Oct 15, 2010

கருப்பசாமியின் அய்யா - ச.தமிழ்ச்செல்வன்

பெரிய்ய இவன் கணக்காத்தான் பேசிக்கொண்டு திரிந்தான். கருப்பசாமி இந்த ரெண்டு நாளாக கூலிங் கிளாஸ் கண்ணாடி, சோப்பு, பவுடர் எல்லாம் அவன் கிட்ட இருக்காம். அதான் அப்படி பேசிக்கொண்டு திரியறான். இருக்கட்டுமே, அதுக்காக ரொம்பவுந்தான் பீத்திக்கொண்டு திரிந்தால் யாருக்குப்பிடிக்கும். காளியம்மன் கோயிலுக்குப் பொறத்தாலே கூட்டம் போட்டு இனிமேக்கொண்டு கருப்பசாமியை எந்த ஆட்டையிலும் சேக்கக்கூடாதென்றும் அவனோடு யாரும் பேசவும் கூடாதென்றும் அவனுடைய சேக்காளிகள் முடிவு கட்டிவிட்டார்கள்.

thamizh selvan 1 ஆனால் இதப்பத்தியெல்லாம் கவலைப்படுகிற மாதிரி கருப்பசாமி இல்லை. அவனுக்கு அவனுடைய  அய்யா ஊரிலிருந்து வந்துவிட்டார். அதத்தவிர வேற நினைப்பே அவனுக்கில்லே. அவன் பிறந்த ஒரு வருஷத்திலே இந்த ஊரை விட்டுப்போன அய்யா ஏழு வருசங்கழிச்சு இப்பத்தான் ஊருக்குத் திரும்பி-யிருக்கிறார். சோப்பு, சீப்பு, கண்ணாடி, கூலிங்கிளாஸ், பவுடர் அது இதுன்னு அவனுக்கு ஏகப்பட்ட சாமான்கள் வாங்கிவந்து விட்டார். அதனால் சேக்காளிகளையும் விளையாட்டையும் கூட மறந்துவிட்டு எந்நேரமும் அய்யாவோடவே ஒட்டிக்கொண்டு ரொம்ப செல்லங் கொஞ்சிக்கொண்டு திரிந்தான். அய்யாவும் ரொம்பப் பிரியத்துடன் அவனுடன் சளைக்காமல் பேசிக்-கொண்டிருந்தார். கருப்பசாமியின் ஆத்தாள் காளியம்மாளிடம் கூட அவ்வளவு நேரம் பேசவில்லை. கருப்பசாமியுடன் தான் பேச்சு.

கருப்பசாமியைப் போலவே காளியம்மாளும் ரெண்டு நாளாக சந்தோஷமும் சிரிப்பாணியுமாகத்தான் இருந்தாள். அவளுக்கும் தனியாக பவுடர், ரிப்பன், வாசனைதைலம் எல்லாம் வந்திருந்தது. மூணு நேரத்துக்கும் அரிசிச்சோறே காச்சினாள். குழம்பும் கறியும் தினமும் வைத்தாள். கருப்பசாமிக்கு இதனால் தன் அய்யா மீதுதான் பிரியம் பிரியமாக வந்தது. ஏழுவருசத்துப் பேச்சையும் பேசித்தள்ளினாள். ராத்திரி கருப்பசாமி தூங்கின பிறகுதான் காளியம்மாளின் பக்கமாக நகர முடிந்தது. முதல் ரெண்டு மூணுநாள் ராத்திரி அவன் தூங்கினபிறகு விடிய விடிய ரெண்டு பேரும் கண்டதைக் கடியதைப் பேசிக்கொண்டு கிடந்தார்கள்.

நாலாவது நாள் ராத்திரி காளியம்மா ரொம்ப மெதுவாக கருப்பசாமியின் அய்யாவிடம் கேட்டாள். ‘‘அதல்லாஞ்சரி.... துட்டு எம்புட்டுக் கொண்டாந்-திருக்கீரு’’ உடனே அவன் பாயை விட்டு எழுந்து தன் டிரங்குப் பெட்டியை இறக்கி சிம்னிவிளக்கை அவளைத் தூக்கிப்பிடிக்கச்சொல்லி, பெட்டியைக் குடைந்து எடுத்து ‘‘இந்தா’’ என்று முப்பத்தேழு ரூபா பதினைஞ்சு பைசாவை அவளிடம் கொடுத்தான்.

