Jul 16, 2009

க.நா.சுப்ரமணியம்-சி. மோகன்

சி. மோகன், நன்றி : நடைவழிக் குறிப்புகள் .
அகரம் வெளியீடு.

   தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளமான பரப்பை வடிவமைத்த உழைப்பு க. நா. சுப்ரமணியத்தினுடையது. இவருடைய தார்மீக உந்துதலும் சலிimageக்காத செயல் வேகமும் தற்காலத் தமிழ் இலக்கியச் சூழலின் 20 ஆண்டுகளை (1945_65) நிர்மாணித்தன. நாவல், சிறுகதை, கவிதை ஆகிய சாதனங்களில் இவர் தம் படைப்புகளை உருவாக்கியிருக்கிற போதிலும் படைபெழுச்சிமிக்க சிறந்த படைப்பாளி என்று இவரைக் கருத முடியாது. எனினும் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட, தீவிர அக்கறையுடன் கூடிய இவருடைய எழுத்துப் பயணத்தில் தமிழ் இலக்கியச் சூழல் பெரிதும் வளம் பெற்றிருக்கிறது. நாவல் சாதனத்தில் இவருடைய பங்களிப்பு சிறந்தது மட்டுமல்லாமல் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், இவருடைய அருமை, படைப்பாளி என்ற எல்லையில் இல்லை. மாறாக, உலக இலக்கியத்தின் செழுமையைக் கணிசமான மொழி பெயர்ப்புகள் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்ததிலும், வாசகத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் சூழலில் ஒரு எழுச்சியைத் தோற்றுவிக்க படைப்புகள் பற்றியும் படைப்பாளிகள் பற்றியும் சதா அறிமுகப்படுத்துவதில் காட்டிய முனைப்பிலும் அக்கறையிலுமே மேலோங்கியிருக்கிறது.

க.நா.சு. 1912ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை அஞ்சல் துறை அதிகாரி. தாயைச் சிறு வயதிலேயே இழந்த இவர், தந்தையின் பராமரிப்பில் ஒரே மகனாக வளர்ந்தவர். இளம் வயதிலேயே ஆங்கில இலக்கிய வாசிப்பில் திளைத்தவர். 1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மறைந்த நாள் வரை முழு நேர எழுத்தாளராகவே செயல்பட்ட இவருடைய இலக்கிய வாழ்வு நான்கு தளங்களில் அமைந்திருக்கிறது.

1. படைப்பாக்கம்
2. விமர்சனம்; அறிமுகம்
3. மொழிபெயர்ப்பு
4. ஆங்கிலப் பத்திரிகைகளில் எண்ணற்ற கட்டுரைகள்.

படைப்பிலக்கியவாதியாக க.நா.சு.வின் பங்களிப்பு நாவல் தளத்தில் மட்டுமே குறிப்பிடத்தகுந்தது. 1946இல் வெளிவந்த `பொய்த் தேவு’ தமிழ் நாவலின் உயரிய மரபில் முதல் நாவலாகக் கருதப்படக்கூடிய அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்தது `அசுர கணம்’ நாவல். சோதனை முயற்சிகளாகவும், பல்வேறு வகையினவாகவும் அவர் எழுதிய பிற நாவல்கள்: சர்மாவின் உயில், பசி, ஏழு பேர், ஒரு நாள், வாழ்ந்தவர் கெட்டால், ஆட்கொல்லி, பெரிய மனிதன், அவரவர் பாடு, மாதவி, கோதை சிரித்தாள், பித்தப்பூ, தாமஸ் வந்தார், அவதூதர்.

தமிழ் நாவல் பரப்பில் நிலவிய வறட்சி, அச்சாதனத்தில் சில முன்னோடி முயற்சிகளை முன்வைக்க க.நா.சு.வின் படைப்பாளுமைக்கு உதவி இருக்கிறது. ஆனால் தமிழின் வளமான சிறுகதை மரபின் முன் க.நா.சு.வின் சிறுகதைகள் சாதாரணமாகி விடுகின்றன. `மயன்’ என்ற பெயரில் அவர் மேற்கொண்ட கவிதை முயற்சிகளும் பலவீனப்பட்டே இருக்கின்றன. கோட்பாட்டளவில் அலங்காரத்தையும் படிமத்தையும் உதறி, கவிதையை எளிமைப்படுத்த அவர் முயற்சித்த போதிலும் கவித்துவ உக்கிரத்துக்கான மொழியோ, வெளியோ அவருக்கு வசப்படவில்லை.

