஷ்டப்படனும். பசி என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். 'நன்றாக சாப்பிடு, நன்றாக தூங்கு, கொஞ்சம் பசித்திரு'' என்று நான் எப்LAA-SA-RAA-17 போதோ எழுதியிருக்கிறேன். கொஞ்சம்தான் பசிக்க வேண்டும். அதிகம் பசிக்கக் கூடாது. பசி என்றால் என்னவென்று தெரிந்திருந்தால் போதும், அவ்வளவுதான். சந்தோசமாக இருந்தால் சந்தோசமாக இருப்போம். இல்லை என்றாலும் அதனால் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது. நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அழகான எண்ணங்கள் நமக்கு இருக்கின்றன. நாம்தான் அந்த எண்ணங்களை உருவாக மாற்றவேண்டும். எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம். அவ்வளவுதான் எனக்கு வாழ்க்கையைப் பற்றி தெரிந்தது எல்லாம். எனக்கு நீ, உனக்கு நான். இதுதான் வாழ்க்கை எனக்கு அளித்த உபதேசம்."

"சிறுவயதிலேயே எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற தீர்மானம் உங்களுக்கு இருந்ததா?"

"இல்லை. எழுதி புகழ் அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. ஆனால், எழுதாமலும் என்னால் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் குடும்பத்துக்கு பைசா மிகவும் தேவையாக இருந்தது. அதனால், அப்போது அதற்காக எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம் காசின் மேல் ருசி விட்டுவிட்டது. என்னுடைய சாதனை என்னவென்றால், நான் எழுதி எதுவுமே வீணாக ஆனதில்லை என்பதுதான். எல்லாம் பிரசுரமாகிவிட்டது. யாராவது ஒருவர் நமக்கு குருவாக வேண்டும். தி.ஜ.ரங்கநாதன் தான் எனக்கு குரு. ''நீ எதை எழுதினாலும் போடுகிறேன்டா'' என்று அவர் சொன்னார். உயிர் என்னுடைய எழுத்தில் இருந்தது என்று அவர் அடையாளம் கண்டுகொண்டு விட்டார். ''நீ என்னைவிட நன்றாக எழுதுகிறேடா'' என்பார். அப்படி சொல்கிறவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள். இப்போது போட்டியும் பொறாமையும் எரிச்சலும் குரோதமும் மிகவும் அதிகமாகி விட்டன. யாரோடு யார் பொறாமைப்படுவது என்பதுகூட இல்லாமல் ஆகிவிட்டது."

"சிறுவயதில் உங்களைச் சுற்றியிருந்த சூழலின் எந்தக் கூறுகள், ஒரு எழுத்தாளனாக நீங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கும் என்று இப்போது பிரித்துப் பார்க்க முடியுமா?"

"நான் கிராமத்தில் வளர்ந்தேன். லால்குடியில் இல்லை; காஞ்சிபுரம் பக்கத்தில், என் அப்பா வேலை செய்த அய்யம்பேட்டை என்ற கிராமத்தில். அங்கு குயவர்களின் வீட்டோடு வீடாக எங்களுக்கு ஒரு வீடு கிடைத்தது. இரண்டு ரூபாய் வாடகை. பெரிய முற்றம் அந்த வீட்டுக்கு இருந்தது. முற்றத்தின் ஒரு பக்கம் நீளமான சுவர்; அதனையொட்டி அடுப்பு; விறகுக் கட்டைதான். ஒரேயொரு அறை. எத்தனையோ முறை பாம்பு வந்திருக்கிறது. நட்டுவாக்கில் வரும். ஏதோ கடிக்காமல் விட்டதால் நாங்கள் தப்பித்து விட்டோம். இடி இடிக்கும். உடனே, அம்மா அர்ச்சுனனின் நாமத்தைச் சொல்வாள். நான் அப்படியே அவளோடு ஒட்டி ஒடுங்கிக் கொண்டிருப்பேன். இது வீட்டின் சூழ்நிலை. அப்போது, என்னைச் சுற்றி இருந்தவர்கள் கலங்கம் இல்லாதவர்கள்; நேர்மையானவர்கள். விடிகாலையில் பத்து மணிக்குத் தொடங்கி, இரவு பத்து மணி வரைக்கும் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வாழ்வின் மொத்த தத்துவத்தையும் அங்கே பார்த்தேன். அவர்களிடம்தான் பிரியம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொண்டேன். அவர்களுடைய பாஷை மிகவும் காட்சி பூர்வமானதாக இருக்கும். அந்த மொழி என் எழுத்து மொழியை பெருமளவில் தீர்மானித்திருக்கிறது.

"எல்லோரும் சொல்கிறார்கள்: ''சில நேரங்களில், சில காட்சிகள் அப்படியே நம் மனதில் விழுந்து விடுகிறது.'' பொம்மனாட்டிகள் ஈரப் புடவையைக் கட்டிக் கொண்டு, படியில் ஏறிக்கொண்டிருக்கும் காட்சி, அப்படியே என் மனதில் இருக்கிறது. என்னுடைய கதைகளிலும் இக்காட்சி அடிக்கடி வரும். தி.ஜ.ர., ''ஏண்டா, இது அடிக்கடி வருகிறதே'' என்பார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. சில காட்சிகள் அப்படி நம் மனதில் பதிந்து விடுகின்றன. நான் கெட்டுப் போகவில்லையேத் தவிர, கெட்ட எண்ணங்கள் எனக்கு இல்லாமல் இல்லை. 'செக்ஸ்' இல்லாமல் எதுதான் உண்டு? பெரிய பக்தியின் மூர்க்கமே செக்ஸ்தான். காமத்தால் உடலில் ஏற்படும் அவஸ்தைகள் எல்லாவற்றையும் நான் எழுத்தில் வடித்திருக்கிறேன். ஆனால், சமுதாயத்துக்கு விரோதமாக நான் என்றும் எழுதியது கிடையாது. சந்தோஷமாக, ஒற்றுமையாக இருப்பது பற்றிதான் நான் எழுதுகிறேன். அதுதான் எனக்கு தோன்றவும் செய்கிறது."

"உங்கள் எழுத்து மொழி பற்றி, 'மிகவும் விசேஷமானது, சங்கீதம் போன்றது, புரியாதது' என்று பல்வேறு விதமான விமரிசனக் கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதனையெல்லாம் இப்போது நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?"

"நான் ஜனரஞ்சகமான எழுத்தாளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு, அப்படியே, அதனாலேயே பிரபலமாகி விட்டவன். ஏதாவது புரியும்படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்துதான். தரம் குறைந்து விட்டது என்று, என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்து விடுவார்கள். இரண்டு, மூன்று பேர் சொல்லிவிட்டார்கள்; எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்? ராமாமிருதம், ராமாமிருதமாகத்தான் இருக்க முடியும்.

"நான் எழுதியவைகள் எந்த அளவுக்கு நிற்கும், நிற்காது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ''நிற்பதற்காகத்தான் நான் எழுதுகிறேனா?'' என்று கேட்கப்படுகிற ஒவ்வொரு சமயத்திலும், ''நான் அதற்காக எழுதவில்லை. நான் எப்போதுமே எனக்காகத்தான் எழுதுகிறேன்'' என்று சொல்லி வந்திருக்கிறேன். இதுதான் நிஜமும்கூட. ''எனக்காகத்தான் எழுதுகிறேன் என்றால், ஏன் பத்திரிகையில் பிரசுரிப்பானேன். நீயே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே'' என்று ஒரு கட்சி பேசினால், அதனை ஒரு கட்சியாகவே நான் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

"என்னுடைய எழுத்தில் சங்கீதத்தின் ஈடுபாடு இருக்கிறது. சங்கீதம், ஓவியம், எழுத்து போன்ற எல்லா கலைகளும் எதை நோக்கி நகர்கின்றன? மௌனத்தை நோக்கிதான். மௌனம்தான் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கும் போது இடையில் திடிரென்று பேச்சு நின்றுவிடும். அற்புதமான கணங்கள் அவை. மனது நிறைந்து போவது போல் இருக்கும். அதே சமயம், என்ன நேரப் போகிறதோ என்ற பயமும் இருக்கும். ஆனால், அனேக நேரங்களில், மௌனத்தை நோக்கிப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, எழுத்தாளன் நிறையப் பேசுகிறான். நான் நிறையப் பேசுகிறேன். ஒருவர் மனதைத் தொட்டு, ''அட இது எனக்கு நேர்ந்ததாச்சே; இதை ஏன் என்னால் எழுத முடியவில்லை. இந்த ஆள் எழுதியிருக்கிறானே! என் மனதில் ஓசையை எழுப்புகிறானே'' என்று வாசகன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள், அது போலான எழுத்தைத்தான் நான் நல்ல எழுத்து என்று நினைக்கிறேன். ''உங்கள் எழுத்து புரியவில்லையே'' என்று என்னிடமே வந்து சொல்கிறார்கள். புரியவேண்டும் என்பது அவசியமா என்ன? இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்குப் புரிந்துவிட்டுப் போகிறது. எழுத்தாளனுக்கே அவன் எழுதுபவைகள் எல்லாம் புரிகிறது என்று நீங்கள் கண்டீர்களா? புரியாமல்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் இப்போது என்ன கெட்டுப் போய்விட்டது."

"மொழியின் கவித்துவம் மற்றும் நுட்பம் காரணமாக நீங்கள் மௌனியுடன் ஒப்பிடப்பட்டுள்ளீர்கள். இதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?"

"மௌனி, இங்குப் பேசப்படும் அளவுக்கு முக்கியமான எழுத்தாளரில்லை என்ற எண்ணம்தான் எனக்கு இருக்கிறது. க.நா.சு. போன்றவர்கள் தொடர்ந்து பேசி, அதன் மூலம் அவர் முக்கியமானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். மேலும், அவர் மிகவும் குறைவாகத்தானே  எழுதியிருக்கிறார். மௌனி, ஒரு முறை என் வீட்டுக்கு வந்திருந்தார். இங்கே, இப்படி எனக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தார். அவருடன் இன்னொருவரும் வந்திருந்தார். அவர், ''நீங்கள் ராமாமிருதத்தைப் படித்திருக்கிறீர்களா?'' என்று மௌனியைக் கேட்டார். ''நான் படித்ததும் இல்லை. படிக்கப் போவதும் இல்லை'' என்று மூஞ்சியில் அடிக்கிற மாதிரி பதில் சொன்னார் மௌனி. அவர் படிக்காவிட்டால் போகிறார். அது பற்றி எனக்கு வருத்தம் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், அந்த மனிதன் இப்படி பேசவேண்டிய அவசியம் என்ன? எனக்குத் தெரியவில்லை.

"மௌனி தண்ணீர் போடுவார் என்று நினைக்கிறேன். நான் சொல்கிற இந்தத் தண்ணீர் வேற. அழிந்து போகிறவர்கள் எல்லோரும் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். அக்கிரமங்களை செய்கிறவர்கள் செய்யட்டும். நான் செய்யவில்லை என்பதாலேயே மற்றவர்களும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பது சரியில்லை. ஆனால், ஒரு 'கேரக்டர்' இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தீவிரமான எண்ணங்கள், ஏதாவது ஒன்றின் மீது இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் நிச்சயம் பெரிய நஷ்டம்தான்."

"மொழி பற்றிப் பேசியதன் தொடர்ச்சியாக கேட்கிறேன், உங்கள் மொழியும் கதைகளும் வாசிக்கும் போது ஒரு 'மிஸ்டீரியசான' அனுபவத்தை அல்லது உணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. உங்கள் வாழ்வில் அதுபோன்ற அனுபவத்தை எதிர் கொண்டிருக்கிறீர்களா?''

"பலமுறை அதுபோல் நேர்ந்திருக்கிறது. இரண்டை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் ஞானமூர்த்தி நகரில் இருந்தபோது, என் வீட்டில் இடிந்த பகுதிகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தோம். மதியம் வேலைக்காரர்கள் எல்லோரும் சாப்பிட போய்விட்டார்கள். நான் படுத்திருந்தேன். திடீரென்று எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியது. நான் எழுந்து நின்றேன். நான் தனியாக எழுந்து கொள்கிறேன். ஆனால், என் உடம்பு அங்கேயே படுத்துக் கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்துக்கொண்டே நான் நின்று கொண்டிருக்கிறேன். ரொம்ப 'பியூட்டிபுல்'ப்பா. இப்படி ஒரு சுகமான பாவமா. இந்த உடம்பு எவ்வளவு பெரிய சுமையாக இருக்கிறது தெரியுமா? அப்படியே மிதந்து போகிற சமயத்தில், இப்படித்தான் இருக்குமோ சாவு என்று, உடம்பைப் பார்த்துக்கொண்டு தனியாக நிற்கும் போது தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஐய்யோ! இது ரொம்ப நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால், அதற்குள் சாப்பிட சென்றவர்கள் திரும்பி வரும் சப்தம் கேட்டது. உடனே அது உள்ளே புகுந்துவிட்டது. உடம்பை விட்டு வெளியே வந்து, உடம்பை பார்த்துக் கொண்டு நின்ற அது, என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அது மூச்சா, பிராணனா, ஞாபகச்சக்தியா, நானா அல்லது எல்லாவற்றோடும் சேர்ந்த பரம்பொருளா? ஒன்றும் தெரியவில்லை. இதனை ஒரு பெரியவரிடம் சொன்னபோது, உடனே அவர் என் காலைத் தொட்டுக் கும்பிட்டார். இதெல்லாம் பெரிய சித்தி. அது எல்லோருக்கும் கிடைக்காது. ஆசைப்பட்டால் உடனே கிடைத்துவிடுமா? ஆனால், என் ஞாபகத்தில் இருக்கிறது அது. அதனை என்னால் அழிக்கவே முடியாது."

"வேறு எதாவது. . ."

"அதுவும் ஞானமூர்த்தி நகரில் இருக்கும் போதுதான் நிகழ்ந்தது. ஒரு நாள் வாசகLAA-SA-RAA-19ர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவர் வந்தார். ''நம்பர் பதிமூன்றில் கண்டக்டராக இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. எங்க அம்மாவுக்கு கண்ணில் 'கேட்ராக்ட்' ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல் உங்களுக்கும் செய்யவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது'' என்று சொன்னார். ''சரி, அழைத்துக்கொண்டு போங்கள்'' என்று சொன்னேன்.

"என்கூட என் குழந்தைகள், பொம்மனாட்டி யாரும் வரவில்லை. அவர் அழைத்துக்கொண்டு போனார். பரிசோதனைகள் முடிந்தவுடனே, டாக்டர் சொன்னார்: ''இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் ஆபரேசன் செய்து கொள்ளவில்லை என்றால், உங்கள் இடது கண் பஸ்டாகிவிடும். 'ப்ளாக் கேட்ராக்ட்' வந்திருக்கிறது உங்களுக்கு. இடது கண் பஸ்டாகிவிட்டது என்றால் வலது கண்ணும் பஸ்டாகிவிடும். உடனே நீங்கள் ஆபரேஷன் செய்து கொள்ளவேண்டும்.'' பண்ணிவிட்டார். உறவுக்காரர்கள் எல்லோரும் விஷயம் தெரிந்து வருவதற்குள், ஆபரேஷன் முடிந்துவிட்டது. வீட்டுக்கு திரும்பி வந்த பிறகும், தொடர்ந்து ஒரு வாரம் அந்த கண்டக்டர் வந்தார். ஆரஞ்சு, ஆப்பிள் என்று எதாவது பழங்கள் வாங்கிக்கொண்டு வருவார். அப்புறம் காணாமல் போனவர்தான், இன்றைய தேதி வரைக்கும் வரவில்லை! அதற்கு முன்னாடியும் எப்போதும் அவர் வந்ததில்லை. கண் கொடுப்பதற்காகவே வந்தவர் போல், வந்து சென்றுவிட்டார்!

"அவர் எதற்காக வந்தார், வந்ததும் ஏன் அவருக்கு இதைக் கேட்கவேண்டும் என்று தோன்றியது, நான் எப்படி உடனே சம்மதித்தேன், டாக்டர் வேறு உடனே ஆபரேசன் செய்யனும் என்றார். பிறகும் ஒரு வாரம் தொடர்ந்து வந்தவர், அப்புறம் ஏன் வரவேயில்லை? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலே தெரியாமல், இப்போதும் நான் இந்தக் கண்களால்தான், தொடர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் நன்றி செலுத்த வேண்டியது சமயங்களுக்கா, நபர்களுக்கா? எனக்குத் தெரியவில்லை."

"நீங்கள் ரிஷிகேஸ் சென்றபோது, அங்கே உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்காக மீண்டும் ஒருமுறை அதனை சொல்லமுடியுமா?"

"அதனை எல்லோரும் ஏற்கெனவே கேட்டிருப்பாங்கதானே!"

"இப்போது வயதும் அனுபவமும் ஏறிய நிலையில், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, அந்த அனுவத்தை எப்படி திரும்பிப் பார்க்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்."