மறுநாள் காலையிலிருந்து கருப்பசாமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்த ஆத்தாளுக்கு என்ன கேடு வந்துருச்சு என்றும் புரியவில்லை. முக்கைச் சிந்திக் கொண்டும் அழுது கண்ணீர் உகுத்துக்கொண்டும் மூலையில் உட்கார்ந்திருந்தாள். கஞ்சிகூடக் காய்ச்சவில்லை. இதெல்லாங்கூட கருப்பசாமிக்குப் புதுசு இல்லை. திடீர் திடீர் என்று இப்படி ஆத்தா ரெண்டு நாளைக்கு அழுவதும் கஞ்சி காச்சாமல் போட்டு-விடுவதும் வழக்கம்தான். அப்பவெல்லாம் தன் அப்பத்தா வீட்டில் கஞ்சி குடித்துவிட்டு பள்ளிக்கொடம் போய் விடுவான். ஆனால் இப்ப இவ அழுது புலம்பி கஞ்சி காய்ச்சாமல் போட்டதோடு நிக்காமல், தன் பிரியமான அய்யாவை வேற கண்ணிலே காங்க விடாம வைது கொண்டிருந்தாள். அதுதான் கருப்பசாமிக்குத் தாங்க முடியவில்லை. எப்பேர்க் கொண்ட மனுசன் அவனுடைய அய்யா. அவரைப் போயி இவவையிறாளே. அந்த நல்லம்மாப் பாட்டியும் மத்த பொம்பளைகளும் சொன்னது நிசமாத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது கருப்பசாமிக்கு. அவனுக்கு விவரந்தெரிய ஆரம்பிச்ச ரெண்டு மூணு வருசத்திலே அவனுடைய அய்யாவைப்பத்தி எத்தனையோ பேர் கதைகதையா அவன்கிட்டச் சொல்லியிருக்காக. ராத்திரி நேரங்களில் அவனைக் கூப்பிட்டுக் கிட்டத்தில் உட்கார வைத்துக் கொண்டு தங்களுக்குள் பேசுகிற மாதிரி அவனிடம் அய்யாவைப்பத்தி கதையாய்ச் சொல்வார்கள்.

அப்பிடி அவன் கேட்ட கதைகள் அவன் அய்யாவைப் பத்தி ரொம்ப பெருமையா நினைக்க வச்சது. அவன் கண்ணாரக் காணாத அய்யா கனாவிலே வந்து நிறைய வித்தையெல்லாம் செஞ்சு காட்டுவார். அய்யா என்றாலே விளையாட்டும் வித்தையும்தான் நினைப்பிலே வரும். அப்படித்தான் பொம்பிளைகள் அவனிடம் சொல்லி-யிருந்தார்கள்.

எந்தப் பெரிய கல் உரலையும் கூட அந்தாரமாகத் தலைக்கு மேலே தூக்கி எறிஞ்சிருவாராம். பந்தயம் வச்சா சமயத்திலே பெரிய ஆட்டுரலக்கூட தூக்கி எறிஞ்சிருவாராம். சோடா, கலர் பாட்டில் மூடிகளை பல்லாலே கடிச்சே ஒடைச்சுருவார். காடுகளுக்குப் போய் வேலை வெட்டி பாத்து திரும்பி கஞ்சிகளைக் காச்சி குடிச்சிப் போட்டு தெருச்சனங்கள் மடத்து வாசல்ல இல்லாட்டி காவல்காரத் தேவர்வீட்டு முகத்திலே கூடி உக்காந்திருக்கும் போது இசக்கி முத்து அதுதான் கருப்பசாமியோட அய்யா பல விளையாட்டுகளை செய்து காட்டுவான்.

நிறை குடத்தை கையாலே தொடாம பல்லுட்டக் கடிச்சே தூக்கிருவான். கை ரெண்டையும் கீழே ஊன்றி தலை கீழே நடப்பான். பிறகு யாராச்சும் ஒரு திருகையைத் தூக்கிக் கொண்டாந்து போடுவார்கள். அதையும் அடிப்பாகத்து முளைக் குச்சியைப் பல்லாலே கடிச்சே தூக்கி எறிவான். அப்படி வித்தைகளை செய்து காட்டும் போது அவனுடைய மச்சினன்மார் யாராச்சும் வாழைப்பழம், முறுக்கு, கருவாடு எல்லாத்தையும் ஒரு சணல் கயித்திலே மாலை கணக்கா கட்டி அவன் கழுத்திலே போடுவார்கள் கிண்டலாக எதையாச்சும் சொல்லியபடி.

