Oct 16, 2010

நாவல் பழ இளவரசியின் கதை-பிரபஞ்சன்

அவர்கள் காட்டுக்குள் பிரவேசித்துப் பல யுகங்கள் ஆனாற்போல பெரியவன் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேர். ஒருவன், பெரிய ஆகிருதியும், படர்ந்த பாதங் களையும் கொண்டிருந்தான். எதிர்ப் படும் மரங்களைத் தோள்களால் தள்ளிவிடக்கூடும் எனும்படி முன்னே நடந்து சென்றான். பெரியவனின் மார்புக்கு மட்டில் வளர்ந்தவனாக சின்னவன் இருந்தான். பெரியவன் இழுத்துச் செல்லும் குதிரை; பின்னால், சக்கரங்களில் உருளும் சிறு தேர் போலச் சின்னவன் இருந்தான்....

சின்னவன், பெரியவனின் முதுகைப் பார்த்தபடி நடந்தான். விசாலமான புல் முளை01த்த
மைதானம் போல அது இருக்கவே, முன்னால் இருந் ததை அவன் பார்க்கக்கூடாமல், பக்கவாட்டில் மட்டும் பார்த்துக் கொண்டு சென்றான். சூரியன் உச்சிக்கு வந்தபோது அவர்கள்  காட்டுக்குள் பிரவேசம் ஆனார்கள். என்றாலும், இருள், பச்சை இரு ளாய்ப் பக்கவாட்டு
மரங்களிலும், கரிய இருளாய் நேராகவும் இருந்தது. விசித்திரமாக, முயல் தலை போல் இரு கைகளிலும் நீண்டு, முகம்போல கீழ் நோக்கிப் படுத்த இலைகளை ஆச்சரியமாகப் பார்த்தபடி நடந் தான் சின்னவன்.

படி வைத்த இருட்டுப் பெட்டிக் குள் இறங்குபவனாய்ப் பெரியவன், ஒவ்வொரு அடியாக  எடுத்து வைத்தான்.

`சாயங்காலத்துக்குள்ள ஊரைப் பார்க்க போயிடலாமாண்ணே' என்று கேட்ட சின்னவன், குரலைக் கேட்காதவன் போல பெரியவன் சொன்னான்.

இப்பொழுதே கறுப்பைக் கரைத்துக் கொட்டி மெழுகினாற்போலத் தோன்றும் இந்தக் காடு,
நூற்றைம் பது இருநூறு வருஷத்துக்கு முன்னாலே என்னவாக இருக்கும் பார். பேய்கள் புகாத
இங்கதான் அந்த மனுஷன் புகுந்தான். விரட்டிக் கொண்டு, காட்டு வாசலுக்கு வந்த
நாய்கள், சரேலென்று திகைத்து நின்றுவிட்டன என்றால் பார்த்துக் கொள். நாய்கள்,
துப்பாக்கிகளில் மருந்து கெட்டித்து வச்சு இருந்தன! சுட்டு விரல் முனையில் அந்த மனு ஷனின்
உயிர், இரும்புக் கொக்கியில் மாட்டிய உரித்த கோழியெனத் தொங்கியது. ரத்தம்
சொட்ட அவன் காட்டின் இருதயத்துக்குள் மிதித்து முன்னேறினான்.

நாய்களில் இரண்டு வகை. ஒன்று, உள்நாட்டு நாய்கள். மற்றொன்று வெளிநாட்டு
நாய்கள். காட்டின் வரம்பைக் கிழித்துக்கொண்டு உள்ளே புக வெளிநாய்கள் தயங்கின.
ஆனால், உள்நாட்டு நாய்களோ, மிகுந்த மோப்ப சக்தி கூடி, இடங் களைப் பற்றிய
சங்கேதங்களை அறிந்து இருந்தன. நிலங்களை முகர்ந்து, அவைகளோடு பேசும் சக்தி உடையவையாக
இருந்தன. நிலம், ரகசியம் அற்று, காயப் போட்ட, வேஷ்டியாக வெறுமனே, வௌ¢ளையாக
விரிந்து கிடக்கும் இயல்பு உடையதுதானே? நாய்கள், மூக்கைத் தரைமீது வைத்தபடி உள்ளே
புகுந்தன.

