Mar 16, 2010

விட்டகுறை தொட்டகுறை - கு. அழகிரிசாமி

கு. அழகிரிசாமி

''அந்தப் பாதையில் அவளும் நானும் எப்படியோ வந்து சேர்ந்தோம். பிரயாணத்தைத் தொடங்கினோம். ஒரே திசையை நோக்கிப் பக்கம் பக்கமாக நடந்து சென்றோம். இப்படி நடந்து செல்கிறவர்கள் பேசாமல் இருக்க முடியுமா? அறிமுகப்படுத்திக் கொள்ளாமலும் இருக்க முடியுமா? சில மைல் தூரம் சென்ற பிறகு பேசினோம். நான் யார், அவள் யார் என்பவை அறிமுகமாகாவிட்டாலும் அவரவர்களைப் பற்றிய விவரங்களைப் பரஸ்பரம் சொல்லித் தெரிந்து கொண்டோம். பேச்சு துணையோடு எங்கள் நடை தொடர்ந்தது.

'மேலும் சில மைல் தூரம் சென்றபின் பேச்சுத் துணையில் ஒருவகைத் தொடர்பும் ku.aa ஒரு வகையான ஈடுபாடும் ஏற்பட்டன. ஓர் உறவும் மலர்ந்தது. அப்புறம் அந்த வழிப்பயணத்திலும் அந்த உறவிலும் ஒரு பக்தியும் கவர்ச்சியுமே உண்டாகிவிட்டன. இருவரும் கைகோத்துக் கொள்ளாவிட்டாலும் சற்று நெருங்கி வந்தோம். அந்த நிலையிலேயே நடக்கலானோம்.

'மேலும் சில மைல் தூரம் சென்றோம். ஓரிடத்தில் நான் கிளைப்பாதை வெட்டினேன். அவளிடம் விடை பெற்றுக் கொண்டேன்.'

''நீலா! பம்பாயில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது. மாதம் நானூற்றைம்பது ரூபாய் சம்பம்....''.

''அப்படியா! ரொம்ப சந்தோஷம்! ....'' அவள் முகத்தில் தேவைக்கு மிஞ்சிய, நடிப்போ என்று சந்தேகிக்கக் கூடிய, ஒரு மகிழ்ச்சிக் குறி, அனாவசியமான ஒரு பிரகாசம்...

''இன்னும் ஒரு வாரத்தில் பம்பாய்க்குப் பயணம்''

என்று சொன்னேன்.

''ரொம்ப நல்ல சான்ஸ். நிறைய சம்பாதியுங்கள். செளக்கியமாக இருங்கள்''. அவள் அவசரமாகப் பேசினாள். என்னை முந்திக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

''உங்கள் வீட்டுக்கும் பயணம் சொல்லிக் கொள்ள வருகிறேன்.''

அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. ''நான் போய்விட்டு வருகிறேன்''. என்று மட்டுமே சொல்லிவிட்டு, பஸ்ஸைப் பிடிப்பதற்காகப் போய்விட்டாள்.

''அப்புறம் அவள் வீட்டுக்குப் போனேன். அவளிடமும், அவள் தாயாரிடமும், அவளுடைய தங்கைகளிடமும் சொல்லி விடை பெற்றுக் கொண்டு மறுநாள் பம்பாய்க்குப் புறப்பட்டேன்.

யார் கண்டது? நான் பம்பாய்க்குப் போகாமல், கிளைப்பாதை வெட்டிப் பிரியாமல், அவளுடனேயே என் யாத்திரையைத் தொடர்ந்திருந்தால் இருவருக்குமே பொதுவான ஒரு லட்சி நகரம் எதிர்ப்பட்டிருக்கக்கூடும். இருவருமே அங்கே போய்ச் சேர்ந்திருக்கவும் கூடும். இல்லையென்றால் எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு லட்சிய நகரம் இல்லை என்பதாவது ஒரு கட்டத்தில் தெளிவாகியிருக்கும். ஆனால் எந்த முடிவையும் காணாமல், நடுவழியில் பிரிந்துவிட்டேன்.

ஹோட்டல் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு இரண்டு வருஷங்களுக்கு முந்திய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருந்தன. பம்பாயிலிருந்து அன்று பிற்பகல் இரண்டரை மணிக்குத்தான் அவன் சென்னைக்குத் திரும்பி வந்திருந்தான். நேரே ஒரு ஹோட்டலுக்குப் போய்க் குளித்துச் சாப்பிட்டான். மாடியில் அவன் எடுத்திருந்த அறைக்குச் சென்று பிரயாணக்களைப்பைப் போக்குவதற்காகப் படுத்துக் கொண்டான்.

நீலாவை - அவள் இப்போதும் சென்னையிலேயே, அதுவும் அதே வீட்டிலேயே இருந்தால் - போய்ப் பார்ப்பதற்கு இன்னும் இரண்டு மணிநேரம் கழிய வேண்டும். ஐந்து மணிக்குத் தான் ஆபீசிலிருந்து அவள் திரும்புவாள். அதுவரையிலும் படுத்திருக்கலாம். முடிந்தால் கொஞ்சம் தூங்கலாம்.

'அன்று பம்பாயில் நானூற்றைம்பது ரூபாய் சம்ளத்தில் வேலை கிடைத்தது தான் பெரிதாகப் போய்விட்டது. அவசரமாக, முன்பின் யோசிக்காமல் கிளைப்பாதை வெட்டிக் கொண்டு பிரிந்தேன். நீலா! நான் போன பிறகு நீ எந்தப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறாய்? உன் பிரயாணம் இன்னும் தொடர்கிறதா? இல்லையென்றால் எங்காவது ஓரிடத்தில் ஏதோ ஒரு விதத்தில் முடிந்து விடடதா? உன் வீடு திவருவல்லிக்கேணியில் இருக்கிறது. நீ வேலை செய்யும் காரியாலயம் மவுண்ட் ரோடில் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நீ இருப்பாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உன் யாத்திரா மார்க்கம் எங்கே இருக்கிறது? அங்கே நீ எந்த இடத்தில் நிற்கிறாய்?