ஆனால் சும்மா யாராச்சும் ஏப்பா இசக்கிமுத்து இந்த உரலைத் தூக்கிரு பாப்பம் என்று சொன்னால் சவால் விட்டாலும் கூட அவன் அசைய மாட்டான். அவனுக்கா தோணனும். அப்பத்தான் இதெல்லாம் செஞ்சு காமிப்பான். கடைக்காரத் தேவரை மாதிரி ஒரு சில பேருக்குத்தான் எப்படி அவனைக் கிளப்பி விடுகிறது. என்பது தெரியும்.

பகல் நேரங்களிலே வெயிலுக்கு ஆத்தாம, மடத்தில் படுத்து கிடப்பாக. இசக்கிமுத்தும் படுத்திருப்பான். அந்நேரம் வாசல்லே நெல் மூட்டைகள் கிடக்கும். அதுகளை ரைஸ்மில்லுக்கு கொண்டுபோக வண்டியும் நிக்கும். மூட்டைகளை வண்டியில் ஏத்த ஆள் தேடிக் கொண்டிருப்பார்கள். மடத்துள்ளேயிருந்து கடைக்காரத் தேவரை மாதிரி யாராச்சும் இந்நேரம் பைய பேச்சைக் கிளப்புவார்கள். ‘‘ம்ம்.... அந்தக் காலத்துலே நாங்க எளவட்டங்களா இருக்கும்போது எத்தனை அம்பாரமா மூடைகள் கிடந்தாலும் ஒத்தையிலே தூக்கித் தூக்கி வண்டியிலே எறிஞ்சிருவோம். இந்தக் காலத்துப் பயலுக்கு நாலு மரக்காநெல்லைத் தூக்கணுமின்னாக் கூட நாலாள் வேண்டியிருக்கு.’’

இவர்கள் பேசறதையெல்லாம் கவனியாதவன் மாதிரி வேற எங்கிட்டோ பார்த்தபடி படுத்துக் கிடப்பான் இசக்கிமுத்து. ஆனால் அதே பாணியில் அவர்களின் பேச்சு போய்க்கொண்டே இருக்கும். திடீரென்று எழுந்து நின்று தார்ப்பாச்சி கட்டிக்கொண்டு வெளியே பாய்ந்து விடுவான் இசக்கிமுத்து. அத்தனை மூட்டைகளையும் முக்கித் திணறி ஒத்தையிலேயே வண்டியில் ஏற்றிவிட்டு வேட்டியை உதறிக்கட்டியபடி ``ம்ஹ்ம்.... இதெல்லாம் ஒரு வேலையாக்கும்’’ என்கிற மாதிரி ஒரு பார்வையுடன் போய் பழையபடி படுத்து விடுவான்.

அவனைக் கிளப்பிவிட்ட கிழடுகள் தங்களுக்குள் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு `ஆனாலும் நம்ம இசக்கி முத்து கணக்கா வேலை பாக்க யாராலும் முடியாதப்பா...’ என்று அவனைத் தூக்கி வச்சுப்பேச ஆரம்பித்து விடுவார்கள். அதையும் காது கேளாதவன் மாதிரி கண்டு கொள்ளாமலிருந்து விடுவான்.

இப்பிடி அவனைக் கிளப்பிவிட்டே ஊரில் கலியாணம் சடங்கு, இழவு வீடுகளில் எல்லா வேலைகளும் வாங்கி விடுவார்கள். ஊடே ஊடே `ஏயப்பா எசக்கிமுத்தைப் போல உண்டுமா’ என்று சொல்லி விடுவார்கள் அவனுக்கு அது போதும்.

