Apr 4, 2010

ஒரு வாய்மொழிக் கதை-கி ராஜநாராயணன்

கி ராஜநாராயணன்

கதை சொல்லணுமாக்கும். சரி சொல்றேன்.

எங்க ஊர்லே எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா, 'நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்ந்த கதையைச் சொல்லவா 'ண்ணு கேக்கிறதுண்டு. நாம ரெண்டுலெ எதையாவது கேட்டு வைக்கணும். ஆனா அவங்க வாழ்ந்த கதையும் வராது; தாழ்ந்த கதையும் வராது. ஏதாவது ஒரு கதை வரும்.

kira பின்னெ என்னத்துக்கு இந்த கேள்விண்ணு நினைக்கலாம்.ஒரு வேளை கொஞ்சம் யோசிச்சுக்கிட அவகாசம் வேணும்ங்கிறதுக்காக இருக்கலாம். எல்லாம் ஒரு 'இது 'க்காகத்தான்.

திறுக்கைச் சுத்ன உடனே தண்ணி கொட்ற மாதிரி கேட்ட உடனே கதை சொல்றதுக்கு மன்னன் பல்ராம் நாயக்கர் தான்.

'யோவ் ஒரு கதை சொல்லும் 'ண்ணு கேட்க வேண்டியது தான். உடனே முகத்திலே ஒரு சந்தோஷம் - ஒரு களை - வந்துரும். எச்சியெக் கூட்டி விழுங்கி தொண்டையைச் சரி செஞ்சிக்கிட்டே அடப்புலே சொருகியிருக்கிற சேலம் பொடிப் பட்டையை உருவி ஒரு சிம்ட்டாப் பொடியை எடுத்து வச்சிக்கிட்டு, தொடங்குவாரு.

'ஆனைத் தலைத்தண்டி பெருங்காயம் போட்டு

கீரை கடையிற ராசா மகளுக்கும்,

அரிசி கழுவினதண்ணி ஆயிரம் ஏக்கர்

பாய்ற ராசா மகனுக்கும் கலியாணம் '

கதை தொடங்குறப்பவே எல்லார் மாதரியும் பொடியைப் போட்டுக்கிட மாட்டாரு. சரியான கட்டம் வரணும் கதையிலெ. அப்பிடி ஒரு இடைவெளி கொடுத்து, சர்ர்ர்ண்ணு பொடியை இழுத்து பெருவிரலும் நடு விரலும் ஒட்டுனயிடத்திலெ ஆள்க்காட்டி விரலாலெ சொடக்கு விழற மாதிரி ஒரு உதறு தட்டுத் தட்டிட்டு, பிதுக்கிய கண்ணீர் விழியாய் நம்மையெல்லாம் ஒரு கத்துகெத்தான பார்வையால் பார்ப்பார்; எவண்டா எம்மாதிரி கதை சொல்ல முடியும்ண்ணு கேக்கும் அந்தப் பார்வை.

ஓரெடுப்பு உழுதுட்டு வந்த சம்சாரிகெ மத்யான வேளையிலெ, அலுப்புத்தீரக் கொஞ்சம் கரை மரத்து நிழல்லெ துண்டை விரிச்சி தலை சாச்சிக் கிடக்கிறப்பொ பல்ராம் நாய்க்கரு வருவாரு.

அறையை மறைக்க வெறும் அறணாக் கயத்திலெ சொருகப்பட்ட கையகலக் கோமணத்துணி. அந்த அறணாக்கயித்துலெ இடது பக்கம் சேலம் பொடிப் பட்டையும், முள்வாங்கியும் வேட்டியை அவுத்து தலெயிலெ கட்டிய லேஞ்சி. அதிலே மிச்சமாகத் தொங்குற கங்குல் - முதுகுத் தண்டை மறைக்க விடப்பட்ட ஒரு முழத் தொங்கல் - லேஞ்சி கட்ணமானைக்கே அந்தத் தொங்கலை மேல் முதுகுக்கு விரிச்சி, மரத் தடியிலெ தலெய சாச்சி காலைத் தூக்கி மரத்து மேலே போட்டுக்கிடுவாரு ஒரு யோகாசனம் மாதிரி.

பேச்சுக்கு மத்தியிலெ அண்ணைக்கு பிள்ளையாரப்பன் தான் தொடங்கினான்.

'ஒருத்தன் கிட்டெ கைமாத்து வாங்காமெ பொழுதே ஓட்ட முடியலையே. ' வரதப்பன் சொன்னான்.