'அவள் எங்கே நின்றால் என்ன? அதைப் பற்றிக் கவலைப்பட எனக்கு இப்போது என்ன உரிமை இருக்கிறது? கவலைப்பட்டுத்தான் இனி என்ன செய்ய முடியும்?...'

சுந்தரம் இப்போது தன் கல்யாணத்துக்காகத் திருநெல்வேலியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான். இரண்டு மாத லீவ் எடுத்துக் கொண்டு பம்பாயிலிருந்து வந்திருக்கிறான். அவன் ஊர் போய்ச் சேர்ந்த மறுநாளே கல்யாணம் நிச்சயமாகிவிடும். ஒரு மாதத்தில் கல்யாணம். அப்புறம் ஒரு மாதம் ஊரில் இருந்துவிட்டு பம்பாய்க்குத் திரும்ப வேண்டும்.

தனக்கு மனைவியாக வரப்போகிறவளின் போட்டோவைப் பார்த்தாகிவிட்டது. அவள் அழழு ஸ்வரூபமாக இருந்தாள். நேரில் பார்க்கும்போது அதில் கால்வாசி அழகுடன் தோற்றம் அளித்தாலும், வேண்டாம் என்று உதறிவிட முடியாத ஒரு செளந்தரிய வடிவம். முக்கால்வாசிக் கலைகள் குறைந்தாலும் சந்திரனின் அழகு குன்றிவிடுவதில்லையே! பிறைச் சந்திரனுக்கும் அழகைப் பொறுத்தவரையில் ஒரு பூரணத்துவம் உண்டு அல்லவா? படத்தில் கண்ட அவளுடைய குடும்பப் பெருமைகள், செல்வம், செல்வாக்கு, அப்புறம் அவளுடைய படிப்பு - எல்லாமே தெய்வம் கொடுத்த, அதுவும் கூரையைப் பிய்த்துக் கொண்டு வலிய வந்து கொடுத்த பாக்கியங்களாக இருந்தன. அவளை அவன் மணக்கப் போவது இரண்டும் இரண்டும் நான்கு என்பது போன்ற ஓர் உண்மையாகிவிட்டது.

''எனக்கு ஏன் இனி நீலாவின் யாத்திரா மார்க்கத்தைப் பற்றிய கவலை?'' என்று நினைத்தான் சுந்தரம். சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து விட்டான்.

இரண்டு வருஷங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் ஒரு மாடி அறையில் அவன் ஜாகை வைத்துக்கொண்டு மாதம் இருநூறு ரூபாய்க்குக் குறைவான சம்பளத்தில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தங்கியிருந்த வீட்டுக்கு ஐந்து வீடுகள் தள்ளி ஆறாவது வீட்டின் மாடியில் குடியிருந்தாள் நீலா. அவளுக்கு மாதம் நூற்றுப்பத்து ரூபாய் சம்பளத்தில் வேறொரு கம்பெனியில் 'டைப்பிஸ்ட்' வேலை. அவளுடைய தகப்பனார் காலமாகிவிட்டார். தாயாரையும் இரண்டு தங்கைகளையும் அவளே சம்பாதித்துக் காப்பாற்றி வந்தாள்.

சுந்தரம் அந்தத் தெருவுக்கு வந்து ஒரு மாதம் கழிந்ததுமே நீலாவின் வீட்டார் அவனுக்கு அறிமுகம் ஆனார்கள். அவள் வேலை செய்யும் கம்பெனியில் அவனுடைய இலாகாவிலேயே சற்றுப் பெரிய பதவியில் இருந்த ராமச்சத்திரன் என்பவர் நீலா வீட்டாருக்குத் தூரத்து உறவு. அவர்தான் அவளுக்கு வேறொரு கம்¦னியில் வேலை வாங்கிக் கொடுத்தவர். ஒரு விடுமுறை நாளில் குடும்ப சகிதமாக அவர் நீலாவின் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிப் போகும்போது சுந்தரம் எதிரே வந்தான். அதே தெருவில்தான் அவனும் ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறான் என்ற விவரத்தை அவர் அப்போது அறியலானார். நீலாவின் வீட்டாரைப் பற்றி அவர் சொல்ல அன்றுதான் முதல்முதலாக அவன் தெரிந்து கொண்டான்.

மற்றொரு நாள் அவர் நீலாவின் வீட்டுக்கு வந்திருந்த போது அவனும் அவருடன் சென்றான். அது தான் முதல் சந்திப்பு.

இரண்டாவது சந்திப்பு ராமச்சந்திரன் வீட்டில். நீலாவும் அவளுடைய தங்கையும் அங்கு வந்திருந்த சமயம், சுந்தரம் சந்தர்ப்பவசமாக அங்கே போயிருந்தான். இருவரும் பார்த்தார்கள். பேசிக் கொண்டார்கள். அவன் ஐம்பது வார்த்தைகள் பேசியிருப்பான். அவள் ஐந்து வார்த்தைகள். இல்லையென்றால் நான்கு வார்த்தைகள் பேசியிருப்பாள். இது அடக்கமாக அல்லது அலட்சியமா என்பது புரியாத நிலை. என்னவென்று புரிந்து கொள்வதற்கு மேற்கொண்டு பேசிச் சோதனை செய்ய அது இடமும் அல்ல; சந்தர்ப்பமும் அல்ல. இடத்தையும் சந்தர்ப்பத்தையும் மற்றொரு நாளில் அவள் வீட்டிலேயே உண்டு பண்ணிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான் சுந்தரம்.