இதனால் அவனுக்கும் அவனோட அய்யாவுக்கும் நாளும் தகராறுதான். அன்னாடம் பாடுபட்டுக் கஞ்சி குடிக்கிற குடும்பத்திலே ஆம்பிளைப்பிள்ளை இப்பிடி அத்துவிட்ட கழுதை கணக்கா அலைஞ்சா யாருக்குத்தான் கோவம் வராது. அவன் அய்யா சொல்ற வேலை எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. அதுவுஞ்சரிதான். சும்மா பிடிச்சிக்கிட்டு `கிணத்து வெட்டுக்குப்போ’ தொழி வெட்டப்போ’ `உழவுக்குப் போன்னு’ உசுரை வாங்கினா அவனுக்கு எப்பிடி பிடிக்கும். தினம் சண்டைதான் மிஞ்சும். அவனுடைய அய்யாவுக்கு என்ன அவன் வேலை செய்யாட்டாக்கூட ஒண்ணுமில்லை. அடக்க ஒடுக்கமா நாலு பேரைப் போல நம்ம பய இல்லையேன்னு தான் வேதனைப்பட்டார். நாடகத்து ராஜபோல அவன் நடக்கிற நடையே அவருக்கு வல்லுசாகப் பிடிக்காது. வீட்டு வாசப்படியை மிதிச்சு ஒரு நாளும் அவன் வீட்டுக்குள் போனதுமில்லை, வந்ததுமில்லை. ஒரே தாவுதான், உள்ளிருந்து வெளியே, கடைசியில் சண்டை நின்று ஒரு சமாதானமான முடிவு வந்தது.

பழைய சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கிக் கொடுத்து கையிலும் பத்து ரூபாயைக் குடுத்து அனுப்பினார் அவன் அய்யா. அவன் தூத்துக்குடி போய் அதற்கு மீனோ கருவாடோ வாங்கி சைக்கிள் பின்னால் ஒரு கூடையில் கட்டி கிராமம் கிராமமாகப் போய் விற்று வந்தான். கொஞ்சம் நிம்மதி அடைந்தார். அவனுடைய அய்யா. ஆனால் அதுவும் ரொம்ப நாளைக்கு நிலைக்கவில்லை.

இவன் போகிற ஊர்களில் கருவாடு வித்தானோ இல்லையோ முதல் காரியமாக ஊரில் இள வட்டக்கல் எங்கே கிடக்குதுன்னு தேடிப்பாத்து அதிலே ஏறி உக்காருவான். உடனே அங்கன ரெண்டு பெரியாட்கள் கூடி விடுவார்கள்.

`யோவ் சண்டியரு...எதுலே உக்காந்திருக்கமின்னு தெரிஞ்சுதாம் உக்காந்திருக்கீரா’

``தெரியாம என்ன எல்லாந் தெரிஞ்சுதாம் உக்காந்திருக்காக’’ ``எனவட்டக்கல்லை மிதிச்சா என்னு செய்யனுமின்னு தெரியுமில்லே.’’

``என்னய்யா பெரிய பூடகம் போடுறிக’’_என்றபடி கல்லை விட்டு எழுந்து சடாரென அந்த இளவட்டக் கல்லைத் தலைக்கு மேலே அத்தாசமாகத் தூக்கி எறிந்து விட்டு, ``இம்புட்டுத்தானய்யா’’ என்பான்.

எல்லாரும் அசந்து போவார்கள். ஆளெம்புட்டுக்-காணு நரம்பு கணக்கா இருந்துக்கிட்டு தூக்கிப்-புட்டானே, என்பார்கள். பிறகு பிரியத்துடன் அவனிடம் சிலபேர் கருவாடு வாங்குவார்கள். கேட்ட விலைக்கு கொடுத்து விடுவான். துட்டு இல்லையென்றாலும் பார்க்க பாவமாயிருந்தால் `அதுக்கென்ன சும்மா கொண்டு போங்க’ என்று கொடுத்துவிடுவான். இப்படி சுத்துப்பட்டி பூராவிலும் அவன் பேர் பரவியது.

பழையபடி வீட்டில் நித்தமும் சண்டை நடந்தது. சரி, இந்த வைத்தியமெல்லாம், சரிப்பட்டு வராது என்று அவனுடைய அய்யா நாலு பெரியாட்களிடம் கலந்து பேசி ``காட்டிலிருந்து காளியம்மாளைக் கொண்டு வந்து அவனுக்குக் கட்டி வைத்து அவளிடம் `நீதான் பயலை வசத்துக்குக் கொண்டு வரணும்’’ என்று சொல்லி தனியாக ஒரு வீட்டையும் பாத்துக் கொடுத்து ``இனி ஒங்கு பாடு’’ என்று கையைக் கழுவி விட்டார். அவளும் ஒரு வருசத்துக்கும் மேலே ஒண்ணும் சொல்லாம அவன் போக்குப்படியே தான் விட்டுவைத்தாள். கருப்பசாமி பிறந்தான்.