"ஐய்யோ! அதுதான் விஷயம். எவ்வளவு காலம் ஆனால் என்ன, அலுக்கவே அலுக்காது. அப்போது அலுவலக வேலையாக டில்லிக்கு போயிருந்தேன். அங்கு சென்றதும் ரிஷிகேஸ் போகணும் என்று ஆசை ஏற்பட்டுவிட்டது. போனேன். பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறோம். கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாள். அங்கே இறங்கினால் அந்த சிலிர்ப்பே நெருப்பாக இருக்கிறது. அங்கே குளித்தேன். நீலமாக இருக்கிறது. டில்லியில் பாலத்தின் மீது போய்க் கொண்டிருக்கும் போது கீழே பார்த்தேன். யமுனா ஓடிக் கொண்டிருக்கிறாள். அப்படியே சுழிக்கிறாள். பயங்கரமாக இருக்கிறது. ரொம்பக் கோபக்காரி போல. இவளே கோபக்காரி என்றால் கங்கை எவ்வளவு பெரிய கோபக்காரியாக இருப்பாள். ஆனால், யமுனாதான் பெரிய கோபக்காரி என்று சொல்கிறார்கள். போகட்டும். இமயமலைத் தொடர், ரிஷிகேஸிலிருந்து ஆரம்பமாகி விடுகிறது. இமயமலைத் தொடர் இங்கே ஆரம்பமாகிறது என்று தெரிந்து கொள்ளும்போதே, ரொம்ப சந்தோஷம் ஏற்படுகிறது. மேலே பார்த்தால் ஒருவிதமான மந்தகாரமான சூழ்நிலை. மேகங்கள் வெள்ளையாகக் குட்டி குட்டியாகப் போகிறது. துள்ளித் துள்ளி போகிறது. ஆட்டுக்குட்டி மாதிரி இருக்கிறது; துள்ளுகிறது. மனதில் நாம் என்னத்தையெல்லாம் நினைக்கிறோமோ, அப்பொழுதே அதனை நாம் ஆக்கவும் செய்கிறோம். அது மாதிரியான சமயங்கள், எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கிறது. நம்மால் செய்ய முடியாதது என்ன என்ற ஆச்சர்யமும் நம்பிக்கையும் அந்த சமயத்தில் ஏற்படுகிறது. நம் உள்ளே இருக்கும் இந்த அற்புத சக்திகள் எல்லாவற்றையும் நாம் வெளியேக் கொண்டுவர வேண்டும். மேகங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை, அப்படியே கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டே நின்றேன். திடீரென்று என்னை புகைமண்டலம் சூழ்ந்து கொண்டது. பனி என்று நினைக்கிறன். அப்போது அந்த நிலமை, என்னைப் பதப்படுத்துகிறதய்யா, பதப்படுத்துகிறது. வெறும் புகை. உடனே கற்பனை சிருஷ்டி செய்கிறது, ரிஷிகள் பயணம் செய்கிறார்கள். அவர்களை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் கேட்கிறேன். 'சச்ஜோதி, ஜோதி, ஜோதி, ஸ்வாகா' என்று காதில் கேட்கிறது. அந்தப் புகையானது, கோமக் குண்டலப் புகையாக மனதில் உருமாறுகிறது.

"இது எல்லாம் என்ன? நாம் நினைத்துக் கொள்வதுதான். மற்ற எல்லோருக்கும் தோன்றுகிறதா என்ன? இல்லையே. 'சென்சிட்டிவ்னஸ்' என்பது சிலரிடம்தான் அதிகமாக இருக்கிறது. அது எழுத்தாளர்களிடம் நிறையவே இருக்கிறது; இருக்கவேண்டும். என்னுடைய எழுத்துக்கு ஏற்றார்ப் போன்ற 'சென்சிட்டிவிட்டி' எனக்கு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போன்ற அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ரிஷிகேஸில் உடனே நான் நினைத்துக் கொண்டேன். எனக்கு அம்பாளுடைய நினைப்புதான் வருகிறது. அம்பாள் என்றால் யார்? அம்மாதான் அம்பாள். ரிஷிகேஸில் ஒரு பல்லக்கு மேகத்துக்கு இடையே நகர்கிறது. திரைபோட்ட பல்லக்கு திரையில் இருந்து ஒரு கண் எட்டிப் பார்க்கிறது. ஒரே ஒரு கண் மட்டும்தான். ராஜகுமாரி என்னை எட்டிப் பார்க்கிறாள். அந்த அளவுக்கு மனது போகுதய்யா... எனக்கு உடம்பெல்லாம் அலரிப் போய்விட்டது. பூமியில் என்னுடைய கால் இல்லை. நானே என்னை இழந்து நிற்கிறேன். எனக்கு நான் வேண்டும். ஆனால் அப்போது அங்கே இல்லை நான். மனைவி, குழந்தைகள் எல்லோரையும் மெட்ராஸில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். என்றால் எப்படி, என்னை நான் இழந்துவிடமுடியும். பயம் வந்துவிட்டது. பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும் கத்துகிறார்கள். சோடா கொடுக்கிறார்கள். பதறிப் போய்விட்டார்கள். அவர்களுடைய பாஷையில் என்னமோ பேசுகிறார்கள். எனக்கு என்ன புரிகிறது? அவனை நான் பார்த்துவிட்டேன என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? சில தருணங்களில், அவளே ஏமாந்து விடுகிறாள். மாட்டிக்கொண்டு விடுகிறாள். நான் அவளிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது, அவள் என்னிடம் மாட்டிக்கொண்டு விட்டாள். அவளை என்னால் அவ்வளவு சுலபமாக விடுவித்துவிட முடியாது. அது இந்த லோகம் சம்பந்தப்பட்டது இல்லை. அதே நேரத்தில் இல்லையென்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.''

''ஒரு கதை உங்களுக்குள் உருவாகும் புள்ளியிலிருந்து, ஒரு முழுமையான வடிவத்தை அடைவது வரைக்கும் உள்ள செயல் பற்றிச் சொல்லமுடியுமா?''

''கதை எங்கேத் தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். 'அஞ்சலி' என்று ஒரு கதை, ஐந்து பூதங்களையும் உருவகப்படுத்தி எழுதினேன். நான்கு கதைகள் வந்துவிட்டது. காயத்தைப் பற்றி எழுத வரவில்லை. அதற்காக எட்டு வருடம் காத்துக் கொண்டிருந்தேன். அது வரும் என்று எனக்குத் தெரியும். எனவே காத்துக் கொண்டிருப்பது பற்றி, நான் கவலைப்படுவதில்லை. ஒரு நாள் குமுட்டியில் கனல் தகதகவென்றிருந்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'ஏக்கா', என்று ஒரு வார்த்தை அப்போது மனதில் ஓடியது. ஏகாம்பரி, ஏகாம்பரம் என்று உருக்கொண்டு, கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இப்படித்தான் கதை உருவாகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மனது தளர்ந்துபோய், எங்கே நெகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அங்கே கவித்துவம் ஏற்படுகிறது. 'சிந்காநதி'யில் ஒரு அத்தியாயம், 'my dark Gazzle of the night' என்று ஆரம்பிக்கிறது. ஏன் இப்படி ஆரம்பித்தீர்கள் என்று என்னைக் கேட்டால், எனக்குத் தெரியாது. என்னமோ தோன்றியது, அப்படி தொடங்குகிறேன். தொடங்கிய பிறகு, அதன் பாட்டுக்கு, அது போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு கதையில் ஒருவன், எதையோ, இப்படி கையில் தூக்கிக்கொண்டு போகிறான். உடனே, 'பறவையின் ஒடிந்த சிறகு போல்' என்று எழுதினேன். ஏன் இப்படி வந்தது என்று என்னைக் கேட்டால், எனக்கு எப்படித் தெரியும்! அது வந்துவிட்டது, அவ்வளவுதான். 'symbathy.'

"ஒருமுறை நாசூக்காக பேசுவது பற்றி எழுதவேண்டும். ஆனால், எனக்கு உவமானம் கிடைக்கவே இல்லை. தூங்கிவிட்டேன். அது பற்றி நான் கவலைப்படவில்லை. எது பற்றியுமே நான் கவலைப்படுவது இல்லை. இதனை நான் திரும்பத் திரும்ப பலமுறை சொல்லிக் கொள்கிறேன். தூக்கத்தில், 'மாம்பூவை காம்பு ஆய்வது போல்' என்று ஒரு கரித்துண்டு சுவற்றில் எழுதிக் கொண்டே செல்கிறது. இதனை கதையில் அப்படியே சேர்த்துவிட்டேன். இதற்கு நான் பொறுப்பாக முடியுமா? எழுத்தாளன், அவன் எழுதும் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக முடியாது. அவன் வழியாக வெளிப்படுவதுக்காக, சில சமயங்களில், சில தாதுக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. சமயம் வந்தவுடன் அது வெளிப்படுகிறது. இவன் மூலமாக நான் வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்; இந்த எண்ணம் நமக்கு இருக்கவேண்டும். எப்போது, எதில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்படுகிறதோ, அந்த ஈடுபாடுதான் உங்களுடைய அனுபவம். உங்களுடைய முஸ்தி, விடுதலை, குறிக்கோள், அதிர்ஷ்டம், பாக்கியம் எல்லாம். 'கழுகு' எழுத பத்து வருஷம் ஆனது; 'அபிதா', இரண்டு வருஷம்; 'புத்ர' இரண்டு வருஷம்; 'அஞ்சலி' எட்டு வருஷம்...

"நான் நேரத்தைப் பார்ப்பது கிடையாது. எழுதுவதற்காகத் தனியாக இடம் தேடுவது கிடையாது. நீங்கள் பேசிக் கொண்டிருந்தாலும், நான் எழுதிக் கொண்டே இருப்பேன். டீ தேவையில்லை, டேபிள் தேவையில்லை, பேப்பரும் பேனாவும் மையும் மட்டும் போதும். எந்த நிமிஷம் ஆரம்பிக்க வேண்டுமோ, அந்த நிமிஷம் ஆரம்பிக்க முடியும். அதனாலேயே என்னைக் கோவில் மாடு என்றுகூடச் சொல்வார்கள்.''

''மற்ற தமிழ் எழுத்தாளர்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் மீது உங்களுக்கு இருக்கும் ஈர்ப்பு, வித்தியாசப்பட்டு நிற்கிறது. 'அபிதா' நாவல் சிறந்த உதாரணம். 'அபிதா'வுக்கு பின்னாடி தேங்கி நிற்கும், காதலித்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்.''

''எனக்கு காதலுடன் சம்பந்தப்பட்டும் சம்பந்தப்படாமலும் இருக்கிறது. சிவனுடைய நெற்றிக் கண் சூடு தகிக்கும்; அது போல்தான் காதல். அதாவது அந்த அனுபவம். அதனை நான், அனு+ பவம் என்று இரண்டாக பிரிக்கிறேன். அனு என்றால், ரகசியம் என்று பொருள். பவம் என்றால், ரகசியமான அனுபவம் அல்லது உணர்ச்சி. அதனால்தான் காதலை ஒருவராலும் முழுமையாக சொல்லிவிட முடியாமல் இருக்கிறது. காதல் என்பது ஒருவிதமான உணர்ச்சி. அதனை மனிதர்களுடன் சம்பந்தப்படுத்தக் கூடாது. காதல் என்பது நேர்ந்து கொண்டே இருக்கிறது. அபிதா நிஜமானவள்தான். இப்போது இறந்து போய்விட்டாள். காலமாகும் போது வயது என்பது. ''நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னைக் காதலிக்கிறாயா'' என்று நாங்கள் பேசிக் கொண்டது கிடையாது. அவள் இன்னொருத்தன் பொண்டாட்டி. எட்டு வயதில் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் அறிவோம். நான் அவளைப் பற்றி எழுதுவதாக இருக்கிறேன். அபிதாவைப் பற்றி இன்னொரு அபிதா. காதலிக்கும் மனுஷாளையே, எப்போதும் தொடர்ந்து காதலித்துக் கொண்டும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. அது ஒரு தருணம், மகத்தான ஒரு விபத்து. 'A tremendous accident'

"நாம் கல்யாணம செய்து கொள்ளப்போகும் பொம்மனாட்டியைப் பார்த்து, ''நான் உன்னைக் காதலிக்கிறேன்'' என்று சொல்ல முடியுமா? சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை. என்ன ஆகுமென்றால் ''அட, என்னடா இது இப்படிக் கல்யாணம் செய்து மாட்டிக்கொண்டு விட்டோமே'' என்று தோன்றும். ஒருநாள், நான் பார்த்தேன்... அப்போது நான் மிகவும் சின்னப் பையன். அவள்... அவனுடைய பொண்டாட்டியோ, வைப்பாட்டியோ எனக்குத் தெரியாது. அவளை, அவன் எட்டி உதைக்கிறான். அவள் அவனுடைய காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். ''ஏண்டா இவங்க இப்படி இருக்காங்க'' என்று நான் எண்ணினேன். நம்முடைய சம்பிரதாயத்தில் இது போன்ற, ஒரு ஏற்பாட்டை ஏற்படுத்தி வைத்திருக்காங்க. எதை விட்டாலும், உன்னை நான் விடமாட்டேன் என்று. இந்த காலத்தில் இதெல்லாம் கிடையாது. இந்த காலத்து மனுஷாளைப் பற்றி, நான் பேசவும் இல்லை. பொம்மனாட்டிக்குப் புருஷன் ஏன் முக்கியம் என்றால், பிறந்த வீட்டிலிருந்து கழட்டி விட்டிடுகிறாங்க. நாத்து நடுகிறது மாதிரிதான். ஒரு இடத்தில் இருந்து, இன்னொரு இடத்தில் பிடுங்கி நடுவது போல். இப்படி ஒருவர் வாழ்க்கையில் இன்னொருவர் வந்து புகுந்து கொள்வது போன்ற நிலமை ஏற்படக்கூடாது. இவனுக்குத் தனியாக ஒரு வாழ்க்கை, அவளுக்குத் தனியாக ஒரு வாழ்க்கை என்று இருக்கவேண்டும்.''

''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்'' என்று எங்கேயோ நீங்கள் குறிப்பிட்டதாக ஞாபகம். இப்போதும் அப்படித்தான் இருக்கிறீர்களா?''

''ஆமாம். இப்போதும் சொல்கிறேன், நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்தான். அழகு என்பதை தனியாக வரையறுத்துவிட முடியாது. அந்தந்த சமயத்தில மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் அழகு. எனக்கு பதினெட்டு, பத்தொன்பது வயது இருக்கிற சமயத்தில், அப்போது காஞ்சிபுரம் பக்கத்து கிராமத்தில் ஒரு நண்பி இருந்தாள். அவளைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. திடிரென்று ஒரு நாள், அவளைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆவல் ஏற்பட்டுவிட்டது. நான் கிளம்பி ஓடுகிறேன். போய்ச் சேரும்போது இருட்டிவிட்டது. எப்படியோ, விசாரித்து, விசாரித்து அவள் வீட்டைக் கண்டு பிடித்துவிட்டேன். கதவைத் திறந்து உள்ளேப் போனேன். அவள் படுத்துக் கொண்டிருந்தாள். உடம்பு வயதேறி தளர்ந்துவிட்டது. என்னைப் பார்த்த மாத்திரத்தில், ''அட ராமாமிருதம் வந்தியாப்பா, எப்ப வந்த'' என்றாள். நான் அதிர்ந்து போய்விட்டேன். இது ஞாபக சக்தியில் சேர்த்தியா, அல்லது எப்போதுமே நான் அவளுடைய எண்ணத்தில இருந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தமா; அல்லது அவர்களுக்கே உரித்தான ரத்தத்தோடு ரத்தமாக கலந்த ஒரு சம்பந்தமா? எனக்குத் தெரியவில்லை. அவள் எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டாள்? ஒரு நிமிடத்தில், ''நான்தான் ராமாமிருதம்'' என்று சொல்லக்கூட வழியில்லாமல் செய்துவிட்டாளே! இந்தத் தருணம் இருக்கிறதே, அதுதான் எனக்கு முக்கியம். இதைத்தான் நான் சௌந்தர்ய உபாஷகன் என்று சொல்கிறேன்.

"சமயம் என்பது ஒரு மூகூர்த்த வேளை. எவ்வளவோ விதமான வேதியியல் பொருட்கள் அதில் ஒன்று சேர்கிறது. முன்ஜென்மம், ஞாபகம், ஞாபகமே இல்லாத நிலை, திடீரென்று ஏற்படக்கூடிய இராசாயணம். அந்த சமயத்தில் நாம் நம்முடைய வசத்திலேயே இல்லை. எனக்குத் தோன்றுகிறது, சாவு நிகழும் சமயத்தில் கிட்டத்தட்ட இதுபோல்தான் இருக்கும் என்று.''

''இந்த என்பத்தாறு வயதில், உங்களுக்கு தெரிந்தவர்களில், உயிரோடு இருப்பவர்களின் எண்ணிக்கையைவிட, இறந்தவர்கள் எண்ணிக்கைதான் நிச்சயம் அதிகமாக இருக்கும். நிறைய பேரின் - நண்பர்களின், உறவினர்களின் - மரணங்களைப் பார்த்திருப்பீர்கள். இப்போது மரணம் குறித்த உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது?''

''என்னுடைய முப்பத்தைந்து வயதிலிருந்தே மரணம் என் அண்டை விட்டுக்காரனாக இருக்கிறான். தொடர்ந்து தெரிந்தவங்களில் யாராவது ஒருத்தர் போய்கொண்டே இருக்காங்க. என் தம்பி போய்விட்டான், தங்கச்சி போய்விட்டாள், இன்னொரு தங்கை விதவையாகி விட்டாள், நண்பர்கள் போய்விட்டார்கள். போக வேண்டியவர்கள் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். போனவர்கள் திரும்புவதும் கிடையாது. ஆனால், உறவினர்களைவிட நண்பர்கள் போகும்போது பார்த்துக் கொண்டிருப்பதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. என் பங்குக்கு வாழ்க்கையின் கோப்பையில் என்ன என்ன இருந்ததோ, அது எல்லாவற்றையும் நான் பருகியாகிவிட்டது. இப்போது நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒன்றே ஒன்றைத்தான். ஒரு நாடகமேடை போன்ற இந்த அமைப்பில், எந்தப் பக்கமாக நான் வெளியேறப் போகிறேன் என்பதுதான் அது. அல்லது நடுவிலேயே போகப் போகிறேனா? எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. பயமும் இருக்கிறது. அதே சமயத்தில் பயம் இல்லையென்றும் சொல்லவேண்டும். பயந்தால் அது என்னை விட்டுவிடப் போகிறதா என்று ஒரு தெம்பும் இருக்கிறது. என்னுடைய வேலை என்ன? எதற்கு இங்கே வந்தேன்? எழுத்து என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. காலம் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும். அது யாருக்காகவும் காத்திருக்காது. நான் இப்போது பேசிக்கொண்டே இருக்கிறேன். எந்த சமயத்தில் முடிவு வரும் என்று தெரியவில்லை. அதனால் அந்த அவசரத்திலேயே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த வரைக்கும் என்ன சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்லிவிட வேண்டும் என்னும் அவசரத்தில் பேசுகிறேன். ஆனால் எதுவும் என்னுடையதில்லை. நீ எதனையும் எடுத்துக் கொண்டு போகமுடியாது. எடுத்துக்கொண்டு எங்கேதான் போவே! கையில் காசு இல்லையே! காசு இருந்தாலும்தான், எங்கேப் போய என்ன பண்ணமுடியும்?