ஒருநாள் அவன் நீலாவின் வீட்டுக்கு யாதொரு காரணத்தையும் சொல்லிக் கொள்ள முடியாதவனாகப் போனான். ராமச்சந்திரனுக்கு 'நண்பன்' என்ற முறையில் அங்கே அவனுக்கு வரவேற்பு இருந்தது. அன்றும் நீலா ஐந்து வார்த்தைகள் தான் பேசினாள். அதிக நேரம் பேசியது அவளுடைய தாயார் தான். அந்த வீட்டில் ஆண்மகனைப் போல் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வரும் நீலா, ஆண்மகனைப் போலவே நடந்து கொண்டாள். கம்பீர்யமான பேச்சு, நிமிர்ந்த பார்வை; மகிழ்ச்சியோ, துக்கமோ சாமான்யத்தில் பிரதிபலிக்க முடியாத ஒரு முகம். அங்கிருந்து அவன் ஜாகைக்குத் திரம்பிய பிறகு, ''இது கர்வமாகவும் இருக்கலாம், அலட்சியமாகவும் இருக்கலாம். இல்லையென்றால், துன்பங்களைச் சகித்துச் சகித்து உணர்ச்சிகளெல்லாம் கூர்முழுங்கி, துடிப்பிழந்து, மனசுக்குள் அவிந்து அடங்கிவிட்டதன் விளைவாகவும் இருக்கலாம்'' - இப்படி சுந்தரம் நினைத்துக் கொண்டான்.

நீலாவுக்கு கல்யாண வயது வந்து ஐந்தாறு வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டன. அவளுடைய தங்கைகளும் கூடத் திருமண வயதை அடைந்து விட்டார்கள். இரண்டாவது தங்கை பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தாள். நீலா கல்யாணம் செய்து கொண்டிருந்தாள். நீலா கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போய்விட்டால், குடும்பத்தைக் காப்பாற்ற யாருமே இல்லாமல் போய், எல்லோருடைய கதியுமே நிர்க்கதியாகிவிடும் என்பதனால்தான் அவள் திருமணத்தை பற்றிச் சிந்திக்க யாருக்கும் விருப்பமில்லை; துணிவும் இல்லை. இந்த விவரங்களை ராமச்சந்திரன் மூலம் அறிந்த சுந்தரம் அவள் குடும்பத்தின் நிலைக்காத மிகுந்த அனுதாபம் காட்டினான்.

'நீலாவையே கல்யாணம் செய்து கொண்டு அவள் வீட்டோடு இருந்தால் என்ன?' என்றும் ஒரு நாள் சுந்தரம் நினைத்தான். ஆனால் அதற்குப் பல தடங்கல்கள் இருப்பதாக அவனுக்கு அப்பொழுதே தோன்றியது. மனைவியின் வீட்டில் போய் ஒருவன் வசிப்பது விரும்பத்தகாத விஷயம் என்பது ஒருபுறமிக்க, அவனும் தன் பெற்றோர்களைத் தன் சம்பாத்தியத்தினால் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தான். எனவே நீலா வீட்டாரோடு போய் அவனால் வசிக்கவே முடியாது. அவளும் தன் தாயாரையும் தங்கைகளையும் விட்டுவிட்டு அவன் வீட்டுக்கு வரமுடியாது. அப்படியே இருவரும் தம்பதிகளாகி ஒரு வீட்டில் தனிக் குடித்தனம் ஆரம்பித்தாலும், இருவர் சம்பாத்தியத்தையும் வைத்துக் கொண்டு தன் பெற்றோர்களையும் நீலாவின் வீட்டாரையும், அப்புறம் தங்கள் இருவரையும், ஆக மூன்று குடும்பங்களையும் காப்பாற்றி வர முடியாது. அதனால் அவளை மணந்துகொள்ள நினைப்பது நிறைவேற முடியாத ஓர் ஆசையாகவே இருந்தது.

''இப்போதைய நிலையில் நீலாவை ஒருவன் கல்யாணம் செய்துகொண்டால் அவன்தான் அவள் தாய்க்கும் தங்கைகளுக்கும் எமன்'' என்று ராமச்சந்திரனும் ஒரு சமயம் சொன்னார். எனவே ஒரு குறிக்கோள் இல்லாமலே அவன் நீலா வீட்டாருடன் உறவாடி வந்தான். நிறைய சம்பாதித்தால் எல்லாப் பிரச்சனைகளுக்குமே ஒரு நல்ல முடிவு காணலாம் என்று அவனுக்குத் தோன்றியது. அப்போது, தான் அடைந்த ஒரு பெரிய ஏமாற்றமும், பம்பாயில் இருக்கும் தன் நண்பன் ஒருவன் கொடுத்திருந்த ஒரு மகத்தான நம்பிக்கையும் தினந்தினமும் அவன் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன.

திருவல்லிக்கேணிக்குச் சுந்தரம் வந்து சேருவதற்கு முன்பே, திருநெல்வேலியில் இருந்தபோதே, அவனுக்கு பம்பாயில் வேலை கிடைப்பதாக இருந்தது. நம்பிக்கையோடு நண்பனுடைய தபாலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று ஒரு நாள் பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் அந்தக் கடிதம் வந்து சேர்ந்தது.

''இந்தத் தடவை என் முயற்சி தோற்றுவிட்டது. இதற்காக நான் நம்பிக்கையை அடியோடு இழந்துவிடவில்லை. நீயும் இழக்க வேண்டியதில்லை. அடுத்த வருஷம் இதே சமயத்தில் இதே கம்பெனியில் சில வேலைகள் காலியாகும். நிச்சயமாக உனக்கு இடம் பிடித்து விடுகிறேன்'' என்று பம்பாயிலிருந்த ஜயராமன் எழுதியிருந்தான்.