பிறகுதான் சண்டாளி காளியம்மா இசக்கிமுத்தை ஊரை விட்டே விரட்டிவிட்டாள் என்று நல்லம்மாப்-பாட்டி கருப்பசாமியிடம் சொல்லியிருந்தாள். இப்பிடி ஏழு வருசங்கழிச்சு அய்யா வந்த நாலாம் நாளே இப்பிடிப் போட்டு வையிராளே ஆத்தா என்று கருப்பசாமிக்கு அழுகை அழுகையாகவும் கோவங் கோவமாகவும் வந்தது. பொம்பிளைகள் எல்லாருஞ் சொன்னது சரியாத்தான் இருக்கும்போல, ஆனா எதுக்காக இப்பிடி வச்சு தள்ளுறா என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

அவனுக்கு மட்டுமில்லை, அவனுடைய அய்யா இசக்கி முத்துக்கும் புரியவில்லை. இவ எதுக்காக இப்பிடிப் போட்டு நம்ம வையிறா! என்ன குத்தம் செஞ்சோம். அவளோட வெறுத்த மூஞ்சியைப் பாக்கவும் வசவுகள கேக்கவும் கலியாணமான முதல் வருசத்திலேதான் இப்பவும் இருக்க மாதிரி இருந்தது. முந்தியும் இப்பிடித்தான் வைதாள்.

`ஆம்பிளைன்னா கஷ்டப்பட்டு நாலுகாசு சம்பாரிக்கத் துப்பிருக்கணும். இப்பிடி மேல் வலிக்காம அலைஞ்சா வீடு எப்படி நடக்கும்.’

தினசரி வசவுதான். அவளுடைய கடுகடுத்த வெறுப்பான முகத்தைப் பார்க்கச் சக்தியில்லாமல்தான் ஊரைவிட்டே ஓடிப்போனான். ஓடிப்போனாலும் அவள் ஆசைப்பட்டபடி இந்த ஏழுவருசமும் ராவாப் பகலாய் மேல்வலிக்க கஷ்டப்பட்டுத்தான் உழைத்தான். மதுரை, திண்டுக்கல், சேலம், கரூர் என்று பல ஊர்களில் ஓட்டல்களில் மாவரைத்தான். தண்ணீர் சுமந்தான், மூடை சுமந்தான், மாவரைத்தும் கிணற்றில் தண்ணீர் இறைத்தும் கையெல்லாம் காய்ச்சுப்போயிருந்தது. அதைக்கூட அவளிடம் காட்டினான்.

``இங்கரு நீ சொன்னபடி கஷ்டப்பட்டுத்தானே இத்தனை வருசம் வேலைபார்த்தேன். பிறகும் எதுக்கு வையிறே’’ என்று பரிதாபமாகக் கேட்டான். `பேசாதே’ என்று அவன்மேல் `வள்’ என்று விழுந்தாள். உடனே எதை நினைத்தோ ஏங்கி ஏங்கி அழவும் ஆரம்பித்தாள்.

அவள் முன்னைப்போல அவனை வைய மட்டும் செய்தால் அவன் பழையபடி ஓடிவிடலாம். இப்போது பாவமாக இருந்தது. அழவேறு செய்கிறாளே, ஆனா அழுகையையும் மீறி அவன் மேல் வெறுப்பைக் கக்கினாள். வாயைத் தொறக்கவே விட மாட்டேங்காளே. இந்த ஏழு வருசமும் பல ஊர்களில்தான் கஷ்டப்பட்டதும் மஞ்சக்காமாலையும் டைபாயிட் காய்ச்சலும் வந்து அனாதையாய் அவதிப்பட்டதும்கூட அவனுக்குத் துன்பமாய்யில்லை. இப்போது என்னதான் செய்வது என்று குழம்பினான்.