அந்தக் காலத்தில், இந்தக் காடு களுக்குள் புலிகள் உயிர் வாழ்ந்து இருந்தன. அவன்
மாதிரி மனிதர் களைப் புலிகளுக்குப் பிடித்திருந்தன. ஆகவே, அதுகள், தங்கள்
அரசியின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டு, கூடிவந்து, மனுஷனுடன் ஒரு ஒப் பந்தம்
பண்ணிக்கொண்டன. தங்க ளால் மனுஷனுக்கு எந்த தீமையும் வராது. அவனாலும் தங்களுக்கு ஹதம்
வரக்கூடாது என்பது ஒப்பந் தம். நீங்கள் என் எதிரிகள் அல்லர். என் பகை வேறு என்று அவன்
சொன்னான். புலிகள் பச்சிலைகள் கொணர்ந்து, அவன் காயங்களை சொஸ்தம் பண்ணின.
அவனை மாற்றி மாற்றித் தம் முதுகில் சுமந்து கொண்டு காட்டைச் சுற்றிக் காட் டின.
ஆனால், என்ன பண்ண? நாய் களோ அவனை ஒரு நாள் அதி காலையில் உடைத்து ஊற்றிய
முட்டை மாதிரி வெளிச்சம் பரவி வருகையில், சுற்றி வளைத்து, கோரைப் பற்களால்
கிழித்துப் போட்டன.

அடப் பாவமே என்றான் சின்ன வன். யார் பாவம் என்று கேட்டான் பெரியவன். நகரம்
சாராமல் வாழும் பல பட்சிகளின் குரல்கள் அவர் களுக்குக் கேட்க வாய்த்தது. இதை
ஏதோ சத்தம் என்று எண்ணிவிடக் கூடாது என்றான் பெரியவன். இவைகள் பறவைகள். மற்ற
பறவை களுக்கும், ஏனைய மிருக ராசிகளுக் கும், ஊர்வனவற்றுக்கும் கொடுக்கும்
சமிக்ஞைகள் என்று அவன் சொன் னான். புதியவர்களை, அதிலும் குறிப்பாக மனிதர்களைக்
கண்டால் அவைகள் பதற்றம் அடைகின்றன என்றான் அவன். அவநம்பிக்கை. முன் காலத்தில்,
மனிதர்கள் வாழும் இடத்தண்மை, தாவரம், மிருகம் பட்சிகள் என்று என்னவெல்லாம்
உண்டோ அவைகள் எல்லாம் சாதாரணமாக வந்து, பேசி மகிழ்ந்து, நட்பு பாராட்டிவிட்டு
போயின. அப்படி வந்துபோய்க்கொண்டிருந்த பசுக்கள், குதிரைகள், கழுதைகள், குரங்குகள்
போன்றவற்றை ஏமாற்றி யும் வஞ்சித்தும் தமக்கு ஏவல் பண் ணுமாறு பண்ணிவிட்டான்
மனிதன். ஆனால், நரிகள், பாம்புகள், சிங்கம், புலிகள் முதலானதுகள், புத்திசாலி கள்
மற்றும் தந்திரசாலிகள் ஆகை யால், மனிதனை விட்டுத் தப்பித்து ஓடிவிட்டன. எனக்குத்
தெரிந்து, நாவல்பழ இளவரசி என்று ஒருத்தி இருந்தாள். பல காலங்களுக்கு முந் தின
சமாச்சாரம்.

அவள், ஆசைப்பட்டுக் கார்க் கோடன் என்ற பாம்பைக் கல் யாணம் பண்ணிக்கொண்டு,
ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தாள். இரவில் சம்போகமும், பகலில் குடித்தனமு மாக
அவர்கள் வாழ்ந்தார்கள். இது பொறுக்காமல், மருதன் என்கிற மனு ஷன் என்ன பண்ணினான்
தெரி யுமா? ஒருநாள், நாவல்பழ இளவரசி யின் அறைக்குள் மருதன் புகுந்து கொண்டான்.