''அடுத்த வருஷம்'' என்பது ஏமாற்றத்தைப் போக்குவதற்குச் சொல்லும் ஆறுதல் வார்த்தையாகவே அவனுக்குத் தோன்றியது. அவ்வளவுதான். இனி பம்பாய் ஆசையையும் பெரிய சம்பளக் கனவையும் விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஒரு விரக்தியுடன் சென்னையில் குறைந்த சம்பளத்தில் வேலை தேடிக் கொண்டு திருவல்லிக்கேணிக்கு வந்து சேர்ந்தான் சுந்தரம். ஆனால் ஜயராமன் மட்டும் மாதம் தவறாமல் பமபாயிலிருந்து நம்பிக்கையூட்டும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தான். ஒரு கடிதத்தில் ''இன்னும் மூன்று மாதங்கள் தான். அப்புறம் நீ பம்பாய்க்காரன்! இதை நம்பி நீ எது வேண்டுமானாலும் செய்யலாம். இப்போதே மூட்டையைக் கட்டி வைத்துக் கொண்டு ரயில் ஏறத் தயாராக இரு'' என்று ஜயராமன் எழுதியிருந்ததைப் பார்த்த சுந்தரம்''. அன்று முதல் சென்னையில் ஒரு காலமூ பம்பாயில் ஒரு காலும் வைத்து நடக்கத் தொடங்கினான். ஜயராமனின் கடிதத்தில் கண்ட விவரங்களையெல்லாம் நீலாவிடம் ஒரு நாள் சொன்னான்.

''நீலா! இன்னும் மூன்று மாதங்களில் நான் பம்பாய்க்குப் போய்விடுவேன் போலிருக்கிறது. உங்கள் வீட்டாரின் அன்பை என்னால் என்றென்றைக்கும் மறக்க முடியாது''.

''உங்களுக்கு அப்படி என்ன நாங்கள் செய்துவிட்டோம்? ஒன்றுமே இல்லை. நீங்கள் உங்கள் வீட்டாரின் அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது''.

''உங்களுக்கு அப்படி என்ன நாங்கச் செய்துவிட்டோம்? ஒன்றுமே இல்லை. நீங்கள் பம்பாய்க்குப் போய்ச் செளக்கியமாய் இருங்கள் என்றாள் நீலா.

''நீங்கள் என்னை மறந்து விடுவீர்கள் இல்லையா?''

இதற்கு நீலா ஒரு பதிலும் சொல்லவில்லை. அவன் வார்த்தைகளைக் கேட்காதவன் போல் வீட்டுக்குள் போனாள்.

தனியே இருந்த சுந்தரத்துக்கு உள்ளத்தில் துயரச் சாயை படர்ந்தது.

'நீலாவைக் கல்யாணம் செய்து கொள்பவன் அவளுடைய தாய்க்கும் தங்கைகளுக்கும் எமன்.' மற்றவர்களின் நன்மைக்காகக் கைக்கு எட்டிக் கனியை மரத்திலேயே விட்டு விட்டு செல்கிறேன்...'

கிளைப்பாதை வெட்டி, விடைபெற்றுக் கொண்டு பம்பாய்க்குப் போயாகி விட்டது. சில நாட்கள் நீடித்த ஏமாற்றமும், ஏக்கமும், பிரிவுத் துயரமும் மறைந்து விட்டன. சம்பாத்தியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். அவனுக்கு நீலாவின் ஞாபகம் இரண்டு வருஷங்களுக்குப் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் முழு வேகத்துடன் தலை தூக்கியது. சுந்தரம் அப்போது தன் நண்பன் ஜயராமன் வீட்டில் இருந்தான். சுந்தரத்துக்கு இன்னும் இரண்டு மாதங்களில் மனைவியாகப் போகிறவளின் போட்டோவை ஜயராமன் வாங்கிப் பார்த்தான். அவளுடைய குடும்பத்தின் செல்வத்தையும், செல்வாக்கையும் பற்றிச் சுந்தரத்தின் வாய்மொழி மூலம் அறிந்தான். முடிவில் தன் முழுத் திருப்தியைத் தெரிவித்து நல்வாழ்த்துக் கூறினான் ஜயராமன்.

அந்தக் கட்டத்தில் நீலாவைப் பற்றி ஒரு கதை மாதிரி சொல்லத் தொடங்கினன் சுந்தரம்.

கதை பெரிதாக நீளும்போல் இருந்தது. அவ்வளவு நேரம் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருப்பது என்பது ஜயராமனைப் பொறுத்த வரையில் முடியாத காரியம். அவன் காரியவாதி. நடக்க முடியாத காரியங்களையோ, பயனற்ற வேலைகளையோ அவன் செய்ய மாட்டான் என்பதோ, காதால் கேட்கவும் நினைத்துப் பார்க்கவும் கூட மாட்டான். ஏக்கங்கள், கனவுகள், கற்பனை வாழ்க்கைகள் - இவையெல்லாம் அவனுக்கு அறவே பிடிக்காதவை. அதனால் சுந்தரத்தின் பேச்சில் குறுக்கிட்டு, ''இதையெல்லாம் இப்போது நீ ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதாக நீ வாக்குறுதி ஏதாவது கொடுத்திருக்கிறாயோ?'' என்று கேட்டான்.

''அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...'' என்று சுந்தரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ''அப்புறம் என்ன? அத்தோடு விடு. பத்தாயிரத்தோடு கிளிமாதிரி ஒரு பெண்ணைக் கொடுக்க ஒருவன் வீட்டு வாசலில் வந்து காத்துக் கொண்டு நிற்கிறான். இந்த நேரத்தில் எதற்கு நீலாவையும் லீலாவையும் பற்றிக் கவலை?'' என்றான் ஜயராமன்.

''அப்படி அறவே உதறி விடுகிற ஒரு தொடர்பல்ல இது. வாயால் சொன்னால்தான் வாக்குறுதியா? நான் நினைத்திருந்தால் நாங்கள் இருவருமே தம்பதிகளாகி பம்பாய்க்கும் வந்திருப்போம். ஆனால்...''

''சுந்தரம்! இந்த நேரத்தில் இதைக் கேட்கவே எனக்குப் பிடிக்கவில்லை. உன் கல்யாணம் இவ்வளவு தூரம் நிச்சயமாகும் வரையில் சும்மா இருந்துவிட்டு, இப்போது மெட்ராஸில் பழகிய எவளோ ஒருத்தியை நினைத்து ஏங்குவது உசிதமில்லை. முன்னமேயே 'இந்தக் கல்யாணம் எனக்குச் சம்மதமில்லை' என்று அப்பாவுக்குக் கடிதம் எழுதிவிட்டு, பழைய காதலியைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நீ செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இப்போது இப்படியெல்லாம் யோசிப்பது பொறுப்பில்லாத்தனம்; இதில் யோக்கிய பொறுப்பும் கூட இல்லை.''