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து அவளிடமும் சொன்னான். ``இப்படியும் நீ என்ன சொல்றாயோ அது கணக்காவே செய்யிறேன். பொழுதனைக்கும் என்னய வையாதே காளி. இனுமேயும் நீ வஞ்சையின்னா கிணத்துலே விழுந்து செத்தே போவேன்’’

நிசத்துக்கு அவன் அது ஒன்று தான் வழி என்று நினைத்தான். இந்த ஏழு வருஷமும் ஒவ்வொரு முறை அவன் ஊருக்குத் திரும்ப நினைத்த போதெல்லாம் அவளுடைய கோபமான கடுத்த முகமும் சிடுசிடுத்த பேச்சும்தான் நினைவில் வந்து கிளம்பவிடாமல் தடுத்தது. இப்பவும் அதே தொடர்ந்தால் கிணத்துலே விழுவதை தவிர வேறு வழியே கிடையாது.

அவன் இதைச் சொன்ன பிறகும் ஒரு நாள் பூரா அவ அழுதுகொண்டுதான் இருந்தாள். அவன் வீட்டுக்குள் வர முடியாதவனாக ªளியேவே உட்கார்ந்து எந்தக் கிணற்றில் விழுகலாம் என யோசித்து, ஊரிலேயே ஆழமான நம்மையாநாய்க்கர் தோட்டத்துக் கிணற்றிலே தான் விழுகணும் என்றும் தீர்மானித்துக் கொண்டிருந்தான். அய்யாவின் நிலையை காணச் சகியாத கருப்பசாமி அப்பத்தா வீட்டிலே அழுதுக்கிட்டிருந்தான்.

மறுநாள் சாயந்திரம திடீரென்று அவள் அழுகையை நிப்பாட்டினாள். ஒரு முடிவுக்கு வந்த இசக்கிமுத்தைக் கிட்டத்தில் வரச்சொன்னாள். சின்னபிள்ளைகளிடம் கொஞ்சலாக பேசுகிற மாதிரி அவனுடைய முகத்தை அன்போடு கைகளால் பிடித்துக் கொண்டு `நாஞ்சொல்ற படியெல்லாம கேப்பீரா’ என்று கேட்டாள்.

இவ்வளவு கனிவாக அவள் கேட்டதும் இசக்கிமுத்துக்கு `மூஸ்மூசென்று’ இறைத்துக்கொண்டு அழுகையே வந்துவிட்டது. ``நீ என்ன சொன்னாலும் கேப்பன்,’’ என்று உடைந்த குரலில் உறுதியாகச் சொல்ல அவள் தலையில் அடித்து சத்தியம் பண்ணினான்.

கருப்பசாமிக்கு Êஏகக் கொண்டாட்டமாப்போச்சு. அவன் அய்யாவும் ஆத்தாவும் ராசியாப்போனது மட்டுமில்லை. அவக வீட்டிலேயே இட்லிக்கடையும் ஆரம்பிச்சுட்டாக. முதல்லே இட்லியும் காப்பியும் மட்டும் போட்டாக. பிறகு வடையும் மொச்சையும் சேந்துக்கிருச்சி. வடைகளையும் மொச்சையையும் ஒரு கடகப் பொட்டியிலே வச்சு தூக்கிக் கிட்டு காளியம்மா நஞ்சைக்காடு புஞ்சைக்காடெல்லாம் அலைந்தாள். காடுகரையிலே வேலை செய்ற சனங்களுக்கு துட்டுக்கும் பருத்திக்கும் தானியத்துக்குமாக தினசரி வித்துட்டு வந்தாள். தயார் பண்ற வேலையும் வீட்டிலேயே வாரத்தை கவனிக்கிற வேலையும் இசக்கி முத்துக்கு. படிச்சுக்கிழிச்சது போதுமின்னு கருப்பசாமியை கைவேலைக்கு கடையிலேயே இருத்திக்கிட்டாக. அவனுக்கு Êஏகக்கொண்டாட்டம். பள்ளிக்கொடம் போகாமல் அய்யா வடை சுடுறதைப் பார்த்துக்கிட்டிருக்கதுலே அவனுக்கு ரொம்பச் சந்தோஷம், அவக அய்யா எல்லாரையும் போல வட்டமாக வடை சுட மாட்டான். சதுரமாகவும் உருளையாகவும் நீளமாகவும் ஏரோப்பிளேன் மாதிரியும் பல சைஸ்களில் மாவை உருட்டிப் போட்டு விடுவான். பார்க்கப் பாக்க வேடிக்கையா இருக்கும்.