"ஒருமுறை என் தம்பி இங்கே வந்திருந்தான். என்னிடம் அவன் கேட்டான்: ''ஏண்டா நாம் வாழ்ந்து விட்டோமே, இத்தனை நாளும். நாம் என்னத்தை சாதித்திருக்கிறோம். நீயாவது ஒரு எழுத்தாளன். நான் என்ன பண்ணியிருக்கிறேன். எனக்கு ஒன்றும் தெரியலையே''. உடனே எனக்கு ஒரு திகில் ஏற்படத்தான் செய்தது. இப்போது நான் என்னதான் எழுதியிருந்தாலும், மக்களுக்கு மறதி ஜாஸ்தி. தி.ஜானகிராமனை இப்போது யார் கொண்டாடுகிறார்கள். ஏன் த.நா.குமாரசுவாமியையே இப்போது யாருக்கு நினைவிருக்கிறது. கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி பெயர்களை யார் சொல்கிறார்கள்? பெயர்களை குறிப்பிட்டு சொல்வது அவ்வளவு முறையல்ல. அதனால் நான் இதனை அத்துடன் விட்டுவிடுகிறேன். இப்படியாக என்னதான் செய்து, என்ன பிரயோஜனம் என்று தோன்றுகிறது.''

''பக்கத்து மாநில எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது, தமிழ் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம், விருதுகள் எல்லாம் குறைவுதான். பலருக்கும் அது ஒரு மனக்குறையாகவே இருக்கிறது. உங்களுக்கு எப்படி இருக்கிறது?''

''விருதுகள் என்று கணக்கிட்டால் பத்து, பன்னிரெண்டு வாங்கியிருக்கிறேன். சாகித்ய அகாதமி, கலைமாமணி... இப்படியே போய் கொண்டே இருக்கும். சங்கராச்சாரியார், பெரியவர், ஒரு விருது கொடுத்திருக்கிறார். நான் கொஞ்சம் அதனை பெரியதாகத்தான் நினைக்கிறேன். அவருக்கும் இலக்கியத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய எழுத்தில் ஆன்மிகத்தின் சாயல் இருப்பதால், அவர் கொடுத்திருக்கிறார். அப்பறம் ஞானபீட விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப் பட்டிருக்கிறேன். நான் பிராமணன், அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது. எனவே இங்கே தி.மு.க. ஆட்சியில், எனக்கு எந்த விருதும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஜெயலலிதா இருந்ததால் கலைமாமணி கிடைத்தது. அது கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன? நான் அதையெல்லாம் போட்டுக் கொள்வதே கிடையாது. டாக்டர் பட்டம் வேறு, யாரோ ஒருவர் கொடுத்திருக்கிறார். இதற்கும் மேல் மற்றவர்களால் எனக்கு என்னதான்DHALAVAI தந்துவிட முடியும்.''

''உங்கள் எழுத்துக்களைப் படித்துவிட்டு வாசகர்களிடம் இருந்து வந்த எதிர்வினைகள் பற்றி...''

''ஞானமூர்த்தி நகரில் இருக்கும் போது ஒருவர் வந்தார். என் கையை பிடித்தார். கண்ணில் ஒத்திக் கொண்டார். அழுகிறார், அழுகிறார், அரைமணி நேரமாகத் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார். அப்புறம் நான் வருகிறேன் என்றுவிட்டு போய்விட்டார். எதுக்கு வந்தார்? என்ன சொல்ல வந்தார்? என்ன சொன்னார்? அழுகை மூலமாக, அவர் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிட்டாரா? தெரியவில்லை. இன்னொருவர் வந்தார், இலங்கையிலிருந்து. ''உங்களைப் பார்க்கவேண்டும் என்று முப்பது வருடமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் பார்க்காமலேயே செத்துப்போய் விடுவேனோ என்று நினைத்தேன். அகதியாக இந்த ஊருக்கு வந்தேன். அகதியாக வந்தாலும் உங்களை பார்த்துவிட்டேன்'' அப்படின்னார். இன்னொரு ரசிகர், ''நீங்க ஏன் டாய்லெட்டுக்கு தண்ணீர் ஊத்துகிறேள். நான் வந்து ஊத்துகிறேனே'' என்றார். இது என்ன அநியாயமாக இருக்கிறது.''

''கடைசியா...''

''எழுத்துக்கோசரம் நான் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. என் இஷ்டப்படிதான் எழுதி வந்திருக்கிறேன். அப்படி எனக்கு எழுதவும் முடிந்திருக்கிறது. இனிமே காசு வந்து, எனக்கு என்ன ஆகவேண்டும்? எனக்கு எல்லாமே கிடைத்துவிட்டது. சோறுதான் இப்போதைக்கு வேண்டும். அதுவும் என்னால் அதிகம் சாப்பிடக்கூட முடியாது. வயிறு குறுகிப் போய்விட்டது. கை கால் ஓய்ந்துவிட்டது.  உங்களைப் போல், யாராவது ஒருவர் வந்து பேட்டி கேட்கிறார்கள். கேட்டால் உடனே கட்டாயம பேசியாக வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? அவசியமே கிடையாது. ஆனால் என்னமோ, மரியாதைகளை மட்டும் விடுவதற்கு இன்னும் நான் தயாராக இல்லை. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அப்பறம் நீங்களே, ''அவருக்கு வயதாகிவிட்டது. அவரைப் போய் தொந்தரவு செய்யவேண்டாம்'' என்று விட்டுவிடுவீர்கள். இல்லையென்றால் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார் என்று நினைப்பீர்கள். ஆனால் எப்போது, நான் சொல்வது உங்களுக்கு அலுக்காமல் போகிறதோ, அப்போது வரைக்கும் நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன்."


('குமுதம் ஜங்ஷன்' பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதன் சுருக்கமான வடிவம் 'ஜங்ஷன்' இதழில் வெளியானது. )

நன்றி: தளவாய் சுந்தரம் தளம்

Jan 29, 2011

ப. சிங்காரம்: அடங்க மறுக்கும் நினைவு – எஸ்.ரா

ப.சிங்காரம் என்ற பெயர் புது யுகம் பிறக்கிறது இதழில் சி. மோகன் எழுதிய நாவல் பற்றிய கட்டுரையில்தான் எனக்கு முதன் முதலாக அறிமுகமானது. மோகன் தமிழின் சிறந்த நாவலாசிரியர் வரி சையில் சிங்காரத்திற்குத் தனியி டம் அளித்திருந்தார். அந்த நாட் களில் ஜானகிராமன், ஜெயகாந் தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்று தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்த எனக்கு சிங்காரம் யார் என்ன எழுதியிருக் கிறார் என்ற குsingaram---26ழப்பம் உண்டா னது. எனது சேமிப்பிலிருந்த சிறு பத்திரிகைகளைப் புரட்டிப்புரட் டிப் பார்த்தபோது சிங்காரத்தைப் பற்றிய சிறுகுறிப்பு கூடத் தென்பட வில்லை.

மறுநாளே பொதுநூலகத்திற்குச் சென்று சிங்காரத்தின் நாவலைத் தேடத் துவங்கினேன். இரண்டு  நாட்கள் தேடிச்சலித்த போதும் நாவலைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. திடீரென ஒரு சந்தேகம் வந்தது. நூலகங்களில் உள்ள பொருள்பகுப்பு முறை மிக விசித் திரமானது. அங்கே ஜானகி ராம னின் சக்தி வைத்தியம் சிறுகதைத் தொகுப்பு சித்த வைத்திய பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. அது போலவே சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை  இயற்கைநூல் பிரிவிலிருந்தது.

இப்படியான வகைப்பாட்டியிய லில் சிங்காரம் மாட்டிக்கொண்டி ருக்கக்கூடும் என்ற யோசனை யோடு கடல் தொடர்பாகப் புத்த கங்கள் உள்ள விஞ்ஞானப் பிரி வில் தேடியபோது அதில் கட லுக்கு அப்பால் என்ற சிங்காரத் தின் நாவலிருந்தது. அந்தப் புத்த கத்தை அதுவரை மொத்தமே நான்கு பேர்தான் படித்திருக் கிறார்கள் என்பது முன்பக்க நூல கப் பதிவில் தெரிந்தது. உடனே வீட்டிற்கு எடுத்துச் சென்று மாலைக்குள்ளாகவே படித்து முடித்தேன்.

கதை சொல்லும் முறையும், பின்புலமும் தமிழ் நாவலைத்தான் படிக்கிறேனா என்று வியப்பூட்டும் படியாக இருந்தன. குறிப்பாக பர் மீய தமிழ்வாழ்வும் யுத்தகாலப் பின்புலமும் நாவலுக்குப் புதிய தொரு தளத்தினை உருவாக்கியிருந் தது. அதே சமயம் நாவலின் ஊடா கவே வெளிப்படும் பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயமும், பிரயோக மும் இதை எழுதியவர் தேர்ந்த இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் என்பதையும் புரிந்து கொள்ளச் செய்தது.

அராபியக் கதைகளில் வரும் பாக்தாத்தைவிடவும் மதுரை மாநகரம் அதிகக் கதைகள் கொண் டது என்று எனக்கு எப்போதுமே ஒரு எண்ணமுண்டு. குறிப்பாக மதுரையின் சிறுசந்துகள், தினசரி வாழ்வு சார்ந்த மனிதர்கள். நகரின் புதிரான சரித்திரம் மற்றும் மதுரை யின் மைய வாழ்வைச் சுற்றி நடை பெறும் நூற்றுக்கணக்கான நிகழ்வு களின் பின்னால் அறியப்படாத ஓராயிரம் கதைகள் புதைந்திருக் கின்றன. மதுரையின் இரவும் பக லும் இன்று வரை முழுமையாகக் கதையுலகில் பதிவு செய்யப்படவே யில்லை.

சிங்காரம் காட்டும் மதுரையும் அதன் மனிதர்களும் மிக நெருக்க மானவர்களாகயிருந்தார்கள். ஒரு வேளை சிங்காரத்தைப் பிடித்திருப் பதற்கான காரணமாக அதுகூட இருந்திருக்கக்கூடும். புத்தகத்தில் சிங்காரத்தைப் பற்றிய சிறுகுறிப்பு கூடக் கிடையாது. கலைமகள் பரி சுப் போட்டியில் தேர்வு பெற்றது என்பதைத் தவிர வேறு தகவல்கள் இல்லை.

அன்றிரவு கோணங்கியைச் சந்திப்பதற்காகக் கோவில்பட்டியி லிருந்த அவரது வீட்டிற்குச் சென் றேன். ரயில்வே தண்டவாளத்தை யட்டியது கோணங்கியின் வீடு. இரவு பூச்சிகளின் சப்தமும் மின் மினி வெளிச்சமுமாக உள்ள அந்த ரயில்பாதை நினைவில் என்றும் ஒளிர்ந்துகொண்டிருக்கக் கூடியது. நள்ளிரவில் செல்லும் கூட்ஸ் ரயில் கள் நமது பேச்சை நிறுத்தியபடியே கடந்து செல்வதை வேடிக்கை பார்ப்பது தனி அனுபவம்.

அன்று மழை பெய்து வெறித்த இரவு. திட்டுத் திட்டாக இருள் பதுங்கியிருந்தது. கோணங்கி வீட் டின் மொட்டைமாடிச் சுவரில் அமர்ந்தபடியே  சிங்காரத்தின் எழுத்து பற்றிப் பேசத் துவங்கிய தும் அவர் ரொம்பவும் சிலாகித் துச் சொல்லத் துவங்கினார். கோணங்கிக்கு ஐம்பது ஆண்டு களுக்கு முற்பட்ட மதுரையைப் பற்றிய  விவரிப்பு மற்றும் ஐஎன்ஏ நிகழ்வுகள் அவரை வசீகரித் திருந்தது.

நான் அதன் சில மாதங்களுக்கு முன்புதான் எரிக் மரியா ரிமார்க் கின் All Quites in the western front நாவலை வாசித்திருந்தேன். அது தந்த நெருக்கம் மனதில் அப்ப டியே நின்றிருந்தது. அந்த நாவலை யும் சிங்காரத்தின் எழுத்தும் பற்றிப் பேசத் துவங்கிய போது கோணங்கி சிங்காரத்தினை மறுநாள் பார்க்க லாமா என்று கேட்டார். சிங்காரம் எங்கே வசிக்கிறார் என்ற போது அவர் மதுரையில் இருப்பதாகவும், தான் இரண்டு முறை அவரைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். மறுநாள் ஏழு மணிக்கே  மதுரைக் குப் புறப்படலாம் என்று முடிவு செய்தோம்

அதுவே தாமதம் என்று உள் மனது சொன்னது. காரணம் யாரா வது ஒரு எழுத்தாளரைப் படித்து முடித்தவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் எந்த நள்ளிரவு என்பதைப் பற்றிக் கூடப் பொருட்படுத்தாமல் நானும் கோணங்கியும் உடனே கிளம்பி விடுவோம்.

சில எழுத்தாளர்களின் வீட்டில் அதிகாலை வாசற்கதவு திறக்கும் போது எதிரில் நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். சில நேரம் எழுத்தாளரே இல்லாத போதும்கூட அவரது வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டு வீட்டு விருந்தாளிபோலச் சாப் பிட்டு தூங்கி எழுந்து வந்ததும் நடந்தேறியிருக்கிறது.

காலை மதுரையில் போய் இறங்கியதும் கோணங்கி நேரடி யாக அன்னம் புத்தகக்கடைக்கு அழைத்து சென்றார். அந்த நாட் களில் மதுரையின் இலக்கிய மைய மாக இருந்தது அன்னம் புத்தகக் கடை. அநேகமாக மதுரைக்குள் வரும் எழுத்தாளர்கள் தவறாமல் அங்கே வருவதைக் காணமுடியும். அத்துடன் நண்பர்கள் சந்திப்பிற் கும் உரையாடலுக்குமான கலாச் சாரவெளியாக உருவாகியிருந்தது. மதுரைக்கு வந்து இறங்கியதி லிருந்து சிங்காரத்தைச் சந்திப் பதைப் பற்றிக் கோணங்கி எதுவும் பேசவேயில்லை. பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று சுற்றிவிட்டு மீனாட்சி மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு வெயிலேற நடந்து திரிந்த போதும் சிங்காரம் எங்கேயிருக் கிறார் என்று சொல்லவேயில்லை.

முடிவில் நான்கு மணிக்கு நேதாஜி சாலையிலிருந்த ஒய்எம்சி ஏவின் தங்குமிடத்திற்கு அழைத் துக்கொண்டு போனார். சிங்காரம் அங்கேதானிருக்கிறார் என்ற தகவ லுடன் படியேறும்போது மனதில் இந்திய தேசியத்தைச் சேர்ந்த ராணுவ வீரரைப் போன்ற தோற் றத்தில் சிங்காரம் உருவானார்.

சிங்காரத்தின் அறைக்கதவு சாத் தப்பட்டிருந்தது. கீழே உள்ள ஆவின் கடை அருகே நின்று கொண்டிருப்பார் என்று சொல் லியபடியே அவரது தினப்படி அலுவல் அறிந்தவரைப் போல விடுவிடுவெனக் கீழே இறங்கினார் கோணங்கி. இருவரும் வீதிக்கு வந்தபோது நகைக்கடை வீதியிலி ருந்து தலைகவிழ்ந்தபடியே நடந்து வந்து கொண்டிருந்த பெரியவரி டம் கோணங்கி சென்று ஏதோ பேசியதும் அவர் தலையசைத்த படியே உடன் வந்தார்.

அவர்தான் ப.சிங்காரம் என் பதை மனது ஏற்றுக்கொள்ள மறுத் தது. சிங்காரம் அருகில் வந்ததும் சிரிப்பான தொனியில் உங்களைப் பார்க்க வந்திருக்கான் என்று கோணங்கி சொன்னார். தன்னைப் பார்ப்பதற்காக எதற்காக வந்திருக் கிறார்கள் என்ற பாவனை அவரது முகத்திலே இருந்தது. எந்தூரு என்று சுத்தமான மதுரைத் தமிழில் சிங்காரம் கேட்டார். பதில் சொன் னதும் தலையாட்டிக் கொண்டார்.

சிங்காரம் முகத்தில் வெளிப் படாத சிரிப்பு ஒன்று ஒளிந்திருப் பதை அறியமுடிந்தது. அறுபது வயதைத் தொட்ட தோற்றம். வழுக் கையேறிய நெற்றியும் பெரிய காது களும்  தடித்த புருவங்களும் மீசை யில்லாத முகமும் கொண்டிருந் தார். காது ரோமங்கள் நீண்டிருந் தன. ஒற்றைத்தட்டு வேஷ்டியும் கதர்சட்டையும் அணிந்திருந்தார். தோற்றத்தை வைத்துப் பார்த்தால் மதுரையில் பலசரக்குக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளில் ஒருவரைப் போன்ற ஜாடையே இருந்தது.