''நீ எப்பொழுதுமே இப்படித்தான் பேசுவாய். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசி முடிக்கும் விஷயமா இது?ஞ

''இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்? இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிடப் போகிறாயா?''

''எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஊருக்குப் போவதும் நிச்சயம்; கல்யாணம் செய்து கொள்ளப் போவதும் நிச்சயம். அதைப் பற்றியொல்லாம் சந்தேகமில்லை...''

''அப்படியானால் விஷயம் அத்துடன் முடிந்தது! அப்புறம் என்ன?..... சுந்தரம், நான் வெளியே போக வேண்டும். ஒரு அவசரமான காரியம். சாவகாசமாகப் பார்ப்போம்'' என்று சொல்லிக் கொண்டே ஜயராமன் எழுந்து விட்டான்.

பிறகு நீலாவைப் பற்றி அவன் ஜயராமனோடு பேசவே இல்லை.

ஹோட்டல் அறையில் சுந்தரம் தூங்கியெழுந்தபோது மணி ஐந்த அடித்து விட்டது. நீலா இப்போது ஆபிஸிலிருந்து வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டே முகத்தைக் கழுவி, உடைகளை மாட்டிக் கொண்டு மாடியை விட்டுக் கீழே இறங்கி வந்தான். ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொண்டு திருவல்லிக்கேணிக்குப் புறப்பட்டான்.

'விட்டக் குறை என்பது ஒரு ஜன்மத்திலிருந்து மறு ஜன்மத்துக்குத் தொடரும் என்பார்கள். எனக்கோ இந்த ஜன்மத்திலேயே தொடரும் ஒரு விட்ட குறையாக இருக்கிறது நீலாவின் தொடர்பு. இந்தக் குறையை இனி எந்த ஜன்மத்திலும் என்னால் பூர்த்தி செய்ய முடியாது.

'அதிர்ஷ்டவசமாக அவள், உணர்ச்சி வசப்படக்கூடியவள் அல்ல. என் கல்யாணச் செய்தியை அறிந்து ரகசியமாகக் கூட அவள் அழமாட்டாள். கலகலப்பாகத் தான் நடந்து கொள்வாள். வழக்கம்போல் ஐந்து வார்த்தைகள் பேசுவாள். அவளைப் பார்த்தால் எனக்குத்தான் ஒரு வேளை மனக்கஷ்டம் உண்டாகலாம். பாவம் அவளுடைய மெளனத்திலும் அலட்சியப் போக்கிலும் அன்பு துளித்தது என்பது எனக்கல்லவா தெரியும்? இனி அவள் யாரோ? நான் யாரோ? இன்றோடு இந்த உறவுக்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடும். நீலாவை என் மனப்பீடத்திலிருந்து நிரந்தரமாக நீக்கி விடுவதற்காகப் போகிறேன். கடைசி முறையாக அவளைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன்''.

டாக்ஸி நீலாவின் வீட்டு வாசலில் போய் நின்றது. சுந்தரம் இறங்கி வீட்டுக்குள் போனான். அவன் போன போது எல்லோருமே வீட்டில் இருந்தார்கள். அவனை அன்போடு வரவேற்றார்கள். நீலா ஐந்து வார்த்தைகள் அல்ல, ஐம்பது வார்த்தைகளுக்கு மேலேயே பேசினாள். அவளுடைய தாயார் அவளை ராஜ மரியாதையோடு வரவேற்றாள். அவளுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை தளிர்த்திருப்பது போல தோன்றியது. நீலாவின் தங்கைகள் இருவரும் அவனை வைத்த கண்வாங்காமல் அந்நியோந்யமான ஒரு பிரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

''பம்பாய் வாழ்க்கை எப்படி இருக்கிறது?'' என்று கேட்டாள் நீலா.

''நன்றாகத்தான் இருக்கிறது''.

''போய் இரண்டு வருஷங்களாகியும் ஒரு கடிதம் கூட போடவில்லையே?'' என்று கேட்டாள் நீலாவின் தாயார்.

'ராமச்சந்திரனுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும் உங்கள் §க்ஷம லாபங்களை விசாரித்துக் கொண்டுதான் இருந்தோம். உங்களுக்கு என்று நான் தனியாகக் கடிதம் எழுதவில்லை. அது குற்றம் என்றால் மன்னிக்க வேண்டும்.''

''மன்னிக்கவே முடியாது!'' என்று சொல்லிவிட்டு நீலா சிரித்தாள். அவன் உட்பட எல்லோருமே சிரித்தார்கள்.

நீலாவின் பேச்சு அவனுக்கு இன்பகரமான ஓர் அதிர்ச்சியையே அளித்தது.

சிறிது நேரம் ராமச்சந்திரன் வீட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். நீலாவின் கடைசித் தங்கை உத்தியோகத்துக்கு மனு போட்டிருக்கும் செய்தியையும், அதற்கும் ராமச்சந்திரனின் உதவியையே நம்பிக் கொண்டிருப்பதையும் அவனுக்குத் தெரிவித்தார்கள்.

''மூன்று வருஷங்களுக்கு முன் இவள் மனு போட்டு, உத்தியோகத்துக்கும் போயிருந்தால் கதையே மாறியிருக்கும். நீலா என் மனைவியாகி என்னோடு பம்பாய்க்கு வந்திருப்¡ள். இப்போது காலம் கடந்து விட்டதே என்று ஓரளவுக்கு அவன் வருந்தினான். அடுத்த நிமிஷத்திலேயே தனக்குக் கல்யாணம் நடக்கப் போவதையும் அதற்காகவே தான் பம்பாயிலிருந்து வந்திருப்பதையும் அவன் தெரிவித்தான்.

நீலா அதைக் கேட்டதும் முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் அவன் கண்களைக் கூர்ந்து பார்த்தாள். அவளுடைய தாயாரும் ஏறக்குறைய அதே நிலையில் தான் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுடைய கல்யாணச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டவர்கள் நீலாவின் தங்ககைள் இருவரும் தான்.