'அதெப்படிவே முடியும். ஆனாப்பட்ட சல்க்காரே அடுத்த நாட்டுக்காரன்ட்டெ கை நீட்றப்பொ நாம எம்மாத்ரம் ? '

'வாங்குறது பெரிசில்லப்பா; திரும்பக் கொடுக்க முடியலையே. '

'திரும்பக் கேக்காத ஆளாப் பாத்து வாங்கணும். '

'அப்பேர்க்கொத்த ஆளு எங்கெனெ இருக்கு, சொல்லு; அவங்கிட்ட போயி வாங்குவம். '

'இருப்பான்; எங்கெனயாவது இருப்பான்; நமக்குத் தட்டுப் படணும். '

'அப்படியும் ஒருத்தன் பூமியிலெ இருக்கவா செய்தான் ? '

'ஏய், அப்படி ஒருத்தனென்னப்பா, அதுக்கு மேலேயும் ஒருத்தன் இருந்திருக்காம்பா. '

குரல் வந்த திக்கு பல்ராம் நாயக்கர் தான் அருணாக்கயித்திலெ சொருகியிருந்த பொடிப்பட்டையை உருவி எடுத்துக்கொண்டே சொன்னார். 'இப்படித்தான் ஒங்க மாதிரி ரெண்டு பேரு ரோசனை செஞ்சாங்களாம்.. அப்பொ, அவுகளுக்கு ஒரு தகவல் கிடைச்சதாம். நம்ம நாட்டுக்குப் பக்கத்து நாட்லெ ஒருத்தர் வேண்டியமட்டுக்கும் கேக்கிறவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்தாராம். கடனை வாங்கினவுக திருப்பித் தர வேண்டாம். அவங்க வாரிசுக திருப்பித் தந்தா போதும். '

பிள்ளையாரப்பனும் வரதபபனும் சந்தோஷத்தால் சிரித்தார்கள்.

அது நல்ல விசயந்தான். அலப்பரை இல்லை. ஆனா, நம்ம வாரிசுகளெ எவன் சம்பாரிக்கிறது அவன் எப்பப் பணக்காரனாகி அவரோட பாக்கியெத் தீக்கிறது ?

'அட; எப்பச் சம்பாரிச்சு பணக்காரனாகிறானோ அபப்த் தீத்தாப் போதுங்கிறது தான் கண்டிஷன்ண்ணேன். '

'ஆங்; சரி, சரி சொல்லுங்க. '

'ஆச்சா; ஒடனே இவங்க ரெண்டு பேரும் கட்டுச் சோத்தைக் கட்டிக்கிட்டு அந்த நாட்டுக்குப் போனாங்க. '

'போனா; அங்கெ போயி விசாரிக்கறப்போ இன்னொரு தாக்கல் கெடச்சது. அங்கொருத்தன் சொன்னான். இதென்ன பெரிய காரியம்ண்ணூட்டு இவங்கிட்டெ கடன் வாங்க வந்துட்டாகெ. இந்த நாட்டுக்குப் பக்கத்து நாட்டிலெ ஒருத்தரு கடங்கொடுக்காரு. அவருக்கு கடன் வாங்கினவனும் கொடுக்க வேண்டாம். வாரீசுகளும் கொடுக்க வேண்டாம். அடுத்த ஜென்மம் எடுத்தா அப்பொ வந்து கொடுத்தாப் போதும். '

'அடடே.. இது ரொம்ப அருமையா இருக்கே! '

'சரி; நாம அங்கே போவோம். இவங்க கிட்டெ வாங்கிட்டு நாம கண்ணை மூடாட்டா நம்ம வாரீசுக நம்மை ஏசிக்கிட்டே இருக்கும் 'ண்ணூ சொல்லிட்டு அந்த நாட்டுக்குப் புறப்பட்டுப் போனாங்க '

காட்டு வழி. பேசிக்கிட்டே நடந்து போய்க் கிட்டு இருக்காங்க. அதிலெ ஒருத்தன் சொன்னான். 'அடுத்த ஜென்மத்திலெ நாம என்ன பிறப்புப் பிறக்கப் போறோமோ. மனுசனாப் பிறந்தாத் தானே, அவரு கடனை நாம அடைக்கணும் '

'அது தானே ' என்று ஆதரித்தான் மற்றவனும்.