தனது சட்டைப் பையிலிருந்த சாவியால் அறைக்கதவைத் திறந்து உள்ளே அழைத்து அங்கிருந்த கட் டிலில் உட்காரும்படியாகச் சொன் னார். கோணங்கி முன்னதாகவே அறிமுகமாகியிருந்த காரணத்தால் சற்றே உரிமையுடன் சிங்காரத்து டன் பேசிக்கொண்டிருந்தார். என்ன பேசுவது என்று புரியமால் சில நிமிசங்கள் அமைதியாக இருந் தேன். உங்க நாவலைப் படிச்சிருக் கான். அதைப் பத்தி உங்ககிட்டே பேசணும்னு சொன்னான். காலேஜ்ல இங்கிலீஷ் லிட்ரேசர் படிக்கிறான் என்று என்னை அறி முகம் செய்து வைத்தார்.

சிங்காரம் தன் நாவலைப் பற்றிய கருத்தை அறிய விருப்ப மற்றவரைப் போல உங்க ஊரு மல்லாங்கிணர்ல மஞ்சள் காமா லைக்கு மருந்து கட்டுற ஒரு பொம் பளை இருக்குல்லே என்று விசா ரிக்கத் துவங்கினார். ஆமாம் என்ற போது தனக்குத் தெரிந்தவரின் மகளுக்குக் காமலைக்குப் பச்சிலை கட்டுவதற்காக அங்கே ஒரு முறை வந்திருப்பதாகச் சொன்னார். அவ ரது பேச்சு காமாலை, காலரா என்று முன்நாட்களின் தீராத வியாதிகளைப் பற்றியதாக நீண் டது. ஆனால் பேச்சு வளராமல் சில நிமிசத்தில் தானே அறுபட்டு நின்றது.

சிங்காரம் திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசிக்கிறார், அதுவும் இதுபோன்ற ஒற்றையறை யில் மாதவாடகைக்குத் தங்கிக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட் டுக்கொண்டு மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று முன்னதாகவே கோணங்கி சொல்லியிருந்ததை மெய்யாக்கு வது போன்றிருந்தது அவரது அறை.

அந்த அறையில் இரண்டு ரங் கூன் பெட்டிகள் இருந்தன, மர மேஜையின் மீது வாடிப்போன வாழைப்பழம் ஒன்றிருந்தது. சிகரெட்டு அட்டை ஒன்றில் ஏதோ சில கணக்குகள் குறித்து வைக்கபட்டிருந்தன. ஜன்னல் அருகே ஈர வேஷ்டி ஒன்று காய்ந்து கொண்டிருந்தது. அறையின் மூலையில் சிவப்பு நிற மண் பானையன்று காணப்பட்டது. கட்டிலின் அருகில் பழைய தினந் தந்தி பேப்பர்கள் தூசியடைந்து கிடந்தன.

அறைக் கதவைக்கூடப் பாதியே திறந்து அவர் பயன்படுத்தி வரு கிறார் என்பது திறக்கப்படாத மறு பாதியில் படிந்திருந்த நூலம்படை யிலிருந்து தெரிந்தது. மின்சார மில்லாவிட்டால் அந்த அறையில் ஒரு நிமிசம்கூட இருக்க முடியாது என்பதை அங்கிருந்த வெக்கை யால் உணர முடிந்தது. சிங்காரம் தன் சட்டையைக் கழட்டிக் கட்டி லின் மீது போட்டுவிட்டு வெறும் மேலோடு உட்கார்ந்து கொண் டார்.

கோணங்கி வேடிக்கையாக இந்தப் பெட்டிக்குள் ரங்கூனை அடைத்துக்கொண்டு வந்துவிட்டீர் கள் போலிருக்கிறது என்றபடியே அதைத் திறந்து பார்க்கலாமா என்று கேட்டார். சிங்காரம் அதுல என்ன இருக்கு சும்மா பாருங்க என்றார்.

கோணங்கி பெட்டியைத் திறந்த போது உள்ளே பழைய உடுப்பு களும், ஓடாத அலாரம் கடிகாரம் ஒன்றும் ஒரு பிளாஸ்டிக் கவரும் மட்டுமேயிருந்தது. அவர் ஒரு எழுத்தாளர் என்று அங்கிருந்தவர் களுக்குத் தெரியுமா என்று கோணங்கி கேட்டதும் அதெல் லாம் ஒரு ஆளுக்கும் தெரியாது. அப்படி நான் சொல்றதும் இல்லை. சொல்ற மாதிரி என்ன எழுதியிருக்கேன் என்று கேட்டார்.

பேச்சு ஐம்பது வருடத்திற்கு முந்திய மதுரையைப் பற்றியதாகத் திரும்பியது. அதிகம் மின்சார வசதி இல்லாத மதுரையின் தெருக் களும் அருகாமை கிராமங்களில் இருந்து மதுரைக்கு வந்துபோகும் மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் சிங்காரம் சொல்லிக் கொண்டிருந்தார்.

கோணங்கி, இரவில் துணிகளை ஏலம் போடுகின்றவர்கள் மதுரை யின் அந்த நாட்களில் வருவார்கள் தானே என்று கேட்டார். ஆர்வத் துடன் சிங்காரம் அந்த மதுரையே வேற. அப்போ மேலூரில் இருந்து நாங்க மதுரைக்கு வந்து இங்கேயே சுத்துவோம். கோவிலை விட்டா வேற என்ன இருக்கு மதுரையில். ஏலத்தில போர்வை துண்டு எல் லாம் நானே எடுத்திருக்கிறேன் என்றார்.

என்னால் அதன்பிறகும் பொறு மையாக இருக்க இயலாது என் பதைப் போல கடலுக்கு அப்பால் நாவல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஏதோவொரு விதத்தில்  அது எரிக் மரியா ரிமார்க்கின் நாவலைப் போன்றிருக்கிறது என்று சொன் னேன். அவர் சிரித்துக்கொண்டே தனக்கு அதிக வாசிப்பு அனுபவம் கிடையாது. நாவலில் உள்ள பெரும்பான்மை விஷயங்கள் தனது சொந்த வாழ்க்கை, சில சம்பவங்கள் தான் நேரில் கண்டது என்றார்.

கடலுக்கு அப்பால் முழுமை பெறாத நாவல் போன்றிருக்கின் றது என்றதும் ஒரு அளவுக்குத் தான் சொல்லியிருக்கிறேன். எதை எழுதாம விடணும்னு தெரிஞ்சி கிடுறது தானே எழுத்தில முக்கியம் என்றார். சிங்காரம் எழுத்தாளர் என்பது அந்த நிமிசத்தில் உறுதியா னது. தனது நாவல் உரிய முறை யில் வெளியிடப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவரது பேச்சில் வெளிப்பட்டது.

நாவல் வெளிவந்து பலவரு டங்களுக்குப் பிறகு தந்தி பேப்ப ரில் மட்டும் சிறிய விமர்சனம் வந்துள்ளதாகவும் வேறு எதிலும் யாரும் கண்டு கொள்ளவே யில்லை என்றார். அத்துடன் இந்த நாவல் எழுதப்பட்டு பல மாத காலம் பெட்டி யிலே சீந்துவாரற்றுக் கிடந்தது. யாரும் அதை வெளியிட முன்வர வில்லை. தனக்கும் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை.

கடைசியில் கலை மகள் நாவல் போட்டி யின் தேர்வுக்கு அனுப்பி வைத்தேன். புத்தகமாக நாவல் வெளியிடப்பட்டபோது சில வாசகங்கள். பத்தி கள் நீக்கப்பட்டிருக் கின்றன. இப்போகூட யாரோ மோகன்னு மதுரைக்காரர் ஏதோ எழுதினதுக்கு அப்புறம் தான் உங்களை மாதிரி ஒன் றிரண்டு பேர் பார்க்க வருகிறார் கள் என்று சொன்னார்.

எது உங்களை இப்படியரு நாவலை எழுத வைத்தது என்று கேட்டவுடன் சிங்காரம் தனக்கு ஹெமிங்வேயின் நாவல்கள் பிடிக் கும் என்றும் அதைத் தான்  தொடர்ந்து வாசித்திருப்பதாகச் சொன்னார். வியப்பாக இருந்தது. ஹெமிங்வே எனது ஆதர்ச எழுத் தாளர்களில் ஒருவர், உடனே நான் அவரிடம் ஹெமிங்வேயைப் பற் றிப் பேசத் துவங்கினேன். அவரது எந்த நாவல் உங்களுக்கு ரொம்ப வும் பிடித்தது என்றவுடன் அவர் பேர்வெல் டு ஆர்ம்ஸ் என்று சொன்னார்.

சில வருடங்களுக்குப் பிறகு சிங்காரத்தின் நாவல்களை ஒருசேர வாசித்தபோது ஹெமிங்வேயின் நுட்பமான பாதிப்பு அவரிடமிருப் பதை உணர்ந்து கொள்ள முடிந் தது. குறிப்பாக சலூன்களில் சென்று நண்பர்கள் சந்திப்பது. மது அருந்திவிட்டு உணர்ச்சிபூர்வ மாக உரையாடுவது, பேச்சின் இடையில் பழைய சம்பவங்கள் குறுக்கிடுவது போன்றவற்றில் ஹெமிங்வே சாயல் தெளிவாகவே தெரிந்தது.

ஹெமிங்வேயை எங்கே படித் தீர்கள் என்று கேட்டேன். தான் ஒரு கடைப்பையனாக வேலை செய்வதற்காக பர்மா போனதாக வும் அதற்காக நாகப்பட்டினத்திலி ருந்து கப்பலில் சென்று ரங்கூனில் உள்ள ஒரு செட்டியிடம் கடைப் பையன் போல வேலை செய்யத் துவங்கி பிறகு அங்கேயே வேறுசில வேலை பார்த்தாகவும், தங்கியிருந்த இடத்தின் அருகாமையில் உள்ள நூலகத்திற்குச் சென்று படித்து வரு வது தனக்குப் பழக்கம் என்றும் அதிகம் வாசிப்பதற்கு நேரம் கிடைக்காது என்றும் சொன்னார்.

அந்த நாட்களில் பர்மா வாழ்க்கை எப்படியிருந்தது என்று கேட்டவுடன், தான் வேலைக்குச் சென்ற நாட்களில் பெரிய கொந்த ளிப்புகள் இல்லை. ஆனால் இரண் டாவது உலக யுத்தம் துவங்கிய பிறகு பர்மாவில் ஏற்பட்ட மாற்றங் கள் மறக்க முடியாதவை. குறிப் பாக ஜப்பானிய ஆக்ரமிப்பு மற் றும் இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சி போன்றவற்றைத் தான் கண் எதிரில் பார்த்திருப்பதாகச் சொன்னார்.

பிறகு அவர் தன் நினைவில் மூழ்கிவிட்டதைப் போன்று அமைதியாக இருந்தார். நானும் கோணங்கியும் ஏதேதோ பேசிய போதும் அவரது கவனம் எங் களிடமில்லை. அது நழுவி எங்கோ போய்க்கொண்டிருந்தது அவரது முகபாவத்தில் தெரிந்தது.

சிங்காரத்திடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வந்து மாப் பிள்ளை விநாயகர் அருகில் உள்ள தேநீர்க் கடையன்றில் நின்ற படியே சிங்காரத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். அவரது நாவலைத் திரும்ப வாசிக்க வேண்டும் போலிருந்தது.

அன்றிரவு என் னைத் தனித்து அனுப் பிவிட்டு கோணங்கி சிவகங்கை புறப்பட் டுச் சென்றார். எனக் குத் திரும்பவும் சிங் காரத்தைச் சந்திக்க வேண்டும் போலிருந் தது. மறுநாளும் பார்க் கலாமே என்ற ஆசை யோடு இரவெல்லாம் மதுரை வீதிகளில் சுற்றியலைந்துவிட்டு விராட்டிபத்திலிருந்த நண்பன் அறைக்குச் சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை சிங்காரம் அறைக் குச் சென்றேன். சிங்காரம் தனியே உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். நேற்று பார்த்த தைவிட அன்று உற்சாகமாக இருந் தார். தான் இன்னும் சாப்பிடப் போகவில்லை என்று சொல்லிய படியே மார்டன் கபே வரை போய் வரலாமா என்று கேட்டார். இரு வரும் இறங்கி சாலைக்கு வந்தோம்.

சிங்காரம் வழியில் இருந்த ஒவ் வொரு கடையையும் சுட்டிக் காட்டி எவ்வளவு தூரம் கால மாற்றத்தில் மாறியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே வந்தார். சாப்பிட்டுத் திரும்பும்போது அரு காமையில் உள்ள சலூன் ஒன்றில் தெரிந்த ஆள் இருக்கிறார். அவ ரைப் பார்க்கலாம் என்று அழைத் துக்கொண்டு போனார். அந்த சலூ னில் வேலைக்கு இருந்த நபர் பர் மாவில் இந்திய தேசிய ராணுவத்தி லிருந்தவர் என்றும் அவரும் சிங் காரமும் பலவருட பழக்கம் உள்ள வர்கள் என்பது அவர்கள் பேச்சிலி ருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

சிங்காரத்தின் நண்பர் இந்திய தேசிய ராணுவம் பற்றிச் சொல்லச் சொல்ல இடைமறித்து சிங்காரம் தகவல்களைச் சரி செய்தபடியே இருந்தார். இந்திய தேசிய ராணு வத்திற்குள் வடக்கத்தியார்களின் அதிகாரம் மேலோங்கியிருந்தது எல்லாம் அந்த மோகன்சிங்கின் வேலை என்று நேற்று நடந்த விஷயம் போல சிங்காரத்தின் நண் பர் குறைபட்டுக்கொண்டார்.

நேதாஜியைப் பார்த்து இருக் கிறீர்களா என்று கேட்டேன். நண் பர், இந்தக் கையாலேதேன் அவ ருக்கு சல்யூட் அடித்தேன் என்று வீரவணக்கம் செய்து காட்டினார். சலூன் கண்ணாடியில் அவரது முகத்தில் இருந்த பெருமிதம் துல்லி யமாகத் தெரிந்தது. நேதாஜியைப் பத்தி ஒரு கதை சொல்வியே அதை இவர்கிட்டே சொல்லு என்றார் சிங்காரம். அந்த நண்பர் சிரித்துக் கொண்டே இது சிங்கப்பூர்ல நடந்ததுனு சொல்றாங்க நிஜமானு தெரியாது.

ஒரு பொதுக் கூட்டத்திற்கு நேதாஜி வர்றப்போ  சர்க்கஸில இருக்கிற கோமாளி ஒருத்தன் நேதாஜியைப் பார்க்கக் கூடவே ஓடி வந்திருக்கிறான். அவன் ஒரு குள்ளன், ஜனங்க அவனை இடிச் சித் தள்ளுறதை நேதாஜி கவனித்தி ருக்கிறார். உடனே அவனை அரு கில் வரச்சொல்லி தன்னோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளும் படியாகச் சொன்னார். குள்ளன் தன்னை நேதாஜி தூக்கி வைத்துக் கொள்வது போல போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதும் நேதாஜி வேடிக்கையாக அதற்கென்ன என்று குள்ளனைக் குனிந்து  தூக்க முயற்சித்தால் அவனைத் தூக்க முடியவேயில்லை.

தன் பலங்கொண்ட மட்டும் முயற்சித்தும் முடியவில்லை. குள் ளன் சிரித்தபடியே இப்போது தூக் குங்கள் என்று சொன்னதும் உடனே நேதாஜி அவனைச் சுலப மாகத் தூக்கிவிட்டார். அது எப்ப டிச் சாத்தியமானது என்று குள்ள னிடம் கேட்டதும் அவர் உடலின் எடையைத் தன்னால் எப்போது வேண்டுமானாலும் கூட்டவும் குறைக்கவும் முடியும். அது ஒரு பயிற்சி என்று சொன்னான். அதைக் குள்ளனிடமிருந்து நேதாஜி கற்றுக்கொண்டார். பல நேரங்களில் ராணுவத்தில் அதை நேதாஜி செய்து காட்டியிருக்கிறார் என்றார்.

சிங்காரம் சிரித்தபடியே  இப் படி நூறு கதைகளை தினம் ரங் கூன்ல கேட்டிருக்கேன். அந்த ஊரை நாசம் பண்ணினது கெம் பித்தாய்ங்கிற ஜப்பானிய ராணுவ போலீஸ். அவங்க பண்ணுகிற இம்சை சகிக்க முடியாதது. இந்தக் கெம்பித்தாய்களோட வேலை பட் டாளத்துகாரனுக்குப் பொம் பளையை ஏற்பாடு பண்ணித் தர் றது. அதுக்காக மலாய் சீனாக்காரி களை ஏற்பாடு பண்ணி அதைப் பராமரிப்பு பண்ணி வச்சிக்கிட்டு வருவாங்க. இதுல அடிதடி வேற வரும் என்றார். சிங்காரத்தின் நண் பர் ஒரு சீனப்பெண்ணின் பெயரைச் சொல்லி அவளுக்குப் பெரிய கிராக்கி என்று நினைவுபடுத்தினார்.