''நிச்சயம் ஆகி விட்டதா சுந்தரம்? எந்த ஊர்ப் பெண்?''

''அவளுக்கும் திருநெல்வேலிதான். நிச்சயம் ஆன மாதிரி தான். அடுத்த மாதம் முகூர்த்தம்...''

''ரொம்ப சந்தோஷம் சுந்தரம்! பெண் வீட்டார் வசதி எப்படி? எவ்வளவு செய்வார்கள்?'' என்று தாயாரே கேட்டாள்.

பத்தாயிரம் ரூபாய் வரதட்சணை கொடுப்பார்கள் என்ற விவரத்தையும், பெண் வீட்டாரின் செல்வநிலையையும் அவன் விரிவாக எடுத்துச் சொன்னான்.

'எங்களால் கல்யாணத்துக்கு வர முடிகிறதோ இல்லையோ, நீ பம்பாய்க்கு மனைவியை அழைத்துக் கொண்டு போகும்போது இங்கே ஒரு நாளாவது வந்து தங்கிவிட்டுப் போக வேண்டும்'' என்றாள் நீலாவின் தாயார்.

அவ்வளவு நேரமும் மெளனமாக உட்கார்ந்திருந்த நீலா திடீரென்று எழுந்து வீட்டிற்குள் போனாள். அவள் அப்படிப் போனது எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது.

எல்லோருக்குமே அது ஒரு மர்மமாக இருந்தது. ஒரு நிமிஷம். மெளனமாக இருந்தார்கள்.

சூழ்நிலையை மாற்றும் நோக்கத்துடன், ''பம்பாய்க்குப் போகும்போத கட்டாயம் வரவேண்டும் சுந்தரம்'' என்று நீலாவின் தாயார் மறுபடியும் சொன்னாள்.

''உங்களைப் பார்க்காமலா நான் பம்பாய்க்குப் போவேன்? நீங்கள் அழைக்காவிட்டாலும் நான் மனைவியோடு வருவேன். உங்களை அவளுக்கு அறிமுகப்படுத்தி, 'நான் திருவல்லிக்கேணியில் இருந்தபோது எனக்குத் தாயும், உடன் பிறந்த சகோதரிகளுமாக இருந்தவர்கள்! என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு அவளுக்குச் சொல்வேன்.''

இதைச் சொல்லும் போது சுந்தரத்துக்கு கண்கள் நனைந்தன. அந்த அம்மாளும் ஒரு பெருமூச்சுடன் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

மேற்கொண்டு பேச எதுவும் இல்லை. நீலாவின் வருகையை எதிர்பார்த்தவாறு அவன் உட்கார்ந்திருந்தான். அதுவரையிலும் அவளுடைய தங்கைகளோடு என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தான்.

நீலா வெளியே வரும்போது உடைமாற்றிக் கொண்டு வந்தாள். வெளியே எங்கோ போகிறவள் போல காணப்பட்டாள்.

''நீலா! எங்கே புறப்பட்டு விட்டாய்?''

''ராமச்சந்திரன் மனைவியைப் பார்க்கப் போகிறேன். ஜவுளிக் கடைக்குப் போகிறாளாம். என்னையும் அழைத்தாள்'' என்று சொல்லிவிட்டு நாற்காலியின் ஓர் ஓரத்தில் உட்கார்ந்தாள். சுந்தரம் எழுந்து போவதற்காகக் காத்திருப்பவள்போல இருந்தது அவள் உட்கார்ந்திருந்த நிலை.

குறிப்பறிந்து சுந்தரம் எழுந்து, ''நானும் ரயிலுக்குப் போகவேண்டும் போய் வரட்டுமா?'' என்று எல்லோரையும் பார்த்துச் சொன்னான்.

''உட்காருங்கள்'' என்றாள் நீலா.

அவன் திகைத்தான்.

''காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்'' என்று சொன்னாள்.

சுந்தரம் அளவிட முடியாத ஒரு மகிழ்ச்சியோடு உட்கார்ந்தான்.

''காபி போடத்தான் அவ்வளவு அவசரமாக உள்ளே எழுந்து போனாயோ?'' என்று சொல்லிவிட்டு அந்த அம்மாள் வீட்டினுள் சென்றாள். அவளைத் தொடர்ந்து நீலாவின் கடைசித் தங்கை சாந்தியும் எழுந்து போனாள்.

''ஒருவன் வீடு தேடி வந்திருக்கும்போது இப்படி நடுவே எழுந்து அவசரமாக வெளியே போக உனக்கு எப்படித்தான் தோன்றுகிறதோ? நீலா நீ என்ன செய்யப்போகிறாய் என்பதை அந்த நிமிஷம் வரையிலும்கூட யாராலும் யூகிக்க முடியாது''.

''நீங்கள் ஏன் எங்களைக் கல்யாணத்துக்கு அழைக்கவில்லை? ஒரு வார்த்தைகூட வாருங்கள் என்று சொல்லவில்லையே!''

''முகூர்த்தம் வைத்ததும் முதல் அழைப்பு உங்களுக்கு அனுப்பாமல் வேறு யாருக்கு அனுப்பப் போகிறேன்? இதைச் சொல்லியா தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றான் சுந்தரம்.

''ஐயோ! உங்களுக்குத்தான் எங்கள்மேல் எவ்வளவு அன்பு'' என்று சொல்லிவிட்டு நீலா சிரித்தாள். அவளுடைய வார்த்தைகள் அவன் உள்ளத்தில் ஆழமாக தைத்தன.

''ஏன் இப்படிச் சொல்கிறாய் நீலா?''

''உண்மையாகத்தான் சொல்கிறேன். உங்களுடைய அன்பு எங்களைப் பிரமிக்கும்படி செய்கிறது! இவ்வளவு அன்பாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது இதுவரையிலும் எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே என்றுதான் வருத்தப்படுகிறேன்'' என்றாள் நீலா. உடனே பக்கத்தில் உட்கார்ந்திருந்த தன் தங்கையைப் பார்த்து, ''போய்க் காபி போட்டாகிவிட்டதா என்று பார். நான் அவசரமாகப் போக வேண்டும்'' என்றாள்.