இந்த வடைகளை பார்த்து காடுகரையெல்லாம் சனங்கள் சிரிச்சு உருண்டார்கள். விக்கப் போற காளியம்மாக்கு மானக்கேடாய் இருந்தது. ஒருநாள் வந்து விரட்டு விரட்டுன்னு அவனை விரட்டினாள். `சரி சரி இனிமே இப்பிடிச் செய்ய மாட்டேன்னு’ சொல்லி பிறகு ஒழுங்கா வட்டமா வடை சுட்டான்.

அவன் காப்பி ஆத்துறதே ஒரு தினுசா இருக்கும். இந்தக் கையிலிருந்து உயரே தூக்கி எறிந்து மறு கையிலிருக்கும் `கப்பில் ஒத்தப் பொட்டு கூடச் சிந்தாமல் பிடித்து விடுவான். அதை வேடிக்கை பாக்கதுக்குன்னே சிறுசும் பெருசுமாய் ஒரு கூட்டம் தினசரி வந்தது. பிறகு அதுக்காக ஒருநாள் அவளைப் போட்டு விரட்டினா காளியம்மா. `சரி சரி இனிமே செய்யமாட்டேன்னு’ சொல்லி பிறகு ஒழுங்கா ஆத்தினான்.

அதேமாதிரி துட்டு இல்லாம வந்து நிக்கிற கஷ்டப்பட்டதுகளுக்கு இட்டிலி வடைகளை அவன் சும்மா தூக்கிக் கொடுக்கிறதை கண்டுபிடிச்சு அதுக்காக ஒரு நாள் வசவு உரிச்சுட்டாள் காளியம்மா. சரி சரி இனிமே இப்படி செய்யலேன்னு சத்தியம் பண்ணினான். ஆத்தா வந்து விரட்டுறதும் அய்யா சரிசரின்னு மண்டையை ஆட்டுறதும் கருப்பசாமிக்கு விளையாட்டாயிருந்தாலும் பாதகத்தி பாடாப்படுத்-துறாளேன்னு நல்லம்மாப்பாட்டி சொல்ற மாதிரி தானும் நினைச்சுக்கிருவான்.

காளியம்மா சுடு சொல் ஏதும் சொல்லிறக்கூடாதேன்னு பயந்து பயந்து இசக்கிமுத்து மங்கு மங்குன்னு ராவாப் பகலா வேலை பார்த்தாள். யேவாரமும் மோசமில்லாம நடந்தது. அவளும் அதிகமாக ஒண்ணும் அவனை வையவில்லை அதுக்குப்பிறகு அவுகளுக்கு ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகளும் ஒரு பையனும் பிறந்தது. அதனால் இசக்கிமுத்துக்கு இடுப்பொடிய வேலை இருந்தது. வேற எதப்பத்தியும் நினைக்க நேரமேயில்லை.

`தன் சேட்டைகளையும் கிறுக்குத்தனங்களையும் விட்டு இத்தனை வருசத்துக்குப் பிறகாச்சும் பய ஒரு வசத்துக்கு வந்தானே’ என்று இசக்கிமுத்துவின் அய்யாவும், தான் பட்ட துயரமெல்லாம் போய் தான் ஆசைப்பட்டபடிக்கே நாலுபேரைப் போல தன் புருசனும் ஏதோ சம்பாத்தியம் பண்ணுகிறானே என்று காளியம்மாவும் ஆசுவாசப்பட்டுக் கொண்டார்கள்.

ஆனாலும் திடீர் திடீரென்று, சமயங்களில் கடைக்கு சாப்பிட வருகிறவர்களிடம் ``தாங்கள் என்ன அருந்துகிறீர்கள்? தாக சாந்திக்கு காப்பி தரட்டுமா’’ என்று அவன் கூத்துக்காரர்களைப்போல பேசுவதையும் ஆளில்லாத சமயங்களில் ஒரு வடையைத் தூக்கிப் போட்டு கருப்பசாமியுடன் பந்து விளையாட்டு விளையாடுவதையும் போல சில சின்னச்சின்ன விஷயங்களை மட்டும் சாகிறவரைக்கும் காளியம்மாவால் திருத்தவே முடியவில்லை.

நன்றி: வெயிலோடு போய்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்