சிங்காரம் வாழ்க்கையில் காதல் அரும்பியிருக்கிறது. ஆனால் அது நிறைவேறவில்லை. அது ஒரு செட்டிவீட்டுப் பெண் என்று சொன்னார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை ஒரு நாள் புது மண்டபம் அருகே பார்த்தாகவும் அந்தப் பெண்ணிற்குத் தன்னை அடையாளமே தெரியவில்லை என்றபடியே எனக்கு அவ முகம் அப்படியே மனசில இருக்கு என் றார். அவரது நாவலில் இடம் பெற்ற சம்பவங்கள் அவரது வாழ் வின் பகுதிகள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அன்று மதியம் வரை சிங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அவரது மனதில் எழுத வேண் டும் என்ற உத்வேகமில்லை. அவ ருக்குப் பிடித்த புத்தகம் எது என்று கேட்டவுடன் சிங்காரம் மணி மேகலை என்று சொல்லி அதற்கும் தன்னுடைய நாவலுக்கும் உள் ளார்ந்த தொடர்பு இருக்கிறது என் றார். அவர் மணிமேகலையை ஆழ்ந்து வாசித்திருப்பது புரிந்தது. அவரிடமிருந்து விடைபெற்று வந்த சில நாட்களுக்கு சிங்காரத்தை மட்டுமே வாசித்துக் கொண்டிருந் தேன். சரளமும் நுட்பமும் கலந்த எழுத்து.

அதன் பிறகு சிங்காரத்தை ஒரு வருடத்தின் பிறகு திரும்பச் சந் தித்தேன். இப்போது முன்பு இருந்ததைவிடவும் ஒடுங்கிப் போயிருந் தார். தன்னைப் பார்த்து எதுவும் ஆகப்போவதில்லை என்று சொல் லியதோடு தன்னை இலக்கியக் கூட்டத்திற்காக ஒரு நண்பர் அழைத்ததாகவும் அது  தன்னால் முடியாது என்றும் சொன்னார். சிங்காரத்தோடான மூன்றாவது சந்திப்பு வெறுமையில்தான் முடிந் தது. அதன்பிறகு சில முறை கோணங்கி, லோகு, முருகேச பாண்டியன் போன்றவர்கள் அவரைப் பார்த்ததைப் பற்றிச் சொல்வார்கள். ஒரு முறை அய்யனார் அவரைச் சந்தித்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

sஎன் மனதில் சிங்காரத்தின் சித்திரம் அவரது நாவலில் வரும் பாண்டியன் கதாபாத்திரமாகவே பதிந்து போயிருக்கிறது. சிங்காரத் தின் எழுத்து தனித்துவமானது. பர்மீய தமிழ்வாழ்வின் உண்மை யான சித்தரிப்பு அவரிடமிருந்தே துவங்குகிறது. யுத்தகால வாழ்வைப் பற்றியும் நெருக்கடியான அந்த நாட்களில் ஏற்படும் மனித அவ லங்கள் குறித்தும் அவர்தான் முதன்முறையாக அடையாளம் காட்டுகிறார். அவரது புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் இரண்டும் தமிழின் முக்கிய நாவல் கள் என்றே சொல்வேன்.

சிங்காரத்தின் வா ழ்க்கை அவரை எப்போதுமே நினைவிலே அமிழ்ந்து போக வைத்திருக்கிறது. மனதில் கொளுந்துவிட்டெறியும் கடந்தகாலத்தின் சுவாலைகளுடன் மௌனமாக வாழ்ந்துகொண்டிருந்தார் சிங்காரம். அவருக்கு யாரோடும் உறவில்லை. தினந்தந்தி நாளிதழில் வேலை செய்திருக்கிறார். அங்கே அவரை யாரும் எழுத்தாளராக அறியவேயில்லை. நெருக்கமான நட்புமில்லை. எதையும் அவர் விரும்பவில்லை என்பது தான் நிஜம்.

ஒருவேளை அவர் மனதில் நீள் கடலும் துரத்தியடிக்கபட்டு நாடிழந்து புகலிடம் திரும்பும் மனிதர் களை ஏற்றுக்கொண்டு காற்றின் திசையில் அலைபடும் தோணியும் எப்போதுமிருந்திருக்ககூடும். தனிமை பலரையும் எழுத வைத்திருக்கிறது. சிங்காரத்தின் எழுத்தை அவரது தனிமை கவ்விக்கொண்டு விட்டது. தன் வெளிப்பாட்டிற்கு எழுத்து மட்டுமே சிலருக்குப் போதுமானதில்லை போலும் என் பதை சிங்காரம் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார்.

*****

நன்றி: உயிர்மை

Jan 27, 2011

புற்றிலுறையும் பாம்புகள் –ராஜேந்திர சோழன்

தோட்டப்பக்கம் வேலி ஓரம் கிடந்த சோளத்தட்டுக்  கட்டை இழுத்துப்போட்டு உதறி, குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அடுப்புக்கு தட்டை அடித்து சீராய் அடுக்கிக்கொண்டிருந்த வனமயிலு எதிர்வீட்டில் குடியிருக்கும் வாலிபனைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டாள். 
"கண்ணைப் பாரேன் நல்லா... கோழி முட்டையாட்டம் வச்ச கண்ணு வாங்காம பாக்கறத. இவனெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்திருக்கமாட்டானா... எம்மா நேரமா பாத்துக்னுகிறான்யா இதே மாதிரி..."
பக்கத்தில் சற்று தள்ளி தொட்டியில் கைவிட்டுக் கலக்கியபடி மாட்டைப் பிடித்துத்rajendaracholan தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த கந்தசாமி அவன் பாட்டுக்குப் பேசாமல் இருந்தான்.
"பாராதே அவன் பாக்கறத... எங்கனா அசையரானா பாரேன். அவனும் அவன் மூஞ்சும் .. நல்லா  அய்யனாரப்பன் செலையாட்டம்."
அவன் தொட்டியிலிருந்த தவிட்டை அள்ளி உள்ளங்கையில் ஏந்தி மாட்டுக்கு ஊட்டினான்.
"எங்கனா ஒதை பட்டாத்தான் தெரியும். புள்ளாண்டானுக்கு. இப்படியே பாத்துக்னு இருக்கட்டும். ஒருத்தன் இல்லன்னாலும் ஒருத்தன் எவன்னா கண்ணை நோன்டிப்புட மாட்டான் ஒரு நாளைக்கி. சீ நமக்கு என்னுமோ ஒரு ஆம்பளை பாக்கறான்னாலே அம்மா அயக்கமா கிது. ஒவ்வொருத்தியாமாட்டமா... வ்வா கட்டனவன் கண்ணெதுர குத்துக் கல்லாட்டம் குந்திருக்க சொல்லவே... சீ! ஜென்மமா அது. செருப்பாலடி..."
முகவாய்க்கட்டையை இழுத்து தோல் பக்கம் இடித்துக் கொண்டாள். எதிர் வீட்டை முறைத்து புருஷனை முறைத்து நன்றாகவே மூடியிருந்த மாராக்கை மேலும் இழுத்து மூடிக்கொண்டாள்.
"பாருய்யா... நீ ஒரு ஆம்பள இங்க குந்தியிருக்க சொல்லவே இந்த பார்வ பாக்கறானே... நீயே கண்டி, இல்லண்ணா என்னா செய்வான். கைய புடிச்சிகூட இழுப்பாம் போலக்குது.  ஏன் இழுக்கமாட்டான். தொடப்பக்கட்டையை எடுத்துக்க மாட்டனா கையில, தொடப்பக்கட்டய..."  
அவன் வலது மாட்டைப் பிடித்து முளைக்குச்சியில் கட்டிவிட்டு இடது மாட்டைப் பிடித்து அவிழ்த்துக்கொண்டு வந்தான்.
"அங்க பாருதே ரவ அவனண்ணா... நீ என்னமோ இப்பத்தான் ஒரேயடியா தண்ணிகாட்டற... தண்ணி. இங்க என்னடா பார்வன்னு நீ ஒரு பார்வ பாத்தினா உள்ள ஓடிப்புட மாட்டான். அவன்... என்னமோ குந்திங்கிறியே பேசாத."
அவன் தொட்டியைக் கலக்கித் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தான்.
"என்னா ஊரகாளி மாடுன்னு நெனச்சிக்கினானா... பாரேன் பின்ன அவன. நவுருவனான்னு நின்னுகினு பாக்கறத. கிட்ட வந்து பாக்கணம். அப்பறம் இல்ல தெரியும் ஆருன்னு... வனமயிலு எந்த வம்புக்கும் போவாதவள்னுதான் பேரு. இவனல்லாமா சும்மா உடுவேன். காறி மிழிய வச்சிட மாட்டனா. சாணியக் கரைச்சு மூஞ்சில ஊத்தி..."
நமுத்துப் போன சோளத்தட்டை சொத்துக் சொதுக்கென்று முறித்தான்.
"என்னுமோ நெனைச்சிக்னுகிறாரு புள்ளாண்டான். ஆபீஸ் உத்தியோகம் பண்றமே. பாத்துப்பம் பல்ல இளிச்சிக்கினு ஓடியாந்துபுடும்னு... பழ மொறத்தாலதான் சாத்துவாங்கன்னு தெரியாது போலருக்குது."
கைக்கு அடங்குகிற அளவு ஒரு தேற்றம் தெரிந்த சோளத்தட்டுகளை அள்ளி உடம்போடு சேர்த்து அனைத்துக்கொண்டு உள்ளே வந்தான்.  
"இவரு ஒரு ஆம்பளன்னு கேடக்கறாரே சொறன கெட்டத்தனமா... அவன் பாட்டுக்னு கெடப்பாறைய முழுங்கிப்புட்டு நிக்கறவனாட்டம் நின்னு பாத்துக்னுகிறான். ஏண்டா பாவின்னுகூடம் கேக்காம பேசாமகிறாரே என்னுமோ ஊமையாட்டம். கேட்டா என்னா வெல்லத்துல வச்சா முழுங்கிப்புடுவான். இன்னொரு ஆம்பளன்னா பாத்துக்னு சும்மா இருப்பானா..." 
அடுப்பாங்கரையோரம் வைத்துவிட்டு நிமிர்ந்து நின்று தன்னைத் தானே ஒருமுறை உடம்பு பூராவும் பார்த்து மேலே தூசுதும்பு இல்லாமல் புடவை, மாராக்கு, ரவிக்கைஎல்லாம் தட்டிக்கொண்டாள்.
"நான்ன வாசிதான் ஆச்சி. இதுவே இன்னொருத்தின்னா சும்மா இருப்பாளா இத்தினி நாளைக்கி. எப்பவே வாசப்படி தாண்டி எகிறிக் குதிச்சிப் புட்டிருக்க மாட்டாளா... எங்கனா தெரியிதா இந்த ஆம்பளைக்கி..." வெளியே வந்து பழையபடி குத்துக்கால் போட்டு அமர்ந்து தட்டை ஒடிக்க ஆரம்பித்தாள்.
"பாரந்தே, இன்னும் இங்கதாண்டி நின்னுக்குனுகிறான் அவன். அசைய மாட்டானாடியம்மா அந்த எடத்த உட்டு... இப்பிடி அப்பிடிக்கூடம்."
அவன் மாட்டைப் பிடித்துக் கட்டிவிட்டுப் போருக்குப் போய் வைக்கோல் பிடுங்கத் தொடங்கினான். 
"ஏன்யா அவனுக்கு மக்க மனுஷாள் ஆரும் கெடையாதா. வந்த நாளா ஒண்டியாவே கெடக்கரானே .. ஊருக்கீருக்குக்கூடம் போவாம..." 
அவன் வைக்கோல் பிடுங்கினான்.
"நாலு மக்கா மனுஷாள் இருந்திருந்தா கட்டுத்திட்டம் பண்ணி வெச்சிருப்பாங்க... இந்த மாரில்லாம் பாக்க மாட்டான். பெறுமா கோவில் மாடு மாதிரி அவுத்து உட்டுட்டாங்க போலருக்குது... தண்ணி தெளிச்சி" கழுத்தை சொடுக்கிக்கொண்டாள். 
"ஊடு உண்டு வேல உண்டுன்னு செவனேன்னு கெடக்கறவளையே இந்த பார்வ பாக்கறானே... இன்னும் அங்கங்கே கேப்பார் மேப்பார் இல்லாம கெடக்குதே... அந்த மாரில்லாம் இருந்தா என்னா பண்ணுவான். சீ ஒடம்புல சீழா ஓடுது. ரத்தம் ஓடல..."
முகத்தைச் சுருக்கி உதட்டைப் பிதுக்கினாள். சோளத்தட்டை பொத்தென்று வைத்தாள்.
பிடுங்கிய வைக்கோலைக் கையில் சேர்த்து அணைத்து மாட்டுப் பக்கம் கொண்டு வந்து உதறினான் அவன்.
"இவன் வந்த நாளா அந்த பங்கஜம் போன்னக்கூடம் வெளில காணம்யா; உள்ளவே பூந்துக்னு... ஊட்ட உட்டுட்டு வர மாட்டன்றா... வந்தா கூடம் மின்னமாரி குந்தி ஆர அமர நாலு வார்த்த பேசமாடன்றா. காக்கா... கணக்கா பறக்கறா. என்னமோ மறந்து வச்சிட்டாப்போல. பாத்துருக்கிறியா நீ அதெல்லாம். ஒரே ஊட்டகிறாங்க ரெண்டு பேரும். என்னா நடக்குதோ, ஆரு கண்டாங்க அந்த காளியம்மாளுக்குத்தான் வெளிச்சம்.
வைக்கோல் உதறி முடித்தவன் கொஞ்சம் சரிந்த தோட்டப்படலை இழுத்து நிமிர்த்தி சரியாய் வைத்துக் கட்டிக்கொண்டிருந்தான்.
"எது இந்தக் காலத்துல தெய்வத்துக்கெல்லாம் பயப்புடுது. அது அது இருக்கிறவரிக்கும் கும்மாளம் கொட்டிட்டுப் போவுது. ஊரு சிரிச்சா கூடம் கவலை இல்லன்னு... எங்கூட்டல்லாம் வயசுக்கு வந்துட்டா வாசப்படிய தாண்ட உடுவாங்களா...! அந்த மாரில்லாம் வளந்த தனாலதான் முடியுது. செலதுங்கலாட்டமா... அடியம்மா... எப்பிடித்தான் மனசு வருதோ... கழுத்துல கட்டன தாலிக்கு துரோகம் பண்ண..."
உடம்பை ஆட்டி அவயங்களை நொடித்து பாவனையுடன் சிலிர்த்துக்கொண்டாள்.
"என்னுமா ஆடுதுங்க கேழ்வி மொற இல்லாம..."
அடுத்த கட்டு சோளத்தட்டுகளை அள்ளித் தூக்கிக்கொண்டு வரும் போது தெருப்பக்கம் யாரோ நிற்பதையும் குரல் கொடுப்பதையும் கொஞ்சம் ஒருக்களித்த கதவு வழியாகக் கண்டு பரவசமடைந்தாள்.
"தே யாரோ வந்திருக்கிறாங்க தே..."
"ஆராது" அவன் கழுத்தை மட்டும் திருப்பிக் கேட்டான்.
"நல்ல ஆளுய்யா நீ! ஆருன்னா எனக்கெப்பிடி தெரியும், நானு என்னா ஊர்ல இருக்கறவங்க எல்லாரியுமா தெரிஞ்சி வச்சிக்கினுகிறேன்... கட்டிக்கினு வந்ததுலேருந்து வாசப்படி தாண்டி அறியாதவ நானு... எங்கனா ஊரு பயணம் போவ தெருவுல நடக்கறதுன்னாலே அப்படியே ஒடம்பு இத்துப் போயிடற மாதிரியிருக்கும் எனக்கு. என்ன வந்து கேக்கறியே ஆருன்னு..." 
தெருக்கதவு வழியாக தோட்டம் தெரிந்துவிடப் போகிறது என்பது போல சுவரில் ஒட்டிக்கொண்டாள்.
"போய் பாருதே! கூப்புட்றாங்க..."
அவன் படல் கட்டுவதை நிறுத்திவிட்டு எழுந்துவந்தான். அடுப்பங் கரையில் வைத்துவிட்டு அவனைத் தொடர்ந்து பின்னாலேயே அவளும் வந்தாள். கதவு வரைக்கும் வந்து மறைவில் உடம்பை வைத்துக் கழுத்தை மட்டும் வெளியில் வைத்து நின்றாள்.
"வாங்க...வாங்க நீங்கதானா. உட்காருங்க" அவன் சொன்னான். வெள்ளைச் சட்டை போட்ட சிவப்பு உடம்புக்காரர் திண்ணையில் உட்கார்ந்தார்.
"நம்ம இந்த கொரலூர் ரோடு போடறது விஷயமா மின்ன ஊர்ப் பஞ்சாயத்துல பேசிக்கினு இருந்தமே... அது விஷயமா எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கி ஒரு மகஜர் குடுக்கலாம்னு... அடுத்த வாரம் மந்திரி வர்ராராம் கூட்டேரிப்பட்டுக்கு..." அவர் கொஞ்சம் பேசினார்.
பளிச்சென்று சிகப்பாயிருக்கும் விரல்களால் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த வெள்ளைப் பேப்பரை எடுப்பதையும், பேனா எடுப்பதையும் பார்த்தாள். காய்ந்த தவிட்டுத் திப்பியும் வைக்கோல் சுனையும் உள்ள கையை கையெழுத்துப் போடுவதற்காக கோவணத்தில் துடைத்துக் கொண்டிருந்தான் அவன்.
"கையை அப்பவே கழுவக்கூடாதாதே!" வந்தவர் நிமிர்ந்து பார்த்ததும் தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டாள்.
"கொஞ்சம் தண்ணி கொண்டாரச் சொல்லுங்க, குடிக்க."
"ஏமே... கொஞ்சம் தண்ணியாம் கொண்டாந்து குடு தாகத்துக்கு..."
கதவை விட்டு நகர்ந்தவள் காலையில் கழுவிய வெண்கலச் செம்பை சட்டுப்பிட்டென்று புளிபோட்டுத் துலக்கி குடத்திலிருந்து தண்ணீர் சாய்த்துக்கொண்டாள். மூணாம் மாசம் வாங்கியிருந்த ஒரே ஒரு எவர் சில்வர் தம்ளரைத் தேடி எடுத்துக்கொண்டு கதவண்டை வந்து நின்றாள். 
"இங்க வாதே இங்க..."  
"கொண்ணாந்து குடுமே அவருகிட்ட..."
"இங்க வாதேன்ன..."
உடம்பை அஷ்ட கோணலாக்கி வளைந்தாள். கதவருகிலேயே நெளிந்து நாணிக்கோணிக்கொண்டு அறியாத பெண் மாதிரி நின்றாள்.
கந்தசாமி தண்ணீரை வாங்கி அவரிடம் கொடுத்தான். "கெணத்துத் தண்ணி, கொஞ்சம் உப்பு கரிக்கும்." அவள் கதவு மறைவிலிருந்து காற்றுக்குச் சொன்னாள். தண்ணீர் குடித்த பிறகு வந்தவர் போய்விட்டார்.
"சரியான ஆளுதே நீ! மின்ன பின்ன தெரியாத ஆம்பள எதுறால வந்து நின்னு நீம்பாட்டுன்னு தண்ணி குடுரீன்னா ஆரால முடியுது... எனக்கென்னுமோ நெனச்சாலே ஒடம்பே சிலுக்குது. இன்னும்கூட அந்த அயக்கம் போவலையா. வேர்த்துப் போச்சி தெரியுமா எனக்கு..."
அவள் தோட்டத்துக்கு வந்து சோளத்தட்டுப் பக்கத்தில் அமர்ந்தாள்.
"நீ சொன்னதும் அப்படியே ஜென்மமே குன்னிப் பூடுத்தியா எனக்கு... என்னா நெனச்சிக்கின்றா இந்த ஆம்பள இப்பிடி சொல்லிப் புட்டாருன்னு... எடுத்துப்போட்டா மாறி பூடுத்து... ஏயா... என்னா நெனச்சிக்கினுயா அப்பிடி சொன்ன... கொண்ணாந்து குடுக்கறாளா இல்லியா பாப்பம்னா..." 
அவன் குறையோடு விட்ட படலை கட்டிக்கொண்டிருந்தான்.
"கதவாண்ட நிக்கறதுக்கே உள்ளங்காலல்லாம் கூசுது எனக்கு. அப்பேர்ப்பட்ட பொம்பளைய இவர் என்னடான்னா ஊரு பேரு தெரியாத ஆம்பளைக்கி அரிவிகால தாண்டி வந்து தண்ணீ குட்றீன்னா... நல்லா இருக்குதே ஞாயம்... அந்தமாரிதான் இன்னொரு நாளைக்கி சொல்லப்போறியா..."
கிடந்த மீதி சோளத்தட்டுகளை ஒடித்து முடித்து தென்னம் அலவு எடுத்து இறைந்து கிடந்த செத்தைகளைக் கூட்டினாள்.
"சில பொம்பளைவ மொகந் தெரியாத ஆம்பளகிட்ட கூடம் என்னுமா பேசிப்புடுதுங்க. எடுத்த வாய்க்கி வெடுக்வேடுக்குன்னு... நமக்கு என்னடான்னா அப்பிடியே மர வட்ட ஊர்றாமாரி கிது போ மெனில... கட்டனவன உட்டுட்டு மத்தவன நிமிந்து பாக்கறதுன்னாகூடம் கண்ணு ஒப்பல..."  
உடம்பைச் சிலிர்த்து அருவருத்துக்கொண்டாள்.
அவன் படல் கட்டுவதை நிறுத்தி தெருவுக்கு வந்து எரவாணத்தில் பனம் நாறு செருகி வைத்திருந்த இடத்தை தேடிக்கொண்டிருந்தான்.
துடைப்பத்தை எடுத்து வந்து வைத்தவள் வெளியே போய் வேலை எதுவும் இன்றி சும்மா நின்றாள். கண்களை இடுக்கிக்கொண்டு வெறிச்சென்று கிடந்த எதிர்வீட்டைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு நின்றாள்.
கோழிமுட்டைக் கண்ணன் மறுபடியும் தோன்றினான். கன்னத்தில் கைவைத்து, உள்ளங்கையில் முகவாயைப் புதைத்து, கண்களை அகல விரித்தாள். ஆச்சரியத்தோடு பார்க்கிற மாதிரி முகத்தில் ஒரு வியப்புக்குறி தோன்ற, அபிநயம் பிடிக்கிற பாவனையில் நின்றாள்.
பின்னால் நாறு கத்தையுடன் கந்தசாமி வந்தான்.  
"பாரன்யா அவன... பழையபடியே வந்து நின்னுக்கினு மொறைக்கிரத... அப்பிடியே கொள்ளிக்கட்டைய எடுத்தாந்து கண்ணுல சுட்டா என்ன இவன..."