விமர்சனம் என்பதைக் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு அத்தியாவசியமான செயல்பாடாக அடையாளம் கண்டு அதில் தீவிரமாகச் செயல்பட்டவர் க.நா.சு. தமிழ்ப் படைப்புலகம் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., கு. அழகிரிசாமி போன்ற ஆளுமைகளால் பொலிவுற்றிருந்த படைப்பெழுச்சிமிக்க காலத்தில் வணிகப் பத்திரிகைகளின் ஆதிக்கத்தாலும் எழுச்சியாலும் இலக்கிய ரசனையும் வாசகத் தரமும் வீழ்ச்சி அடைவதைக் காணச் சகிக்காது விமர்சனத்தை மேற்கொண்டவர். அதனாலேயே ரசனை வழி தர நிர்ணய விமர்சனமாக அவருடைய விமர்சன முறை அமைந்தது என்று கருதலாம். வாசகனைத் திருப்திப்படுத்த படைப்பாளி இறங்கி வருவதான பாவனை மூலம் இலக்கியமும் பயனடைவதில்லை, வாசகனும் பயனடைவதில்லை. அதனாலேயே வாசகனின் வாசிப்புப் பயணத்தை வற்புறுத்தியவர் க.நா.சு.

``இலக்கியாசிரியனின் கடமை வாசகனை எட்டுவதில்லை. அதற்கு எதிர்மாறாக, வாசகனின் கடமைதான் ஆசிரியனை எட்டிப்பிடிப்பது என்பதை வற்புறுத்த இன்று இலக்கிய விமர்சனம் உபயோகப்பட வேண்டும். இலக்கியாசிரியன் வாசகர்களையோ, ஒரு லக்ஷிய வாசகனையோ எண்ணிக் கொண்டு எழுதுவதில்லை. வாசகன்தான் தன் இலக்கியத் தாகத்தில், `நமக்கேற்ற ஆசிரியன் இவன்’ என்று தேடிக் கொண்டு இடைவிடாமல் ஓட வேண்டும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலக்கிய விமர்சனம் வாசகர்களுக்கு அடித்துச் சொல்ல வேண்டும்’’ என்று `விமர்சனக் கலை’யில் குறிப்பிடுகிறார்.

விருப்பமில்லாமலேயே விமர்சனத்தை மேற்கொண்டதாகக் க.நா.சு. அவ்வப்போது கூறியிருக்கிறார். எனினும், ரசனை அடிப்படையிலான தர நிர்ணயத்தின் மூலம் தற்கால இலக்கியம் குறித்த விமர்சனப் போக்கை உருவாக்கிய முதல் விமர்சகர் இவர்தான். 1965 வரை தமிழ்ச் சூழலில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வந்தார். அதுவரை அவர் முன்வைத்த பட்டியல்களில் வெளிப்பட்ட அவருடைய கூரிய அவதானிப்பையும் துல்லியத்தையும், அவையே தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றின் வரி வடிவாக நிலை பெற்று விட்டிருப்பதிலிருந்து உணர முடியும்.

விமர்சனக் கலை, இலக்கிய விசாரம், படித்திருக்கிறீர்களா? (2 தொகுதிகள்) முதல் ஐந்து தமிழ் நாவல்கள், இலக்கிய வளர்ச்சி, நாவல் கலை, கலை நுட்பங்கள் என இவர் எழுதிய விமர்சன நூல்கள் அநேகம்.

க.நா.சு.வின் மற்றுமொரு உயரிய பங்களிப்பு ஐரோப்பிய மொழிகளின் சிறந்த படைப்புகளை உத்வேகத்துடன் மொழி பெயர்த்தது. சிறந்த இலக்கியப் படைப்புனுடனான என் முதல் உறவு `நிலவளம்’ நாவலுடன் கொண்ட அறிமுகத்திலிருந்துதான் தொடங்குகிறது. மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாசிக்கும் தீராத வேட்கையை அது எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. அன்று நூலக அடுக்குகளில் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் கணிசமாக இருந்தன. வாசிப்பில் தன்னை ஆகர்சித்த சிறந்த நாவல்களையும் சிறுகதைகளையும் தாமாகவே முன்வந்து, எந்த ஒரு நிறுவனத்தின் வேண்டுகோளுக்காகவும் அல்லாமல் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். நாம் போற்றிப் பெருமிதம் கொள்ள வேண்டிய மகத்தான உழைப்பு. எத்தகையதோர் ஈடுபாடும் அக்கறையும் உத்வேகமும் இருந்திருந்தால் இத்தகைய பணிகளை நிறைவேற்றியிருக்க முடியும்.

