Apr 19, 2010

இன்னுமொரு புத்தகம் - ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்

இன்னுமொரு புத்தகம்

எனக்குத் தெரியாதா என்ன
என் புத்தகத்தை உனக்குப் ganakoothan
பிடிக்காதென்று?
புத்தகத்தின் அட்டைப் படத்தில்
இருக்கும் வேழத்தைத் 
துரத்திவிட ஆட்களை அனுப்பினாய்
அவர்கள் வேழத்தின் தந்தங்களைப்
பறித்துக்கொண்டு வேழத்தை உயிருடன்
விட்டுவிட்டார்கள். நிருபர்கள்
ரத்தம் கோரும் வேழத்தின் வாயைப்
படம்பிடித்துக் கொண்டுபோனார்கள்.
அட்டைப் படத்தில் ஓங்கி வளர்ந்த
மரத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த
பறவைகளைச் சுட்டுவிடும்படி நீதான்
வேடர்களை அனுப்பினாய்.
அவர்கள் குறிதவறிச் சுட்டார்கள். அவர்கள்
இறகுகளை உன்னிடம் காட்டிக்
கூலி பெற்றுக்கொண்டார்கள்
புத்தகத்தின் அட்சரங்களை ஓடும்படி செய்ய
அவற்றின்மேல் நீதான் டீசல் ஊற்றினாய்
எனது காயங்கள் ஆறிவருகின்றன.
எனது புத்தகத்தின் அட்டையில் இப்போது
கிம்புருஷன் ஒருவன் காட்சி அளிக்கிறான்

தூக்கத்தில் அழுகை

தூக்கத்தில் குழந்தை அழுகிறது.
தொலைக்காட்சியில் திரைப்படம்: எல்லோரும்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஜட்டி மட்டும் அணிந்த பெண்ணின் சடலத்தைக்
காட்டுகிறார்கள். ஓவென்று திரைப்படப்
பாத்திரங்கள் கதறுகின்றன.
தூக்கத்தில் வீட்டுக் குழந்தை அழுகிறது.
கனவுக்கான தேவதை காட்டுகிறாள்:
தொடக்கப் பள்ளி,
உயர்நிலைப் பள்ளி, கல்லூரி
மற்றும் அவற்றின் ஆசிரியர்களை.
படித்து மறக்கப்போகும் பாடங்கள் பற்றிய
வினாத்தாள்களை
போலித் தராசு தொங்கும் ரேஷன் கடைகளை
நாய்கள் துரத்தும் தெருக்களை.
தெருவை அடைத்துக் கனவில் உள்ள பசுக்களை.
டூ விலர் ரௌடிகளை?
ஆறு மணிக்குத் திறக்கப்போகும்
மதுக்கடையின் முன்பு காலை ஐந்துக்கே
காத்துக் கிடக்கும் முன்னிரவுக் குடிகாரர்களை.
நம்பர் இல்லாத தெருச்சாலையில்
எரியும் பேருந்துகளை?
ஊராட்சித் தேர்தல் சாவடிகளை?
பாம்குரோவில் பிறந்தநாள் கொண்டாடும்
பட்டிமன்றப் பேச்சாளர்களை?
தூக்கத்தில் குழந்தை அழுகிறது
யாருக்கும் தெரியவில்லை ஏனென்று
எனக்குத் தெரியும். நான் ஏன் சொல்கிறேன்.

***

நன்றி : காலச்சுவடு

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on April 19, 2010 at 9:33 AM said...

many thanks for sharing

இளமுருகன் on April 22, 2010 at 7:02 PM said...

//படித்து மறக்கப்போகும் பாடங்கள்//

//எனக்குத் தெரியும். நான் ஏன் சொல்கிறேன்//

ஞானக்கூத்தன் அருமை

இளமுருகன்
நைஜீரியா

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்