"சரிதான் உள்ள போமே பேசாத... சும்மா பொண போணன்னிக்கின்னு..." அவன் படல் கட்ட உட்கார்ந்தான். " இப்பதான் ஒரேடியா காட்டிக்கிறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்.
********
தட்டச்சு :கிருஷ்ணபிரபு

Jan 25, 2011

நகுலனின் பத்துக் கவிதைகள் – எஸ்.ரா

நவீன தமிழ் கவிதையுலகில் எனக்கு விருப்பமான மூன்று கவிஆளுமைகள் பிரமீள், நகுலன் மற்றும் தேவதச்சன் . அவர்கள் தங்களுக்கெனத் தனியான கவித்துவ மொழியும் அகப்பார்வையும் தனித்த கவியுலகமும் கொண்டவர்கள்.

மூவரது கவிதைகளிலும் அடிநாதமாக தமிழின் கவித்துவமரபும் சங்க இலக்கியம் துவங்கி சமகாலnagu43 உலக இலக்கியம் வரை வாசித்த நுட்பமும் ஒடிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த மூவருக்கும் பொது ஒற்றுமைகள் கிடையாது. தன்னளவில் இவர்கள் தனித்துவமான ஆளுமைகள். இவர்களின் பாதிப்பு இளம்கவிஞர்களிடம் கண்கூடாக காண முடிகிறது. மூவருடன் பழகி பேசி நிறைய அறிந்திருக்கிறேன்.

நகுலன் கவிதையை எவ்வளவோ முறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது தரும் அகநெருக்கமும் குதூகலமும், வியப்பும் உச்சநிலையிலே இருக்கின்றது. புரியாமல் எழுதக்கூடியவர், இருண்மை கவிஞர் என்று அவரைப்பற்றிய குழப்பமான விமர்சனங்கள் யாவும் அர்த்தமற்றவை.

நேரடியான மொழியில் வாழ்வின் உக்கிரமான தருணங்களை கவிதையாக்கியவர் நகுலன். அவரது கவித்துவ மொழியும் பிரயோகமும் அபூர்வமானது. நகுலனின் ராமசந்திரன் கவிதை மிகவும் பிரபலமானது. அந்தக் கவிதை குறித்து ஏளனமாகவும், தீவிரமாகவும் இன்றும் வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நகுலனின் கவிதைகள் பன்முகப்பட்டவை.

நகுலன் அன்றாட காட்சிகளிலிருந்து தனது கவித்துவ உலகிற்கான உந்துதலை பெறுகிறார். ஒருவகையில் சம்பவங்கள் நிகழ்வுகள் என்று கதை எதில் மையம் கொள்கிறதோ அந்த நிகழ்விûன் சிறு பொறியிலிருந்து அவரது கவிதை உருவாகிறது.

நகுலனின் கவிதைகளின் சிறப்பம்சம் அது பெயர்களை பயன்படுத்தும் விதம். கவிதையில் இடம் பெறும் பெயர்கள் தனிநபர் தோற்றங்களை உருவாக்குவதில்லை மாறாக அவையும் படிமம் போலவே உயர்நிலை கொண்டுவிடுகின்றன. அது போலவே உள்ளார்ந்த பரிகாசம் அவரது கவிதையின் தொனியாக பல கவிதைகளிலும் காணமுடிகிறது.

சந்திப்பு என்பதை அவர் தற்செயல் என்று கருதுவதில்லை பெரும்பாலும் அவர் கவிதையின் முக்கிய புள்ளியாக சந்திப்பு இடம் பெறுகிறது. யாரோ யாரையோ சந்திக்கிறார்கள். எதையோ கேட்கிறார்கள். அல்லது சொல்கிறார்கள். இதில் அவர்கள் உரையாடல் அளவிற்கு இந்த சந்திப்பு ஏன் நடைபெற்றது என்ற புதிர்மையும் உருவாகிறது

கவிதையின் மௌனத்தை மிக கவனமாக சிதறடிக்க கூடியவர் நகுலன். எளிய உரையாடல்களின் வழியே அது நிகழ்கால தன்மையை உருவாக்கி அதிலிருந்து உயர்பொருளுக்கு நகர்கிறது. பேச்சு என்பதை இரு நிலைகளில் நகுலன் கையாளுகிறார். ஒன்று எப்போது தனக்கு தானே நடந்து கொண்டிருக்கும் முடிவில்லாத செயல். மற்றது பிரதிபலிப்பு போல எது சார்ந்தோ அவ்வப்போது நடைபெறும் நிகழ்வு. இரண்டு நிலைகளும் அவர் கவிதைகளில் காணமுடிகிறது

நகுலனுக்குள் இயங்கும் அறவுணர்வு திருக்குறளில் இருந்தே அதிகம் உருவாகியிருக்கிறது. அவர் திருக்குறளை உரையாடலை போலவே அறிந்திருக்கிறார். ஒருவர் மற்றவரிடம் கேட்பது அல்லது பரிமாறிக் கொள்வது என்று தான் திருக்குறளின் தொனியை அடையாளம் காட்டுகிறார்.ஆகவே பல குறள்கள் அவருக்கு தனிமொழி போல உபயோகப்படுத்தபடுகிறது.

ஜென் கவிதைகளில் காணப்படுவது போல தோற்றத்திலிருந்தே அதை கடந்து செல்லும் நிலையை உருவாக்குவது தொடர்ந்து செயல்படுகிறது. அன்றாட செயல்பாடுகளை அவர் தியானநிலை போலவே அடையாளம் காண்கிறார். பலநேரம் தன் வாழ்க்கை என்பதை பல்வேறு தனித்த மற்றும் ஒன்றிணைந்த சொற்களின் விளையாட்டுகளமாக கருதுகிறார்.

கவிதைகளில் வெளிப்படும் அவரது நினைவுகள் புனைவும் நிஜமும் கலந்தவை. ஒருவகையில் அவரது இருப்பே புனைவும் நடப்பும் கலந்த ஒன்று தான். காண் உலகிலிருந்து நழுவிப் போக விரும்பும் அவர் நழுவிப்போய்விட்டதை பிரக்ஞை பூர்வமாக உணரவும் முற்படுகிறார். இந்த இருநிலை பலநேரங்களில் அவரிடம் அநாயசமாக கைகூடுகிறது.

கலாப்ரியா நடத்திய குற்றாலம் கவிதை பட்டறைக்கு ஒரு முறை நகுலன் வந்திருந்தார். அவர் அருகிலே உட்கார்ந்திருந்தேன். நகுலனிடம் ஒரு பழக்கம் உண்டு. உன்னிப்பாக எதையோ கவனித்துக் கொண்டிருப்பார். சட்டென அதிலிருந்து விலகி அருகில் உள்ளவரை பார்த்து சிரிப்பார். என்ன நினைத்து சிரிக்கிறார் என்று அறிந்து கொள்ள முடியாது.

என் அருகில் உட்கார்ந்தபடியே வெற்றிலை போட்டுக் கொண்டபடியே வெற்றிலை காம்பை கிள்ளி என் கையில் தந்தார். எதற்கு என்று கேட்டேன். பத்திரமாக வச்சிக்கோங்க சொல்றேன் என்றபடியே சபையில் நடைபெற்ற உரையாடலை கவனிக்க துவங்கினார். பிறகு தேநீர் இடைவேளயின் போது கூடவே வந்து அந்த காம்பை என்ன செஞ்சீங்க என்று கேட்டார். கிழே போட்டுவிட்டேன் என்றேன்.

உடனே அவர் சிரித்தபடியே உபயோகமில்லாததை நாம் கையில் வைத்துக் கொள்வது ஏன் மனதிற்கு பிடிக்கவே மாட்டேன் என்கிறது. அதுக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா ?.என்றபடியே தன் நினைவுகளை சொல்லத்துவங்கினார்

என்னுடைய அம்மா ஒரு நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு சுவர்ல விளக்கோட நிழல் ஊர்ந்து போறதே அது சுவத்தில ஏன் படியுறதேயில்லைனு கேட்டா. எனக்கு அப்போ விபரம் புரியாத வயசு. பதில் சொல்ல தெரியலை. அவளாகவே நாமளும் அப்படிதான் என்று சொன்னாள். எனக்கு பயமா இs.ramakrishருந்துச்சி.

எங்கம்மாவுக்கு சித்தபிரமை உண்டு. அவள் எதையோ நினைச்சிகிட்டே இருந்தாள். ஏன் சார் சில நினைப்புகள் நம்ம வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு. சம்பந்தபட்ட ஆட்கள் செத்து போயாச்சி. ஆனா நினைப்பு மட்டும் போக மாட்டேன் என்கிறதே. அது ஏன் என்று கேட்டார். வியப்போடு அவரை பார்த்து கொண்டிருந்தேன்.

தான் போட்டுக் கொண்டிருந்த வெற்றிலை எச்சிலை துப்பினார். அது தரையில் பட்டு சிவப்பாக தெறித்திருந்தது. பலத்த சிரிப்போடு யாரோ யாரையோ குத்தி ரத்தம் வர வச்சிட்ட மாதிரி இருக்கில்லே என்றபடியே நான் துப்பிய எச்சில் ஒரு எறும்பு மேல பட்டிருக்கு பாருங்க. அது சிவப்பா நிறம் மாறி திகைச்சி போய் நடுங்கிகிட்டே போகுது. அது என்ன சார் நினைச்சிக்கு. வானத்தில இருந்து சிவப்பா மழை பெஞ்சதா நினைச்சிக்குமா.

இப்படி எல்லாம் மனசுல தோணுறதே எனக்கும் சித்தபிரம்மை இருக்குமா. சொல்லுங்கோ என்றார்

நகுலனை பல முறை சந்தித்திருக்கிறேன். அவரது பேச்சில் காணப்படும் வியப்பு அவரது மௌனத்தில் காண முடிந்திருக்கிறது. சிறு சிரிப்பு வியப்பு சாலையில் செல்லும் இளம்பெண்களை உற்சாகமாக கைகாட்டி விடை தருவது. பூனையை சலனமில்லாமல் பார்த்து கொண்டிருப்பது என்று தன் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் வாழ்ந்த மகத்தான கலைஞன் நகுலன்.

எனக்கு விருப்பமான பத்து நகுலன் கவிதைகள் இவை.

1)

வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.

***
2

களத்துமேட்டில்
வாளுருவி
மீசைதிருகி
நிற்கிறான் ஒரு மாவீரன்
போகும் பறவைகளனைத்தும்
அவன் தலை மீது
எச்சமிட்டன
அவன் மீசையை
எறும்புக்கூட்டங்கள்
அரித்தன
ஆனால் அவன் முகத்திலோ
ஒரு மகா சாவதானம்.

***

3

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

***

4

அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
நண்பா அவள்
`
எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?`
***
5

தன்மிதப்பு
யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக் கொண்டிருந்தான்
அவனைப்போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது – அது
கூடத்தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் – இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்

***

6

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்

**

7

எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

**
8

அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.

*

9

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.
*

10)

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.

***

Jan 23, 2011

பாச்சி -ஆ.மாதவன்

பாச்சி செத்துப் போனாள். வாழ்வு அநித்யம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பாச்சி செத்துப் போவாள் என்று கனவில்கூட நினைத்ததில்லை. மனத்தால் தீண்டிக்கூடப் பார்க்காத ஒரு பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. பாச்சி செத்துப் போனாள்! நாணுவிற்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ”சே! என்ன வேண்டிக் கிடக்கிறது? போச்சு, எல்லாம் போச்சு.”

கடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவிaa_madhavanல்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் கோலில் டக்டக்கென்று மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது.  சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான், பையன். உள்ளே, சாயரத் தட்டில் கரண்டி மோதுவதும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.

பாச்சி செத்துப் போன விஷயம் யாருக்காவது தெரிந்திருக்குமோ? தெரிந்திருந்தாலும் யாருக்கென்ன? நாணுவிற்கு மனசு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா விட்டு ஆட்கள் போகும் போதெல்லாம் கூடப் பாச்சி சுறுசுறுப்போடுதான் இருந்தாள். அதற்குப் பிறகு என்ன நடந்துவிட்டது? சந்து பொந்துகளிலிருந்து ஏதாவது விஷப் பூச்சி தீண்டியிருக்குமோ? ராத்திரி - லாரியிலோ மோட்டாரிலோ அடிபட்டிருக்குமோவென்றால் அதுக்கான ஊமைக்காயம் கூடப் பாச்சியின் உடம்பில் இல்லை என்ன மறிமாயமோ! விடியக்காலம் பார்த்தபோது பாச்சி காலைப்பரப்பி, நாக்கையும் துருத்திக்கொண்டு செத்துக் கிடக்கிறது.

நாணுவிற்கு நெஞ்சை வலிப்பது போலிந்தது. இப்படித் திடுதிப்பென்று அவஸ்தையில் விட்டுவிட்டுப் போய்விட்டாளே. இனி என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. எல்லாரும் போய்விட்டார்கள். இனி யாருமில்லை.

பாச்சி செத்துப் போனாள்!