அது என்ன நாவல்பழ இளவரசி? நாவல் பழத்துக்கும் அவளுக் கும் என்ன உறவு?
சின்னவனின் குரல் கேட்டுச் சிரித்தான். ஒரு காலத்தில் இந்த தேசம் முழுக்கவும், நாவல் மரமே
அதிகமாக இருந்தது. மதுரைக்குத் தெற்காலும், வட மது ரைக்கு வடக்காலும் எங்கு
பார்த்தா லும் நாவல் மரங்கள். அப்போ எல் லாம் மனுஷன், மரத்தில் ஆந்தை, வௌவால்,
குரங்கு, கரடிகளோடும் வாழ்ந்து இருந்தான். நாவல் பழங்கள் தின்று வாழ்ந்ததால், நாம்
நாவற்பழ நிறத்துக்கு ஆகிவிட்டோம். அது வேறு கதை. இளவரசியின் கண்கள் இரண்டிலும்,
கன்னங்கள் இரண்டி லும், முலைகள் இரண்டிலும், நாவல் பழங்கள், பழுத்து இருந்தன. அத
னால் அந்தப் பெயர்.

`சரி தான்.'

எங்கே விட்டேன்? ஆங். . . அந்த மருதன், இளவரசியின் சயன அறைக் குள்
புகுந்துகொண்டு, மறைந்து இருந்தான். ராத்திரி போஜனம் முடிந்து, வாசனைப் பாக்கு, கிராம்பு,
பத்திரி, ஏலம், கசகசா, கடுக்காய் இத்யாதிகளால் சேர்த்துக் கட்டிய மசாலாக்களால்
வெற்றிலைத் தாம் பூலம் போட்டுச் சிவந்துவிட்டது என்று உதட்டைப் பார்த்துத்
தெரிந்து கொண்டு, இளவரசியும் கார்க்கோட னும் சயன அறைக்குள் புகுந்து, பரஸ் பரம்
லாகிரியோடு எட்டெட்டுக் கரணங்களால் ஆன சையோக போகங்களில் ரச்மித்துக்கொண்டு
கிடக்கையில். . .

`அஃதென்ன எட்டெட்டுக் கர ணம்' என்று சின்னவன் விளங்காமல் வினவ, சிரித்து,
காலக்கிரமத்தில் எல்லாம் புரிய வரும் என்ற பெரிய வன் தொடர்ந்தான்.

இடிச் சத்தம் கேட்டுக் குகை களில் புகுந்து ஒளிவது மாதிரி, இருவ ரும், ஒருவருக்குள்
ஒருவர் பிணைந்து இருக்கையில், வாளை உருவிக் கொண்டு மருதன் கார்க்கோடனை
வெட்டினான். கார்க்கோடன் சாகும் முன்பு, மனிதன் மேல் விஷத்தைப் பாய்ச்சினான்.
இப்போதும்கூட, நாவல்பழ இளவரசி இந்தப் பக்கங் களில்தான் சுற்றித் திரிகிறாள் என்று
பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

நான் பார்த்தது இல்லை என்று பதில் சொன்னான் பெரியவன். ஆனால் அவள் குரலைக்
கேட்டிருக் கிறேன். மரங்களின் கிளைக்குப் பின் னால், இலைகளுக்குப் பின்பக்கத்
தில் அவள் இருந்துகொண்டு சப்த அலைகளை எழுப்பிப் பேசுவாள். வார்த்தைகள் ஒன்றோடு
ஒன்று முடிச்சு போட்டுகஞகொண்டு, வெயில் ஒளிச் சிதறலில் கொசுக்கூட் டம் போல்
பறப்பதை நாம் காண முடியும் . . .
அவர்கள், திடுமென எதிர்ப்பட்ட திறந்த வெளியைக் கடக்க நேர்ந்தது. காற்றில்
நீரின் மணம் கலந்து வந்தது. அழுகிய, சொதசொதத்த, புற் கோரைகள் வீச்சம்,
காற்றில் கரடு தட்டிய சிரங்காய் வீங்கி இருந்தது.