நட் ஹாம்ஸனின் நிலவளம், செல்மா லாகர்லெவ்வின் மதகுரு, பெர் லாகர் க்விஸ்ட்டின் அன்பு வழி (பாரபாஸ்), ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை மற்றும் 1984 போன்றவை அவருடைய மொழி பெயர்ப்பில் வந்த முக்கிய நாவல்களென சட்டென்று நினைவுக்கு வருபவை. ஐரோப்பியச் சிறுகதைகள், கடல்முத்து என்ற மொழி பெயர்ப்புச் சிறுகதைத் தொகுதிகளும் வந்திருக்கின்றன. ஐரோப்பிய மொழிகளின் செவ்வியப் படைப்புகளை மட்டுமல்லாது, நவீன படைப்புலகின் சிகரங்களான போர்ஹே (பாபிலோனில் லாட்டரி) காம்யூ (விருந்தாளி) போன்றோரைத் தமிழில் முதல் அறிமுகம் செய்தவரும் அவர்தான். சீரிய இலக்கியத்தைப் பொறுத்தவரை அதன் எல்லா வாசல்களினூடாகவும் இவரால் இயல்பாகவும் இணக்கமாகவும் போய்வர முடிந்திருக்கிறது. இது அபூர்வம்.

எழுத்தாளராகவே தன் வாழ்வைத் தொடர இளம் வயதிலேயே தீர்மானித்துவிட்ட இவர், கடைசி வரை முழு நேர எழுத்தாளராகப் படிப்பதிலும் எழுதுவதிலுமே நிறைவடைந்தவர். 1928_34 வரை (16 வயதிலிருந்து _ 22 வயது வரை) எதற்காக எழுதுகிறேன் என்ற சிந்தனை இல்லாமல் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதியதாகக் க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பின்னாளில் மனைவி, ஒரே மகள் என்ற தன் சிறு குடும்பத்தின் வாழ்க்கைப் பாட்டிற்கான வருமானத்தை ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதன் மூலமே அடைந்திருக்கிறார். `தமிழில் நான் எழுத்தாளன்; ஆங்கிலத்தில் பத்திரிகையாளன்’ என்று ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு இவர் எழுதிய கட்டுரைகள் 15,000 என்று ஒரு தகவல். ஒரு நாளைக்கு 7 பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் என்று க.நா.சு. ஓரிடத்தில் கூறியிருப்பதை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாகத்தானிருக்கிறது. அவருள்ளிருந்து அவரை இயக்கிய சக்தி மகத்தானது.

ஆரம்ப காலத்தில் சூறாவளி, சந்திரோதயம் என்ற இதழ்களை நடத்திய போதிலும் `எழுத்து’ இதழின் எழுத்து முறையில் அதிருப்தியடைந்து அவர் தொடங்கிய `இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மரபில் ஒரு புத்தெழுச்சியாக அமைந்தது.

1965இல் க.நா.சு. தன்னுடைய 53ஆவது வயதில் தன் குடியிருப்பை டில்லிக்கு மாற்றினார். கடுந்தவமென முனைப்புடன் செயலாற்றியும் வணிகச் சூழலின் செல்வாக்கு தமிழில் செழித்தோங்கியதில் விரக்தியடைந்து, இந்த மாற்றத்தை அவர் மேற்கொண்டதாகத் தெரிகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் 1985இல் அவர் குடியிருப்பை சென்னைக்கு மீண்டும் மாற்றியபோது, முதுபெரும் எழுத்தாளருக்கான அங்கீகாரமும் கௌரவமும் அவரை வந்தடைந்தன. பிற்கால 3 ஆண்டு சென்னை வாழ்க்கையில் பெரும் பத்திரிகைகள் அவர் எழுத்துகளைக் கேட்டு வாங்கி வெளியிட்டன.

குங்குமம், முத்தாரம், தினமணிக்கதிர், துக்ளக் போன்ற பெரும் பத்திரிகைகளில் அவருடைய கட்டுரைத் தொடர்கள் வெளிவந்தன.

சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியர் பதவி கிடைத்தது. அச்சமயத்தில் அவரைப் பார்த்தபோது, 75ஆவது வயதில் முதல் முதலாக மாதச் சம்பளம் வாங்கப் போவது பற்றி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

1988இன் மத்தியில் மீண்டும் டில்லி சென்ற க.நா.சு. அவ்வாண்டின் இறுதியில் மறைந்து விட்டார். க.நா.சு. ஓர் இலக்கிய இயக்கம்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்