”என்ன நாணு மேஸ்திரி, உன் பாச்சி செத்துப் போச்சே. அட அநியாயமே! இப்படியுமா? ராத்திரிபாரேன், நான் சினிமா பாத்துக்குட்டு வரச்சே கூட பாச்சியை இங்ஙனே பார்த்தேன். சே, உன் காரியந்தான் இப்போ திண்டாட்டமா போச்சு…”

துக்கம் விசாரித்த சோனியை நிமிர்ந்து பார்த்தான், நாணு, அவன் பரட்டைத் தலையும், காக்கி நிக்கரும், காதருகில் பீடீயின் துண்டு மிச்சமும்! பல் தேச்சால் பல்லு தேஞ்சா போயிடும்? பாச்சிக்கு இவனைக் கொஞ்சமும் பிடிக்காது. நேற்றைக்கு முன்னால்கூட இவனெ கடிச்சு உருட்டாத கொறை. நாணு மட்டும் இல்லாமலிருந்தால் மேலும் விசேஷமெல்லாம் நடந்திருக்க வேண்டியது. நல்ல காலம், அப்படி ஒண்ணும் தலை மிஞ்சவில்லை… ”இந்தா பாச்சி, நம்ம சோனி. அவனை வெரட்டாதே…” இந்தா பாச்சி, நம்ம சோனி. அவனை வெரட்டாதே…” என்று தட்டிக் கொடுத்த பின்னர்தான் அடங்கினாள். கிட்டங்கியில் அரிசி வண்டிகள் வந்து நின்றபோது, இவன், இந்தச் சோனி மறு ஓரம் மாடுகளுக்குப் பின்புறமாக போய்ப் பதமாக நின்று கொண்டு, குத்துக் கம்பால், துவர்த்து மடியில் சாக்கிலிருந்து அரிசியைச் சரித்துக் கொண்டிருந்தான். கிட்டங்கிக்கு வந்த பின்பு படி அரிசி போனாலும், பெட்டிதிராசில் எடை பார்க்கும் சங்கர அண்ணாச்சிக்கு, நாணு தனா பதில் சொல்லணும். அதனாலே ஒரு ஈ, காக்காயைக் கூட நாணுவும், பாச்சியும் சேர்ந்து கொண்டு அண்டவிடுவதில்லை. சோனிப் பய ஆளைவிழுங்கி ஆயிற்றே. எப்படியோ புகுந்து விட்டான் பாச்சிக்குத்தான் திருட்டென்றால் மூக்கில் மணக்குமே. எல்லாமே ஒரு நிமிஷம்தான். காலாற எங்கேயோ போய்விட்டு வந்து கொண்டிருந்த பாச்சி, அப்படியே மாடுகளின் கால் இடுக்கு வழியாக ஒரு பாய்ச்சல், குத்துக் கம்பும், துவர்த்து முண்டுமாகச் சோனி அகப்பட்டுக் கொண்டான்.

”நாணு அண்ணே… நாணு அண்ணே…” என்ற சோனியின் அலறிய குரலைக் கேட்டு, ஒண்ணுக்குப் போயிருந்த நாணு ஆணிப்புற்றுக் காலும் செருப்புமாக ஓடி வந்ததினால், காரியம் மிஞ்சவில்லை.

சும்மா சொல்லக்கூடாது. பாச்சி மிக மிகப் புத்திசாலி!

சோனி, துக்கம் விசாரித்துவிட்டு, அவன் போக்கில் போனான். அவனுக்கென்ன? ஒரு தொல்லை விட்டுது. இந்த நாணுச் சனியனும்கூட ஒழிஞ்சு போனால், சரக்கு வண்டிகளின் மிச்ச அரிசியை வைத்தே ஜீவனம் நடத்திவிடலாம். இப்போ என்னடாவென்றால் நாலணாக் காசுக்கு ஒரு அந்தர் கனம் மூட்டையைச் சாலையிலிருந்து மேட்டுக்கடை வரைக்கும் சுமையா சுமையென்று தூக்க வேண்டியிருக்கிறது.

பொழுது விடிந்துகொண்டேயிருந்தது. கிட்டங்கியின் ஒட்டுமுகப்பில் மாடப் புறாக்கள், வரிசை வரிசையாக வந்து அமர்ந்திருந்தன. தினமும், இந்த அழகான புறாக்களுக்கு நிறைய அரிசி மணி இங்கே கிடைக்கும். என்ன ஜோர் புறாக்கள். கழுத்து வெட்டி நடக்கும் போது பளபளவென்று பஞ்ச வர்ணம் வீசுகிறது. பாச்சிக்கு இந்தப் புறாக்களிடம் வெகு சிநேகம். புறாக்கள் அரிசி பொறுக்கிக் கொண்டிருக்கும்போது, கண்ணாம் பூச்சி விளையாட்டில் தாச்சியைத் தாவிப் பிடிப்பது போலப் பாச்சி லபக்கென்று ஒரு தாவல் தாவுவாள். படபடவென்று அத்தனை புறாக்களும் பறந்து ஓட்டு வளைவில் ஏறிக்கொள்ளும். ஏச்சுப் பிட்டோமே என்கிற பாவனையில் பொட்டுக் கண்களை உருட்டி உருட்டிப் பாச்சியைப் பரிகசிக்கும். கிட்டங்கித் திண்ணையிலேயே அமர்ந்திருந்து பீடிப் புகையின் லயத்தில் நிலை மறந்திருக்கும் நாணுவிற்கு வெகு சந்தோசமாக இருக்கும். பாச்சியும் புறாக்களும் தொட்டுப் பிடித்து விளையாடும் விளையாட்டு நடத்துகிறார்கள்! போனால் போகிறது. அடுத்த தபா ஒரு புறாவையாவது பிடிக்காவிட்டால் பாரேன்’ என்கிற பாவனையில் முகத்தையும் தொங்கப் போட்டுக் கொண்டு, பாச்சி பொடி நடையாக நாணுவின் காலடியில் வந்து, ‘இப்போ என்ன வந்துவிட்டது?” என்பது போலப் படுத்துக்கொள்வாள்.

”புறா பறந்திருச்சா, பாச்சி?” என்று, பாச்சியின் தாடையைத் தூக்கி முகத்தை ஆராய்வான் நாணு. ‘போயேன், ஆமாம்…’ என்கிறது போல முகத்தை அவன் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு எங்கோ பார்க்கும், பாச்சி.

”படு போக்கிரி நீ. கிட, அங்கே…!” என்றவாறு பீடியைத் தூர எறிந்துவிட்டு, ஆணிப் புற்றுக் காலைச் செருப்புகளுக்குள் நுழைத்து மெல்ல எழுந்து அப்பு, டீக்கடைக்கோ, எங்கோ போவான், நாணு.

அந்தப் பாச்சி செத்துப் போனாள்.

வெயில், சேட்டுவின் கிட்டங்கிக் கட்டடத்தின் முகப்பிற்கும் மேலே வந்துவிட்டது. முக்கு ரோட்டில் பல சரக்குக் கடைகள் திறக்கப் பையன்கள் சாவியுடன் வந்து காத்து நிற்கின்றனர். யாரோ ஒருவன், ராத்திரி கண்ட சினிமாவில் ராகேஷின் தமாஷ் பற்றி உரக்கப் பேசுகிறான். ஒம்பது மணி சங்கு இன்னும் கேட்கவில்லை போல…

நாணுவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாச்சியின் முகத்தில் ஈக்கள் வந்து மொய்த்துக் கொண்டிருந்தன. அதைப் பார்க்க நாணுவிற்கு எப்படியோ இருந்தது. மெல்ல எழுந்து தலைக்கட்டை அவிழ்த்துப் பாச்சியின் முகத்தில் மூடினான். பிறகு பாச்சியின் பின் கால்களைச் சேர்த்துப் பிடித்து மெதுவாக இழுத்து வெயில் படாத இடமாகக் கிடத்தினான். ‘அம்மாடியோ, என்ன கனம் கனக்குது…’

ஓடைக்காரன் கோவிந்தன், தூரத்திலேயே சாக்கடையைத் தள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். பழக்கடைத் தெருவின் அழுகல் ஆரஞ்சுகளும், எலுமிச்சம் பழங்களும், தக்காளி அழுகலும், முட்டைக்கோசு பழத்த இலைகளும், வைக்கோல் சருகும், சாக்கடைத் தண்ணி நாற்றத்தில் வேகமாக ஒழுகி வந்து கொண்டிருந்தன. இனி ஆக வேண்டியதைப் பற்றிக் கோவிந்தனிடம் தான் யோசனை கேட்கவேண்டும். அவன் உபாயம் சொல்வான். ஆனாலும் அவன் படுபாவி. அவனும், அவன் குள்ள உடம்பும் சாக்கடைத் தூம்பாவையும் பிடித்துக் கொண்டு முண்டு முண்டாகக் கைகளும், ரெண்டு பெரிய பன்ரொட்டியை பதிச்சு வைச்சது போலப் பரந்த நெஞ்சும், மீசையும், எப்பவும் சிவந்த கண்ணும், படுபாவி. எரக்கமே கிடையாது. கருமடம் சேரியில் எந்தச் சாவு நடந்தாலும் கோவிந்தன் வழி சொல்வான். அன்றொரு நாள் ஒரு எருமை மாட்டைக் கை வண்டியில், காலைக் கையைக் கட்டிப் போட்டு லொப லொபவென்று, ரோட்டு வழியாக இழுத்துக் கொண்டே போனான். அதைக் கொண்டு போய் உரித்துத் தோலை விற்பான். எறைச்சியைச் சேரியில் எல்லோருக்கும், எட்டணா பங்கு, ஒரு ரூபா பங்கு என்று விற்று முதல் செய்வான். கொம்புகளைப் பழவங்காடி தந்த வேலைக் கடையில் நல்ல விலைக்கு விற்பான். சே என்ன ஜன்மமோ? சாயந்தரமானால், வாற்றுச் சரக்கு வயிறு முட்ட விட்டுக் கொண்டு, கிள்ளிப் பாலம் மாதவி வீட்டில் விழுந்துகிடப்பான்.

அந்தத் தடிமாடனிடம்தான் போய்ப் பாச்சிக்கும் வழி கேட்க வேண்டும். பாச்சியிடம் என்ன இருக்கிறது. அவன் விற்றுப் பணமாக்க?

”என்ன நாணு மேஸ்திரி, நின்னுக்கிட்டீருக்கீங்க? ஏது உங்க பாச்சி. காலை நீட்டிட்டாப் போல இருக்கு. நல்ல வேளை, என் மண்வெட்டிக் காம்பாலே அது வாயைப் புளக்க வேண்டியது, சில்லறை அக்கிரமமா, இந்தச் சாலைக்கடையிலே அது செய்தது? ஆமா, எப்படிச் செத்தது? யாராவது மருந்து வச்சுக்கொன்னிருப்பாகளோ? லாரியோ வண்டியோ அடிப்பட்டாப்பலே தெரியலியே. செத்தப்பறம் பார்க்கும்போது பாவமாத்தான் இருக்கு…”

”எப்படிச் செத்ததோ! வெடியக் காலம் பார்த்தா என் விரிப்பின் பக்கத்திலே இப்படிக் கெடக்குது. ஓரமா இருக்கட்டும்னுதான் அப்படி இழுத்துப் போட்டிருக்கேன்… இப்போ என்ன செய்யிறது கோவிந்தா? உன்னைப் புடிச்சாத்தான் சங்கதி நடக்கம்…”

”செய்யிறது என்ன? கிடக்கட்டும் இங்கியே, நான் முக்கு வரைக்கும் ஒடையை இழுத்துவிட்டு விட்டு, கை வண்டியையும் கொண்டுக்கிட்டு வாறேன். சங்கதியெல்லாம் சரி கேட்டுக்கிட்டே நம்ம பங்கு மட்டும் குறையாமெ வாங்கித் தந்திரணும். உன் கருமாதிக் காரியம் பாத்துக்கோ. வரட்டா? சாயந்திரம் கொஞ்சோ மினுங்கணும்.”

மினுங்குதல் என்றால் அவன் பாஷையில் வாற்றுச் சரக்கை வயிற்றில் நிரப்பணுமென்று அர்த்தம்.

கோவிந்தன் சாக்கடைத்தண்ணீர்க் குப்பை கூளத்தோடு நீளத் தூம்பாவால் தள்ளிக் கொண்டே போனான், புழுங்கிய ஆரஞ்சு, அழுகல் சரக்குகளின் வாடை மூக்கைத் துளைத்தது.

கீழக்கோடியில் கடைகளைத் திறந்து கொண்டிருந்தார்க்ள. பையன்கள் பலகைக் கம்பிகளை உருவி எடுக்கும் சத்தம் கேட்டது. பெரிய கடைகளின் இரும்பு ஷட்டர்கள் கறகறவென்று ஓசையுடன் மேலே எழும்புகின்றன.

இன்று புதன் கிழமை. வள்ளக்கடவிலிருந்து அரிசி வண்டிகள் வராது, செவ்வாய், வெள்ளியென்றால், இந்நேரத்திற்கு முன்னால், சரக்கு ஏற்றிய வண்டிப் பட்டாளம் சன்னதி முக்கிலிருந்து ஆரியசாலை ஜங்ஷன் வரைக்கும் நீண்டிருக்கும், அந்த அலமலங்களில் பாச்சிக்கு இப்படி வந்திருந்ததென்றால் எக்கசக்கமாக இருந்திருக்கும். நல்லவேளை. இன்று புதன் கிழமை. தினமும் பஜாரில் பெரிய கடையை திறப்பதற்கு முன்னால் கிட்டங்கியை ஒரு முறை பார்க்க வரும் சேட்டு கூட இன்னும் வரவில்லை. பாச்சி இந்த மட்டில் யோகம் செய்தவள்தான். நல்ல நாள் பார்த்துச் செத்திருக்கிறாள்.

‘ஹூம், போய்விட்டாளே!( நாணுவிற்கு, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் போய் ஒரு சாயா குடிக்க வேண்டுமென்றோ - ஏன், ஒரு பீடி பற்ற வைக்க வேணுமென்றோ, கூடத் தோணவில்லை, என்ன இருந்தாலும் கேவலம் ஒரு…சே, அப்படியா? இந்த மாதிரி வாயில்லாப் பிறவிகளிடம் எங்கே இருக்கிறது? எவ்வளவு காலமாக இது கூடவே வாழ்ந்திருக்கு. ஒரு நேரம் இல்லாவிட்டால் மறு நேரம் விட்டுப் பிரிஞ்சு இருந்ததில்லை. காலுக்கு ஆணிப் புற்றுப் பிடிச்சு இவ்வளவு காலமாச்சு. தெரிஞ்சவங்க, முகும் கண்டவங்க யாரும் ஏன் என்ன என்று கேட்டதில்லை. எல்லாத்துக்கும் இந்தப் பாச்சிதான். அவளால்தான் கிட்டங்கிக் காவல்கார வேலை கிடைச்சது. அன்றாடத்துக்குப் பஞ்சமில்லை, சொந்தமா பந்தமா? யார் இருக்கிறதா? ஒருத்தருமில்லே. அப்படியே நாள் போவுது. இந்த ஜன்மத்துக்கிட்டே ஒரு பிடிப்பு… ராத்திரியெல்லாம் பக்கத்திலேதான் படுத்துக் கிடக்குது, காலை நக்குது, முகத்தை எட்டி எட்டிப் பார்க்கிறது. விசுவாசம், பற்றுதல், மறக்க முடியமாட்டேன் என்குது.

கிட்டங்கி பேட்டைக்குள் சமாசாரம் நடந்ததினால் பஜார் பயகளுக்க இன்னும் விஷயம் எட்டவில்லை. சுமை கூலிக் குட்டப்பனும், வேலாயுதனும், கையில் சாக்கு தூக்கும் கொக்கி ஊக்குடன் எப்படியோ பேட்டைக்குள் வந்துவிட்டார்கள். ”என்ன நாணு அண்ணே, கோவிந்தன் சொன்னான், உன் சரக்கு செத்துப் போச்சாமே? சீக்கிரமா சேட்டுக்கு ஆள் அனுப்பு. முளை, பாயி, வைக்கோல் - எல்லாம் நாங்க ஆச்சு…’ என்று பரிகாசம் செய்துவிட்டு, அப்புவின் சாயக்கடைக்குள் நுழைந்துவிட்டார்கள். அங்கேயும் புட்டு, பயர், பப்படம் சாப்பிட்டுக் கொண்டிருந்த யாரெல்லாமோ - இதைச் சொல்லி உரக்கச் சிரிப்பதாக நாணுவிற்குத் தோன்றியது. சவத்தப் பயலுக!

‘ஆக்கங் கெட்டவனுக. அவனுகளுக்கென்ன? கால் நல்லா இருந்த காலத்திலே, நாணு மேஸ்திரின்னா முக்குக்கு அந்தப் பக்கம்தான் நிற்பான். இப்போ நாணு அண்ணேன்னிட்டு சங்காத்தம் கேக்க வாறானுக, ”டேய்! நாணுவுக்குக் காலுக்குத்தான் ஆணிப்புற்று. கைகளைப் பார்த்தாயா, அதுக அப்படியேதான் இருக்கு. பதனமிருக்கட்டும்…”

பாச்சியின் மேல் ஈக்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. சுவருக்கப்பால் அந்தப் பக்கம் கருப்பட்டிக் கடைத்தெரு, அதனால்தான் இவ்வளவு மொத்த ஈக்கூட்டம்.

”பாச்சி! ஒரு மூணு நாலு வருஷமிருக்குமோ நீ நம்மகிட்டே வந்து…?”