எப்போது நகரத்துக்கு வந்து திரும்பினாலும், இங்குதான் தங்கி, கொண்டு வந்த புளி,
எலுமிச்சைச் சோற்றை நாங்கள் சாப்பிடுவோம் என்று பெரியவன் தன் அனுபவத்தைச்
சொன்னான். சுற்றி விளிம்புகளில் இலைச் சருகுகள், கிளைக் குச்சிகள் மிதக்கும்
ஏரியில் துண்டை விரித்து மீன் பிடிப்போம். நீரில் போட்ட காக்காய்ப் பொன் தாளில்
பட்டுப் பளீரிட்டுச் சிலிர்க்கும். கிழிந்த காகித மீன்கள் படகின் வயிற்றுக்
குழியாய் உருக்கொண்ட துண்டுகள் வந்து விழும். சுள்ளியைக் கொளுத்தி, சின்னச்
சின்னப் பொட்டலங்களில் கொண்டு வந்த உப்பு மிளகாய்த் தூளைத் தூவி, சூடு ஆவி பறக்கத்
தின்போம். உதடுகளில் புகையும் ஆவி. மீன்களில் மூச்சுக் காற்று.

`அண்ணே. நூறு முறைக்கு மேலா, இங்க வந்திருப்பீங்க, போல?'

சிரிப்பைப் பதிலாகத் தந்தான் பெரியவன். தலை விரித்துக் கிடந்த பேய்
மரத்தின் கீழ்ப் போய் உட் கார்ந்தான் பெரியவன்.

`நீங்க மட்டும் வரலைன்னா, அந்த தேவடியாப் பையன் பணம் தந்திருக்க மாட்டான்.'
அனிச்சையாக மடியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான் சின்னவன். கத்தைப் பணம்,
தொப்புளுக்கும் கீழே மடிந்து மேடிட்டுக் கிடந்தது.

எத்தனை வாட்டி என்னை இழுத்தடித்தான்? பத்திரம் செல் லாது என்றான். அறுவடை முடியட்
டும் என்றான். தை பிறக்கட்டும் என்றான். பொண்ணு கல்யாணம் வச்சாச்சு என்றான்.
கடைசியில் அண்ணண் வந்து கிண்ணென்று நின்றதும்தான் பணம் தலைகாட்டி யது.

`அண்ணே, வச்ச நிலத்தை மீக்கணும்.'

பெரியவன், ஆம் என்பது போலத் தலை அசைத்தான். அவன் கண்முன் நிகழ்ச்சிகள்
விரிந்தன. குடும்பம் தலை நிமிர்கிறது. சின்ன வனுக்குக் கல்யாணம் ஆகிறது.

``அத்தை மவ வேற காத்திருக்கா.''

சின்னவன் விரலால் தரையில் எதையோ எழுதி அழித்தான். அரைத்த உளுந்து வாசனை
வீசும் அவள் மேல் படுத்துக் கிடக்கிறான் சின்னவன். நாவல்பழ இளவரசி மேல் சின்னவன்
படுத்துக் கிடந் தான். மூச்சை உள்ளிழுத்துப் பழங் கள் பருத்துப் பெரிசாயின.
    அவர்கள் இருட்டும் முன்பு, காட்டைக் கடந்தாக வேண்டும். சதுப்பு நிலம் போன்று தரை கால் உள்வாங்கியது. ஆபத்தான வெளி. சருகுகள், குப்பைகள் மூடி, மண் ணின் முகம் மறைந்து கிடந்தது. அங்கிருந்த மரத்தின் பருத்த கிளையை ஒடித்து எடுத்தான் பெரியவன். அந்தக் கொம்பால் தரையை ஊன்றித் தடம் பார்த்து முன்னே நடந்தான். பெரியவன் வைத்த கால டிக்கு மேல் தன் அடியை வைத்து ஜாக்கிரதையாக நடந்து சென்றான் சின்னவன். சதுப்பு நிலத்தைத் தாண்டிக் கட்டாந்தரையைக் கடக் கையில், சுகந்தமான முல்லை மணம் அவர்களைச் சுருட்டி மூடியது. பெரியவன், மார்பு கொண்ட மட் டும் மூச்சை இழுத்து உள்ளே ஸ்தம்பம் பண்ணியதைச் சின்னவன் பார்த்தான்.