''உன் அவசரத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. காபி சாப்பிடாவிட்டால் என்ன? இன்னொரு நாள் சாப்பிட்டுக் கொண்டால் போகிறது. நீ எனக்காக ஏன் காத்திருக்கிறாய்?'' என்றான் சுந்தரம்.

பக்கத்தில் வேறு யாரும் இல்லை என்பதை ஒருமுறை திரும்பிப் பார்த்து நிச்சயப்டுத்திக் கொண்டு, ''இவ்வளவு அன்போடு தேடி வந்திருக்கும் உங்களுக்குக் காபி கூடக் கொடுக்காமல் நான் எழுந்து போகலாமா?'' என்றாள். மறுநிமிஷமே, ''நீங்கள் எதற்காக இப்போது இங்கே வந்தீர்கள்?'' என்று கடுமையான குரலில் கேட்டாள் நீலா.

சுந்தரத்துக்கு ரத்த ஓட்டமே நின்றுவிட்டது. எதிர்பாராதவாறு வந்து தன்னை ஒரு ஈட்டி தாக்கியது போல் இருந்தது.

''நீலா, ஏன் இப்படிக் கேட்கிறாய்? நீ பேசுவது எதுவுமே புரியவில்லை''.

''புரியவே வேண்டாம்....'' என்று சொல்லிவிட்டு உள்ளே திரும்பித் தங்கையை அழைத்தாள்.

''சாந்தி! சீக்கிரம் காபியை எடுத்துக் கொண்டு வா எவ்வளவு நேரம்!'' என்று குரல் கொடுத்தாள்.

காபி வந்தது. அவனும் அதை எடுத்துக்குடித்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி நீலா வெளியே போக எழுந்திருக்கவில்லை. அவனுக்கு எதிரே அவனைப் பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டுதான் இருந்தாள்.

அப்போது பக்கத்தில் யாரும் இல்லை.

''நான் வந்ததால் உனக்கு மனக் கஷ்டமா நீலா? சொல், உண்மையைச் சொல்.''

அவள் பேசவில்லை.

''என் மேல் ஏதேனும் கோபமா?''
அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் உதடுகள் இலேசாகத் துடித்தன.

அப்போது சுந்தரம் தன்னை அறியாமலே அவள் கையைப் பிடித்தான்.

அவ்வளவு தான்; அவன் கையை அவள் முரட்டுத்தனமாக உதறினாள்; உடனே சுற்றும் முற்றும் பார்த்தாள். முகத்தில் ரத்தம் குபீரென்று பாய்ந்தது. முகமெல்லாம் கனலாகச் சிவந்து விட்டது.

''யார் நீ... அயோக்கியன்! மரியாதையாக எழுந்து போய்விடு'' என்று சீறினாள்.

''நீலா! என்னை... என்னை... மன்னிக்க வேண்டும்.....'' அவனுக்கு வாய் குழறியது.

தெருவைக் காட்டி ''வெளியே போ'' என்றாள்.

சுந்தரம் தயங்கினான்.

''போய் விடு!'' என்று கண்டிப்போடு சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந்திருந்தான் சுந்தரம். அவன் உடம்பெல்லாம் மரத்துவிட்டது. உள்ளேயிருந்து யாருமே வெளி வரவில்லை.

தன்னுணர்வு சிறிது மீண்டதும் அந்த இடத்தைவிட்டு எழுந்தான். வெகுவேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

சுந்தரம் அன்றிரவு ரயிலுக்குப் போகவில்லை. ராமச்சந்திரனைப் பார்த்துத் தன் கல்யாணச் செய்தியைச் சொல்லாமல் ஊருக்குப் போகக் கூடாது என்பது வேண்டுமென்று கற்பித்துக் கொண்ட ஒரு போலிக் காரணம். மனம் நிம்மதியை அடியோடு இழந்துவிட்ட அவனால் அன்று ஊருக்குப் போக முடியவில்லை என்பதுதான் உண்மை. நேரிலோ போன் மூலமோ நீலாவிடம் ஒரு வார்த்தை பேசாமல் ஊருக்குப் போக முடியாது என்பது தெளிவாகி விட்டது.

இரவில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஹோட்டல் அறையில் படுத்து விட்டான்.

''நீலா தன் தாயிடமும் தங்கைகளிடமும் என்ன சொல்லியிருப்பாள்? ராமச்சந்திரனின் மனைவியிடம் போய் என்ன கூறியிருப்பாள்? அவர்கள் இனிமேல் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?''

இரவெல்லாம் அவனுக்கு இதே கலவரம்.

''என்றுமில்லாத வகையில் என்னை உபசரித்தாள். என்னோடு பேசி விளையாடினாள். என் அன்பைப் பழிக்கும் போது அவளுடைய அன்பு முழுவதுமே பிரவகித்ததைப் பார்த்தேன். அவளுடைய ஏமாற்றத்தையும் கூடக் கண்டு கொண்டேன். அவளா என்னை இப்படி அவமானப்படுத்தி விரட்டினாள்? ஏன்? நான் கையைத் தொட்ட மாத்திரத்தில் விம்மி அழுவாள் என்று நினைத்தேன். ஆனால் கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகிவிட்டது. ஏன் இந்த சீற்றம்? எவ்வளவு அவமானகரமான வார்த்தைகள்! என் முட்டாள்தனம் தான் காரணம். அவளுடைய அன்பிலும் அழகிலும் என் மனசைப் பறிகொடுத்து நிதானத்தை இழந்து விட்டேன். நம்பியவளை மோசம் செய்துவிட்டு வேறொருத்தியை மணக்கப் போகிறவன் என்று நினைத்துத்தான் என் மீது ஆத்திரத்தைக் கொட்டினாளா? இல்லை என்றால் எவளையோ மணந்துகொள்ளப் போகிறவன் தன்னைத் தொடுவதா என சீறி விழுந்தாளா? என் இஷ்டத்துக்கெல்லாம் இணங்கக்கூடியவள் என்று அவளை நான் கீழ்த்தரமாகக் கருதி விட்டதாகவே அவள் நினைத்துவிட்டாள். அந்த அவமானத்தை அவளால் தாங்க முடியவில்லை. உண்மையும் அதுதானே? நான் யாரோ ஒருத்திக்குக் கணவனாகப் போகிறவன். ஒரு கன்னிப் பெண்ணைத் தொடுவது அயோக்கியத்தனம் என்று அவள் நினைத்ததில் என்ன தவறு?''.