(இந்தக்கதையின் தொடர்ச்சியை இன்னொரு விதமாய்ப் படிக்க வேண்டுமென்றால் இங்கே வரவும் - ஆசிரியர், திண்ணை)

இந்த மாதிரி இவங்க பேச்சைக் கேட்ட யாரோ, விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி ஒரு சத்தம் கேட்டுது. கெக் கெக் கெக் கெ..ஓ கெக் கெக் கெக் கெக் கெக்கெ...

இவங்க எல்லாப் பக்கமும் திரும்பிப் பாத்தாங்க. யாரையுமே காங்கலை. அந்தரத்திலெ இருந்து சிரிப்புச் சத்தம் மாத்திரம் கேட்டுப் பதறிப் போனாங்க. இவங்க பதறுனதையும் திகைக்கிறதெயும் கண்ட அந்த அசரீரி மேலும் சிரிச்சி உருண்டது.

இவங்களோட திகைப்பும் பதட்டமும் நீங்குறதுக்கு முன்னாலெயே அந்தக் குரல் இவங்களைப் பாத்து ' ஏ அப்பா கடங்காரங்களா; என்னை உங்களுக்குத் தெரியலையா ? இந்தா பாருங்க; நாந்தான் பேசுதேன். '

சோளக்காட்டு காவலுக்கு அங்கே போட்டிருந்த பரண் உச்சியிலெ ஒரு மாட்டுக் கொம்பு, பூண் பிடிச்ச மாதிரி ஒரு கம்பு நுனியிலெ நட்டமா சொருகி வச்சிருந்தது. அது தான் அப்படிச் சிரிச்சதும் பேசினதும்.

' போன ஜென்மத்திலெ நான், இப்பொ நீங்க கடன் வாங்கப் போரீகளே அவரு கிட்டத் தான் நானும் கடன் வாங்கியிருந்தேன். கடனை வாங்கி வாங்கி ரொம்பப் போடுஸா செலவழிச்சேன்.

'இந்த ஜென்மத்திலெ அவரு தொழுவிலேயே வந்து மாடாப் பிறப்பெடுத்தேன். கண்ணுக்குட்டியா இருந்தப்பொ என் தொண்டை நனஞ்சிருக்காது தாய்ப்பாலு .

காளையா வளந்த உடனே 'பசுச் சுகம் ' அறியமுன்னாடி என்னை உடையடிச்சி உழவுலெ கட்டிட்டாங்க. ஆயுசு பூராவும் குளம்புக தேய முன்னும் பின்னும் நடந்து நடந்து மூக்கணாங்கயிறு மூக்கை அறுத்து ரெத்தம் கசிய அவரு தோட்டத்துக் கமலை இழுத்து தண்ணீர் இரைச்சேன். குப்பை வண்டி இழுத்தேன்.

'ஆயுசு முடிஞ்சு செத்துப் போன பிறகும் அவுகளுக்கு என் தோலை உரிச்சுக் கொடுத்து கமலைக்குக் கூனைவாலாய் தன்ணி இரைக்க உதவுனேன். கூனைவாலாகிக் கிழிஞ்ச பிறகும் அவுக வீட்டு ஆள்களுக்கு காலுக்குச் செருப்பாகி உழைச்சேன். அப்பவும் என் பாடு தீரலை. இப்போ, அவரோட தோட்டத்துக்குக் காவல் காத்துக்கிட்டிருக்கேன்.. '

இப்படிச் சொல்லிட்டு மாட்டுக் கொம்புச் சிரிக்க ஆரம்பிச்சது. சிரிப்புச் சத்தம் கேட்டாலும் கவனிச்சுக் கேட்டா அது அழுகைச் சத்தம் போல இருந்தது.

ஒண்ணும் ஓடலை இவங்களுக்கு; அப்படியே மெய்மறந்து நிண்ணுட்டாங்க. '

அப்புறம் அவங்க கடன் வாங்கப் போனாங்களா; வந்த வழியைப் பாத்துத் திரும்பிட்டாங்களா; தெரியலை.

அந்த நேரத்திலெ, பல்ராம் நாயக்கரோட மகள் ஓடியாந்து 'அய்யா மாடு அவுத்துக்கிட்டது; முட்ட வருது ஓடியா 'ண்ணு பரபரப்பாக் கூப்பிட்டா. வேகமா எந்திரிச்ச நாயக்கரு, அவுந்த கோமணத்தெ அறணாக் கயித்லெ சொருகிக்கிட்டே அவசரமாய்ப் போயிட்டாரு.

(தீபம் - அக்டோபர் 1979) Thinnai 2000 January 3

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் on August 28, 2012 at 2:07 PM said...

ஐயா எழுத்துக்கு ஈடு இணை ஏது.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்