அடுத்த ரெண்டு கல்லும் முல்லைக்காடுதான். கார்கோடன், அதன் சந்ததியர் படுத்துக்
கிடக்கும். ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கு மாய்க் காணும். என்னத்துக்கு ஓய்வு என்றால்
சண்டை போட்ட களைப்பு தான். பல காலங்களுக்கு முன்னால் கிருஷ்ணனும் அர்ஜுனனும்
அவர் கள் பந்துமித்திரர்களோடு கார் கோடன் வம்சத்தாரோடு சண் டைக்கு வந்தார்கள்.
காண்டவ வனம் உள்ளிட்ட பூமியின் பரவலில் சொந்தம் கொண்டாடுவது கிருஷ் ணன்,
அர்ஜுனரின் நோக்கமாக இருந்தது. கார்கோடன், மலையின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு
சொன்னான். இந்த மலைபோல் லட்சம் கோடி மலைகள் தேய்ந்து தேய்ந்து மண் ஆன கல்ப
கோடி வருஷங்களாக நாங்கள்தான் இங்கே குடி இருக்கிறோம். இது எங்கள் பூமி.
என்றாலும் யாரும் அவன் பேச்சைப் பொருட்படுத்துவதாக இல்லை. சண்டை பல ஊழிகள்
தொடர்ந்தது. இன்னும்தான். சண் டைக்குள்ளாகச் சற்றே ஓய்வு கொள் கிறான் கார்கோடன்.

அவர்கள் முல்லைக் காட்டைக் கடந்துகொண்டிருந்தார்கள். முல்லைச் செடிகள்
மரம்போல், அங்காந்து பார்க்க வைத்தன.

`இதேது. ஆச்சரியமாய்த் தோணுதே.'

ஆச்சர்யம் ஏதும் இல்லை. யோசிக்கையில் ஆச்சர்யம் என்று ஏதும் இல்லை. எதுவும்
உள்ளது தான். நாம்தான் பார்ப்பது இல்லை. அந்தக் காலத்தில், ஏன், இப்போதும்
தான் இந்த இடத்தில் கொள்ளைக் காரர்கள் பதுங்கிக் கிடப்பார்கள். ஆறலைக் கள்வர்
என்பது அவர்கள் பெயர். பாலைச்சுரத்து வாழ்பவர் கள். இந்தப் பக்கம் போகும்
பயணி களை மருட்டி இருப்பதைப் பிடுங்கு வார்கள். இப்படித்தான், ஒரு சமயம், கல்யாணப்
பெண்ணையும் அவள் சொந்த பந்தங்களுடன் இந்த வழி யாகக் கூட்டிப் போய்க்கொண்டிருந்
தோம். காவல்காரர்களில் நானும் ஒருவன். அந்தி சாயும்போதுதான் இந்த முல்லைக்
காட்டைக் கடந் தோம். இருட்டும், பயமும், சீக்கிரம் ஊருக்குப் போய்விட வேண்டும்
என்ற தவிப்பும் எல்லோருடைய பைகளிலும் பெட்டிகளிலும் நிரம்பி வழிந்தன. வழியில்,
விதவிதமான புதுசான சத்தங்களை நான் கேட் டேன். இவை காட்டின் சத்தம் இல்லை.
எனக்குத் தோன்றியது. இது சத்தம் அல்ல. சமிக்ஞை. மரங்களின் உச்சந்தலையைக்
கவனித்தேன். உச்சந்தலையில் கட்டின ரிப்பனைப் போல, மனித உடம்புகள் தெரிந்தன.
வேல்க் கம்பியை எறிந்து ஒருத்தனை வீழ்த்தினேன். திபுதிபு என்று திருடர் கள் எங்களைச்
சூழ்ந்துகொண்டார் கள். நான் கம்பைச் சுழற்றினேன்.