மறுநாள் அவளிடம் மன்னிப்புக் கேட்காமல் ஊர் திரும்புவதில்லை என்று முடிவு செய்தான் சுந்தரம். இந்த முடிவுதான் அவனுடைய மனக் கலவரங்களைப் போக்கி, அவனுக்குச் சில மணிநேரத் தூக்கத்தையாவது அளித்தது.

மறுநாள் பகல் பதினொன்றரை மணி அடித்தது. அதற்காகக் காத்துக் கொண்டிருந்த சுந்தரம் நீலாவின் ஆபீசுக்குப் போன் பண்ணி அவளை அழைத்தான்.

''நான் சுந்தரம் பேசுகிறேன். ஒரு முக்கியமான விஷயம். போனை வைத்து விடாதே, நீலா!'' என்ற வேண்டுகோளுடன் சுந்தரம் பேச ஆரம்பித்தான்.

''நீலா!
என்னை மன்னிக்க வேண்டும்''.

ஆபீஸில் பத்துப் பேருக்கு நடுவில் நின்று போனில் பேசும் நீலாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது. மனசில் நினைத்ததை அங்கே பேச முடியுமா? §வ்ணடுமானால் போனை அப்படியே வைத்துவிட்டு வந்துவிடலாம். அவன் திரும்பவும் அழைத்தால்..? நிலைமை இன்னும் மோசமாகும். டெலிபோன் ஆபரேட்டர் பொல்லாத வாயாடி. ஒன்றை ஒன்பதாக்கிப் பேசுவாள். ஓர் ஆண் குரல் திரும்பத் திரும்ப அழைப்பது, அவள் பதில் பேசாமல் கோபத்தோடு போனை வைத்துவிட்டு வருவது.... இது பயங்கரமான நாடகமாகிவிடும்.

''என்னை மன்னிப்பாயா நீலா?'' - சுந்தரம் இதே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

நிலைமையைச் சமாளிக்கச் சாதாரணக் குரலில், ''என்ன விஷயம்?'' என்று கேட்டாள் நீலா. அவள் ஆபீஸில் உள்ளவர்களுக்காகப் பேசிய வார்த்தைகள் இவை. ஆனால் அவளுடைய குரலில் கோபமோ ஆத்திரமோ இல்லாததைக் கண்டு சுந்தரம் அங்கே மகத்தான ஆறுதலும் ஊக்கமும் அடைந்தான்.

''நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் நீலா. என்னை நீ மணப்பூர்வமாக வாழ்த்த வேண்டும். வாழ்த்துவாயா?'' என்று கொஞ்சம் தெளிவுடனேயே பேசத் தொடங்கிறான்.

''வாழ்த்துக்கள்!''

''என் மேல் உனக்கு இன்னமும் கோபம் இருக்கிறதா?''

பதில் இல்லை.

''என்னைத் துரோகி என்று நினைக்கிறாயா?''

பதில் இல்லை.

''என்னை இப்பொழுதும் அயோக்கியன் என்றுதான் நினைக்கிறாயா?''

''சந்தேகமில்லாமல், வேறு என்ன விஷயம்?'' நீலா அவசரப்பட்டாள்.

''என் தவறுதான். நான் அயோக்கியன்தான். என்னை மன்னித்துவிடு. என்னை வாயார வாழ்த்து. நம் இருவரிடையிலும் ஏற்பட்டிருக்கும் இந்தத் தீராத பிரச்சனையை உன் மன்னிப்புத்தான் தீர்க்க முடியும் நீலா!''

நீலா மெளனமாக இருந்தாள்.

''உன்னைப் பொறுத்தவரையிலும பிரச்சனை தீர்ந்து விடாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். பம்பாயிலிருந்நது வந்து நான் ஒரு பெரும் பிரச்சனையையே உண்டு பண்ணி விட்டேன். உனக்கு நான் செய்த இந்த தீங்கை நினைத்து வருந்துகிறேன் நீலா!''.

அவள் எதுவும் பேசவில்லை.

அவனும் பேசவில்லை.

போன் ரிசீவரை இருவரும் மெளனமாகப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். அவன் ரிசீவரை வைக்கட்டும் என்று அவள் காத்திருந்தாள். அவனும் அப்படியே காத்திருந்தான். மெளனம் எல்லையில்லாமல் நீண்டது.

''நீலா! விட்ட குறையை நான் தொட்ட குறை இது. மன்னித்துவிடு. மனப்பூர்வமாக என்னை மன்னித்துவிடு. மன்னிக்கிறாயா? 'மன்னிக்கிறேன்' என்று ஒரு வார்த்தை சொல். சொல் சீக்கிரம்.

நீலா அவனை மன்னிக்கவேயில்லை. அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மெளனமாகவே நின்றாள்.

ஒரு நிமிஷம் கழிந்தது.

ஆபீஸில் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகவே அவள் கடைசி வார்த்தைகளைப் பேசினாள்:

"ஒஹோ.....அப்படியா? ... பரவாயில்லை ...... அது ரொம்பப் பழைய வீடு. எதற்கும் அம்மாவிடம் சொல்கிறேன். அப்புறம் பார்ப்போம்.''

போன் ரிசீவரை அதன் யதாஸ்தானத்தில் வைத்துவிட்டுத் தன் இருப்பிடத்துக்கு வந்து அமர்ந்தாள் நீலா.

*********

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்