‘…பாச்சி வந்த புதுசில்தான், கால் ஆணிப் புற்றுக்குச் சக்கிலியனிடமிருந்து செருப்பு வாங்கினது. கேட்டு கடை வாசலிலேயே நேரம் முச்சூடும் உக்காந்திருந்தார், ராத்திரிக்கி எட்டணா தருவாரு. சிலப்போ பத்தணா தருவாரா…? நல்லா இருந்த காலத்திலே கிட்டங்கி அட்டிச்சாக்கு அத்தனையும் ஒற்றை ஆளா நின்றுகூட அடுக்கி வச்சதுண்டு. அப்போவெல்லாம் நல்ல ஆங்காரம் இருந்தது. கால் நோக்காடு வந்தாலும் எல்லாம் ஒவ்வொண்ணா அஸ்தமிச்சுப் போச்சு. உடுத்த கைலிதான். மறு துணிக்கு வருஷக் கணக்குகூட ஆகும். சிரங்கு வந்தா குரங்குதான் என்று சொல்லுவாங்களே; அதே போல ஆச்சு. ஒரு வேலையும் செய்ய முடியாது. முக்கி முனகி ஒரு மூட்டையைத் தலையிலெடுத்தால் கால் ஆணியும், செருப்பின் மேல் சவாரியுமாக நடக்கவா முடியும்? நாணுவா சாக்குத் தூக்குகிறான்? முக்குத் தாண்டி வருமுன்னாலே - விடிஞூசு பூசை போட்டாகுமே’ என்று பேச்சு பதிந்து போயிற்று. சேட்டுவுக்கும் தினப்படி ‘சக்கரத்து’ வியாபாரமாக எட்டணா பத்தணா அளக்கிறதுன்னா நாளா வட்டத்திலே கசந்துதான் போவுது, அப்போ பட்டினிதான்…

‘இந்த வாக்கிலேதான் ஒருநாள், தேங்காய் தொண்டு வண்டி ஒன்றின் பின்னால் யாரோ கழுத்தில் கயிற்றைக் கட்டி விரட்டி விட்டிருந்த பாச்சியைக் கண்டது. ‘மொள் மொள்’ என்று அழுது கொண்டு, வண்டியின் வேகத்துக்குக் கால்களைக் கீழ் ரோட்டில் உரசிக் கொண்டு இழைந்து வந்த பாச்சியை நாணு கண்டான். பாச்சிக்குப் பாச்சியென்று யார் பெயர் வச்சது? அப்புவா? வேலாயுதனா? யாரோ? கிள்ளிப் பாலம் மாதவி வீட்டில் ஒரு சண்டி ‘சரக்கு’ வந்திருந்தாள். அவளிடம் வேலாயுதன், குட்டப்பன், அப்பு இவனுகள் பாச்சா ஒண்ணும் பலிக்கவில்லை. அவள் பெயர்தான் பாச்சி. அந்தச் சரக்கு சுலபத்தில் தமக்கு மசியாத ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவன்களில் யாரோதான் பாச்சிக்கு அந்தப் பெயரை வைத்தது. யார் வச்சால் என்ன? நாணுவிற்குப் பாச்சியைப் பிடித்துப் போயிற்று. அவளை வண்டியிலிருந்து அவிழ்த்து வந்து அப்பு சாயாக் கடையிலிருந்து ஒரு இணுக்குப் புட்டு வாங்கிக் கொடுத்தான். சிரட்டையில் காப்பி வாங்கிக் கொடுத்தான். பிறகு ஒவ்வொரு நாளும் தனக்குக் கிடைக்கிறதில் பாங்கைப் பாச்சிக்கும் கொடுத்தான், நாணு. இதுதான் சிநேகிதம்ங்கிறது. நாணு கிட்டங்கித் திண்ணையில் விரிப்பை விரித்துப் படுக்கும்போது பாச்சியும் அருகில் வந்து ஒண்டிக் கொள்வாள் விரட்டினாலும் போகாது. அடித்தாலும் நகளாது. பிறகு என்ன செய்ய? போகப் போக எல்லாம் சரியாகப் போய்விட்டது. பாச்சிக்கு நாணுதுணை. நாணுவுக்குப் பாச்சி துணை என்றாயிற்று. பாச்சி இப்போ நன்றாக வளர்ந்துவிட்டாள். எல்லாரையும் சிநேகம் பிடித்துக் கொண்டாள். அப்பு கடைத் தொட்டியிலிருந்து மீன்கறி விருந்து, எலும்புத் துண்டு விருந்து, சாம்பார் தயிர்சாதக் கதம்ப விருந்து,எ ல்லாம் கிடைத்தது. அப்படியாக இருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

ராத்திரி ஒரு மூணு நாலு மணியிருக்கும். தெருவில் கூட லைட் இல்லை. ‘பவர்கட்’ என்று சொல்லி ரோட்டு விளக்கையெல்லாம் அணைத்திருந்தார்கள். கிட்டங்கி வாசலில் நாணுவிற்கு அருகில் படுத்திருந்த பாச்சி திடீரென்று எழுந்து கிட்டங்கியின் பின்புறச் சுவர்ப்பக்கமாக ஓடி விழுந்து போய்க் குலைக்க ஆரம்பித்தது. இந்தப் பக்கம் நின்று குலைத்தது. அந்த ஓரமாக நின்று குலைத்தது. காலைக் கீழே பிறாண்டிப் பிறாண்டிக் குலைத்தது. ‘நாணு படுத்திருக்கிற பக்கமாக வந்து, ‘வாயேன், வந்து பாரேன்…’ என்கிற மாதிரிக் குலைத்தது. விழித்துக் கொண்ட நாணு, ‘எந்திரிக்கணுமா வேண்டாமா’ என்ற சோம்பலின் தர்க்க நினைவில் ஒரு கணம் தயங்கினான். பாச்சி விட்டால்தானே? குலைப்பது அதிகமாயிற்று. ‘என்னமோ காரணமில்லாமல் பாச்சி குலைக்காதே. சட்டென்று எழுந்து செருப்பையும் மாட்டிக் கொண்டு நடந்து வந்து பார்த்தப்போம். கிட்டங்கியின் பின்புறச் சுவரோரமாக நின்றிருந்த ரயினேஜ் கம்பம் வழியாக ஓட்டைப் பிரித்து உள்ளே ஆள் இறங்கியிருப்பது - தெரிந்தது, பிறகென்ன. அப்புவின் கடையிலிருந்து ஆட்களைத் தட்டி எழுப்பி, காலைக்கறவைக்குச் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அஞ்சாறு பால்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து பார்த்தபோது திருடன் வசமாகச் சிக்கிக் கொண்டான். சேட்டு வீட்டிற்குச் சைக்கிளில் ஆள்போய், அவர் காரைப் போட்டுக் கொண்டு வந்து, போலீசுக்குப் போன் பண்ணி, மகஜர் தயார் பண்ணி, துவர்த்து முண்டு பொட்டணத்தில் கட்டிய அரிசி தொண்டி சாமானுமாகத் திருடனைக் கொண்டு போகும்போது விடிய விடியப் பத்து மணிக்கு மேல் ஆயிற்று, ரோட்டில் சன்னதி முக்கிலிருந்து ஆரியசாலை வரை ஒரே சுட்டம். நாகர்கோவில் பஸ்கள் மெதுவாக நிறுத்திக் கூட்டத்திற்குக் காரணம் கேட்டு விட்டுப் போயிற்று. பஜாரில் திருடன் புகுந்து அதைக் கண்டு பிடிப்பதென்றால் சாதாரணக் காரியமா?

”யார் கண்டுபிடிச்சது?”

”நம்ம நாணுதான். அவன் இங்கே திண்ணையிலேதானே ராவும் பகலும் குடியிருக்கான்…”

”நாணுவா? தமிர் காலும் செருப்புமா அவன் எப்படிக் கள்ளனைக் கண்டுபிடிச்சான்?”

”அது தெரியாதா? அவன் சரக்கு பாச்சிதான் முதல்லே ஆளைப் புடிச்சுக் கொடுத்திருக்கா. பிறகு கேக்கணுமா?”

”ஓகோ, அப்படியா…?”

சேட்டுவிற்கு ரொம்ப சந்தோஷமாகப் போய்விட்டது. சின்னத் திருட்டோ, பெரிய திருட்டோ ஓட்டைப் பிரிச்சு இறங்கிறதானால் சாமான்யமா? லட்சக்கணக்கில் அட்டிச் சரக்கு இருக்கிற இடத்தில் திருடன் என்றால்…? அதிலிருந்துதான் நாணுவிற்கு மாதச் சம்பளக் கணக்காயிற்று.

கிட்டங்கிக் காவல், சம்பள வேலை, எல்லாம் பாச்சியாலேதானே.

கடை கண்ணியெல்லாம் சாத்தி, ஆட்களெல்லாம் போய்விட்ட பின்பு, சந்தடி ஓய்ந்து, பாச்சியும் தெரு விருந்துக்கெல்லாம் போய்க் களைத்து - ஆடி ஆடி, நாணுவின் விரிச்சாக்கில் வந்து ஒண்டும்போது ராத்திரி ஒரு நேரம் இரு நேரம் ஆகிவிடும். நாணுவும் ஒரு சுருள் பீடியைப் புகைத்துக் கொண்டு, அப்படியே ‘கடவுளைத் தரிசித்துக் கொண்டு’ கிடப்பான். பாச்சி வந்து அருகில் ஒண்டியதும், நாணுவிற்கு ஒரு சமாதானம் பிறக்கும். இனிக்கொஞ்சம் தூங்கலாம். பாச்சி இருக்கிறாள்.

”இன்னைக்கு இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தே, பாச்சி?”

பாச்சிக்குப் பேச்சில்லை. நாணுவின் கைகளை உராசிக் கொண்டு, முகத்தைத் தொங்கத் தொங்க விடுவாள். செல்லம் கொஞ்சுவான். முணுமுணுவென்று முளல் வாசிப்பாள்.

”பாச்சி, நீ மட்டும் இல்லேன்னா நான் இதுக்கு முன்னாலே என்னமோ ஆயிருப்பேன். உன் புண்ணியத்திலே சேட்டு சம்பளம் போட்டுக் கொடுத்தாரு. இப்போ பாரு, குட்டப்பன், வேலாயுதன், அப்பு ஒருத்தனாவது சீண்ட வராணுமே? சொகம்… பாச்சி, நீ என்னெ விட்டுப் போயிராதே, தங்கம்!”

பாச்சி மூச்மூச்சென்று என்னதான் சொல்வாளோ? இப்போ ஒரு நாளா ரெண்டு நாளா? நாணுவிற்கு மாசக் கணக்கு, வருஷக்கணக்கு தெரியாது. ஓணத்திற்கு ஓணம் வரும்போது…’ ஒரு வருஷம் போனதே தெரியவில்லை’ என்ற எண்ணம் தோன்றும். எவ்வளவோ காலமாச்சு ரேசன் வந்தது. குட்டப்பன் பட்டாளத்துக்குப் போயிட்டான். அதுக்குப் பொறவு ‘இம்புட்டு பொடியனா வந்த உன்னி, இப்போ பெரிய சுமட்டுக்காரனாயிட்டான். அவன் கையிலும், சாக்கத் தூக்குகிற ஊக்கு வந்துவிட்டது. அப்பு சாயக் கடையில் அவன் மச்சினன், கொஞ்ச நாள் வந்து கல்லாவில் இருந்தான். அப்பு பால்காரி ராஜம்மாவோட சிநேகம் பிடிச்சான், அவள் கர்ப்பமாக வந்து கடை நடையில் நின்று சிலவுக்குக் காசு கேட்டு வழக்கெல்லாம் நடந்தது. எவ்வளவோ சங்கதிகள் நடந்திருக்கு. சாலை ரோடு கொத்திக் கிளறி ரெண்டாவது தடவை தார் போட்டார்கள். வண்டி, பஸ் எல்லாம், அட்டக்குளங்கரை ரோட் வழியாகத் திருப்பிப் போயிற்று.

பாச்சி செத்துப் போனாளே!

நாணுவிற்கு மனம் ரொம்ப வலித்தது. காலை வெயில் உடலைச் சுட்டது. கேட்டு, மஸ்ஸின் முழுக்கை ஜிப்பாவும், பாளைத் தார் வேஷ்டியுமாகக் காரில் வந்திறங்கிக் கிட்டங்கி வாசலைத் திறந்து- டிரைவர்தான் பெரிய பூட்டுக்களைத் திறந்தான். குனிந்து, வாசல் பலகையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு உள் நுழைந்தார். பாச்சி செத்த விபரம் அவருக்குத் தெரிந்திருக்காது, சொல்லணுமே.

கோவிந்தன் வந்துவிட்டான். கை வண்டியைக் கடகடவென்று இழுத்து நடையில் கொண்டு வந்து நிறுத்தியபோது நாணுவிற்கு நெஞ்சு பக்கென்றது. வண்டியில் வெல்ல மூடை கட்டி வந்த பாயொன்று ஈ மொய்க்க விரித்திருந்தது. பாச்சியைக் கொண்டு போகப் போகிறான்.

அப்போதான் சேட்டு கவனித்தார்.

”நாணு, என்ன கோவிந்தன் வண்டியோட வந்திருக்கான்? கிட்டங்கிச் சந்திலே பெருச்சாளிக கண்டா செதுக்கிடக்கா? அதுக்கெதற்கு வண்டியும் பாயும்…?”

”இல்லே எஜமானே… நம்ம பாச்சி நேத்து ராத்திரி செத்துப் போச்சு. நாணு மேஸ்திரி மொகத்தை எஜமான் பார்க்கலெ போல…” கோவிந்தன்தான் செய்தியைச் சொன்னான்.

சேட்டு அப்பொழுதுதான் நாணுவைக் கவனித்தார்.

”அய்யோ! நம்ம பாச்சியா? எப்படிச் செத்தது? அட பாவமே… நல்ல புத்தியுள்ள பிராணியாச்சே… எப்படி?”

”ராத்திரியெல்லாம் கிட்டக்கத்தான் படுத்திருந்தது. விடிஞ்சு பார்த்தா இப்படி! எந்தப் பாவி செய்தானோ?” நாணு அழுதானோ? குரல் எழும்பவே இல்லை.

சேட்டுவிற்கு மேலும் துக்கம் விசாரிக்கப் பிடிக்கவில்லையோ என்னமோ?

”கோவிந்தா, நீதானே கொண்டு போறே? எல்லாத்தையும் போல இதையும் கடப்புற மணலிலே எறிஞ்சிராதே. உங்க சேரி, கருமடத்துப் பக்கமா, ஒரு குழியெடுத்து அதை நல்ல மொறையிலே புதைச்சிரு பாவம். நல்ல புத்தியோட இருந்தது. மனுஷப் பிறவிகளைக் காட்டிலும் நல்லத்தான் திரிஞ்சுது. சும்மா சொல்லக்கூடாது, இந்தா, கடையிலே கணக்கனிடம் இந்தச் சீட்டைக் காட்டி அஞ்சு ரூபா நீ வாங்கிக்கோ. மடிச்சிராதே…”

நாணுவிற்கு அப்பியே அமிழ்ந்து போனது மாதிரி இருந்தது. ஆணிப் புற்றுக்காலின் செருப்பை பறித்துக் கொண்டு, கல்லுத் தரையில் நடக்க விட்டது போல வாதனையாக இருந்தது. இதுதான் கடைசி பாச்சியைக் கோவிந்தன் கொண்டு போகப் போகிறான்.

பாச்சி போகப் போகிறாள்.

இன்னும் யார் இருக்கிறா? சின்னப் பிராயத்திலேயே அம்மா, மேத்தன்கூட ஓடிப்போனது. அப்புறம் அப்பன் எறச்சிக் கடைச்சண்டையிலே வெட்டுப்பட்டுச் செத்தது. பத்துப் பதினெட்டு வயசு வரையில கருமடம் சேரியில் புல் வெட்டி விற்று, எருமைகளைக் குளிப்பாட்டிக் கொடுத்து வாழ்ந்தது… அப்புறம் சாலைக் கடைக்கு வந்து சுமடு தூக்கிப் பிழைத்தது. வருஷங்களாயிற்று கடைசியலெ, கால் ரெண்டிலும் ஆணிப்புற்று வந்ததுக்கப்புறம், நடக்க மாட்டாமெ, கிட்டங்கித் திண்ணையே கதின்னு கிடந்தது… எல்லாம் போச்சு. பாச்சி செத்துப் போனா, பாச்சியோட எல்லாம் போவுது இனி ஒண்ணுமில்லை.

”நாணு மேஸ்திரி, துவர்த்து வேணும்னா எடுத்துக்கோங்க. உங்க சரக்கெ வண்டியிலே ஏத்தப் போறேன்…” கோவிந்தன் பாவி!

நாணுவிற்கு ஒன்றுமே தோன்றவில்லை. பேசாமல் நின்றான்.

”மேஸ்திரிக்கி சங்கடம்தான்… நவருங்க அப்பா, என்ன கனம், எளவு…”

கோவிந்தன் பாச்சியை வண்டியில் எடுத்துப் போட்டான்.

நாணு பாச்சியைக் கடைசியாக ஒரு முறை பார்த்தான். திறந்த வாயில் முந்திரிப் பருப்புச் சிதறல் போல வெள்ளை வெளெரென்று பற்கள் வெளியே தெரிகின்றன. ஈக்கள் விடாமல் மொய்க்கின்றன. கால்கள் நாலும் விரிந்து கிடக்கின்றன. ராத்திரியெல்லாம் தன் விரிப்பில் கிடக்கும் அதே கோலம்…”

வண்டியைக் கோவிந்தன் கடகடவென்று இழுத்துக் கொண்டு போனான், சேட்டு ஒரு முறை வந்து பார்த்தார். கார் டிரைவர் காரினுள் இருந்தவாறே - லேசாக அலட்சியமாகக் கொஞ்சம் பார்த்தான்.

பாச்சி செத்துப் போனாள்

நாணு வெறுமையில் நின்றான். வெயில் ஏறிக் கொண்டிருந்தது.

******

ஆ.மாதவன் சிறுகதைகள் - தமிழினி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்