பெரியவன், தன் கையில் இருந்த கம்பைச் சுற்றத் தொடங்கினான். அவன் காவலாளி.
கல்யாணப் பெண்ணைக் காப்பாற்றும் கடமை சாலி. அவன் ஏந்திய கம்பு, முனை வளர்ந்து,
நீண்டு, நெளிந்தது. பாம் பின் பிளந்த நாக்கு நெளிந்து நெளிந்து, கம்பு
கீழிறங்கும் போதெல் லாம், ஒருவன் சுருண்டு வீழ்ந்தான். கார்கோடனின் நாக்கு. விஷம்
கொட்டிவைத்த சால். அவன் வைத்த கால்த் தடங்களில் நெருப்புக் கனல் தெறித்தது. பூமி
வாய்பிளந்து புகையை உமிழ்ந்தது. கம்பு, வானத் துக்கும் பூமிக்குமாக எம்பி எம்பித்
தாழ்ந்தது. பெரியவன் ஒரு நாழிகை தரையில் கால்பதியாதவனாக அந்த ரத்தில் வீடு
கட்டிச் சுற்றி வந்தான். அவன் வெற்று உடம்பில் தாரை தாரையாக வியர்வையும் ரத்தமும்
வழிந்தது. தரையில் விழும் சொட்டு களை கார்கோடன் வம்சத்தார் நக்கிக்
குடிப்பதைச் சின்னவன் பார்த்து நடுங்கினான்.

போதும் போதும் என்று கத்த வாய் திறந்தான். பேச்சுக் காற்றாய் வழிந்தது. அவன்
கண்களின் கருவிழி கள், மேல் அரைவட்ட விளிம்பில் மறைந்தன.
பெரியவன் ஏந்திய கம்பு, கிளை களாய் கிளைத்தன. மரத்தை ஏந்திய வனாய் அவன்
இருந்தான். பல வான். எட்டுத் திக்கிலும் மரம், கீழ் இறங்கியது. ஒவ்வொரு திசையிலும்
அது தரைக்கு வந்தபோது அலறல் கள் கேட்டன. யானைகள் பிளிறின. குதிரைகள் கனைத்து
விழுந்தன. வீரர்கள் ஊளையிட்டார்கள். எட் டாம் திசைக்கு மரம் இறங்கிய போது,
அது, சின்னவன் தலையில் இறங்கியது.

பெரியவன் ஓய்ந்தான். கம்பைத் தரையில் ஊன்றி நின்றான். நிதானப் பட வெகு
நேரம் ஆனது. தரையைப் பார்த்தான். ரத்தக் குழம்பில், சின்ன வன் மிதந்தான்.
பெரியவன், கம்பை எறிந்தான். நிதானமாகச் சின்னவன் பக்கத்தில் குத்துக் காலிட்டு
அமர்ந் தான். அவன் இடுப்புப் பக்கத்தில் தடவி, ரூபாய் நோட்டுகளை எடுத் தான்.
மடியில் சொருகிக் கொண் டான்.

காட்டைக் கடக்கத் தொடங்கினான்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on October 16, 2010 at 9:54 AM said...

நன்றி

செ.சரவணக்குமார் on October 16, 2010 at 11:10 AM said...

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

மதுரை சரவணன் on October 16, 2010 at 1:45 PM said...

thanks for sharing. super story .

போளூர் தயாநிதி on October 18, 2010 at 3:52 PM said...

nalla aakkam ezhuthalar meethu nalla mathuppullavan nan vanankukiren.
polurdhayanithi.blogspot.com

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்